Friday, July 31, 2020

தப்பிய தலை

இன்றைய (1 ஆகஸ்ட் 2020) முதல் வாசகம் (எரே 26:11-16:24)

தப்பிய தலை

இன்றைய முதல் வாசகத்திற்கும் நற்செய்தி வாசகத்திற்கும் சில தொடர்புகள் இருக்கின்றன.

முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியாவை, குருக்களும் இறைவாக்கினர்களும் சிறைப்பிடித்து மக்கள்முன் நிறுத்துகின்றனர். நற்செய்தி வாசகத்தில், இறைவாக்கினர் எனத் தான் கருதிய திருமுழுக்கு யோவானை, ஏரோது தன் சகோதரனின் மனைவியின் பொருட்டுச் சிறையில் அடைக்கின்றார்.

முதல் வாசகத்தில், தான் கொல்லப்பட்டால் தன் இரத்தப்பழி நகர்மேல் விழும் என்று தன்னுடைய களங்கமின்மையை எடுத்துரைக்கின்றார் எரேமியா. நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவானின் களங்கமின்மையை நினைத்து ஏரோது வருந்துகிறார்.

முதல் வாசகத்தில், மக்கள் தங்களுடைய உணர்ச்சிகளின் அடிமைகளாக இருக்கின்றார்கள். நற்செய்தி வாசகத்தில், ஏரோது தன்னுடைய உணர்ச்சிகளின் அடிமையாக இருக்கின்றார்.

முதல் வாசகத்தில், எரேமியா கொல்லப்படாதவாறு காக்க, சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருக்கிறார். நற்செய்தி வாசகத்தில், ஆனால், திருமுழுக்கு யோவான் கொல்லப்படாதவாறு காக்க, அவருக்கு யாரும் உறுதியாய் இல்லை.

முதல் வாசகத்தில், தன்னுடைய இறைவாக்கினரைக் காப்பாற்றிய கடவுள், நற்செய்தி வாசகத்தில் அவரைக் காப்பாற்றவில்லை.

கடவுளின் வழிகள் ஆச்சர்யமாகவே இருக்கின்றன.

சாப்பானின் மகனை அனுப்பி ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தின் வாயை அடைத்த கடவுள், குடிபோதையில் இருந்த ஒற்றை ஏரோதுவின் வாயை அடைத்து, திருமுழுக்கு யோவானைக் காப்பாற்றாதது ஏன்?

அல்லது, இவை இரண்டுமே இயல்பான நிகழ்வுகள்தாம். இவற்றில் கடவுளுக்கு எந்தவொரு தொடர்பும் கிடையாது என்று சொல்லலாமா?

இல்லை.

முதல் வாசகத்தில் சாப்பானின் மகன் அகிக்காமை அனுப்பிய கடவுள், நற்செய்தி வாசகத்தில் இயேசுவை அனுப்புகின்றார்.

ஏனெனில், திருமுழுக்கு யோவானுடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்த சீடர்கள், இயேசுவிடம் போய் அதை அறிவிக்கின்றனர்.

இனி, இயேசு திருமுழுக்கு யோவானின் வேலையைச் செய்யப் புறப்படுவார்.

ஆக, நீதிக்கான, நேர்மைக்கான, உண்மைக்கான போராட்டத்தில் தோல்வி என்பது இல்லை. தீமை நன்மையை வெல்வது போலத் தெரிந்தாலும், நன்மை தீமையை வெற்றி கொள்ளும் என்பதே வாழ்வியல் எதார்த்தம்.

'தொடங்கும் அனைத்தும் நன்றாகவே நிறைவுபெறும். நன்றாக நிறைவுபெறவில்லை என்றால், அது இன்னும் நிறைவுபெறவில்லை என்றே பொருள்' என்கிறார் ஆஸ்கார் வைல்ட்.


Thursday, July 30, 2020

புனித இஞ்ஞாசியார்

இன்றைய (31 ஜூலை 2020) திருநாள்

புனித இஞ்ஞாசியார்

இயேசு சபையின் நிறுவுனரும், 'ஆன்மீகப் பயிற்சிகள்' என்னும் ஆன்மீகப் பெட்டகத்தை திருஅவைக்கு வழங்கியவருமான, இனிகோ என்னும் லொயோலா நகர் புனித இஞ்ஞாசியாரின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். இந்தப் புனிதரைப் பற்றி எண்ணும்போது என்னுள் எழும் சில கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன்.

1. உன்னை நீயே ஆளுகை செய்யாதவரை நீ மற்றவர்களை ஆளுகை செய்ய முடியாது.

அல்லது நான் என்னையே வழிநடத்த இயலாதபோது எனக்கு அடுத்திருப்பவரை வழிநடத்த முயற்சி செய்தல் கூடாது. தன்னாளுகை அல்லது தன்னை வெல்தல் என்பது இனிகோவின் எழுத்துக்களில் அதிகம் தெரியக்கூடிய கருத்துரு. இவர் ஒரு படைவீரராய் இருந்ததால், வெற்றி கொள்தல் என்பதன் பொருள் இவருக்கு நன்றாகவே தெரிந்தது. என் கட்டுக்குள் அடங்காத எதுவும் என் ஆற்றலை விரயமாக்கிக்கொண்டே இருக்கும். அது என் உடலின் ஆற்றலை எடுப்பதோடு, நிறைய எண்ணங்களால் மனத்தை நிரப்பி என் கவனத்தைச் சிதறடிக்கும். இன்று, நான் என்னில் ஆளுகை செய்ய வேண்டியது எது?

2. பதறிய காரியம் சிதறிப் போகும்.

அவசரம் அறவே கூடாது. இனிகோ ஒருபோதும் தன்னுடைய உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் அடிப்படையில் செயல்படவே இல்லை. எல்லாவற்றையும் தன் அறிவுக்கேள்விக்கு உட்படுத்தி, பார்வையை அகலப்படுத்தி, நிறுத்தி, நிதானமாக முடிவு செய்தார். நான் செய்கின்ற எல்லாவற்றிலும், 'நான் ஏன் இதைச் செய்கிறேன்?' என்ற கேள்வியே நிதானத்தின் தொடக்கம். இன்று நான் அவசரப்பட்டு முடிவெடுத்து பதறி நிற்கும் நிலைகள் இருக்கின்றனவா?

3. முக்கியமான தொடர்புகள் அவசியம்.

தலைமைத்துவம் என்பது நான் மற்றவர்மேல் ஏற்படுத்தும் தாக்கம். சாதாரண படைவீரரான இவர், கல்லூரிப் பேராசிரியரான சவேரியாருக்குச் சவால் விடுகின்றார். எப்படி? உறவால். நட்பால். தொடர்புகள் இல்லாமல் வாழ்க்கை இயலாது என்பதை அறிந்தவர் இனிகோ. தன்னுடைய சபையைச் சார்ந்தவர்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும், அவர்களுடன் கடிதத் தொடர்பில் இருந்தார். இதுவே, தொடர்புகளுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இன்று நான் என் தொடர்புகளை எப்படி முதன்மைப்படுத்துகிறேன்?

4. தன்னாய்வு செய்தல்

'எக்ஸாமென்' (examen) அல்லது 'ஆன்ம சோதனை' என்பது இவருடைய ஆன்மீகப் பயிற்சிகளில் ஒன்று. மதிய உணவுக்கு முன்னும், இரவு உணவுக்குப் பின்னும் தன்னாய்வு செய்வது. என்னுடைய உடல், மனம், இதயம், எண்ணம், ஏக்கம், உணர்வு, தாக்கம் என அனைத்தையும் ஆய்வு செய்வது. நேரம் கடக்க கடக்க நானும் கடந்தால் நான் மிருகம். ஆனால், கடக்கும் நேரத்திலும் நான் நிற்க முடிந்து, பின்னால் சென்று யோசிக்க முடிந்தால் நான் மனிதன். தன்னாய்வு செய்யும் நேரம் என்னையே புதுப்பிக்கும் நேரம். நான் எத்தனை முறை தன்னாய்வு செய்கிறேன் ஒரு நாளில்?

5. தெரிவு செய்தல்

'தெரிவு செய்தல்' (discernment) என்பது இவருடைய இன்னொரு பயிற்சி. இதை பவுல் இப்படி எழுதுகிறார்: 'அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். தீமையை விலக்குங்கள்' (காண். 1 தெச 5:21). இதுதான் தெரிவு செய்தல். என் வாழ்வின் முக்கிய முடிவுகள் உள்பட, எல்லா நேரங்களிலும் நான் தெரிவு செய்தல் அவசியம். இன்று நான் தெரிவு செய்கின்றேனா? அல்லது வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு அலைக்கழிக்கப்படுகிறேனா?

6. நேரத்தைப் பயன்படுத்துங்கள்

வாழ்க்கையை அன்பு செய்பவர்கள் நேரத்தை வீணாக்கமாட்டார்கள். ஏனெனில், வாழ்க்கை என்ற ஓவியம் வரையப்பட்டிருப்பதே நேரம் என்ற துணியில்தான். தன் வாழ்வின் எல்லா நேரங்களையும் கற்றல், செபித்தல், கடிதம் எழுதுதல், என எதையாவது செய்துகொண்டே இருந்தார். அவரின் செயல்கள் அவருடைய வாழ்வையும், மற்றவர்களின் வாழ்வையும் புதுப்பித்தன. என் ஓய்வு அல்ல, என் செயலே நான் யார் என்பதை எனக்கும் மற்றவர்களுக்கும் உணர்த்தும். இன்று என் நேர மேலாண்மை எப்படி இருக்கிறது?

இறுதியாக,

'எல்லாம் இறைவனின் அதிமிகு மாட்சிக்கே!' (Ad Majorem Dei Gloriam!)

இதுவே தான் படைக்கப்பட்டதன் நோக்கம் என அறிந்தார் இனிகோ.

Wednesday, July 29, 2020

குயவன் வீடு

இன்றைய (30 ஜூலை 2020) முதல் வாசகம் (எரே 18:1-6)

குயவன் வீடு

இன்றைய முதல் வாசகத்தில், 'குயவன் வீட்டிற்கு' எரேமியாவை அனுப்பும் ஆண்டவராகிய ஆண்டவர், 'குயவன் கையில் இருக்கும் களிமண்ணை' உருவகமாகக் காட்டி, 'இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்!' என்கிறார்.

தரையில் கிடக்கும் மண், உணவு சமைக்கும் பானையாக, தண்ணீர் சேமிக்கும் பானையாக, தண்ணீர் சேகரிக்கும் பானையாக, தானியம் சேமிக்கும் பானையாக, கழிவுநீர் சுமக்கும் பானையாக, இறுதிச் சடங்கில் பயன்படும் பானையாக, எப்படி வேண்டுமானாலும் வனையப்படலாம். 'நான் இப்படித்தான் உருவாகுவேன்!' என்று களிமண் குயவனிடம் முறையிட முடியாது. அல்லது அப்படி முறையிட்டால், அது வெறும் மண்ணாகக் காய்ந்துதான் கிடக்கும். அல்லது குயவனால் உடைத்து எறியப்படும்.

இஸ்ரயேல் வீட்டார் செய்த பாவம் இதுதான். 'நாங்கள் இப்படித்தான் இருப்போம்' என்று தங்களுடைய பிடிவாதத்திலும், இறுமாப்பிலும் நின்றார்கள். அவர்களை எச்சரிக்கின்றார் ஆண்டவராகிய கடவுள்.

இந்த உருவகத்தில் ஒரு மெய்யியல் சிக்கல் இருக்கிறது.

இறைவனின் கையில் நான் களிமண் என்றால், எனக்கு எந்தவொரு சுதந்திரமும் கிடையாதா?

சுதந்திரம் உண்டு என்றால், எந்த அளவுக்கு எனக்கு சுதந்திரம் உண்டு?

இப்படி ஓர் உருவகத்தை எடுத்து வாழ்வதில், சுதந்திரமும் இருக்கிறது, பொறுப்பின்மையும் இருக்கிறது.

இது ஏறக்குறைய அருள்பணி வாழ்வில் நாம் எடுக்கும் அல்லது கொடுக்கும் 'கீழ்ப்படிதல் வாக்குறுதி' போல.

இந்த வாக்குறுதியை ஏற்பதில் நிறைய சுதந்திரம் இருக்கிறது. அதாவது, என் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற முடிவை நான் என் ஆயரின் அல்லது மாநிலத் தலைவரின் கைகளில் விட்டுவிடுவதால் நான் சுதந்திரமாக இருக்க முடியும்.

அதே வேளையில், என்னுடைய பணித்தளத்தில் ஏதாவது பிரச்சினையை நான் உருவாக்கும்போது, மக்கள் என்னைக் கேள்வி கேட்கும்போது, 'நானா இந்த இடத்திற்கு வந்தேன்! ஆயர் அல்லது மாநிலத் தலைவர்தான் அனுப்பினார்! அவரைப் போய்க் கேளுங்கள்' என்று நான் சொன்னால், அங்கே, அதே கீழ்ப்படிதல் வாக்குறுதி, பொறுப்பின்மையாக மாறிவிடுகிறது.

இஸ்ரயேல் மக்கள், சுதந்திரமாக மற்ற தெய்வங்களை வழிபட்டனர். கடவுள் அவர்களைக் கேட்டபோது, பொறுப்பின்மையோடு செயல்பட்டனர்.

கடவுளின் கையில் நான் களிமண் என்று சொல்வது ஆன்மீகக் காதல் உருவகம் போல் இருக்கிறது. ஆனால், அவரின் கையில் நான் களிமண்ணாக என்னையே அளிக்க நான் நிறைய தியாகம் செய்ய வேண்டும்.

மண்ணிலிருந்து அவர் என்னைப் பிரித்தெடுக்கும்போது அந்த தனிமையை நான் ஏற்க வேண்டும்.

தண்ணீர் விட்டு அவர் என்னைப் பிசையும்போது எனக்குள் உருவாகும் இறுக்கத்தை நான் ஏற்க வேண்டும்.

சக்கரத்தில் வைத்து அவர் என்னைச் சுற்றும்போது எனக்குள் உருவாகும் சோர்வை நான் ஏற்க வேண்டும்.

நெருப்பில் வைத்து அவர் என்னைச் சுடும்போது அந்தச் சூட்டை நான் ஏற்க வேண்டும்.

வர்ணம் எனக்கு அவர் பூசும்போது அதன் வாடையைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வளவும் கடந்தால்தான், நான் அழகிய பானை ஆவேன்.

பானை ஆகியவுடன் நான் 'ஆல் பவர்ஃபுல்' கிடையாது.

ஓர் ஆட்டுக்குட்டியின் பின்னங்காலும் கூட என்னைத் தள்ளி உடைத்துவிடும் அளவுக்கு நான் பலவீனமாகிவிடுவேன்.

என் பலவீனத்தோடு நான் தொடர்ந்து போராட வேண்டும். வெயில், மழை, வெப்பம், குளிர் அனைத்தையும் தாங்க வேண்டும்.

ஏனெனில், நான் பானையாக இருந்தாலும் என்நேரமும் நான் களிமண்ணே. எந்நேரமும் நான் அந்நிலைக்குத் திரும்பத் தயாராக இருக்க வேண்டும்.

களிமண் தன்னைக் குயவன் கையில் ஒப்படைத்தாலும் இறுதியில் அது களிமண்தானே தவிர, குயவன் அல்ல.

விதி என்னும் சக்கரத்தில், என்னை வைத்து ஆட்டும் அந்தப் பெயரில்லா (அல்லது பல பெயர் கொண்ட) குயவன், பல நேரங்களில் சக்கரத்தில் வைத்து என்னைச் சுற்றவிட்டு, சோறு சாப்பிடப் போய்விடுகிறான். இதோ! நான் இன்னும் சுற்றிக்கொண்டே இருக்கிறேன்!

Tuesday, July 28, 2020

நான் தனியனாய்

இன்றைய (29 ஜூலை 2020) முதல் வாசகம் (எரே 15:10,16-21)

நான் தனியனாய்

இன்று நாம் புனித மார்த்தாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். கடந்த வாரம் தங்கைக்கு (மகதலா மரியா) திருநாள் கொண்டாடியதால் இந்த வாரம் அக்காவுக்குத் திருநாளா? என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில், மகதலா மரியாவும் பெத்தானியாவின் மரியாவும் ஒன்றுதான் என்பது சிலரின் கூற்று.

மார்த்தா லூக்கா நற்செய்தியில் சொல்லும் வார்த்தைகளும், இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா சொல்லும் வார்த்தைகளும் ஒன்றாக இருக்கின்றன. ஆக, நம் சிந்தனை இவ்விருவரின் வார்த்தைகளை மையமாக வைத்தே இருக்கிறது.

மார்த்தா: 'ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே!' (லூக் 10:40)

எரேமியா: 'உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன்!' (எரே 15:17)

'என்னைத் தனியே விட்டுவிட்டாளே!' என்று, மார்த்து இயேசுவிடம் புலம்பியது, அவள் நெடுநாள் தன் மனத்தில் வைத்துப் பூட்டியிருந்த வார்த்தைகளாகத்தான் இருந்திருக்கும். மார்த்தா, மரியா, லாசர் என்னும் மூன்று குழந்தைகளும் இளவயதிலேயே தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கலாம். இந்த நிலையில், அக்காவாகிய மார்த்தா மற்ற இருவரையும், தாய் போல இருந்து, வளர்த்திருப்பாள். அக்காவைப் பெற்ற யாவரும் இரண்டு அம்மாக்களைப் பெற்றிருக்கிறார்கள் என்பது கூற்று. ஏனெனில், வீட்டில் உள்ள எல்லா அக்கமார்களும் தங்கள் தம்பிகள் மற்றும் தங்கையரிடம் ஓர் அம்மா போலவே அன்பு செலுத்துகின்றனர்.

டோஸ்டாவ்ஸ்கி எழுதிய, 'குற்றமும் தண்டனையும்' என்ற புதினத்தில், 'ஒரு சிலர் தங்கள் வாழ்வில் இறுகிய முகமும் மனமும் கொண்டு வாழ்வதேன்? அவர்கள் பிறக்கும்போதே அப்படிப் பிறக்கிறார்களா? அல்லது அவர்களின் சூழலும் பொறுப்புணர்வும் அப்படி மாற்றிவிடுகிறதா? அவர்கள் தனியாக இருக்க விரும்புவது ஏன்? அவர்களால் இயல்பாகச் சிரிக்க முடியவில்லை ஏன்?' என்று கதாநாயகன் ரோடி கேட்பான்.

மார்த்தாவும் இப்படித்தான் தனியாகவே வளர்ந்திருப்பாள். அவள் தன்னையே அம்மா நிலையில் வைத்திருந்ததால், தன் சகோதரன் மற்றும் சகோதரியோடு இயல்பாகப் பேசியிருக்க முடியாது. ஆக, அம்மா போலவும் இருக்க முடியாமல், அக்கா போலவும் இருக்க முடியாமல் தனக்குள் புழுங்கிக் கொண்டிருந்த மார்த்தா, இயேசுவைக் கண்டவுடன், 'என்னைத் தனியாக விட்டுவிட்டாளே!' என்று அழத் தொடங்குகின்றாள்.

அக்காமார்கள் இப்படித்தான் தங்களுக்கென்று தனிமையை மட்டுமே துணையாக்கிக் கொள்கிறார்கள். ரோஸா பாட்டியின் மூத்த மகள் கார்லாவும் இப்படித்தான். தன் தம்பி க்விதோவுக்காகவும், தன் தங்கை லூயிஸாவுக்காகவும் தன்னையே தனிமையாக்கிக் கொண்டாள். தன் அப்பா இறந்தவுடன், தன் அம்மா மற்றும் தம்பி, தங்கையை இவளே பார்த்துக்கொள்கிறாள். முழு அம்மாவாக இருக்க முடியாமல், முழு அக்காவாக இருக்க முடியாமல், தவிக்கும் அவள், அந்தத் தவிப்பிலும், தனிமையிலும் அமைதி காண்கிறாள்.

இன்றைய முதல் வாசகத்தில், எரேமியா, ஆண்டவரிடம் முறையிடுகின்றார்: 'உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன்.'

கடவுளின் கை நம்மேல் இருந்தால் நாம் எல்லாரோடும் நல்ல நண்பர்களாகத்தானே இருக்க வேண்டும். பின் ஏன் தனியனாய் எரேமியா இருக்கிறார்?

கடவுளின் கையைத் தன்மேல் கொண்டிருக்கும் ஒருவர் வாழ்வில் தெரிவுகளைச் செய்ய வேண்டும். தெரிவுகளில் நிலைத்திருப்பவர்களின் நண்பர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும். எடுத்துக்காட்டாக, நான் நண்பர்களோடு திரையரங்கிற்குச் செல்வது வழக்கம் என வைத்துக்கொள்வோம். திரைப்படங்கள் பார்ப்பது என் பணிக்கான நேரத்தை எடுத்துவிடுகிறது என்பதற்காக, நான் திரைப்படங்களுக்குச் செல்வதில்லை என உறுதி எடுக்கிறேன் என் உறுதிப்பாட்டைக் காணும் நண்பர்கள் என்னிடமிருந்து இயல்பாகவே பிரிந்துவிடுவர்.

ஆகையால்தான், பவுலோ கொயலோ, 'தெ வின்னர் ஸ்டேன்ட்ஸ் அலோன்' (The Winner Stands Alone) என்கிற தன்னுடைய புதினத்தில், வெற்றியாளர்களுக்கு நண்பர்கள் யாரும் இருப்பதில்லை என்றும், வெற்றியாளர்களுக்கு நண்பர்கள் தேவையில்லை என்றும் சொல்கிறார். ஏன்? தன்னுடைய மதிப்பையும், தன்னுடைய இருத்தலின் பொருளையும் தனக்கு வெளியே தேடுபவர்தான் நண்பரைத் தேடுவார். அவற்றைத் தன்னுள்ளே கண்டுகொண்ட ஒருவருக்கு நண்பர்கள் தேவையில்லை.

எரேமியா, தான் இறைவன் சார்பாக நின்று, மக்களின் குற்றத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியிருந்ததால், அவர் 'தனியன்' நிலைக்குத் தள்ளப்படுகின்றார்.

'எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக் கொடிய காயம்?'

என அவர் புலம்பினாலும்,

'நீ திரும்பி வந்தால் நான் உன்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன்.
என்முன் வந்து நிற்பாய்.
பயனில நீக்கிப் பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாக இருப்பாய்.
அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்.
நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம்.'

எரேமியா, தான் தனியனாய் விடப்பட்ட நிலையில், தனக்கென நண்பர்களைத் தேடிச் செல்கின்றார். தனியன் என்பதே உன் அழைப்பு என அவரை மீண்டும் அழைக்கிறார் ஆண்டவர்.

பயனில நீக்கிப் பயனுள பேசின் இறைவாக்கினனன்.

பயனில நீக்கத் தொடங்கினால் பாதி நண்பர்கள் போய்விடுவார்கள்.

பயனுள்ளது பேசத் தொடங்கினால் மற்றவர்களும் போய்விடுவார்கள்.

தனியனே இறைவாக்கினன்.

தனியள் என நின்ற தமக்கை மார்த்தா, தன் குடும்பத்திற்காக அந்நிலை ஏற்றாள்.

தனியன் என நின்ற இறைவாக்கினன் எரேமியா, தன் நாட்டிற்காக அந்நிலை ஏற்றார்.

தனியர்கள் பிறப்பதில்லை. சூழல்களே அவர்களை உருவாக்குகின்றன.

Monday, July 27, 2020

அருள் புலம்பல்

இன்றைய (28 ஜூலை 2020) முதல் வாசகம் (எரே 14:17-22)

அருள் புலம்பல்

தமிழ் பக்தி இலக்கியங்களில், 'அருள் புலம்பல்' என்ற ஓர் இலக்கிய வகை உண்டு. அடியார் ஒருவர் இறைவனின் திருமுன் தன் நிலை பற்றியோ, அல்லது இறைவனின் கதாபாத்திரத்தை தான் ஏற்று இந்த உலகம் பற்றியும் பாடும் பாடல்தான் அருள் புலம்பல். இவ்வகை அருள்புலம்பல் தொடக்கத்தில் தன்னைப் பற்றியதாக அல்லது இறைவனைப் பற்றியதாகத் தொடங்கினாலும், பாடல் தொடங்கிய சில அடிகளில், அடியாரும் இறைவனும் ஒன்றெனக் கலந்து, இருவரும் இணைந்து ஒன்றாகிவிடுவர்.

எடுத்துக்காட்டாக,

'ஓத எளிதோ? ஒருவர் உணர்வரிதோ?
பேதம்அற எங்கும் விளங்கும் பெருமையன்காண்.

வாக்கும் மனமும் கடந்த மனோலயன் காண்!
நோக்க அரியவன் காண்! நுண்ணுயிரில் நுண்ணியன் காண்!

சொல்லுக்கு அடங்கான் காண்! சொல்லிறந்து நின்றவன் காண்!
கல்லுள் இருந்த கனல்ஒளிபோல் நின்றவன் காண்!

... ... ...'

என இறைவனை மையமாக வைத்துத், தொடங்கும் பட்டினத்தார் சில அடிகளில்,

'சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்.
அம்மா! பொருள் இதுஎன அடைய விழுங்கினண்டி!

பார்த்த இடம் எல்லாம் பாரமாகக் கண்டேன்டி!
கோத்த நிலைகுலைத்த கொள்கை அறியேண்டி!

பத்தி அறியாமல் பாழில் கவழ்ந்தேன்டி!
ஒத்தஇடம் நித்திரை என்று ஒத்தும் இருந்தேண்டி!

... ... ...'

எனப் பட்டினத்தாரை மையமாக வைத்துத் தொடர்ந்து, அது அவர் தன்னைப் பற்றிப் புலம்புவதாக மாறுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், தன் சொந்த மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்படப் போவதை அறிந்த இறைவன், அவர்களை நினைத்துப் புலம்புகின்றார்:

'என் மக்களாம் கன்னி மகள் நொறுங்குண்டாள். அவளது காயம் மிகப் பெரிது. வயல்வெளிகளுக்குச் சென்றால், இதோ! வாளால் மடிந்தவர்கள்! நகரில் நுழைந்தால், இதோ! பசியால் நலிந்தவர்கள்!'

ஆனால், சட்டென்று அது மக்களின் புலம்பலாக மாறிவிடுகிறது:

'நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டீரா?
சீயோனை உம் உள்ளம் வெறுத்துவிட்டதா?
நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களை நொறுக்கினீர்?'

அவர்களின் புலம்பல், இறுதியில் மன்றாட்டாக நிறைவுபெறுகிறது:

'நாங்கள் உம்மையே எதிர்நோக்கியுள்ளோம். ஏனெனில், இவற்றை எல்லாம் செய்பவர் நீரே!'

இந்த அருள்புலம்பலில், என்னை ஒரு சொல்லாட்சி மிகவே கவர்ந்தது: 'இறைவாக்கினரும் குருக்களும் தங்களுக்கு முன்பின் தெரியாத நாட்டில் அலைகின்றனர்!'

இதன் பொருள் என்ன?

தங்களுக்குத் தெரிந்த நாட்டில் மட்டும்தான் இறைவாக்கினருக்கும் குருக்களுக்கும் பெருமை. தெரியாத நாட்டில் அவர் மற்றவரைப் போல ஒருவர்தான். நம்மை மற்றவருக்குத் தெரியும்வரைதான் பெருமை, புகழ், அடையாளம் எல்லாம். அவர் மறந்துவிட்டால், அல்லது நம்மைத் தெரியாதவர்கள் நடுவில் நாம் வெறும் எண்தான். இது தெரியாமல் பல நேரங்களில் நாம், 'நான் யார் தெரியுமா?' என்று பெருமைப்பட்டுக் கொண்டே நிற்கிறோம்.

இஸ்ரயேலின் இறைவாக்கினர்களும் குருக்களும் தங்கள் இறைவனை மறந்ததால், இப்போது அடையாளம் இழந்து நிற்கின்றனர்.

இன்று என் வாழ்வில் நான் எழுதும் அருள்புலம்பல் எது?

Sunday, July 26, 2020

பயன்படாத இடைக்கச்சை

இன்றைய (27 ஜூலை 2020) முதல் வாசகம் (எரே 13:1-11)

பயன்படாத இடைக்கச்சை

இரண்டு நாள்களுக்கு முன் எங்களுடைய உணவறையில், 'நாம் இடைஞான் கயிறு' அல்லது 'அரைஞான் ஞாயிறு' அல்லது 'அண்ணாக்கயிறு' அணிவது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடை கூறினர்.

கொரோனா காலத்து லாக்டவுன் சீக்கிரம் முடியவில்லை என்றால், 'நமக்கு ஏன் தோல் இருக்கிறது?' 'நமக்கு ஏன் கால் இருக்கிறது?' என்றுகூட கேள்விகள் எழலாம்.

'வேஷ்டி அல்லது ஆடைகள் இடுப்பை விட்டு நீங்காமல் இருக்க'

'வயலில் வேலை பார்க்கும்போது பாம்பு கடித்தால், உடனடியாக அறுத்து, கடித்த இடத்தின்மேல் கட்டிக் கொள்ள'

'குடலிறக்கம் நோய் வராமல் தடுக்க'

'எதிரியைக் கொலை செய்ய'

இப்படி நிறைய விடைகள் எழுந்தன.

இன்றைய முதல் வாசகத்தில், 'நார்ப் பட்டாலான கச்சை' என்ற பொருளை வைத்து ஒரு முக்கியமான பொருளை விளக்குகிறார் ஆண்டவர்.

அதற்கு முன், இன்று, தூத்துக்குடி போன்ற சில மறைமாவட்டங்களில் தவிர, வேறு எங்கும் அருள்பணியாளர்கள் கச்சை கட்டுவதில்லை. மறைமாவட்ட அருள்பணியாளர்கள் சிகப்பு நிற கச்சையைத் தங்கள் அங்கியின்மேல் அணிகின்றனர். சில துறவற சபையினர் வெள்ளை, அல்லது கறுப்பு, அல்லது நீலம் அணிகின்றனர். பிரான்சிஸ்கன் சபையினர், முடிச்சுகள் இட்ட வெள்ளைக் கயிற்றை அணிகின்றனர். சி.எஸ்.ஐ மற்றும் லூத்தரன் சபையினர் கறுப்பு கயிற்றை அணிகின்றனர். ஆயர்கள் பிங்க், கர்தினால்கள் சிகப்பு, மற்றும் திருத்தந்தை வெள்ளை நிறத்தில் கச்சை அணிகின்றனர். இடுப்பில் கட்டப்பட்டு, ஒருவரின் இடது பக்கம் வழியாக, அவருடைய முழங்காலுக்குக் கீழே தொங்குவதுதான் கச்சை.

சிலர், மேயர்கள், மாவட்ட ஆட்சியர்களின் காவலர்கள், மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அணிவகுக்கும் அழகியர் போன்றவர்கள் கச்சையை, தோளிலிருந்து உடலின் குறுக்காக அணிவர்.

மற்றவர்கள், பெல்ட் அணிகிறோம். பெல்ட்களில் பல வகை உண்டு. கிராமங்களில், பெல்ட்டோடு இணைந்த வேலட்டை, முரட்டு மீசை வைத்த பெரியவர்கள் அணிந்திருப்பார்கள். இப்படியே போனால், ஆராய்ச்சி வேறு திசையில் சென்றுவிடும் என்பதால் சற்றே நிறுத்திக்கொள்வோம்.

'நீ உனக்காக நார்ப் பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக்கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே' என்று எரேமியாவுக்குக் கட்டளையிடுகிறார் ஆண்டவர். அதாவது, ஒரு முறை மட்டும் பயன்படுத்து. மீண்டும் அதைத் துவைக்க வேண்டாம் என்கிறார் ஆண்டவர்.

'இப்போது, எழுந்து பேராத்து ஆற்றுக்குச் செல். அங்கு, அந்தக் கச்சையைப் பாறை இடுக்கில் மறைத்து வை.'

அப்படியே செய்கின்றார் எரேமியா. பல நாள்கள் கழிகின்றன.

'இப்போது போய் அதை எடுத்து வா' என்றார்.

'அந்தக் கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது'

...

'இவ்வாறே, யூதா, எருசலேமின் ஆணவத்தை ஒழிப்பேன் ... அவர்கள் இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள் ... கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல இஸ்ரயேல், யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன் ...'

இரண்டு விடயங்களைச் சொல்கிறார் ஆண்டவர்:

(அ) கச்சை ஒருவருக்கு மதிப்பு கொடுக்கிறது. ஆனால், அதே மதிப்பு ஆணவமாக மாறிவிட்டால், அந்த ஆணவம் தவறு செய்வதற்கும், சிலைகளை வழிபடுவதற்கும் பயன்பட்டால், கச்சை பயனற்றதாக்கப்படுகிறது.

(ஆ) கச்சை நெருக்கத்தின் உருவமாக அமைகிறது.

இரண்டிலுமே, கட்டுபவரைப் பொருத்தே கச்சையின் மதிப்பு இருக்கிறது. ஆக, கட்டுகிறவரை விட, அது தன்னை ஒருபோதும் மதிப்புக்குரியதாகக் கருதிக்கொள்ள முடியாது. மேலும், பளபளப்பாய் இருக்கும் அது விரைவில் பயனற்றதாய்ப் போய்விடும் ஆபத்தும் இருக்கிறது.

இன்று, என் மதிப்பு எது எனக் கருதுகிறேன்?

என் மதிப்பு, ஆணவமாகிப் போகும் அபாயம் இருக்கிறதா?

ஆண்டவருடன் நான் கச்சை போல நெருக்கமாக இருக்கிறேனா?


Saturday, July 25, 2020

புதையல்

ஆண்டின் பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு

1 அரசர்கள் 3:5,7-12 உரோமையர் 8:28-30 மத்தேயு 13:44-52

புதையல்

'பட்டினத்தார்' என்று பலரால் அறியப்படுகின்ற, கி.பி. 10 முதல் 12ஆம் நூற்றாண்டுகளில், காவேரிபூம்பட்டினத்தில் வாழ்ந்த, திருவெண்காடர் என்னும் இரண்டாம் பட்டினத்தாரின் வாழ்வில் நடந்த நிகழ்வு இது. குழந்தை பாக்கியம் இல்லாத அவர், பக்கத்து ஊரில் பிறந்த ஒரு குழந்தையை, எடைக்கு எடை தங்கம் கொடுத்து வாங்கிக்கொள்கின்றார். அவரும் அவருடைய மனைவியும், அக்குழந்தைக்கு, 'மருதவாணன்' என்ற பெயர் சூட்டி பாசமழை பொழிகின்றனர். குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, இளவல் ஆகின்றார். தான் செய்த கடல் வாணிகத்திலேயே தன் இளவலையும் ஈடுபடுத்துகின்றார் திருவெண்காடர். ஒருமுறை மருதவாணன் தன்னுடைய நண்பர்களுடன் கடல் வாணிபத்திற்குச் செல்கின்றார். ஏறக்குறைய ஆறு மாதங்கள் வாணிபத்தில் ஈடுபட்டு, அனைவரும் ஊர் திரும்புகின்றனர். மகன் ஊர் திரும்பிய செய்தி, கடையில் வியாபாரத்தில் அமர்ந்திருந்த திருவெண்காடருக்குத் தெரிவிக்கப்படுகின்றது. மகனைக் காணத் தெருவில் ஓடி வருகின்றார். வழியில் அவரைக் கண்டவர்கள் எல்லாம், 'உன் மகனுக்கு பித்து பிடித்துவிட்டது. எங்கள் பிள்ளைகள் எல்லாம் தங்கமும் வெள்ளியும் கொண்டுவர, உன் மகனோ சாண எருக்களைத் தட்டுக்களாகக் கொண்டுவந்திருக்கிறான்' என்கின்றனர். வீட்டிற்கு ஓடி வந்த திருவெண்காடர், தன் வாசலில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மூடைகளை ஆவலோடு திறந்து பார்க்க, அங்கே சாண எருக்களே இருக்கின்றன. வீட்டிற்குள் செல்கின்றார். ஆறு மாதகாலம் பிரிந்திருந்த மகனை ஆரத் தழுவாமல், சாண எருக்கள் பற்றி முறையிட்டு, அவருடன் சண்டையிடுகிறார். மகனைக் கடிந்துகொண்ட அவர் மீண்டும் கடைக்குத் திரும்புகிறார். சற்று நேரத்தில், 'உடனே வாருங்கள்!' என்று மனைவி செய்தி அனுப்ப, வீட்டிற்கு வருகின்றார் திருவெண்காடர். வீட்டின் உள்ளே விலையுயர்ந்த முத்துக்களும், வைரங்களும், மாணிக்கங்களும் கொட்டிக் கிடக்கின்றன. 'இவை எப்படி?' என்று அவர் கேட்க, 'எல்லாம் மருதவாணன் கொண்டுவந்த மூடைகளில் இருந்தவை. யாரும் திருடிவிடா வண்ணம் அவற்றை அவர் எருக்களில் மறைத்து வைத்திருக்கின்றார்' என்று மனைவி பெருமிதம் கொள்கிறார். 'ஐயோ! அவன் எங்கே! என் மகன் எங்கே!' என்று ஒவ்வொரு அறையாக வீட்டிற்குள் தேடுகின்றார். மகன் இல்லை. அந்த நேரத்தில், அவரிடம், மனைவி ஒரு ஓலைச்சுவடியைக் கொடுக்கின்றார். 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே' என்று அந்தச் சுவடியில் எழுதப்பட்டிருக்கிறது. மருதவாணன் மறைந்துவிடுகிறார். அப்போதுதான், திருவெண்காடருக்குத் தெரிகிறது, தன் மகனாக இவ்வளவு நாள்கள் தன்னுடன் இருந்தது சிவபெருமான் என்று. சிவபெருமானே, தன் மகனாக வந்து, 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே' என்று சொல்லித் தன்னைத் துறவிற்கு அழைக்கிறார் என உணர்ந்த அவர், அந்த நொடியே துறவு பூணுகின்றார்.

'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே' என்னும் வாக்கியத்திற்கு இரு பொருள்கள் உண்டு. ஒன்று, 'காதற்ற ஊசி' 'கடைத் தெருவில்' விலை போகாது. இரண்டு, 'காதற்ற ஊசி கூட உன் வாழ்வில் கடைசிவரை அல்லது உன் கடைசிப் பயணமான விண்ணகப் பயணத்தோடு உடன் வராது.'

இவ்வாறாக, பொருள்களின் நிலையாமை மற்றும் பயனின்மையை பட்டினத்தாருக்கு வெளிப்படுத்துகின்றார் சிவபெருமான்.

திருவெண்காடர் என்ற பட்டினத்தாருக்கு,

குழந்தை இல்லாத போது, மகன், 'புதையலாக' தெரிந்தான்.

கடல்வாணிகம் முடித்து அவன் திரும்பியபோது, அவன் நுட்பமாகக் கொணர்ந்த, முத்துக்கள், 'புதையலாக' தெரிந்தன.

'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே' என அறிந்தவுடன், இறைவன் மட்டுமே 'புதையலாக' தெரிகின்றார்.

நம் வாழ்வின் புதையலை, அடையாளம் காணவும், ஆய்ந்து பார்க்கவும், தேர்ந்து தெளியவும், விரும்பி வாங்கவும் நம்மை அழைக்கின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

'இறைவனும் இறைவன் சார்ந்தவை மட்டுமே புதையல்' என்பதை எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லாமல் முன்வைக்கின்றன வாசகங்கள். ஆக, என் புதையல் எது என்பதை நான் வரையறுக்க வேண்டியதில்லை. அது ஏற்கனவே வரையறுத்தாயிற்று. நான் செய்ய வேண்டியதெல்லாம், அதை அடையாளம் காண்பதும், ஆய்ந்து பார்ப்பதும், தேர்ந்து தெளிவதும், விரும்பி வாங்குவதும்தான்.

எப்படி?

இன்றைய முதல் வாசகம் (காண். 1 அர 3:5,7-12), கடவுள், சாலமோனுக்குக் கனவில் தோன்றிய நிகழ்வைத் தாங்கி நிற்கிறது. சாலமோன், மிகவும் இக்கட்டான நிலையில் ஒருங்கிணைந்த இஸ்ரயேலின் அரசராகின்றார். தாவீது முதுமைப் பருவம் அடைகின்றார். அவருடைய முதுமைப் பருவத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கின்ற அவருடைய மகன் அதோனியா, 'நானே அரசனாவேன்' எனச் சொல்லி, தனக்கென ஒரு குழுவைக் கூட்டி, தன்னை அரசனாக்கிக் கொள்கின்றான். இந்நிலையில்தான், பத்சேபா, நாத்தானுடன் இணைந்து அரசியல் செய்து, தன் மகன் சாலமோனை அரசனாக்குகிறாள். இந்த நிகழ்வில் மிகவும் பரிதாபத்துற்குரியவராக தாவீது இருக்கிறார். அதாவது, தான் செய்த அந்த ஒற்றைத் தவற்றுக்காக, இறுதிவரை துன்பம் அனுபவிக்கின்றார். பத்சேபாவும் இந்த நிகழ்வில், மிகப்பெரிய சந்தர்ப்பவாதியாக மாறுகிறாள். 'வாழ்வில் எதுவும் இலவசம் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது' என்று உணர்கின்ற தாவீது, தான் தழுவிய பத்சேபாவின் பொருட்டு, மிகவும் வேதனைப்படுகின்றார். பாவம்! பரிதாபத்திற்குரியவர் அவர்! இறுதியில் அனைவரும் அவரைப் பயன்படுத்திக்கொள்கின்றனர், அல்லது பயமுறுத்திக் கொல்கின்றனர்! தாவீதை விட்டுவிட்டு, சாலமோனிடம் வருவோம்.

சாலமோன் அரசனானபோது அவருக்கு வயது ஏறக்குறைய 15 முதல் 20 அல்லது, அதற்கும் குறைவாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால், தான் அரசனானவுடன் இரண்டு நற்காரியங்கள் செய்கின்றார். ஒன்று, கிபயோனுக்குச் சென்று ஆண்டவருக்குப் பலி செலுத்துகின்றார். இப்படிச் செலுத்தியதன் வழியாக, தன்னை அரசனாக ஏற்படுத்திய ஆண்டவராகிய கடவுளுக்கு, தன் தந்தையைப் போல, பிரமாணிக்கமாக இருந்து, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதாக வாக்களிக்கின்றார். இரண்டு, நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ, எதிரிகளின் சாவையோ ஆண்டவரிடம் வரமாகக் கேட்காமல், ஆண்டவராகிய கடவுளின் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை வரமாகக் கேட்டுப் பெற்றுக்கொள்கின்றார். இவ்விரண்டு நற்காரியங்களிலும், சாலமோன், ஆண்டவரை, தன்னுடைய புதையலாக, முதன்மையாக, முழுமையாக, முறைமையாகத் தெரிந்துகொள்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 13:44-52), விண்ணரசு பற்றிய மூன்று, குட்டிக் குட்டி உவமைகளை வாசிக்கின்றோம். முதல் இரண்டு உவமைகளும் விண்ணரசு பற்றியதாக மட்டும் இருக்க, இறுதி உவமை, விண்ணரசு பற்றியதாகவும், இறுதிக்கால நிகழ்வு பற்றியதாகவும் இருக்கிறது.

நிலத்தில் புதையலைக் கண்டுபிடித்த ஒருவர், அந்தப் புதையலை மட்டும் எடுத்துச் செல்லாமல், அல்லது அந்தப் புதையல் இருக்கும் இடத்தை மட்டும் விலைக்கு வாங்காமல், தமக்குள்ள யாவற்றையும் விற்று, அங்கிருந்து கருவேல மரங்கள், முட்செடிகள், கட்டாந்தரை என முழுமையான நிலத்தையும் வாங்கிக்கொள்கின்றார். நிதி மேலாண்மை என்ற அடிப்படையில் பார்த்தால் அவர் செய்தது மடைமையாகத் தெரிகின்றது. ஆனால், நிறையப் புதையல்கள் அந்த நிலத்தில் இருக்கலாம் என நம்பிக்கை பார்வை கொண்டிருக்கிறார் அவர். மேலும், புதையலைக் கண்ட நொடியில் அவர் கணக்குப் போட்டுப் பார்க்கின்றார். தன்னிடம் ஏற்கனவே உள்ள சொத்தின் மதிப்பைவிட, இதன் மதிப்பு உயர்ந்தது என்று அறிந்தவுடன்தான் தன் உடைமைகளை விற்கத் துணிகின்றார். அல்லது, சேமித்து வைத்த காசு எல்லாம் செல்லாக் காசு ஆன கதையாகிவிட வாய்ப்பிருக்கிறது.

விலையுயர்ந்த முத்தைத் தேடி அலையும் வணிகரும் தமக்குள்ள அனைத்தையும் விற்கின்றார். முத்தை வாங்கிக்கொள்கின்றார். இப்படிச் செய்யும்போது அவர் 'இடர்வரவு' அல்லது 'மறையிடர்' ('ரிஸ்க்') எடுக்கின்றார். ஏனெனில், முத்தை வாங்கியபின், அது வெறும் பிளாஸ்டிக் பாசி என்று இருந்தால் என்ன செய்வது?

கடலில் வலை வீசும் ஒருவர், நல்ல மீன்களைக் கூடையில் சேர்த்து, கெட்ட மீன்களை வெளியே எறிகின்றார். ஏனெனில், கெட்டவற்றை நல்லவற்றோடு வைத்திருப்பது, இடத்தை அடைத்துக்கொள்வதோடு, சுமையாக இருப்பதோடு, இருக்கின்ற நல்ல மீன்களையும் கெடுத்துவிடும். ஆக, மெதுவாக அமர்ந்து, பொறுமையுடன், நேரம் எடுத்து, கெட்டவற்றிலிருந்து நல்லவற்றைப் பிரித்தெடுக்கின்றார்.

புதையல், முத்து, நல்ல மீன்கள் என்னும் மூன்றுமே புதையல்கள்தாம். அவற்றை ஒருவர் முழுமையாக வாங்க வேண்டும் (நிலம் போல), முதன்மையாகத் தேட வேண்டும் (முத்து போல), முறைமையாகப் பிரித்தெடுக்க வேண்டும் (நல்ல மீன்கள் போல).

மேலும், மேற்காணும் புதையல்களைப் பெற, ஒருவர், (அ) சரியாகக் கணக்கிட அல்லது மதிப்பிட வேண்டும், (ஆ) மறையிடர் ('ரிஸ்க்') எடுக்க வேண்டும், (இ) தேர்ந்து தெளிந்து, தெரிவு செய்ய வேண்டும்.
புதையல்களைப் பெறுவது எளிதா? எளிதல்ல.

பட்டினத்தாரிடம் வந்த சிவபெருமான்போல, கடவுள் நம்மிடம் வருவதில்லை. சாலமோனுக்குக் கனவில் தோன்றியது போல நமக்குத் தோன்றுவதில்லை. பின் எப்படித்தான் புதையலைப் பெறுவது?

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். உரோ 8:28-30) நமக்கு விடை சொல்கிறது. 'தூய ஆவி அருளும் வாழ்வு' என்னும் பகுதியை நிறைவு செய்கின்ற பவுல், 'சினர்ஜி' ('ஒருங்கியக்கம்' அல்லது 'கூட்டொருமை') மிக அழகான மேலாண்மையியல் சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார்: 'கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்.' அல்லது ஆவியார் அனைத்தையும் 'ஒருங்கியக்கம்' செய்கிறார். ஆக, நாம், நம்முடைய புதையலை, முழு மூச்சோடு தேடினால், இந்த உலகமே நமக்கு ஒத்துழைக்கும். அந்தப் புதையல் எதுவாக இருந்தாலும்!

எடுத்துக்காட்டாக, வாடகைக்கு வீடு தேடிப் போகிறோம். ஒரு வீடும் அமைவதில்லை. நாம் எதிர்பாராத நேரத்தில், திடீரென நாம் சந்திக்கும் ஒருவர் வழியாக அந்த வீடு நமக்குக் கிடைக்கிறது. நிலம் வாங்க வேண்டும் என நினைக்கிறோம். ஒன்றும் அமையாமல் இருக்கின்றது. திடீரென எல்லாம் கைககூடுகிறது. பெண் பார்க்க, திருமணம் முடிக்க, குழந்தை பிறக்க என எல்லா மங்களகரமான நிகழ்வுகளும் நமக்குத் திடீரென கைகூடுகின்றன. இதைத்தான், 'ஆள் செய்யாததை நாள் செய்யும்' என்கின்றனர் பெரியவர்கள். சபை உரையாளரோ, இதையே, 'கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்' (காண். சஉ 3:11) என்கிறார்.

நம்முள் இருக்கும் ஆவியாரோடு நாம் இணைந்துகொண்டு, கடவுளின் திட்டப்படி நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, நம் அன்றாட வாழ்வு நகர்ந்துகொண்டே இருந்தால் போதும், அவர் நமக்காக யாவற்றையும் செய்து முடிப்பார்.

மேற்காணும் வாசகங்களின் பின்புலத்தில் சில வாழ்வியல் சிந்தனைகள்:

(அ) தூக்கத்திலும் தெளிவு

சாலமோனுக்குக் கடவுள் தூக்கத்தில் தோன்றுகின்றார். ஆனால், தூக்கத்திலும் தெளிவாக இருக்கின்றார் சாலமோன். என் வாழ்வின் இலக்கு எனக்கு தெளிவாக இருக்கிறதா? தூக்கத்திலும், 'இதுதான் அது!' என்று நான் சொல்ல முடியுமா? அல்லது நேற்றைக்கு ஒரு பக்கம், இன்றைக்கு ஒரு பக்கம், நாளைக்கு இன்னொரு பக்கம் என நான் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றேனா?

(ஆ) மகிழ்ச்சி

புதையலைக் கண்டவர் மகிழ்ச்சியோடு தனக்குள்ளதை இழக்கின்றார். முத்தைக் கண்டவர் மகிழ்ச்சியோடு, தன் பழைய முத்துக்களை இழக்கின்றார். நல்ல மீன்களைக் கண்டவர், மகிழ்ச்சியோடு கெட்டவற்றை வெளியே வீசுகின்றார். இங்கே இரண்டு விடயங்கள்: எனக்கு எது மகிழ்ச்சி தருகிறதோ அதுவே என் வாழ்வின் புதையல். இன்பம் தருவது அல்ல. இன்பம் சில நிமிடங்களில் மறைந்துவிடும். மகிழ்ச்சி தராதவை அனைத்தும் சுமைகளாக மாறிவிட வாய்ப்பு உண்டு. வெறும் சாண எருக்களை சாக்கு மூடைகளில் பார்த்த திருவெண்காடருக்கு முதலில் அவை தேவையற்ற சுமைகளாகவே தெரிந்தன. ஆனால், அவற்றை உடைத்து முத்துக்களைக் கொட்டியபின்தான் அவை புதையல் என்று அவருக்குத் தெரிகின்றது. இரண்டு, மகிழ்ச்சியை நான் அடைய, இன்பத்தை இழக்க முன்வர வேண்டும். நன்முத்தைப் பெற, பிறமுத்துக்களை இழக்க வேண்டும். அப்படி இழக்காமல் நான் நன்முத்தை உரிமையாக்க முடியாது. நன்முத்து வந்தவுடன், பிறமுத்துக்களுக்கு மதிப்பில்லை. மதிப்பற்றவற்றை நான் ஏன் தூக்கித் திரிய வேண்டும்? வீடு காலியாக இருக்கிறது என்பதற்காக, வைக்கோலை அதில் நிரப்பலாமா?

(இ) ஆவியாரோடு இணைந்திருத்தல்

எந்த நேரமும் நான் என்னுடைய தொப்புள்கொடியை எனக்கு மேல் இருக்கின்ற இறையோடு இணைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவரிடம்தான் என் முதல் உறவு தொடங்கியது (காண். எபே 1:4). இந்த உலகில் நான் புதையல்களைக் காணுமுன் எனக்குப் புதையலாக இருந்தவர் அவர். இந்த உலகின் புதையல்கள் மறைந்தவுடன், 'காதற்ற ஊசிகளாக' அவை கரைந்தவுடன், என் புதையலாக இருப்பவர் அவரே.

இறுதியாக, பதிலுரைப்பாடலில் (காண். திபா 119), ஆசிரியர் கூறுவதுபோல, 'ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு!' என்று முதன்மையாக, முழுமையாக, முறைமையாக, அவரைப் பற்றிக்கொள்தல் நலம்!


Friday, July 24, 2020

புனித பெரிய யாக்கோபு

இன்றைய (25 ஜூலை 2020) திருநாள்

புனித பெரிய யாக்கோபு

செபதேயுவின் மக்களில் மூத்தவரும், இயேசுவின் திருத்தூதர்களில் முதன்மை வட்டத்திலிருந்த மூவரில் ஒருவரும், எருசலேம் திருஅவையின் தலைவரும், இயேசுவின் சகோதரர் என அறியப்பட்டவருமான சந்தியாகப்பர் அல்லது பெரிய யாகப்பரின் திருநாளை நாம் இன்று கொண்டாடுகிறோம்.

நான் வழக்கமாகப் பின்தொடரும் 'டேனியல் ஆலி' என்ற யூட்யூப் சேனலில், அதன் பதிவர், பின்வரும் கவரிகை ('போஸ்டர்') ஒன்றை ஒட்டியிருந்தார்:

'வாழ்வின் 3 எளிய விதிகள்:

1. நீ விரும்பும் ஒன்றின்பின் செல்லாவிட்டால், அது உனக்கு ஒருபோதும் கிடைக்காது.

2. நீ ஒன்றைக் கேட்காத வரை, அதற்கான விடை, 'இல்லை' என்றே இருக்கும்.

3. நீ முன்னால் நடந்து நகரவில்லை என்றால், நீ எப்போதும் அதே இடத்தில்தான் இருப்பாய்.'

இந்தக் கவரிகையின் பின்புலத்தில் இன்றைய திருநாள் கதைமாந்தர் பற்றிச் சிந்திக்க விழைகின்றேன்.

கலிலேயர். அதாவது, படிப்பறிவற்ற பாமரர்கள் வாழும் பகுதியிலிருந்து வந்தவர்.

மீன்பிடித் தொழில் செய்தவர். இவரும் இவருடைய சகோதரர் யோவானையும் இயேசு அழைத்தபோது, இவர்கள் தந்தையையும், படகுகளையும், பணியாளர்களையும் விட்டுவிட்டு வருகின்றனர். ஆக, படகு மற்றும் பணியாளர்களை அமர்த்தி வேலை பார்த்த செல்வம் படைத்தவர்கள்.

முதல் வட்டத்தில் இருந்தவர். இயேசுவிற்கு நெருக்கமாக 12 திருத்தூதர்கள் இருந்தாலும், அவர்களில், மூவர், இன்னும் அதிக நெருக்கமாக இயேசுவுடன் இருக்கின்றனர். பேதுரு, யோவான், யாக்கோபு என்னும் இந்த மூவர்தாம், இயேசுவின் உருமாற்றத்தின்போதும், இயேசு, யாயிரின் மகளுக்கு உயிர்தந்த போதும், இயேசு, கெத்சமேனித் தோட்டத்தில் துன்புற்ற போதும் உடனிருக்கின்றனர்.

மாற்கு நற்செய்தியில், இவரும் இவருடைய சகோதரர்களும், இயேசுவின் அமைச்சரவையில் இடம்பெற விரும்பி, இருக்கைகள் கேட்கின்றனர்.

எருசலேம் சங்கம் கூட்டியவர். புதிய நம்பிக்கையைத் தழுவியவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி எழுந்தபோது, உடனடியாக, திருத்தூதர்களை அழைத்து, விருத்தசேதனம் தேவையில்லை என்ற ஒரு முக்கிய முடிவை எடுக்கின்றார். ஒருவேளை அவர் அப்படி எடுக்கவில்லை என்றால், இன்று நாம் எல்லாரும், முதலில் யூதர்களாக மாறி, பின்தான் கிறிஸ்தவர்களாக மாறியிருக்க முடியும்.

இறுதியில், இவர் இயேசுவுக்கான மறைசாட்சியாக உயிர்விடுகின்றார். இவருடைய கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் பெட்டியில், 'இயேசுவின் சகோதரர் யாக்கோபு' என்று எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்கள்தாம், இயேசு என்ற வரலாற்று நபர் வாழ்ந்தார் என்பதற்கான, விவிலியத்திற்குப் புறம்பான சான்றாக இருக்கிறது.

ஆக,

மேற்காணும் விதிகளை இவர் வாழ்வில் பொருத்திப் பார்;த்தால்,

1. இவர், தான் விரும்பும் திருத்தூதுப்பணி என்னும் இலக்கை நோக்கைச் சென்றார். மறைசாட்சி என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது.

2. இயேசுவின் அருகில் அரியணை கேட்டார். அதிகாரத்தின்மேல் உள்ள விருப்பத்தால் அல்ல. மாறாக, இயேசுவுக்கு அருகிருக்கும் ஆசையில். இவர் அன்று கேட்டதால்தான், எருசலேமின் திருஅவைத் தலைவராக ஏற்படுத்தப்படுகிறார்.

3. மீனவர், சீடர், திருத்தூதர், முதல் வட்டத் திருத்தூதர், தலைவர், மறைசாட்சி என ஒவ்வொரு கட்டமாக நகர்ந்தவர்.

வாழ்வின் எளிய 3 விதிகள் என டேனியல் ஆலி அழைக்கின்ற விதிகள் நமக்குப் பொருந்துகின்றனவா?

Thursday, July 23, 2020

இதயத்திற்கேற்ற மேய்ப்பர்

இன்றைய (24 ஜூலை 2020) முதல் வாசகம் (எரே 3:14-17)

இதயத்திற்கேற்ற மேய்ப்பர்

நேற்றைய முதல் வாசகத்தின் தொடர்ச்சியாக உள்ளது இன்றைய வாசகம். அங்கே, நான்கு வகையான மேய்ப்பர்களைப் பற்றி ஆண்டவராகிய கடவுள் குறிப்பிடுகின்றார்:

(அ) குருக்கள்

(ஆ) திருச்சட்டத்தைப் போதிப்பவர்கள்

(இ) ஆட்சியாளர்கள்

(ஈ) இறைவாக்கினர்கள்

இவர்கள் நான்கு பேரும், ஆண்டவரின் இதயத்திற்கேற்ற நிலையில் இல்லை.

ஆகையால், அவர், தன்னுடைய இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை மக்களுக்குக் கொடுப்பதாக வாக்களிக்கின்றார்.

மேற்காணும் நான்கு பேரும் ஆண்டவரால் ஏற்படுத்தப்பட்டவர்கள்தாம். ஆனால், அவர்கள் தங்கள் இதயத்தின்படி நடக்கத் தொடங்குகிறார்கள். தாங்கள் நடப்பது மட்டுமன்றி, மக்களையும் அப்படியே வழிநடத்துகிறார்கள். தலைமைத்துவத்தில் இருப்பவர்களின் பொறுப்புணர்வு இரட்டிப்பாக இருக்கின்றது.

ஒவ்வொரு நிலையிலும், என் வாழ்வு, இறைவனின் இதயத்திற்கேற்றதாக இருக்கிறதா? என்று கேட்பதே நலம்.


Wednesday, July 22, 2020

'நோ' சொல்வது

இன்றைய (23 ஜூலை 2020) முதல் வாசகம் (எரே 2:1-3,7-8,12-13)

'நோ' சொல்வது

ஈசோப்பு கதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அவற்றில் நம் அனைவருக்கும் அறிமுகமான ஒரு கதை: 'அப்பாவும், மகனும் கழுதை சுமக்கும் கதை.' கழுதையின்மேல் ஏறிச்சென்ற இருவரும் ஊரார் பேச்சைக் கேட்டு, கடைசியில் ஒரு கம்பில் கழுதையைக் கட்டி, இருவரும் தூக்கிச் செல்ல, கழுதை மிரண்டு இவர்களையும் கீழே தள்ளி, அதுவும் கிணற்றில் விழுந்துவிடும்.

எல்லாரையும் திருப்திப்படுத்த முயல்வது ஆபத்து என்பது கதையின் பொருளாகச் சொல்லப்படும்.

எல்லாரையும் திருப்திப்படுத்த அவர்கள் முயன்றதற்குக் காரணம், அவர்கள், மற்றவர்களுக்கு 'நோ' சொல்லத் தவறியதுதான்.

நாம் 'நோ' சொல்லத் தவறிய நேரங்கள் ஏராளம் இருக்கலாம்.

மற்றவர்களுக்கு 'நோ' சொல்லாமல், மற்றவர்கள் மனம் நோகக்கூடாது என நினைத்து, மற்றவர்கக்காக சுமைகள் சுமந்த நேரங்கள் நிறைய இருக்கலாம்.

ஆனால், 'நோ' சொல்வது எல்லா நேரத்திலும் சரியா?

இஸ்ரயேல் மக்கள் சொன்ன 'நோ' என்ன என்பதை அவர்களுக்கு இறைவாக்கினர் எரேமியா வழியாகச் சுட்டிக்காட்டுகிறார் ஆண்டவராகிய கடவுள்:

'பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்.
தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைத் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்!'

மிக அழகான உருவகம் இது. இது ஒரு விவசாய சமூக உருவகம். எனக்கு ஒரு தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தின் ஒரு புறம் வற்றாத நீரூற்று இருக்கிறது. தோட்டத்தின் இன்னொரு புறம், தண்ணீர் தேங்காத, அல்லது ஆழம் குறைந்த, அல்லது மடைகள் உடைந்து போன கண்மாய் அல்லது ஊருணி இருக்கிறது. நான், நீரூற்றுடன் உள்ள தொடர்பை அறுத்துக் கொண்டு, என்னைக் கண்மாயுடன் இணைத்துக் கொண்டால் என்ன ஆகும்? கண்மாய் சீக்கிரம் வற்றிவிடும். அல்லது உடைந்த மதகுகள் வழியே தண்ணீர் வெளியேறிக் காய்ந்துவிடும். எந்த நிலையிலும் இழப்பு என் தோட்டத்திற்குத்தான்.

நான் ஏன் நீரூற்றைப் புறக்கணித்தேன்?

நீரூற்று காணக்கூடிய அளவில் இல்லை. அது மிகச் சிறிய அளவில் இருந்தது. அதில் எந்தவொரு ஈர்ப்பும் இல்லை.

ஆனால், கண்மாய் பார்ப்பதற்குப் பெரிதாகவும், அகலமானதாகவும், ஆழமாகவும் இருந்தது. இருந்தாலும் அது உடைந்து போயிருந்தது எனக்குத் தெரியவில்லை.

இஸ்ரயேலில் இதே பிரச்சினைதான் இருந்தது.

ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்கு வாழ்வுதரும் நீரூற்றாக இருந்தாலும், அவர் சிறிய நீரூற்று போல மறைந்து இருந்தார்.

ஆனால், அவர்கள் கண்முன் இருந்த பிற தெய்வங்களின் சிலைகளும், அவற்றின் ஆலயங்களும், வழிபாடுகளும் மிகவும் ஈர்ப்பதாக இருந்தன.

ஆகவே, இஸ்ரயேல் மக்கள், குறிப்பாக, யூதா நாட்டினர், தங்கள் கடவுளுக்கு, 'நோ' சொல்லிவிட்டு, பிற தெய்வங்களுக்கு, 'யெஸ்' சொல்கிறார்கள்.

குருக்கள், திருச்சட்டத்தைப் போதிப்போர், ஆட்சியாளர், இறைவாக்கினர் என மேல்தளத்தில் நிற்பவர்கள் கடவுளுக்கு 'நோ' சொல்கிறார்கள். அவர்களை மற்றவர்களும் பின்பற்றுகிறார்கள்.

இன்று நான் என் வாழ்வில், கண்மாய்களுக்கும், உடைந்த ஊரணிகளுக்கும் 'நோ' சொல்லலாம். ஆனால், வாழ்வுதரும் ஊற்றாகிய கடவுளுக்கு 'நோ' சொல்வது தவறு.

புனித அகுஸ்தினார் தன் வாழ்வில், தன்னுடைய அறிவுசார் தேடல்கள் என்னும் கண்மாய்களிலும்,  புலனின்பங்கள் என்னும் உடைந்த குட்டைகளிலும், இறுமாப்புநிறை பேரார்வம் என்னும் மதகுகள் இல்லாத ஊரணிகளிலும் தன் வாழ்விற்கான ஆதாரத்தைத் தேடினார். ஆனால், அவைகளால் அவருக்கு நிறைவுதர முடியவில்லை. தன் பார்வையை அவற்றிலிருந்து திருப்பும் அவர், வாழ்வுதரும் நீரூற்றைக் கண்டடைகின்றார். பின்னதற்கு 'யெஸ்' சொன்ன அதே நொடி, முன்னவற்றுக்கு 'நோ' சொல்கிறார்.

ஒரே நேரத்தில், இரண்டிற்கும் 'யெஸ்' சொல்வது, தோட்டத்திற்கும் நீர் கிடைக்காமல், நீரும் சேமிக்கப்படாமல் வீணாகும் ஆபத்தில் முடியும்.

ஒன்றுக்கு 'நோ' என்பது, இன்னொன்றுக்கு 'யெஸ்.' எதற்கு எனப் பகுத்தாய்ந்து தெரிவு செய்வதே ஞானம்.


Tuesday, July 21, 2020

மரியாவும் ரபூனியும்

இன்றைய (22 ஜூலை 2020) திருநாள்

மரியாவும் ரபூனியும்

'இயேசுவின் இனியவள்' என்று ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்திகள் நமக்குச் சொல்கின்ற, அல்லது நற்செய்தி நூல்கள் சொல்வதுபோல, 'இயேசுவை இனியவன்' என்று ஏற்றுக்கொண்ட மகதலா நாட்டு மரியாளின் திருநாளை இன்று கொண்டாடுகிறோம்.

'மரியா! என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே! உன் கைகளுக்கு சேனிட்டைஸர் போட்டாயா?' என்று இயேசு, மகதலா நாட்டு மரியாவிடம் சொல்வதாக டுவிட்டரில் வெளியான மீம் என்றை என் நண்பர் எனக்கு ஃபார்வர்ட் செய்திருந்தார்.

மகதலா மரியா இன்று நமக்குச் சொல்லும் பாடம் ... 'மூளையிலிருந்து அல்ல, இதயத்திலிருந்து வாழ்வது!' ('Living, not from the mind, but from the heart!')

'அறிவுக்குத் தெரியாத காரணம் ஒன்று இதயத்திற்குத் தெரியும்' என்று மெய்யியலில் சொலவடை ஒன்று உண்டு.

மகதலா நாட்டு இளவல் இதயத்திலிருந்து வாழ்ந்தாள். எப்படி?

1. இருப்பதை இனியவருக்காக வீணாக்குவது!

இயேசு பரிசேயர் ஒருவருடைய வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த, 'அந்த மாதிரியான' பெண், மகதலா நாட்டு மரியாள் என்று இன்று ஏறக்குறைய அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். வருகிறாள். இயேசுவைக் காண்கிறாள். கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த நறுமணச் சிமிழை உடைக்கிறாள். இயேசுவின் காலடிகளில் ஊற்றுகிறாள். அர்ஜூனனுக்குப் புறாவின் கண் மட்டுமே தெரிந்ததுபோல, இவளுக்கு அந்தக் கூட்டத்தில் இயேசு மட்டுமே தெரிந்தார். இயேசுவை விருந்திற்கு அழைத்திருந்த பரிசேயர், சொட்டுச் சொட்டாய் அளந்து திராட்சை இரசத்தைப் பரிமாறிக் கொண்டிருந்தபோது, இவள் சிமிழைத் திறக்கக்கூட நேரம் இல்லாதவளாய், அப்படியே பாட்டிலை உடைத்து ஊற்றுகிறாள். அதன் மதிப்பு ஏறக்குறைய 300 தெனாரியம் என்கிறார் அங்கிருந்த யூதாசு செட்டியார். ஒரு தெனாரியம் என்பது ஒருநாள் கூலி. ஏறக்குறைய ஓராண்டின் கூலியை ஒரு தெருப்போதகரின் காலில் கொட்டித் தீர்க்கிறாள் மரியாள். இயேசுவின் முன், தன் இனியவனின் முன் அதன் மதிப்பு ஒன்றுமில்லை என்றுணர்ந்தாள் அவள். 'பரவாயில்லையே! அவரைப் பார்க்க முடிந்ததே! அவருடைய காலடிகளைத் தொட முடிந்ததே!' என்று தன்னைப் பாக்கியவதியாகக் கருதிய அவள், தன் பாவத்தையெல்லாம் நறுமணத் தைலத்தால் கழுவிக்கொள்கிறாள். மூளையிலிருந்து வாழ்ந்த யூதாசு கணக்குப் பார்க்கிறார். மூளையிலிருந்து வாழ்ந்த விருந்தினர்கள், 'என்ன மடமை!' எனக் கடிந்துகொள்கின்றனர். ஆனால், இதயத்திலிருந்து வாழ்ந்த அவள், அல்லது இதயத்திலிருந்து அவள் வாழ்ந்ததால் இயேசுவுக்காக, விலைமதிப்பெனத் தான் கருதியதை வீணாக்குகிறாள்.

2. இருள்நீங்குமுன்பே கல்லறைக்கு

வாரத்தின் முதல் நாள். இன்றைய ஞாயிற்றுக்கிழமை போல. லாக்டவுன் நேரம். கையில் இ-பாஸ் இருந்ததா என்று தெரியவில்லை. மாஸ்க் அணிந்திருந்தாளா என்ற குறிப்பு இல்லை. விடியுமுன், இருளாயிருக்கும்போதே கல்லறை நோக்கிப் புறப்படுகின்றாள். அதாவது, அவள் விடிய, விடியத் தூங்கவே இல்லை. இதயம் வெறுமையாய் வந்த அவள், கல்லறை வெறுமையாய் இருக்கக் கண்டு வியந்து போகிறாள். 'நான் தூக்கிக் கொண்டு போக வேண்டும் என வந்தேன்! வேறு யாரோ முந்திக் கொண்டார்களே!' என்ற வியப்பும், 'ச்சே! இன்னும் கொஞ்சம் முன்னாலேயே வந்திருக்கலாமே!' என்ற கோபமும் சேர்ந்து எழுகிறது. இதயத்திலிருந்து வாழ்பவர்கள் நேரத்தையும், இடத்தையும் கடந்துவிடுகிறார்கள். அவர்கள் நிரந்தரத்தில் வாழ்வதால், விடியலும் இருளும் அவர்களுக்கு ஒன்றுதான்.

3. கண்ணீர்த் துளி

பொல பொலவென்று கண்ணீர் வடிக்கின்றாள் மகதலா மரியாள். வெண்ணாடை அணிந்த வானதூதர்கள், 'அம்மா, ஏன் அழுகிறீர்?' எனக் கேட்கின்றனர். 'தோட்டக்காரர்', 'ஏனம்மா அழுகிறாய்?' எனக் கேட்கின்றார். துன்பம் என்னும் வெட்பம் அதிகம் ஆன்மாவைத் தாக்க, ஆன்மா உடனடியாக வியர்ப்பதுதான் கண்ணீர். மூளையிலிருந்து வாழ்பவர்கள் எளிதில் கண்ணீர் வடிப்பதில்லை. அவர்கள் கண்ணீர்த்துளிகளையும் கணக்குப் பார்த்தே வெளியேற்றுவார்கள். ஆனால், இதயத்திலிருந்து வாழ்பவர்கள் அழுதுவிடுவார்கள். ஏனெனில், அழுகையை அடக்கவோ, அல்லது மறைக்கவோ அவர்கள் விரும்புவதில்லை. ஏனெனில், அடுத்தவர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார் என்ற அக்கறை அவருக்கு இல்லை.

4. 'என் ஆண்டவரை'

'என் ஆண்டவர்' என இயேசுவைக் குறிப்பிடுகின்றாள். இயேசுவின் சமகாலத்தில், மனைவி தன்னுடைய கணவனை அப்படித்தான் அழைப்பாள். வானதூதர்கள்முன் தன் மனத்தை இப்படித் திறக்கின்ற அவள், இயேசுவின் சீடர்களிடம், 'ஆண்டவர்' எனக் குறிப்பிடுகின்றாள். உணர்ச்சிவசப்பட்டவளாக இருந்தாலும், தான் சொல்வதையும், செய்வதையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கின்றாள் இளவல்.

5. 'அவரை எடுத்துச் செல்வேன்'

தோட்டக்காரரிடம், 'ஐயா! நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்!' என்கிறாள் மரியாள். 'அவருடைய இறந்த உடலை எடுத்துச் சென்று என்னுடன் வைத்துக்கொள்ள விரும்புகிறேன்' என்று சொன்னாளா? அல்லது 'இயேசு உயிர்த்துவிட்டார்' என்ற நம்பிக்கையில் அப்படிச் சொன்னாளா எனத் தெரியவில்லை. 'இறந்த உடலை வைத்து என்ன செய்யப் போகிறாய்?' என்று கேட்கும் மூளை. ஆனால், 'இறந்த உடல் என்றாலும் பரவாயில்லை. அவர் என்னுடன் இருக்கட்டும்!' என்று சொல்லும் இதயம். அவள் இதயம் சொல்வதன்படியே நடக்கிறாள்.

6. 'மரியா' 'ரபூனி'

வரி வரியாகப் பேசியபோது, இயேசுவைக் கண்டறிய முடியாத மரியாள், 'மரியா' என்ற ஒற்றைச் சொல்லை இயேசு உதிர்த்தவுடன், அவரை அடையாளம் கண்டுகொள்கிறாள். மற்றவர்கள் அவரை வேறு பெயர் கொண்டு அழைத்தார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை மற்றவர்கள் அவளுடைய தொழிலை வைத்து, பின்புலத்தை வைத்துப் பட்டப் பெயர்கள் சொல்லி அழைத்திருக்கலாம். அவளுடைய பெயர் என்ற அடையாளத்தை அவளுக்குக் கொடுக்கின்றார் இயேசு. மரியாளும் உடனடியாக, 'ரபூனி!' என்கிறார். 'ரபி' என்ற வார்த்தையை 'ரபூனி' என அழைக்கிறாள். 'போதகர்' என்ற வார்த்தையை, 'போதகர் செல்லம்!' 'போதகர்மா!' 'போதுகுட்டி!' என அழைக்கிறாள். அங்கே அருகிலிருந்த வானதூதர்களும் இப்போது அவளுக்கு மறந்து போயிற்று. இயேசு மட்டுமே தெரிகிறார் அவள் கண்களுக்கு. மூளையிலிருந்து வாழ்பவர்கள் சுற்றுமுற்றும் பார்ப்பார்கள். இதயத்திலிருந்து வாழ்பவர்கள் நேருக்கு நேர் மட்டுமே பார்க்கின்றனர்.

நிற்க.

இன்று நாம் எந்த வாழ்க்கை நிலையில் இருந்தாலும் - அருள்நிலை, பொதுநிலை, திருமணம் முடித்தவர்கள், மணத்துறவு ஏற்றவர்கள் - சில ஆண்டுகள் நாம் மூளையிலிருந்து வாழ்கிறோம். நம்மை நாமே அடுத்தவர்களுக்கு நிரூபிக்க விரும்பிறோம். அடுத்தவர்களோடு போட்டி போடுகிறோம். ஒப்பீடு செய்து பொறாமை கொள்கிறோம். ஆனால், மூளையிலிருந்து வாழத் தொடங்கும்போது, நாம் ஒப்பீடுகளையும், பொறாமையையும், நிரூபித்தல்களையும் கடக்கின்றோம்.

மூளையை அணைத்துவிட்டு, இதயத்தைத் தட்டி எழுப்பினால் அது செயலாற்றும்.

இதயம் விழித்திருப்பவர்கள் இனியவரை இரவிலும் கண்டுகொள்வர், இன்றைய முதல் வாசகம் (காண். இபா 3:1-4) சொல்வதுபோல.


Monday, July 20, 2020

அவருடன் பேச வேண்டும்

இன்றைய (21 ஜூலை 2020) நற்செய்தி (மத் 12:46-50)

அவருடன் பேச வேண்டும்

'இயேசு மக்கள் கூட்டத்தோடு பேசிக்கொண்டிருந்த போது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தனர்.'

அவருடன் பேச வேண்டும் என்றா?

அவருடன் அவர்கள் பேசியது இங்கே பதிவுசெய்யப்படவில்லை.

அவர்கள் பேச வேண்டியது என்ன? பேச நினைத்தது என்ன?

'நீ வீட்டிற்கு வா!' என இயேசுவை அழைக்கவா?

'கொஞ்சம் கவனமாய் இரு!' என அவரை எச்சரிக்கவா?

'நீ நல்லா சொல்ற! செய்ற! தொடர்ந்து செய்!' என அவரை வாழ்த்தவா?

'உன் அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லை!' என தகவல் சொல்லவா?

'உனக்கு மதிமயங்கிவிட்டது எனக் கேள்வியுற்றோம்!' என்னும் தகவலை உறுதிப்படுத்தவா?

'உன்னோடு நாங்களும் வரட்டுமா?' என அனுமதி கேட்கவா?

'உன் துணிகளைத் துவைத்துக் கொடுக்கவா?'  'உன் காலணிகளைத் தைத்துக் கொடுக்கவா?' என்று அவர்மேல் அக்கறை காட்டவா?

'இதோ! உனக்குப் பிடித்த உணவு. இதைச் சாப்பிடுவாயா?' என்று அவரின் விருப்பம் நிறைவேற்றவா?

'உனக்கு வயதாகிக் கொண்டே போகிறது. பெண் பார்க்கட்டுமா?' என திருமணம் பற்றிப் பேசவா?

பாவம்!

அவர்கள் பேச வேண்டும் என வந்தார்கள்.

அவர்களைப் பேச விடாமல், இறுதிவரை அவரே பேசிவிட்டார்.

'என் தந்தையின் திருவுளம் நிறைவேற்றுபவர்களே என் சகோதரரும், சகோதரியும், தாயும் என்கிறார்.'

அவர்களைப் பேச விடாமல் செய்ய, அவர் இப்படிப் பேசினாரா?

அல்லது, அவர் இதைப் பேசி முடித்தபின், அவர்களிடம் அவர் பேசினாரா?

தெரியவில்லை.

பல நேரங்களில், நாம் பேச வேண்டும் எனக் கடவுளிடம் செல்ல,

அவரே, முன்னும் பின்னும் முரணானதை, நமக்குப் புரியாததைப் பேசி, அவரே நம்மை அனுப்பிவிடுகிறார்.

'நாம் பேச வேண்டும்' என நினைத்து, நமக்குள் நாமே வைத்துக்கொண்ட வார்த்தைகள் ஏராளம்!

அனைத்தையும் தன் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்த மரியாள், தான் பேச வந்ததையும் மனத்தில் வைத்துக்கொண்டே தன் இல்லம் சென்றிருப்பார்.


Sunday, July 19, 2020

நல்லது எது

இன்றைய (20 ஜூலை 2020) முதல் வாசகம் (மீக் 6:1-4,6-8)

நல்லது எது

மீக்காவின் காலத்து மக்கள் கடவுளுக்கு எதிராக வழிதவறி நடக்கிறார்கள், சிலைவழிபாடு செய்கிறார்கள், குழந்தைகளையும் பலி கொடுக்கின்றனர். இவர்களுக்கு எதிராக மீக்கா இறைவாக்குரைத்த போது, ''நல்லது எது?' என்று எங்களுக்குத் தெரியாது. ஆகவே, எங்களுடைய அறியாமையால் நாங்கள் இப்படிச் செய்கிறோம்' என்கின்றனர். அவர்களின் கேள்விக்கு, அவரே ஒரு கேள்வி வழியாக விடையளிக்கின்றார்:

'ஓ மானிடா! நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?'

மூன்று விடயங்கள் மட்டும் போதும் என்றும், அந்த மூன்று விடயங்களில் நல்லது அனைத்தும் அடங்கியுள்ளது என்றும் சொல்கிறார் மீக்கா:

அ. நேர்மையைக் கடைப்பிடித்தல் (Act Justly)

ஆ. இரக்கம் கொள்வதில் நாட்டமாயிருத்தல் (Love Tenderly)

இ. கடவுள்முன் தாழ்ச்சியோடு நடத்தல் (Walk Humbly With/Before the Lord)

பழைய தமிழ் மொழிபெயர்ப்பில், 'நீதியோடு நடத்தல், அன்பு கூர்தல், உன் கடவுள் முன்னிலையில் தாழ்ச்சியோடிருத்தல்' என்று சொல்லப்பட்டுள்ளது.

மேற்காணும் மூன்றும், இறைவனை நோக்கிச் செல்லும் படிக்கட்டுக்களாக உள்ளன.

முதலில், எனக்கும் எனக்குமான உறவுநிலையில், வாழ்க்கை முறையில், நான் 'நேர்மையை' கடைப்பிடிக்க வேண்டும். 'நேர்மை' என்பது 'நேர்கோடு.' இப்படியும் அப்படியும் இருப்பதும், வளைந்து வளைந்து செல்வதும் நேர்மை அல்ல. ஒரு சூழலில் நான் இருந்தால், அங்கே நான் எப்படி நடத்துப்படுவதை விரும்புவேன் என்று நினைத்து, அதையே நான் மற்றவருக்கான அளவுகோலாக நிர்ணயிப்பதுதான் நேர்மை. 

இரண்டு, எனக்கும் பிறருக்குமான உறவுநிலையில், வாழ்க்கை முறையில், நான் 'இரக்கம் காட்டுவதற்கு விருப்பம் கொள்ள வேண்டும்.' அன்பு அல்ல, மாறாக, அன்பிரக்கமே கடவுளின் செய்தியாக இங்கே தரப்பட்டுள்ளது. அன்பு செய்வதற்கான தொடக்கநிலையே இரக்கம். இரக்கம் இல்லாத ஒருவர், மற்றவர்மேல் அன்பு செலுத்த இயலாது.

மூன்று, எனக்கும் இறைவனுக்குமான உறவுநிலையில், வாழ்க்கை முறையில், நான் 'தாழ்ச்சி கொண்டு இறைவன்முன் நடக்க வேண்டும்.' 'இறைவனோடு நடத்தல்' என்றும் இச்சொல்லாடலை மொழிபெயர்க்கலாம். தாழ்ச்சி உடையவர் மட்டுமே இறைவனோடு நடக்க முடியும். ஏனெனில், இறுமாப்பும், பெருமையும், ஆணவமும் கொண்டிருக்கும் உள்ளம் தன்னை முதன்மைப்படுத்தி, இறைவனைத் தள்ளிவிடும். படைப்பு நிகழ்வில், தாழ்ச்சி உள்ளவரை ஆதாம் கடவுளோடு உலாவ முடிந்தது. ஆனால், ஆண்டவருக்கு எதிராக தங்களுடைய ஆணவத்தால் பாவம் செய்த அந்த நொடியிலிருந்து அவர் ஆண்டவர் திருமுன் நிற்க முடியாமல் மறைந்துகொள்கின்றார்.

மேற்காணும், மூன்று விடயங்களை, அருள்பணியாளர்கள் மற்றும் துறவியரின் மூன்று வார்த்தைப்பாடுகள் என்றும் புரிந்துகொள்ளலாம். நேர்மையாக நடத்தல் என்பது அனைத்தையும் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் எளிமை அல்லது ஏழ்மைiயும், அன்பிரக்கம் காட்டுதல் என்பது அனைவரையும் அன்பு செய்யத் தூண்டும் கற்பு அல்லது கன்னிமையையும், தாழ்ச்சி கொண்டு இறைவன்முன் நடத்தல் என்பது கீழ்ப்படிதலையும் குறிக்கிறது.

பத்துக் கட்டளைகளை நாம் நினைவில்கொள்ளவோ, வழிபாடுகள் பற்றிய முறைமைகளை அறிந்திருக்கவோ, விவிலியம் முழுவதும் அறிந்திருக்கவோ, திருஅவைச் சட்டம் பற்றித் தெரிந்திருக்கவோ நமக்கு அவசியமில்லை.

ஏனெனில், நல்லது எது என்பதை மிக எளிமையாக, மீக்கா வழியாகச் சொல்லிவிட்டார் ஆண்டவராகிய கடவுள்.


Saturday, July 18, 2020

இரு விதைகளும் வினைகளும்

ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு

I. சாலமோனின் ஞானம் 12:13,16-19
II. உரோமையர் 8:26-27
III. மத்தேயு 13:24-43

இரு விதைகளும் வினைகளும்

நாம் கடந்த ஞாயிறன்று வாசித்த 'ஆறுவகை நிலங்களின்' தொடர்ச்சியாக இருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த நற்செய்தி வாசகம் மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது. இதன் பின்புலம் இதுதான்: மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில், இருவகையான மனிதர்கள் இருக்கின்றார்கள்: நேர்மையாளர்கள், பொல்லாதவர்கள். பொல்லாதவர்களைத் தங்கள் குழுமத்திலிருந்து வெளியேற்றுவதா? அல்லது அவர்களை அப்படியே வைத்துக்கொள்வதா? வெளியேற்றுவது என்றால் எப்போது வெளியேற்றுவது? வைத்துக்கொள்வது என்றால் எதுவரை வைத்துக்கொள்வது? அவர்களை என்ன செய்வது? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக அமைகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

வயலில் தோன்றிய களைகள் உவமை.

வழக்கமாக, மத்தேயு நற்செய்தியாளரின் உவமைப் பொழிவில் சொல்லப்பட்டுள்ள உவமைகள் இறையாட்சி பற்றிய உவமைகளாக மட்டுமே இருக்கின்றன. ஆனால், இந்த உவமை இரண்டு காரணங்களுக்காகச் சொல்லப்படுகிறது: ஒன்று, இறையாட்சி அல்லது விண்ணரசு என்றால் என்ப என்பதை அறிய. இரண்டு, இறுதி நாள் நிகழ்வுகளைப் பற்றியது அல்லது இறுதித் தீர்ப்பின் போது நடப்பது பற்றியது.

இன்றைய உவமையில், எல்லாம் இரட்டைப் படையில் இருக்கின்றன:

1. விதைகள் இருவகை: கோதுமை, களை

2. விதைப்பவர்கள் இருவகை: நிலக்கிழார், பகைவன்

3. எதிர்வினைகள் இருவகை: அனைத்தையும் வளர விடுவது, களைகளைப் பறிப்பது

4. விளைவுகள் இருவகை: கோதுமை களஞ்சியத்தில் சேர்க்கப்படுகிறது, களைகள் நெருப்பில் எரிக்கப்படுகின்றன

5. உணர்வுகள் இருவகை: நிலக்கிழாரின் பொறுமை, வேலையாள்களின் அவசரம்

6. மனிதர்கள் இருவகை: நேர்மையாளர், நெறிகெட்டோர்

7. வாழ்வியல்நிலை இருவகை: கடவுளின் பொறுமை, மனித அவசரம்

'கடவுளின் பொறுமை, மனித அவசரம்' என்னும் இறுதி இணையை மையமாக வைத்து, இன்றைய நாள் வாசகங்களைப் புரிந்துகொள்வோம்.

'பொறுமை'

முதலில், ரத்தக் கண்ணீர் திரைப்படத்தில், காந்தா, தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் மோகனிடம், 'எனக்கு வைர நெக்லஸ் எப்போது வாங்கித் தருவீர்கள்?' என்று கேட்கிறார். அதற்கு மோகன், 'கொஞ்சம் பொறுமையாக இரு! மார்க்கெட் நிலவரம் சரியில்லை! கையில் உள்ள காசும் வேகமாகக் காலியாகிறது! அம்மாவுக்கும் உடல்நிலை சரியில்லை!' என்று பதில் சொல்வார். உடனே காந்தா, 'மோகன்! பொறுமையா? வறுமையில் இருப்பவர்கள் அல்லவா பொறுமையைப் பற்றிப் பேச வேண்டும்!' எனச் சொல்லித் துள்ளி எழுவார்.

இங்கே சொல்லப்படும் பொறுமையின் பொருள் காத்திருத்தல்.

இரண்டாவதாக, உளவியலில் பொறுமை என்பது, 'தூண்டுதலுக்கும்' (...) 'எதிர்வினைக்கும்' (...) இடைப்பட்ட தொலைவு. எடுத்துக்காட்டாக, நான் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, ஒரு மாணவர் இன்னொருவரிடம் பேசிக்கொண்டே இருக்கின்றார். அவர் செய்யும் தொந்தரவு எனக்கு ஒரு 'தூண்டுதல்.' 'தம்பிகளா! எழுந்து வெளியே போங்க!' என்று அவர்களைப் பார்த்துச் சொல்வது என் 'எதிர்வினை.' ஆனால், நான் எந்த எதிர்வினையை உடனே ஆற்றாமல், இன்னும் கொஞ்ச நேரத்திற்குத் தள்ளிப் போடுகிறேன். எவ்வளவு தூரம் என்னால் தள்ளிப் போட முடிகிறதோ அவ்வளவு நேரம் நான் பொறுமையாக இருக்கிறேன். மேலும், என்னுடைய பொறுமையின் அளவு கூடக் கூட என்னுடைய உணர்வு முதிர்ச்சி கூடுகிறது.

இங்கே சொல்லப்படும் பொறுமையில் காத்திருத்தல் இருக்கிறது. அத்தோடு, இந்தப் பொறுமையில் என்னுள்ளும் மாற்றம் நிகழ்கிறது. என் மாணவர்களிலும் மாற்றம் நிகழ்கிறது. ஏனெனில், அவர்கள் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டு வகுப்பைக் கவனிக்கத் தொடங்குகின்றனர்.

மூன்றாவதாக, காலம் அனைத்துக் காயங்களையும் ஆற்றும் என்பது பழமொழி. இந்தப் பழமொழியிலும் பொறுமையே பின்புலத்தில் இருக்கிறது. வெறும் காலம் மற்றும் காயங்களை ஆற்றுவதில்லை. மாறாக, காயம் பட்டவர் தன்னுடைய பொறுமையால் தன் காயத்தை எதிர்கொள்கின்றார். நாள்கள் ஆக, ஆக, அனுபவங்களும் நிகழ்வுகளும் மாற, மாற காயம் காலத்தில் கரைந்துவிடுகிறது. இங்கே காயம் பட்டவர் ஒரு பக்கம் ஓய்ந்திருந்தாலும், அவருடைய உள்ளத்தில் அவர் தன்னையே குணமாக்கிக் கொள்கிறார்.

வயலில் களைகளைக் கண்ட பணியாளர்களுக்குக் கோபம் வருகிறது.

தங்கள் தலைவரிடம் 'வெரிகுட்' வாங்குவதற்காக, அவரிடம் ஓடி, 'வயலில் களைகள் காணப்படுவது எப்படி? நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா?' எனக் கேட்கின்றனர். இதைக்கேட்ட தலைவர் தனக்குள்ளே சிரித்திருப்பார். 'ஏன்டா! சோம்பேறிகளா! நான் சொல்ற வேலையவே பாதி பாதிதான் செய்வீர்கள்! இப்ப என்ன ஓவர் பில்ட் அப்!' எனத் தன் மனத்திற்குள் கேட்டிருப்பார். பணியாளர்களின் ஆர்வக் கோளாறைக் கண்டுபிடித்த அவர், 'வேண்டாம்! இவ்வளவு ஆர்வத்திலும் அவசரத்திலும் நீங்கள் கோதுமையையும் பறித்துவிடுவீர்கள்!'

இத்தலைவர் வெறும் விவசாயி மட்டுமல்ல. மாறாக, மேலாண்மையியலில் சிறந்தவரும் கூட.

அதாவது, வயலின் ஒரு பாத்தியில் 50 கோதுமைச் செடிகள், 50 களைகள் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். முளைத்து வருகின்ற பருவத்தில் கோதுமைச் செடிகளும், களைகளும் ஒன்றுபோலத் தெரியும். 40 களைகளோடு சேர்த்து 10 கோதுமைச் செடிகளையும் பறித்துவிட்டால் தலைவருக்கு 10 செடிகள் நஷ்டம். ஆனால், வேலைக்காரர்கள், ரொம்ப எளிதாக, 'ஸாரி!' சொல்லி ஒதுங்கிவிடுவார்கள். இவர்களுக்கு அது வெறும் 'ஸாரி!' தான். தலைவருக்கோ அது அவருடைய சொத்து. வேகமாக மனக்கணக்கு போடுகிற அவர், தன்னுடைய எந்தக் கோதுமையையும் இழக்கத் தயாராக இல்லை.

இந்த இடத்தில் நாம் மற்றொரு மேலாண்மையியல் பாடத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, தலைவனைவிட ஊழியக்காரன் பரபரப்பாக இருக்கக் கூடாது. தலைவனே தூங்கப் போய்விட்டான். ஊழியக்காரன் ஏன் புலம்பிக் கொண்டிருக்க வேண்டும்? இவன் புலம்புவதால் களை வளராமல் போய்விடுமா? அல்லது இவன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா உழைத்தால் தலைவன் அள்ளிக் கொடுப்பானா? இல்லை! அப்புறம் ஏன் இந்த ஆரவாரம்! தலைவனுக்கு எல்லாம் தெரியும். அமைதியாகத் தூங்கச் செல்வதே பணியாளனுக்கு அழகு.

தலைவன் இங்கே பொறுமை காப்பதால் சில பிரச்சினைகளும் எழுகின்றன:

அ. களைகள், கோதுமைக்குத் தேவையான நிலத்தின் ஊட்டத்தை எடுத்துக்கொள்கின்றன.

ஆ. களைகள், கோதுமைக்குப் பாய்ச்சப்படும் நீரைப் பறித்துக்கொள்கின்றன.

இ. களைகள், பல பூச்சிகள் மற்றும் புழுக்களைத் தங்கள்பால் ஈர்ப்பதால், அவற்றாலும் கோதுமைப் பயிருக்கு தீங்கு நேர்கின்றது.

ஈ. களைகள் மண்டிக் கிடக்கும்போது அது வயலின் அழகைக் கெடுக்கிறது.

ஆனாலும், தலைவர் அமைதி காக்கிறார்?

ஏன்?

ஒரு கோதுமைப் பயிர்கூட அழிந்துவிடக் கூடாது என்பதற்காக, மேற்காணும் அனைத்துப் பிரச்சினைகளையும் தாங்கிக்கொள்கின்றார்.

இதுதான் கடவுளின் பொறுமை.

ஆக, கடவுள் காத்திருக்கின்றார்.

ஆனால், என்னுடைய பொறுமையான நேரத்தில் என் மாணவர்களின் இயல்பு மாறுவதுபோல, களைகளின் இயல்பு மாறுவதில்லை. களை எப்போதும் களைதான். பாதி தூரம் களையாக வந்தபின் அது கோதுமையாக மாற முடியாது. களையின் இயல்பு தன்னுடைய காத்திருத்தலால் மாறாது என்று தெரிந்தாலும் கடவுள் காத்திருக்கின்றார்.

கடவுளின் பொறுமை எதிரியின் செயலை இறுதியில் அழிக்கின்றது. களைகளின் இருப்பு கோதுமைப் பயிர்களுக்கு நெருடலாக இருந்தாலும், இறுதியில் களைகள் பறித்து எரிக்கப்படும்வரை அவை காத்திருக்க வேண்டும். களைகளின் இருப்பைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். தங்களுடைய வாழ்வாதரமான தண்ணீரும், உரமும், ஊட்டமும் அநீதியாகப் பகிரப்படுவதை அல்லது பறித்துக்கொள்ளப்படுவதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

கடவுளின் பொறுமை பல நேரங்களில் நம் அவசரத்தோடு பொருந்துவதில்லை.

நம்பிக்கையின் பிதாமகன் என அழைக்கப்படுகின்ற ஆபிரகாமே, தனக்குக் கடவுள் தந்த வாக்குறுதி நிறைவேறும் என்ற பொறுமை இல்லாமல், தனக்கான வாரிசாக, தன்னுடைய அடிமையின் மகன் எலியேசரை, உரிமைப் பிள்ளையாக தத்தெடுக்க முனைகின்றார்.

மீட்பின் நாயகன் என அழைக்கப்படுகின்ற மோசே, 'பாறைக்குக் கட்டளையிடு!' என்று கடவுள் சொன்னதை மறந்து, 'பாறையை இருமுறை அடித்து!' தன்னுடைய அவசரத்தால், வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றார்.

இஸ்ரயேலின் முதல் அரசராகிய சவுல், ஆண்டவருக்குப் பலி செலுத்தி, அவரிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என அவசரப்பட்டு, அமலேக்கியரின் கால்நடைகளை அழிக்காமல், அவற்றை ஆண்டவருக்கென ஒதுக்கி வைத்ததால் அரச நிலையை இழக்கின்றார்.

ஒருங்கிணைந்த இஸ்ரயேலின் அரசராகிய தாவீது, 'ஆண்டவரிடம் கேட்டால் அவர் எனக்கு மனைவியரைத் தருவார்' என்று அறிந்திருந்தாலும், அவசரப்பட்டு பெத்சேபாவைத் தழுவிக்கொள்கின்றார். அவளுடைய கணவனைக் கொல்கின்றார். விளைவு, வாள் அவருடைய தலைக்குமேல் இறுதிவரை தொங்கிக்கொண்டே இருந்தது.

மனித அவசரங்கள் பல நேரங்களில் கோதுமைப் பயிர்களை அழிப்பதோடு, நிலத்தையும் பாழ்படுத்திவிடுகின்றன.

இந்தக் கொரோனா காலத்தில், கோதுமைப் பயிர்களாகிய நாம், களை என்னும் அந்த தீநுண்மியோடு வாழப் பழகிக்கொண்டோம். அவை நம்மை நெருக்கிக் கொண்டே இருந்தாலும், நம் அன்பு உறவுகளை நம்மைவிட்டுத் தூரமாக்கினாலும், நம்மைவிட்டு எடுத்துக்கொண்டாலும், 'எல்லாம் சரியாகிவிடும்!' என்று பொறுமையுடன் காத்துக்கொண்டேதான் இருக்கின்றோம்.

ஆனால், இந்தப் பொறுமை நம் இயலாமையால் வந்த பொறுமை.

இது மட்டும் நமக்குப் போதாது! ஏனெனில், இயலாமையில் வருவது பொறுமை அல்ல, மாறாக, கையறுநிலை.

கடவுளின் பொறுமையை நாம் எப்படி பெறுவது?

1. நம்பிக்கை பார்வை கொண்டிருப்பதால்.

2. தீமையின் இருப்பை ஏற்றுக்கொள்வதால்.

3. தீமை என்னுடைய நன்மையை எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்ற பரந்த மனம் கொள்வதால்.

4. வாழ்வின்மேல் உரிமை கொண்டாடுவதால்.

5. நன்மைத்தனத்தில் வளர்வதால்.

6. 'இதுவும் கடந்து போகும்!' என எண்ணுவதால்.

இறுதியாக, நாம் களைகளின் நடுவில் சிக்கிக்கொண்ட கோதுமைப் பயிர்களாக, ஆண்டவரை நோக்கி பெருமூச்சு எழுப்பினாலும் (காண். இரண்டாம் வாசகம்), அவர், பல நேரங்களில், 'பொறு!' என்கிறார். ஏனெனில், அவர் 'பொறுமையும், பேரன்பும் கொண்டவர்' (காண். முதல் வாசகம், பதிலுரைப் பாடல், திபா 86).

Friday, July 17, 2020

இறுதிவரை நன்மை

இன்றைய (18 ஜூலை 2020) நற்செய்தி (மத் 12:14-21)

இறுதிவரை நன்மை

இயேசுவின்மேல் பகைமை பாராட்டுகின்ற பரிசேயர்கள் அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றனர். அதை அறிந்த இயேசு அங்கிருந்து புறப்பட்டுச் செல்கின்றார். செல்லும் வழியில் பலர் அவரைப் பின்தொடர்கின்றனர். அவர்களுடைய நோய்களை எல்லாம் குணமாக்குகின்றார்.

தன் எதிரியின் சூழ்ச்சியும்,

தன்னைப் பின்தொடர்பவர்களின் அன்பும்

இயேசுவின் இயல்பை மாற்ற இயலவில்லை.

எதிர்ப்பு வந்தாலும், பாராட்டு வந்தாலும் தன்னுடைய இயல்பை மாற்றிக்கொள்ளவில்லை இயேசு.

இன்று, ஒரு நாளைக்கு எத்தனை முறை நான் என்னுடைய இயல்பை மாற்றிக் கொண்டே இருக்கிறேன்?

எனக்குப் பிடித்தவர்கள் முன் ஒரு மாதிரியும்,

எனக்குப் பிடிக்காதவர்கள் முன் வேறு மாதிரியும்,

தெரிந்தவர்கள் முன் ஒரு மாதிரியும்,

தெரியாதவர்கள் முன் வேறு மாதிரியும்,

என் அறைக்கு வெளியே ஒரு மாதிரியும்,

என் அறைக்கு உள்ளே வேறு மாதிரியும்

என என் இயல்புகள் மாறிக்கொண்டே இருக்கக் காரணம் என்ன?

எனக்கு வெளியில் இருப்பவர்களும், இருப்பவைகளும் என்னைத் தம் பிடிக்குள் வைத்திருக்குமாறு நான் அனுமதிக்கும்போதெல்லாம், நான் இயல்பை மாற்றிக்கொண்டிருக்கிறேன்.

ஆனால், என்னையே நான் வெற்றிகொண்டால், என் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் என் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், என் இயல்பு மாறாமல் இருக்கும்.

மாறாத தன் இயல்பில், வலுவற்றோர் பக்கம் துணைநிற்கிறார் இயேசு.

வலுவற்ற நாணலை அவர் முறிக்கவில்லை.

துயருற்ற திரியை அவர் அணைக்கவில்லை.

ஏனெனில், அவை தன் இயல்பைக் காத்துக்கொள்ள நினைக்கின்றன என்பது அவருக்குத் தெரியும்.

தன் இயல்பை மாற்றிக்கொள்ளாத ஒருவர், அடுத்தவர் தன்னுடைய இயல்பில் இருப்பதையே விரும்புவார்.

Thursday, July 16, 2020

அத்திப் பழ அடை

இன்றைய (17 ஜூலை 2020) முதல் வாசகம் (எசா 38)

அத்திப் பழ அடை

நோய்வாய்ப்படுதல் ஒரு கொடுமையான அனுபவம். மூன்று விடயங்களுக்காக இது ஒரு கொடுமையான அனுபவம்:

அ. நோய் தருகின்ற வருத்தம் அல்லது துன்பம். நாம் எவ்வளவுதான் மாத்திரை, மருந்துகள் எடுத்தாலும், நம்முடைய இருத்தல் மற்றும் இயக்கத்தில் ஒருவகையான அசௌகரியத்தை நோய் ஏற்படுத்துகிறது.

ஆ. நோய் உருவாக்கும் சார்புநிலை. மற்றவர்களைச் சார்ந்து வாழும் நிலைக்கு நோய் நம்மைத் தள்ளிவிடுகிறது. மருத்துவர், செவிலியர், உணவு தருபவர், அருகே அமர்ந்து பணிவிடை செய்பவர் என எல்லாரும் நம்மைச் சூழ்ந்து நிற்பது நமக்கு நல்லது எனத் தெரிந்தாலும், அவர்களைச் சார்ந்திருக்க நம்முடைய தான்மை நம்மை அனுமதிப்பதில்லை.

இ. நோயின்போது கிடைக்கும் ஓய்வின் விளைவு. ஓய்வு உடலுக்கு நலம் தந்தாலும், உள்ளத்தை அமைதிப்படுத்தினாலும், அந்த ஓய்வின்போது, நம் வாழ்வில் நிறைய எண்ணங்கள் ஓடும். நாம் செய்த தவறுகள் நம் மனத்திற்கு வரும். நம் தவறுகளுக்காக நாம் தண்டிக்கப்பட்டுவிட்டோமா என்ற குற்றவுணர்வு வரும். கடவுள் இருக்கிறாரா என்ற எண்ணம் வரும்.

மேற்காணும் ஒரு கொடுமையான அனுபவத்தை இன்றைய முதல் வாசகத்தில் எதிர்கொள்கிறார் எசேக்கியா. 'எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்' என வாசகம் சொல்கிறது. ஆனால், எந்த வகை நோய் என்று இங்கே குறிப்பிடப்படவில்லை. ஆனால், இங்கே பயன்படுத்துகின்ற மருத்துவ முறையை வைத்துப் பார்க்கும் போது, போர்க்களத்தில் பட்ட காயம், அல்லது தன்னுடைய வயது மூப்பால் பெற்ற புண் அல்லது காயத்தால் அவர் கஷ்டப்பட்டார் என்பதை நாம் உணர முடிகிறது. ஏனெனில், எசாயா, 'ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டுவந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்' எனக் கூறுகின்றார். காய வைக்கப்பட்ட அத்திப்பழ அடை, புண்களின் எரிச்சல், அரிப்பு, மற்றும் நீர்கோர்த்தலைக் குணமாக்க வல்லது என்பது அன்றைய எகிப்திய மருத்துவம்.

ஆனால், கொஞ்ச நாள்களுக்கு முன் இதே எசாயா, எசேக்கியா அரசனிடம், 'நீர் உம் வீட்டை ஒழுங்குபடுத்தும். ஏனெனில், நீர் சாகப் போகிறீர், பிழைக்க மாட்டீர்!' என்கிறார். 'உம் வீட்டை ஒழுங்குபடுத்தும்' என்று கடவுள் வெகு சிலருக்கே வாய்ப்பு கொடுக்கிறார். எனவே, வீட்டை நாம் எப்போதும் ஒழுங்குபடுத்தி வைத்தல் அவசியம். ஒழுங்குபடுத்துதல் என்பது, இங்கே, அரச காரியங்களை ஒழுங்குபடுத்துவதையும், கருவூலம் மற்றும் படை இரகசியங்களை மற்றவர்களுக்குச் சொல்வதையும் குறிக்கிறது.

எசேக்கியா உடனடியாக ஆண்டவரிம் மன்றாடுகின்றார். ஆண்டவர் அவருடைய செபத்தைக் கேட்கின்றார். 'உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன். உனக்கு நலம் தந்தேன்' என விடை தருகின்றார். மேலும் பதினைந்து ஆண்டுகள் அவருக்கு அளிக்கின்றார். இதன் அடையாளமாக, 'சாயும் கதிரவனின் நிழல் கதிரவக் கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிடச் செய்கின்றார்.'

எசாயாவின் பின்வரும் பாடலே அருள்பணியாளர்களின் கட்டளை செபத்தில், இரண்டாம் வாரம் செவ்வாய்க் கிழமை காலைச் செபமாக வருகிறது:

'என் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டுமே!
... ...
என் உறைவிடம் மேய்ப்பனின் கூடாரத்தைப் போல பெயர்க்கப்பட்டு என்னைவிட்டு அகற்றப்படுகிறது.
நெசவாளன் பாவைச் சுருட்டுவதுபோல என் வாழ்வை முடிக்கிறேன்.
தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்.
காலை தொடங்கி இரவுக்குள் எனக்கு முடிவு கட்டுவீர்.
... ...
என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்.
எனக்கு உடல்நலம் நல்கி நான் உயிர்பிழைக்கச் செய்வீர்.
இதோ, என் கசப்புமிகு அனுபவத்தை நலமாக மாற்றினீர்!'

நம் வாழ்நாளின் குறுகிய நிலையை நாம் எண்ணிப்பார்க்க, நம் நோயும் இயலாமையும் நமக்கு வாய்ப்பளிக்கிறது.

எசேக்கியா தன் நோயின் காலத்தில், தன்னைப் பார்க்காமல், இறைவனைப் பார்த்தார்.

இறைவன் அவருடைய கண்ணீரைக் கண்டார், மன்றாட்டைக் கேட்டார்.

நம் கண்ணீரைக் காண்பவரும், நம் மன்றாட்டைக் கேட்பவரும் அவரே!

'ஏனெனில், அவரே நம்மைக் காண்கின்ற இறைவன்!' (காண். தொநூ 16:13)

Wednesday, July 15, 2020

காற்றைப் பெற்றெடுத்தல்

இன்றைய (16 ஜூலை 2020) முதல் வாசகம் (எசா 26)

காற்றைப் பெற்றெடுத்தல்

வாழ்க்கை சில நேரங்களில், வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் சில நேரங்களில் நண்டு சாப்பிடுவதுபோல ஆகிவிடும். அது என்ன நண்டு சாப்பிடுவது? நண்டு சாப்பிடுவதில், நம் முயற்சிக்கேற்ற பலன் கிடைப்பதில்லை. நாம் அதை நம் சட்டையில் பட்டுவிடாமல் மெதுவாக அழுத்தி உடைத்தாலும், அல்லது முள்கரண்டி அல்லது கத்தியை வைத்து குத்தி இழுத்தாலும், அதன் கால்களை, மெதுவாக, கால்களுக்கும் வலிக்காமல், நம் நாக்கையும் குத்திவிடாமல் இழுத்தாலும், எஞ்சுவது என்னவோ விரல்களுக்கு இடையே சிக்கும் சில சதைப் பகுதிதான். நாம் அதற்குக் கொடுக்கும் நேரம், ஆற்றல், முயற்சிக்கு ஏற்ற 'அவுட்புட்' கிடைப்பதில்லை.

நாடுகடத்தப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்கள், தாங்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கான முயற்சி அனைத்தும் 'நண்டு சாப்பிடுவதுபோல' ஆகிவிட்டது என்பதை, வேறு வார்த்தைகளில் புலம்புவதாக இறைவாக்கினர் எசாயா பதிவு செய்கின்றார்:

'பேறுகாலம் நெருங்குககையில், கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவதுபோல், ஆண்டவரே நாங்களும் உம் முன்னிலையில் நிற்கின்றோம். நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம். ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்!'

இன்று நாம் வைத்திருக்கும் ஸ்கேன் வசதிகள் அன்று கிடையாது. பெண்களின் வயிறு பெரிதாக இருந்தால், அவர் கருவுற்றிருப்பதாக எண்ணினர். பேறுகால வலி அவருக்கு வந்துவிட்டது என்று காத்திருந்து, கடைசியில் அது வயிற்றில் உள்ள 'கேஸ்' என்ற நிலை அறியப்பட்டது. இதற்கு மருத்துவத்தில், 'எம்னெயுமாடோஸிஸ் இன்டெஸ்டினினாலிஸ்' (empneumatosis intestinalis) என்பது பொருள்.

இந்த ஒரு மருத்துவ நிலையை மிக அழகாக இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கைக்குப் பொருத்துகிறார் எசாயா.

வயிறு பெரிதாக இருப்பது, வலி எடுப்பது, வலியால் துடிப்பது என அனைத்தும் உண்மை. ஆனால், குழந்தைக்குப் பதில் வயிற்றில் இருப்பது காற்று.

இஸ்ரயேல் மக்கள் இறைவனை நோக்கிக் கதறி அழுவது, தங்கள் துன்பங்களால் வருந்தி வாடுவது அனைத்தும் உண்மை. ஆனால், அவற்றால் ஒரு பயனும் இல்லை. ஏனெனில், அவர்கள் தங்கள் பழைய வாழ்வைவிட்டுத் திரும்பவில்லை.

நம் முயற்சிகள் இப்படி இருந்தால் எவ்வளவு பரிதாபத்துற்குரியவர்கள் நாம்!

ஆனால், பல நேரங்களில் நாம் தேவையற்ற துன்பங்கள் ஏற்கிறோம், வலிகளைச் சுமக்கிறோம். அவற்றால் ஒரு பயனும் இல்லை என்றாலும் அவற்றுக்காகக் துன்புறுகிறோம். நமக்கு நாமே வலிகளைக் கொடுத்து இன்புறுகிறோம்.

இப்படிப்பட்ட சூழலில் நம்மை எதிர்கொள்கின்ற இயேசு, இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 11:28-30), 'என் நுகம் அழுத்தாது, என் சுமை எளிதாயுள்ளது' என ஆறுதல் கூறுகின்றார்.

வலிக்கு ஏற்ற பலன் இருந்தால் நலம்.

வலி மட்டுமே மிஞ்சினால் வாழ்வு ஏமாற்றமே.

Tuesday, July 14, 2020

ஆண்டவரின் கருவி

இன்றைய (15 ஜூலை 2020) முதல் வாசகம் (எசாயா 10:5-7,13-16)

ஆண்டவரின் கருவி

புனித இஞ்ஞாசியார் தன்னுடைய ஆன்மீகப் பயிற்சிகள் நூலின் ஒரு பகுதியில், 'கடவுள் பயன்படுத்தும் மருத்துவர் கத்தி' ('surgeon's knife') என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். மருத்துவரின் கத்தி அடுத்தவரை வெட்டிக் காயப்படுத்தும். ஆனால், அப்படி அந்தக் கத்தி வெட்டிக் காயத்தை ஏற்படுத்தினால்தான் மற்றவர் நலம் பெறுவார். ஆக, மருத்துவரின் கத்தி தரும் வலி எப்போதுமே நலமானது. சிறிது நேர துன்பத்தை அது தந்தாலும், நீண்ட நலனை அது பின்நாளில் ஒருவருக்குத் தரும்.

இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் மருத்துவர் கத்தியாக அசீரியா நாடு இருக்கிறது. தன்னுடைய சொந்த இஸ்ரயேல் மக்களின் தவறுகளைக் கண்டிக்க, ஆண்டவராகிய கடவுள், அசீரியாவை மருத்துவர் கத்தியாகப் பயன்படுத்துகின்றார். ஆண்டவர் கொடுக்கும் மருந்து நோயைவிடக் கசப்பானதாக அவர்களுக்குத் தோன்றுகிறது.

ஆனால், அதே மருத்துவர் கத்தி, கொலை செய்யும் கத்தியாக மாறியபோது, ஆண்டவர் தன் மக்களைக் காப்பாற்ற இறங்கி வருகின்றார்.

இவ்வாறாக, 'கொல்வதும் நானே, உயிர்தருவதும் நானே' என்று தன்னை எல்லாம் வல்ல இறைவனாகக் காட்டுகின்றார்.

இதுவே மறைபொருள்.

எல்லாம் இறைவனிடமிருந்தே வருகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 11:25-27), விண்ணரசின் மறைபொருள் குழந்தைகளுக்கு (சீடர்களுக்கு) வெளிப்படுத்தப்பட்டது பற்றி மகிழ்கின்றார் இயேசு. வாழ்வில் நமக்கு நடப்பவை அனைத்திற்குமான பொருளை அறிந்திருப்பவர் இறைவனே. அவற்றை நாம் நம் அறிவால் அல்ல, அவருடைய வெளிப்பாட்டலே அறிந்துகொள்ள முடியும்.

நமக்குத் தேவையான மனநிலை என்ன?

குழந்தைகளைப் போல, நம் கைகளை விரித்து அவரிடம் நீட்டுவது.

Monday, July 13, 2020

பாதுகாப்பின்மை

இன்றைய (14 ஜூலை 2020) முதல் வாசகம் (எசாயா 7:1-9)

பாதுகாப்பின்மை

கடந்த இரு நாள்களுக்கு முன் திருச்சியில் இடியும் மின்னலும் காற்றுமாக நன்றாக மழை பெய்தது. அப்படிப் பெய்த மழையில் எங்கள் குருத்துவக் கல்லூரியிலிருந்து ஒரு பெரிய மரம் அப்படியே பெயர்ந்து, அருகிலிருந்த கட்டடிடத்தின்மேல் சாய்ந்துவிட்டது. மரமும் விழவில்லை. கட்டிடத்திற்கு எந்தச் சேதமும் ஆகவில்லை. கொஞ்சம் சாய்ந்து கட்டிடத்தைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. மிக உயரமான மரம் என்றாலும், வேர்கள் ஆழமாகச் செல்லவில்லை என்பதாலும், களிமண் தரை என்பதாலும் வேர்கள் நிலைகொள்ளவில்லை.

ஆக, வேர்கள் ஆழமாகச் சொன்றால், வேர்கள் நிலைகொண்டால் மரம் உறுதியாக நிலைத்து நிற்கும்.

நீங்கள் பைக் அல்லது கார் ஓட்டுவீர்களா? முதன்முதலாக அதை ஓட்டத் தொடங்கிய நாளில், அந்த பைக் அல்லது கார் நம் கன்ட்ரோலில் இருக்கிறதா? நிச்சயமாக இல்லை! கொஞ்சம் கொஞ்சமாக அது நம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் பைக் அல்லது கார் ஓட்டுவது நம் இயல்பாகவே மாறிவிடுகிறது.

இசைக்கருவி மீட்டுவது, பொதுவில் பேசுவது, மொழி கற்பது என எல்லாச் செயல்பாடுகளிலும், முதலில் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத ஒன்று கட்டுப்பாட்டுக்கள் வருகிறது.

அப்படி வரும்போது என்ன நடக்கிறது?

நம் பயம் மறைந்து நம்பிக்கை பிறக்கிறது.

ஆக, நாமே உருவாக்கும் ஒரு சிறிய பாதுகாப்பின்iயால் உருவாகும் பயம், கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நம்பிக்கை பிறக்கிறது.

இதை அப்படியே தலைகீழாக்கினால், நம்பிக்கை குறைந்தால், பயம் அதிகமாகி, நாம் பாதுகாப்பின்மையை உணர்கிறோம்.

நான்கு வழிச் சாலையில் காரை ஓட்டிச் செல்லும்போது, திடீரென்று கார் ஓட்டுவது மறக்கத் தொடங்கினால் என்ன ஆகும்? பயம் பற்றிக்கொள்ளும்.

இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் தங்களோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு, யூதாவின் தலைநகரான எருசலேமிலிருந்து ஆட்சி செய்துகொண்டிருக்கின்றார் ஆகாசு. இந்த நேரத்தில், சுற்றிலும் படையெடுப்பு நடக்கிறது. யூதா நாடு எகிப்திற்கும் பாபிலோனியாவுக்கும் இடையில் இருந்ததால், எந்நேரமும் போர் மேகங்கள் சூழ்ந்த வண்ணம் இருந்தன. வடக்கிலிருந்த அசீரியாவும், அதன் சார்பு நாடான இஸ்ரயேலும் எருசலேமின் மேல் படையெடுக்கின்றனர். இதைக் கண்டவுடன், ஆகாசும், மக்களும் அச்சத்தால் நடுங்குகின்றனர்.

'பெருங்காற்றினால் காட்டு மரங்கள் அலையதிர்வு கொள்வது போல, ஆகாசின் உள்ளமும் அவர் நாட்டு மக்களின் உள்ளங்களும் அலைக்கழிக்கப்பட்டன' எனப் பதிவு செய்கிறார் எசாயா.

விழுவோமோ? நிற்போமோ? சாய்ந்து நிற்போமோ? தரையிலிருந்து பெயர்ந்து விழுவோமோ? என்ற அச்சத்தில் இருக்கின்றனர் யூதா நாட்டினர்.

மேலும், அந்த நேரத்தில் ஆகாசு என்ன செய்கின்றார்?

'வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில், மேற்குளத்துக்குப் போகும் கால்வாயின் மறுமுனையில் நீ ஆகாசைக் காண்பாய்' என இறைவாக்கினர் எசாயாவுக்குச் சொல்கின்றார் ஆண்டவர்.

வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில் அரசனுக்கு என்ன வேலை?

தன்னுடைய பயத்தில், தான் செய்வதறியாது, ஒளிந்துகொள்வதற்கும், அல்லது இறைவாக்கினரைத் தேடியோ, அல்லது மாறுவேடம் தரிக்கவோ ஆகாசு அங்கே சென்றிருக்கலாம்.

ஆண்டவர் மிகவும் மேலான செய்தியைத் தருகிறார்: 'உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்கள் நிலைத்து நிற்க மாட்டீர்கள்!' அல்லது நேர்முகமாக, 'உங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்தால் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்!'

நீங்கள் நிலைக்க, நீங்கள் உங்கள் நம்பிக்கையில் நிலைத்திருங்கள்.

பயம் விலக வேண்டும் எனக் கற்பிக்கின்றார் கடவுள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இதற்கு மாறாக, கொராசின் மற்றும் பெத்சாய்தா நகரங்கள் தவறான பாதுகாப்புக்களைக் கொண்டிருக்கின்றன. இதுவும் ஆபத்து.

அதாவது, கார் ஓட்டத் தெரியாமலேயே, 'எனக்குக் கார் ஓட்டத் தெரியும்' என்று சொல்வது பெரிய ஆபத்து. தாங்கள் இயேசுவை நம்பாமலேயே, தங்கள் நம்பிக்கையால் தாங்கள் மீட்படைவோம் என்ற பொய்யான நம்பிக்கையில் இருக்கின்றனர் அந்நகரத்தினர். அவர்களைக் கடிந்துகொள்கின்றார் இயேசு.

சோதோம், மற்றும் கொமோரா நகரங்கள் பரவாயில்லை. ஏனெனில், அவை தவறான பாதுகாப்புக்களைத் தேடிச் செல்லவோ, பொய்யுரைக்கவோ இல்லை.

என் பயம் மற்றும் பாதுகாப்பின்மை மறைய நம்பிக்கை அவசியம். நம்பிக்கை வந்துவிட்டால் என் வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இருக்கும். அந்த நம்பிக்கைக்குப் பதிலாக, பொய்யான நம்பிக்கையை நான் பற்றிக்கொண்டால் ஆபத்து இன்னும் அதிகமாகும்.

மேலும், ஒரு பக்கம் பயம் வரும்போது, நாம் வண்ணான் கால்வாயை நோக்கி ஓடும்போது, கால்வாயின் அக்கரையில் நமக்காக நிற்கின்றார் கடவுள்.

Sunday, July 12, 2020

எளிதானவையும் நன்மையானவையும்

இன்றைய (13 ஜூலை 2020) நற்செய்தி (மத் 10:34-11:1)

எளிதானவையும் நன்மையானவையும்

'இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.'

இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதியை வாசித்தவுடன், அதைக் கொஞ்சம் நீட்ட வேண்டும் போல இருக்கிறது:

'இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார் ... ஆனால், அவருடைய சீடர்களும், நாமும் அங்கேயே நின்றுகொண்டு அவருடைய அறிவுரைகளை மட்டும் பிடித்துக் கொண்டு நிற்கிறோம்!'

இன்றைய நற்செய்தி வாசகமும், முதல் வாசகமும் (காண். எசா 1:11-17), எளிமையானதற்கும், நன்மையானதற்கும் உள்ள இடைவெளி பற்றிப் பேசுகின்றன.

இதை எப்படி உருவகிப்பது?

உயரம் தாண்டுதல் (Pole Vault) போட்டியைப் பார்த்திருப்போம். அல்லது சிறுவயதில் நாமே அந்த விளையாட்டை விளையாடியிருப்போம். உயரம் தாண்டுபவருக்கென்று ஒரு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, அந்த இலக்கில் ஒரு குச்சி பொருத்தப்படும். உயரம் தாண்டுபவர் தன்னுடைய கையில் இருக்கும் கம்பை நிலத்தில் ஊன்றி, அந்த உந்துவிசையால் மேலே எழும்பி, அந்தக் குச்சிக்கு அருகில் சென்றவுடன், தன் கம்பைத் தான் வந்த பக்கம் உதற வேண்டும். உதறிய அதே வேகத்தில் அவர் குச்சிக்கு அந்தப் பக்கம் செல்ல வேண்டும். இச்செயல்களில் ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும் - கம்பைச் சில நொடிகள் கூட அல்லது குறையப் பிடித்திருந்தாலோ, அல்லது வந்த திசை பார்த்து உதறவில்லை என்றாலோ, குச்சியின் அடுத்த திசைக்கு ஏறிச் செல்லவில்லை என்றாலோ - அவரால் உயரம் தாண்ட முடியாது. அல்லது போட்டியில் வெல்ல முடியாது.

இதை நம் ஆன்மீக வாழ்விற்கு அப்படியே பொருத்திப் பார்த்தால், நாம் நிற்பது இப்பக்கம். கடவுள் நிற்பது அப்பக்கம். அப்பக்கம் கடந்து செல்வதற்கு நம் கைகளில் கொடுக்கப்படுகின்ற கம்புதான், நாம் வைத்திருக்கின்ற விவிலியம், திருஅவைச் சட்டம், அருளடையாளங்கள், அருள்கருவிகள், அருள்பணியாளர்கள், ஆன்மீக முன்னோடிகள் அனைத்தும். இவற்றை வைத்து நாம் மேலே எழும்பிச் செல்லலாம். ஆனால், அக்கரைக்குப் போவது நம் கம்பைக் கைவிடுவதில்தான் இருக்கிறது. இவற்றைப் பிடித்துக்கொண்டு அப்பக்கம் செல்வது சாத்தியமன்று. அப்படி முயற்சி செய்தால், நாம் தாண்ட வேண்டிய குச்சியையும் சேர்த்து நாம் தள்ளுவதுடன், புறப்பட்ட மண்ணிலேயே மீண்டும் விழுந்துவிடுவோம்.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைக் கண்டிக்கின்றார். ஏனெனில், அவர்கள் காணிக்கைகள் செலுத்துவது, தூபம் காட்டுவது, திருவிழாக்கள் கொண்டாடுவது, எரிபலிகள் செலுத்துவது என நிறுத்திக் கொண்டனர். ஏனெனில், இவை எளிதானவை. இவற்றை விட்டுவிட்டால் தங்கள் அடையாளம் போய்விடும் என நினைத்தனர். ஆனால், ஆண்டவராகிய கடவுளைப் பொருத்தவரையில், ஒருவர் இவற்றை விடும்போது, தன்னிலே விடுதலை பெற்றவர் ஆகிறார். அப்படி விடுதலை பெறுபவர், எளிமையானவற்றைச் செய்வதை விடுத்து, நன்மையானவற்றைச் செய்ய ஆரம்பிப்பார்: 'தன் தீச்செயலை விட்டுவிடுவார், நன்மை செய்யக் கற்றுக்கொள்வார், நீதியை நாடித் தேடுவார், ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்வார், திக்கற்றோருக்கு நீதி வழங்குவார், கைம்பெண்ணுக்காக வழக்காடுவார்.'

நற்செய்தி வாசகத்தில், இயேசு, தன் அறிவுரையை முடித்தவுடன், 'கற்பிக்கவும், நற்செய்தி அறிவிக்கவும் புறப்பட்டுச் செல்கின்றார்.' அதாவது, தன் அறிவுரைகள் அல்லது கட்டளைகள் ஒருபக்கம் இருக்கட்டும் என நினைத்த அவர், இப்பக்கத்திலிருந்து அப்பக்கத்திற்குக் கடந்து போகின்றார். ஆனால், இன்று நாம் செய்வது என்ன?

இயேசு கொடுத்த அறிவுரைகளை அழகாக ஒரு புத்தகமாக எழுதி, அதை வெல்வெட் பைண்டிங் செய்து வைத்துக்கொண்டு அழகு பார்ப்பதிலும், அதன் அடிப்படையில் சட்ட ஒழுங்கை வரையறுத்து, யார் மீறுகிறார், யார் மீறுவதில்லை என்று ஆராய்ச்சி செய்வதிலும், மீறுபவரை விமர்சனம் செய்வதிலும், மீறாதவர் மேல் குற்றம் காண்பதிலும் நம் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டு இருக்கின்றோம்.

'கற்பித்தலும், நற்செய்தி அறிவித்தலும்' அன்றாட வாழ்வில் நடைபெற வேண்டுமெனில், நாம் அப்பக்கத்திற்குக் கடந்து செல்ல வேண்டும்.

புத்தகத்தை வாங்கிப் பார்த்துக் கொண்டே இருத்தல் எளிமையானது. ஆனால், படிப்பதே நன்மையானது.

அரிசியை வாங்கிப் பார்த்துக் கொண்டே இருந்தல் எளிமையானது. ஆனால், சமைத்து உண்ணுதல் நன்மையானது.

மருந்துகளை வாங்கிப் பார்த்துக் கொண்டே இருத்தல் எளிமையானது. ஆனால், அவற்றின் கசப்பைப் பொருட்படுத்தாமல் உண்ணுதலே நன்மையானது.

சிலுவையைச் சுமக்க வேண்டும் என்ற எண்ணம் எளிமையானது. ஆனால், சுமப்பது நன்மையானது.

எளிமையானதிலிருந்து நன்மையானதற்கு நாம் கடப்பதே இறைவன் விரும்புவது.

Saturday, July 11, 2020

ஆறுவகை நிலங்கள்

ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு

ஆறுவகை நிலங்கள்

'விதைப்பவர் எடுத்துக்காட்டை' வாசிக்கும்போதெல்லாம், 'மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்' நூலில் இருக்கும் கதை ஒன்று நினைவிற்கு வரும். விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்குத் தக்காளித் தோட்டம் ஒன்று இருந்தது. சில தக்காளிப் பழங்கள் நன்றாகவும், சில பழங்கள் பூச்சி விழுந்தும் அல்லது வெடித்தும் இருந்தன. பூச்சி விழுந்த, வெடித்த, செடியிலே அழுகிய பழங்களைத் தூக்கி எறிய விரும்பாத அந்த விவசாயி, அவற்றைப் பன்றிகளுக்கு இடலாமே என நினைத்து, தன் தோட்டத்திலேயே சிறிய பன்றிக்கூடம் ஒன்றையும் வைத்தார். ஒரு முறை அவருடைய தக்காளித் தோட்டத்தில் நல்ல விளைச்சல். பக்கத்துத் தோட்டத்துக்காரர்கள் எல்லாம் இவரைக் கொஞ்சம் பொறாமையுடன் பார்த்தனர். 'உன் தோட்டத்தில் இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் நிறையவும், நன்றாகவும் இருக்கிறது' என்று அவரைப் பாராட்டினர். ஆனால், அந்த விவசாயியோ, 'ஐயோ! இந்த முறை நான் பன்றிகளுக்கு எதைப் போடுவேன்?' என்று நினைத்து அழத் தொடங்கினார்.

விதைப்பவர் எடுத்துக்காட்டைக் கேட்கின்ற எவருக்கும் ஒரு கேள்வி வரும்:

'எல்லா நிலங்களுமே பயன்தர வேண்டுமா என்ன?'

'எல்லாத் தக்காளிகளுமே நன்றாக இருக்க வேண்டுமா என்ன?'

'உடைந்த, அழுகிய, பூச்சி விழுந்த தக்காளிகளுக்கும் பயன் இருக்கத்தானே செய்கிறது. இல்லையா?'

ஃப்யோடோர் டாஸ்டாவ்ஸ்கி என்னும் ரஷ்ய நாவலாசிரியரின் சிறந்த புதினங்களில் ஒன்று, 'க்ரைம் அன்ட் பனிஷ்மெண்ட்' ('குற்றமும் தண்டனையும்'). ரஸ்கோல்நிகோவ் என்ற ஒரு இளவல்தான் இப்புதினத்தின் முதன்மைக் கதைமாந்தர். இந்த உலகத்தில் உள்ளவர்களை 'சாதாரணமானவர்கள்,' 'அசாதாரணமானவர்கள்' என இரண்டாகப் பிரிக்கலாம் என்று சொல்கின்ற அவன், 'சாதாரணமானவர்களுக்குத்தான்' சட்டங்கள் இருக்கின்றன என்றும், 'அசாதாரணமானவர்கள்' சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதில்லை, மாறாக, சட்டங்களே அவர்களுக்குக் கீழ்ப்படிகின்றன என்று, தன்னுடைய சமகாலத்து சமூகத்தின் அவலநிலையை எடுத்துச் சொல்கின்றான். 'சாதாரணமான' இவன், தானும் 'அசாதாரணமானவன்' என்று தனக்கும் மற்றவர்களுக்கும் காட்டுவதற்காக இரட்டைக்கொலை செய்கிறான். அந்தக் கொலைதான் அவன் செய்த குற்றம். அந்தக் கொலைக்குத் தண்டனை கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பதுதான் கதையின் வேகம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 13:1-23), நாம் 'சாதாரணமான' மற்றும் 'அசாதாரணமான' மனிதர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிதலின் அடிப்படையில் அல்ல, மாறாக, இறைவார்த்தைக்குச் செவிமடுத்தலின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) விதைப்பவர் உவமை, (ஆ) உவமைகளின் நோக்கம், மற்றும் (இ) விதைப்பவர் உவமைக்கு இயேசு கொடுக்கும் விளக்கம். 'விதைப்பவர் உவமை' என்று இந்த எடுத்துக்காட்டு அறியப்பட்டாலும், இந்த எடுத்துக்காட்டு விதைகளைப் பற்றியது அல்ல. மாறாக, நிலங்களை அல்லது விதைகளை வாங்கும் தளங்களைப் பொருத்ததாக இருக்கிறது. ஆக, 'நிலங்களின் எடுத்துக்காட்டு' என்று சொல்வதே தகும்.

மேலோட்டமான வாசிப்பில் நான்கு வகை நிலங்கள் இருப்பதுபோலத் தெரிந்தாலும், மொத்தத்தில் ஆறுவகை நிலங்கள் இருக்கின்றன. முதல் மூன்று வகை நிலங்கள் சாதாரண நிலங்கள். இரண்டாவது மூன்று வகை நிலங்கள் அசாதாரணமானவை. முதல் வகை நிலங்கள் பலன் தரவில்லை - விதைப்பவருக்குத் தரவில்லை. ஆனால், அவற்றால் மற்ற பயன்கள் இருக்கவே செய்கின்றன. இரண்டாம் வகை நிலங்கள் பலன் தருகின்றன. ஆனால், இங்கே நிலங்கள் ஒன்றாக இருந்தாலும் பலன்கள், முப்பது, அறுபது, நூறு என வேறுபடுகின்றன.

ஆறுவகை நிலங்கள் எவை? (1) வழி என்னும் நிலம், (2) பாறை என்னும் நிலம், (3) முட்செடிகள் நிறைந்த நிலம், (4) முப்பது மடங்கு பலன்தரும் நிலம், (5) அறுபது மடங்கு பலன்தரும் நிலம், மற்றும் (6) நூறு மடங்கு பலன்தரும் நிலம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 55:10-11), பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு நாடுதிரும்பும் நம்பிக்கையின் செய்தியைத் தருகின்றார் ஆண்டவராகிய கடவுள். கடவுளுடைய வார்த்தையை எப்படி நம்புவது என்று மக்கள் தயக்கம் காட்டிய நேரத்தில் ஆண்டவர் அவர்களுக்கு தரும் உறுதி இதுதான்: 'மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன ... என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் அவ்வாறே இருக்கும்.' ஆக, எப்படி மழையும் பனியும் தாம் இறங்கி வந்த நோக்கத்தை நிறைவேற்றாமல் மேலே செல்லாதோ, அவ்வாறே ஆண்டவராகிய கடவுளும் தன் வார்த்தைகள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றாமல் தன்னிடம் திரும்பாது என்கிறார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவும், இந்த எடுத்துக்காட்டைப் பயன்படுத்தி, இறைவார்த்தையை ஏற்றுப் பயன்தருதல் அல்லது பலன்தருதல் குறித்து விளக்குகின்றார்.

இரண்டு வாசகங்களையும் இணைத்தால், ஆண்டவரின் வார்த்தை நம்மிடம் விதைபோல இறங்கி வருகிறது. நாம் எப்படிப்பட்ட நிலமாக இருக்கிறோமோ, அப்படிப்பட்டதாக நாம் தரும் பயன் அல்லது பலன் இருக்கிறது.

நற்செய்தி நூல்களில் நாம் சந்திக்கும் சில கதைமாந்தர்களின் பின்புலத்தில் மேற்காணும் ஆறு நிலங்களைப் புரிந்துகொள்வோம்:

1. வழி என்னும் நிலம் - பெரிய ஏரோது

'பெரிய ஏரோது' என்னும் கதைமாந்தரை நாம் மத் 2:1-12இல் சந்திக்கிறோம். 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று கேட்டு அவரைத் தேடி வருகின்ற ஞானியர் வழியாக, 'மீட்பரின் பிறப்பு' என்னும் விதை அவருடைய உள்ளத்தில் விதைக்கப்படுகிறது. ஆனால், கொஞ்ச நேரத்தில், அந்த விதையானது, 'பொறாமை,' 'பகைமை,' 'பழிதீர்த்தல்,' 'வன்மம்' என்னும் வானத்துப் பறவையால் விழுங்கப்படுகிறது.

என் உள்ளத்திலும் இறைவார்த்தை வந்து விழலாம். ஆனால், என்னைச் சுற்றி வரும் மேற்காணும் பறவைகளால் அது விழுங்கப்படலாம்.

2. பாறை என்னும் நிலம் - ஏரோது அந்திப்பாஸ்

'சிறிய ஏரோது' அல்லது 'ஏரோது அந்திப்பாஸ்' என்னும் கதைமாந்தரை நாம் மாற் 6:14-29இல் காண்கிறோம். திருமுழுக்கு யோவான் இவருடைய உள்ளத்தில் இறைவார்த்தையை விதைக்கின்றார். 'உன் சகோதரன் மனைவியை வைத்திருப்பது முறையல்ல!' என்கிறார். யோவானின் வார்த்தைகளைக் கேட்கின்ற ஏரோது, 'மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்க்கின்றார்.' ஆக, இறைவார்த்தையைக் கேட்டு வேகமாகவும், மகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொள்கின்றார். ஆனால், அவரில் வேர் இல்லை. கொஞ்சம் மது உள்ளே சென்றவுடன், தன்னுடைய மாதுவின் வஞ்சக வலையில் விழுந்து, இறைவார்த்தையைச் சொன்னவரையே கொன்றழித்துவிடுகிறார்.

என் உள்ளம் பாறையாக இருக்கும்போது, எனக்கு முதலில் ஆர்வமாக இருக்கும். ஆனால், பாறையின் வெப்பம் விதையை அல்லது விதையின் வளர்தலைச் சுட்டெரித்துவிடும்.

3. முட்செடிகள் நிறைந்த நிலம் - யூதாசு இஸ்காரியோத்து

இவரை நாம் நான்கு நற்செய்தி நூல்களில் காண்கிறோம். இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவர். இயேசு அன்பு செய்த சீடர் என யோவான் அழைப்பது இவரைத்தான் எனச் சிலர் சொல்கின்றனர். நிதி மேலாண்மையில் சிறந்தவர். இறையாட்சி இயக்கத்தின் பணப்பை இவரிடம்தான் இருந்தது. இயேசுவின் வார்த்தைகளை உடனிருந்து கேட்டவர் இவர். ஆனால், அவை கனி கொடுக்கா வண்ணம், உலகக் கவலை (உரோமை ஆட்சி எப்போது முடியும் என்னும் கவலை) மற்றும் செல்வ மயை (முப்பது வெள்ளிக்காசுகள்) அவரை நெருக்கிவிட்டதால், இறைவார்த்தையை அறிவித்தவரையே விலைபேசத் துணிகின்றார். யூதாசைப் பொருத்தவரையில், அவருக்கு எல்லாப் பொருள்களின் விலை தெரியும், ஆனால் அவற்றின் மதிப்பு தெரியாது. இயேசுவுக்கும் விலை நிர்ணயம் செய்தவர்.

இன்று என்னை நெருக்கும் முட்செடிகள் எவை? அகுஸ்தினார் தன் வாழ்வில் தன்னை நெருக்கிய முட்செடிகளாக, தன்னுடைய ஆணவம், உடலின்பம், மற்றும் பேரார்வம் என்னும் மூன்றைக் குறிப்பிடுகின்றார்.

4. முப்பது மடங்கு பலன்தரும் நிலம் - இயேசுவிடம் வந்த இளவல்

இயேசுவைப் பின்பற்ற விரும்பி அவரிடம் வந்த செல்வந்தரான இளவல் என்னும் கதைமாந்தரை நாம் மாற் 10:17-31இல் பார்க்கிறோம். 'நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்ற கேள்வியுடன் இயேசுவிடம் வருகின்றார். 'கட்டளைகளைக் கடைப்பிடி!' என்று இயேசு சொன்னவுடன், 'இளமையிலிருந்தே கடைப்பிடிக்கிறேன்' என்கிறார். 'இன்னும் ஒன்று குறைவுபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்' என்று இயேசு சொன்னவுடன், இளவல் முகவாட்டத்துடன் இல்லம் திரும்புகிறார். பாதி வழி வந்த அவருக்கு மீதி வழி வர இயலவில்லை. 'கட்டளைகளைக் கடைப்பிடித்தல்' என்னும் முப்பது மடங்குதான் அவரால் பலன்தர முடிந்தது. அவர் நல்ல நிலம்தான். எந்தத் தவறும் செய்யாதவர்தான். ஆனால், ஊட்டச்சத்து அந்த நிலத்தில் குறைவுபட்டது.

இயேசுவைப் பின்பற்றுவதில் நான் பாதி வழியாவது வந்துள்ளேனா? பாதி வழி வந்துவிட்டால், மீதி வழி நடக்கத் தயாரா? என் முகத்தை இயேசுவை நோக்கி எழுப்புகிறேனா? அல்லது முகவாட்டம் கொண்டு தாழ்த்துகிறேனா? முகவாட்டம் குறைய நிலத்திற்கு ஊட்டம் அவசியம்.

5. அறுபது மடங்கு பலன்தரும் நிலம் - இயேசுவின் பணிக்காலத்தில் திருத்தூதர்கள்

திருத்தூதர்கள் என்னும் எடுத்துக்காட்டை நாம் கவனமுடன் கையாள வேண்டும். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் அவர்கள் நற்செய்தியின் பொருட்டும், இயேசுவின் பொருட்டும் இன்னுயிரை ஈந்தவர்கள். அவர்களால்தான் நாம் இன்று இயேசுவின் சீடர்களாக இருக்கிறோம். அவர்கள் நூறு மடங்கு பலன் தந்தவர்கள்தாம். ஆனால், இயேசுவின் பணிக்காலத்தில் அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ளவில்லை, தவறாகப் புரிந்துகொண்டனர், மற்றும் அவரை மறுதலிக்கவும் செய்தனர். இவர்கள் அறுபது மடங்குதான் பயன்தந்தனர். 'நீரே மெசியா! நீரே இறைமகன்!' என அறிக்கையிட்டனர். ஆனால், புயலைக் கண்டு பயந்தனர், சிலுவை வேண்டாம் என்றனர், அப்பம் எப்படிப் போதும் எனக் கணக்குப் போட்டனர். இறைவார்த்தையை இயேசுவின் வாய்மொழியாக அன்றாடம் கேட்டாலும், அவர்களால் உடனடியாக முழுமையான பயன் தரமுடியவில்லை. இயேசுவால் அனுப்பப்பட்டு பணிகள் நிறையச் செய்தனர். அவர்களின் பணி அறுபது மடங்குதான் பலன் தந்தது.

என்னால் ஏன் இயேசுவை முழுமையாக நம்ப முடியவில்லை? ஏன் என் நம்பிக்கை தளர்கிறது? அல்லது நம்பிக்கையில் தயக்கம் இருப்பது ஏன்?

6. நூறு மடங்கு பலன்தரும் நிலம் - மரியாள், யோசேப்பு, சிமியோன், அன்னா, சக்கேயு, நறுமணத் தையல்

இறைவார்த்தையைக் கேட்டு, மனத்தில் இருத்தி, கனவுகளில் வழிநடத்தப்பட்டு, ஆவியாரால் உந்தப்பட்டு, தன் வாழ்வையே இறைவேண்டலில் கழித்து, தன்னிடம் உள்ளதில் பாதியையும், ஏமாற்றியதை நான்கு மடங்காகவும், திருப்பி அளித்து, விலையுயர்ந்த நறுமணத் தைலக் குப்பியை அப்படியே உடைத்து, என பல்வேறு நிலைகளில் நூறு மடங்கு பலன்தந்தனர் மரியாள், யோசேப்பு, சிமியோன், அன்னா, சக்கேயு, நறுமணப் பெண் (தையல்) ஆகியோர். தன்னிடம் உள்ளதை முழுவதுமாக இழந்து, தாங்கள் விதையாக, விதை தாங்களாக என இவர்கள் உருமாறினர்.

என்னால் மேற்காணும் உருமாற்றம் அடைய முடிகிறதா? இறைவார்த்தை என்னுள் மடிந்து என் உயிரில் கலக்கவும், என் உயிர் மடிந்து இறைவார்த்தையில் கலக்கவும் செய்கிறதா?

இறுதியாக,

நீங்களும் நானுமே மேற்காணும் ஆறுவகை நிலங்கள். பலன்தருகின்ற நிலன்கள் பலன் தர இயலாத நிலங்களைக் குறித்து எந்தத் தீர்ப்பும் எழுதக் கூடாது. நம் ஒவ்வொருவரின் சூழல், வளர்ப்பு, விழுமியங்கள், மதிப்பீடுகள் ஆகியவற்றைப் பொருத்து நம் நிலம் அமைகிறது. ஒருவர் பலன் தருவதால் அவர் மேன்மையானவர் எனக் கொண்டாடவோ, பலன் தராததால் தீயவர் என்றோ முத்திரையிடத் தேவையில்லை. இயேசுவும் அப்படி எந்த முத்திரையும் இடவில்லை. நம்முடைய இருத்தலில் பயன் தந்து, அந்தப் பயனால் நாமும் மற்றவர்களும் கொஞ்சம் வளர்ந்தால் அதுவே போதும். இந்த உவமை நமக்கு நிறைய பரிவையும், தாழ்ச்சியையும், தாராள உள்ளத்தையும் கற்றுக்கொடுக்கிறது.

எல்லாக் கதைமாந்தர்களும் இணைந்தால்தான் நற்செய்தி. எல்லாத் தக்காளிகளும் இணைந்தால்தான் தோட்டம். எல்லா மனிதர்களும் இணைந்தால்தான் சமூகம். எல்லா நிலங்களும் இணைந்தால்தான் பூமி.

நாம் பேசும்போது, நம் வாயின்மேல் விரலை வைத்துக்கொண்டு பேசினால் நாம் என்ன உணர்கிறோம்? செய்து பாருங்கள்! வார்த்தைகளோடு இணைந்து நம் சூடான மூச்சும் வெளியே வருகிறது. இல்லையா? கடவுளின் வார்த்தையும் அப்படித்தான். அவர் பேசும்போது அவரின் மூச்சும் நம்மேல் படுகிறது.

அவரின் மூச்சு நம்மேல் படுவது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம், இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 8:18-23), ஒட்டுமொத்தப் படைப்பும் நாமும் பெருமூச்சு விடுவதாகப் பவுல் பதிவு செய்கிறார். இரு மூச்சுக்களும் இணைதல் கொரோனா காலத்தில் ஆபத்தாக இருக்கலாம். ஆனால், இறைமூச்சும் நம் பெருமூச்சும் இணைதல் நம் வாழ்வை மாற்றும். ஏனெனில், அவரே, 'ஆண்டு முழுவதும் தமது நலத்தால் நமக்கு முடிசூட்டுகின்றார்' (காண். பதிலுரைப்பாடல், திபா 65:11).