Tuesday, July 22, 2014

நான் டெய்லி பிஸியாகவே இருக்கிறேன்!

விண்ணரசு பற்றிய இயேசுவின் தாலந்து உவமை நாம் பலமுறை கேட்ட ஒன்று. இந்த உவமை லூக்கா மற்றும் மத்தேயு நற்செய்திகளில் மட்டும் உள்ளது. மாற்கு நற்செய்தியாளாரின் கைக்கு எட்டாத ஒரு பாரம்பரியத்தை லூக்காவும், மத்தேயும் பெற்றதால் அவர்கள் மட்டும் இதை எழுதுகின்றனர். ஆனால் இந்த இருவரின் பதிவுகளும் பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளன.

மத்தேயு நற்செய்தியாளரில் வரும் வீட்டுத்தலைவன் தன் பணியாளர்களில் மூவருக்கு தலா ஐந்து, மூன்று மற்றும் ஒன்று என தாலந்துகளைக் கொடுத்து விட்டுப் பயணம் மேற்கொள்கிறான். ஐந்து பெற்றவன் மேலும் ஐந்து, மூன்று பெற்றவன் மேலும் மூன்று என ஈட்டினாலும், ஒன்று பெற்றவன் அதை நிலத்தில் புதைத்து வைக்கிறான்.

லூக்கா நற்செய்தியாளரில் அரசன் தன் பணியாளர்களுக்குச் சொத்தைப் பிரித்துக் கொடுக்கின்றார். பத்துப் பேருக்கு தலா ஒரு தாலந்து என பத்துத் தாலந்துகள் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன. அரசுரிமை பெற வெளியூர் செல்கின்றான் தலைவன். இதற்கிடையில் 'இவன் எங்களுக்கு அரசனாக வேண்டாம்!' என ஒரு சிலர் தூது அனுப்புகின்றனர். இருந்தாலும் அரசுரிமை பெற்றுத் திரும்புகின்றான் தலைவன். அவன் திரும்பியபோது பணியாளர்களில் ஒருவன் ஒரு தாலந்தைக் கொண்டு பத்து சம்பாதித்ததாகவும், இரண்டாமவன் ஒன்றைக் கொண்டு ஐந்து சம்பாதித்ததாகவும், மூன்றாமவன் தலைவனுக்குப் பயந்து அதை கைக்குட்டையில் முடிந்து வைத்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் மற்ற ஏழு பேர் என்ன செய்தார்கள் என்பது பற்றி உவமையில் ஒன்றும் இல்லை.

மத்தேயு மற்றும் நற்செய்தியாளர்களில் பொதுவாகக் காணப்படுவை மூன்று: அ. முதல் இரண்டு பேர் நன்றாக சம்பாதிக்கின்றனர், மூன்றாமவன் சம்பாதிக்கவில்லை. ஆ. அதிகம் பெற்றவர்கள் இன்னும் அதிகம் பெறுகிறார்கள். இ. பொல்லார் தண்டிக்கப்படுகின்றனர்.

மத்தேயுவின் உவமையை நாம் சிந்தனைக்கு எடுப்போம். 'இக்கதையில் வரும் மூவரில் நாம் யார்?' என்று வெறும் கேள்வி கேட்டால் மறையுரை சப்பென்று போய்விடும். உவமையின் மௌனங்களை கொஞ்சம் ஆராய்வோம். இந்த உவமை எழுப்பும் சில கேள்விகள்:

அ. எதற்காக தலைவன் ஐந்து, மூன்று, ஒன்று என தாலந்துகளைக் கொடுக்க வேண்டும்? ஐந்து பெற்றவன் ஐந்து கொண்டு வந்தான், மூன்று பெற்றவன் மூன்று கொண்டு வந்தான். ஒன்று பெற்றவன் ஒன்று கொண்டு வந்தான். லாஜிக் சரிதானே! பின் ஏன் அவனுக்கு மட்டும் தண்டனை.

ஆ. ஒன்றை மட்டும் கொண்டுவந்தவன் அதையாவது கொண்டு வந்தானே. அவன் ஊதாரித்தனமாகச் செலவழிக்கவில்லை. அல்லது அதைத் தொலைத்துவிடவில்லை. பத்திரமாகத்தானே வைத்திருந்தான். அதற்காகவாவது அவனைப் பாராட்ட வேண்டமா?

இ. நிலத்தில் புதைத்து வைப்பது சாதாரண காரியம் அல்ல. நம் அலமாரியில் இருந்தால் கூட திறந்து பார்த்து 'ஆ! இருக்கிறது!' என்று சொல்லிக்கொள்ளலாம். நிலத்தில் புதைப்பதால் அவன் இன்னும் அதிக அலர்ட்டாக இருக்க வேண்டும். நிலத்தில் புதைத்து வைத்து அதைக் காவல் காப்பதும் பெரிய வேலைதானே!

இன்றைய நம் சிந்;தனையை மூன்றாம் நபரை மட்டும் மையமாக வைத்துப் பார்ப்போமோ?

அ. கோபம். மூன்றாம் பணியாளனுக்குத் தன் தலைவன் மேல் ஏதாவது கோபம் இருந்திருக்க வேண்டும். 'மற்றவர்களுக்கு ஐந்து, மூன்று எனக் கொடுத்துவிட்டு எனக்கு ஒன்றா கொடுக்கிறாய்!' என உள்ளத்தில் கொதித்திருக்கலாம். 'நீ என்னடா கொடுக்கிறது! நான் என்னடா உழைக்கிறது!' என்று நினைத்திருக்கலாம். சமூகத்தில் நடைபெறும் பல தீமைகளுக்குக் காரணம் கோபம்தான். திருடர்கள் திருடுவது எதற்காக? பணம் வைத்திருப்பவர்கள் மேலும், அல்லது தாங்கள் வாழும் சமூகத்தின் கட்டமைப்பின் மீதும் கோபம். தங்களின் கையாலாகாத நிலையில் அந்தக் கோபத்தைத் திருட்டாகக் காட்டுகின்றனர். ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்ட ஒருவன் காலப்போக்கில் பாலியல் பிறழ்வுகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த பெண் இனத்தின் மேல் பழிதீர்த்துக்கொள்ள நினைக்கிறான். நாம் கையாள முடியாத கோபம் எல்லாம் எதிர்வினைகளாக மாறிவிடுகின்றன. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு புற்றுநோய். என்னை விட கொஞ்சம் கூட வயது. நன்றாக மருத்துவம் பார்த்திருந்தால் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். ஆனால் அவனுக்கு கடவுளின் மேல் ஒரு கோபம்: ஏன் இது எனக்கு மட்டும் வருகிறது? என்ற சதா கேட்டுக் கொண்டிருந்தவன், புற்றுநோய் தன்னை ஏன் அழிக்க வேண்டும்? நானே அழித்துக்கொள்கிறேன் என்னை என அதிக மதுஅருந்தவும், மாத்திரைகளைப் புறக்கணிக்கவும் தொடங்கினான். விளைவு, விரைவில் இறந்துவிட்டான். நம் வாழ்வில் நாம் வாழ்வை முழுமையாக வாழத் தடையாக இருப்பது நம்மிடம் இருக்கும் கோபம். பெற்றோரிடம் கோபப்பட்டு வீட்டுக்கு வெளியே தங்கும் இளைஞர்கள், கணவன் மனைவியாக வீட்டில் தங்கியிருந்தாலும் ஒருவருக்கொருவர் வருடக்கணக்காக பேசமால் இருக்கும் நிலைகள், 'ஏதோ! குழந்தை இருக்குன்னு பார்க்கிறேன்! அல்லது எப்பவோ முறிச்சிறுப்பேன்!' என்று சண்டைபோட்டுக் கொள்ளும் தம்பதியினர், அருட்பணி நிலையிலும் தலைமையில் இருப்பவர்கள் மேல் கோபப்பட்டுக் கொண்டு, 'எனக்கு அந்த இடம் கொடுத்தால் தான் பணி செய்வேன். அல்லது தினமும் பூசை மட்டும் வைப்பேன். வேறு ஒன்றும் செய்ய மாட்டேன்!' என ஓய்ந்திருக்கும் நிலை என அனைத்திலும் நம் கதையின் மூன்றாம் கதைமாந்தர் ஒளிந்திருக்கிறார்.

ஆ. பயம். நம் மூன்றாம் பணியாளனுக்கு ஒரு பயம்: 'நம் தலைவன் தூவாத இடத்தில் சேகரிப்பவர்.  விதைக்காத இடத்தில் அறுவடை செய்பவர்'. இந்தப் பயத்தின் பிண்ணனி ஏதோ ஒரு முற்சார்பு எண்ணம். அந்த முற்சார்பு எண்ணம் பயமாகக் கனிந்து அவனின் கைகளைக் கட்டிப் போடுகின்றது. 'என்ன வேலை செஞ்சி என்ன நடக்கப் போகுது?' 'என்ன படிச்சாலும் அந்த வாத்தியார் அவனுக்குத்தான் மார்க் போடுவார்?' 'நாம எவ்வளவு மாஞ்சி மாஞ்சி வேலை பார்த்தாலும், புரோமஷன் அவன் ஜாதி ஆட்களுக்குத்தான் கிடைக்கும்!' என நாமும் முற்சார்பு எண்ணங்கள் கொண்டு, அவை நம் ஆழ்மன பயங்களாக மாறும் போது நாம் விளைச்சல் தர முடிவதில்லை.

இ. பணிப் பிறழ்வு. மூன்றாம் பணியாளனை நம் 'சோம்பேறி!' என்று அழைக்கிறோம். அவன் சோம்பேறி இல்லை. சோம்பேறியாக இருந்தால் பணம் கொடுக்கப்படும் போதே, 'ஐயா! நம்மால எல்லாம் இத வச்சு ஒன்னும் செய்ய முடியாது. அவன்கிட்டே சேர்த்துக் கொடுங்க!' என்று சொல்லியிருப்பான். செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் தன் ஆற்றலை பிறழ்வுபடுத்துவதுதான் அவனின் தவறு. நாணயத்தைப் பத்திரப்படுத்தியதில் செய்த வேலையை அவன் வட்டிக்கடைக்குச் செல்வதற்குப் பயன்படுத்தியிருக்கலாமே என்பதுதான் தலைவனின் ஆதங்கம். 'நான் டெய்லி பிஸியாகவே இருக்கிறேன்! எதையாவது செய்து கொண்டே இருக்கிறேன்!' என்று ஒருசிலர் பெருமையாகச் சொல்வார்கள். 'எதையாவது செய்து கொண்டே இருப்பது முக்கியமல்ல. எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறோமா?' என்பதுதான் முக்கியம்.


2 comments:

  1. இன்றையத் தலைமுறைக்கும் நடைமுறைக்கும் ஒவ்வாத சில விஷயங்களில் இன்றைய உவமையும் ஒன்று.என் கோபமெல்லாம் தலைவன் மீதே.என்னதான் காரணம் சொல்லப்பட்டாலும் இந்தத் தலைவன் காட்டியிருப்பது உச்சகட்ட பாரபட்சம்.அதையும் தாண்டி அவன் சம்பாதிக்கத் தடையாய் உள்ள அவன் குணாதிசயங்கள்....?? விவாத்த்திற்கு உட்படுத்தப்படவேண்டியவை எனத் தோன்றுகிறது.தங்களின் அந்த 'பணிப்பிறழ்வு' ..ஒரு புது வரவு.அழகான தமிழ் வார்த்தை.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நன்றி தந்தையே.

    ReplyDelete