Saturday, July 26, 2014

இன்னும் இருக்கிறார்!

யோபு நூலை எழுதியது யார்? எப்போது? யாருக்கும் தெரியாது. யூதர்கள் காலங்காலமாக இதை மோசேயே எழுதியதாகக் கூறுகின்றனர். மற்றும் சிலர் யோபு, எலிகூ, சாலமோன், எசாயா, எசேக்கியா அல்லது பாருக்கு என்று யாராவது எழுதியிருக்கலாம் என்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: 'நாம் செய்யும் பாவத்தால் மட்டுமே நமக்குத் துன்பம் வரும்' என்று எல்லாரும் நம்பியிருந்த நேரத்தில், இந்த நம்பிக்கை தவறு என்று நினைத்த ஒருவர் தான் இந்த நூலை எழுதியிருக்க வேண்டும். இந்த நூல் அந்தக் காலத்தவரின் சிந்தனை ஓட்டத்தைப் புரட்டிப் போடுகிறது.

யார் எழுதியது என்று தெரியாததால், எப்போது எழுதப்பட்டதும் என்றும் நமக்குத் தெரியவில்லை. சிலர் கி.மு. 1500 எனவும், சிலர் கி.மு. 900 எனவும் மற்றும் சிலர் கி.மு. 600க்குப் பின்னும் எனவும் கருதுகின்றனர்.

ஆசிரியர் யார் என்றும் தெரியவில்லை, எப்போது எழுதப்பட்டது என்றும் தெரியவில்லை. அப்படியிருக்க இந்த நூல் எப்படி 'இறைவனால் தூண்டப்பட்டது' என்று சொல்ல முடியும்? அல்லது எப்படி விவிலியத்திற்குள் இது நுழைந்தது? தூய பவுலடியார் தனது திருமடல்களில் யோபு நூலைப் பற்றிக் குறிப்பிடுவது இதை நம் விவிலியத்திற்குள் நுழைய அனுமதித்து விட்டது (காண். 1 கொரி 3:19 - யோபு 5:13. உரோ 11:35 - யோபு 41:11).

யோபு நூலின் தொடக்கம் 1 சாமுவேல் 1:1 போலவும், லூக்கா 1:5 போலவும் இருக்கின்றது. எசேக்கியேல் இறைவாக்கினர் நோவா, தானியேல் வரிசையில் யோபுவின் பெயரையும் குறிப்பிடுகின்றார் (காண். எசே 14:14). யாக்கோபுவும் தனது திருமடலில் யோபுவை விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக முன்வைக்கின்றார் (காண். யாக் 5:11).

இந்த நூலின் நிகழ்வுகள் எந்தக் காலத்தில் நடந்திருக்க வேண்டும் என்று ஆராயும்போது, அது பிதாப்பிதாக்கள் காலம் என்று அழைக்கப்படும் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு காலத்தில் என்பது பலரின் கருத்து. நோவாவிற்கும், மோசேக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்ததாக இருக்கலாம். ஏனெனில் இந்த நூலில் குறிப்பிடப்படும் பெயர்கள் அனைத்தும் இக்காலத்திற்குரியவையே. மேலும்; நீடிய ஆயுள் என்னும் கருத்தியல் மோசேக்கு முன்தான் அதிகமாக நிலவியது (காண் யோபு 42:16 - தொநூ 11:22-26,32). ஆபிரகாமைப் போலவே யோபுவும் தன் குடும்பத்தாருக்காக பலி செலுத்துகின்றார் (காண். யோபு 1:5- தொநூ 12:7).

யோபு என்ற ஒரு நபர் வாழ்ந்தாரா? அல்லது யோபு என்பது வெறும் உருவகமா? என்பது இன்றும் நமக்கு விடை தெரியாத கேள்விகள். தானியேல், தோபித்து, யூதித்து என்ற பல புத்தகங்கள் சொல்லும் நபர்களும், நீதித்தலைவர்களில் வரும் சிம்சோனும் கூட கற்பனைக் கதாமாந்தர்கள் என்பது பலரின் கருத்து. அண்மைக்கால தொல்பொருள் ஆராய்ச்சி நடக்கும் வரை (1919) தாவீது அரசரும் கூட கற்பனை என்றே பலர் கருதினர்.

யோபு வாழ்ந்தாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நம் மண்ணின் இதிகாசங்கள் காட்டும் இராமன், இலக்குவன், சீதை, கண்ணன், தருமன், பீமன், விஜயன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலி என்ற கதைமாந்தர்கள் புராதணக் கதைமாந்தர்கள் என்றாலும், அவர்கள் இன்று நம் மண்ணின் மக்களோடு, கலாச்சாரத்தோடு, ஆன்மீகத்தோடு, கருத்தியலோடு ஒன்றிணைந்து விட்டார்கள்.

மனித உடலோடும், இரத்தத்தோடும் இருந்தவர்கள் நம்மீது ஏற்படுத்தாத தாக்கத்தைவிட, 'இப்படி இருந்திருக்கலாம்' என நாம் நினைப்பவர்கள் நம்மேல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

'யோபு' இருந்தார் என்று சொல்வதை விட, இன்னும் இருக்கிறார் என்று நான் சொல்வேன்!


1 comment:

  1. மனித உடலோடும் இரத்தத்தோடும் இருந்தவர்கள் நம்மீது ஏற்படுத்தாத தாக்கத்தைவிட 'இப்படி இருந்திருக்கலாம்' என் நாம் நினைப்பவர்கள் நம்மேல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்..அழகான பதிவு.பின்புலம் எப்படி இருப்பின் நமக்கென்ன? நமக்கென்ன தேவையோ அதைமட்டுமே எடுத்துக்கொள்வோம்...நன்றிகள்.

    ReplyDelete