Monday, July 7, 2014

விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விட

திருப்பயணப்பாடல்களின் இறுதிப்பாடல் திபா 130. ஆண்டவரின் ஆலயத்திற்கு அருகில் வந்து விட்ட பாடகரின் மனதுக்குள் ஒரு போராட்டம். ஆண்டவரைக் காணவேண்டும் என்ற ஆர்வம் ஒரு பக்கம். ஆண்டவரைப் பார்க்கத் தனக்குத் தகுதியில்லையே என்ற போராட்டம் மறுபக்கம். இந்த உள்மனப்போராட்டத்தை அப்படியே வெளிப்படுத்துகிறார் இப்பாடலில்.

அ. ஆர்வம்
'ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்.
என் நெஞ்சம் காத்திருக்கின்றது.
அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்'.

எப்படி?
விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விட - அன்று மட்டுமல்ல, இன்று வரை எல்லா இரவு காவலாளிகளும் விடியலுக்காய் காத்திருக்கவே செய்கின்றனர். இரவு முழுவதும் கணிணித்துறையில் வேலை செய்பவர்கள், இரவு நேர மருத்துவர்கள், செவிலியர்கள், ஓட்டுநர்கள் என்று பலர் 'சீக்கிரம் விடியாதா!' எனக் காத்திருக்கவே செய்கின்றனர். 'இந்த இரவு விடியவே கூடாது!' என நினைப்பவர்கள் கழுத்துக்குள் கை போட்டு கண் சொருகி நிற்கும் காதலர்கள் மட்டும்தான்!

ஆ. குற்றவுணர்வு
'ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்?'

இப்படி தன்னையே நொந்து கொண்டாலும் 'நீரோ மன்னிப்பு அளிப்பவர்' என இறைவன் மேல் நம்பிக்கை கொள்கிறார் பாடகர்.

நம் தாய்த்திருச்சபையில் ஒவ்வொரு அடக்கச் சடங்கின் போதும் இறந்தவர் வீட்டில் இந்தத் திருப்பாடலை அருட்பணியாளர் செபிக்கிறார். பணித்தளங்களில் பணியாற்றியபோது இந்தப் பாடலைச் செபிக்கும் போதெல்லாம் கண்கள் கலங்கியிருக்கின்றன.

இந்தப் பாடல் இறந்தவர் பாடுவது போலவும் இருக்கும். இறந்தவரின் உறவினர்கள் பாடுவது போலவும் இருக்கும்.

'ஆழ்ந்த துயரம்!'

'இரவு'

'விடியல்'

'தீங்கு'

என எல்லாமே இறப்பைக் குறிக்கும் உருவகங்கள்.

கடவுள் எல்லா மனிதர்களுக்கும் சமமானது என்று வைத்திருக்கும் மிகச் சிலவற்றில் இறப்பும் ஒன்று. இறப்பு நமக்குத் திருப்பாடல் ஆசிரியரின் உள்மனப் போராட்டத்தையே கொணர்கின்றது. ஒருபக்கம் கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம். மற்றொரு பக்கம் நம் பாவ இயல்பின் குற்றவுணர்வு.

'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு' (குறள் 339)


3 comments:

  1. பாடலாசிரியரின் உள் மனப் போராட்டமும் சோகமும் நம்மையும் பற்றிக்கொள்ளவே செய்கிறது.தாங்கள் குறிப்பிட்டுள்ள சிலர் தங்கள் பணி முடிவதற்காக விடியலை நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்பது ஒரு புறமிருக்க பலருக்கு உண்மையான விடியல் என்பது தங்கள் வாழ்வின் ' வசந்த காலம்' தான்.இது அவரவர் மன இயல்புக்கேற்ப மாறு படுகிறது.ஆயினும் உண்மையான 'விடியல்' என்பது நம் அக,புற இன்னல்களினின்று விடுபட்டு இறைவனையே பற்றிக் கொள்வதென்பதை யாரால் மறுக்க இயலும்? தாங்கள் இறப்பைப் குறித்து தேர்ந்துள்ள வார்த்தைகள் ஒரு இறந்த சடலத்தின் அருகிலிருக்கும் உணர்வைத்தந்தது.

    ReplyDelete
  2. அன்பின் ஆசிரியருக்கு,

    இன்று உங்கள் வலைத்தளத்தை கொஞ்ச நேரம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இனிமையான அனுபவமாக இருந்தது. இறையியலை புரியும் விதத்தில், புதுமையான அணுகுமுறையில், புதுப் புது தொடர்புகளோடும் உவமைகளோடும் இணைத் தகவல்களோடும் சொல்லியிருந்தது மிகவும் அருமை.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  3. தங்களின் இனிய வார்த்தைகளுக்கு நன்றி.

    ReplyDelete