Friday, July 18, 2014

ஒன்றே சொல்வார்! ஒன்றே செய்வார்!

(28.09.2014 பொதுக்காலம் 26ஆம் ஞாயிறுக்கான மறையுரை. நற்செய்தி: மத்தேயு 21:28-32)

விண்ணரசு பற்றிய மற்றொரு உவமையைச் சொல்கின்றார் இயேசு. ஒருவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவனைப் பார்த்து என் தோட்டத்திற்கு வேலைக்குப் போ என்கிறார். 'போகிறேன்' என்று சொன்னவன் போகவில்லை. இரண்டாம் மகனிடமும் அதே விண்ணப்பம். 'போகவில்லை' என்கிறான். ஆனால் போகிறான். இந்த இரண்டு பேரில் இரண்டாம் மகன் சிறந்தவன் என்றும், அவன் வரிதண்டுவோரையும், பாவிகளையும், விபச்சாரரையும், புறவினத்தாரையும் குறிக்கின்றான் என்றும் உவமை நிறைவு பெறுகிறது.

இந்த உவமையை வாசிக்கும் போது ஏதோ குறைவுபடுவதாக இருக்கின்றது. இந்த உவமையின் பின்புலமும் தொடக்கத் திருச்சபைதான். 'யூதர்கள் தங்கள் சட்டத்தால் தாங்கள் விண்ணரசுக்குள் நுழையலாம்' என நினைக்கின்றனர். ஆனால் அவர்களால் நுழைய முடியவில்லை. அவர்கள்தாம் மூத்த மகன்கள். ஆனால் இரண்டாம் நிலையினர், புதிய கிறித்தவர்கள். அவர்கள் உள்ளே நுழைய முடியாது என்ற நிலையில் இருந்தாலும், உள்ளே நுழைந்து விடுகின்றனர். இவர்கள் இரண்டாம் மகன்கள். இந்த உவமை இயேசுவின் சமகாலத்தவருக்குத் தந்த ஊக்கத்தைவிட தொடக்கத் திருச்சபைக்கு இந்த உருவகம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும்.

என்னைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு மகன்களின் நிலைப்பாட்டிலும் ஏதோ குறை இருக்கிறது. இந்த உவமையை கொஞ்சம் முன்னும், பின்னும் நீட்டித்துக் கற்பனை செய்து பார்ப்போம். ஒரு அப்பாவிற்கு நான்கு மகன்கள் இருந்தனர்: எல்லாரையும் ஒன்றாக அழைத்து, 'நீங்கள் என் தோட்டத்திற்கு வேலைக்குப் போங்கள்!' என்கிறார். மகன் 1 'போகிறேன்' என்று சொல்லவுமில்லை. போகவுமில்லை. மகன் 2 'போகிறேன்' என்று சொல்கிறான். ஆனால் போகவில்லை. மகன் 3 'போகிறேன்' என்று சொல்லவில்லை. ஆனால் போகிறான். மகன் 4 'போகிறேன்' என்று சொல்கிறான். போகிறான்.

முதல் நிலை 'கண்டுகொள்ளாத நிலை'. இரண்டாம் நிலை 'ஏமாற்று நிலை'. மூன்றாம் நிலை 'பின்புத்தி மனநிலை'. நான்காம் நிலை 'உண்மை மனநிலை'. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மனிதர்கள் தாம் இன்றைய நற்செய்தியில் வரும் மூத்த மற்றும் இளைய மகன்கள். மூத்த மகன் 'ஏமாற்றினான்' என்று நாம் குற்றம் சாட்ட வேண்டாம். ஆனால் ஏதோ ஒரு வகையில் அவனால் தன் தந்தைக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. இரண்டாம் மகனுக்கு முதலில் போக விருப்பமில்லை தான். ஆனால் தன் தந்தையின் பேரன்பையும், தாராள உள்ளத்தையும் எண்ணிப்பார்த்து 'சரி! அவருக்காகவாவது போவோம்!' என நினைத்திருக்கலாம். அல்லது 'இந்த வேலையைச் செய்யவில்லையென்றால் வேறு வேலை ஏதாவது கொடுத்து விடுவார். எப்படியோ தப்பித்து ஓடி செய்து விடுவோம்' என நினைத்திருக்கலாம். அல்லது 'இவர் பேச்சைக் கேட்கவில்லையென்றால் நாளைக்கு ஏதாவது தண்டனை கொடுப்பாரோ' என்று பயத்தில் சென்றிருக்கலாம். காரணம் உவமையில் இல்லை. வாசகர்தான் கற்பனை செய்து கொள்ள வேண்டும். மூத்த மற்றும் இளைய மகன்களின் மனநிலைகள் இரண்டுமே 'பொய் மனநிலைகள்' தாம்.

இந்த உருவகம் நமக்கு இன்று என்ன சொல்கிறது?

அ. வாழ்க்கை அல்லது உலகம் என்பது ஒரு திராட்சைத் தோட்டம். வாழ்வு என்னும் கொடையை தந்தையாகிய கடவுள் நமக்குக் கொடுத்து இங்கே அனுப்பியிருக்கிறார். அந்த வாழ்வு என்னும் அழைப்பிற்கு நாம் எப்படி பதில் சொல்கிறோம். மகன் 1 போல 'கண்டுகொள்ளாமல்' இருக்கிறோமா? மகன் 2 போல 'ஏமாற்று' மனநிலை கொள்கிறோமா? மகன் 3 போல 'பின்புத்தி மனநிலையில்' பயத்தால் வாழ்வை வாழ்கிறோமா? அல்லது மகன் 4 போல 'சொல்வதைச் செய்பவர்களாகவும், செய்வதைச் சொல்பவர்களாகவும்' இருக்கின்றோமா? மகன் 4க்குரிய மனநிலையை நாம் பெற வேண்டுமெனில் நல்ல முடிவெடுக்கும் திறனும், முடிவெடுத்தபின் மனதை மாற்றாத திடமும், எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் விடாமுயற்சியும் அவசியம். இந்த மூன்றில் ஒன்று குறைந்தால் கூட நாம் உண்மையிலிருந்து தவறி விடுவோம். நேற்றைய தினம் 'அருட்பணிநிலை கற்பும் போராட்டமும்' (Priestly Celibacy and Its Struggle) என்ற நூலை வாசித்தேன். அருட்பணி நிலைக்குள் நுழையும் ஒருவர் மேற்கொள்ளும் 'கற்பு' என்ற வாக்குறுதியில் நிலைத்து நிற்க அவர் மிகவும் போராட வேண்டியிருக்கிறது எனவும், 'என்னால் இருக்க முடியும்' என்று தன்னை மட்டும் நம்புபவர்கள் விரைவில் மனத்திடம் இழந்து விடுகிறார்கள் எனவும், 'இருக்கிறேன்!' என்று தயார்நிலையோடு நுழையும் சிலர் தாங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை எதார்த்தங்களால் அலைக்கழிக்கப்படுகிறார்கள் எனவும், 'இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும்' என ஒருசிலர் பிளவுபட்டவர்களாகவும் இருக்கிறார்கள் எனவும் ஒவ்வொரு அருள்நிலை இனியவரின் மனப்போராட்டத்தை வெகு அழகாக எழுதியிருந்தார் ஆசிரியர். 'கற்பு' என்ற வாக்குறுதியில் மட்டுமல்ல, வாழ்க்கையில் நாம் எடுக்கும் சின்ன சின்ன வாக்குறதிகளில் கூட (உதாரணத்திற்கு, 5:30 மணிக்கு எழுந்திருப்பேன் என்று நாம் அலார்ம் கிளாக்கிற்கு அளிக்கும் வாக்குறுதியில் கூட) திடமும், விடாமுயற்சியும் அவசியம். யார் பார்க்கப் போகிறார்கள்? 5:30 மணிக்கு எழுந்தால் என்ன, 7:30 மணிக்கு எழுந்தால் என்ன என்று நாம் தவறும் சின்ன வாக்குறுதி, வாழ்க்கையில் நாம் எடுக்கும் பெரிய வாக்குறுதிகளிலும் சமரசம் செய்யுமாறு நம் மனச்சான்றை பிறழ்வுபடுத்துகிறது.

ஆ. வாக்கிங் தி எக்ஸ்டரா மைல். நம் வாழ்வின் வெற்றிக்கும், நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம் இதுதான். நம்மிடம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகச் செய்வது. நான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என வைத்துக்கொள்வோம். என்னிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன? பயணி விரும்பும் இடத்தில் அதற்குரிய தொகையைப் பெற்றுக்கொண்டு அங்கே சென்று அவரை நான் இறக்கி விட வேண்டும். இதையும் விட அதிகமாகச் செய்வது என்றால் என்ன? 'அவரின் உடைமைகளை ஆட்டோவில் இருந்த இறக்க உதவுவது. 'பத்திரமாய்ப் போய்வாங்க!' என்று கனிவுமொழி சொல்வது. 'பயணம் சௌகரியமாக இருந்ததா?' எனக் கேட்பது. இப்படிச் செய்வதால் என்னிடம் ஒன்றும் குறையப்போவதில்லை. ஆனால் அது எனக்கும் என் பயனாளருக்கும் மகிழ்ச்சி தருகிறது. உவமையில் வரும் மூத்த மகன் சொல் அளவில் மட்டும் தாராள உள்ளம் காட்டுகிறான். ஆனால் அவனிடம் செயல் இல்லை. மற்றவன் செயல்படுகிறான். ஆனால் செயல்பாடு தயக்கத்தோடு தொடங்குகிறது. வாழ்வதிலும், நம் உறவு நிலைகளிலும் நம்மிடம் எதிர்பார்ப்பதையும் விட கொஞ்சம் அதிகமாகச் செய்து பார்க்கலாமே?

இ. இரண்டு மகன்களுக்குமே அழைப்பு எதிர்பாராத நேரத்தில் தான் வருகிறது. அவர்கள் தயாராக இல்லாததால் ஒருவேளை அழைப்பிற்கு பதில் தரமுடியாமல் போயிருந்திருக்கலாம். எங்கள் பங்கில் ஒருவர் இருக்கிறார். எப்போது கூப்பிட்டாலும் வருவார். காலையில் வேளைக்குச் செல்வார். மதியம் மாணவர்களுக்கு கிட்டார் சொல்லிக் கொடுப்பார். மாலையில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் முதியவர்களுக்கு பால் மற்றும் உணவுப்பொருட்கள் வாங்கிக் கொண்டு போய்க் கொடுப்பார். எங்க ஏரியாவிற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்தால் அவரும் உடனடியாக அங்கே வந்து விடுவார். பிக்னிக்குக்கு பஸ் ஏற்பாடு செய்வார். பீட்சா வாங்கி வருவார். பார்ட்டி முடிந்ததும் அவரே அனைத்தையும் சுத்தம் செய்வார். ஒருநாள் அவரிடம் உங்களால் எப்படி இதெல்லாம் முடிகிறது எனக் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்: 'பைபளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்ன தெரியுமா? கழுதைக் குட்டி. 'ஆண்டவருக்குத் தேவை' என்று எருசலேம் தெரு ஒன்றில் காத்துக் கொண்டே இருக்கிறது. நானும் ஒரு கழுதைக் குட்டிதான். எந்த நேரத்தில் யாருக்கு என்ன தேவையோ நான் ஓடிவிடுவேன். 'அவர்கள் உன்னைப் பயன்படுத்துகிறார்கள்!' என்று உள்மனம் என்னை பின்னடையச் செய்யும். 'அப்படியாவது நான் பயன்படட்டுமே!' என்று எதையும் பொருட்படுத்தாமல் ஓடி உதவி செய்வேன';. தயார்நிலையே வாழ்வின் வெற்றி நிலை.


1 comment:

  1. இன்றைய காலகட்டத்தில் நாம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதென்பது 'குதிரைக் கொம்பாகி' வருகிறது.நம்மைச்சுற்றி இருப்பவர்கள் மட்டுமின்றி சூழ்நிலையுமே நமக்கு எதிராக் நின்று வேடிக்கை பார்க்கிறது.ஜான் ஏறினால் முழம் சறுக்கும் கதை தான் எங்கும்.ஆயினும் தயார்நிலையில் உள்ள 'கழுதைக்குட்டி' களும் இங்குதானே இருக்கிறார்கள்! கருத்தாழமிக்க பதிவு....காலை வணக்கங்கள்!!

    ReplyDelete