Friday, April 30, 2021

யோசேப்பு - தொழிலாளர்களின் பாதுகாவலர்

இன்றைய (1 மே 2021) திருநாள்

யோசேப்பு - தொழிலாளர்களின் பாதுகாவலர்

இன்று புனித யோசேப்பை தொழிலாளர்களின் பாதுகாவலர் என நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். தன்னுடைய தொழிலால் அடையாளம் காணப்படுகின்ற மிகக் குறைவான விவிலியக் கதைமாந்தர்களில் இவர் முதன்மையானவர்.

தமிழில், 'ழ' 'ல' 'ள' என மூன்று எழுத்துகளும் அடுத்தடுத்து வரும் ஒரே வார்த்தை தொழிலாளர். நாம் அனைவரும் தொழிலாளர்களே. தொழில் அல்லது உழைப்பே நம் அடையாளமாக இருக்கிறது. தொழில் வழியாகவே நாம் கடவுளின் கரம் பிடிக்கிறோம்.

இந்த ஆண்டை நாம் புனித யோசேப்பு ஆண்டு எனச் சிறப்பித்து மகிழ்கின்றோம். 

வாழ்வின் உறுதியற்ற நிலைகளை அப்படியே ஏற்றுக்கொண்டார் யோசேப்பு. இதுவே இன்று நாம் அவரிடம் கற்க வேண்டிய பாடமாக இருக்கலாம். 

தனக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மரியா கருத்தாங்கி நிற்கிறார்.

தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மனைவி கருத்தாங்கி நிற்கும் மகன் மெசியாவாக இருக்கிறார். ஆனால், சத்திரத்தில் அவருக்கு இடமில்லை.

பிறந்த குழந்தையை எகிப்துக்குத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய கட்டாயம்.

மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் சொந்த மண்ணுக்கு வர வேண்டிய நிலை.

இப்படியாக, வாழ்க்கை தனக்கு அடுத்தடுத்த உறுதியற்ற நிலையைத் தந்தாலும் எந்தவொரு முணுமுணுப்பும் முறையீடுமின்றி வாழ்வின் எதார்த்தங்களை அப்படியே எடுத்துக்கொள்கின்றார் யோசேப்பு.

'கடவுளே பார்த்துக்கொள்ளட்டும்' என அவர் ஓய்ந்திருக்கவில்லை.

'நாளை பார்த்துக்கொள்ளலாம்' என அவர் தள்ளிப்போடவில்லை.

இன்று பல நேரங்களில் நாம் அனைத்திலும் உறுதித்தன்மையை எதிர்பார்க்கின்றோம். நான் நினைப்பது போல, நினைத்த நேரத்தில் அனைத்தும் நடக்க வேண்டும் எனவும், நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் நான் எதிர்பார்ப்பது போல இருக்க வேண்டும் எனவும் நினைக்கிறோம். வாழ்க்கையின் இனிமையே அதன் உறுதியற்ற நிலையில்தான் இருக்கிறது என்பதை நாம் அறிதல் நலம்.

இந்த நிலையை நாம் அடைய மூன்று விடயங்களைக் களைய வேண்டும்:

(அ) மறுதலிப்பு

'என் வாழ்வில் எனக்கு இது நடக்கவில்லை' என்று நடந்த ஒன்றை நடக்காத ஒன்று போல நினைத்துக்கொள்வது மறுதலித்தல். இந்த நிலையில் நாம் எதார்த்த நிலையிலிருந்து தப்பி ஓடுகின்றோம்.

(ஆ) பலிகடா மனநிலை

'நான் இப்படித்தான். எனக்கு இப்படித்தான் நடக்கும். என்னை எல்லாரும் பயன்படுத்துவார்கள். மற்றவர்களால்தான் நான் இப்படி இருக்கிறேன்' என்று நம் வாழ்வியல் எதார்த்தங்களுக்கு மற்றவர்களை நோக்கி விரலைச் சுட்டும்போது நாம் பலிகடா மனநிலை கொண்டிருக்கின்றோம்.

(இ) உரிமம் கோரல்

'நான் நல்லவனாக இருப்பதால் என்னை அனைவரும் நல்ல முறையில் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பது, நான் வெஜிடேரியன் என்பதற்காக என்னை மாடு முட்டக் கூடாது என்று நினைப்பதற்குச் சமமாகும்.' நான் இப்படி நடக்கிறேன். ஆகவே எனக்கு இப்படித்தான் நடக்க வேண்டும் என்று உரிமை கொண்டாடும்போது நாம் ஏமாந்துவிடுவதோடு, சோர்ந்தும் விடுகிறோம்.

நிற்க.

இன்று புனித யோசேப்பை நாம் தொழிலாளர்களின் பாதுகாவலர் எனக் கொண்டாடுகின்ற வேளையில், பெருந்தோற்றால் துன்புறும் நம் அன்பிற்கினியவர்களை புனித யோசேப்பின் பரிந்துரையில் வைப்போம். பொதுமுடக்கத்தால் வருந்தும் அனைத்துத் தொழிலாளர்களுக்கு நம் உதவிக்கரம் நீட்டுவோம். 

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த வேண்டிய மானுட நிர்பந்தம் ஓர் இனிய அனுபவமே.

இடமும் வழியும்

இன்றைய (30 ஏப்ரல் 2021) நற்செய்தி (யோவா 14:1-6)

இடமும் வழியும்

நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அறை தயாரிப்பது ஒரு கலை.

அறையைத் தயாரிக்க நாம் ஏன் அக்கறை காட்டுகிறோம்?

ஒன்று, தாராள உள்ளம். அதாவது, நம்மிடம் இடம் இருந்தாலும் அதை அடுத்தவரோடு பகிரத் தயாராக இருக்கும் தாராள உள்ளம்.

இரண்டு, துன்பங்கள் ஏற்றல். அறையை ஒதுக்குவது என்பது துன்பமானது. அங்கு உள்ளவற்றை வேறு ஒரு அறைக்கு மாற்ற வேண்டும். அந்த அறை அதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். விருந்தினர் வந்து போகும் வரை சில அசௌகரியங்கள் இருக்கும். தண்ணீர் பற்றாக்குறை வரும். அவர் லைட்டை அப்படியே போட்டுவிடவார். இப்படி நிறைய இருக்கும். இவற்றைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

மூன்று, மதித்தல். நாம் மதிப்புக்குரியவர் அல்லது அன்புக்குரியவர் என்று கருதுபவருக்கே நம் வீட்டில் தங்க இடம் தருகிறோம். 

நான்கு, காத்திருத்தல். அறை தயாராகும் நேரம் தொடங்கி விருந்தினர் வரும்வரை நம் உள்ளத்தில் ஒரு காத்திருத்தலும் எதிர்நோக்கும் இருக்கும். வருபவருக்கு இந்த இடம் பிடிக்க வேண்டுமே என்று நாம் என்னவெல்லாமோ செய்வோம்.

இந்த நான்கு செயல்களையும் தான் தன் சீடர்களுக்குச் செய்வதாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்கிறார் இயேசு: 'என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துச் செல்வேன்.' ஆக, முழுக்க முழுக்க ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யச் செல்கிறார் இயேசு. ஏன் இப்படிச் செய்கிறார்? தான் இருக்கும் இடத்தில் தன் சீடர்களும் இருக்க வேண்டும் என்ற ஆசைதான். வேறொன்றுமில்லை. தான் தந்தையிடம் நெருக்கமாக இருப்பதுபோல தன்னுடன் தன் சீடர்களும் இருக்க வேண்டும் என்று முனைகின்றார்.

இரண்டாவதாக, அந்த இடத்திற்குச் செல்லும் வழியுமாக தன்னையே முன்வைக்கிறார்: 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே'

ஆக, அவரிடம் (தந்தையிடம்) செல்வதற்கு அவர் (மகன்) வழியாகவே செல்ல வேண்டும்.

இவ்வார்த்தைகளை நாம் எப்படி வாழ்வது?

'இடம் ஏற்பாடு செய்வது' என்று இயேசு சொல்வதை நாம் மோட்சம் அல்லது விண்ணகம் என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது வெறும் சாதாரணமாக அவர் நமக்குத் தயாரிக்கும் ஒரு நிலை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

அதைவிட முக்கியம் அவரை வழியாக எடுத்துக்கொள்வது.

'வழி' என்பதை 'தீர்வு,' 'துணை' என்ற பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம். நம் வாழ்வின் கதவுகள் தாமாக அடைபடும் நேரங்களில் எல்லாம் வழியாக அவர் நின்றால் அவரின் உறைவிடத்திற்குள் நாமும் நுழையலாம்.

Thursday, April 29, 2021

உங்களுள் யாராவது

இன்றைய (29 ஏப்ரல் 2021) முதல் வாசகம் (திப 13:13-25)

உங்களுள் யாராவது

நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்கள் நடித்த 'உலகம் சிரிக்கிறது' என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. 'சீட்டு ஆடாதீர்கள்' என்று புத்தகம் போட்டு விற்பனை செய்த ஒருவனை ஊரார் சேர்ந்து அடிப்பர். 'ஏன் அடிக்கிறீர்கள்?' என்று நடிகவேள் கேட்க, 'சூதாடாதீர்கள் என்று புத்தகம் விற்கும் இவனே சூதாடுகிறான். அதான் அடிக்கிறோம்!' என்பார்கள். அவர் சொல்வார், 'நல்ல விஷயத்தை சொல்றதுக்கே இப்போ உலகத்துல நாலஞ்சு பேருதான் இருக்காங்க. அவங்களையும் அடிச்சு கொன்னுடுங்கடா! ஒருத்தன் அறிவுரை சொன்னா அவன் யாரு என்னான்னு பார்க்காத. அவன் சொல்றது உனக்குப் புடிச்சிருந்தா எடுத்துக்கோ. அல்லது விட்டுரு. சூதாட்டத்தில் தான் ஏமாறுவதுபோல யாரும் ஏமாறக்கூடாதுனு அவன் அறிவுரை சொல்றானே அதை எடுத்துக்கோ. அவன் விளையாடுறானா இல்லையானு பாக்காத. நீ அவனை மதிக்கிற என்றால் அவனுடைய புத்தகத்தை வாங்கி அவனை ஊக்குவி!'

இப்படிச் சொல்லிவிட்டு வழிநடப்பார்.

நிற்க.

இன்றைய முதல் வாசகத்தில் மிக அழகானதொரு நிகழ்வு நடக்கிறது. பவுல் தன் முதல் தூதுரைப் பயணத்தைத் தொடங்குகிறார். பவுலும், பர்னபாவும், அவரோடு இருந்தவர்களும் பெருகை நகர் வந்து, அங்கிருந்து பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியா வருகின்றனர். ஓய்வுநாளன்று தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு 'அமர்ந்திருக்கிறார்கள்.'

இங்கே ஒரு விடயம்.

'நாங்கதான் நற்செய்தி அறிவிப்பாளர்கள். எங்களுக்கு எல்லாம் தெரியும். நாங்க கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட திருத்தூதர்கள்' என்று சொல்லிக்கொண்டு எல்லாருக்கும் முன்னால் போய் நிற்கவில்லை. மாறாக, கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருக்கிறார்கள்.

'கூட்டத்தோடு கூட்டமாக அமர' நிறைய தாழ்ச்சியும் எளிமையும் அவசியம்.

'நல்லவனாய் இருப்பதன் கஷ்டம்' (ஆங்கிலத்தில்) என்ற நூலில் ஆசிரியர் குருசரன் தாஸ் ஒரு நிகழ்வைப் பதிவு செய்கிறார். அவர் மருத்துவமனை ஒன்றிற்கு உடல் பரிசோதனைக்குச் செல்கிறார். 'உங்கள் பெயர் என்ன?' என்று அங்கிருந்த பெண் கேட்க, இன்றைய 'டைம்ஸ் ஆஃப் இண்டியா - பக்கம் 14ஐ பார்' என்கிறார் இவர். அந்தப் பெண் பக்கத்தை எடுத்துப் பார்த்துவிட்டு, இவர் எழுதிய கட்டுரையின் கீழ் இருந்த பெயரை நோட்டில் பதிவு செய்துவிட்டு, சின்னப் புன்முறுவலோடு, 'அங்கே போய் உட்காருங்க! உங்க நம்பர் வரும்போது கூப்பிடுறேன்!' என்றார் பெண். 

'என் வாழ்வில் இனி இவளை நான் பார்க்க மாட்டேன் என்று தெரிந்தும், இவளிடம் நான் யார் என்று காட்டவும், இவளின் அப்ரூவலைப் பெறவும் என்னைத் தூண்டியது எது?' என்று அவரே கேட்டுவிட்டு, நம் எல்லாரிடமும், 'நான் ஒரு முக்கியமானவன்-ள்' என்ற உணர்வு இருக்கிறது. இந்த உணர்வுதான், 'நம்மை எல்லாரும் பார்க்க வேண்டும்' என்று எண்ணத் தூண்டுகிறது என்கிறார்.

ஆனால், பவுலிடம் இப்படி ஒரு உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக அமர்கின்றார். 

கூட்டத்தில் நாம் பேசாமல் அமர்ந்தாலே வாழ்வில் பாதிப் பிரச்சினை முடிந்துவிடும் என நினைக்கிறேன்.

தொடர்ந்து, அமர்ந்திருந்த திருத்தூதர்களிடம் ஆளனுப்புகின்ற தொழுகைக்கூடத் தலைவன், 'சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்!' எனக் கேட்கிறார்.

இன்று யாராவது என்னிடம் ஆளனுப்பி, 'ஏதாவது அறிவுரை கூற விரும்பினால் கூறலாம்' என்று சொன்னால், நான் என்ன சொல்வேன்? நான் தயாராக இருக்கிறேனா? வாழ்வில் நாம் கற்கும் ஒவ்வொரு பாடத்தையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம். அது சிறிய பஸ் பயணத்திலிருந்து பெரிய இன்வெஸ்ட்மென்ட் முடிவாகக் கூட இருக்கலாம். இன்னொன்று, பிறர் கேட்காமல் நாம் எந்த அறிவுரையும் கூறக் கூடாது. அது எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்!

என்னுடைய நண்பர் சில நாள்களுக்கு முன், 'உடல் வலி. சளி. தும்மல்' என்று வாட்ஸ்ஆப்பில் ஸ்டேடஸ் போட்டார். உடனே நிறைய அறிவுரைகள் அவருக்கு வந்து சேர்ந்தன. 'இதைக் குடியுங்கள். அதைச் செய்யுங்கள்.' மனித மூளை, குறிப்பாக ஆண்களின் மூளை, உடனே தீர்வைத் தேடுகிறது. கொஞ்சம் பொறுத்தால் எல்லாம் சரியாகிவிடும். இல்லையா?

இறுதியாக, பவுல் உடனடியாக தனக்கு வந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார். எப்போதும் தயார்நிலையில் இருக்கிற ஒருவரே வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும், மிக அழகான உரையையும் ஆற்றுகிறார் பவுல். பவுலின் தயார்நிலையும் அறிவும் நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எபிரேயம் பேசுகின்ற ஒருவர் கிரேக்க மொழியில், புதிய மக்கள் நடுவில், புதிய கருத்து ஒன்றைப் பேசுவதற்கு நிறைய துணிச்சல் தேவைதானே!

Tuesday, April 27, 2021

ஒதுக்கி வையுங்கள்

இன்றைய (28 ஏப்ரல் 2021) முதல் வாசகம் (திப 12:24:13:5)

ஒதுக்கி வையுங்கள்

இன்றைய முதல் வாசகத்தில் சில கவனிக்கத்தக்க விடயங்கள் நடக்கின்றன:

மக்கள் நோன்பிருந்து இறைவனிடம் மன்றாடுகிறார்கள். அப்போது தூய ஆவியார், 'பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்' என்கிறார். இச்செய்தி பவுலுக்கும் பர்னபாவுக்கும் நிறைய மகிழ்ச்சியையும் அதே வேளையில் பொறுப்புணர்வையும் தந்திருக்க வேண்டும்.

'எல்லாரையும் போல நான் ஏன் இருக்கக் கூடாது?' என்று சில நேரங்களில் நாம் கேட்போம். 'எல்லாரையும் போல நீ இருக்கக் கூடாது' என்று சில நேரங்களில் வாழ்க்கை நமக்கு வரையறையை இடுகிறது. இது நம்மைக் கட்டுப்படுத்தும் வரையறை அன்று. மாறாக, நம்மை விடுதலையாக்கும் வரையறை.

இதே அனுபவத்தை இன்று பவுலும் பர்னபாவும் பெறுகிறார்கள்.

'ஒதுக்கி வைத்தல்' என்னும் சொல்லாடலை நாம் இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம். ஒன்று, கழித்து ஒதுக்கி வைத்தல். எடுத்துக்காட்டாக, வெண்பொங்கல் சாப்பிடும்போது சிலர் கறிவேப்பிலை மற்றும் மிளகு போன்றவற்றை ஒதுக்கி வைப்பர். ஒன்று தனக்கு ஏற்புடையதல்ல என்று நாம் கணித்து உணவு வகைகளை நாம் ஒதுக்கி வைக்கின்றோம். இதை ஒத்தே சில இடங்களில், ஊரை விட்டு ஆட்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அல்லது தள்ளி வைக்கப்படுகின்றனர். நாமே சில உறவுகளை ஒதுக்கி வைக்கின்றோம். இத்தகைய ஒதுக்கி வைத்தல் எதிர்மறையான பொருளைத் தருகிறது. இரண்டாவதான பொருள் நேர்முகமானது. அதாவது, நம் உடை, நறுமணப் பொருள், செருப்பு போன்றவற்றில் சிலவற்றை முக்கியமான நாளுக்கென ஒதுக்கி வைக்கின்றோம். நம் வீட்டில் வரும் விருந்தினர்களுக்காக என்று மதிப்புமிக்க சில பாத்திரங்களை ஒதுக்கி வைக்கின்றோம். இத்தகைய ஒதுக்கி வைத்தலில் மதிப்பு இருக்கின்றது. இரண்டாம் வகையான ஒதுக்கி வைத்தல்தான் பர்னபா மற்றும் பவுலுக்கு இன்றைய முதல் வாசகத்தில் நடக்கிறது.

மேலும், இந்த நிகழ்வில் தூய ஆவியாரின் வார்த்தைகளைத் தொடக்கத் திருஅவையினர் கேட்பதாகப் பதிவு செய்கின்றார் லூக்கா. தூய ஆவியார்தான் இதைச் சொன்னார் என்று அவர்களால் எப்படி உறுதியாகச் சொல்ல முடிந்தது? அதற்குக் காரணம், கடவுளோடு அவர்கள் கொண்டிருந்த இணைப்பே. 'இது தூய ஆவியுடையது, இது தீய ஆவியுடையது' என அவர்களால் தெளிவாகப் பிரித்து உய்த்துணர முடிந்தது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தேர்ந்து தெளிதல் என்பது அவர்களுடைய இயல்பாகவே மாறியிருந்தது.

இரண்டாவதாக, அவர்கள் உடனடியாகத் தங்கள் பணித்தளம் நோக்கிச் செல்கின்றனர். தங்களின் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையை மதிப்புக்குரிய ஒன்றாகக் கருதாமல், அதில் அடங்கியுள்ள பணிப் பொறுப்பையே காண்கின்றனர் பர்னபாவும் பவுலும்.

இறைவனின் ஆவியாரின் குரலை உடனடியாக நாம் அறிந்தால்,

இறைவனுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையை நாம் உணர்ந்து அதற்கேற்றாற் போல வாழ்ந்தால்,

நம் பணிப் பொறுப்பை உடனடியாக உணர்ந்து புறப்பட்டால் எத்துணை நலம்!

Sunday, April 25, 2021

வாயில் நானே

இன்றைய (26 ஏப்ரல் 2021) நற்செய்தி (யோவா 10:1-10)

வாயில் நானே

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னை ஆட்டுக் கொட்டிலின் வாயில் என உருவகம் செய்கின்றார். மேலும், இறுதியாக, தான் ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டும், நிறைவாகப் பெறும் பொருட்டும் வந்ததாக அறிவிக்கின்றார்.

'வாயில்' என்பது வெறும் திறப்பு மட்டும் அல்ல. மாறாக, ஒன்று வெளியேறவும் ஒன்று உள்ளே வருவதற்குமான வாய்ப்பு என்கிறது மெய்யியல்.

ஆண்டவராகிய இயேசு தன்னை வாயில் என்று முன்வைப்பதோடு, அந்த வாயில் வழியே நுழைபவர்கள் அடையும் பலனையும் எடுத்துரைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், நற்செய்தி வாயில் புறவினத்தாருக்குத் திறந்துவிடப்படுகிறது. தொடக்கத்தில், விருத்தசேதனம் செய்தவர்கள், செய்யாதவர்கள் என்னும் பிரிவினை இருந்தாலும், இறைவனின் திருவுளம் எதுவோ அதைத் தேர்ந்து தெளிந்து ஏற்றுக்கொள்கிறார்கள் நம்பிக்கையாளர்கள். 

இயேசு என்னும் வாயில் வழியே நுழைவதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த வாயிலை அடையாளம் காணுதல் மட்டுமே.

Saturday, April 24, 2021

ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!

உயிர்ப்புக் காலம் 4ஆம் ஞாயிறு

I. திப 4:8-12 II. 1 யோவா 3:1-2 III. யோவா 10:11-18

ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!

இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 118) ஹல்லேல் (புகழ்ச்சி) பாடல் வகையைச் சார்ந்தது. இங்கே பாடலாசிரியர், தன் வாழ்வின் எதார்த்தங்களைக் காண்கிறபோது, 'ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று' என அக்களிக்கின்றார். தன் வாழ்க்கையை நம்பிக்கைக் கண்கள் கொண்டு பார்க்கும் ஒருவரே இப்படிப் பாட முடியும்.

முதல் வாசகத்தில், நாம் பேதுரு மற்றும் யோவானின் விசாரணை நிகழ்வை வாசிக்கின்றோம். 'நாங்கள் செய்த நற்செயல்' என்று தாங்கள் மாற்றுத்திறனாளி ஒருவருக்குச் செய்த நலன் குறித்துப் பேசுகின்றார் பேதுரு. 'நற்செயல்' என்பது இயேசுவின் செயலைக் குறிப்பதாக திப 10:38இல் வாசிக்கின்றோம். இயேசுவின் பெயரால் இப்போது திருத்தூதர்கள் நற்செயல் செய்யத் தொடங்கியுள்ளனர். மேலும், நலம் பெறுவதற்கும் (மீட்பு பெறுவதற்கும்) இயேசுவின் பெயரைத் தவிர வேறு பெயர் இல்லை என்றும் அறிக்கையிடுகின்றனர். இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்திற்குப் பின்னர், அனைத்தையும் புதியனவாகப் பார்க்கத் தொடங்குகின்றனர் திருத்தூதர்கள். 

இரண்டாம் வாசகத்தில், 'நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள்' என்று கடவுளின் அன்பு பற்றித் தன் குழுமத்திற்கு நினைவூட்டுகின்றார் யோவான். மேலும், கடவுளுக்கு எதிராக இருக்கின்ற உலகம் அவரை அறிந்துகொள்ளவில்லை என்றும் சொல்வதன் வழியாக, அறிதல் வழியாகவே அன்பு செய்யவும், அன்பு செய்யப்படவும் முடியும் என்கிறார் யோவான்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் 'நானே' வாக்கியங்களில் ஒன்றை வாசிக்கின்றோம். 'நல்ல ஆயன் நானே' என்று தன்னை முன்வைக்கின்றார் இயேசு. தன்னை நல்ல ஆயன் என்று மூன்று நிலைகளில் முன்னிறுத்துகின்றார் இயேசு: 

(அ) தன் ஆடுகள் உயிர் பெறுவதற்காக ஆயன் தன் உயிரைக் கையளிக்கத் தயாராக இருக்கின்றார். உயிரைக் கையளித்தல் என்பது இயேசுவின் வாழ்வில் வெறும் வாக்குறுதியாக நில்லாமல், சிலுவையில் அரங்கேறும் மேலான செயலாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட அர்ப்பணம் 'கூலிக்கு மேய்ப்பவர்களிடம்' இருப்பதில்லை. ஏனெனில், அவர்களுக்கு ஆடுகளின்மேல் உரிமை இல்லை. ஆடுகளுக்கும் அவர்களுக்குமான உறவு அவர்களை மையமாக வைத்து அல்ல, மாறாக, ஆடுகளை மையமாக வைத்தே அங்கு நிகழ்கிறது. ஆனால், ஆயன்-ஆடுகள் உறவில், ஆடுகளும் ஆடுகளின் நலனுமே முதன்மை பெறுகின்றன. 

(ஆ) கடவுளுக்கும் இயேசுவுக்கும் சீடர்களுக்கும் இருக்கின்ற இணைப்பின் அடிநாதமாக இருப்பது அறிதல். எபிரேய விவிலியத்தில், 'அறிதல்' என்றால் 'உறவு கொள்தல்' என்பது பொருள். தந்தைக்கும் இயேசுவுக்கும் இடையே இருக்கும் அறிதல் என்னும் வலைப்பின்னல் நீண்டுகொண்டே போகிறது. ஆக, இந்த வலைப்பின்னலில் அல்லது செடி-கொடி போன்ற இணைந்திருத்தலில் ஆடுகள் வாழ்வு பெறுகின்றன.

(இ) இயேசு தன் உயிர்ப்பு பற்றிப் பேசுகின்றார்: 'நான் உயிரைக் கொடுக்கிறேன். அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவே. கொடுக்கிறேன்'. இயேசுவின் வாழ்வின் இலக்காக இருந்தது அவருடைய உயிர்ப்பே. இந்த இடத்தில் இயேசு தன் உயிர்ப்பைப் பற்றிப் பேசுவதன் வழியாக, தான் இறப்பின்மேல் கொண்டிருக்கின்ற வெற்றியைப் பற்றிக் குறிப்பிடுவதோடல்லாமல், தன்னோடு இருக்கும் அனைவருக்கும் என்றும் வாழ்வு என்று உறுதியளிக்கின்றார்.

பல நேரங்களில், நாம் நல்லாயன் போல இருக்க விரும்புகின்றோம். இன்று சற்று மாற்றாக, நல்லாயன் கழுத்தில் கிடக்கும் ஆடு போல இருக்க முயற்சி செய்வோம். அவரின் கழுத்தில் படுத்திருக்கும் ஆடு, அனைத்தையும் ஆண்டவரின் கண் கொண்டே பார்க்கும். அவரின் பாதுகாப்பையும், உடனிருப்பையும், அவர் தரும் நலத்தையும் பெற்றுக்கொள்ளும்.

உயிர்ப்புக் காலம் 4ஆம் ஞாயிற்றை, 'நல்லாயன் ஞாயிறு' என்று சிறப்பிக்கும் நாம், இறையழைத்தலுக்காகவும் இன்று சிறப்பாக செபிக்கின்றோம். இறைவன் தன் இதயத்துக்கேற்ற நல்ல தலைவர்களைத் தேர்ந்துகொள்ளுமாறு அவரிடம் மன்றாடுவோம். மேலும், தேர்ந்துகொள்ளப்பட்ட தலைவர்கள் நல்லாயனின் தோள் தவழும் ஆடுகளாய் அவரோடு தங்களை இணைத்துக்கொள்ளவும் மன்றாடுவோம். 

அவரே ஆயன். அவராலேயே இது நிகழ்ந்துள்ளது. 'நம் கண்களுக்கு வியப்பாயிற்று!'

Friday, April 23, 2021

நீங்களும் போய் விட?

இன்றைய (24 ஏப்ரல் 2021) நற்செய்தி (யோவா 6:60-69)

நீங்களும் போய் விட?

திபேரியக் கடலுக்கு அருகே இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்து கொடுத்தபின், அவர் ஆற்றிய நீண்ட உரை இன்று முற்றுப் பெறுகிறது. 'இவரைப் பிடித்துச் சென்று அரசராக்கி விடலாம்!' என வந்தவர்கள், 'இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்று சொல்லி அவரிடமிருந்து விலகிச் செல்கின்றனர்.

இந்த நற்செய்திப் பகுதியைப் பற்றி மறையுரை ஆற்றுகின்ற புனித அகுஸ்தினார் இப்படி முடிக்கிறார்:

'என்னே மானுடத்தின் இரங்கத்தக்க நிலை! தங்களுடைய வயிற்றுக்குச் சோறு கிடைக்க வேண்டும் என நினைத்து, அவரை அரசராக்க நினைத்த மக்கள், அவர் அவர்களுடைய ஆன்மாவுக்கு உணவு தருகின்ற பேரரசர் என்று கண்டவுடன், அவரை விட்டு விலகிச் செல்கின்றனர்!'

இந்நற்செய்திப் பகுதியில் மூன்று விடயங்கள் என் கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றை இங்கே பகிர்கிறேன்.

அ. 'இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம். இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?'

இயேசுவின் பேச்சு அவர்களுக்குப் புரியவில்லை. நம் வீட்டில் உள்ள சிறிய குழந்தைகள், 'அப்பா! கப்பல் எப்படி இருக்கும்?' என்று கேட்டால், நாம் உடனே, ஒரு தாளை எடுத்து, அதில் கோடுகள் வரைந்து, 'இதுதான் கப்பல்' எனச் சொல்வோம். அல்லது, ஒரு சதுர தாளை எடுத்து, நான்காக படித்து, குறுக்கே ஒரு தாள், மறுபக்கம் மூன்றுதாள், அப்புறம் விரல் விட்டு, கீழே ஒரு இழு, மேலே ஒரு இழு என எடுத்து, இதுதான் 'கத்திக் கப்பல்' என்று செய்து காட்டலாம். இப்படிக் காட்டினால், அக்குழந்தைக்குப் புரியும். அந்தக் குழந்தை வளர்கிறது. திருமணம் ஆகிறது. ஒரு நாள் அந்த மகனை நாம் கப்பலில் அழைத்துச் செல்ல விரும்புகிறோம். பயணத்திற்கு முந்தின நாள், அதே மகன், நம்மிடம், 'அப்பா, கப்பல் எப்படி இருக்கும்?' எனக் கேட்கின்றார். நாம் உடனே அவரை கணினி முன் அழைத்துச் சென்று, யூட்யூப் திறந்து, 'தி இன்ஸைட் ஆஃப் எ பாஸன்ஜர் ஷிப்' என்று டைப் செய்து, அதை அவருக்குக் காட்டுவோம். இந்த மகனிடம், காகிதக் கப்பல் செய்து காட்டினால் நம்மைப் பார்த்துச் சிரிப்பார். சிறுவயது மகனிடம், யூட்யூப் காட்டினால் சிரிப்பான். ஆக, இங்கே பிரச்சினை மக்களிடம் இல்லை. இயேசுவிடம்தான். காகிதக் கப்பல்தான் புரியும் என்று இருந்த மக்களுக்கு, அவர் காணொளிக் கப்பல் காட்டுகின்றார். அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆக, இன்று வளர்வது அவசியம். நேற்றைவிட நான் அறிவில், உடல்நலத்தில், பொருளாதாரத்தில், ஆன்மீகத்தில் வளர்கிறேனா? என்ற கேள்வி நமக்கு அவசியம். அப்படி வளரவில்லை என்றால், நாம் இன்னும் காகிதக்கப்பலைப் பார்த்தே பாடம் கற்க வேண்டியிருக்கும். மற்ற எல்லாமே நமக்குக் கடினமாக இருக்கும்.

ஆ. 'வாழ்வு தருவது தூய ஆவியே. ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது'

யோவான் நற்செய்தியின் சுருக்கக் குறியீட்டுச் செய்திகளில் இதுவும் ஒன்று. இங்கே, ஆவி-உடல், வாழ்வு-சாவு என்ற முரண் காட்டப்படுகிறது. ஒன்றை எடுக்கிறவர் இன்னொன்றை எடுக்க முடியாது. ஆக, இங்கே நம் தெரிவு அவசியம். 'ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது' என்ற செய்தி நமக்கு பெரிய நினைவூட்டலாக இருக்கிறது. ஏனெனில், ஊனியல்பு வரையறைக்கு உட்பட்டது. வரையறையைத் தாண்டி நம்மால் செல்ல முடியாது. ஆனால், ஊன் இல்லாமல் ஆவியை அனுபவிக்க முடியாது. ஆக, இங்கேயும் வளர்ச்சிதான் முதன்மைப்படுத்தப்படுகிறது.

இ. 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?'

தன்னுடைய பன்னிரு சீடர்களிடம் இயேசு இக்கேள்வியைக் கேட்கின்றார். தன்னுடைய ப்ராடக்டை இவர்களும் வாங்காமல் போய்விடுவார்களோ? என்ற ஐயம் இயேசுவுக்கு எழுகின்றது. ஆனால், பேதுரு, பன்னிருவர் சார்பாக, 'ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன' என்று சரணடைகின்றார். பேதுருவால் எப்படி இப்படிச் சொல்ல முடிந்தது? நம்பிக்கை என்பது கண்களால் பார்ப்பது அல்ல. கண்களை மூடியவுடன் பார்ப்பது. கண்களை மூடி அல்லது, கண்களைக் கடந்து பார்ப்பது. நம்பிக்கைப் பார்வை இருந்தால்தான் எந்த செயலும் சாத்தியம். இதையே பவுல், 'நாங்கள் காண்பவற்றை அல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை' (காண். 2 கொரி 4:18) என்கிறார்.

'என் தந்தை அருள்கூர்ந்தாலன்றி யாரும் என்னிடம் வர இயலாது' என்று இயேசு முன்னர் சொன்னதை இங்கே சுட்டிக்காட்டுகின்றார்.

அவரிடம் வருவதற்கும் அவருடைய கொடை அவசியம்.

Thursday, April 22, 2021

ஆண்டவரே நீர் யார்?

இன்றைய (23 ஏப்ரல் 2021) முதல் வாசகம் (திப 9:1-20)

ஆண்டவரே நீர் யார்?

ஸ்தேவான் கல்லெறியப்படும்போது துணிகளைச் சேகரித்துக் காவல் காத்துக்கொண்டிருந்த சவுல், ஒவ்வொரு இல்லமாகச் சென்று புதிய நம்பிக்கையாளர்களைத் துன்புறுத்திய சவுல், தமஸ்கு நகர் செல்லும் வழியில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் தடுத்தாட்கொள்ளப்படும் நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். இவ்வாசகப் பகுதியில் வரும் சொல்லாடல்கள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன:

(அ) 'உனக்குச் சொல்லப்படும்!'

'நீ நகருக்குள் செல். நீ என்ன செய்ய வேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்' என்று சவுலை நோக்கி ஆண்டவர் சொல்கின்றார். அல்லது இப்படியாக ஆண்டவரின் குரல் சவுலின் செவிகளில் விழுகின்றது. இங்கு ஓர் ஆச்சர்யமான முரண் இருக்கிறது. தனக்கென ஓர் இலக்கு வைத்துக்கொண்டு, தன் பணியினைத் தெளிவாக வரையறுத்துக்கொண்டு, தன் பணிக்குத் தேவையான பரிந்துரைக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டு புறப்பட்ட சவுலின் பயணம் தடைபடுகிறது. அவர் தனக்கென வைத்திருந்த திட்டம் எதுவும் இனி செல்லாது. அவர் இனி என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குச் சொல்லப்படுமே தவிர, அவராக இனி எதுவும் செய்ய இயலாது. 'ஒருவருக்குச் சொல்லப்படும்' என்பது படைப்பிரிவினரின் வார்த்தை. படைப்பிரிவில் உள்ளவர்கள் தங்களுக்கென்று எந்தவொரு திட்டமும் வைத்துச் செயல்பட இயலாது. தங்கள் தலைவரின் கட்டளை ஒன்றை நிறைவேற்றுவது மட்டுமே அவர்களுடைய பணி. ஆக, தனக்குத் தானே தலைவராக இருந்து செயல்பட்ட சவுலைத் தடுத்தாட்கொள்கின்ற ஆண்டவராகிய இயேசு, இதுமுதல் சவுலின் தலைவராக மாறுகின்றார். இனி எல்லாமே அவருக்குச் சொல்லப்படும்.

(ஆ) 'நான் தேர்ந்தெடுத்துள்ள கருவி'

இங்கே பவுலின் நோக்கு வாக்கியத்தை மிக அழகாக எழுதுகின்றார் லூக்கா: 'அவர் (சவுல்) பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார்.' ஆண்டவருடைய கைகளில் உள்ள ஒரு கருவி சவுல். கருவியைப் பயன்படுத்துபவரைப் பொருத்தே கருவி மதிப்பு பெறுகின்றது. கருவி ஒருபோதும் தன் திட்டப்படி செயல்பட இயலாது. தான் யார் கையில் இருக்கிறோமோ அவருக்கு மட்டுமே அது முழுமையான சொந்தமாக இருப்பதால், அவரின் திட்டத்தை மட்டுமே கருவி செயல்படுத்தும். 

(இ) 'உடனடியாக பறைசாற்றத் தொடங்கினார்'

புதிய பார்வை பெறுகின்ற சவுல், உணவு உண்டு வலிமை பெற்றபின் சீடர்களோடு தங்கியிருக்கின்றார். பின் இயேசுவே இறைமகன் என்று அறிவிக்கத் தொடங்குகிறார். சவுல் தன் போதனையைத் தொடங்கியபோது நிறைய எதிர்ப்புகள் வந்திருக்கும். அவருடைய பழைய காலத்தைச் சுட்டிக்காட்டி, பலர் அவரைப் பற்றி இடறல்பட்டிருப்பார்கள். அவர் நற்செய்தி அறிவிப்பது போல நடித்து மக்களை ஈர்த்து துன்புறுத்துவாரோ? என்ற கலக்கம் கொண்டிருப்பார்கள். ஆனால், பவுல் அதைப் பொருட்படுத்தவே இல்லை. 'உன் நிகழ்காலத்தை ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள் உன் இறந்தகாலத்தை எடுத்து உன்னைக் கறைப்படுத்த நினைப்பார்கள்' என்பது மாரியே புட்ஸோவின் வரி. தன்னைப் பற்றிய கறை எளிதில் அழிக்க இயலாததாக இருந்தாலும், பவுல் துணிந்து நற்செய்தி அறிவிக்கின்றார். அவர் பெற்ற அனுபவத்தை யாரும் கறைப்படுத்த இயலாது.

இன்று பாதை மாற்றம் நம் வாழ்விலும் வருகிறது.

'பாதை மாறுவதே பயணம்' என்ற எதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்தல் நலம்.

Wednesday, April 21, 2021

தந்தை ஈர்த்தாலொழிய

இன்றைய (22 ஏப்ரல் 2021) நற்செய்தி (யோவா 6:44-51)

தந்தை ஈர்த்தாலொழிய

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின், 'வாழ்வு தரும் உணவு நானே' பேருரை தொடர்கின்றது. 'கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்' என்னும் மேற்கோளைக் காட்டி, கடவுள் ஈர்த்தாலொழிய யாரும் தன்னிடம் வர இயலாது என்கிறார் இயேசு.

தியானம் மற்றும் செப வழிபாடுகளில், 'நாம் நன்றாகச் செபிக்க வேண்டும் என்பதற்காக இப்போது செபிப்போம்' என்று அருள்பணியாளர் அனைவரையும் அழைப்பதுண்டு. ஆக, இறைவேண்டல் செய்வதற்கும் இறைவேண்டல் தேவைப்படுகிறது. அல்லது நாம் இறைவேண்டலில் பெற்றுக்கொண்ட ஆவியாரின் துணைகொண்டே இறைவேண்டல் செய்கிறோம்.

கடவுளால் ஈர்க்கப்படுதல் என்பதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

காந்தம் மற்றும் இரும்பு உருவகத்தை எடுத்துக்கொள்வோம்.

தனக்கு அருகே வரும் இரும்பைக் காந்தம் ஈர்த்துக்கொள்கிறது. இந்த வகை ஈர்ப்பில் என்ன நடக்கிறது. அந்த இரும்பு இன்னொரு காந்தமாக மாறி அதற்கு அருகில் உள்ள இன்னொரு இரும்பை ஈர்த்துக்கொள்கிறது. இதுதான் கடவுள் நம்மை ஈர்க்கும் முறை.

அலகை அல்லது சாத்தானும் நம்மை ஈர்க்கிறார். அவருடைய ஈர்ப்பு 'கருந்துளை ஈர்ப்பு' போன்றது. நமது பிரபஞ்சத்தில் 'கருந்துளை' (ப்ளேக் ஹோல்') என்று ஒன்று உண்டு. இதற்கு அருகில் செல்லும் எந்தப் பொருளும் மறைந்துவிடும். சூரியனும் கருந்துளைக்கு அருகில் சென்றால் மறைந்துவிடலாம் என்பது வானவியல் அறிஞர்களின் கூற்று. இவ்வகை ஈர்ப்பில் ஈர்க்கப்பட்ட பொருள் தன் இயல்பையும் தன்னையும் இழந்து மறைந்துவிடுகிறது. அலகை நம்மை ஈர்த்துவிட்டால் நாம் இல்லாமல் போய்விடுகிறோம். நம் இயல்பு மறைந்து தீய இயல்பு நம்மைப் பற்றிக்கொள்கிறது. அல்லது நாம் தீய இயல்பைப் பற்றிக் கொள்கிறோம்.

ஆக, நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி, கடவுளால் நான் ஈர்க்கப்படுமாறு என்னைத் தகுதியாக்கி உள்ளேனா? என் இரும்பு இயல்பை நான் தக்கவைத்துள்ளேனா?

அவரால் ஈர்க்கப்பெற்ற நான் ஒருவர் மற்றவரை என்னுடன் இணைத்துக்கொள்ளுமாறு என் கரத்தை நீட்டுகிறேனா?

இன்றைய முதல் வாசகத்தில், திருத்தொண்டர் பிலிப்பின் நற்செய்தி கேட்டு திருநங்கை அமைச்சர் திருமுழுக்கு பெறுகிறார்.

இங்கே, கடவுளால் ஈர்க்கப்பெற்ற பிலிப்பு, திருநங்கை அமைச்சரைத் தன் பக்கம் ஈர்த்துக்கொள்கின்றார். மேலும், திருநங்கை அமைச்சரின் உள்ளத்தைக் கடவுள் தூண்டி எழுப்புகின்றார்.

தேரைச் செலுத்துவதும், தேரின் பின் பிலிப்பை ஓடச் செய்ததும், தேரில் பிலிப்பை ஏற்றியதும், மறைநூல்கள் பரிமாறப்பற உதவியதும் கடவுளே.

இவ்வாறாக, கடவுளே அனைத்தையும் தன் பக்கம் ஈர்க்கின்றார்.

இன்று நம்மைச் சுற்றி நிறைய ஈர்ப்புகள் இருக்கின்றன. பல ஈர்ப்புகள் போலியானவை. பல தீமையானவை. பலவற்றின் பின் நாம் செல்லும்போது நாம் மறைந்துவிடுகின்றோம்.

இறைஈர்ப்பே இனிய ஈர்ப்பு. அந்த ஈர்ப்பில் நாம் இயேசுவைக் காண்பதோடு நம்மையும் முழுமையாகக் காண்போம். அங்கே நம் இயல்பு இறையியல்பாக மாறும்.

Tuesday, April 20, 2021

இன்னலும் மகிழ்ச்சியும்

இன்றைய (21 ஏப்ரல் 2021) முதல் வாசகம் (திப 8:1-8)

இன்னலும் மகிழ்ச்சியும்

'அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்கு உள்ளாகியது' என்று தொடங்குகின்ற முதல் வாசகம், 'இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று' என்று முடிகிறது.

மறைக்கு எதிரான அல்லது நம்பிக்கைக்கு எதிரான எதிரிகளின் முயற்சிகள் எருசலேம் திருஅவைக்குத் துன்பம் தருகின்றன. 

அடுத்ததாக, நம்பிக்கையாளர்கள் சிதறடிக்கப்படுகின்றனர். ஒருவருடைய உள்ளத்தில் பயம் விதைக்கப்படும்போது அவர் செய்தவறியாது இங்குமங்கும் அலைக்கழிக்கப்படுகின்றார்.

திருத்தொண்டர் ஸ்தேவான் கொல்லப்படுகின்றார். அவருடைய படுகொலை மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருந்தது. எதிரிகள் இப்படியாக நம்பிக்கையாளர்களைப் பயத்தில் வைத்திருந்தனர்.

சவுல் வீடுவீடாய்ச் சென்று நம்பிக்கையாளர்களைச் சிறையில் அடைத்தார். ஆக, பொதுவில் வராமல் வீட்டிற்குள்ளேயே ஒருவர் தன் நம்பிக்கையைக் கொண்டாடவும் இயலவில்லை.

இன்னொரு பக்கம்,

சிதறிய மக்கள் தாங்கள் சென்றவிடமெல்லாம் நற்செய்தியை அறிவிக்கின்றனர்.

வீட்டுக்குள்ளேயே இருந்தவர்கள் தங்கள் நம்பிக்கையில் ஆழப்படத் தொடங்குகின்றனர்.

மீண்டும் மகிழ்ச்சி உண்டாகிறது.

இங்கே, மூன்று விடயங்கள் தெளிவாகின்றன:

ஒன்று, நமக்கு வாழ்வில் நிகழ்வுகள் பல நடக்கலாம். அனைத்து நிகழ்வுகளையும் நமக்கு ஏற்றாற்போல மாற்றிக்கொள்ளும் ஆற்றல் நம் அனைவருக்கும் உண்டு.

இரண்டு, துன்பத்தை எதிர்கொள்ளும் பக்குவமே ஒருவருக்கு மனமுதிர்ச்சியைக் கொடுக்கின்றது. 

மூன்று, இன்னல் மற்றும் மகிழ்ச்சி என எதார்த்தங்கள் எதுவாயினும், நம்பிக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்தனர்.


பசியே இராது

இன்றைய (20 ஏப்ரல் 2021) நற்செய்தி (யோவா 6:30-35)

பசியே இராது

அருணகிரிநாதர், முக்திநிலை என்பது மாற்றங்களைக் கடந்த நிலை என்கிறார்.

அது என்ன மாற்றங்களைக் கடந்த நிலை?

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பதும், 'ஒரே ஆற்றுக்குள் இரண்டு முறை இறங்க முடியாது' என்பதும் வாழ்வியல் எதார்த்தம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

பகல்-இரவு, இன்பம்-துன்பம் என வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது.

நம் உடல் மாறுகிறது.

நம் உணர்வு மாறுகிறது.

நம் சிந்தனை மாறுகிறது.

நம் புரிதல் மாறுகிறது.

நம் அறிதல் மாறுகிறது.

ஆனால், மாற்றத்தை விட்டு கடக்கின்ற நிலையை அடைய முடியுமா?

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் 'வாழ்வுதரும் உணவு நானே' என்னும் பேருரை தொடர்கிறது.

'என்னிடம் வருபவருக்குப் பசியே இராது.
என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது' என்கிறார்.

பசி-நிறைவு, தாகம்-நிறைவு என வாழ்க்கை மாறுகிறது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மாற்றம் என்ற எதார்த்திற்குள் சிக்கிக்கொள்கிறோம்.

இதைக் கடப்பதே முக்தி நிலை.

இதைக் கடப்பதே நிலை வாழ்வு.

பசியே இராது என்றால், எப்போதும் நிறைவு மட்டுமே இருக்கும்.

இதையே இயேசு முதல் ஏற்பாட்டோடு ஒப்பிட்டு, 'அவர்கள் மன்னா உண்டார்கள், ஆனால், அவர்களுக்கு மீண்டும் பசித்தது' என்று சொல்லி, தான் தருகின்ற உணவின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்துகின்றார்.

எல்லா நேரமும் ஒரே மாதிரியான உணர்வைப் பெற நம்மால் இயலுமா?

நமக்கு நடக்கும் எதுவும் நம்மைப் பாதிக்காத வண்ணம் நாம் நம்முடைய மனநிலையை ஒரே உணர்வில் தக்கவைத்துக்கொள்ள முடியுமா?

இறையனுபவம் பெற்றவர்களுக்கு முடியும்.

எடுத்துக்காட்டாக, பவுல் சொல்வதுபோல, 'எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத் தெரியும்' என்பது போல. வறுமை என்று பவுல் வாடுவதுமில்லை. வளமை என்று பவுல் கொண்டாடுவதுமில்லை.

இதுவே பசியற்ற, தாகமற்ற நிலை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 7:51-8:13) ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படுகின்றார். இயேசுவுக்கான முதற்சாட்சியாக மாறுகின்றார். தன் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு ஒருவருக்கு துணிச்சல் வரக் காரணம், அவர் தன் உயிரைக் கடந்தவராக இருப்பதால்தான். 

இந்த நிகழ்வில் ஸ்தேவான் மீது கல்லெறிந்தவர்களின் ஆடைகளைக் காவல் காக்கின்றார் சவுல். அந்நேரம் கடவுள் சவுலைக் காவல் காக்கின்றார். ஆண்டவரின் முக ஒளி ஸ்தேவானையும், சவுலையும் ஒரே நேரத்தில் புரட்டிப் போடுகிறது.

மாறாத இறைவனை அவர்கள் கண்டுகொள்கிறார்கள்.

Sunday, April 18, 2021

இனிய ஈராறு ஆண்டுகள்

இன்று நான் என் அருள்பணி வாழ்வுப் பயணத்தில் நான் இனிய ஈராறு ஆண்டுகளை நிறைவு செய்கின்றேன். இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.

கடந்த இரண்டு மூன்று நாள்களாக, நான் உரோமையில் புனித யூதா ததேயு பங்குத்தளத்தில் பணியாற்றிய நினைவுகளே என்னைச் சுற்றி சுற்றி வருகின்றன. 2012ஆம் ஆண்டு என் குருத்துவ அருள்பொழிவை நாளன்று, காலைத் திருப்பலி நிறைவேற்றிய பின் நான் சந்தித்த நபர்தான் திருமதி கர்மேலா க்வாட்ஸோ (மேல்காணும் படத்தில் இருப்பவர்). பார்த்த நொடிகளில் சிலரைப் பிடித்துவிடும், சிலர் பார்த்த நொடிகளில் நம்மைப் பிடித்துவிடுவார்கள். அப்படிப் பிடித்துப் போனவர்தான் இவர். 

என் அன்றாட இத்தாலிய மறையுரைச் சிந்தனைகளைத் திருத்தி வழங்கியவர்.

உரோமை நகரில் ஸ்ட்ரைக் நேரங்களில் என்னைக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றவர்.

பங்குத்தளத்தின் அடுப்பு அணைந்த நாள்களில் தன் வீட்டில் அடுப்பெரித்தவர்.

மருத்துவமனையில் உதவியாளர் பணி நான் செய்ய என்னை அறிமுகம் செய்து பயிற்றுவித்தவர்.

இவரை எங்கும் பார்க்கலாம்.

யாராவது ஒருவர் தேவையில் இருந்தால் அங்கே அவரைப் பார்க்கலாம்.

இவரை நான் மீண்டும் பார்க்க வேண்டும் போல உள்ளது.

நிற்க.

விருதுநகர் மாவட்டத்தின் வரைபடத்தில் மங்கிப் போய் நிற்கின்ற ஜமீன் நத்தம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த என்னை இவருக்கும், இவரை எனக்கும் அறிமுகமாக்கியது என் குருத்துவம் மட்டுமே.

என் குருத்துவம் இல்லை என்றால், இன்று நான் என்னவாகி இருப்பேன் என்றுகூட என்னால் நினைக்க இயலவில்லை.

என் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவரும், நீதித்தலைவர்கள் நூலில் வரும் மீக்கா போல, 'நீர் எனக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பீர்' என்றே கேட்கின்றனர் (காண். நீத 17:10).

ஆசிரியர் தொடர்கின்றார்: '... அவ்விளைஞர் அவருடைய புதல்வருள் ஒருவர் போல இருந்தார்'

தந்தையாகவும், குருவாகவும் என்னை என் மக்கள் அணுக, நான் அவர்களுக்குப் புதல்வன் போல இருந்தால் போதும், என் அருள்பணி வாழ்வு சிறக்கும்.

இந்த ஆண்டு பெரியதாக வாழ்க்கைப் பாடங்கள், தீர்மானங்கள் எதுவும் இல்லை.

'அவரோடு' (மாற் 3:14) என்ற விருதுவாக்கோடு நான் தொடங்கிய என் பயணம், 'அவரில்' நிறைவுறும் வரை தொடர்ந்து பயணிப்போம் இணைந்த கரங்களாய்.

Saturday, April 17, 2021

உம் முகத்தின் ஒளி

உயிர்ப்புக் காலம் 3ஆம் ஞாயிறு

I. திருத்தூதர் பணிகள் 3:13-15,17-19 II. 1 யோவான் 2:1-5 III. லூக்கா 24:35-48

உம் முகத்தின் ஒளி

இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 4) வரிகள் - 'உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும்' - இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் சுருக்கமாக இருக்கிறது. தாவீது அரசரின் கண்களில் விழுந்த தூசியாக , காலுக்குள் சிக்கிய கூழாங்கற்களாக மூன்று விடயங்கள் அவரை வருத்திக்கொண்டே இருக்கின்றன: (அ) பெத்சபாவுடன் கொண்ட உறவு, அந்த உறவுக்குப் பின் நடந்த கொலை. (ஆ) மக்கள் தொகை கணக்கெடுப்பு. (இ) அவருடைய மகன் அப்சலோம் அவருக்கு எதிராகச் செய்த கிளர்ச்சி. திபா 3, அப்சலோமின் கிளர்ச்சியைப் பின்புலமாகக் கொண்ட பாடலாக அமைந்துள்ளது. தன் அன்பு மகனே தனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தன்னைக் கொல்லத் தேடுகிறான் என்பதை தாவீது அரசரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அப்சலோமின் தொடக்கம் வெற்றிகரமாக அமைகிறது. ஆனால், அந்த வெற்றி மிகவும் தற்காலிகமானதாக இருக்கிறது. ஆக, பொல்லார்கள் கிளர்ந்தெழுந்தாலும், அவர்கள் வெற்றி பெற்றாலும், அவர்களுடைய கிளர்ச்சியும் வெற்றியும் சிறு பொழுதே என்றும், அவை விரைவில் மறைந்துவிடும் என்றும் சொல்கிறது இத்திருப்பாடல். இப்பாடலில், 'எவ்வளவு காலம் வெறுமையை விரும்பி பொய்யானதை நாடிச் செல்வீர்கள்?' எனக் கேட்கிறார் தாவீது. இக்கேள்வி புனித அகுஸ்தினார் வாழ்வையும் தொட்டது என்பதை நாம் மனத்தில் கொள்வோம். மேலும், தான் ஆண்டவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட நிலையை நினைத்து, ஆண்டவருடைய அன்பனாகத் தான் இருக்கின்ற நிலை குறித்து மகிழ்கின்ற தாவீது, 'ஆண்டவரின் முகத்தின் ஒளி நம்மீது வீசும்போது,' 'நாம் மகிழ்ச்சியும், மன அமைதியும், பாதுகாப்பும்' பெறுவோம் என்கிறார்.

இன்றைய முதல் வாசகம் (காண். திப 3:13-15,17-19), திருத்தூதர் பேதுரு எருசலேம் நகரின் சாலமோன் மண்டபத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாக இருக்கிறது. எருசலேம் ஆலயத்திற்கு வழிபாட்டுக்குச் செல்கின்ற பேதுருவும் யோவானும், கால் ஊனமுற்றிருந்த ஒருவருக்கு நலம் தந்து நற்செயல் செய்கின்றனர். இயேசுவின் பெயரால் அவர்கள் நலம் தருகின்றனர். இயேசுவின் பெயரே அவருக்கு நலம் தந்தது என்று உற்சாகமாக அறிவிக்கின்ற பேதுரு, 'வாழ்வின் ஊற்றாகிய அல்லது வாழ்வின் ஆசிரியராகிய அவரை மறுதலித்துக் கொலையாளியை விடுவித்ததை' சுட்டிக்காட்டி, 'மனம் மாறி அவரிடம் திரும்புங்கள்' என அழைப்பு விடுக்கின்றார். மேலும், அவர்கள் தங்கள் அறியாமையில் இப்படிச் செய்ததாகச் சொல்கின்றார். ஒளி படாத எதுவும் அறியப்படாமல் இருக்கும் என்பது அறிவியல் நியதி. அதன்படி, இயேசுவே மெசியா என்பது இயேசுவின் சமகாலத்து ஆட்சியாளர்களுக்கு இருளில் இருந்த ஒரு மறைபொருளாக இருந்தது. ஆனால், இப்போது அது ஒளிக்கு வருகிறது. ஒளிக்கு வந்த செய்தியைக் கேட்ட அனைவரும் ஒளிக்கு வர வேண்டும். அதாவது, அவர்கள் மனம் மாற வேண்டும்.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 யோவா 2:1-15), இயேசுவை அறிதல் பற்றிப் பேசுகின்ற யோவான், அறிதல் என்பது அன்பு செய்தலிலும், அன்பு செய்தல் என்பது கட்டளைகளைக் கடைப்பிடித்தலிலும் நிறைவு பெறுகிறது எனத் தன் குழுமத்துக்கு எழுதுகின்றார். அறிதல் என்பது செயலாற்றுவதற்கே என்பது யோவான் தரும் பாடமாக இருக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 24:25-48), இயேசு சீடர்களுக்குத் தோன்றும் நிகழ்வை வாசிக்கின்றோம். இந்நிகழ்வு எம்மாவு நிகழ்வின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இங்கே லூக்கா, 'இன்க்ளுசியோ' என்ற இலக்கியக் கூற்றைப் பயன்படுத்தி தன் நற்செய்தியின் இறுதிப் பகுதியான இப்பகுதியை நிறைவு செய்கிறார். லூக்கா நற்செய்தி எருசலேம் நகரத்தில் தொடங்குகிறது. இங்கே எருசலேம் நகரத்தில் முடிகிறது: 'எருசலேம் தொடங்கி ...,' 'நீங்கள் வல்லமையால் ஆட்கொள்ளப்படும் வரை இந்நகரத்திலேயே இருங்கள் ...' எனச் சொல்கிறார் இயேசு. இரண்டாவதாக, லூக்கா நற்செய்தியின் தொடக்கமும் இறுதியும் மகிழ்ச்சி என்ற வார்த்தையை மையமாகக் கொண்டுள்ளது.

இயேசுவைக் கண்டவுடன் சீடர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால், இயேசு மூன்று படிகளில் அவர்களுடைய அச்சத்தைக் களைகின்றார்: (அ) அவர்களோடு உரையாடுகின்றார். கேள்விகள் கேட்டு அவர்களின் சந்தேகத்தைப் போக்க விழைகின்றார். (ஆ) அவர்களோடு உண்கின்றார். இயேசு மீன் உண்ணும் நிகழ்வு அவர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பின் சான்றாக இருப்பதோடு, இயேசு உடலோடு உயிர்த்தெழுந்தார் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இருக்கிறது. மற்றும் (இ) மறைநூலை விளக்குகின்றார். திருச்சட்டம், இறைவாக்கு, மற்றும் திருப்பாடல்கள் நூல்களில் தன்னைப் பற்றி எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்ற இயேசு, மறைநூலின் படி அவர்கள் பெற்ற அனைத்துக்கும், 'நீங்கள் சாட்சிகள்' என மொழிகின்றார். 'சான்று பகர்தல்' என்னும் இந்த வார்த்தையே லூக்காவின் இரண்டாவது நூலாகிய திருத்தூதர் பணிகள் நூலின் அடிப்படையாக இருக்கிறது.

ஆக, இயேசுவின் முகத்தின் ஒளி சீடர்களின் மேல் வீசியவடன், அவர்களுடைய வாழ்வு மாற்றம் பெறுகிறது. அந்த மாற்றம் அவர்களுடைய நற்செய்தி அறிவிப்பிலும் போதனையிலும் தெரிகின்றது. 

இன்றும் ஆண்டவரின் ஒளி நம்மேல் வீசுகிறது. 

சாவின் காரணிகள் நம்மைச் சூழ்ந்திருந்தாலும், நம்மைச் சுற்றி இருக்கும் ஊடகங்கள் பொய்யுரையைத் தொடர்ந்து பரப்பி, நம்மைத் திகிலுக்கும், அச்சத்துக்கும் உள்ளாக்கினாலும், இவை எல்லாவற்றின் நடுவில் அவர் நிற்கின்றார். இவை எல்லாவற்றையும் எதிர்கொண்டவர் அவர். அவர் இன்று நம்மைப் பார்த்துக் கேட்கும் ஒற்றைக் கேள்வி இதுதான்: 'நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்?'

அப்சலோமின் வெற்றி கண்டு கலங்கிய தாவீதிடம் ஆண்டவர் இதே கேள்வியை அவர் உள்ளத்தில் கேட்கின்றார்: 'தாவீது, நீ ஏன் கலங்குகிறாய்?'

தங்கள் தலைவராம் இயேசுவைக் கொன்றுவிட்டு, தங்களையும் கொல்லத் தேடுகிறார்கள் என யூத மற்றும் உரோமை ஆட்சியாளர்களுக்கு அஞ்சி நடுங்கிய சீடர்களிடம், 'நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்?' எனக் கேட்கின்றார் இயேசு.

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, தீமை வெல்வதும், நன்மை செய்பவர்கள் தோற்பதும் நமக்கு நெருடலாக இருக்கின்றது. ஆனால், ஆண்டவரின் முகத்தின் ஒளி நம்மேல் படும் போது, 'இது ஏன்?' என்ற கேள்விக்கு விடை நமக்குத் தெரியத் தொடங்குகிறது.

ஆண்டவரின் முகத்தின் ஒளி நம்மேல் இன்றும் தொடர்ந்து படுகின்றது:

(அ) நமக்கு நடுவில் நிற்கும் நம் உறவுகள் மற்றும் நட்பு வழியாக.

(ஆ) நற்கருணை மற்றும் மற்ற அருளடையாளங்களில் அவரை நாம் உண்பதன் வழியாக.

(இ) இறைவார்த்தையைக் கேட்டு, வாசித்து, அதன்படி நாம் நடப்பதன் வழியாக.

அவருடைய முகத்தின் ஒளி நம்மேல் படுகிறது. ஏனெனில், நாம் அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட அன்பர்கள்.

அவருடைய ஒளி நம்மேல் பட்டவுடன், நாம் மகிழ்ச்சியும், மன அமைதியும், பாதுகாப்பும் பெறுகிறோம்.

அவருடைய முகத்தின் ஒளியைப் பெற்ற நாம், கண்ணாடி போல நின்று மற்றவர்கள் மேல் பிரதிபலித்தால், அதுவே சாட்சிய வாழ்வு.

இன்று, நம் இறைவேண்டல் இப்படியாக இருக்கட்டும்:

'ஆண்டவரே, கொரோனா பெருந்தொற்று மீண்டும் எங்களை அச்சுறுத்தத் தொடங்கியுள்ள வேளையில், தீமை மானுடத்தை வெற்றிகொண்டது போல நாங்கள் உணரும் இவ்வேளையில், உம் முகத்தின் ஒளி எம்மேல் வீச் செய்யும். எங்களை ஆளும் அதிகாரம் கொண்டவர்கள் தங்களுடைய நலன்களை மட்டுமே முன்நிறுத்தி, எம் நலனைப் புறந்தள்ளுகின்ற வேளையில், உம் முகத்தின் ஒளி எம்மேல் வீசச் செய்யும். பசி, வறுமை, நோய், தனிமை, முதுமை, வெறுமை, சோர்வு, விரக்தி, ஏமாற்றம், பயம், சந்தேகம் என்னும் புற மற்றும் அகக் காரணிகளால் எங்கள் வாழ்வு இருள்சூழ்ந்த பள்ளத்தாக்கு போல இருக்கும் வேளையில், உம் முகத்தின் ஒளி எம்மேல் வீசச் செய்யும்!'

Friday, April 16, 2021

முதன்மையானது

இன்றைய (17 ஏப்ரல் 2021) முதல் வாசகம் (திப 6:1-7)

முதன்மையானது

இன்றைய முதல் வாசகத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். திருச்சபையில் முதன் முதலாக திருத்தொண்டர்களாக எழுவரைத் தொடக்கத் திருச்சபை ஏற்படுத்தும் செய்யும் நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம்.

நாம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய சில வாழ்வியல் பாடங்களை இந்நிகழ்வு நமக்குச் சொல்கிறது.

அ. 'கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் கவனிக்கப்படவில்லை'

இங்கே 'பந்தி' என்பது திருமண விருந்து அல்ல. மாறாக, தொடக்கத் திருஅவை கூடி வருகின்ற அன்பு விருந்து. ஏறக்குறைய நம் அன்பியக் குழுமம் போன்றது. இறைவார்த்தை வாசிப்பு, இறைவேண்டல், அப்பம் பிட்குதல், உணவு பகிர்தல் என்ற நான்கு நிகழ்வுகள் ஒவ்வொரு குழுமத்திலும் நடைபெறும். இப்படி இவர்கள் கூடி வரும் இடத்தில் மொழிப் பிரச்சினை வருகிறது. எபிரேய மொழி பேசுவோர் கிரேக்க மொழி பேசுவோரை விருந்திலிருந்து ஒதுக்குகின்றனர். குறிப்பாக கிரேக்க மொழி பேசுவோரின் கைம்பெண்கள் கண்டுகொள்ளப்பட மறுக்கிறார்கள். கைம்பெண்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் சமூகத்திலும் ஆன்மீகத் தளத்திலும் பாவிகள் எனக் கருதப்பட்டனர். இவர்களில் பலர் ஏழைகளாக இருந்தனர். இப்படி முழுக்க முழுக்க இறைவனையும் மற்றவர்களையும் சார்ந்திருக்கும் கைம்பெண்கள் விருந்தில் கவனிக்கப்படாமல் இருப்பது தவறே. இது திருத்தூதர்களின் பார்வைக்கு உடனடியாகக் கொண்டுபோகப்படுகிறது. 

ஆக, ஒரு தனிநபருக்கு, குடும்பத்திற்கு, குழுமத்திற்கு இந்நிகழ்வு கற்பிப்பது என்ன? யாருக்கு என்ன தேவை என்பதை உடனடியாகக் கண்டுகொள்வது ஒரு நல்ல வாழ்வியல் பாடம்.

ஆ. 'திருத்தூதர்களின் நடவடிக்கை'

திருத்தூதர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றனர். மேலும், அனைவரையும் ஒன்றாகக் கூட்டுகின்றனர். முடிவைத் தாங்கள் மட்டும் எடுக்காமல் இணைந்து செயலாற்றுகின்றனர்.

ஆக, ஒரு பிரச்சினை வரும்போது அதற்கான நேரத்தை உடடினயாகச் செலவிட்டு, அனைவரையும் ஒன்றிணைத்து முடிவுக்கு வருவது.

இ. 'இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும்'

'நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. ஆதலால், அன்பர்களே, உங்களிடமிருந்து நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். நாங்களோ இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்.'

திருத்தூதர்கள் முதன்மையை முதன்மையாக வைத்திருந்தார்கள். பந்தியில் பரிமாறும் பணியும் முக்கியம்தான். அதற்காக, அதைவிட பெரிய இறைவேண்டல் மற்றும் இறைவார்த்தைப் பணியை சமரசம் செய்ய முடியுமா? படிக்கத் தெரியாத திருத்தூதர்களின் மேலாண்மைக் கொள்கை ஆச்சர்யமாக இருக்கிறது. இன்றைய திருச்சபை ஒட்டுமொத்தமாக இறைவேண்டலையும், இறைவார்த்தையையும் விட்டுவிட்டு, 'பந்தி பரிமாறும் வேலையை' இன்று செய்து கொண்டிருப்பது வருத்தத்திற்குரியதே. நானும் சில நேரங்களில் 'பந்தி தான் பரிமாறிக்கொண்டு இருக்கிறேன்.' 

பந்தி பரிமாறுவது எளிது. பத்து நிமிடத்தில் வயிறு நிறைந்தவர்கள் நம்மை வாழ்த்துவார்கள். நமக்கு நிறைய முகங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களை வைத்து நம் காரியங்களைச் சாதித்துக்கொள்ளலாம். அல்லது அவர்கள் நம்மை வைத்துச் சாதித்துக்கொள்வார்கள். ஆனால், இறைவேண்டலும் இறைவார்த்தையும் அப்படி அல்ல. தனிமையாக அமர்ந்து வாசிக்க வேண்டும், செபிக்க வேண்டும். ஆனால், இதன் பயன் நீடித்தது.

ஆக, நீடித்த ஒன்றுக்காக தற்காலிகமான ஒன்றை இழக்கத் துணிகின்றனர் திருத்தூதர்கள். முதன்மையானதை முதன்மையானதாக வைத்துக்கொள்தல் அவசியம். நம் வாழ்வின் பெரியவற்றுக்காக சிறியவை ஒருபோதும் துன்புறல் கூடாது.

ஈ. 'கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர்'

மிக எளிய சடங்குமுறை. திருப்பலி உடைகள் இல்லை. பெரிய குழுமம் இல்லை. வருகைப் பாடல் இல்லை. வண்ண விளக்குகள் இல்லை. புகைப்படக் கருவிகள் இல்லை. நீண்ட பாடல்கள் இல்லை. ரொம்ப எளிய சடங்கு. கைகளை வைத்து வேண்டினர். அவ்வளவுதான், சடங்கு முடிந்துவிட்டது.

ஆக, தேவையற்ற வாழ்வியல் சடங்குமுறைகளை விடுத்து தேவையானதை மட்டும் பற்றிக்கொள்வது.

இப்படியாக,

திருத்தூதர்கள் முதன்மையானதை முதன்மையானதாக வைத்திருந்ததால் சீடர்களின் எண்ணிக்கை மிகுதியாகப் பெருகியது. 

இன்றைய நம் வாழ்விற்கும் மறைத்தூதுப்பணிக்கும் திருத்தூதர்களின் 'முதன்மைப்படுத்துதல்' ஒரு நல்ல பாடம்.

Thursday, April 15, 2021

புல்தரையாய்

இன்றைய (16 ஏப்ரல் 2021) நற்செய்தி (யோவா 6:1-15)

புல்தரையாய்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு வழங்கும் நிகழ்வை (யோவானின் பதிவின்படி) வாசிக்கின்றோம். இந்த நிகழ்வில் அப்பங்கள் பலுகுவதற்கு முன் இன்னொரு அற்புதம் நடக்கிறது. அதுதான், புல்தரை.

நிகழ்வு நடக்கின்ற இடம், திபேரியக் கடலின் மறுகரை. மறுகரையில் உள்ள உயர்வான பகுதியில் இயேசு அமர்கிறார். கடற்கரையை ஒட்டி புற்கள் வளர்வதில்லை. ஆனால், இந்தப் பதிவின்படி, 'அப்பகுதி முழுவதும் புல்தரையாய்' இருக்கிறது.

புல்தரை எங்கிருந்து வந்தது?

கடலின் உப்புக் காற்றையும், அதையொட்டி நிலவும் வெப்பமான சூழலையும் எதிர்கொண்டு புல் எப்படி வளர்ந்தது?

புல்தரைக்கும், நற்செய்தியின் இறுதியில் வரும், 'அவர்கள் தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள்' என்ற வாக்கியத்திற்கும் தொடர்பு இருக்கிறது.

திருப்பாடல் 23இல் ஆண்டவரை தன்னுடைய ஆயன் என அழைக்கின்ற தாவீது, 'பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்' (23:2) எனப் பாடுகின்றார். தாவீது காட்சியில் காணும் அல்லது தாவீது தன் அனுபவத்தில் உணர்ந்த ஒன்று இங்கே நடந்தேறுகிறது.

ஆக, கடவுள் இருக்கும் இடத்தில் பசும்புல் தரையும், இளைப்பாறுதலும் இருக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 5:34-42), கமாலியேல் என்னும் கதைமாந்தரை எதிர்கொள்கிறோம். திருத்தூதர்களைப் பற்றிய விசாரணையில் குரல் கொடுக்கின்ற இவர், 'இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது. நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்' என சக உறுப்பினர்களை எச்சரிக்கின்றார்.

தானாகவே ஒன்று முடிந்துவிட்டால் அது மனிதரிடமிருந்து வருவது.

அப்படி முடியாதது எதுவும் கடவுளிடமிருந்து வருவது.

'இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கலாம்' என்னும் பிலிப்பின் திட்டம் மனிதரிடமிருந்து வருகிறது. ஆக, அது தானாகவே அழிந்துவிடுகிறது.

ஆனால், 'மக்களை அமரச் செய்யுங்கள்' என்னும் இயேசுவின் திட்டம் கடவுளிடமிருந்து வருகிறது. ஆகையால்தான், அங்கே நின்றுகொண்டவர்கள் தங்கள் கால்களுக்கு அடியில் முளைத்திருந்த பசுமையான புற்களைக் கண்டுகொள்கின்றனர்.

அங்கேயே தொடங்குகிறது அற்புதம்.

இன்று நம் வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் பல முடிவுக்கு வரவில்லை என்றால் அவை நம் திட்டங்கள் என நினைத்துக்கொள்ளலாம். ஏனெனில், கடவுளின் திட்டம் அனைத்தும் இனிய முடிவிற்கு வரும்.

ஆஸ்கர் ஒயில்ட் சொல்வார்: 'தொடங்கிய அனைத்தும் நல்ல முடிவுக்கு வரும். நல்ல முடிவுக்கு வரவில்லை என்றால் அது இன்னும் முடியவில்லை'.

வாடி நின்ற திருத்தூதர்களுக்கு புல்தரையாய் வந்து நிற்கின்றார் கமாலியேல். 

நம் வாழ்வின் புல்தரையை நாம் கண்டுகொண்ட பொழுதுகள் எவை?