Saturday, August 31, 2013

crisis management


'என்னைச் சுற்றி எப்போதும் எதிர்மறையான நிகழ்வுகளே இருக்கிறது. என் குடும்பம், வேலை எல்லாமே கஷ்டமா இருக்கு. நான் இதை எப்படி சமாளிப்பேன்?' என்று பல நேரங்களில் நாம் புலம்பியிருப்போம். இந்த புலம்பலுக்கு இயேசு தரும் பதில்:

நான் ஒருநாள் திபேரியக் கடலுக்கு அருகில் போதித்துக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி ஒரே கூட்டம். ரெண்டு மூன்று நாளா என்னைப் பின்தொடர்ந்து வந்துக்கிட்டேயிருந்தாங்க. அவங்கள பார்த்தா பரிதாபமா இருந்துச்சு. பசி, பட்டினி, அலைச்சல். இந்த எதிர்மறையான நிகழ்வை சமாளிக்க நான் அவர்களுக்கு உணவு கொடுக்க நினைத்தேன். 'நீங்களே உணவு கொடுங்க' என்று சீடர்களுக்குச் சொன்னேன். அவங்க உடனே 'இவ்ளோ ஆகும், அவ்ளோ ஆகும்' என்று கணக்குப்பார்த்தாங்க. உங்ககிட்ட என்ன இருக்குன்னு கேட்டேன். 'ஐந்து அப்பமும் இரண்டு மீன்களும் இருக்குன்னு சொன்னாங்க. எல்லாரையும் புல்தரையில உட்காரச் சொல்லி எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தேன். எல்லாரும் வயிறார சாப்பிட்டபின் மீதித்துண்டுகளை பன்னிரண்டு கூடைகளில் எடுத்தாங்க. (காண்க: மத்தேயு 14.13-21. மாற்கு 6.30-34. லூக்கா 9.10-17. யோவான் 6.1-15)

இதை நிர்வாகம் அல்லது மேலாண்மை அடிப்படையில் பகுத்தறிந்தால், மக்களின் பசி என்பது ஒரு எதிர்மறை நிகழ்வு. இதை என் சீடர்களும், நானும் எதிர்கொண்ட முறை:

சீடர்கள்: 'ஐயயோ, அவங்கள அனுப்பி விடுங்க...' என்று எதிர்மறையாக இருந்தாங்க (reactive)
நான்: 'நீங்களே உணவு கொடுங்க'. நான் நேர்மறையாகச் சொன்னேன். (proactive)
சீடர்கள்: எதிர்மறை நிகழ்வை ஒரு பிரச்சனையாகப் (problem) பார்த்தாங்க.
நான்: எதிர்மறை நிகழ்வை ஒரு வாய்ப்பாகப் (opportunity) பார்த்தேன்
சீடர்கள்: வெறுங்கை முழம் போடுமான்னு கேட்டாங்க. இருநூறு தெனாரியம் வேண்டுமே என்று கணக்குப் போட்டாங்க. (emptiness syndrome)
நான்: வெறுங்கை என்பது மூடத்தனம். விரல்கள் ஐந்தும் மூலதனம்னு. அவங்ககிட்ட இருக்கிற ஆற்றலைப் பயன்படுத்தச் சொன்னேன் (making use of the resources)

உங்க தனிநபர் வாழ்வில், குடும்ப உறவில், பணியிடத்தில் எதிர்மறை நிகழ்வு வந்தால்...

1. அதை பூதக்கண்ணாடி போட்டு பெரிதாக்கி பயந்து ஓடிட வேண்டாம். கஷ்டம் வராம இருந்தா நல்லா இருக்குமேன்னு ஆகாயக் கோட்டையும் கட்ட வேண்டாம். கஷ்டம் வந்திடுச்சு. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிங்க. அதுதான் 'being proactive''.

2. பிரச்சினையாப் பார்த்தா பிரச்சினைதான். அதையே மாற்றத்திற்கான 'வாய்ப்பாகப்' பார்த்தால் வித்தியாசமான தீர்வுகளைக் காண முடியும். சிற்பியோட உளி கல்லுக்கு வலியாகத் தெரிந்தால் உடைந்துவிடும். ஆனால் அந்த வலிதான் அதுதான் சிற்பமாக மாறுவதற்கான வாய்ப்பு.

3. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் நம்மிடம்தான் இருக்கின்றது. கையில் இப்போது இருக்கின்றவற்றை வைத்து முயற்சி செய்வதை விடுத்து நாளை விடியாதா? நலமுடன் மலராதா? என்று காத்திருந்தால் வெறுமைதான் மிஞ்சும். நம் இறைவனே இருக்கின்றவராகத்தானே இருக்கின்றார்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு இருக்க வேண்டியது நான் மக்கள் கூட்டத்தின் மீது கொண்ட பரிவு (compassion - empathy). இவங்களுக்கு ஹெல்ப் பண்ணினா நமக்கு என்ன கிடைக்கும்னு நினைப்பது இழிவு. இவங்களுக்கு நாம் ஹெல்ப் செய்யலன்னா அவங்களுக்கு என்ன நடக்கும் என்று கேட்பது பரிவு. மனித குலம் ஒருத்தர் மத்தவங்ககிட்ட தேடுறது இந்த 'பரிவு' என்று ஒற்றைச் சொல்தான். 

அப்பம் என்கிற உங்கள் வாழ்க்கை பலுகிப் பெருகி பலரோட பசியைப் போக்கனும்னா பரிவு கொண்டு வாழுங்க. பாரம் குறையும் உங்கள் வாழ்வில்!

Friday, August 30, 2013

கோடரியைக் கூர்மையாக்குங்கள்!


ஒரு தோட்டக்காரர் தன் தோட்டத்தில் வளர்ந்த ஒரு பெரிய மரத்தை வெட்டுவதுற்கு கோடரியோடு புறப்படுகின்றார். மாலையாவதற்குள் வெட்டிவிடவேண்டும் என்று அயராமல் வெட்டுகின்றார். உணவு உண்ணக்கூட நேரமில்லை. அந்த வழியே சென்ற வழிப்போக்கன் அவர்மேல் பரிதாபப்பட்டு அங்கே நின்று அவர் செய்வதைப் பார்க்கின்றான். அந்தத் தோட்டக்காரரின் உழைப்புக்கேற்ற பலன் அங்கே இருப்பதாகத் தெரியவில்லை. அருகில் சென்று, 'ஐயா, உங்கள் கோடரியைக் கூர்மையாக்கிவிட்டு பிறகு வெட்டுங்கள், நீங்கள் எளிதாக வெட்டிவிடலாம்' என்கின்றார். 'இல்லை, அதற்கெல்லாம் நேரமில்லை' என்று தொடர்ந்து வெட்டிக்கொண்டேயிருக்கின்றார். உடல்சோர்ந்து கீழே விழுகின்றார். மரம் நிமிர்நது நிற்கின்றது. 

இந்த நிகழ்வை எழுதுகின்ற மேலாண்மையியல் எழுத்தாளர் ஸ்டீபன் கோவே இப்படி நிறைவுசெய்கின்றார்: 'அவர் 15 நிமிடங்கள் எடுத்து கோடரியைக் கூர்மைப்படுத்தியிருந்தால் தன் வேலையை வெகு எளிதாக முடித்திருப்பார். வேலையும் முடிந்திருக்கும். அவரின் ஆற்றலும் மிஞ்சியிருக்கும்'. உயர்ந்த மனிதர்களின் ஏழாவது பண்பாக அவர் முன்வைப்பது இதுதான்: 'உங்கள் கோடரிகளைக் கூர்மையாக்குங்கள்'. மனித வாழ்க்கைக்கு உழைப்பு எந்த அளவிற்கு அவசியமோ, அதே போல ஓய்வும் அவசியம் என்பதை இந்தப் பண்பு குறிக்கின்றது.

இந்த ஏழாம் பண்பைத்தான் இயேசு தன் சீடர்களின் வாழ்வில் கடைப்பிடிக்கச் செய்கின்றார். திருத்தூதர்களின் தங்களின் பணிமுடிந்து இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் தெரிவித்தபோது அவர் பேசுகின்ற ஒரே வார்த்தை, 'ஓய்வெடுங்கள்!' என்பதுதான்.

இயேசுவின் உச்சகட்ட உணர்வுமுதிர்ச்சிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. உழைப்பின் அவசியத்தை உணர்ந்த இறைவன் மனிதர்களுக்கு இன்று ஓய்வின் அவசியத்தை உணர்த்துகின்றார். இது இயேசுவின் தாய்மைக்கான முதல் எடுத்துக்காட்டு. இதே நற்செய்திப் பகுதியில் இயேசுவின் தாயுள்ளம் அவர் மக்கள் கூட்டத்தின்மேல் காட்டுகின்ற பரிவில் வெளிப்படுகின்றது.

பழைய ஏற்பாட்டில் ஓய்வு நாள் என்பது மிக முக்கியமான ஒன்று. இறைவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்ற சமய அடையாளம் மட்டுமல்ல, 'நீங்கள் எகிப்தில் அடிமைகளாயிருந்தீர்கள். அதை நினைவுகூர்ந்து உங்கள் அடிமைகளுக்கு ஓய்வு கொடுங்கள்' என்ற சமூக அடையாளத்தையும் இது கொண்டிருந்தது. ஆனால், இயேசுவின் காலத்தில் ஓய்வுநாள் என்பது சடங்கு, சம்பிரதாயங்களால் மக்களை அடிமைப்படுத்தும் ஒரு காரணியாக மாறியிருந்து வருத்தத்திற்குரியது.

இயேசு காட்டுகின்ற ஓய்வு என்பது தனிமைத்தவம். கூட்டத்தின் மத்தியில் நாம் இருக்கும்போது நம்மைப் பற்றி நாம் நினைப்பதில்லை. கூட்டத்தின் இரைச்சலில் நம் மனம் பேசும் மெல்லிய வார்த்தைகள் நமக்குக் கேட்பதில்லை, நாம் கேட்கவும் விரும்புவதில்லை. ஆனால் தனிமையில்தான் நாம் நம்மையே பார்க்கின்றோம். தனிமை நம்மைப் பார்த்து 'ஏன் இப்படி இருக்கிறாய்?' என்று கேள்வி கேட்கின்றது. நம்மால் பதில்சொல்ல முடிவதில்லை. ஆகையால் இந்தத் தனிமையை நமக்குப் பிடிப்பதில்லை. ஓய்வு என்பது நம்மை நாமே ஆய்வு செய்து பார்க்கின்ற ஒரு நிலை. தனிமைத்தவத்தில்தான் இது சாத்தியமாகின்றது.

இயேசு குறிப்பிடும் தனிமை, தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு (loneliness) அன்று. மாறாக, நாம் தேர்ந்துகொள்கின்ற தனிமை (aloneness or solitude). நாம் யார்? நம் வாழ்வின் குறிக்கோள் என்ன? நம் உறவுகளின் அர்த்தம் என்ன? என்ற கேள்விகளை நாம் தனிமையில் கேட்டால்தான் மக்கள்கூட்டத்தோடு, உலகத்தோடு, உறவுகளோடு நம்மால் வாழ முடியும். தனிமையை அனுபவித்த மனிதனால் மட்டுமே வாழ்வை எதிர்கொள்ள முடியும்.

விக்டர் பிராங்கிள் என்ற யூத எழுத்தாளர் இந்த உலகமே வியக்கின்ற 'Man's Search for Meaning' என்ற நூலைப் படைக்கின்றார். இந்தப் படைப்பு முழுவதுமே அவர் குறிப்பிடுவது என்னவென்றால் ஹிட்லரின் வதைமுகாமிற்குள் இருந்த தனிமையில்தான் என் வாழ்வின் அர்த்தம் நான் கண்டேன் என்பதுதான். தனிமையில்தான் நாம் ஓய்ந்திருக்கின்றோம். நாம் நாமாக இருக்கின்றோம்.

காலை துயில் எழுவதிலிருந்து, இரவு தூங்கும் வரை ஓடிக்கொண்டேயிருக்கின்றோம். வேகமான நடை, வேகமான ஓட்டம், வேகமான தொலைத்தொடர்பு, வேகமான வாகன வசதி' என்று வேகமாக ஓடும் வாழ்க்கை ஓட்டத்தில் நாம் நிம்மிதியடைகின்றோமா? என்றால் அது கேள்விக்குறிதான். ஒரே நாள் போல அடுத்த நாளும் ஓட்டம்.

கடந்த ஆண்டு 'அவசரம்' என்ற குறும்படம் வெளியானது. மும்பை நகரின் பரபரைப்பைக் காட்டுகின்ற படம். ஒரு பெண் குளித்து, சரியாகத் துவட்டாத தலையுடன் வேகமாக லோக்கல் ட்ரைனைப் பிடிக்க ஓடிவார். எப்படியோ கூட்டத்தைச் சமாளித்து ஏறிவிடுவார். சுற்றிலும் பார்ப்பார். யாரும் இறங்குவதாகத் தெரியவி;ல்லை. செல்போன், நியூஸ்பேப்பர் என்ற எல்லாரும் மும்முரமாயிருக்கின்றார்கள். ஒரு ஸ்டேஷனில் நிறையப் பேர் இறங்க, ஓடிப்போய் ஒரு இடம் பிடித்து அமர்ந்து கொள்கின்றார். இறங்குவதற்குள் சாப்பிட்டுவிடலாம் என்றெண்ணி டிபன் பாக்ஸை எடுக்கின்றார். திறக்க முடியவில்லை. சூடாக மூடியதால் மூடி இறுகிவிட்டது. சுற்றிலும் பார்க்கின்றார். யாரும் உதவுவதுபோல் தெரியவில்லை. பல்லால் கடித்துத் திறக்க முயல்கின்றார். அந்தநேரம் ட்ரைய்ன் திடீரென்று நிற்க டிபன் பாக்ஸ் கீழே விழுந்து சோறு கொட்டிவிடுகின்றது. தன் உடை, காலணிகள் என்று எல்லா இடமும் சாம்பார். அப்போதும் யாரும் கண்டுகொள்ளவேயில்லை. மெதுவாக டிபன் பாக்ஸை மூடிவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்கின்றார். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி ஓடவேண்டும். ஓட்டலுக்குச் செல்ல நேரம் இருக்காது. கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுக்கிறது. குறும்படம் இந்த வரிகளோடு நிறைவடையும்: 'நாம் செய்கின்ற வேலையினால் நிம்மதியாக ஒரு கையளவு உணவு கூட சாப்பிட முடியவில்லையென்றால், எதற்காக அந்த வேலை? எதற்காக அந்த அவசரம்?'

இன்று வாழ்க்கை ஓட்டத்தை கொஞ்சம் நிறுத்திப் பார்ப்போம். நமது கனவு, நமது குழந்தைகள், நமது குடும்பம். இவைகளுக்காகத்தானே இந்த ஓட்டம். திடீரென்று ஒருநாள் நாமே நிறுத்தப்பட்டாலன்றி ஓடிக்கொண்டேயிருந்தால் அது 'வேகமாகப் போகவேண்டும் என்பதற்காக பெட்ரோல் கூட போடாமல் வண்டி ஓட்டத் துணிவது' போன்றது.

தனிமைத்தவம் ஏற்போம். இறைவனின் தாயுள்ளம் பெறுவோம்!

Thursday, August 29, 2013

கடவுள் தேவையா?


மத்திய அமெரிக்காவின் மறைந்து போன மாயன் நாகரீக மக்களில் நடுவில் புழங்கிய கதை இது: மனிதன் ஒருநாள் காட்டில் சோகமாக அமர்ந்திருந்தான். காட்டு விலங்குகள் அவனைச் சுற்றி வந்து அவனிடம், 'நீ சோகமாக இருப்பதை எங்களால் சகிக்க முடியவில்லை. என்ன வேண்டுமானாலும் கேள். நாங்கள் உனக்குத் தருகிறோம்' என்றன. மனிதன், 'எனக்கு நல்ல கண்பார்வை வேண்டும்' என்றான். கழுகு, 'என் பார்வையை உனக்குத் தருகிறேன்' என்றது. 'யாரும் எதிர்க்கமுடியாத வலிமை வேண்டும்' என்றான். ஜகுவார், 'நான் தருகிறேன்' என்றது. 'பாதாளங்களின் இரகசியத்தை அறிய வேண்டும்' என்றான். பாம்பு, 'அதை நான் உனக்குக் காட்டுகிறேன்' என்றது. எல்லா விலங்குகளும் தன் ஆற்றலை இப்படியாக மனிதனுக்குத் தந்தது. எல்லா ஆற்றல்களையும் பெற்ற மனிதன் எழுந்து புறப்பட்டான். அப்போது மான் மற்ற விலங்குகளைப் பார்த்து, 'மனிதன் இப்போது எல்லாவற்றையும் பெற்று விட்டான். இனி அவனிடம் சோகம், வருத்தம் இருக்காது' என்றது. அதற்கு ஆந்தை மறுமொழியாக, 'இல்லை, மனிதனின் மனத்தில் ஒரு துவாரத்தை, வெற்றிடத்தை நான் பார்த்தேன். அது ஒரு தணிக்க முடியாத பசி. அது அவனுக்கு சோகத்தைத் தரும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அவன் எல்லாவற்றையும் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டேயிருப்பான். ஒருநாள் இந்த பூமி சொல்லும்: 'இதற்கு மேல் நீ எடுத்துக்கொள்ள என்னிடம் ஒன்றுமேயில்லை'.

மனிதனின் தேடலை, தேடல் தருகின்ற ஏமாற்றத்தையும், ஏக்கக்தையும், தாகத்தையும், பசியையும், விரக்தியையும் வெளிப்படுத்துகின்ற ஒரு கதை இது. எல்லாவற்றையும் கொண்டு வெற்றிடத்தை நிரப்பத் துடிக்கும் மனிதருக்கு ஒரு நிறைவான வழியைக் காட்டுகின்றார் இயேசு.

'அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்' (யோவான் 6:27) என்று நம் தேடலை ஒருமுகப்படுத்துகின்றார் இயேசு. 'நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள்' என்று அவர்களின் தேடலில் இருந்த வெளிவேடத்தையும் தோலுரிக்கின்றார். இயேசு ஐந்து அப்பங்களை பலுகச் செய்து ஐயாயிரம் பேருக்கு கொடுத்தவுடன் அங்கிருந்த மக்களுக்கு ஒரு மாயை வந்து விடுகிறது. அது என்னவென்றால், ஏற்கனவே நாம் பட்டினியாகக் கிடக்கின்றோம். உழைக்க வேண்டுமானால் வேலையும் கிடைப்பதில்லை. வேலை கிடைத்தாலும் கடினமானதாக இருக்கிறது. அப்படியே சம்பளம் வாங்கினாலும், ஏரோது ஒருபுறம், உரோமை அரசு மறுபுறம் என அதை வரியாக நம்மிடமிருந்து பிடுங்கி விடுகின்றனர். ஆகவே, இவர் பின்னாலேயே செல்வோம். உழைக்கவும் தேவையில்லை. உணவும் கிடைக்கும் என்ற மயக்க நிலைக்கு ஆளாகின்றனர். இயேசு இந்த மாயை உணர்வைச் சாடுகின்றார்.

இயேசுவின் வார்த்தைகள் இன்று நமக்கு இரண்டு சவால்களை வைக்கின்றன:
1. நாம் எதற்காக இறைவனைத் தேடுகிறோம்?
2. நாம் நம் வாழ்வின் இலக்காக எதை வைத்திருக்கின்றோம்?

1. நாம் எதற்காக இறைவனைத் தேடுகிறோம்?
2006ஆம் ஆண்டு வெளிவந்த ரிச்சர்ட் டாகின்ஸ் என்பவர் எழுதிய 'கடவுள் என்ற மாயை' என்ற நூலும் 2007ஆம் ஆண்டு வெளிவந்த கிறிஸ்டோபர் ஹிட்சன்ஸ் எழுதிய 'கடவுள் ஒன்றும் பெரியவரல்ல: சமயம் என்ற விஷம்' என்ற நூலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சமயம், சமயத்தால் வருகின்ற அடிமைத்தனம், ஏற்றத்தாழ்வு, இரத்தம், கண்ணீர், கொலை, மரணம், சித்ரவததை, வலி, பயம் என அனைத்து நிலைகளிலும் சமயத்தை கேள்விக்குட்படுத்துகின்ற இந்தச் சிந்தனை ஒரு நவநாகரீகமாக மாறிவிட்டது. வெகு எளிதாகப் பேசப்படுகின்ற ஒரு பேசுபொருளாக கடவுள் மாறிவிட்டார். கடவுளும், மதமும் இல்லாமலே மனிதம் நிறைவுபெறும் என்கின்ற முடிவு நியாயமானதா என்பது தனிநபர் அனுபவத்தைப் பொறுத்ததே. ஆனால் இந்த இரண்டு நூலாசிரியர்கள் மட்டுமல்ல, அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்று என்னவென்றால் - மனித ஆழ்மனதில் இருக்கின்ற வெற்றிடத்தை அடைக்க இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்த ஒரே பொருள் இறைவன்தான். நம் அனைத்துத் தேடல்களும் நிரந்தர அமைதியைத் தர இயலாதவை. நம் கண்டுபிடிப்புக்கள், விஞ்ஞானம், அறிவியல் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றாலும், அதோடு வருகின்ற வெற்றிடத்தையும் நாம் அனுபவித்துத்தான் ஆகவேண்டியுள்ளது. 'ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்' (மத் 6:33) என்ற இயேசுவின் வார்த்தைகள் இங்கு நினைவுகூரப்படவேண்டும்.

2. நம் வாழ்வின் இலக்காக நாம் எதை வைத்திருக்கின்றோம்?
'நிலையற்றவைகளில் மனத்தை ஈடுபடுத்துவதைவிட, நிலையானவைகளில் எங்கள் மனத்தை ஈடுபடுத்தத் தூண்டுகின்ற காலம் இதுவே' - தவக்காலத் திருப்பலி தொடக்கவுரை 2ல் நாம் செபிக்கின்ற வார்த்தைகள் இவை. நம் வாழ்வின் இலக்காக நாம் வைத்துக்கொள்ள வேண்டியதாக இன்றைய நற்செய்தி நமக்குக் காட்டுகின்றது. இறைவனைத் தேடுகிறேன் என்று சொல்லிவிட்டு நாம் இன்னும் எதிர்மறை உணர்வுகள், அடிமைத்தனங்களில் இருந்தோம் என்றால் நம் இலக்கு பயனற்றதாகிவிடும். தூய பவுலடியார் குறிப்பிடுவது போல, 'இறையாட்சி என்பது நாம் உண்பதையும், குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது' (உரோ 14:17). ஆகவே அன்றாடம் நாம் செய்யும் செயல்கள் நீதி, அமைதி, மகிழ்ச்சியை நமக்கும், பிறருக்கும் தருவனவாக இருந்தால் நம் இலக்கு சரியான இலக்காக அமையும்.

நம் தேடலும், தேடுபொருளும் இறைவனாகட்டும்!

Wednesday, August 28, 2013

வெங்காய விலை


இன்னைக்கு காலைல திருப்பலிக்கு உடை மாற்றிக் கொண்டிருந்தபோது அறைக்கு வெளியே ஒரு பாட்டி நின்று என்னைக் கூப்பிட்டுவிட்டது. 'யாரது இந்நேரம்?' என அவசர அவசரமாய் உடைமாற்றி வெளியே சென்று பார்த்தேன். நம்ம அரோரா பாட்டி. 'என்ன பாட்டி சுகமா?' என்றேன். 'சுகம்' என்று சும்மா சொன்னது.

அதன் கையில் ஒரு நியூஸ்பேப்பர். நீட்டியது. வாங்கினேன். '18ஆம் பக்கத்தைப் பார்' என்றது. அவசரமாகப் பார்த்தேன்.

'இந்தியாவில் வெங்காய விலை ஒரு கிலோ ரூ 80' எனப் போடப்பட்டிருந்தது. 

'எனக்குத் தெரியும்' என்றேன்.

'இல்ல...இவ்ளோ கஷ்டப்படுற நாடா உங்க நாடு' என்று சொல்லிவிட்டு கோவிலுக்குள் ஓடிவிட்டது.

எனக்குக் கோபம். கோபத்தை அடக்கிக்கொண்டு திருப்பலிக்குப் போனேன். இப்பல்லாம் இந்தியாவைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் எரிச்சல் வந்து விடுகிறது.

திருப்பலி முடிந்து நிதானமாய் அந்த நியூஸ்பேப்பரை வாசித்தேன். வெங்காய விலையை விட என் கண்ணில் கண்ணீரை வர வைத்தது அதைப்பற்றி ஒரு சில சில்லறைகள் அடித்திருக்கும் கமெண்ட்ஸ் தான்.

அந்தச் சில்லறை நியூஸ்பேப்பர்காரன் பேட்டி கண்டிருப்பது சில சில்லறைகளை.

'இந்தியா ஒரு நாடா, மாநிலமா, மொழியா, மதமா, நகரமா' என வித்தியாசம் தெரியாதவர்களும், 'இந்தியாவைப் பற்றி யாரோ சொல்லக் கேட்டவர்களும்', 'இப்படி இருக்கலாம்' என நினைத்தவர்களும், 'நம் மீனவர்களைச் சுட்ட இத்தாலியர்களைப் புரட்டிப் பார்த்த நம் இந்தியாவின் மேல் கோபம் கொண்டவர்களும்' எழுதித் தள்ளியிருக்கிறார்கள். ஒற்றை வரியில் அவர்கள் சொல்ல வருவது இதுதான்: 'இந்தியா இன்னும் கொஞ்ச நாளில் அழிந்து விடுமாம்!'

என் முதல் கேள்வி: என் தாய்நாட்டில் நடக்கும் ஒன்றைப் பற்றி புறணி பேச இவர்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?

என் இரண்டாம் கேள்வி: உன் நாட்டில் இருக்கும் பிரச்சனைகளே டிப்பர் லாரி வச்சி அள்ளும் அளவுக்கு இருக்க அடுத்த வீட்டுப் பிரச்சனை உனக்கு எதுக்கு?

என் மூன்றாம் கேள்வி: 'அடுத்தவனை ஒப்பிட்டுப் பார்த்துத்தான் நான் உயர்ந்தவன்' என தனக்கு உணர்த்திக்கொள்ள வேண்டுமென்றால் இதிலென்ன தன்மானம் இருக்கின்றது?

என் நான்காம் கேள்வி: (என் நாட்டு அரசியல்வாதிகளைப் பார்த்து) 'எவனோ ஒருத்தன் எங்கள இப்படிக் கேள்வி கேட்குற அளவுக்கு வச்சது நாங்களா? நீங்களா?' காசு, காசுங்குறீங்களே....உங்களுக்கு எவ்வளவு தான்டா வேணும்? 

என் ஐந்தாம் கேள்வி: (என்னைப் பார்த்து) நீ இன்னும் இவன் ஊர்ல வந்து உட்கார்ந்து இவன் கையைப் பார்த்துக்கிட்டே இருந்தா...இவன் வெங்காய விலை மட்டுமல்ல...எல்லாத்தையும் எழுதுவான். நீதான இங்க வந்து எங்க ஊர்ல ஒன்னுமே இல்லைனு சொல்ற. நீதான பிராஜக்ட் போடுறேன்கிற பேர்ல 'எங்க ஊர்ல ஜாதி இருக்கு. தாழ்த்தப்பட்டவங்க இருக்காங்க. பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல. நாங்க ரோட்லதான் இருக்கோம். எங்க ஊர்ல மழையே பெய்யாது. எங்க பிள்ளைங்க படிக்க மாட்டாங்க. எல்லாருமே கூலி வேலை பார்க்குறாங்கன்னு' சொல்லி வச்சிருக்க. 'நீ இங்க வந்து படிக்கிறனா' அவன் என்ன நினைப்பான். 'உங்க ஊர்ல யுனிவர்சிட்டி இல்லயான்னுதான்' கேட்பான்.


எதையுமே சீரியஸா எடுக்கக் கூடாதுன்னு யாரோ ஃபோன்ல சொன்னதக் கேட்டு நானும் கொஞ்சம் அமைதியானேன். இன்னைக்குச் சாப்பிடவே பிடிக்கல. சாப்பாட்டு அறைக்குப் போனாலும் என் ஊரின் வெங்காய விலை என்னைக் கன்னத்தில் அறைகிறது.

'எல்லாம் சரியாயிடும்'னு எவ்ளோ நாளைக்குத்தான் அமைதியாயிருக்கிறது.

நாளை மற்றுமொரு நாளைன்னு நாள் ஓடிக்கினேதான் இருக்கு. ஆனா மாற்றம்?

இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் வடிவேல் டயலாக் தான் ஞாபகத்திற்கு வந்தது. 'அக்காமாலா', 'கப்சி' போன்ற அந்நிய பானங்களுக்கு விளம்பரம் செய்த விளையாட்டு வீரர்களையும், நடிகர்களையும் பார்த்து இப்படிக் கேட்பார்:

'விளம்பர ஓவியங்களுக்குத் துணைபோவது சரியா...தவறா...?

'சரியா...தவறா?'

'சொல்லமாட்டாயா?'

'வெள்ளைக்காரன் புத்திசாலி...

நானோ கையாலாகதவன்...

நீங்களோ காரியக்காரர்கள்...

அப்படித்தானே...

பணம் தருகிறார்கள் என்பதற்காக

தட்டில் எதை வைத்துக் கொடுத்தாலும் தின்றுவிடுவீர்களா...?

பிராணிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?'

'சுயபுத்தி வேண்டாம்?!'

இந்த டயலாக் இன்று வடிவேல் என்னைப் பார்த்துக் கேட்பதுபோலவே இருக்கிறது!

இரவு உணவு செய்ய வெங்காயம் தேடினேன். இறுதியாக ஒன்று சிக்கியது.

அதை வெட்டும்போது ஏனோ எனக்குக் கண்ணீர் வரவில்லை.

கண்ணீர் நேசம்


இன்று மோனிக்கம்மாவின் திருநாள்.

மோனிக்கா என்றால் யார்?

புனித அகஸ்தினாரின் தாய்.

பிறந்த ஆண்டு, இடம் அனைத்தையும் கடந்து இவர் யார் என்று மட்டும் பார்ப்போம்.

மோனிக்கா என்றால் கண்ணீர் என்று அர்த்தம் சொல்லும் அளவிற்குக் கண்ணீர் வடித்தவர்.

'தென்னைய வச்சா இளநீரு...பிள்ளையப் பெத்தா கண்ணீரு...'

என்ற பாடல் வரிகளை மூன்றாம் நூற்றாண்டிலேயே அனுபவித்தவர் இவர்.

நம் உடலும் உள்ளமும் இயலாமையில் பேசும் மொழிதான் கண்ணீர்.

இறப்பு.

அதை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது?

இயலாமை கண்ணீராய் வழிகிறது!

பிறப்பு.

குழந்தையின் முதல் சிரிப்பு.

அதையும் வார்த்தையால் சொல்ல இயலாது.

இயலாமையில் கண்ணீர் வடிக்கின்றாள் தாய்.

நட்பு.

பிரிவு.

காதல்.

நெருக்கம்.

பிரிவு.

பயணம்.

பிரிவு.

அனைத்திலும் உடன் வருவேன் என்று சொல்வதற்குள்

உடனேயே வருவது கண்ணீர்.

கண்ணீர் பெண்களின் முதல் ஆயுதம்.

மனிதர்களை வெல்ல மட்டுமல்ல, கடவுளையை வெல்லும் ஆயுதம் கண்ணீர்.

கண்ணீர் ஆன்மா சுரக்கும் மருந்து.

தன் மகனுக்காய் கண்ணீர் வடித்த தாய் மோனிக்கா.

ஒவ்வொரு பெண்ணின் கண்ணீருக்குப் பின்னால் கண்டிப்பாய் ஒரு ஆண் இருப்பான்.

(ஆனால் ஒவ்வொரு ஆணின் கண்ணீருக்குப் பின்னால் இரண்டு பெண்கள் இருப்பார்கள்!)

அந்தக் கண்ணீருக்குக் காரணமாகவோ.

அந்தக் கண்ணீரின் தேவையாகவோ.

அந்தக் கண்ணீரின் ஏக்கமாகவோ.

'சும்மா எதுக்கெடுத்தாலும் அழாத!'

என்ற அதட்டலுக்குப் பின்னும் இருப்பது ஒரு இயலாமைதான்.

நம் ஒவ்வொருவரின் பிறப்பின் போதும்

கண்ணீர் வடித்திருப்பாள் தாய்...

வலியினால் வரும் கண்ணீரல்ல அது...

தன் குழந்தையோடிருந்த தொப்புள்கொடி அறுவதால் வரும் பிரிவின் கண்ணீர் அது...

பிரிவு என்றால் கண்ணீர்...

தன் மகன் கடவுளை விட்டுப் பிரிகிறான் என்று அவர் வடித்த கண்ணீர்

மறுபடியும் அவரை இறைவனோடு இணைக்கின்றது...

கண்ணீர் நல்லதுதான்...

Monday, August 26, 2013

கால்களின் மேல் கண்கள்


நாம் பார்க்கும் முகங்களுக்குத்தான் ஆல்பமா என்ன? கால்களின் ஆல்பம் தயாரிக்கிறேன் நான். இன்று காலையிலிருந்து யாருடைய முகத்தையும் பார்க்கக் கூடாது, கால்களை மட்டுமே பார்க்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டேன். கால்களை மட்டுமே பார்த்தேன். கால்கள் எண்ணற்ற எண்ணங்களை இன்று என்னுள் உருவாக்கியது.

நம் எண்சாண் உடலுக்கு நம் கால்தானே முக்கியம்!

கால்கள் தான் எத்தனை வகை? ஒவ்வொருவரின் காலும் ஒருவகை. ஒவ்வொருவரின் நடையும் ஒருவகை. யாரும் யாரைப்போலவும் நடக்க முடியாது (கால்களால்கூட!).

ஆலயம் திறந்து விளக்கேற்ற வரும் எங்கள் ஆலயக் காப்பாளரின் பூட்ஸ் கால்கள்.

'என் நம்பிக்கையெல்லாம் இனி நீ தான்' என நம்பிக்கையைத் தன் கையில் உள்ள மெழுகுதிரியாய் உருக்கி கண்ணீர் வடிக்கும் அரோரா பாட்டியின் தேய்ந்த கால்கள்.

'ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்' என்று வந்து நின்ற ருமேனியப் பெண்ணின் அழுக்கான கால்கள்.

அவளின் இடுப்பிலிருந்த குழந்தைக்கு அணிந்திருந்த செருப்பு போதாததால் கடித்து இரத்தமான கால்கள்.

'வெள்ளை, சிகப்பு, பிங்க், பச்சை, மிக்ஸ் கலர்' என வண்ணப்பூச்சு செய்யப்பட்ட கால்கள்.

'இந்த செருப்பு ஓகே வா?' என்று செருப்புக் கடையில் தன் கணவருக்கு செலவிழுத்துவிட்டுக் கொண்டிருந்த அன்பு மனைவியின் கால்கள்.

படிகளில் இறங்கும் கால்கள்.

மெட்ரோவில் ஓடி ஏறும் கால்கள்.

எவ்ளோ பேர் முன்னால் இருந்தாலும் தன் கேர்ள் பிரண்ட் சொன்ன 'மொக்க' ஜோக்கிற்காக அவளை அலாக்காகத் தூக்கி அவளின் பாய்பிரண்ட் சுற்றியபோது அருகில் வந்து சென்ற அந்த அமெரிக்க இளவலின் கால்கள்.

நடனமாடும் கால்கள்.

பிளாட்பாரத்தில் தன் அப்பாவை எத்தி விளையாடிய எத்தியோப்பிய சிறுவனின் கால்கள்.

பந்துகளை உதைக்கும் கால்கள்.

பேருந்தின் கூட்டத்தில் நெளியும் கால்கள்.

பின்னிருக்கையிலிருந்து முன்னிருக்கை நுழையும் கால்கள்.

பூஜித்து வணங்கப்படும் கால்கள்.

சீனன் ஒருவனின் கால்கள் (ஏழாம் அறிவு படம் பார்த்தபின் சீனர்கள் வில்லன்களாக மட்டுமே தெரிகின்றனர்!)

கறுப்பான, வெளுத்த, சிவப்பான, நிறம் குழப்பம் தருகின்ற

மயிர் மண்டிய, வழுவழுப்பான கால்கள்

ஐபோட் கேட்டுக்கொண்டே தாளமிடும் கால்கள்

அவசரமாய்ச் சிகரெட்டை நசுக்குகிற கால்கள்.

நேசித்தவரை தேடிச் செல்கிற கால்கள்.

வாகனங்களை ஸ்டார்ட் செய்கிற கால்கள்.

இன்னும் எத்தனையோ கால்கள் என் கற்பனைக்கு வந்து போயின...

செங்கற்சூளையின் சேற்றிலுள்ள கால்கள்.

நாற்று நடும் கால்கள்.

தத்தி தத்தி ஓடி கட்டிலில் இடித்து இரத்தம் வந்த குட்டி ஃபிலோ கால்கள்.

உலகளந்த கால்கள்.

மெகந்தியிட்ட கால்கள்.

பாதம் வெடித்த கால்கள்.

மெட்டி மின்னுகிற கால்கள்.

ஆறுவிரல்களுள்ள கால்கள்.

முத்தமிடத் தூண்டும் கால்கள்.

புணர்ச்சியில் பின்னும் பாம்புக் கால்கள்.

'எல்லாரும் இங்கே பாருங்க' என உசுப்பேத்தும் வாழைத்தண்டு கால்கள்

எனக்கு மிக நெருக்கமான ஒருத்திக்கு பெருவிரலை விட இரண்டாம் விரல் நீளமான கால்கள்.

(அதுல ஒரு சீக்ரெட் இருக்கு – அந்த மாதிரி உள்ளவங்க யாருக்குமே அடங்க மாட்டாங்க...நான் சொல்லல... நம்ம தணுஷே சொல்லிருக்காரு!)

கடலுக்கடியில் நீந்துகின்ற கால்கள்.

மலையேறும் கால்கள்.

இதழோடு இதழ் பதித்து முத்தமிடும்போது ஏறி நிற்கும் கால்கள்.

போருக்குச் செல்கின்ற கால்கள்.

தண்ணீர்க் குடம் சுமந்து தள்ளாடும் கால்கள்.

ரேசன்கடை வரிசையில் நிற்கிற கால்கள்.

கால்மேல் கால் போட்டு அதிகாரம் காட்டும் கால்கள்.

நரம்புகள் புடைத்த கால்கள்.

பெருவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்ட கால்கள்.

சுகரில் பெருவிரல் இழந்த கால்கள்.

என் வாழ்க்கை என்ற கடற்கரையில் தடம் பதித்த எத்தனையோ கால்கள்.

'யாரும் பார்த்துவிடக் கூடாது' என நான் என் கேன்வாசுக்குள் மறைக்கும்

என் தோலுரியும் அலர்ஜி கால்கள்...

இனி யாரைப் பார்த்தாலும்

கால்களைத்தான் பார்ப்பேன்.

ஒவ்வொரு காலும் ஒரு வரலாறு...




(நன்றி: கால்களைப் பார்க்க என்னைத் தூண்டிய மனுஷ்யபுத்திரனுக்கு!)

Sunday, August 25, 2013

நாம் எடுப்பவர்களா? கொடுப்பவர்களா?


நம் சிந்தனைக்காக 'உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்' (12:34) என்ற இறைவாக்கை எடுத்துக்கொள்வோம். நாம் எதைப்பற்றிச் சிந்திக்கின்றோம்? நம் உள்ளம் எங்கே இருக்கின்றது? 

மனித வாழ்க்கையின் உந்துதலை 'எடுத்தல்', 'கொடுத்தல்' என்று பிரிக்கலாம். நம்மில் 'டேக்கர்', 'கிவர்' என்ற இரண்டு நபர்கள் இருக்கிறார்கள். நம்மில் இருக்கும் 'டேக்கர்', ஒவ்வொரு நிகழ்விலும், நபரிலும் நமக்கு என்ன கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்படுவது, வன்முறை, பொறாமை, ஒப்பீடு, பிளவு மனப்பான்மை இவைகளுக்குக் காரணமும் இவரே. நம்மில் இருக்கும் 'கிவர்' நம்மை மற்றவர்களுக்குக் கொடுக்க நம்மைத் தூண்டுபவர். நம் அன்பு, நட்பு, இரக்கம், கருணை, கரிசனை, தியாகம் அனைத்திற்கும் காரணம் இவரே. நம்மில் இருக்கும் இவ்விருவரையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியது எதார்த்தம் என்றாலும் நாம் எடுக்க வேண்டிய முடிவு நம்மில் இவர்கள் யார் செயலாற்றுகிறார்கள் என்று தீர்மானிப்பதுதான். 

'உங்கள் உடைமைகளை விற்று' எனக் கற்பிக்கும் இயேசு 'எடுத்தலை' விடுத்து 'கொடுக்க' அழைக்கின்றார். நாம் பிறக்கும்போது கைகளை இறுக மூடிக்கொண்டே பிறக்கின்றோம். இதுதான் நாம் அனுபவிக்கும் முதல் பாதுகாப்பின்மை. தாயின் வயிற்றில் எந்தக் கவலையும் இல்லாமல், பாதுகாப்பாக இருக்கும் நமக்கு வெளி உலகம் பாதுகாப்பற்றதாகத் தெரிகின்றது. பாதுகாப்பு வேண்டி நாம் எதையாவது பற்றிக்கொள்ள நினைக்கின்றோம். வாழ்வில் நமக்கு முன் எப்போதுமே ஒரு திரைச்சீலை இருக்கின்றது. திரைச்சீலைக்குப் பின் என்ன இருக்கும் என்பது நமக்குத் தெரிவதில்லை. இது ஒரு வரப்பிரசாதம் என்றாலும், இது அச்சுறுத்தலாகவும் இருக்கின்றது. நாளை என்ன நடக்கும்? எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ற கேள்விகள் நம்மையறியாமலேயே எதையாவது பற்றிக்கொள்ளத் தூண்டுகின்றன. பணம், பொருள், நண்பர்கள், பதவி, படிப்பு என எதையாவது பிடித்துக்கொண்டு திரைச்சீலைக்கு முன் நின்று கொண்டேயிருக்கின்றோம். 'துக்கத்திலும், தூக்கத்திலும், ஏக்கத்;திலும் கழியும் வாழ்க்கை. 

இயேசு தரும் பாடம் என்னவென்றால் திரைச்சீலைக்குப் பின் என்ன இருக்கும் என நீ ஏன் கவலைப்படுகிறாய்? உன் உள்ளத்தை என்பக்கம் திருப்பு என்பதுதான்! நம் பாதுகாப்பு நம் செல்வத்தில் அல்ல இறைப்பராமரிப்பில் என்பதுதான். 'என் பற்றுக்களா?' அல்லது 'இறைப்பராமரிப்பா'? இரண்டையும் பற்றிக்கொள்வது சாத்தியமல்ல. 'எனக்கு இது வேண்டும்' என்று நினைக்கின்ற மனம் 'எனக்கு இன்னும் வேண்டும்' என்று கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றது. ஒன்று கிடைக்க மனம் மற்றதற்குத் தாவுகின்றது. 'இதைவிட அது நல்லது' என நினைக்கின்றது. இந்த அங்கலாய்ப்பில் நம் கவனம் சிதறியே போகின்றது. இந்த அங்கலாய்ப்பு நம்மை எதிர்காலத்திலேயே அல்லது இறந்த காலத்திலேயே வாழ்பவர்களாக மாற்றுகிறது. இதற்கு மாறாக, இறைப்பராமரிப்பில் நாம் நம்பிக்கை கொள்ளும்போது நாம் 'இன்றில்' வாழத் தொடங்குகின்றோம். 'இன்றில்' வாழ்வதுதான் விழிப்பு நிலை, ஆயத்த நிலை. இயேசுவின் சீடர்கள் அங்கலாய்ப்பு, ஏக்கம் போன்றவற்றிலிருந்து மனச்சுதந்திரம் பெற்றவர்களாகவும், தாராள உள்ளம் கொண்டவர்களாகவும் இருக்க அழைப்புப் பெறுகின்றனர். 'விழிப்பாயிருக்காத' நிலை ஒருவர் மற்றவரை 'அடிக்கவும், மயக்கமுற உண்ணவும் குடிக்கவும்' (12:45) நம்மைத் தூண்டுகிறது. 

கைகளை விரித்துக் கொடுப்பது. கைகளை மூடிப் பற்றிக்கொள்வதை விட, கைகளை விரித்துக் கொடுக்கும்போது திரைச்சீலை விலகி நம் கண்களுக்கு இறையரசு தெரிகின்றது. இந்த விரித்துக் கொடுத்தலை நம்மில் தூண்ட வேண்டியது 'பொறுப்புணர்வு'. நாம் இந்த உலகில் வெறும் மேற்பார்வையாளர்களே. எதுவும் நமக்குச் சொந்தமில்லை? நம் பொருள், உறவுகள் அனைத்தையும் நாம் சொந்தமாக்கிக்கொள்ள முடியாது. இன்று நாம் மேற்பார்வை செய்கிறோம். அது நாளை வேறொருடையவராகிறது. உயரம் தாண்டும் போட்டியில் போல நாம் ஒரு கட்டத்தில் கையிலிருக்கும் குச்சியை விட்டுத்தான் ஆகவேண்டும். விட்டால்தான் தாண்டி மறுபக்கம் செல்ல முடியும்.

ஜேம்ஸ் பட்டர்ஸன் ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறார்: 'வாழ்க்கை என்பது பந்துகளை மாறி மாறிப் பிடிக்கும் 'ஜக்லிங்' விளையாட்டு போன்றது. நம் கையில் பணம், குடும்பம், உடல்நலம், நண்பர்கள், நன்னடத்தை என்ற 5 பந்துகள் உள்ளன. இவை அனைத்துமே காற்றில் நிற்கின்றன. ஒருநாள் நாம் உணர்கிறோம் இதில் பணம் என்பது இரப்பர் பந்து. நாம் கீழே போட்டாலும் மீண்டும் எழும்பி வந்து விடும். மற்ற நான்கும் கண்ணாடியால் ஆனவை. அவற்றில் ஒன்றை விட்டாலும் அவை கீறல் விடலாம், ஏன் நொறுங்கியே விடலாம்!'

இடுக்கமான வாயில்!


இன்றைக்கு காலையில் அலார்ம் அடித்தவுடன் கண் விழித்தோமா? எத்தனை பேர் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் என புரண்டு படுத்திருப்போம்? அலார்ம் அடித்தவுடன் எழுவதற்கும் இன்றைய நற்செய்திக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? நம் மனித மனம் நன்மை-தீமை என்ற அடிப்படையில் இயங்குவதைக் காட்டிலும், இன்பம்-துன்பம் என்ற அடிப்படையிலேயே இயங்குகின்றது. அதிகாலையில் எழுவது நன்மை எனத் தெரிந்தாலும், நம் மனம் அதைத் துன்பமாகவே கருதுகிறது. கொஞ்ச நேரத் தூக்கம் தருகின்ற இன்பத்தின் அடிப்படையிலேயே செயல்பட நினைக்கின்றது. காலையில் நம்மை எழுப்பும் அலாரம் ஒரு இடுக்கமான வாயில். அன்றாடம் நாம் செய்ய வேண்டிய பணிகள், நாம் எடுத்துக்கொண்ட தீர்மானங்கள், நாம் கொடுத்த வாக்குறுதிகள், நாம் மேற்கொள்கின்ற பயணங்கள், நாம் சந்திக்க வேண்டிய மனிதர்கள், நாம் பயணிக்க வேண்டிய சாலைகள், நாம் பயந்து ஒதுங்குகின்ற தேர்வுகள் இவை அனைத்துமே நம் வாழ்வின் இடுக்கமான வாயில்கள்தாம். இன்றைய நற்செய்தி விடுக்கும் அழைப்பு: 'இடுக்கமான வாயில் வழியாக வருந்தி நுழைய முயலுங்கள்'.

இன்றைய நமது உலகை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் 'அனானிமிட்டி' (முகவரியற்ற நிலை) என்று குறிப்பிடலாம். யாரும் யார் முகத்தையும் பார்க்காமலே பேசலாம், பழகலாம், சண்டை போடலாம், ஷாப்பிங் போகலாம், ஏன் திருமணம் கூட செய்து கொள்ளலாம். நமது இணைய தளங்களும், சமூக உறவுத் தளங்களும் 'அனானிமிட்டி' என்ற ஒற்றைச் சொல்லை மையமாக்கியே உள்ளன. இந்த சமூக தொடர்புத் தளங்களைப் பொறுத்த வரையில் நாம் ஒரு 'டேட்டா'. நம்மை ஆக்கலாம். அழிக்கலாம். பிரதி எடுக்கலாம். பரிமாறலாம். இடுக்கமான வாயில் வைக்கின்ற முதல் சவால்: நம்மைச் சூழ்ந்திருக்கும் 'அனானிமிட்டி'யிடமிருந்து அகல்வது. தனியாக இருப்பதை விட கூட்டத்தோடு இருப்பது நமக்குப் பிடிக்கின்றது. அமைதியாக இருப்பதை விட எதையாவது கேட்டுக்கொண்டேயிருப்பது நமக்குப் பிடிக்கின்றது. கண்களை மூடுவதைவிட கண்களைத் திறந்து கொண்டு எதையாவது பார்;த்துக்கொண்டேயிருப்பது நமக்குப் பிடிக்கின்றது. ஏனெனில் தனிமை, அமைதி அனைத்தும் நமக்குப் பயத்தைத் தருகின்றது. நம் தனிமையிலும், அமைதியிலும்தான் நாம் தனித்துவத்தை நாம் அடையாளம் காண்கின்றோம். அகன்ற வாயிலில் நுழையும்போது நாம் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் இடுக்கமான வாயிலில் நுழையும்போது நம் உயரம், உடல் அளவு அனைத்தும் நம்மையறியாமலே நம் மனதில் எழுகின்றது. நான் இப்படி இருக்கிறேனோ? என்ற கேள்வி நமக்கு பயத்தையும், அதிர்ச்சியையும் கொடுக்கின்றது. நம்மை ஏற்றுக்கொள்வதற்கே அது தடையாக அமைந்துவிடுகின்றது. ஆனால் அங்குதான் நம் வளர்ச்சி; தொடங்குகின்றது. 

இடுக்கமான வாயிலின் முதல் நன்மை அது நமக்கு சுய அறிவைத் தருகின்றது. கூட்டத்தோடு இணைந்து வாழ்வது நம் தனித்தன்மையைக் கெடுத்து விடுகின்றது. தங்கள் தனித்தன்மையை உணர்பவர்களே வெற்றியாளர்களாக மாறுகின்றனர். இரண்டாவதாக, 'துன்பங்களின் வழியே மீட்பு'. ஊர் என்ற இடத்திலிருந்து ஆபிரகாமை இறைவன் அழைத்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்துச் சென்றது ஆபிராகாமிற்கு ஒரு இடுக்கமான வாயில். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ராயேல் மக்களை விடுவித்த இறைவன் அவர்களை பாலைவனத்தின் வழியாக 40 ஆண்டுகள் அழைத்துச் சென்றது அவர்களுக்கு ஒரு இடுக்கமான வாயில். 'நீ என்னை வணங்கினால் அனைத்தையும் உமக்குத் தருவேன்' என்று அலகையின் சோதனைகளை வென்று சிலுவையைத் தழுவியது இயேசுவுக்கு ஒரு இடுக்கமான வாயில். ஆனால் இடுக்கமான வாயில்கள்தாம் மனுக்குலத்தின் மீட்பின் வாயில்களாக அமைந்துள்ளன. ஆகையால் நம் வாழ்வில் சின்னச் சின்ன துன்பங்கள் வழியாகவே நாம் மீட்பிற்கு பிறக்க முடியும். மூன்றாவதாக, இடுக்கமான வாயிலைத் தேட முயற்சி வேண்டும். பெரிய வீடு, பெரிய தோட்டம், பெரிய டிவி, பெரிய கார், பெரிய மனிதர் என்று பெரியவைகளையே தேடும் நம் கண்கள் சிறியவைகளைக் காணத் தவறுகின்றன. இடுக்கமான வாயிலைக் காண நம் முயற்சிகள் அவசியம். ஸ்காட் பெக் என்ற உளவியலாளர் தன் 'தி ரோட் லெஸ் டிராவல்ட்' என்ற நூலில் ஏன் அதிக மனிதர்கள் சில பாதைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை? ஏன் எல்லோரும் சென்ற பாதையையே தேர்ந்தெடுக்கின்றனர்? என்ற கேள்விகளுக்கு இவ்வாறு விடை தருகின்றார்: 'எல்லோரும் செல்லும் பாதையில் ஆபத்துக்கள் குறைவு. ஆபத்து வந்தாலும் அருகில் எல்லாருக்கும்;தானே ஆபத்து என்ற கண்டுகொள்ளாத்தன்மை. எதற்காக நாம் முயற்சி எடுக்க வேண்டும்? என்ற சோம்பல் மனநிலை'. இத்தகைய மனநிலைகளை விடுத்து நம்மை முயற்சிக்குத் தூண்டுவது இடுக்கமான வாயில். 

பாபி மற்றும் சஞ்சய் எழுதி, ஷாஹித் காதர் தயாரிப்பில் வெளியான 'சென்னையில் ஒருநாள்' என்ற திரைப்படத்தின் மையக்கருத்து 'இடுக்கமான வாயில்'. எல்லோரும் போல் இறந்து போவதற்குப் பதில் இறந்தும் வாழும் உடலுறுப்பு தானம் என்ற இடுக்கமான வாயிலைத் தேர்ந்தெடுக்கும் ஒரு பெற்றோரின் படம். படத்தின் வேகம், விறுவிறுப்பு, சோகத்திற்கு மத்தியில் நான் கண்ட ஒன்று 'நம் வாயில் இடுக்கமாக இருந்தாலும், நாம் இலக்கு சரியாக இருந்தால் இந்தப் பிரபஞ்சமே நமக்கு ஒத்துழைக்கும்' என்பதுதான்.

Friday, August 23, 2013

மார்ட்டின் பியூபர்


ஆஸ்டிரியாவில் பிறந்து இஸ்ரேலில் ஒரு யூத மெய்யியலராக உருவெருடுத்தவர் பியூபர் (1878 – 1965). உரையாடல் மெய்யியல் என்ற புதிய சிந்தனையை எக்ஸிஸ்டன்சியலிசத்தோடு இணைத்தவர் இவர். 1923ல் இவர் எழுதிய 'இக் அன்ட் து' (ஐ அன்ட் தவ் - நானும் நீங்களும்) என்ற நூல் மிகவும் முக்கியமானது. 1925ல் எபிரேய விவிலியத்தை ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார். 

இவரின் உரையாடல் மெய்யியலில் இவர் இரண்டு வகையான உறவுகளைப் பற்றி விளக்குகின்றார்.

1. நான் நீ (ஐ அன்ட் தவ்)
2. நான் அது (ஐ அன்ட் இட்)

1. நான் - நீ (நான் - நீங்கள்)
இந்த உறவு இருவருக்கிடையே மிகவும் பரஸ்பரமானது. ஒருவர் மற்றவரின் நலன் மட்டுமே விரும்பும் உரையாடல் உறவு. பார்ப்பது, சந்திப்பது, உரையாடுவது, ஒருவரையொருவர் கையளிப்பது என்ற அடிப்படையில் இந்த உறவு உருப்பெறுகின்றது. இரண்டு காதலர்கள், இரண்டு நண்பர்கள், ஓவியனும் மரமும், பார்ப்பவரும் பூனையும், டிரெயினில் சந்திக்கும் இரு அந்நியர்கள் என அனைத்து நிலைகளிலுமே இந்த உறவு சாத்தியப்படலாம்.

மனிதருக்கும், கடவுளுக்கும் உள்ள உறவும் இந்த வகைதான். இறைவனிடமும், இயற்கையிடமும், ஒருவர் மற்றவரிடமும் இந்த உறவை உருவாக்க நமக்குத் தேவைப்படுவதெல்லாம் பரந்த சிந்தனையும், திறந்த மனமும்தான்.

2. நான் - அது

இந்த உறவில் இணையும் இருவரில் ஒருவர் மற்றவரை சாதாரண பொருளாகப் பார்க்கின்றார். அடுத்தவரைப் பயன்படுத்தவும், பயமுறுத்தவும் தொடங்குகின்றார். பயம் இருக்கும் இடத்தில் அன்பு பறந்துவிடுகிறது. 

மனித உறவுகள் அனைத்துமே இந்த இரண்டிற்குமிடையே ஆடிக்கொண்டிருக்கும் ஊசலாகத்தான் இருக்கின்றது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நம் உறவு நிலைகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.

அதிகமாக நம்மில் எந்த உறவுநிலை இருக்கின்றது?

Thursday, August 22, 2013

மார்ட்டின் ஹைடெக்கர்

மெய்யியலார்களில் புரிந்து கொள்ள மிகவும் கடினமாக இருப்பவர் மார்ட்டின் ஹைடெக்கர் (1889 – 1976). ஜெர்மானிய நாட்டைச் சார்ந்த இவர் தனது சிந்தனையை இம்மானுவேல் காண்ட் என்னும் மெய்யியலாரின் விமர்சனத்திலிருந்து தொடங்குகின்றார். இவரது சிந்தனையை பிற்காலத்தில் வந்த பின்நவீனத்துவம், கட்டமைப்பு உடைத்தல், சூழல்மைய மெய்யியல் அனைத்திற்கும் ஊற்றாக அமைந்தது. தற்காலத்தின் பெரிய மெய்யியலார்கள் அனைவரும் இவரின் புத்தகங்களை வெகுவாக ஆய்வு செய்தவர்கள்தாம். இவரின் முக்கியமான மெய்யியில் பங்களிப்பு 'இருத்தலும் நேரமும்' என்ற நூல். ஹிட்லரின் நாசிஸ சிந்தனையை மிகவும் ஆதரித்தவர் என்ற குற்றச்சாட்டு இவர்மேல் இன்றும் உண்டு.

மனித இருத்தலை மையமாக வைத்துத் தொடங்கும் இவரின் சிந்தனை இயற்கை, இறைவன், உலகம் என அனைத்திலும் ஆக்டோபஸ் போல விரிகின்றது. 

இவரின் 'இருத்தலும் நேரமும்' என்ற நூலில் நான் கற்ற ஒன்று இதுதான்: 'இருத்தல் என்பது உடனிருத்தல்'. சார்த்தர் போன்றவர்கள் 'உடனிருத்தல் என்பது ஒரு நரகம்' என்று சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில் 'நாம் உடனிருப்பதன் வழியாகவே இருக்கிறோம்' என்று உடனிருப்பிற்கு முக்கியத்துவம் அளித்தவர். யாருமே தனியாய் இருப்பதில்லை. அனைவரும் அனைவரோடும், அனைத்தும் அனைத்தோடும் இணைந்திருக்கின்றன. ஏன் கடவுள் கூட தனியாய் இருப்பதில்லை. மனுக்குலம் இல்லாமல் கடவுளால் இருக்க முடியாது. 

மனிதர்களுக்கும், மனிதர்களுக்குமான உறவை 'ரிலேஷனாலிட்டி' எனவும், மனிதர்களுக்கும், இயற்கைக்குமான உறவை 'ஃபங்சனாலிட்டி' எனவும் அழைக்கின்றார். முதலாவது உறவில் நாம் 'மனிதர்களோடும்', இரண்டாவது உறவில் நாம் 'நிகழ்வுகளோடும்' இணைந்திருக்கிறோம். இந்த இரண்டு நிலைகளில் உள்ள உறவில் ஒரு சில தானாய் நேர்ந்தவை. மற்றும் சில நாமாய்த் தேர்ந்து கொண்டவை. இன்னும் சில நம்மேல் சுமத்தப்பட்டவை. 

இந்த அனைத்திலும் நாம் நம் பங்களிப்பைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். கட்டாயத்திற்குப் பதிலாக நாமாய் விரும்பி உடனிருந்தாலே அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமே.

நம் வாழ்வின் உடனிருப்பை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:

முதல் வகை: தண்டவாளத்தின் இரண்டு இரும்புத் தளவாடங்கள் போல. இந்த இரண்டும் 'கிட்டக் கிட்ட' இருந்தும் 'தொட்டுக்கொள்ள முடியாத நிலையில்'தான் இருக்க வேண்டும். தொட முயற்சி செய்தால் அங்கே ஆபத்துதான் மிச்சம்.

இரண்டாம் வகை: நிலவும் சூரியனும் போல. ஒன்றின் வருகை மற்றொன்றின் மறைவு. இரண்டும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. நிலவு தான் ஒளிர்வதற்கு சூரியனைச் சார்ந்திருந்தாலும் சூரியன் வந்து விட்டால் தான் மறைந்துதான் ஆக வேண்டும்.

மூன்றாம் வகை: தண்ணீரும் எண்ணையும் போல. இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் ஒன்று மற்றொன்றிலிருந்து மேலேயே இருக்கும். பார்ப்பதற்கு இணைந்திருப்பதுபோல இருந்தாலும் மிக எளிதாகப் பிரித்துவிடலாம். 

நான்காம் வகை: மலரும் மணமும்போல. நடனமும் அதை ஆடுபவரும்போல. ஒன்றை மற்றதிலிருந்து பிரித்துப்பார்க்கவே முடியாது. 

நம் இருத்தல் உடனிருத்தலா? அல்லது உடைந்திருத்தலா?

உடனிருத்தல் என்றால் எவ்வகை?


Wednesday, August 21, 2013

கபிரியேல் மார்சல்


இன்று நாம் சந்திக்கப் போகும் மெய்யியலார் கபிரியேல் மார்சல் (1889 – 1973). பிரெஞ்சுக்காரர். நாடக எழுத்தாளர். 'இருத்தலின் மெய்யியல்' (ஃபிலாசஃபி ஆஃப் எக்ஸிஸ்டன்ஸ்) என்று தன் சிந்தனைக்குப் பெயரிட்டவர். இவருக்கு மற்றவர் வழங்கும் பெயர் 'கிறிஸ்தவ எக்ஸிஸ்டன்ஸியலிஸ்ட்'. இவரின் சமகாலத்தவர்கள் தங்கள் சிந்தனையிலிருந்து தங்களின் மதத்தை அழித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் தன் மதத்தால் உருவாக்கப்பட்டவன் என்று கிறிஸ்தவ சிந்தனையை மேன்மையாகக் காட்டியவர் இவர்.

இவரின் ஒப்பற்ற ஒரு நூல் 'த ஃபிலாஃசபி ஆஃப் பீயிங்'. மனிதர்களின் செயல்பாடுகளை 'இருத்தல்' (பீயிங்) மற்றும் 'கொண்டிருத்தல்' (ஹேவிங்) என்று இரண்டாகப் பிரிக்கின்றார். மனிதர்களின் செயல்பாடுகள் மட்டுமல்ல மனிதர்களே இந்த இரண்டு பிரிவுகளாகத்தான் இருக்கிறார்கள் என்பது இவரது வாதம். 'இருத்தலை' மையமாக வைத்து வாழும் மனிதர்கள் அன்புள்ளவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும், கனிவுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். 'கொண்டிருத்தலை' மையமாக வைத்து வாழ்வோர் தங்களையும், மற்றவர்களையும் 'அவர்கள் கொண்டிருப்பதையும்', அவர்களின் சொத்துக்களையும், அவர்களின் செல்வத்தையும், அவர்களின் வீடுகளையும், அவர்களின் பொருட்களையும் வைத்து எடைபோடுகின்றனர். இத்தகையோர் எந்நேரமும் தங்களை மற்றவர்களோடு ஒப்பீடு செய்து கொண்டும், பொறாமைப்பட்டுக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும், போட்டி போட்டுக் கொண்டும் இருப்பர். இன்று நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்? இருத்தலுக்கா? கொண்டிருத்தலுக்கா?

இவரின் இரண்டாவது சிந்தனை 'பிராப்ளம்' மற்றும் 'மிஸ்டரி'. நாம் மற்றவரோடு கொண்டிருக்கும் உறவுகளை இந்த இரண்டு வார்த்தைகளில் விளக்குகின்றார் இவர். தினசரி புத்தகம் வாசிப்பதற்கு நாம் டேபிள் விளக்கைப் பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். இந்த டேபிள் விளக்கோடு நமக்குள்ள உறவிற்குப் பெயர் 'பிராப்ளம்'. டேபிள் லேம்ப் எப்பொழுதும் நம்மை விட்டு விலகி நிற்கும் அந்நியப் பொருளே. அது திடீரென்று எரியவில்லையென்றாலோ, உடைந்து விட்டாலோ அதற்கென்றுள்ள கடையில் கொடுத்து நாம் சரி செய்துகொள்ளலாம். புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கும் போது நம் அருகில் விளையாடும் நம் குழந்தையோ, நம் அறைக்குள் வந்து செல்லும் நம் மனைவியோ இரண்டாம் வகை – 'மிஸ்டரி'. மிஸ்டரி என்பது புரிந்துகொள்ள முடியாது என்பதல்ல. மாறாக, அந்தப் பொருளோடும், அந்த நபரோடும் நாம் கரைந்து மறைந்து விடுகிறோம் என்பதுதான். இந்த உறவில் சிக்கல் என்றால் அதை நாம்தான் சரிசெய்ய வேண்டும். அதில் நாம் நம்மையறியாமல் மறைந்திருக்கின்றோம். நம்மில் உள்ள சிக்கல் என்னவென்றால் நாம் 'பிராப்ளத்தையும்', 'மிஸ்டரியையும்' குழப்பிக் கொள்கின்றோம். சக மனிதர்களோடுள்ள உறவை நாம் 'பிராப்ளம்' என்ற அடிப்படையில் பார்த்து நம்மை நாமே அந்நியப்படுத்திக்கொள்கின்றோம்.

இயேசுகிறிஸ்துவை உயர்ந்த எடுத்துக்காட்டாக முன்வைக்கின்றார். இயேசு எப்பொழுதும் 'இருத்தலை' மையமாக வைத்து வாழ்ந்தவர். 'கொண்டிரு;தலை' அறவே வெறுத்தவர். தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களை மட்டுமல்லாமல், இயற்கையையும் தன்னோடிணைந்த ஒன்றாகப் (மிஸ்டரி) பார்த்தவர்.

நாம் யார்? 

Tuesday, August 20, 2013

ழான் பால் சார்த் (சார்த்தர்)


நான் மெய்யியல் பயின்றபோது எனக்கு மிகவும் பிடித்த மெய்யியலார்களில் ஒருவர் சார்த்தர் (1905 – 1980). பிரெஞ்சு நாவலாசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், தத்துவ அறிஞர். எக்ஸிஸ்டன்சியலிசம் என்ற புதிய சிந்தனைக்கு வித்திட்டவர்களில் ஒருவர். இவரிடம் எனக்கு அதிகம் பிடித்தது என்னவென்றால் 1964ல் இவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டபோது, 'நீ யாருடா எனக்கு பரிசு கொடுக்க? என் அருமை எனக்கு எப்பவோ தெரியும்' என்றும் 'ஒரு எழுத்தாளர் தன்னை யாருக்கும் அடிமையாக்கிவிடக் கூடாது' என்றும் சொல்லி அதை 'வேண்டாம்' என்று நிராகரித்தவர்.

இவரின் தனிப்பட்ட வாழ்க்கை பாவம் மிகவும் மோசமானதாக (நம் பார்வையில்!) இருந்தது. இவரின் இலக்கிய ஆர்வம் பிடிக்காமல் வந்த மனைவியர்கள்(!) எல்லாம் ஓடிச் சென்றனர். இறுதியில் சிமோன் தே போவா என்ற பெண்ணியவாதியோடு இணைந்து வாழ்ந்தார். நம் வாழ்வில் நாம் கொள்ளும் நட்பையும் உறவையும் சேடிசம் (மற்றவர்களுக்கு வலி கொடுத்து அதில் இன்பம் காண்பது) அல்லது மேஸோகிசம் (தனக்குத் தானே வலி கொடுத்து அதில் இன்பம் காண்பது) என அழைத்தார். மனித உறவுகள் நம்மைச் சுற்றி நாமே இட்டுக்கொள்ளும் மின்சார வேலி என்றும் அந்த வேலி மற்றவர்களை நம் அருகில் விடுவதில்லை. நம்மையும் ஒரு கட்டத்தில் அது நெறித்து விடுகிறது. தன் உறவுகளில் எழுந்த சிக்கல்களால் இப்படிப்பட்ட சிந்தனைக்கு அவர் தள்ளப்பட்டார் என்பது அவரது நண்பர்களின் கருத்து.

இவரின் இந்தச் சிந்தனையிலிருந்து உருவானதுதான் ஒரு புதுமொழி: 'நமக்கு அருகில் இருப்பவர் நம் நரகம்' (ஹெல் இஸ் த அதர்). இவர் கூறும் எடுத்துக்காட்டு இதுதான். ஒரு ஆணையும், இரண்டு பெண்களையும் ஒரு அறைக்குள் அடைத்து விடுங்கள். அவர்களில் யாரும் தவறு செய்யவே முடியாது. ஒரு ஆண் மற்றொரு பெண்ணோடு பேசினால் மற்றவள் பொறாமைப்பட்டு பேச விட மாட்டாள். இரண்டு பெண்களும் பேசிக் கொண்டிருந்தால் அந்த ஆணுக்கு பேச வாய்ப்பே கிடைக்காது. இங்கே 'ஹெல் இஸ் த அதர்'. இதைச் சொல்லிவிட்டு இதை அப்படியே நம் உலக வாழ்க்கையோடு ஒப்பிடுவார். நம்மை யாரோ எப்போதுமே சாவித்துவாரத்தின் வழியாகப் பார்த்துக்கொண்டிருப்பதாகவே நாம் நினைக்கிறோம். அதனால் தான் நாம் 'நல்லவர்களாக' இருக்க நினைக்கிறோம். நமக்குக் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு 'சிரிக்க' முயற்சி செய்கிறோம். 'நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கும்' அந்த நபரும் நமக்கு ஒரு நரகம். 

இரண்டாவதாக, 'மனிதர்களின் சுதந்திரம் அவர்களின் சாபக்கேடு'. மனிதர்கள் சுதந்திரமாக வாழப் பிறந்தவர்கள் என்று நினைப்பது நல்லதுதான். ஆனால் 'இதுவா – அதுவா' என நம்முன் இருக்கும் சாய்ஸ் நமக்கு வரம் என்றாலும், தேர்ந்தெடுத்தபின் 'இதை எடுத்திருக்கலாமோ – அதை எடுத்திருக்கலாமோ' என நினைப்பது சாபமாக மாறுகின்றது. ஒவ்வொரு பொழுதுமே நாம் முடிவெடுக்கிறோம். காலை எழுவது முதல் இரவு தூங்குவது வரை நாம் முடிவுகள் எடுக்கிறோம். 'எழுந்தவுடன் கட்டிலுக்கு இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்ற சாய்ஸ். பின் கழிவறையில் லைட் போடவா, வேண்டாமா என்ற சாய்ஸ். இந்தப் பற்பசையா, அந்தப் பற்பசையா என்ற சாய்ஸ். குளிக்கவா, வேண்டாமா என்ற சாய்ஸ். வேலைக்குப் போகவா, வேண்டாமா என்ற சாய்ஸ். சாப்பாட்டில் சாய்ஸ். பேருந்தில் சாய்ஸ். டிரெயினில் சாய்ஸ். நண்பர்களில் சாய்ஸ். சிகரெட்டுகளில் சாய்ஸ். டிடெர்ஜன்டுகளில் சாய்ஸ்'. இந்த எல்லா சாய்சுகளிலும் நமக்குத் துன்பமும் வரலாம், இன்பமும் வரலாம். 

குலசாமி



இன்று தெய்வத்திருமகள் திரைப்படம் பார்த்தேன்.

இரண்டு முறை ஏற்கனவே பார்த்திருந்தாலும்

இன்று பார்த்தபோது சற்று வித்தியாசமாகவே தெரிந்தது.

படத்தின் இறுதியில்...நான்கு பேர்...

மூன்று பெண்கள் - அனு, ஸ்வேதா, நிலா

ஒரு ஆண் - கிருஷ்ணா

இந்த நான்கு பேரை

இரண்டு இரண்டாகப் பிரித்தால்

இரண்டு குழந்தைகள்

இரண்டு அடல்ட்ஸ் (உடலிலும், மனதிலும்)

ஒரு ஆணிடம் இருக்கும் பெண்மையோடு இணைத்து

பெண்மையின் பெருமையையும் வெளிக்கொணர்கிறது

இந்த இறுதிக் காட்சி


சக்தியில்லையேல் சிவனில்லை

ஏன்..எவனுமில்லை என்று குலசாமியின் வரலாற்றைச்

சொன்ன 'குட்டிப்புலியின்' கதையும் இதுதான்.

பெண்மை போற்றுதும்!

தன் நலன் மறுத்து

மற்றவர் தினம் மறந்து

தன் உற்றவருக்காக

கண்களில் நீரைக் கருவாக்கும்

கண்மணிகள்

எல்லோர் வாழ்விலும் வரும் குலசாமிகள்...!

Sunday, August 18, 2013

கொஞ்சம் நடிங்க பாஸ்!


நான் விடுமுறைக்கு வீட்டிற்குச் சென்ற போது அதிகமாக ரசித்துப் பார்த்த சேனல் 'ஆதித்யா'. அது ஒன்னுதான் பார்க்குற மாதிரி இருக்கு! ஒவ்வொரு நிகழ்ச்சியின் இடையிலும் வந்த ஒரு 'கேப் ஃபில்லர்' எனக்கு மிகவும் பிடித்தது. அந்த கேப் ஃபில்லருக்காகவே நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கினேன். அந்த 'கேப் ஃபில்லரின்' பெயர் 'கொஞ்சம் நடிங்க பாஸ்'. சன் டிவி காம்பியர் ஆதவன் அவர்களின் புதிய முயற்சி. தொடங்கி ஏறக்குறைய ஐந்து மாதங்கள் ஆகியிருக்கிறது என்பதை நான் பின்பு அறிந்து கொண்டேன்.

சாதாரண மக்களிடம் ஒரு நடிகனைத் தேடும் புதிய முயற்சி இது. ஒரு திரைப்படத்தில் ஒரு ஹீரோவோ அல்லது ஹீரோயினோ பேசுவதையோ, ஒரு பஞ்ச் டயலாக்கையோ, ஒரு சிட்டுவேஷன் டயலாக்கையோ முதலில் பேசிக் காட்டுவார் ஆதவன். பின் அன்றைய தினத்தில் யாரைச் சந்திக்கிறாரோ – குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பிக்னிக் வந்தவர்கள், ஷாப்பிங் செய்பவர்கள் மற்றும் பலர் – அவர்களைப் பேசச் சொல்லுவார். 'ஷாட். கேமரா. ரோலிங். ஆக்ஷன். கொஞ்சம் நடிங்க பாஸ்' எனத் தொடங்கி பலர் டயலாக்கைப் பேச முயற்சி செய்வர், சிலர் வெட்கப்படுவர், சிலர் மறைந்து கொள்வர், சிலர் சம்பந்தமேயில்லாமல் பேசுவர். அனைவரின் நகைச்சுவை நடிப்போடு சேர்த்து ஆதவனின் 'டைமிங்' கமெண்ட்ஸ் வேறு.

இதே ஆதவன் இன்று என்னிடம் வந்து 'கொஞ்சம் நடிங்க பாஸ்' என்று சொன்னால் நான் எப்படி நடிப்பேன் என்று பார்ப்பதற்காக நானாக மூன்று சினி டயலாக்குகளை எடுத்து முயற்சி செய்தேன்.

டயலாக் 1: விக்ரம் அணுஷ்காவிடம் தன்னிலை விளக்கும் 'தெய்வத்திருமகள்'

நிலா...

கிருஷ்ணா...

சாக்லட் ஃபேக்டரி...

அவிலான்ச்சி...

அங்க நிறைய ஆடெல்லாம் இருக்கும்...

நெறைய மாடு...

இல்ல..ல...

பெரிய ரோடு இருக்கும்...

பெரிய மரமெல்லாம் இருக்கும்...

அப்புறம்...


டயலாக் 2: விஜய் ஜெனிலியாவிடம் பேசும் 'சச்சின்' லவ் டயலாக்.

இந்தக் கன்னம் கின்னமெல்லாம் செவக்க...

இவ்ளோ கிட்ட வந்து...

உம் மூச்சு என்மேல பட...

என் கண்ணுல நீ தெரிய...

ஐ லவ் யூ...

ஐ லவ் யூ சச்சின்னு நீ சொல்லல...

சொல்லுவ...

வர்றேன்...


டயலாக் 3: சிவாஜியும், கமலும் 'தேவர்மகனில்'

வெத வெதச்சவுடனே பழஞ் சாப்பிடனுன்னு நெனைக்க முடியுமோ?!

இன்னைக்கு நான் வெதைக்கிறேன்...

நாளைக்கி நீ பழஞ் சாப்பிடுவ...

அப்புறம் ஒன் மகன் சாப்பிடுவான்...

அதுக்கப்பறம் அவன் மகன் சாப்பிடுவான்...

அதெல்லாம் இருந்து பார்க்கிறதுக்கு நான் இருக்க மாட்டேன்...

ஆனா வெத நான் போட்டது...

இதெல்லாம் என்ன பெருமயா ... கடம ...


என் மூன்று முயற்சிகளுமே தோற்று விட்டன. டயலாக் மறந்து விடும். அல்லது பாதியிலே கூச்சம் வந்துவிடும். அல்லது நானாகச் சிரித்து விடுவேன். டயலாக் வரும் ஆனால் ஆக்ஷன் வராது. நான்கு வரி டயலாக்கையே நடிக்க முடியவில்லையே என நொந்து கொண்டேன். 

'கொஞ்சம் நடிங்க பாஸ்' நிகழ்ச்சி எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்: 'யாரும் யாரையும் காப்பி பண்ண முடியாது' என்பதுதான். எங்க ஊருக்குப் போகும்போதெல்லாம் பிஞ்சைகளில் (புன்செய் என்பதன் மரூஉ) பாத்தி கட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆச்சரியமாக இருக்கும். உழுது கிடக்கும் நிலத்தை ஒரே நபர் பாத்தி பாத்தியாகப் பிரிப்பார். எந்த அளவுகோலும் இருக்காது. பழைய பாத்தி இருந்த தடமும் இருக்காது. ஆனாலும் அவ்வளவு அழகாகப் பாத்தி பிரிப்பார். அனைத்துப் பாத்திகளும் ஒரே அளவாக இருக்கும். அனைத்துப் பாத்திகளும் தண்ணீர்க் கிணற்றோடு வாய்க்கால்களாக இணைக்கப்பட்டிருக்கும்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் விண்டோஸின் பெரிய மனிதர் என்றால், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளின் பெரிய மனிதர் என்றால், எங்கள் ஊரில் பாத்தி கட்டும் முனியாண்டியும், மாடசாமியும் பெரிய மனிதர்கள்தாம். அவரவர் வாழ்க்கையில் அவரவர் நடிக்கும் கதாப்பாத்திரத்தில் ஒவ்வொருவருமே பெரிய மனிதர்கள்தாம். யாரும் யாரையும் 'போல' இருக்கத் தேவையில்லை. யாரும் யாரையும் போலவும் இருக்க முடியாது. அப்படி இருக்க முயற்சி செய்தால் நாம் ஒரு 'காமெடி பீஸாகத்தான்' இருப்போம்.

நம்ம வீட்டுலயும், ஸ்கூல்லயும் நம்ம குழந்தைகள நாம இப்படிச் சொல்லித்தான வளர்க்கிறோம். 'நீ வளர்ந்து பெரிய ஆளானதும் அவரைப் போல இருக்கணும், இவரைப் போல இருக்கணும்' எனத் தொடங்கும் இந்த 'போல' நாம் வளர்ந்தாலும் நம்மை விடுவதில்லை. வாழ்க்கை முழுவதுமே நாம பிறரைப் போலவே வாழ முயற்சிக்கிறோம். பிறரைப் போலவே 'நடிக்க' முயற்சிக்கிறோம். 

ரோஜா தான் நிலவைப் போல இல்லையே என்றோ, நிலவோ தான் சூரியனைப் போல இல்லையே என்றோ, கன்றுக்குட்டி தான் பூனை போல இல்லையே என்றோ, தென்னை மரம் தான் தேக்கு மரம் போல இல்லையோ என்றோ, ஆறு தான் மலைபோல இல்லையே என்றோ வருத்தப்படுவதில்லை. இந்த வருத்தம் வருவது மனிதர்களுக்கு மட்டும்தான்.

பிறரைப் போலவே மாற வேண்டும் என நினைத்து நம்மைப் போல நாம் மாறாமலே இறுதி வரை இருந்து விடுவதுதான் மிகவும் கொடுமையானது.

ஓஷோ அழகாகச் சொல்வார்: 'நீ உன்னைப் போல இருப்பதே போதும். அதுவே பெரிய கஷ்டம். அப்படி இருக்கவே நீ உன் படிப்பு, கலாச்சாரம், வளர்ப்பு அனைத்தோடும் போராட வேண்டும். ஏனெனில் இந்த மூன்றுமே 'உன்னை உன்னைப் போல இருக்க விடாது''.

ரொம்ப சீரியஸாக வேண்டாம்...

டு மேக் தெ லாங் ஸ்டோரி ஷார்ட்...

நம்ம அடுத்தவங்கள மாதிரி பேசணும், செய்யணும்னு நினைச்சாலே அங்க காமெடிதான்...

ஹலோ...

உங்களத்தான்...

'கொஞ்சம் நடிங்க பாஸ்...!'

Saturday, August 17, 2013

பைபிளின்படி வாழ முடியுமா?


நேற்று இரவு டெட் வீடியோஸ் வலைத்தளத்தில் ஏ. ஜே. ஜேக்கப்ஸ் அவர்கள் ஆற்றிய 'விவிலியத்தோடு ஓர் ஆண்டு' என்ற உரையைக் கேட்டேன். ஒரு பக்கம் சிரிப்பு., ஒரு பக்கம் சீரியஸ் என விறுவிறுப்பாக ஓடியது. ஜேக்கப்ஸ் பற்றிச் சொல்லணும்னா, இவர் ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளர், கடவுள் இருக்கிறாரா, இல்லையா எனக் கவலைப்படாத சங்கத்தின் உறுப்பினர். இவர் செய்த வித்தியாசமான செயல்களில் எனக்குப் பிடித்தவை இரண்டு: 1) ஒரு வருடம் முழுவதும் தன் பணியிலிருந்து விடுமுறை எடுத்து 'பிரிட்டானிக்கா என்சைக்லோபேடியா' முழுவதையும் வாசித்தவர். 2) ஒரு வருடம் முழுவதும் தன் வாழ்க்கைiயே 'அவுட்சோர்சிங்' செய்தவர். பெங்களுருவிலிருந்து ஒரு டீமை வேலைக்கு அமர்த்தி தன் மெயில் பார்ப்பது, தன் செல்போன் அழைப்புகளுக்குப் பதில் தருவது, தன் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்வது, தன் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, தன் மனைவியோடு சண்டை போடுவது என அனைத்தையும் மற்றவர்கள் வழியாகச் செய்து தனக்குப் பிடித்த நூல்களை படித்துக்கொண்டிருந்தவர்.

'விவிலியத்தின் வழி ஒரு வருடம் வாழ முடியுமா?' என்ற கேள்வியோடு தொடங்குகிறது இந்த வீடியோ. 'பிறரை அன்பு செய்' என்று கற்பிக்கின்ற விவிலியம், 'உலகத்தின் மிகக் கொடூரமான வன்முறையையும் சரி' எனச் சொல்வதாக இருக்கின்றது. எங்கே தொடங்கி எங்கே முடிப்பது?

ஆனால் விவிலியத்தின் வழி வாழ்வது எனக்கு ஐந்து பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது என்கிறார் இவர்.

1. எதையும் வார்த்தைக்கு வார்த்தையாக எடுக்காதே. ஒவ்வொன்றும் எழுதப்பட்டதன் சூழலும், பின்புலமும் வேறு. வார்த்தையை அதன் சூழலோடு எடுக்க வேண்டும். இது விவிலியத்திற்கு மட்டுமல்ல நம் உறவு வாழ்க்கைக்கும் மிக அழகாகவே பொருந்தும். நாம் பேசுகின்ற வார்த்தைகள் அவைகளுக்கென சூழலைக் கொண்டுள்ளன. வெறும் வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொள்ளும் போது அர்த்தமும் குறைவுபடுகின்றது. நபரும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றார்.

2. என்றும் நன்றி சொல்லுங்கள். இது விவிலியம் கற்பிக்கும் ஒரு பாடம். நம் வாழ்க்கை கடவுளின் கொடை. 'இது நிகழ்ந்து உங்கள் வாளாலும் அன்று. உங்கள் அம்பாலும் அன்று. நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை செய்தீர்கள். நீங்கள் கட்டாத நகர்களில் நீங்கள் வாழ்கின்றீர்கள். நீங்கள் நடாத திராட்சை, ஒலிவத் தோட்டங்களின் பயனை நீங்கள் நுகர்கின்றீர்கள். இவை அனைத்தும் நான் உங்களுக்குக் கொடுத்தவையே' (யோசுவா 24:12-13). நாம் இருப்பதும் இயங்குவதும் இறைவனிலும், பிறரிலும் தான். இந்த எண்ணம் நமக்குத் தரவேண்டியது நன்றியுள்ளம்.

3. எல்லாவற்றிற்கும் மரியாதை கொடுங்கள். உள்ளவரோ, இல்லாதவரோ, நல்லவரோ, கெட்டவரோ நீங்கள் தீர்ப்பிடாதீர்கள். எல்லாரையும், எல்லாவற்றையும் மதிப்புடன் நடத்துங்கள். வாழ்க்கை என்பது சக்கரம். இன்று அடிமைப்படுத்துவது, நாளை அடிமைப்படுத்தப்படும். இன்று ஓங்கி நிற்பது, நாளை சாய்ந்து கிடக்கும்.

4. அரைத்த மாவையே அரைக்காதீர்கள். வாழ்க்கையில் வித்தியாசங்களுக்கு நம் எண்ணங்களைத் திறந்து வைக்க வேண்டும். எகிப்தின் அடிமைத்தனம் போதும் என்றிருந்து இஸ்ராயேல் மக்களுக்கு பாலும் தேனும் பொழியும் நாட்டைக் கொடுக்கின்றார் இறைவன். 'எல்லாம் முடிந்து விட்டது. இனி ஒன்றும் இல்லை' என்று விரக்தி வந்த இடத்தில் புதிய திராட்சை இரசம் பொங்கச் செய்கின்றார் இயேசு. 'எல்லாம் இப்படித்தான். எல்லாம் என் விதி. நான் இப்படித்தான் இருப்பேன்னு என் ஜோசியர் சொன்னாருன்னு' தினமும் நம்மையே நொந்து கொண்டிருந்தால் வித்தியாசங்களின் இறைவனை நம்மால் கண்டுகொள்ள முடியாது.

5. சாதாரணமானவர்களை சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். எகிப்தியர்கள் கடலில் வீழ்ந்தழியக் காரணம் இஸ்ராயேலரை அறிவற்றவர்கள் எனவும், சாதாரணமானவர்கள் எனவும் தவறாக எடைபோட்டதுதான். இறைவன் படைப்பில் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உண்டு. சிலர் அறிவாளிகளாக இருப்பதற்கும் காரணம் உண்டு. சிலர் எதையும் புரிந்துகொள்ள இயலாதவர்களாக இருப்பதற்கும் காரணம் உண்டு. சிலர் பணம் பெற்றிருப்பதற்கும் காரணம் உண்டு. சிலர் ஒன்றுமே இல்லாதவர்களாக இருப்பதற்கும் காரணம் உண்டு. 'அடுத்தவன் கறுப்பா, சிகப்பான்னு பார்க்காத. அவன் முழி எப்படியிருக்குன்னு ஆராயாத. உன் ஜோலிய நீ பாரு உன் வாழ்க்கை ஜாலியா இருக்கும்.'

6. பிக் அப் அன்ட் சூஸ். உனக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள். வாழ்க்கை ஒரு சாய்ஸ். நீங்க கேட்கலாம்? அப்படின்னா 'நமக்கு வேணும்ங்கிறத எடுத்துக்கிட்டு மற்றத விட்றவா? இது என்ன 'கஃபேயா?' 'ஓட்டலா?' ஆமா. வாழ்க்கை ஒரு 'கஃபே' தான். நம்ம கண்ணுக்குத் தெரியற எல்லாத்தையும் நம்மால குடிக்க முடியுமா? நம்மால சாப்பிட முடியுமா? நமக்கு பிடிக்குங்கிறதத்தான் சாப்பிட முடியும்? ஏன் பிடிச்சதுல இருந்தது பிடிக்காத உணவுக்குக் கொஞ்சம்; கொஞ்சமா போகலாமே. 'கஃபேடேரியா ஆன்மீகம்' இருந்தாலே போதும். உங்களுக்குப் பிடிச்ச பகுதியை எடுங்க. அத மாதிரி வாழனும்னு நினைங்க. 'அத மாதிரி மத்தவங்களும் வாழ்வாங்கன்னு' நினைங்க நீங்க தப்பு பண்ண மாட்டீங்க.