Friday, July 25, 2014

இன்று பால் வேண்டாம்!

'நல்லது - கெட்டது' என்ற விதிமுறை தான் உயர்ந்தது எனவும், 'நல்லதைச் செய்ய வேண்டும்,' 'கெட்டதை விட வேண்டும்' எனவும் நம் மூளைக்குத் தெரிந்திருந்தாலும், அது எப்போதும் இந்த விதிமுறையின் படி நடப்பதில்லை.

தனக்கென்று மூளை ஒரு விதிமுறை வைத்திருக்கிறது. அதுதான் 'இன்பம் - துன்பம்' - அதாவது 'இன்பம்' தரும் ஒன்றைச் செய்ய வேண்டும். 'துன்பம்' தரும் ஒன்றை விலக்க வேண்டும்.

சின்ன உதாரணம். நமக்கு நிறைய கொழுப்பு கூடிடுச்சு என வைத்துக் கொள்வோம். டாக்டர் நம்மை டெய்லி வாக்கிங் போகச் சொல்றார். நாமும் ரொம்ப ஆர்வமா 'வாக்கிங்' போக முடிவெடுத்து, அதற்கான ஸ்பெஷல் டிரஸ் வாங்கி, ஆடிடாஸ் ஷூ வாங்கி, 'நாளை முதல் நான் வாக்கிங் போகிறேன்!' என ஃபேஸ்புக்கில் ஸ்டேடசும் போட்டு, அதற்கு 10 லைக்ஸ்ம் வாங்கிட்டு நைட் தூங்கப் போறோம். தூங்குறதுக்கு முன்னால அலார்ம் 5 மணிக்கு வச்சாச்சான்னு 5 முறை சரி பார்த்தும் கொள்கிறோம். காலையில் 5 மணிக்கு அலார்ம் அடிக்கிறது. எழுந்தும் விட்டோம்! ஆனால் வாக்கிங் போனோமா? என்றால் இல்லை. 'வாக்கிங் போவது' 'நல்லது', 'தொடர்ந்து சோம்பித் தூங்குவது' 'கெட்டது' என மூளைக்குத் தெரிந்தாலும், மூளை அதன்படி செயல்படுவதில்லை. 'தூங்குவது' இன்பம், 'எழுவது' துன்பம் என்ற அடிப்படையில் இயங்கி, நம்மைத் தூங்க வைப்பதுடன், அந்தத் தூக்கத்திற்கு வக்காலத்து வாங்க ஒரு காரணத்தையும் கண்டுபிடிக்கிறது.

மனித மனம் அடிப்படையில் துன்பத்தை விலக்க நினைக்கிறது. 'கேக்கை சாப்பிடுவதை விட கிரீமை முதல் சாப்பிட வேண்டும்,' 'சாப்பாட்டை விட கேசரியை முதலில் சாப்பிட வேண்டும்,' 'மாத்திரையை விட முதலில் தேன் சாப்பிட வேண்டும்', 'தேன் இல்லையென்றாலும் தண்ணீர் குடித்து கசப்பு தெரியாமல் விழுங்க வேண்டும்' என இனிமையையே எப்போதும் விரும்புகிறது.

துன்பம் என்றால் என்ன? துன்பங்கள் எத்தனை வகை? எல்லாத் துன்பமும் ஒன்றா?

துன்பத்தின் முதல் படி அசௌகரியம். காலையில் எழுவது, மாத்திரை சாப்பிடுவது, வெயிலில் நடந்து செல்வது போன்றவை எல்லாம் அசௌகரியங்கள். எல்லா அசௌகரியங்களும் ஒரே மாதிரியானவையும் அல்ல.

துன்பத்தை பலர் பல வகைகளில் பிரித்திருக்கின்றனர்.

'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்று சொல்லும் புத்தர் துன்பத்தை மூன்று வகைககளாகப் பிரிக்கிறார்:

அ. எழுவதால், இருப்பதால், மாறுவதால் வரும் துன்பம். நோய், முதுமை, நரை முடி, மூட்டு வலி, பசி, மயக்கம் என அனைத்துத் துன்பங்களும் இதில் அடங்கும்.

ஆ. மறைவதால் வரும் துன்பம். நம் அன்பிற்குரியவரின் பிரிவு, இறப்பு, போன்றவை தரும் துன்பம் இவ்வகை.

இ. 'இடம்-நேரம் நிர்ணயிக்கும்' துன்பம். இயற்கைச் சீற்றம், விபத்து, வன்முறை, பேரிடர் என மனிதர்கள் தங்கள் வலுவின்மையிலும் (human conditioning), கையாலாகாத நிலையிலும் எதிர்கொள்ளும் துன்பம்.

ஆனால் இந்த மூன்று வகைப்பாட்டிற்குள்ளும் வராத துன்பங்கள் நம் வாழ்வில் நிறையவே இருக்கின்றன:

அ. பிறந்தநாள் அன்று காலையில் புது சேலை கட்டி, தலை நிறைய மல்லிகைப் பூ வைத்து, கமகமவென்று 'புளு லேடி' அடித்து கோவிலுக்குப் போகும் போது இருக்கும் மகிழ்ச்சி, நாம் ஏற்றும் விளக்கின் ஒரு துளி எண்ணெய் பட்டதும், 'ஐயயோ! சேலை கறையாயிடுச்சே!' என்று துன்பம் நம்மைப் பற்றிக் கொள்கிறது. நம் பிறந்த நாள் மறந்து, நம் கடவுளை மறந்து, நம் காலை உணவை மறந்து, நம் மூளை சதா எண்ணெய் கறையையே நினைத்துக் கொண்டிருக்கிறது.

ஆ. துன்பம் என்பது தனிநபர் சார்ந்தது. எனக்குத் துன்பம் தரும் ஒன்று உங்களுக்கு இன்பம் தரலாம். கிரிக்கெட் விளையாடுவது எனக்கு துன்பமாகத் தெரியலாம். ஆனால் தோனிக்கும், டெண்டுல்கருக்கும் அது இன்பம். 'விமானம் ஏவுகணையில் தகர்க்கப்படுவது' எல்லாருக்கும் வருத்தம் தரும் என்று சொல்ல முடியுமா? அதைத் தகர்த்தவர்கள் சந்தோஷமாகச் சிரிக்கிறார்களே!

இ. சில நேரங்களில் நாம் இன்பம் என நினைப்பதே துன்பமாக மாறிவிடுகிறது. நல்ல உதாரணம், செல்ஃபோன். 'எங்கு போனாலும் பேசலாம்!' 'எதுவும் செய்யலாம்!' என உள்ளங்கையில் உலகம் இருப்பதாக நினைக்கும் நாம், நம்மையறியாமலேயே யாரோ நம்மை உளவு பார்ப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறோமே. ஸ்மார்ட்ஃபோன்களில் எதுவும் 'பிரைவசி' கிடையாது. ஜிபிஎஸ் வைத்து நாம் எங்கே இருக்கிறோம் எனச் சொல்லிவிடலாம். காதலிக்குச் சொல்லும் 'ஐ லவ் யூ'வில் இருந்து, 'இன்று பால் வேண்டாம்' என பால்காரருக்கு நாம் அனுப்பும் எஸ்எம்எஸ் வரை எங்கோ ஒரு டேட்டாவாக பதிவாகிக் கொண்டிருக்கின்றது.

யோபுவின் துன்பங்கள் எந்த வகை? யோபுவின் மூளை எந்த விதிமுறையின் அடிப்படையில் வேளை செய்தது?

இன்னும் சொல்வேன்...


1 comment:

  1. 'யோபு' நூல் பற்றி எழுதப்போகிறீர்கள் என்று தெரிந்தவுடன் இரண்டு அதிகாரங்களைப் புரட்டிப்பார்த்தேன்.பொதுவாக் இன்பத்தையும் இறைவனையும் நாம் சேர்த்துப்பார்க்க மறுக்கிறோம்.ஆனால் யோபு தன் மனைவி மக்களோடும்,சொத்துசுகத்தோடும்,சகல ஆட்டம்பாட்டம் கொண்டாட்டங்களோடும்...இத்தனைக்கும் மேலாக இறைவனுக்கு மிகமிக நெருக்கமானவராகவும் இருந்துள்ளார்.ஆனால் இறைவன் இவரையும் புடமிட்டு புனிதப்படுத்துகிறார்..எனில் நாமெல்லாம் எம்மாத்திரம்? இவற்றிற்குத் தங்களின் விளக்கம் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்...நன்றிகள்

    ReplyDelete