Thursday, October 31, 2019

புனிதர் அனைவர் பெருவிழா

இன்றைய (1 நவம்பர் 2019) திருநாள்

புனிதர் அனைவர் பெருவிழா

திருஅவையின் அட்டவணைக்குள் வராதவர்கள், ஆனால், புனித வாழ்வை வாழ்ந்தவர்கள், அல்லது திருஅவையின் போதனைப்படி 'மகிமைபெற்ற திருஅவையில்' இருக்கும் அனைத்து இனியவர்களின் திருநாள் இன்று. இன்றைய முதல் வாசகம் (காண். திவெ 7:2-4,9-14) இவர்களை முத்திரையிடப்பட்டவர்கள் என்றழைக்கின்றது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் யோவான், நாம் இங்கேயே கடவுளின் மக்களாக இருக்கிறோம் என்று புனித நிலையை இவ்வுலகம் சார்ந்ததாகப் பதிவு செய்கிறார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் மலைப்பொழிவில் காணப்படும் பேறுபெற்றோர் பாடத்தை வாசிக்கின்றோம். இக்குணங்களைக் கொண்டிருப்பவர்கள் புனித நிலையை அடைகிறார்கள் அல்லது விண்ணரசை உரிமையாக்கிக்கொள்கிறார்கள் என்று நாம் புரிந்துகொள்ள முடியும்.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக உரோமையில் புனிதர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நடந்த மறுநாளில் இணையதள தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றில் அதே செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதற்குப் பின்னூட்டம் இட்டவர்களில் ஒருவர், 'மனிதர்களாகச் சேர்ந்து ஒருவரை எப்படி புனிதராக்க முடியும்?' என்ற கேள்வியைக் கேட்டிருந்தார். புனிதராக்குகின்ற மனிதர்கள் இறைவனின் பெயரால், திருஅவையின் பெயரால், அல்லது இறைமக்களின் பெயரால் இந்நிகழ்வை நடத்துகிறார்கள் என்று நாம் சொன்னாலும் அவருக்கு அப்பதில் ஏற்புடையதாக இருக்காது.

'நான் நீதிமான்களை அல்ல. பாவிகளையே அழைக்க வந்தேன்' என்று சொன்ன இயேசு, 'அனைத்துப் புனிதர்கள் விழா' கொண்டாட விரும்புவாரா? என்று கேட்டார் என் நண்பர். இயேசு ஒருவேளை நம்மோடு இருந்தால் 'அனைத்துப் பாவிகள் விழா' தான் கொண்டாடியிருப்பார் என்றார் அவர்.

புனிதர்களை நாம் மிகவும் கொண்டாடி அவர்களை அந்நியப்படுத்திவிடும், அல்லது உடுப்பி ஓட்டல் சர்வர் நிலையில், நம்மிடம் 'ஆர்டர்' எடுத்து, அதைக் கொண்டு வந்து நம் தட்டில் வைக்கும் நபராகப் பார்க்கும் போக்கும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறது.

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நாம் வாழ்வதோ, அல்லது அவர்கள் விட்டுச்சென்ற விழுமியங்களை வாழ்வாக்குவதோ நமக்குக் கடினமாக இருக்கும் என்று, அவர்களின் வழித்தோன்றல்களாக இருப்பதற்குப் பதிலாக, அவர்களது பக்தர்களாக மாறும் எளியை வழியைத் தெரிவுசெய்துகொண்டோமோ என்று கேட்கவும் தோன்றுகிறது.

இந்தத் திருநாள் நமக்குத் தரும் செய்தி என்ன?

ஒன்று,

'உங்களுக்குப் புனிதராக விருப்பமா?' என்று நம்மிடம் யாராவது கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்?

புனிதர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தாம். ஆனால், சாதாரண மனிதர்களைவிட அவர்கள் கொஞ்சம் 'எக்ஸ்ட்ரா' செய்தார்கள். அந்தக் கொஞ்சம் 'எக்ஸ்ட்ரா' தான் அவர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்துகிறது. அவர்கள் யாரும் செல்லாத பாதையில் நடந்து சென்றார்கள்.

பயத்தால் பீடிக்கப்பட்ட மக்கள் நடுவே கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணிச்சல் கொண்டார்கள் - செபஸ்தியார் போல!

தன் திறமை மதிக்கப்படாத இடத்தில் கொஞ்சம் எக்ஸ்டரா பொறுமை காத்தார்கள் - பதுவை அந்தோனியார் போல!

சொத்துக்கள் நிறைய வேண்டும் என்று நினைத்தவர்கள் நடுவில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கொடுத்தார்கள் - பிரான்சிஸ் அசிசி, வனத்து அந்தோனியார் போல!

இவர்கள் சேரி மக்கள். இவர்களுக்கு என்ன செய்ய முடியும்? என்று கேட்டவர்கள் நடுவில், அந்த மக்களுக்காக கொஞ்சம் எக்ஸ்ட்ரா தன் ஆற்றலையும் நேரத்தையும் கொடுத்தார்கள் - அன்னை தெரசா போல!

இப்படி இவர்கள் கொஞ்சம் கொஞ்சம் எக்ஸ்டரா செய்தார்கள். அவ்வளவுதான்!

நம்முடைய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் என்று நம்மிடையே வாழ்ந்து இன்று மறைந்தவர்களும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்தவர்கள்தாம் - அவர்களும் இன்று புனிதர்களே!

ஆக, நாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்யும்போதும், எக்ஸ்டரா மைல் நடக்கும்போதும் புனிதராகிறோம்.

இரண்டு,

இருப்பது அல்ல, மாறுவது.

இருப்பது அல்ல, மாறுவதே மதிப்பு பெறுகிறது. மாற்றம் கூடக்கூட மதிப்பு கூடுகிறது.

பால் மதிப்புக்குரியதுதான். ஆனால், பால் தயிரானால் அதன் மதிப்பு கூடுகிறது. வெண்ணெய் அல்லது பாலாடைக்கட்டியானால் இன்னும் கூடுகிறது. பால்கோவா, பால் அல்வா ஆனால் இன்னும்கூடுகிறது. நெய் ஆனால் இன்னும் அதிக மதிப்பு பெறுகிறது.

ஆனால், இந்த மாற்றம் எளிதான செயல் அல்ல.

இந்த மாற்றத்திற்கு தன்னையே உட்படுத்த பால் நிறைய சூட்டைத் தாங்க வேண்டும், பாத்திரம் விட்டு பாத்திரம் மாற வேண்டும், மத்தால் திரிக்கப்பட வேண்டும், கையால் சுரண்டப்பட வேண்டும்.

புனிதர்கள் சொல்லும் இரண்டாம் பாடம் இதுதான். நாம் இருப்பதில் அல்ல. நாம் எப்படி மாறுகிறோம் என்பதில்தான் மதிப்பு இருக்கிறது.

பாரக் ஒபாமா அவர்களின் மனைவி மிஷல் ஒபாமா தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை, 'பிகமிங்' என்ற தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார். 'நான் என்னவாக மாற விரும்புகிறேன்' என்ற கேள்வி நம்முடைய இருப்பையே புரட்டிப்போடும் என்கிறார்.

'அவரால் முடியும், அவளால் முடியும். என்னால் ஏன் முடியாது?' என்று கேட்டதால்தான் லொயோலா இஞ்ஞாசியார் மாற்றத்தின் கருவியாகிறார்.

ஆக, நாம் எப்படி மாற வேண்டும் என்பதைக் கற்றுத்தருகிறார்கள் புனிதர்கள்.

மூன்று,

எதிர்நோக்கு.

'எல்லாம் கடந்துவிடும்' என்பர். சரி! கடந்தால் என்ன? கடந்தாலும் காத்திருத்தல்தான் எதிர்நோக்கு.

'எல்லாம் கடந்துவிடும்' என நினைப்பவர்கள் புனிதர்கள் ஆக முடியாது.

'துன்பம் கடந்துவிடும்' என்று செபஸ்தியார் நினைத்திருந்தால் ஓய்ந்திருப்பார் இல்லையா?

எதிர்நோக்கு கொண்டிருந்தார். கடந்துவிடுவதற்கு முன் துன்பத்தை ஏற்கின்றார்.

நம் வாழ்வில் எதிர்நோக்கு என்னும் மெழுகுதிரியை நாம் அணையாமல் காத்துக்கொள்ள நம்மைத் தூண்டுகின்றனர் புனிதர்கள்.

கொஞ்சம் எக்ஸ்ட்ரா, கொஞ்சம் மாற்றம், கொஞ்சம் எதிர்நோக்கு - இதுவே புனிதம்!

Wednesday, October 30, 2019

தள்ளிப் போ!

இன்றைய (31 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 13:31-35)

தள்ளிப் போ!

'நீ இங்கிருந்து போய்விடு! நீ எங்களுக்கு வேண்டாம்!' என்று சொன்ன மக்களைப் பார்த்து, எருசலேமைப் பார்த்து இயேசு கண்ணீர் வடிக்கின்றார். நாம் புனித நாடுகளுக்குச் சென்றோம் என்றால், எருசலேம் மதில்களுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்கைத் தாண்டி, பள்ளத்தாக்கின் மறுபக்கத்தில் 'தோமினுஸ் ஃப்ளேவிட்' ('ஆண்டவர் அழுதார்' அல்லது 'ஆண்டவர் கண்ணீர் வடித்தார்') என்ற ஆலயம் உண்டு. அந்த ஆலயம் இருக்கும் இடத்திலிருந்து மீண்டும் இந்தப் பக்கம் பார்த்தால் எருசலேம் நகரின் அழகையும், அதன் கிரீடம் போல இருக்கும் ஆலயத்தையும் பார்க்கலாம். அந்த ஆலயத்தில் உள்ள ஒரு கதவு 'மெசியாவின் வருகைக்கு' என்று இருக்கும். 'மெசியாவின் வருகைக்கு' என்று பெயரிட்டு வைத்திருக்கின்ற ஆலயம், மெசியாவைக் கண்டும் கதவைத் திறக்க மறுக்கிறதே என்பதுதான் இயேசுவின் ஆதங்கமாக இருக்கிறது. இந்த ஆதங்கமே, இந்தக் கையறுநிலையே இயேசுவின் கண்களை வியர்க்க வைக்கின்றன.

'எருசலேமே! எருசலேமே! கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன்னை அரவணைத்துக்கொள்ள விரும்பினேன்! உனக்கு விருப்பமில்லையே!' என்று கண்ணீர் வடிக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில் சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, 'இங்கிருந்து போய்விடும். ஏரோது உம்மைக் கொல்லத் தேடுகிறான்!' என்கின்றனர். வழக்கமாக, பரிசேயர்கள் இயேசுவுக்கு எதிராகச் செயல்படுவார்கள். ஆனால் இங்கே அவர் சார்பாக, அவரைக் காப்பாற்றும் நோக்குடன் பேசுகிறார்கள். அல்லது, 'ஏரோதின் பெயரைச் சொன்னால் பயந்து ஓடிவிடுவான்' என்று நினைத்துக்கூடச் சொல்லியிருக்கலாம். திருமுழுக்கு யோவானைக் கொன்ற ஏரோது இயேசுவையும் கொல்லத் தேடுகிறான். ஆகையால்தான், எருசலேம் இறைவாக்கினரைக் கொல்லும் நகரம் என்றழைக்கிறார் இயேசு. இயேசு பயந்துவிடவில்லை. ஏரோதுவை 'குள்ளநரி' என்றழைக்கின்றார். இந்தப் பெயர் ஏரோதுக்கு இயல்பாகவே வழங்கப்பட்ட பெயர். ஏனெனில், பல தந்திர வேலைகளைச் செய்பவர் ஏரோது. 'மூன்று நாள் பொறுத்துக்கொள்' என்று சொல்லி அனுப்புகிறார் இயேசு. 'மூன்று நாள்' என்பது '72 மணி நேர' அளவை அல்ல, மாறாக, இயேசுவின் இறையாட்சிப் பணி நிறைவை அடையாளமாக இங்கே குறிக்கிறது.

இங்கே இரண்டு விடயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்:

(அ) நாம் ஒவ்வொருவரும் எருசலேம் ஆலயம்தான். இந்த ஆலயத்தில் இறைவன் நுழைவதற்கென்று கதவு ஒன்று இருக்கிறது. ஆனால், நாம் எத்தனை முறை அதை நாம் பூட்டி வைக்கின்றோம்? கதவு மட்டுமல்லாமல் சில நேரங்களில் பெரிய பள்ளத்தாக்கும் இருந்து இறைவனை நம்மிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகிறது. இந்தப் பிளவை நாம் எப்படி சரி செய்வது? அவரை ஏற்றுக்கொள்வதன் வழியாகவும், அவரிடம் தஞ்சம் அடைவதன் வழியாகவுமே.

(ஆ) என்னுடைய இலக்கிற்கு தடைகள் வரும்போது நான் அவற்றை எப்படிக் கையாளுகிறேன்? பயந்து பின்வாங்குகிறேனா? அல்லது துணிந்து முன்னேறுகிறேனா? இயேசு துணிந்து முன்னேறுகின்றார். ஏரோதுவோ, எருசலேம் மக்களின் கல்மனமோ அவரைத் தடுத்து நிறுத்தவில்லை.

இந்த இரண்டு விடயங்களையும் ஒரே புள்ளியில் நிறுத்துகிறது இன்றைய முதல் வாசகம்:

'கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?' என்ற கேள்வியைக் கேட்கும் கடவுள், தானே விடையளிக்கிறார்: 'வேதனை, நெருக்கடி, இன்னல், பட்டினி, ஆடையின்மை, இடர், சாவு' எதுவும் நம்மை அவரிடமிருந்தும், கிறிஸ்துவின் அன்பினின்றும் பிரிக்க முடியாது. அப்படி இவை வந்தாலும் 'அனைத்திலும் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம்' என்கிறார்.

இது எப்படி சாத்தியமாகும்?

இதுதான் பவுலின் ஆழமான இறையனுபவம்.

'கடவுள் என் சார்பில் இருக்கிறார்' என்று உணர்வது மிகவும் ஆழமான இறையனுபவம். அதாவது, என் வாழ்வில் நிகழும் எல்லா நிகழ்வுகளிலும் நான் அவருடைய கைவன்மையைக் காண வேண்டும்.

இதையொட்டிய திருப்பாடல் 124 இக்கருத்தை இன்னும் சிறப்பாக விளக்குகிறது:

'ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் - எதிராளிகள் நம்மை விழுங்கியிருப்பார்கள்! பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்! ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!'

சில கேள்விகள்:

அ. இயேசுவின் முகம் என்னைப் பார்த்து அழுகிறதா? புன்முறுவல் பூக்கிறதா?

ஆ. என்னுடைய இலக்கு நோக்கிய பயணத்தில் நான் எவற்றால் பின்வாங்குகிறேன்?

இ. 'கடவுள் என் சார்பாக இருக்கிறார்' என்று உணர்ந்த வாழ்வியல் அனுபவங்கள் எவை?


Tuesday, October 29, 2019

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து

இன்றைய (30 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 13:22-30)

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து

இயேசு ஒரு யூதராக இருந்ததால் இயேசுவின் மீட்பு யூதர்களுக்கு மட்டும்தான் என்ற புரிதல் தொடக்க கிறிஸ்தவர்களுக்கு நிறையவே இருந்தது. புறவினத்தார்க்கு மீட்பு இல்லை என்ற புரிதல் மேலோங்கியிருந்ததன் பின்புலத்தில் இன்றைய நற்செய்தி வாசகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய நற்செய்தியை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்:

அ. எருசலேம் நோக்கி இயேசு (13:22)

இயேசு எருசலேம் நோக்கிச் செல்வதை லூக்கா அடிக்கடி பதிவு செய்கிறார் (காண். 9:51, 53, 57, 10:1, 38, 11:1, 13:22, 33, 14:25, 17:11, 18:31, 18:37, 19:1,11,28). ஆனால், எதற்காக இயேசு எருசலேம் செல்கிறார் என்பதை மூன்றுமுறை மட்டுமே - தொடக்கத்தில் (9:51), நடுவில் 17:11), இறுதியில் (18:35) - பதிவுசெய்கிறார். இக்குறிப்பு நமக்கு உணர்த்தவது என்ன? என் வாழ்வின் இலக்கு எனக்கு தெளிவாக இருக்கின்றதா? ஐந்து ஆண்டுகளுக்குப் பின், பத்து ஆண்டுகளுக்குப் பின், இருபது ஆண்டுகளுக்குப் பின் என நான் என்ன திட்டங்கள் அல்லது இலக்கை நிர்ணயித்துள்ளேன்? இலக்கைப் பின்தொடர்வதற்கான மனவுறுதியும் விடாமுயற்சியும் என்னிடம் இருக்கிறதா?

ஆ. மீட்பு பெறுபவர் சிலர்தானா? (13:23)

வழியில் பலர் இயேசுவிடம் பல விடயங்களைக் கேட்கின்றனர். இறந்த கலிலேயர்கள், விவாதங்கள் என நிறைய விடயங்களில் ஒன்றாக, 'மீட்பு எல்லாருக்குமா?' என்று கேட்கப்பட, இயேசு அதற்கு நேரிடையாகப் பதில்கூற மறுக்கின்றார்.

இ. இடுக்கமான வாயில் (13:24)

'இடுக்கமான வாயிலில் நுழைவது' பற்றி அண்மையில் டி.டி. ரங்கராஜன் இப்படி எழுதுகிறார்: 'நம் ஒவ்வொருவரிலும் இரண்டு அல்லது மூன்று மனிதர்கள் ஒரே நேரத்தில் வாழ்கின்றனர். இவர்களை நான் குறைத்து ஒரே நபராக எப்போதும் வாழ முயற்சிக்க வேண்டும். ஒரே நபராக வாழும்போது என்னில் உண்மையும், நாணயமும், நேர்மையும் இருக்கும். ஒரே நபராக இருப்பவரே இடுக்கமான வாயிலுக்குள் நுழைய முடியும்.' இன்று நான் எத்தனை மனிதர்களாகப் பிளவுண்டு வாழ்கிறேன்?

ஈ. உங்களை எனக்குத் தெரியாது (13:25-28)

'இவரை எனக்குத் தெரியும்!' என்று இயேசுவிடம் செல்பவர்களை, 'உங்களை எனக்குத் தெரியாது' என்கிறார் இயேசு. ஆக, இயேசுவுடன் உணவு உண்ட, குடித்த, போதனையைக் கேட்ட நெருக்கம் மட்டும் போதாது. மாறாக, அவருடன் ஒருவர் கொண்டுள்ள தனிப்பட்ட உறவே அவருக்கு மீட்புத் தரும்.

உ. எல்லாரும் வரலாம் (13:29-30)

ஆக, அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்குமாய் கதவுகள் திறக்கப்படுகின்றன. இலக்கு தெளிவாய் இருக்கும் எவரும், இடுக்கமான வாயில் வழியே நுழையும் எவரும் உள்ளே வந்து பந்தியில் அமரலாம். இவ்வாறாக, கடைசியானவர்கள் முதன்மையாவார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 8:26-30) கூட்டுஒருங்கியக்கம் (synergy) என்ற மேலாண்மை விதி பற்றிப் பேசுகின்றார்: 'கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது, அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்.' இதையே, 'ஒருவர் இந்தப் பிரபஞ்சத்தோடு இணைப்பில் இருக்கும்போது பிரபஞ்சமே அவருக்கு ஒத்துழைக்கும்' என்கிறார் நாவலாசிரியர் பவுலோ கோயலோ. இலக்கு தெளிவானவர்களும், இடுக்கமான வாயிலில் நுழைபவர்களும் பிரபஞ்சத்தோடு இணைப்பில் இருக்கிறார்கள்.

சில கேள்விகள்:

அ. என்னுடைய வாழ்வின் குறுகிய மற்றும் நீடித்த இலக்குகள் எவை? அவற்றை நான் எப்போதும் என் கண்முன் கொண்டுள்ளேனா?

ஆ. நான் இடுக்கமான வாயில் வழியே நுழைய, ஒற்றை நபராக மாற, தடையாக இருப்பவை எவை?

இ. கடவுளின் ஆவியார் என்னில் நிகழ்த்தும் கூட்டுஒருங்கியக்கத்தை நான் அனுபவிக்கிறேனா?


Monday, October 28, 2019

விதையும் மாவும்

இன்றைய (29 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 13:18-21)

விதையும் மாவும்

இறையாட்சி பற்றிய இயேசுவின் உருவகங்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. நம்ம வீட்டு அஞ்சறைப்பெட்டியின் மூடியைச் சுற்றிவிட்டு, அதன் ஒரு பெட்டியில் கிடக்கும் கடுகுமணிகளைக் கையில் எடுத்து, 'இதோ! இறையாட்சி இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்!' என்கிறார். பின் அப்படியே கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறார். ஒரு டம்ளரில் வீட்டுத்தலைவி எடுத்து வைத்த புளிக்கார மாவு இருக்கிறது. இன்னும் கொஞ்சம் தள்ளிப் பார்க்கிறார். அங்கே ஒரு பானை நிறைய புதிதாய் அரைத்த மாவு இருக்கிறது. 'இந்தப் புளிக்காரத்தை இந்த மாவில் கொட்டவா?' என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டுக்கொண்டே அந்த மாவில் கொட்டி, அருகிலிருந்த அகப்பையை எடுத்து மெதுவாகக் கிண்டி விடுகின்றார். 'மொத்தத்தையும் போட்டுட்டீங்களா?' என்று சிணுங்குகிறாள் அந்தப் பெண்மணி. 'ஆம்!' என்று சொல்லிக்கொண்டே வரவேற்பரைக்குள் ஓடியவர், அங்கே இருந்த சீடர்களிடம், 'இறையாட்சி இந்தப் புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்' என்கிறார்.

இயேசுவின் உருவகங்கள் வெகுசன மக்களுக்கும் புரியக்கூடிய வகையில் இருக்கின்றன. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சியை கடுகுவிதை மற்றும் புளிப்புமாவுக்கு ஒப்பிடுகின்றார்.

முதலில் இறையாட்சி என்றால் என்ன? இறையாட்சி என்றால் (அ) திருச்சபை, (ஆ) விழுமியங்கள், (இ) இறப்புக்குப் பின் வாழ்வு என்று நிறைய புரிதல்கள் இருக்கின்றன. ஆனால், இறையாட்சி என்பது இயேசு. அவ்வளவுதான். அதனால்தான், 'இறையாட்சி உங்கள் நடுவே இருக்கிறது. ஏனெனில் நான் உங்கள் நடுவில் இருக்கிறேன்' என்கிறார் இயேசு. இயேசு இயங்கும் இறையாட்சித் தளம் இந்த உலகம்.

அ. கடுகுவிதை

யூதர்கள் கடுகுவிதையை எல்லா விதைகளிலும் மிகச் சிறியதாகக் கருதினார்கள் (காண். மத் 13:31-33, மாற் 4:30-32). இயேசுவும் 'கடுகளவு நம்பிக்கை' (காண். லூக் 17:6) என்று சொல்லும்போது, கடுகின் சிறிய அமைப்பையே சொல்கின்றார். 'கடுகு' என்பது 'ஸினாப்பிஸ் நீக்ரா' என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் விதைகளையே குறிக்கிறது. இத்தாவரம் நான்கு அடிகளிலிருந்து பதினைந்து அடிகள் வரை வளரும். ஆகையால் இதை மரம் என்றும் அழைப்பர். இயேசு கடுகுவிதையின் வளர்ச்சியைப் பற்றிப் பேசினாலும், அவருடைய அழுத்தம் கடுகுவிதையின் தொடக்கம் மற்றும் இறுதியைப் பற்றியே இருக்கின்றது. சிறிய தொடக்கம். ஆனால், பெரிய முடிவு. சிறிய விதை பெரிய மரமாகிறது.

இங்கே மற்றொரு வாக்கியத்தையும் சொல்கின்றார்: 'வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின.' இயேசுவின் 'விதைப்பவர்' எடுத்துக்காட்டில், பறவைகள் விதைகளின் எதிரிகளாக இருக்கின்றன (காண். லூக் 8:5, 12). ஆனால், இங்கே அவைகள் விருந்தினர்களாக வருகின்றன. ஆக, இறையாட்சி என்ற கடுகு மரம் வெறும் 'செல்ஃபோன் டவர்' அல்ல. மாறாக, பறவைகளை ஈர்த்து அவைகளுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும் தன்மை கொண்டது. 'பறவைகள்' என்பது 'புறவினத்தாரைக்' குறிப்பதாக திருஅவைத் தந்தையர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள் (காண். தானி 4:12, 21, திபா 104:13, எசே 17:23). உருவகத்தை நிறைவேற்றும் விதமாகக் கூட 'பறவைகளைப் பற்றி' இயேசு சொல்லியிருக்கலாம்.

ஆ. புளிப்புமாவு

புளிப்புமாவு என்பது நாம் பாலில் ஊற்றும் தயிர் உறை போன்றது. பழைய தயிர் புதிய பாலில் ஊற்றப்படும்போது பாலும் தயிராகிவிடுகின்றது. 'புளிப்புமாவு' என்று சொல்வது இன்று நாம் ரொட்டி அல்லது கேக் செய்யும்போது சேர்க்கும் 'ஈஸ்ட்' என்ற பாக்டீரியா. இது மாவில் சேர்க்கப்பட்டு கொஞ்ச நேரத்தில் மாவு நெகிழ்வுத்தன்மை அடைகிறது. மாவில் உள்ள க்ளுக்கோஸூடன் சேரும் இந்தப் பாக்டீரியா கார்பன்-டை-ஆகஸ்ஸைடாக மாறி சின்ன சின்ன காற்றுப் பைகளை மாவில் உருவாக்குகிறது. இப்போது அடுமனையில் இடப்படும்போது வெப்பத்தில் காற்றுப் பைகள் இன்னும் விரிய மணமான, சுவையான கேக் அல்லது பிரட் கிடைக்கிறது. மாவு எந்த அளவில் இருந்தாலும் புளிக்காரம் அந்த அளவிற்குச் செயலாற்றும். அதே செய்திதான். சிறிய தொடக்கம். பெரிய முடிவு.

புளிக்காரம் யார் பார்த்தாலும்பார்க்காவிட்டாலும் தன் வேலையைச் செய்துகொண்டிருக்கும். இதன் வேலையைப் பாதி இரவில் நிறுத்த முடியாது. இது செய்து முடித்த வேலையை மீண்டும் திருப்ப முடியாது. இறையாட்சியும் அத்தகையதே.

புளிப்புமாவு விவிலியத்தில் எதிர்மறையான பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது (காண். லூக் 12:1, 1 கொரி 5:6-8, கலா 5:9). ஆனால், இங்கே நேர்முகப் பொருளில்தான் உள்ளது.

சரி!

கடுகுவிதையும் புளிப்புமாவும் போல இiறாட்சி இன்று இருக்கிறதா? எப்போது உலகம் பெரிய மரமாகவும் புளிப்பான மாவாகவும் மாறும்?

இந்த எதிர்நோக்கு அல்லது காத்திருத்தலைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 8:18-25) பவுல் மற்றொரு உருவகத்தின்வழி விளக்குகிறார்: 'படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது.' 'தள்ளு!' 'தள்ளு!' என்று ஒருபக்கம் வலி, இன்னொரு பக்கம் முடியாத போது பெருமூச்சு. ஆனால், இறுதியில் மகிழ்ச்சி! இறையாட்சியை, இயேசுவைக் கையில் ஏந்தும் மகிழ்ச்சி!


Sunday, October 27, 2019

புனித சீமோன், யூதா

இன்றைய (28 அக்டோபர் 2019) திருநாள்

புனித சீமோன், யூதா

இன்று நம் தாய்த்திருச்சபை திருத்தூதர்களும் புனிதர்களுமான சீமோன், யூதா திருநாளைக் கொண்டாடுகிறது. 'தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா அல்லது ததேயு' என்று இவர்களை அழைக்கின்றார் லூக்கா. சீமோனை மையமாக வைத்த பக்தி முயற்சிகள் அதிக அளவில் இல்லை. ஆனால், அன்னை மரியாள், அந்தோனியார்க்கு அடுத்த நிலையில் உலகெங்கும் அதிக பக்தர்களை ஈர்க்கக்கூடியவர் யூதா ததேயு எனலாம். 'கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலர்' அல்லது 'கையறுநிலையின் பாதுகாவலர்' இவர். இவர் இயேசுவின் உறவினர் என்பதும், கானாவூரில் இயேசு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிய நிகழ்வு நடந்தது இவருடைய திருமணத்தில்தான் என்பதும் மரபுவழிச் செய்தி. நான் உரோமையில் என் படிப்பிற்காகச் சென்றிருந்தபோது எனக்கு அடைக்கலம் தந்தது புனித யூதா ததேயு பங்குத்தளம்தான். இன்று அந்தப் பங்குத்தளத்தின் திருநாள். கையின் இடுக்கில் ஒரு பெரிய கட்டையும், இடுப்பில் தான் எழுதிய கடிதப் பகுதியையும், இரண்டு கைகளில் இயேசுவின் முகம் தாங்கிய துணியையும் (வெரோணிக்காவுக்கு இயேசு வழங்கியது) ஏந்தியவராக இவர் காட்சி அளிப்பார் அந்தப் பங்குத்தளத்தில்.

திருத்தூதர்கள் இயேசுவுக்கும் நமக்கும் உள்ள இணைப்புக் கோடுகள் அல்லது பாலங்கள். இவர்களை அடித்தளங்கள் என்கிறார் பவுல் (காண். முதல் வாசகம்).

இவ்விரு திருத்தூதர்களும் இன்று நமக்குச் சொல்வது என்ன?

அ. அழைத்தல் அனுபவம் பெறுதல்

'இயேசு ஒரு மலைக்குப் போனார். கடவுளிடம் வேண்டினார். விடிந்ததும் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்' என்று வேகமாக நாம் நற்செய்தி நூலில் வாசித்துவிடுகின்றோம். ஆனால், அந்த நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்தால் நமக்கு வியப்பின்மேல் வியப்பாக இருக்கிறது. பெரிய கூட்டம். அந்தக் கூட்டத்தின் நடுவில் சில சீடர்கள். எல்லாரும் நிற்கிறார்கள். இயேசு அவர்கள் முன்னால் நின்று, 'நீ வா! சீமோன் ... நீ வா! ததேயு! உன்னைத்தான் ... வா!' என்று சொல்லும்போது மற்ற சீடர்கள் நடுவில், மற்ற மக்கள் நடுவில் அவர்கள் எவ்வளவு ஆனந்தம் அடைந்திருப்பார்கள்! 'நானா!' என்று ஓடியிருப்பார்கள். சிலர் தயங்கியிருப்பார்கள். ஆனால், அழைக்கப்பட்ட அனைவரும் சென்றுவிடுகின்றனர். கூட்டத்திலிருந்து பெயர் சொல்லி அழைக்கப்படுதல் ஒரு முக்கியமான அனுபவம். நம்மை யாராவது கூட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதிச் செயல்பட்டால் நமக்குப் பிடிப்பதில்லை. ஏனெனில், கூட்டத்தில் நம்முடைய தனித்தன்மை அழிக்கப்படுகிறது. ஆக, என்னுடைய தனித்தன்மையை இறைவன் எனக்கு நினைவூட்டும் நிகழ்வுதான் அழைத்தல் அனுபவம். இன்றும் குருத்துவ அருள்பொழிவில் திருத்தொண்டர்களையும், திருத்தொண்டர் அருள்பொழிவில் மாணவர்களையும், துறவற சபையில் முதல் மற்றும் இறுதி வார்த்தைப்பாடு கொடுக்கும் இளவல்களையும், திருமுழுக்கின் போது நம்மை பெயர் சொல்லி அழைப்பதன் பொருள் இதுதான். இந்த அழைத்தல் அனுபவம் ஒருநாள் அனுபவம் அல்ல. இது அன்றாட அனுபவமாக இருத்தல் வேண்டும்.

ஆ. அவரோடு நிற்றல்

இவர்கள் இயேசுவுடன் நிற்க வேண்டும். ஆக, இவர்களுக்கென்ற தனிப்பட்ட நிற்றல் இனி இல்லை. இவர்கள் தங்கள் குடும்பத்தோடும், உறவினர் நண்பர்களோடும் இனி நிற்க முடியாது. இயேசுவோடு நிற்க அவர்கள் மற்றவற்றை இழக்க வேண்டும். இல்லை என்றால், இயேசுவை நெறித்துக்கொண்டு நிற்பது போல ஆகவிடும். இயேசுவுடன் நிற்க நான் என்னுடைய முதன்மைகளைக் கைவிட வேண்டும். எடுத்துக்காட்டாக, நான் என் இல்ல அதிபருடன் வெளியே செல்ல வேண்டுமென்றால், எனக்கென அன்று நான் வைத்திருக்கும் வேலைகளை விட்டு எழ வேண்டும். இதையும் பார்த்துக்கொண்டே அவரோடு செல்ல முடியாது. அவரோடு சென்றுகொண்டே இவற்றைப் பார்க்க முடியாது. அப்படிப் பார்க்க நேரிட்டால் இரண்டிலும் முழுமை இராது.

இ. அவருடைய பணிகளைச் செய்தல்

இயேசு திருத்தூதர்களுடன் சமவெளில் நின்றுகொண்டு மூன்று பணிகளைச் செய்வதாகப் பதிவு செய்கிறார் லூக்கா: மக்களுடன் பேசுகிறார் அல்லது போதிக்கிறார், அவர்களின் பிணிகளை நீக்குகின்றார், தீய ஆவியை அகற்றுகிறார். போதித்தல், நலம் தருதல், தீமையை அகற்றுதல் - இம்மூன்றும்தான் திருத்தூதருடைய பணிகள். திருத்தூதராக இருப்பவர் இந்த மூன்று பணிகளிலும் சமரசம் செய்துகொள்ளவே கூடாது. இன்று பல நேரங்களில் நான் போதிக்கத் தயங்குகிறேன். நலம் தரும் வார்த்தைகளைக் பேசுவதில்லை. என்னிடம் உள்ள தீமையை அகற்றுவதையே பெரிய போராட்டமாகக் கருதுகிறேன். இப்பணிகளோடு சமரசம் செய்துகொள்ளும்போது என் பணியில் பிறழ்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.

இறுதியாக,

'மக்கள் யாவரும் இயேசுவைத் தொட முயன்றனர்' என முடிகிறது நற்செய்தி வாசகம்.

இயேசுவைத் தொடுவதற்கான கருவிகள்தாம் திருத்தூதர்கள். நீங்களும் நானும் திருத்தூதர்களாக இருந்தால் இன்னும் பலர் இயேசுவைத் தொட முடியும் - இன்றும் என்றும்!

Friday, October 25, 2019

கதையாடல்கள்

இன்றைய (26 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 13:1-9)

கதையாடல்கள்

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு கதைகள் (13:1-5), ஒரு உவமை (13:6-9) என்று மூன்று கதையாடல்களைக் கொண்டிருக்கிறது. முதல் இரண்டு கதைகளின் இறுதியில், 'மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே மடிவீர்கள்!' என்ற எச்சரிக்கையும், உவமையின் இறுதியில், 'ஆண்டவர் நம்முடைய நீதித்தீர்ப்பின் நாளைத் தள்ளிப் போடுகிறார்' என்ற நம்பிக்கையும் தரப்படுகிறது. இன்னும் சிலர், இரண்டு கதைகளும் தனிநபர் மனமாற்றத்தை வலியுறுத்த, உவமை குழு அல்லது சமூக மனமாற்றத்தை வலியுறுத்துகிறது என்று சொல்கின்றனர்.

அ. இரண்டு கதைகள்

'சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான்' என்று சொல்கின்றனர். கடவுளுக்குப் பலி செலுத்தச் சென்றவர்களுக்கா இப்படி நடக்க வேண்டும்? என்று நாம் கேட்போம். கடந்த உயிர்ப்பு பெருவிழாத் திருப்பலியின்போது கொழும்பில் குண்டு வெடித்தபோது நாம் இப்படித்தான் கேட்டோம். பிலாத்து இப்படிச் செய்ததாக வரலாற்றுப் பதிவு இல்லை. ஆனால், முதலாம் அக்ரிப்பா தான் கலிகுலாவிற்கு எழுதும் கடிதம் ஒன்றில், 'பிலாத்து இரக்கமற்ற முரடன், காட்டுமிராண்டி' என்று சொல்வதைப் பார்க்கும்போது இந்நிகழ்வு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்த சோகமான நிகழ்வை இயேசுவிடம் சொல்கின்றனர் மக்கள். 'ஐயயோ! அப்படியா! பாவம்! உரோமை அரசு ஒழிக! அப்பாவி உயிர்கள் காக்கப்பட வேண்டும்! என்ன கொடுமை! அச்சச்சசோ!' இப்படி ஏதாவது ஒரு எதிர்வினையை மக்கள் இயேசுவிடம் எதிர்பார்க்க, இயேசுவோ, அவர்கள் எதிர்பாராத ஒன்றைச் சொல்கின்றார்: 'இவர்கள் மற்ற எல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?' இதைச் சொன்ன இயேசுவை அவர்கள் எப்படி சும்மா விட்டார்கள் என்று தெரியவில்லை! 'நாங்க ஒன்னுமே நினைக்கலயேப்பா! நீ பாட்டுக்க எதையோ சொல்ற?' என்று மனதிற்குள் கேட்டிருப்பார்கள். இயேசுவின் சமகாலத்தில் விபத்து அல்லது திடீர் மரணம் போன்றவற்றிற்கு ஒருவரின் பாவமே காரணம் என்று மக்கள் நினைத்தனர். 'மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்!' என்கிறார். 'அவர்கள் இறந்தது பற்றி நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், மனம் மாறுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு இருப்பதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்' எனச் சொல்கிறார் இயேசு. இரண்டாவது நிகழ்வும் இதையொத்ததே - சிலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே! - இந்நிகழ்வு ஓர் இயற்கைப் பேரிடர். முந்தையது மனித வன்முறை.

ஆக, 'வன்முறை, பேரிடர், விபத்து, நோய் எதுவும் எந்நேரமும் நடக்கலாம். ஆகையால் எப்போதும் தயாராய் இருங்கள்' என்று சொல்வதுபோல இருக்கிறது. 'மனம் மாறுதல்' என்பது லூக்காவில் அடிக்கடி வரும் ஒரு கருத்துரு (காண். 3:3, 3:8, 5:32, 13:3, 5, 15:7, 16:30, 17:3, 24:47). 'மனம் மாற்றம்' என்றால் என்ன? பாவத்திலிருந்து மாறுவதா? அப்படி என்றால், பாவம் செய்யாதவர்களுக்கு மனமாற்றம் தேவையில்லையா? இந்தக் கேள்விக்கு இன்றைய முதல் வாசகம் (காண். உரோ 8:1-11) விடை தருகிறது. நம்மிடம் இருக்கின்ற ஊனியல்பின் செயல்கள் மறைந்து ஆவிக்குரிய இயல்பு மலர்தலே மனமாற்றம். இது ஒருநாள் நிகழ்வு அன்று. கொஞ்சம் கொஞ்சமாக நிகழும் நிகழ்வு.

ஆ. ஒரு உவமை

'ஒருவர் திராட்சைத் தோட்டத்தில் அத்த மரம் வைத்திருக்கிறார் ... அத்திமரத்தில் கனிகள் இல்லை ... இதை வெட்டிவிடும் என்கிறார் ... தொழிலாளர் இன்னும் ஒரு வருடம் காத்திருப்போம் என்கிறார்.' திராட்சைத் தோட்டம் என்பது இஸ்ரயேல் மக்களையும், அத்திமரம் என்பது அவர்களின் திருச்சட்டத்தையும் குறிக்கிறது. தொழிலாளர் இயேசுவாகவும் தோட்ட உரிமையாளரைக் கடவுளாகவும் எடுத்துக்கொள்ளலாம். இங்கே இறுதியில் தோட்டக்காரர் காத்திருக்க அனுமதித்தாரா அல்லது மரம் வெட்டப்பட்டதா என்பது தெளிவாக இல்லை. ஆனால், காத்திருக்க வாய்ப்பு நிறைய இருக்கிறது.

இந்த மரம் ஏன் பலன் கொடுக்கவில்லை? (அ) அது தேவையற்ற இடத்தில் இருந்ததாலா? அல்லது (ஆ) அதனுடைய மண் இறுகிப் போனதாலா? அல்லது (இ) ஊட்டச்சத்து குறைவினாலா? வாசகரே விடை காண வேண்டும்.

சில கேள்விகள்:

அ. இயேசுவின் செய்தி இன்று ஏதோ பெந்தேகோஸ்தே பாஸ்டரின் பயமுறுத்தும் செய்திபோல இருக்கிறது. 'சுனாமி வரப்போகிறது. உலகம் அழியப் போகிறது. 666 என்ற எண்ணோடு அந்திகிறிஸ்து பிறந்திருக்கிறான். இதோ இயேசு சீக்கிரம் வருகிறார்' என்று பயமுறுத்தி, இன்றே நீங்கள் மனம் மாறுங்கள் என்று சொல்வதுபோல இருக்கிறது. மனம் மாறியவர்களும் இறந்து போவதை நாம் எப்படி நியாயப்படுத்துவது? இறப்பு எந்த நேரமும் வரலாம். அதற்கேற்ற ஆயத்தநிலையைத்தான் இயேசு மனமாற்றம் என்று அழைக்கிறார். என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நான் எச்சரிக்கையாகப் பார்க்கிறேனா? அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கிறேனா?

ஆ. 'இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்று தலைவர் அத்திமரத்தைக் காட்டிக் கேட்கின்றார். இன்று நான் என்னுடைய குருத்துவக் கல்லூரியில் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறேனா? என்னுடைய வகுப்பறையில் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறேனா? அல்லது என்னுடைய இருப்பால், இயக்கத்தால் கனி தருகிறேனா?

இ. ஊனியல்பு என்னை இறுக்கிவிட வாய்ப்புண்டு. காற்று புகாத அளவிற்கு மண் இறுகினால் மரம் வளர்வதில்லை. இன்று நான் கொத்தி எருப்போட வேண்டிய இடம் எது? என் உள்ளம் கடினமாகிவிட்டதா? என் மனம் ஊட்டம் அற்றுவிட்டதா?

Thursday, October 24, 2019

மழை வரும்

இன்றைய (25 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 12:54-59)

மழை வரும்

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருக்கும் என் நண்பர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக  மருத்துவரைச் சந்திக்கச் சென்றிருந்தார். என் நண்பரின் எடையைப் பார்த்த மருத்துவர், 'நீங்கள் அதிக எடை கொண்டிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் குறைய வேண்டும். இல்லை என்றால் உடல் பருமன் மற்றும் அதையொத்த நோய்கள் வந்துவிடும்' என்றார். மருத்துவரின் எச்சரிக்கையைக் கேட்ட நண்பர் போர்க்கால அடிப்படையில் உடல் எடையைக் குறைத்துவிட்டார். கடந்த வாரம் தன்னுடைய கண்ணத்தில் ஏற்பட்ட கொப்புளம் ஒன்றிற்கு அதே மருத்துவரிடம் சென்றார் நண்பர். 'உன்னுடைய உடல் பருமனைப் பற்றி ஏதாவது சொன்னாரா?' என்று நான் கேட்டேன். 'ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவர் நான் போன முறை பார்த்ததைவிட மிகவும் குண்டாகிவிட்டார். அவருக்குத்தான் இப்போது உடல் பருமன்' என்றார் நண்பர்.

நிற்க.

தன் கண் முன்னே ஒருவர் உடல் பருமன் நோய்க்கான அறிகுறையைக் கொண்டிருப்பதைக் காண்கிற மருத்துவர், அதை அடுத்தவரில் பார்த்தாரே அன்றி, தன்னிடம் அவ்வறிகுறிகளைப் பார்க்கவோ, அல்லது அவரிடம் பாடம் கற்ற அவர் தன்னிடம் செயல்படுத்தவோ இல்லை.

இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வெளிவேடம் என்கிறார் இயேசு.

இன்றைய நற்செய்தி இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: (அ) அறிகுறிகளை அறிந்துகொள்ளுதல், (ஆ) எதிரியிடம் சமரசம் செய்துகொள்தல். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கின்றது.

முதலில், அறிகுறிகளை அறிந்துகொள்ளுதல்.

'மேற்கிலிருந்து மேகம் எழுவதைப் பார்க்கும்போது மழை வரும் என்கிறீர்கள். தெற்கிலிருந்து காற்று அடிக்கும்போது வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்.' பாலஸ்தீனம்-இஸ்ரேலுக்கு மேற்கே மத்திய தரைக்கடல் இருக்கிறது. மேற்கில் மத்திய தரைக்கடலில் உருவாகும் மேகங்கள் மேலைக்காற்றால் அடித்துவரப்படும். அப்படிப்பட்ட நேரத்தில் பாலஸ்தீனம்-இஸ்ரேல் மழை பெறும். பாலஸ்தீனம்-இஸ்ரேலுக்கு தெற்கே எகிப்துப் பாலைவனம் இருக்கிறது. தெற்கிலிருந்து வீசும் காற்று வெப்பக் காற்றாக இருப்பதால் பாலஸ்தீனம்-இஸ்ரரேல் வெப்பம் பெறும். இது பொதுமக்கள் அறிவு. அறிவியல், விஞ்ஞான அறிவு தேவையில்லை. கண்ணுக்கு எதிரே தெரியும் நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்கும் இவர்கள், கண்ணுக்கு எதிரே நிற்கும் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் இவர்களை 'வெளிவேடக்காரர்' என்றழைக்கின்றார் இயேசு. 'வெளிவேடம்' என்பது 'ஒன்றை அறிந்திருந்தும் அதை அறியாததுபோல செயல்படுவது.' இது அறியாமையில் நிகழ்வது அல்ல. வெளிவேடத்தில் ஒருவர் அறிந்திருந்தும் தன் அறிவிற்கு ஏற்பச் செயல்பட மறுக்கிறார். இயேசுவைப் பற்றிய உண்மை அவர்களுடைய கண்களுக்கு நேரே இருந்தது. 'கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?' என்பார்கள். ஆனால், தங்கள் முன்னால் நின்ற கைப்புண்ணைக் காண இவர்கள் நிறையக் கண்ணாடிகளைத் தேடினர். தாங்கள் தேடிய அறிகுறிகள் கிடைத்தும், அவரே மெசியா என்று அறிந்தும், அந்த அறிவின்படி செயல்பட மறுத்தனர்.

இதையே முதல் பகுதியில், 'கண்ணுக்கு முன் நிற்பவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்' என்று எச்சரிக்கிறார் இயேசு.

இரண்டாவதாக, எதிரியிடம் சமரசம் செய்தல்.

'நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?' என்ற கேள்வியோடு தொடங்குகிறார் இயேசு. தொடர்ந்து எதிரியோடு வழியில் சமரசம் செய்துகொள்தல் பற்றிப் பேசுகின்றார். இதை சட்டசமரசம்சார் திட்டமாக மத்தேயு (காண். 5:25-26) பதிவு செய்கிறார். உடனடியாகச் செய்ய வேண்டியதை உடனடியாகச் செய்யவில்லை என்றால் அதன் விளைவு ரொம்ப மோசமாக இருக்கும் என்பதை உணர்த்தும் அறநெறிப் பாடம் இது. ஆனால், இங்கே, லூக்கா, இயேசுவுக்கான உருவகமாகப் பார்க்கிறார். 'எதிரி' என்பவர் 'இயேசு.' 'ஆட்சியாளர்' அல்லது 'நடுவர்' என்பவர் 'தந்தையாகிய கடவுள்.' 'வழக்கு' என்பது 'இயேசுவைப் பற்றிய இடறல்.' 'நீதிமன்ற அலுவலர்' என்பவர் 'ஆவியாராகிய கடவுள்.' 'சிறை' என்பது 'இறைவனைக் காண முடியாத இடம் அல்லது நிலை.' 'கடைசிக் காசு' என்பது 'மனமாற்றம்.' ஆக, இப்போதே ஏற்றுக்கொண்டு வழக்கைத் தீர்த்துக்கொண்டால் பின்னால் துன்பப்படத் தேவையில்iலேயே என்கிறார் இயேசு.

இப்பகுதியில், இவர்களுடைய பிரச்சினை அறிந்துகொள்வது அல்ல, மாறாக, 'இவர்தான், இதுதான்' என்று தீர்மானம் செய்யாமல் இருப்பதுதான். இவர்களால் ஏன் தீர்மானிக்கவோ அல்லது இயேசுவைத் தெரிவு செய்யவோ முடியவில்லை. அவர்கள் இயேசுவைக் குறித்து இடறல்பட்டனர். 'இவரா! இவர் எப்படி?' என்றனர். அல்லது அவர் மேல் கோபம் கொண்டனர். அல்லது அவர்மேல் பொறாமை கொண்டனர். இக்காரணங்களால் அவர்களால் நல்லது என்று தெரிந்தும் நல்லவரைத் தெரிந்துகொள்ள முடியவில்லை.

இதையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 7:18-25), பவுல், 'நான் நன்மை செய்ய விரும்பினாலும் என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது' என்று சொல்வதோடு, 'அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?' என்று புலம்பி இறைவேண்டல் செய்கின்றார்.

உடல்சார் அறிதல்களையும் கடக்கும் ஒருவரே இயேசுவை ஏற்றுக்கொள்ளவும், அவரைத் தெரிவு செய்யவும் முடியும்.

சில கேள்விகள்:

அ. 'புகைப்படிப்பது தவறு,' 'ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது தவறு' என்று நாம் அறிந்தும், அந்த அறிவிற்கேற்ப செயல்பட மறுக்கும் தருணங்களிலும் நாம் வெளிவேடக்காரர்கள் என்பதை நான் அறிகிறேனா? என்னுடைய அறிதலுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியை நான் எப்படி குறைக்கிறேன்?

ஆ. 'சரியான நேரத்தில் இடப்பட்ட ஒரு தையல் ஒன்பது தையல்களைத் தடுக்கும்' என்பது ஆங்கிலப் பழமொழி. 'இப்படித்தான்! இதுதான்!' என்று நான் உடனடியாகத் தீர்மானம் எடுக்கத் தயங்குகிறேனா?

இ. நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான என்னுடைய மனப்போராட்டத்தில் நான் எப்படிச் செயலாற்றுகிறேன்? தீமையை நியாயப்படுத்துகிறேனா? அல்லது இப்போராட்டத்திலிருந்து விடுபட இறையருள் வேண்டுகிறேனா?


Wednesday, October 23, 2019

பிளவு உண்டாக்கவே

இன்றைய (24 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 12:49-53)

பிளவு உண்டாக்கவே

இரண்டு வாரங்களுக்கு முன் எங்கள் குருத்துவக் கல்லூரியில் முன்னாள் மாணவர்களுக்கான கருத்தமர்வு நடைபெற்றது. கருத்தமர்விற்குத் தலைப்பு, 'அருள்பணியாளர்களின் சமூக அக்கறை அல்லது பொறுப்புணர்வு.' செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளர் பேரருள்திரு. பாக்கிய ரெஜிஸ் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள். தன்னுடைய அருள்பணி அருள்பொழிவு அன்று தன்னுடைய தாய் தன்னிடம் சொன்ன வார்த்தைகளோடு - 'கல்வி கற்ற உலகும் பசி அற்ற உலகும் வேண்டும்' - உரையைத் தொடங்கினார். உரையில், டாக்டர். அம்பேத்கர் அவர்களின் மகாவாக்கியம் என்று சொல்லப்படுகின்ற, 'கற்பி-கலகம் செய்-ஒன்றுசேர்' என்பதை, அருள்பணியாளரின், 'இறைவாக்குப்பணி-ஆட்சிப்பணி-அர்ச்சிக்கும் பணி' என்னும் முப்பணிகளோடு ஒப்பிட்டார். மிக அழகான, மிகவும் புதுமையான, மிகவும் ஆழமான ஒப்பீடாக இது அமைந்திருந்தது.

'கலகம் செய்தல்' என்பதே அருள்பணியாளரின் 'ஆட்சிப்பணி' அல்லது 'ஆளும் பணி'.

'கலகம் செய்தல்' என்றால் என்ன?

யாருக்கு எதிராக 'கலகம் செய்தல்' வேண்டும்?

'கலகம் செய்தல்' என்பது 'மனக்கிளர்ச்சி அடைதல்.' அம்பேத்கர் அவர்களின் கூற்றுப்படி, ஒருவர் படிக்கின்ற படிப்பு, 'நான் ஏன் இப்படி இருக்கிறேன்?' 'என்னுடைய குடும்பம் ஏன் இப்படி இருக்கிறது?' 'என்னுடைய சமூகம் ஏன் இப்படி இருக்கிறது?' என்ற கேள்விகளை ஒருவருடைய உள்ளத்தில் எழுப்ப வேண்டும். கேள்வி கேட்கும் உள்ளமே கிளர்ச்சி அடைகிறது. உள்ளுக்குள் தோன்றும் இந்தக் கிளர்ச்சியே ஒருவரைத் தன்னுடைய அறியாமை என்னும்           தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறது. தனிமனிதர் ஒருவருக்குள் நிகழும் இக்கலகம் பின் மாற்றத்திற்கான கலகமாக மாறும். இப்படி 'கலகம் செய்யும்' ஒருவர், இதே போல 'கலக்கம் அடைந்த' இன்னொருவரோடு இணைந்து 'ஒன்று சேர்வார்.' அங்கே மாற்றம் உருவாகும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தான் 'கலகம் செய்ய' வந்ததாகவும், இந்தக் 'கலகம் செய்தல்' ஒருவர் மற்றவரைப் பிரித்துவிடும் என்றும், இறுதியில் இறையாட்சித் தாகம் கொண்டோர் 'ஒன்று சேர்வர்' என்றும் சொல்கின்றார். 'மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்போதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்' என்கிறார். அதாவது, இயேசுவை அல்லது இறையாட்சியைத் தெரிந்துகொள்தல் என்பது 'நாளை பார்த்துக்கொள்ளலாம்' அல்லது 'அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம்' என்ற தெரிவு அல்ல. மாறாக, அது இன்றே, இப்போதே 'பற்றி எரிய' வேண்டும். 'கலகம்' இன்றே என்னுள்ளே நடக்க வேண்டும். இவ்வாறாக, இறையாட்சிக்கான தெரிவின் உடனடித்தன்மையையும், வேகத்தையும் முன்வைக்கிறார் இயேசு. இயேசுவின் இறையாட்சிப் பணியின் சுருக்கமாக இவ்வார்த்தைகள் இருக்கின்றன. இயேசு சென்றவிடமில்லாம் தீயிட்டுக்கொண்டே சென்றார். ஆடம்பர மாளிகையில் பிறக்காமல் மாட்டுக்கொட்டிலில் பிறந்த போதே மெசியா பற்றிய எதிர்பார்ப்பு அரண்மனையில் இருப்பதற்குத் தீயிட்டார். ஆலயத்தில் இரண்டு செப்புக்காசுகள் போட்ட கைம்பெண்ணைப் பாராட்டியபோது தன்னுடைய சமகாலத்து மனிதர்களின் போலியான ஆன்மீகத்திற்குத் தீயிட்டார். 'சமாரியனைப் போல நீயும் செய்' என்று சொல்லி மறைநூல் அறிஞரை அனுப்பியபோது அவருடைய சமகாலத்துத் தீண்டாமைக்குத் தீயிட்டார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம், 'நானும் உன்னைத் தீர்ப்பிடேன்' என்று சொன்னபோது, அவர்களுடைய சட்டத்திலிருந்த ஓட்டைக்கும், அவர்களின் மேட்டிமைப் போக்கிற்கும் தீயிட்டார். இப்படியாக, அவர் சென்றவிடமெல்லாம் தீ பற்றி எரிந்தது. இயேசுவைத் தெரிந்துகொள்பவரும் அப்படியே இருத்தல் வேண்டும்.

மேலும், நெருப்பின் இயல்பு தொடர்ந்து முன்னே சென்றுகொண்டிருப்பது. நெருப்பு ஒருபோதும் பின்வாங்குவதில்லை. அது பின்வாங்குவதால் அது எரித்த பொருள் திரும்ப பழைய நிலைக்கு வருவதும் இல்லை. போகிற போக்கில் அது தான் தழுவும் அனைத்தையும் தன்னகத்தே எடுத்துக்கொண்டே செல்லும். இறையாட்சிக்கான தெரிவைச் செய்கிற எவரும் மீண்டும் தன்னுடைய பழைய இயல்புக்குத் திரும்ப முடியாது. அவர் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே செல்ல வேண்டும்.

இப்படி அவர் முன்னேறிச் செல்லும்போது, 'தெரிவு செய்தோர்' - 'தெரிவு செய்யாதோர்' என்ற பிளவு ஏற்படும். 'தெரிவு செய்தோர்' ஒன்று சேர்வர். தெரிவு செய்யாதோர் பிரிந்து நிற்பர். இந்தப் பிளவு விபத்து அல்ல. இது இப்படித்தான் நடக்கும். தாயின் கருவறையில் தாயோடு குழந்தையை இணைக்கும் தொப்புள்கொடி பிளவுண்டால்தான் குழந்தை உயிர்பெறும். நாம் இறுதியில் இம்மண்ணக வாழ்விலிருந்து பிளவுபட்டால்தான் விண்ணக வாழ்விற்குப் பிறக்க முடியும். உயிரினத்தின் செல்பிளவிலிருந்து, நமக்கு ஆற்றல்தரும் அணுப்பிளவு வரை பிளவு இன்றி உயிரும் வாழ்வும் இல்லை.

சில கேள்விகள்:

அ. இன்று இயேசு கொண்ட வந்த தீயை நாம் சௌகரியமாக அணைத்துவிட்டு, சின்னச் சின்ன மெழுகுதிரிகளை ஏற்றி, அதன் வெதுவெதுப்பை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். குளிரும் ஏற்புடையது, வெப்பமும் ஏற்புடையது. ஆனால், வெதுவெதுப்பு ஆபத்தானது. என்னுடைய வாழ்வில் நான் செய்யும் சமரசங்கள், என்னுடைய வாக்குறுதிகளை நான் தவறும் பொழுதுகள் போன்ற நேரங்களில் எல்லாம் நான் தீயைக் கொஞ்சம் கொஞ்சமாக அணைக்கிறேன். அங்கே மறுபடியும் தீயை நான் எரியச் செய்வது எப்படி?

ஆ. இன்று 'கலகம் செய்யும்' நான், இதே கிளர்ச்சியுடன் இருக்கும் நபரோடு ஒன்றுசேர எதைத் தடையாக உணர்கிறேன்? என்னை நானே இந்த இறையாட்சி இயக்கத்திலிருந்து அந்நியப்படுத்திக்கொள்கிறேனா?

இ. இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 6:19-23), கெட்ட நடத்தை மற்றும் நெறிகேட்டிலிருந்து 'பிளவு உண்டாக்கி' 'தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு உங்களையே அடிமையாக்குங்கள்' என்கிறார் பவுல். இன்று நான் எதிலிருந்து விடுபட வேண்டும்?

Tuesday, October 22, 2019

வீட்டுப் பொறுப்பாளர்

இன்றைய (23 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 12:39-48)

வீட்டுப் பொறுப்பாளர்

நேற்றைய நற்செய்தியில் தன்னுடைய வருகையை 'வீட்டுத் தலைவர்' என்று உருவகம் செய்த இயேசு, இன்றைய நற்செய்தியில் 'திருடன்' என்று உருவகம் செய்கின்றார். கடவுளர்களைத் திருடன் என்று வர்ணிப்பது இந்து மரபில் ('கோகுலத்துக் கண்ணன் வெண்ணெய் திருடுவது') உள்ளது போல கிறிஸ்தவ மரபிலும் உண்டு எனலாம். ஆயத்தமாய் இருந்தால் திருடன் வீட்டிற்குள் வருவதைத் தடுக்கலாம். ஆனால், ஆயத்தமாய் இருந்தாலும் மானிடமகனின் வருகையைத் தடுக்க முடியாது. அவர் வரும்போது நாம் அவருடைய கொள்ளைப் பொருளாய் மாறிவிடுவோம். நம் அன்பிற்குரியவர்களே, 'பொன்னே, புதையலே' என்று நாம் கொஞ்சுவது போல, அவர் நம்மைக் கொஞ்சிக்கொண்டே அள்ளிச் சென்றுவிடுவார்.

இது நற்செய்தியின் முதல் பகுதி.

இரண்டாம் பகுதி பேதுருவின் ஒரு கேள்வியோடு தொடங்குகிறது: 'ஆண்டவரே, இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?' என்கிறார். இயேசுவும் கேள்வியாலே விடை தருகிறார்: 'தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யர்?'

இந்தக் கேள்வியின் பின்புலத்தில்தான் அருள்தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் தன்னுடைய 'எஜமானனே' என்ற பாடலை எழுதுகின்றார்.

எல்லாரையும் 'பணியாளர்' என்று அழைக்கின்ற இயேசு, திருத்தூதர்களை 'பொறுப்பாளர்கள்' என்று அழைக்கின்றார். இவர்கள் இரண்டு நிலைகளில் முதன்மை பெறுகிறார்கள்: ஒன்று, தலைவரின் விருப்பத்தை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். இரண்டு, இவர்களிடம் மிகுதியாகக் கொடுக்கப்பட்டிருப்பதால் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்.

இங்கே இயேசு நம்முடைய பொருளாதார மற்றும் இயற்பியல் விதிகளை ஒட்டிப் பேசுகின்றார். 'அதிகமான பொருளுக்கு அதிகமான பொருள்' என்பது பொருளாதார விதி. 'அதிக உயரத்திலிருந்து விழுந்தால் அதிக ஆபத்து' என்பது இயற்பியல் விதி.

இந்தப் பொறுப்பாளர் இரண்டு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் இயேசு: 'நம்பிக்கைக்கு உரியவர்,' 'அறிவாளி.' நம்பிக்கை உரியவராய் இருத்தல் என்பது மேல்நோக்கிச் செல்லக் கூடியது. அறிவாளியாய் இருத்தல் என்பது எனக்குச் சமமாக அல்லது கீழ்நோக்கி இருத்தல் வேண்டும். இது மாறினால்தான் நிர்வாகப் பிரச்சினை வரும். எடுத்துக்காட்டாக, ஒரு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் தன்னுடைய தலைமை ஆசிரியரிடம் அறிவாளியாய் இருக்க நினைத்தால் அது அவருடைய வேலைக்கு ஆபத்தாய் முடியும். அதுபோல, ஆசிரியர் தனக்குக் கீழிருக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கைக்கு உரியவராய் நடக்க ஆரம்பித்தால் மேலிருப்பவர்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க நேரிடும். ஆக, 'வீட்டுப் பொறுப்பாளர்' இந்த இரண்டு பண்புகளையும் சரியான திசையில் கொண்டிருக்க வேண்டும். இரண்டுமே மதிப்பீடுகள்தாம். ஆனால், அவைகளின் திசைகளே அவற்றை பயனுள்ளவை ஆக்குகின்றன.

இந்தப் பொறுப்பாளர் மூன்று குணங்களைப் பெற்றிருத்தல் கூடாது: ஒன்று, தனக்குத்தானே சாக்குப் போக்கு சொல்லக் கூடாது, இரண்டு, தனக்குக் கீழிருக்கும் பணியாளர்களை அடித்தல் கூடாது, மற்றும் மூன்று, மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் கூடாது. ஆக, இவருடைய மனம், கரம், ஆன்மா அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும்.

மேலும், பொறுப்பாளர் நிலை என்பது இவர் தெரிந்தெடுத்த நிலை அல்ல. மாறாக, இவர்மேல் சுமத்தப்பட்ட ஒன்று. இவர் தன் தலைவரின் விருப்பத்திற்குக் கீழ் தன்னுடைய விருப்பத்தை வைத்துவிட்டார். ஆக, பொறுப்புணர்வு இன்னும் அதிகம் தேவை. இதுவே, இவரிடம் அதிகம் ஒப்படைக்கப்பட்ட நிலை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 6:12-18), 'எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள்' என்று சொல்கிறார் பவுல். அடிமைகள் தங்களுடைய சுதந்திரத்தை விற்றவர்கள். இவர்கள் தாங்கள் விரும்பும் எதையும் செய்ய முடியாது. நாம் ஒன்றுக்கு அடிமையாகிவிட்டால் அது நம்மை ஆட்கொள்ள ஆரம்பிக்கும். இதையே, புனித அகுஸ்தினார், 'கட்டுப்படுத்தப்படாத எந்தப் பழக்கமும் தேவையாக மாறிவிடும்' என்கிறார்.

சில கேள்விகள்:

அ. இயேசுவின் இரண்டாம் வருகையை விட்டுவிடுவோம். அன்றாடம் அவர் என்னிடம் வரும் மூன்றாம் வருகைக்கு - இறைவார்த்தை, அருளடையாளம், இறைமக்கள் வழி - நான் ஆயத்தமாய் இருக்கிறேனா?

ஆ. என் அருள்பணித்தளம், என் குடும்பம் என அனைத்திலும் நான் 'பொறுப்பாளராக' இருக்கிறேன். என்னுடைய நம்பிக்கைக்குரிய நிலையும், அறிவும் சரியான திசையில் இருக்கின்றனவா? என்னுடைய மனம், உடல், ஆன்மா தூய்மையாக இருக்கிறதா?

இ. என் தேவையாக மாறிவிட்ட என்னுடைய பழக்கங்கள் எவை? அல்லது இன்று நான் எதற்கெல்லாம் என்னையே அடிமையாக்கி இருக்கிறேன்? பொறுப்பாளர்கள் தங்களுடைய தலைவருக்கு மட்டுமே உரித்தானவர்கள்!


Monday, October 21, 2019

காத்திருக்கும் பணியாளர்

இன்றைய (22 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 12:35-38)

காத்திருக்கும் பணியாளர்

நான் உதவிப் பங்குத்தந்தையாய் இருந்த ஒரு பங்கில் ஒருநாள் மதிய உணவு வேளை. பங்குத்தந்தை வருவதற்கு கால தாமதம் ஆகிவிட்டது. நான் மேசையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினேன். சாப்பிடத் தொடங்கிய சற்று நேரத்தில் பங்குத்தந்தை வந்தார். வந்தவர், 'நான் எல்லாம் உதவிப் பங்குத்தந்தையாய் இருந்தபோது எவ்வளவு நேரமானாலும் பங்குத்தந்தை வருவதற்காகக் காத்திருப்பேன்' என்று சொல்லிக்கொண்டே சாப்பிட அமர்ந்தார். உடனே நான் மனதிற்குள்ளேயே, 'நான் எல்லாம் பங்குத்தந்தையாய் இருந்தால் அப்படி யாரையும் காத்திருக்க வைக்க மாட்டேன்' என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து சாப்பிட்டேன்.

இன்று யாரும் யாருக்காகவும் காத்திருக்க தயாராக இல்லை.

கணவன் சாப்பிட்டபின் அவனுடைய தட்டில் சாப்பிடலாம் என்று மனைவி காத்திருப்பதில்லை.

மனைவி வந்தவுடன் தூங்கச் செல்லலாம் என்று கணவன் காத்திருப்பதில்லை.

பெற்றோர்கள் வந்தவுடன் டிவி பார்க்கலாம் என்று குழந்தைகள் காத்திருப்பதில்லை.

குழந்தைகள் வந்தவுடன் செபம் செய்யலாம் என்று பெற்றோர்கள் காத்திருப்பதில்லை.

பணம் சம்பாதித்து செலவழிக்கலாம் என்ற மனநிலையை மாற்றி, செலவழித்துப் பின் பணம் கட்டலாம் என்ற மனநிலையில் கிரெடிட் கார்ட் நம்மைக் காத்திருக்க விடுவதில்லை.

காய்கறி வாங்கி, கழுவி, சமைத்து உண்ணக் காத்திருத்தலை ஸ்விக்கி அனுமதிப்பதில்லை.

கடிதம் தந்த காத்திருத்தலை இன்றைய வாட்ஸ்ஆப்பின் இரட்டை புளுடிக் தருவதில்லை.

'காத்திருத்தல்' இன்று 'காலவிரயம்' என்று பார்க்கப்படுகிறது.

ஆனால், சில தொழில்கள் காத்திருத்தலை மூலதனமாகக் கொண்டே இருக்கின்றன. பெரிய இல்லத்தின் வாயில் காப்போன், நான்குவழிச் சாலையில் செய்யும் வாகனங்களுக்குப் பச்சைக் கொடி காட்டி உணவுக்கு அழைப்போன், எல்கையில் துப்பாக்கி பிடித்திருப்போன் என்று நிறைய வேலைகளுக்குக் காத்திருத்தல் தேவைப்படுகின்றன.

இப்படிப்பட்ட தொழில்தான் வீட்டு வேலைக்காரன் அல்லது பணியாளன். இவருடைய தொழிலை உருவகமாக வைத்துத் தன்னுடைய இரண்டாம் வருகைக்கான தயாரிப்பை தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு. பணியாளர்கள் தங்களுக்கென்று எந்த நேரமும் இல்லாதவர்கள். ஏனெனில், அவர்கள் தங்களுடைய நேரத்தை பணத்திற்காக தங்களுடைய தலைவனுக்காக விற்றவர்கள். ஆக, அவர்கள் தலைவன் சொல்வதைக் கேட்டே ஆகவேண்டும்.

இந்தப் பணியாளர் எப்படி இருக்க வேண்டும்? மூன்று பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்:

அ. இடையை வரிந்து கட்டியிருக்க வேண்டும்

'இடையை வரிந்து கட்டுதல்' என்பது வேலைக்கான தயார்நிலையையும், கூர்நோக்குத் தன்மையையும் குறிக்கிறது. ஆங்கிலத்தில், 'டு புல் அப் ஒன்ஸ் ஸாக்ஸ்' என்பார்கள். நாம் ஓய்வெடுக்கும் போது முதலில் செய்வது இடையைத் தளர்த்துவது. அதற்கு எதிர்மாறாக, இடையைக் கூட்டிக் கட்டும்போது வேலைக்குத் தயாராகிறோம். இதையே இன்று 'பிஸினஸ் ஸூட்' என்கிறோம். இந்த ஸூட்டில் இருப்பவர் தான் தயார் என்பதைத் தான் இறுகக் கட்டியிருக்கும் இடைக்கச்சை (பெல்ட்) வழியாக மற்றவருக்குத் தெரிவிக்கிறார். மேலும், இடைக்கச்சையானது வாள் (காண். இபா 3:8), கரண்டி, சாவிக்கொத்து, வாக்கிடாக்கி, டூல் கிட் போன்ற தொழிற்கருவிகளை கைக்கு அருகில் வைத்துக்கொள்ளவும் பயன்படுகிறது. ஆக, இடையை வரிந்துகட்டியிருக்கும் ஒருவர் பணிக்குத் தயார்நிலையில் இருக்கிறார்.

ஆ. விளக்குகள் எரிந்துகொண்டிருக்க வேண்டும்

அணைந்த விளக்குகள் ஓய்வைக் குறிக்கின்றன. எரியும் விளக்குகள் வேலையைக் குறிக்கின்றன. நாம் தயாராய் இருக்கிறோம் என்பதைத் தக்கவைக்கும் நிலையே விளக்குகளை எரியவிடுவது. வீட்டில் விளக்குகள் எரியும்போது நாம் மற்றவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம் என்று அவர்களுக்குக் காட்டுகிறோம். இன்று விளக்குகளை எரித்துக்கொண்டிருந்தால் அது 'மின் ஆடம்பரம் அல்லது அழிவு' என்று கருதப்படும். இயேசுவின் சமகாலத்தில் விளக்கை ஏற்றுவதற்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. ஆக, ஏற்றிய விளக்கை அவர்கள் அணையாமல் பார்த்துக்கொண்டனர்.

இ. காத்திருக்கும் இதயம் வேண்டும்

இதில்தான் எதிர்நோக்கு இருக்கின்றது. நன்றாக ஆடை அணிந்து, விளக்கை ஏற்றினால் போதாது. தலைவர் வருவார் என்ற எதிர்நோக்கு பணியாளருக்கு இருக்க வேண்டும். காத்திருக்கும் இதயம்தான் கதவு திறக்கும். கதவு திறந்தே வைக்கப்பட்டால் திருடர் வந்துவிட வாய்ப்புண்டு. கதவும் பூட்டியிருக்க வேண்டும். தட்டப்பட்டவுடன் அது தலைவர்தான் என்று அறியும் தெளிவும், உடனே திறக்கும் திறமையும் வேண்டும். மேலும், கோபம் அல்லது பயம் இருப்பவர் காத்திருப்பதில்லை. கோபமாய் இருக்கும் மனைவி கணவருக்குக் காத்திருப்பதில்லை. பயம் கொண்டிருக்கும் மாணவர்கள் ஆசிரியருக்காய் காத்திருப்பதில்லை. கோபமும் பயமும் இல்லாத ஒருவரே காத்திருக்க முடியும்.

இப்படி ஒரு பணியாளர் இருந்தால் தலைவர் அவரை வாழ்த்துவார், பாராட்டுவார், நிறையக் கூலி கொடுப்பார்.

இங்கே அவர் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் தலைவர் பணியாளர்களை அமரச் செய்து அவர்களுக்குப் பணிவிடை செய்கின்றார். இதையே இயேசு காத்திருக்கும் நமக்கும் செய்வார்.

ஆக, இந்த உவமை நாம் பணியாளர்கள்போல இருக்க வேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை. மாறாக, தலைவராகிய இயேசுவும் நமக்குப் பணிவிடை செய்யும் பணியாளர்போல இருப்பார் என்று சொல்கிறது. இதையே பவுல் இன்றைய முதல் வாசகத்தில், 'பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது' என்கிறார். ஆக, 'பணியாளர்' என்ற பாவத்திற்கு, 'அருள்' என்ற தலைவர் பணிவிடை செய்கிறார்.

இந்த விழிப்புநிலையையே பேறுபெற்ற நிலை என்கிறார் இயேசு.

சில கேள்விகள்:

அ. இன்று பணியாளருக்குரிய பண்புகள் - இடையை வரிந்து கட்டுதல், விளக்கை ஏற்றிவைத்தல், காத்திருக்கும் இதயம் கொண்டிருத்தல் - என்னில் எப்போதெல்லாம் குறைவுபடுகின்றன? இறைவனைத் தலைவராகக் கொண்டு நான் பணியாளர் ஆவதில் எனக்கு நிறைய சுதந்திரம் இருக்கின்றது. நான் வெறும் பொறுப்பாளர் என்ற உணர்வு என் வாழ்வை இனிதாக்குகிறது - ஏனெனில், நான் என் தலைவருக்கு உரிமையானவன்.

ஆ. இயேசுவே எனக்கு ஒரு பணியாளராக பணிவிடை செய்கிறார் என்றால், அதே பணிசெய்யும் மனநிலை எனக்கு இருக்கிறதா?

இ. 'பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது' என்பது என் வாழ்வியல் அனுபவமாக இருக்கிறதா? என்னுடைய வலுவின்மையை இறைவன் செயலாற்றும் வல்லமையாகப் பார்க்கிறேனா?

Sunday, October 20, 2019

அறிவிலியே

இன்றைய (21 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 12:13-21)

அறிவிலியே

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கிறது. அக்கூட்டத்திலிருக்கும் ஒருவர், 'போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்!' எனக் கேட்கிறார். யூதர்களின் சட்டநூல்கள் என்றழைக்கப்படுகின்ற தோராவில் இச 21:17, எண் 27:1-11, எண் 36:7-9 ஆகிய இடங்களில் சொத்துக்கள் பிரிப்பு அல்லது பரம்பரைச் சொத்துக்கள் பகிர்ந்தளிப்பு பற்றிய விதிகள் கூறப்பட்டுள்ளன. இவ்விதிகளை இயேசுவின் சமகாலத்தில் ரபிக்கள் விளக்கிச் சொல்வார்கள். இயேசுவையும் ஒரு ரபி என்று நினைக்கின்ற கூட்டத்து மனிதர் மிகச் சரியாக அவரை, 'போதகர்' என அழைக்கின்றார். இவருடைய தந்தை இறந்திருக்க வேண்டும். இவர் வீட்டில் இரண்டாவது அல்லது அதற்கு அடுத்த மகனாக இருந்திருப்பார். ஏனெனில் மூத்த மகனுக்கே சொத்தின் பெரும்பான்மை செல்லும். ஆக, தனக்கு வீட்டில் இழைக்கப்பட்ட அநீதியைச் சரி செய்ய இயேசுவை அழைக்கிறார் இந்த இளவல்.

'என்னை உங்களுக்கு நடுவராக நியமித்தவர் யார்?' என்ற இயேசுவின் கேள்வி, மோசேயைப் பார்த்து எபிரேயன் ஒருவன் எகிப்தில் கேட்ட கேள்வி போல இருக்கிறது: 'உன்னை எங்களுக்கு நடுவனாக நியமித்தவன் எவன்?' (காண். விப 2:14). இந்த இடத்தில் தான் நடுவர் இல்லை என்றாலும், இந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்ற இயேசு ஒரு மகாவாக்கியத்தை உதிர்க்கின்றார்: 'எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது!'

இயேசுவின் வார்த்தைகளில் 'பேராசை வேண்டாம்' என்ற எச்சரிக்கையும், 'உடைமைகள் வாழ்வு தருவதில்லை' என்ற உறுதியும் அடங்கியிருக்கிறது.

பேராசை என்பது ஆசையின் எக்ஸ்ட்ரா வளர்ச்சி. ஒன்றுமில்லாமல் இருக்கும் ஒரு முனிவர் பிச்சையெடுக்க மரத்தின் கீழ் அமர்கிறார். ஒரு திருவோடு இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார். பின், தூங்க ஒரு கல் கிடைத்தால் நலம் என்கிறார், பின் ஒரு பாய், பின் சிறிய குடிசை, பின் அருகே சென்று வர மிதிவண்டி. ஆக, ஒன்று கிடைத்தவுடன் மற்றொன்றுக்கு மனம் தாவுகிறது. ஆனால், கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், நமக்குக் கிடைக்கும் இவை எவையும் நம்முடைய வாழ்வை - அதாவது, நமக்குள் இருக்கும் ஆன்மாவைக் - கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை. இவற்றால் உடல் பயனடையுமே தவிர ஆன்மாவிற்குப் பயனேதும் இல்லை. ஆன்மாவிற்குள் தேவையற்ற பயமும், கவலையும், பொறாமையும் வந்து கட்டில் போட்டு படுத்துக்கொள்கின்றன.

மேலும் இயேசு, 'அறிவற்ற செல்வன் உவமை' சொல்கிறார். இந்தச் செல்வன் எதில் அறிவற்றவன்? நிதிமேலாண்மையில் இவன் சிறந்த அறிவாளி. விவசாயத்தில், பணத்தைப் பெருக்குவதில், வேலைக்காரர்களையும், இடத்தையும் மேலாண்மை செய்வதில் இவன் பெரிய ஞானி. ஆனால், எதில் தவறிவிட்டான்? 'நெஞ்சே, நீ ஓய்வெடு, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டியவை கிடைத்துவிட்டன!' என்று சொல்கிறான். இதில் தான் தவறுகிறான்.

'பல்லாண்டுகளுக்குத் தேவையானவை இருக்கின்றன!' ஆனால், 'உனக்குப் பல்லாண்டுகள் இருக்கின்றனவா?' எனக் கேட்கின்றார் கடவுள். 'இந்த இரவே உன் உயிர் உன்னைவிட்டுப் போய்விடும். நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?'

இங்கேயும் இரண்டு விடயங்கள்: ஒன்று, என் பணம் என்னுடைய உயிரை எனக்குள் கட்டிவைக்க முடியாது. ஒருவேளை மருத்துவச் சிகிச்சை செய்யப் பணம் உதவலாம். ஆனாலும், சிகிச்சையின் பலன் பணத்தில் இல்லை. இரண்டு, நாம் இங்கிருந்து செல்லும்போது எல்லாவற்றையும் விட்டுச்செல்ல வேண்டும். இதை மனிதர்களின் பெரிய சாபமாகக் கருதுகிறார் சபை உரையாளர். ஏனெனில், மடையர்களிடம் விட்டுச்செல்ல வேண்டும் என வருந்துகிறார் அவர். நம்ம பக்கத்து வீட்டுக்காரர் வீட்டைக் காலி செய்கிறார் என வைத்துக்கொள்வோம். 'இந்த மிதிவண்டியை எங்களால் தூக்கிப் போக முடியாது. நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்' என நம்மிடம் தந்துவிட்டுப் போகிறார். அந்த மிதிவண்டியால் எனக்குப் பயன் என்றால் நான் அதை மதிப்பேன். ஆனால், எனக்குப் பயனில்லை என்றால் அது எனக்குச் சுமையாக மாறிவிடும். இதே நிலைதான் நாம் சொத்துக்களை விட்டுச்செல்லும்போதும். ஒருவர் அரும்பாடுபட்டு, கண்விழித்து, உடல்நலம் மறந்து சம்பாதிக்கும் சொத்தை, ஒன்றுமே செய்யாமல் தான்தோன்றித்தனமாக சுற்றித்திரியும் மூடன் ஒருவனுக்கு விட்டுச் செல்ல வேண்டுமே என்று புலம்புகிறார் சபை உரையாளர் (காண். சஉ 4:8-20). 'மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர். வருவது போலவே இவ்வுலகைவிட்டுப் போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் எதையும் தம்மோடு எடுத்துச்செல்வதில்லை' (காண். சஉ 4:15).

சில கேள்விகள்:

அ. இயேசு இப்படிச் சொல்வதால் மனித உழைப்பையோ, நேர்மையையோ, செல்வம் சேகரித்தலையோ குறைத்து மதிப்பிடவில்லை. மாறாக, செல்வத்தால் எல்லாம் முடியும் என்ற நம்முடைய எண்ணத்தைக் கேள்விக்குட்படுத்துகின்றார். செல்வத்தைப் பற்றிய என் எண்ணம் என்ன?

ஆ. என்னுடைய பேராசையின் அளவுகோல் எது? என்னிடம் உள்ளவற்றின்மேல் நான் அதிகம் பற்றுக்கொண்டுள்ளேனா? என்னுடைய அடையாளத்தையும் பிறருடைய அடையாளத்தையும் பொருள்களை வைத்து தீர்மானிக்கிறேனா?

இ. 'நான், எனக்கு, என்னுடைய' என்ற நிலையில் என்னைக் கடந்து என்னால் மற்றவரையும் கடவுளையும் பார்க்க முடியாமல் நான் இருக்கிறேனா? இந்த நிலையைக் கடக்க நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கையால் ஆபிரகாம் கடவுளுக்கு ஏற்புடையவரானார் எனப் பெருமை பாராட்டுகிறார் பவுல் (காண். முதல் வாசகம், உரோ 4:20-25)


Thursday, October 17, 2019

புனித லூக்கா

இன்றைய (18 அக்டோபர் 2019) திருநாள்

புனித லூக்கா

இன்று நாம் நற்செய்தியாளரும், பவுலின் உடனுழைப்பாளருமான புனித லூக்காவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்' - என்று இன்றைய முதல் வாசகத்தில் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதுகின்றார்.

'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்' என்ற இந்த வாக்கியத்தில் பவுல் அனுபவிக்கும் தனிமை, இயலாமை, ஆட்கள் பற்றாக்குறை, மற்றும் லூக்காவின் நீங்காத உடனிருப்பு என அனைத்தையும் ஒருசேர நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.


இதையே இன்று நாம் தனிப்பட்ட கேள்வியாகக் கேட்டுப் பார்க்கலாம்.

'இன்றைக்கு என்னுடன் இருப்பது யார்?'

அல்லது 'யார் மட்டுமே என்னோடு இருப்பதாக இன்று நான் உணர்கிறேன்?'

லூக்கா நற்செய்தியாளர் நீங்காத உடனிருப்பை நற்செய்திப் பணிக்கு எப்படித் தர முடிந்தது? இன்று லூக்கா நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

அ. இரக்கத்தின் நற்செய்தி

லூக்காவின் நற்செய்தியை நாம் இரக்கத்தின், மகிழ்ச்சியின் நற்செய்தி என்று சொல்கின்றோம். 'கடவுளின் முகம் இரக்கம்' என்ற புதிய புரிதலைத் தந்தவர் லூக்கா மட்டுமே. இவரின் இந்தப் புரிதல் இயேசுவைப் பற்றி மட்டுமல்ல, கடவுளைப் பற்றியே நாம் புதிய புரிதலைப் பெற்றுக்கொள்ள நமக்கு உதவுகிறது. இன்று கடவுளை நாம் இரக்கம் என்று பார்க்கத் தொடங்கினால், ஒருவர் மற்றவரையும் இரக்கத்தின் கண்கொண்டு நம்மால் பார்க்க முடியும்.

ஆ. இலக்கியத்திறன்

லூக்காவின் கிரேக்க எழுத்து நடையும், வாக்கியப் பயன்பாடும் மற்ற புதிய ஏற்பாட்டு நூல்களின் கிரேக்க எழுத்து நடை மற்றும் வாக்கியப் பயன்பாட்டைவிட நேர்த்தியாகவும், மேன்மையாகவும் இருப்பதாக விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர். தன்னுடைய வாழ்க்கைக்கு தான் தேர்ந்துகொண்டது மருத்துவப் பணி என்றாலும், எழுத்துப்பணியிலும், இலக்கியத் திறத்திலும், சிறந்து விளங்கியதோடல்லாமல், அதை நற்செய்தி எழுதுவதற்குப் பயன்படுத்தியதால் இறவாமைக்குச் சென்றுவிடுகிறார் லூக்கா. இன்று நாம் நம்முடைய திறன்கள் மற்றும் திறமைகளை நற்செய்தி அறிவிப்புக்குப் பயன்படுத்துகிறோமா? எந்த அளவிற்கு நம்முடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள நினைக்கிறோம்?

இ. பயணமும் தொடர்பும்

திருத்தூதர் பணிகள் நூலில் பெரும்பாலும் லூக்கா பவுலோடு உடனிருக்கிறார். மேலும், அவருடைய தொடர்பு மேன்மக்களோடும் அரச அதிகாரிகளோடும் இருக்கிறது. சென்றவிடமெல்லாம் தன்னுடைய மருத்துவப் பணியாலும் பலரை இவர் தன்னிடம் ஈர்த்திருக்க வாய்ப்பு உண்டு. அயராமல் பயணம் செய்வதிலும், மிகுதியான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதிலும் இவர் சிறந்தவராக இருக்கிறார். 'நீ பலரால் பார்க்கப்படவில்லை என்றால், உன்னை எளிதாக மறந்துவிடுவார்கள்' என்பது ஆங்கிலப் பழமொழி. பல இடங்களுக்குப் பயணம் நம் பார்வையை அகலமாக்குகிறது. நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகளும், அத்தொடர்பில் உள்ளவர்களுக்கு நாம் தரும் மதிப்பீடுகளும் நமக்கு பன்மடங்கு பலனைத் தருகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 10:1-9) இயேசு தன்னுடைய சீடர்கள் 72 பேரை இருவர் இருவராக அனுப்புகிறார். அங்கேயும் மேற்காணும் மூன்று பாடங்களே வலியுறுத்தப்படுகின்றன. (அ) சீடர்கள் தங்களுடைய கடவுள் அனுபவத்தை நற்செய்தியாக அறிவிக்க வேண்டும், (ஆ) தங்களுடைய திறனைப் பயன்படுத்த வேண்டும், (இ) நிறையத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்'

இதே வார்த்தைகளை நம் அன்புக்குரிய யாராவது நம்மைப் பற்றிச் சொல்ல முடியுமா? அந்த அளவிற்கு நம் உடனிருப்பு இருக்கிறதா?


Wednesday, October 16, 2019

நினைவுச் சின்னங்கள்

இன்றைய (17 அக்டோபர் 2019) நற்செய்தி (காண். லூக் 11:47-54)

நினைவுச் சின்னங்கள்

திருச்சி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு ஆண்டனி டிவோட்டா அவர்கள் நேற்று அதிகாலை இயற்கை எய்தினார். அவருடைய இறுதி ஊர்வலத் திருப்பலி இன்று காலை திருச்சி புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. ஆயருடைய உடல் இறுதித் திருப்பலிக்குப் பின், அவருடைய விருப்பத்தின்படி, பெங்களுரு புனித யோவான் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டது.

'ஆயர் தன் உடலைத் தானம் செய்தார்' என்ற செய்தி பொதுமக்களிடம் பரவ ஆரம்பித்தபோது அது மூன்றுவகை எதிர்வினைகளை எழுப்பியது. ஒன்று, ஏற்கனவே உடல் தானம் பற்றித் தெரிந்தவர்கள், 'இது ஒன்றும் புதிதல்லவே. நிறையப் பேர் தங்களுடைய உடலை மருத்துவக் கல்லூரியின் ஆய்வுக்காகக் கொடையாகக் கொடுக்கிறார்கள்' என்று அமைதியாயினர். இரண்டு, உடல் கொடை பற்றித் தெரியாதவர்கள், 'இது மாபெரும் செயல். இதுவரை இப்படி யாரும் செய்ததில்லை. இவர் இருக்கும் போதும் தன்னையே கொடுத்தார். இறந்தபின்னும் தன்னையே கொடுத்தார்' என்று ஆயரைப் புகழ்ந்தார்கள். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் இன்னும் உடல் கொடை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. மூன்று, உடல் கொடை பற்றித் தெரிந்தும் தெரியாதவர்கள், 'ஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்டு உடல் குப்பையில் எறியப்படும் என்றால், இறப்புக்குப் பின் வாழ்வு, இறப்புக்குப் பின் உடலோடு வாழ்வு என்ற நம்பிக்கை என்ன ஆவது?' என்று கத்தோலிக்கத் திருஅவையின் கோட்பாடுகளை ஆழமாகப் பிடித்துக்கொண்டிருப்பவர்களின் எதிர்வினை இப்படியாக இருக்கிறது. கண்கொடை செய்தால் உயிர்ப்புக்குப் பின் கண்கள் இருக்காது என்பது இன்னும் சிலரால் நம்பப்படுகிறது. மேலும், இந்த மூன்றாம் வகையினர், 'ஆயரின் இறந்த நினைவை நாம் எப்படிக் கொண்டாடுவது? எந்தக் கல்லறைக்குச் சென்று மாலை இடுவது? அவருக்கு எப்படி மரியாதை செலுத்துவது?' என்று கேட்டு, 'மறைமாவட்டம் மருத்துவ ஆய்வுக்குப் பின் ஆயருடைய உடலை வாங்கி அடக்கம் செய்ய வேண்டும் அல்லது ஆயருடைய நினைவாக சின்னம் ஒன்றை எழுப்ப வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டனர்.

நிற்க.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள்' என்று தன் சமகாலத்துப் பரிசேயர்கள், குருக்கள், மற்றும் மறைநூல் அறிஞர்களைச் சாடுகின்றார் இயேசு.

அதாவது, 'நீங்களே இறைவாக்கினர்களைக் கொலை செய்கிறீர்கள். நீங்களே நினைவுச் சின்னமும் எழுப்புகிறீர்கள்' என்றும் சொல்வதோடு, நீங்கள் எழுப்பும் நினைவுச்சின்னங்களே நீங்கள் கொலையாளிகள் என்பதற்குச் சாட்சிகள் என்று மொழிகின்றார்.

இன்று நாம் நினைவுச்சின்னங்களை விட்டுச்செல்ல நினைக்கின்றோம். அல்லது நம்முடைய பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் நினைவாக நினைவுச்சின்னங்களை வைத்திருக்கின்றோம்.

நினைவுச் சின்னங்கள் வெறும் அடையாளங்களே!

எடுத்துக்காட்டாக, என்னுடைய தந்தையின் கல்லறை என்னுள் தூண்டி எழுப்பும் உணர்வை, அந்தப் பகுதியில் நின்று இன்னொருவருக்காக குழி தோண்டுபவரை ஒன்றும் பாதிக்காது. அவரைப் பொறுத்தவரையில் அது இன்னொரு கல்லறை அவ்வளவுதான். ஆக, நினைவுச்சின்னங்கள் பாதிப் பொருளைத்தான் கொண்டிருக்கின்றன. அதன் மற்ற பாதிப் பொருள் அதைக் காண்பவரின் உள்ளத்தில் இருக்கின்றது.

இறப்பை எதிர்கொள்கின்ற நாம், இறப்பை வெல்ல, அல்லது காலத்தையும் நேரத்தையும் நீட்டித்துக்கொள்ள முனைகின்றோம். 'உன் நினைவாக ஒரு சிறிய தோட்டம், அழகான புத்தகம், அல்லது நல்ல குழந்தை என இந்த மூன்றில் ஒன்றை உனக்குப் பின் விட்டுச்செல்' என்கிறது செல்டிக் பழமொழி. 'மனிதர்கள் நினைவில் நீ நிற்க உன் பெயரில் நகரைக் கட்டி எழுப்பு' என்கிறது சீராக்கின் ஞானநூல்.

அதே வேளையில், 'முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை. அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப் பற்றிய நினைவு இருக்கப்போவதில்லை' (சஉ 1:11) என எச்சரிக்கிறார் சபை உரையாளர்.

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்வது என்ன?

நினைவுச் சின்னங்கள் எழுப்புவது பற்றி இது பேசவில்லை.

ஆனால், அடுத்தவர் நினைப்பார், நினைக்கமாட்டார், அல்லது இப்படி நினைப்பார், அப்படி நினைப்பார் என்பதைப் பொருட்படுத்தாமல், தன்னுடைய ஆன்மாவின் நிறைவிற்கு ஒருவர் வாழ்கிறார் என்றால் அதுவே சிறப்பு.

மேதகு ஆயர் அவர்களின் எளிமை, தாராள உள்ளம், பொதுநிலையினர் பங்கேற்பின்மேல் உள்ள ஆர்வம், திட்டமிடல், சொத்துக்களை உருவாக்குதல், நிதிநிலையைச் சீர்படுத்துதல், சகஅருள்பணியாளர்களோடு உறவு, மேய்ப்புப்பணி கற்பனைத்திறன் போன்ற மதிப்பீடுகள்அவரின் மதிப்பீடுகளாகப் பேசப்பட்டன.

இம்மதிப்பீடுகளே இவரின் நினைவுச் சின்னங்கள்.


Tuesday, October 15, 2019

அடையாளம் தெரியாத கல்லறைகள்

இன்றைய (16 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 11:42-46)

அடையாளம் தெரியாத கல்லறைகள்

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் கொஞ்சம் மென்மையாக பரிசேயர்களைச் சாடத் தொடங்கிய இயேசு அவர்களை இன்று அதிகமாகவே சாடுகின்றார்.

அவர்கள் வெளிப்புறச் சடங்கைக் கடைப்பிடிக்கும் அளவுக்கு உள்ளார்ந்த மதிப்பீடுகளைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், தங்களின் இருப்பு என்னவென்று தெரிந்தும் அதிகம் இறுமாந்து இருக்கிறார்கள் என்றும், மற்றவர்கள்மேல் சுமைகளைச் சுமத்தி தாங்கள் ஓய்ந்திருக்கிறார்கள் என்றும் சொல்கின்றார்.

'நீங்கள் முதன்மையான இருக்கைகளையும் மற்றவர்களின் வணக்கத்தையும் விரும்புகிறீர்கள்' என்று சொல்கின்ற இயேசு, 'நீங்கள் அடிப்படையில் மக்கள் ஏறிச்செல்லும் கல்லறைகள்' என்கிறார்.

கல்லறைகளை யாரும் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. கல்லறைகள் வெளிப்புறத்தில்; அழகாக இருந்தாலும் உள்ளே அழுகியிருப்பவை. கல்லறைகளுக்குள் செல்லும் யாரும் திரும்புவதில்லை.

இப்படியாக, யாரும் ஒரு பொருட்டாகக் கருதாமல், உள்ளுக்குள்ளே அழுகியிருக்கும், மற்றவர்களுக்கு விரக்தியைக் கொடுக்கும் பரிசேயர்கள் தங்களை முதன்மையானவர்களாகவும், அழகானவர்களாகவும், நம்பிக்கை தருபவர்களாகவும் காட்டுவதை இயேசு சாடுகின்றார்.

மொத்தத்தில், இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டுவது தவறு.

இதுவே இறுமாப்பு.

எடுத்துக்காட்டாக, நாம் சாப்பிடும் சிப்ஸ் - லேய்ஸ் - பாக்கெட்.

உள்ளே இருக்கும் சிப்ஸ் என்னவோ குறைவுதான். ஆனால், அதில் இருக்கும் காற்று அதிகம்.

நாம் கொடுக்கும் பணம் காற்றுக்குத்தான் அன்றி சிப்ஸூக்கு அல்ல.

இன்று, இல்லாததையும் இருப்பது போலக் காட்டினால்தான் மதிப்பு என்ற போலியான மதிப்பீட்டைத் தருகிறது இவ்வுலகம்.

ஆனால், இருப்பதில் நிறைவாக இருப்பதே இனிமை என்கிறார் இயேசு.


Monday, October 14, 2019

உட்புறத்தில் உள்ளவற்றை

இன்றைய (15 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 11:37-41)

உட்புறத்தில் உள்ளவற்றை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பரிசேயர் ஒருவரின் வீ;ட்டிற்கு உணவருந்த அழைக்கப்படுகின்றார். உணவருந்தும் முன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைகின்றார். அவரின் உள்ளுணர்வைப் புரிந்துகொள்கின்ற இயேசு உள்புறத் தூய்மையை வலியுறுத்துவதோடு, புதிதாக ஒரு கருத்தையும் சொல்கின்றார்:

'உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும்     தூய்மையாயிருக்கும்.'

இதைச் சொல்லுமுன் 'உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன' என்கிறார் இயேசு.

அப்படி என்றால், ஒருவர் தனக்கு உள்ளே இருக்கின்ற கொள்ளையையும் தீமையையும் தர்மமாகக் கொடுக்க வேண்டுமா?

இல்லை.

உங்களுடைய உள்ளத்தில் தூய்மையாக - அதாவது, பரிவு, இரக்கம், கனிவு, மனவுறுதி, மன்னிப்பு, அன்பு, தாராள உள்ளம் கொண்டிருக்க - இருக்க வேண்டிய நீங்கள் இவற்றை கொள்ளை மற்றும் தீமையால் நிரப்பியுள்ளீர்கள். அவற்றைக் களையுங்கள். களைந்துவிட்டு, பரிவு, இரக்கம், கனிவு ஆகியவற்றை தர்மமாகக் கொடுங்கள் என்கிறார்.

'கொள்ளை, தீமை'

இவை இரண்டும் நம்மை நமக்குள்ளே திரும்பியவர்களாக வாழச் செய்கின்றன.

'கொள்ளையில்' ஈடுபடும் ஒருவர், தனக்குள்ளதும் தனக்கு, பிறருக்குரியதும் தனக்கு என எண்ணிக்கொள்கிறார்.

'தீமையில்' ஈடுபடும் ஒருவர், தன் இருப்பை மட்டும் முன்னிறுத்தி மற்றவரின் இருப்பை அழிக்கின்றார்.

பிறருக்கு உரியதை தனதாக்க நினைப்பவரும், தீமையை அழிக்க நினைப்பவரும் ஒரு போதும் தர்மம் செய்ய முடியாது. அவர் தன்னுடைய பொருள் மட்டுமல்ல, நேரம், ஆற்றல், திறன் எதையும் அடுத்தவருக்குக் கொடுக்க மாட்டார்.

என் மனதில் இன்று இவ்விரண்டு உணர்வுகள் - 'கொள்ளை,' 'தீமை' - இருக்கின்றனவா?

இவற்றை அகற்றினால் நான் என்னை மற்றவர்களுக்குத் தர முடியும்.

அந்தத் தருதலே என்னைத் தூய்மையாக்கும்.


Thursday, October 10, 2019

பெயல்செபூல்

இன்றைய (11 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 11:15-28)

பெயல்செபூல்

இயேசுவுக்கு நாம் மிகவும் ரொமான்டிக்கான பட்டங்களை - கிறிஸ்து, இறைமகன், தாவீதின் மகன், தலைமைக்குரு, அரசர் - என்று நிறையப் பட்டங்களைக் கொடுக்கிறோம். ஆனால், அவரின் சமகாலத்து எதிரிகள் அவருக்கு வழங்கிய பெயர்களில் ஒன்று 'பெயல்செபூல்'.

'பெயல்செபூல்' என்பவர் 'பேய்களின் அரசன் அல்லது இளவரசன் அல்லது தலைவன்' என்று புதிய ஏற்பாடு சொல்கிறது (காண். மத் 12:24, லூக் 11:15). இயேசுவின் எதிரிகள் அவரை பெயல்செபூல் பிடித்திருந்தாகவும் (காண். மாற் 3:24), அவரே பெயல்செபூல் என்றும் (காண். மத் 10:25), பெயல்செபூலின் பெயரைக் கொண்டே அவர் பேய்களை ஓட்டுகிறார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

பழைய கத்தோலிக்க மொழிபெயர்ப்புகளில் 'பெயல்செபூப்' என்று உள்ளது. கிரேக்கத்தில் 'சாத்தானாஸ்' மற்றும் 'டியாபோலோஸ்' என்றால் எதிரி, எதிராளி, குற்றம் சுமத்துபவர், அல்லது தீய ஆவி என்பது பொருள். ஆனால், இவ்வார்த்தைகளுக்கும் 'பெயல்செபூலுக்கும்' நேரடியாக தொடர்பு எதுவும் இல்லை. அக்காடிய மொழியில் 'பெல் தபாதி' என்றால் 'பேச்சின் தலைவன்' என்பது பொருள். 'பெயல்செபூப்' மற்றும் 'பெயல்செபூல்' என்னும் வார்த்தைகள் இஸ்ரயேலின் சமகாலத்துக் கடவுளர்களான 'பாகால்-செபூப்' மற்றும் 'பாகால்-செபூல்' என்பவர்களிடமிருந்து வந்திருக்கலாம். 'பாகால்-செபூல்' என்றால் 'ஈக்களின் கடவுள்' அல்லது 'சாணத்தின் கடவுள்' என்பது பொருள். பெலிஸ்தியக் கடவுளான எக்ரோனும் பெயல்செபூல் என அழைக்கப்பட்டார் (காண். 2 அர 1:2-16). இவருக்கு 'கோவிலின் கடவுள்' என்ற பெயரும் உண்டு. இப்படியாக, பிறஇனத்துக் கடவுள் சாத்தானாகக் கருதப்பட்டு, அவரே சாத்தானின் தலைவனாக வரையறுக்கப்படுகின்றார்.

இயேசு தன்மேல் சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை எப்படி எடுக்கிறார்?

ஒருவேளை நம்மை யாராவது பிற தெய்வங்களின் கடவுளின் பெயரைச் சொல்லி - முருகன், சிவன், இசக்கி, காளி, பெருமாள் - வசை பாடினால் நாம் என்ன செய்வேன்?

நாம் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம். அல்லது பெருமையாக எடுத்துக்கொள்வோம்.

இயேசு இதை இரண்டு வகைகளில் எடுத்துக்கொள்கிறார்:

ஒன்று, 'நான் அலகையின் எதிரி!' என்று உறுதியாகக் கூறுகிறார். பேய் அல்லது அலகையை வெல்ல முடியாத எதிரி என்று ஏற்றுக்கொள்கிறார் இயேசு. தீமையை வெற்றி கொள்தல் என்பதோ, தீமையை முழுமையாக அழித்துவிடலாம் என்பதும் இயலாது என்பதை இயேசு ஏற்றுக்கொள்கின்றார். ஒரு வீடு தனக்கு எதிராக பிளவுபட்டால் அது விழுந்துவிடும். அலகை அலகைக்கு எதிராக எழுந்தால் அலகை விழுந்துவிடும். பெயல்செபூல் ஒருபோதும் அலகைக்கு எதிராக எழும்ப மாட்டார். இயேசு வெளியிலிருந்து அலகையை எதிர்க்கிறார். ஆக, பெயல்செபூல் அல்ல அவர்.

இரண்டு, 'நீங்களே பேய் பிடித்தவர்கள்' என்று உருவகமாகக் கூறுகிறார். ஒருவரை விட்டு வெளியேறுகின்ற பேய் ஒதுங்க இடம் கிடைக்காமல் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே ஏழு பேய்களுடன் வருகிறது. அதாவது, 'உங்களிடமிருந்து நான் பேயை ஓட்டினாலும் நீங்கள் இன்னும் கேடுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்' என்று அவர்களை நினைத்துப் புலம்புகிறார் இயேசு.

நிற்க.

'திரும்பி வந்த அந்த வீடு அழகுபடுத்தியிருப்பதைக் கண்டு'

- இந்த வார்த்தைகளோடு சிந்தனையை முடிப்போம்.

'நல்லவராய் இருப்பவர் வெற்றி பெறுவதில்லை' மற்றும் 'நல்லவராய் இருப்பவரை எல்லாரும் ஏமாற்றுவர்' என்னும் காணொளிகளைக் கண்டேன். அவற்றில் ஆசிரியர் கூறும் கருத்துக்கள் மிகவும் ஏற்புடையவையாக இருந்தன. 'ஏனெனில், நல்லவராய் இருப்பவர் தன்னையே சுருக்கிக்கொண்டு, எந்தவொரு முயற்சியும் எடுக்காமல், யாரோ எங்கோ ஒருவர் ஏற்படுத்திய அறநெறியைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார். அவரை மற்றவர்கள் - குறிப்பாக, தீயவர்கள் - எளிதில் தங்கள் வயமாக்கிக்கொண்டு தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்வார்கள். ஏனெனில், தீமையையும் எதிர்க்கமாட்டார்கள் நல்லவர்கள்' என்று தொடர்ந்து பேசுகிறார் ஆசிரியர்.

நீங்களே சொல்லுங்கள்!

'பேய் வெளியேறியவுடன் வீட்டைக் கூட்டி அழகுபடுத்தியது' அந்த நபரின் தவறா?

ஒருவேளை வீடு அப்படியே கிடந்தால், அழுக்காய்க் கிடந்தால் இன்னும் ஏழு பேய்கள் வரவோ, இன்னும் நிலை கேடுறவோ வாய்ப்பில்லையே!

திரு. பெயல்செபூல் - நம்மிடம், நம்மோடு இருந்தாலும் பிரச்சினை, போனாலும் பிரச்சினை!


Wednesday, October 9, 2019

தொல்லை கொடுக்காதே

இன்றைய (10 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 11:5-13)

தொல்லை கொடுக்காதே

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் இறைவேண்டல் பற்றிக் கற்பித்த இயேசு, தொடர்ந்து இறைவேண்டலில் ஒருவரிடம் இருக்க வேண்டிய விடாமுயற்சியை இன்று நமக்கு உருவகமாகக் கற்பிக்கின்றார்.

என்னுடைய மாணவர்கள் என்னுடைய கதவுகளை இரவு நேரத்தில் தட்டினால் எனக்குக் கோபம் வருவதுண்டு. நாங்கள் இளங்குருமடத்தில் படிக்கும்போது எங்களுடைய அதிபர் தந்தை அவர்களின் கதவுகளை தெரியாமலும் யாராவது தட்டிவிடக்கூடாது. தட்டிவிட்டால் அவ்வளவுதான். ஆனால், பல நேரங்களில் நம்முடைய கதவுகள் தட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

நாம் ரொம்ப மும்முரமாக ஏதாவது எழுதிக்கொண்டிருக்கும் நேரம் யாராவது காலிங் பெல் அடித்தால், ஓடி ஆடிவிட்டு கொஞ்சம் அயரலாம் என்று நினைத்துச் சற்றுச் சாய, 'அம்மா' என்று யாராவது அழைத்தால் நமக்கு நிறைய கோபம் வரும்.

அந்தக் கோபத்தை முதலில் நாம் அமைதியாக மாற்றுவோம். உள்ளே இருந்துகொண்டு இல்லாததுபோல இருக்க முயற்சிப்போம். அந்த நபர் விடவில்லை என்றால் அவருடைய தொல்லையை நீக்குவதற்காகவே வந்து திறப்போம். இப்படி தொல்லையின் பொருட்டு நம்மிடம் உதவிகள் வாங்கிச் சென்றவர் பலர் இருப்பார்கள்.

ஏன் நாம் அடுத்தவரைத் தொல்லையாக நினைக்கிறோம்? அல்லது நமக்கு ஏன் கோபம் வருகிறது?

'என்னுடைய முதன்மையை யாரெல்லாம் அல்லது எதெல்லாம் சிதைக்கிறதோ அது எனக்குத் தொல்லையாகத் தெரிகிறது. அல்லது அந்த நேரத்தில் எனக்கு கோபம் வருகிறது.' இது எல்லாருக்கும்தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் வீட்டிற்குள் இருக்கும் அந்த நபர் புதிதாய் குழந்தை பெற்றவராக இருக்கலாம். குழந்தையைத் தூங்க வைப்பதன் பிரச்சினை அவர்களுக்குத்தான் தெரியும். இப்போது யாராவது எழுப்பினால் தானும் எழுந்து தன்னுடைய குழந்தையும் எழுந்த என வேலைகள் இரண்டாகிவிடும். ஆக, அவருடைய முதன்மை சிதைக்கப்படுவதால் அவர் அதைத் தொல்லை என நினைக்கிறார். ஆனால், தொல்லை கூடக்கூட முதன்மையோடு அவர் சமரசம் செய்துகொள்கின்றார். எழுந்து கதவைத் திறந்து தேவையானதைக் கொடுக்கின்றார்.

இதைக் கடவுளுக்குப் பொருத்திப் பார்த்தால் கடவுளுக்கு என்று எந்த முதன்மைகளும் இல்லை. நாம் எல்லாரும் ஒரே நேரத்தில் அவருடைய முதன்மைகள். ஆக, அவர் நம்மைத் தொல்லை என்று நினைப்பதில்லை. இது முதல் பாடம்.

தொடர்ந்து இயேசு ஒரு மகாவாக்கியத்தைக் கற்பிக்கின்றார்: 'கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்'

இந்த மூன்றிலும் யாருக்குத் தேவை இருக்கிறதோ அவர் தன்னுடைய தேவையை கேட்டோ, தேடியோ, தட்டியோ முதலில் பதிவு செய்ய வேண்டும். பசி இருக்கிற குழந்தை அழ வேண்டும், அல்லது ஏதாவது ஒன்று செய்து தன் தாயிடம் தன் தேவையைப் பதிவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் அந்தத் தேவை நிவர்த்தி செய்யப்படும். அதுவும் எந்தத் தேவையோ அந்தத் தேவை மட்டும். மீன் கேட்டால் மீன், முட்டை கேட்டால் முட்டை.

ஆனால், தந்தை என்ன செய்கிறார்? கேட்பவருக்குக் கேட்டதைத் தராமல் மேலான நற்கொடையான தூய ஆவியைத் தருகின்றார். ஆக, கடவுளின் கொடுத்தல் நாம் கேட்பதையும் மிஞ்சுகிறது.

இயேசுவின் மகாவாக்கியம் நம்முடைய முன்னெடுப்பை வலியுறுத்துகின்றது. இங்கே கடவுள் நம்மைக் கேட்க வைக்கிறார் என்பது பொருள் அல்ல. மாறாக, என்னுடைய தேவை என்ன என்பதை வரையறை செய்யும் சுதந்திரத்தை எனக்குத் தருகின்றார்.

நான் நண்பனாகச் சென்றால் அவர் என்னைப் பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறார்.


Tuesday, October 8, 2019

இதைத்தானே சொன்னேன்!

இன்றைய (9 அக்டோபர் 2019) முதல் வாசகம் (யோனா 4:1-11)

இதைத்தானே சொன்னேன்!

இன்றைய முதல் வாசகப் பகுதியோடு நாம் கடந்த நான்கு நாள்களாக வாசித்த யோனா நூல் நிறைவுபெறுகிறது. யோனா என்றால் புறா என்பது பொருள். நான்கு நாள்கள் நடந்தால்தான் கடக்க முடியும் என்று இருக்கின்ற நினிவே நகரின் குறுக்காக ஒரே நாளில் நடந்து (அதாவது, ஓடி) மனமாற்றத்தின் செய்தியை அறிவிக்கின்றார் யோனா. மக்களும் உடனே மனம் மாறுகின்றனர். கடவுள் தன் மனத்தை மாற்றிக்கொண்டு அவர்களைத் தண்டியாது விடுகின்றார்.

இந்தப் பின்புலத்தில் யோனா மனச்சோர்வு அடைகின்றார்.

அதற்கு முன்பே அவர் வறண்டு போகின்றார். மறைபரப்புப் பணியில் வறட்சி ஒரு பெரிய நோய். அருள்பணியாளர் வாழ்வில் இந்த வறட்சி வரும். சிலருக்கு மறையுரையில் வறட்சி, சிலருக்கு மக்களைச் சந்திப்பதில் வறட்சி, சிலருக்குப் புதிய முன்னெடுப்புக்களை யோசிப்பதில் வறட்சி என்று நிறைய வறட்சிகளை அருள்பணியாளர்கள் சந்திப்பதுண்டு.

யோனாவின் வறட்சி - ஆற்றலின்மை - ஒரு பக்கம். மறுபக்கம் மனச்சோர்வு. 'இவனுக எல்லாம் சாவாங்க என்று பார்த்தால் எல்லாரும் உயிரோடு இருக்கிறார்களே' என்று சோர்ந்துபோகின்றார். யோனாவின் காலத்தில் அசீரியா இஸ்ரயேலுக்கு பெரிய எதிரி. அந்த அசீரியாவின் தலைநகர்தான் நினிவே. நமக்குத் தண்ணீர் தராத அண்டை மாநிலம் வறண்டு போக வேண்டும் என்று நாம் குட்டிச் செபம் செய்வதுபோல அசீரியாவும் அதன் தலைநகர் நினிவேயும் அழிய வேண்டும் என்பது ஒவ்வொரு இஸ்ரயேலரின் ஆசையாகவும் இருந்தது.

யோனா கடவுளிடம் முறையிடுகின்றார்: 'ஆண்டவரே, நான் ஊரை விட்டுப் புறப்படுமுன்பே இதைத்தானே சொன்னேன்? இதை முன்னிட்டே நான் தர்சீசுக்கு ஓட முயன்றேன். நீர் கனிவு மிக்கவர், இரக்கமுள்ளவர், மிகுந்த பொறுமையும் அளவிலா அன்பும் உள்ள கடவுள். அழிக்க நினைப்பீர். பின் மனத்தை மாற்றிக்கொள்வீர் ... என் உயிரை எடுத்துக்கொள்ளும்!'

யோனாவின் புலம்பல் ஏற்புடையதுதான். ஆனால், 'என் உயிரை எடுத்துக்கொள்ளும். வாழ்வதைவிட சாவதே எனக்குச் சிறந்தது' என்று அவர் சொல்வது ஏற்புடையதா?

இதை உளவியலில் 'இறப்பின் தூண்டுதல்' (death instinct) என்கிறார்கள். இது நம்மில் இருக்கும் பாலுணர்வு போன்றது. திடீர் திடீரென்று நம்மில் மேலெழும்பி வரும். அந்த நேரத்தில் அதைச் சரியாக நாம் கையாளவில்லை எனில், நம்மில் தற்கொலை எண்ணத்தையும் செயலையும் தூண்டிவிடும். இது விரக்தியின் காரணமாக வருகிறது. 'இதற்கு மேல் ஒன்றும் இல்லை. எல்லாம் இப்படித்தான்!' என்ற நிலையில் தோன்றுகிறது.

மனச்சோர்வு ஒரு பக்கம். வெயிலின் தாக்கம் மறுபக்கம். பந்தல் அமைத்துப் படுத்திருக்கிறார் யோனா. பந்தலுக்கு மேல் ஆமணக்குச் செடி வளர்ந்து நிழல் தருகிறது. ஆனால் மாலைக்குள் அது உலர்ந்து போகிறது. அதைக் காண்கின்ற யோனா, மறுபடியும், 'வாழ்வதைவிட எனக்குச் சாவதே நல்லது' என்று சொல்வதோடு, தான் இறக்க வேண்டும் என்று செபமும் செய்கின்றார்.

'இந்தக் கோபம் நியாயமானதா?' என்று கேட்கின்ற கடவுள், 'நீ நட்டு வளர்க்காத ஒரு செடிக்கே கவலைப்படுகிறாயே? நான் என்னுடைய மக்களுக்கு இரக்கம் காட்டக்கூடாதா?' என்கிறார்.

இந்தப் பகுதி நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை:

அ. உறுதித்தன்மை விட வேண்டும்

அல்லது உறுதியற்றநிலையை ஏற்கப் பழக வேண்டும். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற நிலையில் வாழ்க்கை எப்போதும் பெர்ஃபெக்ட்டாக இருப்பதில்லை. இப்படிச் செய்தால் அப்படி நடக்கும் என்று நாம் எதிலும் உறுதியாகச் சொல்ல முடியாது. இப்படிச் செய்தால் அப்படியும் நடக்கலாம் வேறு மாதிரியும் நடக்கலாம் என்று ஏற்கப் பழக வேண்டும். யோனா வாழ்க்கையை கணிதம் போல எண்ணினார். கணிதத்தில் வியப்பு இல்லை. வாழ்வில் நிறைய வியப்புக்கள் உண்டு. வாழ்வின் ஆச்சர்யங்களுக்கு நாம் மனம் திறந்தால் விரக்தி வருவதில்லை.

ஆ. மனச்சோர்விற்கு ஆமணக்கு செடி உண்டு

நம்முடைய மனச்சோர்வு மற்றும் விரக்தி நேரத்தில் கண்டிப்பாக ஆமணக்குச் செடி ஒன்று அங்கே வேகமாக முளைக்கும். அது நபராக இருக்கலாம், நிகழ்வாக இருக்கலாம், இடமாக இருக்கலாம். சிறிது காலமே அது இருந்தால்கூட நம் மனச்சோர்வை அது அகற்றும். ஆனால், அது அகன்றாலும் நாம் சோர்வடையக் கூடாது.

இ. எல்லாரும் இரக்கத்திற்குரியவர்கள்

நினிவே நகர மக்கள் வேற்றினத்தார் என்பதற்காக யோனாவும் அவருடைய இனத்தாரும் அவர்கள்மேல் கோபம் கொள்கின்றனர். கடவுள் அக்கோபத்தைத் துடைக்கின்றார். வேற்றினத்தாரும் தனக்குரியவர்கள் என்று ஏற்கின்ற கடவுள் அவர்களுக்குத் தம் இரக்கத்தையும் பரிவையும் காட்டுகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 11:1-4) இயேசு தன்னுடைய சீடர்களுக்குச் செபிக்கக் கற்றுக்கொடுக்கின்றார். இயேசுவின் செபத்தில் வாழ்வின் தூண்டுதல் (life instinct) (இரக்கம், மன்னிப்பு, உழைப்பு, விடுதலை) மட்டுமே இருக்கின்றது. நம் வாழ்விலும் இத்தூண்டுதல் மட்டுமே வெல்வதாக!

Monday, October 7, 2019

தேவையானது ஒன்றே

இன்றைய (8 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 10:38-42)

தேவையானது ஒன்றே

நேற்றைய நற்செய்தி வாசகப் பகுதியின் (நல்ல சமாரியன் எடுத்துக்காட்டு) தொடர்ச்சியாக இருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம் (மார்த்தா-மரியா நிகழ்வு).

'நீயும் போய் அவ்வாறே செய்யும்' என்று தன்னிடம் கேள்வி கேட்ட மறைநூல் அறிஞரை வீட்டிற்கு அனுப்பிய இயேசு பெத்தானியாவிற்குச் செல்கின்றார். அங்கே பெண் ஒருவர் - மார்த்தா - இயேசுவைத் தன் வீட்டில் வரவேற்கிறார்.

வரவேற்றது என்னவோ மார்த்தாள்தான். ஆனால், இயேசுவோடு உடனிருந்தது மரியாள்தான்.

மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகிறாள். தனிமையாக விடப்பட்டதாக உணர்கிறாள்.

மரியாள் ஒன்றும் செய்யவில்லை.

'நீயும் போய் அவ்வாறே செய்யும்' என்று சொல்லி, 'நிறைய செயல்கள் செய்ய' மறைநூல் அறிஞரை அனுப்பி வைத்த இயேசு, ஒன்றும் செய்யாத மரியாளைப் புகழ்வதோடல்லாமல், 'ஆனால் தேவையானது ஒன்றே' என்று மரியாளின் சும்மாயிருத்தலை முன்வைக்கின்றார்.

நாம் சாலையில் காயப்பட்டுக் கிடக்கிறவர்களின் அருகில் சென்று அவர்களுக்கு மருந்திட்டு சாவடிக்கு அழைத்துச் சென்றாலும், மீதியான பணத்தைத் திருப்பிக் கொடுக்க மீண்டும் அங்கே சென்றாலும், தொடர்ந்து இப்படி நிறைய வேலைகள் செய்துகொண்டே இருந்தாலும், 'தேவையான ஒன்று' என்னவென்றால் 'ஒன்றும் செய்யாமல் இருப்பது.'

நம்முடைய கையில் இருக்கும் ஸ்மார்ட்ஃபோனை எடுத்துக்கொள்வோம். காலையில் துயில் எழுந்தது முதல் அது நம்மோடேயே இருக்கிறது. அழைப்புகள், குறுஞ்செய்திகள், ஓலா முன்பதிவுகள், கூகுள் வரைபடம், இணையதள மேய்தல், துயில் எழுப்பி, வங்கி பரிவர்த்தனைகள் என அது நிறைய வேலைகள் செய்கின்றது. அதன் உயிராற்றல் (பேட்டரி) கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது. உடனடியாக அதற்குத் தேவை சார்ஜிங் பாய்ண்ட்.

சார்ஜிங் பாய்ண்ட்டில் இருக்கும் ஃபோன் ஒரு வேலையும் செய்வதில்லை. ஆனால், அப்படி ஒன்றும் செய்யாமல் சும்மாயிருந்தால்தான் அது தன்னையே முழுமையாக ஆற்றல்படுத்திக்கொள்ளவும், அடுத்த வேலைக்குத் தயாராகவும் முடியும். 'என்னால் நிறைய வேலைகள் செய்ய முடியும்' என்ற எண்ணத்தில் அது செயலாற்றிக்கொண்டே இருக்கவும் முடியாது. பேட்டரி இல்லை என்றால் ஸ்மார்ட்ஃபோன் வெறும் பேப்பர் வெயிட்தான்.

நிற்க.

'ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது.'

இன்று தேவையற்ற நிறைய காரியங்களை நாம் செய்கின்றோம். நிறைய காரியங்களுக்கு நம்மையும் நம் நேரத்தையும் விற்கின்றோம். காணொளி, வீடியோ கேம், அரட்டை, டிக் டாக், ஸ்டேடஸ் என்று நாம் நிறைய நேரத்தையும், அடுத்து என்ன நடக்கும் என்ற வீண் கற்பனையிலும் நேரத்தையும் ஆற்றலையும் விற்றுக்கொண்டே இருக்கின்றோம்.

இவை அனைத்தும் தேவையற்றவையே. தேவையானது அவருடைய காலடிகளில் அமர்வது.

இதை ஒருவர் தானாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

இங்கே அருள்பணி பயிற்சி நிலையத்தில் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி செபிக்க அழைத்தால் அவர்கள் பெயரளவில் வந்து அமர்வார்கள். ஆனால், 'உங்களுக்கு விருப்பமானால் இதைச் செய்யுங்கள்' என்று சொல்லி, அவர்கள் தாங்களாகவே தெரிவு செய்து செபிக்க வரும்போது மிகவும் ஆர்வமாக வருகிறார்கள். ஆக, தேவையான அந்த ஒன்றை நானே உணர்ந்து தேர்ந்து தெளிய வேண்டும்.

அதை மட்டும் நான் தேர்ந்து தெளிந்து அவருடைய பாதங்களில் அமரும் இன்பத்தை நான் பெற்றுவிட்டால் வேறு எதுவும் என்னை அவரிடமிருந்து பிரிக்க முடியாது.

குறைவான ஒரு குடத்தின் அருகில் செல்லும் இன்னொரு வெற்றுக்குடம் குறைவாகவே நிரம்பும்.

ஆனால், நிறைவான ஊற்றின் அருகில் செல்லும் வெற்றுக்குடம் பொங்கி வழியும்.

இன்று, நான் அன்றாடம் ஏறி இறங்கும் கழுதைகள் எத்தனை?

நான் சாவடிக்குச் சுமந்து செல்ல வேண்டிய ஆள்கள் எத்தனை?

நான் மறுபடியும் செலுத்த வேண்டிய பில்கள் - தெனாரியங்கள் - எத்தனை?

ஆனால்,

தேவையானவை இவை அல்லவே!

தேவையானது ஒன்றே!

Sunday, October 6, 2019

அவருக்கு இரக்கம் காட்டியவரே

இன்றைய (7 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 10:25-37)

அவருக்கு இரக்கம் காட்டியவரே

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருச்சட்டத்தில் முதன்மையான கட்டளை எது என்று விளக்குகின்ற இயேசு, தொடர்ந்து, 'நல்ல சமாரியன்' எடுத்துக்காட்டைத் தருகின்றார்.

நான் ஒரு நல்ல சமாரியனா? என்று என்னையே கேட்டால், 'இக்கதையை வாசிக்கும் வரை நான் ஒரு நல்ல சமாரியனாக இருக்கிறேன். இவனைப் போல நானும் இருக்கிறேன், இருப்பேன்' என்றெல்லாம் சொல்வேன்.

ஆனால், கள்வர் கையில் அடிபட்டுக் கிடப்பவர்களை நான் சாலையில் காணும்போது, இக்கதையின் குரு, லேவியரை விட வேகமாக நான் கடந்துவிடுகிறேன். நான் அவசரமாகச் செல்ல வேண்டிய வேலை எதுவும் இல்லை என்றாலும் நான் கடந்து விடுகிறேன். சிக்னலில் என் கார் நிற்க, எனக்கு முந்தைய காரில் உள்ளவரிடம் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் பார்வையற்ற தம்பதியினர் என் காருக்கு அருகில் வருவதற்குள் சிக்னல் விழுந்துவிட வேண்டும் என்று குட்டிச் செபமும் கூட சொல்லியிருக்கின்றேன்.

நான் இப்படி இருப்பதற்கு பல காரணங்கள்:

சில நேரங்களில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்.

சில நேரங்களில் என்னிடம் உதவி பெற்றவர்கள் என் கழுதையில் ஏறிக்கொண்டு என்னை நிர்கதியாக்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

'எல்லாருக்கும் உதவி செய்ய முடியுமா?' என்று நானே கேட்டுக்கொள்கிறேன்.

'இவர்கள் ஏமாற்றுக்காரர்கள்' என்று அவர்களைக் கடிந்திருக்கிறேன்.

'இந்த அரசாங்கம் சரியில்லை' என்று விரலை இன்னொரு பக்கம் திருப்பியிருக்கிறேன்.

'என்னிடம் சில்லறை காசுகள் இல்லை' என்று சொல்லியிருக்கிறேன்.

ஆனாலும்,

சில நேரங்களில் தேவையில் இருப்பவர்களுக்கு உதவியிருக்கிறேன்.

ஆனால், இந்த அடுத்திருப்பவர் போல நான் உதவியதில்லை.

அவர் அப்படி என்ன செய்தார்?

'எண்ணெயும் மதுவும் வார்த்தார்' - நானும் அதைச் செய்திருக்கிறேன். ஆனால், அவர் இன்னும் கொஞ்சம் கடந்து சென்றார். தன் வாகனத்தில் ஏற்றி, சாவடிக்குக் கொண்டு சென்று, சாவடிக்காரனிடம் இருநாள் சம்பளத்தையும் கொடுத்து, 'இன்னும் தேவைப்பட்டால் திரும்பி வரும்போது செலுத்துகிறேன்' என்று சொல்லிச் செல்கின்றார்.

கண்டிப்பாக அவர் திரும்பிச் சென்று சந்தித்திருப்பார். சாவடிக்காரனின் இழப்பிற்கு ஈடு செய்திருப்பார்.

'நான் இலவசமாகச் செய்தேன். நீயும் செய்' என்று சாவடிக்காரனிடம் இவர் இறைஞ்சவும் இல்லை. அவனுக்கு குற்றவுணர்வைத் தூண்டவும் இல்லை. முழுக்க முழுக்க அந்த மனிதனுக்காகப் பொறுப்பேற்கிறார்.

ஆக, இரக்கத்தையும் தாண்டி, அவருடைய பரிவும் அர்ப்பணமும் எனக்கு ஆச்சர்யத்தை உருவாக்குகிறது.

சில நேரங்களில் ஏற்கனவே குதிரையில் சென்றுகொண்டிருப்பவர்களுக்கு நான் உதவிக் கொண்டிருக்கும் மும்முரத்தில் சாலையில் கிடப்பவர்களைக் கண்டும் காணாமல் சென்றிருக்கிறேன்.

'நீயும் போய் அவ்வாறே செய்யும்' என்று இயேசு சொல்வது என்னை உந்தித் தள்ளுகிறது.

ஆனால், எனக்கு அடுத்த வேலை காத்திருப்பில் இருக்கிறது. என் வேலையைச் செய்வதிலும் நான் நல்ல சமாரியனாய் இருக்க முடியும். எனக்கு அருகில் இருக்கும் அருள்தந்தைக்கு உதவி செய்வது, பாடம் சரியாக படிக்க முடியாத மாணவன்மேல் பரிவு காட்டுவது, கால் அடிபட்டுக் கிடக்கும் காவலருக்கு உதவி செய்வது, நோயுற்று இருக்கும் அருள்தந்தையின் ஆடைகளைத் துவைத்துத் தருவது - இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக நானும் மாற முடியும் சமாரியனாய்.


Friday, October 4, 2019

வெற்றியில் மகிழ்தல்

இன்றைய (5 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 10:17-24)

வெற்றியில் மகிழ்தல்

இன்று நம்மில் யாராவது எதிலாவது வெற்றி பெற்றால், அதை நம் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் பகிரும்போது அவர்கள் அந்த வெற்றியைத் தங்கள் வெற்றி போல நினைத்துக் கொண்டாடினால் நாம் பேறுபெற்றவர்கள்.

உளவியல்படி, நம்முடைய துன்பத்தில் சேர்ந்துகொண்டு பலர் அழுவார்கள். ஆனால், நம் வெற்றியை அவர்கள் வெற்றியாக வெகு எளிதில் கருதமாட்டார்கள்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவால் இருவர் இருவராக பணிக்கு அனுப்பட்ட சீடர்கள் இயேசுவிடம் திரும்புகிறார்கள். 'ஆண்டவரே, உம் பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன!' என மிகவும் மகிழ்கின்றனர். இயேசு அவர்களின் வெற்றி கண்டு மகிழ்கின்றார். ஒரு நல்ல தலைவனின் மகிழ்ச்சி பல தலைவர்களை உருவாக்குவதில்தான் இருக்கின்றது. 'ஐயயோ! இவர்களுக்கும் அந்த வல்லமை கிடைத்துவிட்டதா?' என்று அவர் வருத்தப்படவில்லை.

மேலும், 'சாத்தான் விழக் கண்டேன்' என்று பெருமிதம் கொள்ளும் இயேசு, 'இதற்காக அல்ல, மாறாக உங்கள் பெயர் விண்ணகத்தில் எழுதப்பட்டது என்பதற்காக மகிழுங்கள்!' என்கிறார். தொடர்ந்து, சீடர்களின் வெற்றிக்காகத் தன் தந்தையைப் புகழ்கின்றார், 'நீங்கள் பேறுபெற்றவர்கள்' என்று அவர்களை வாழ்த்துகின்றார்.

ஆக, இயேசுவிடம் எந்தவொரு ஒப்பீடோ, பொறாமையோ இல்லை.

தனக்கு அடுத்திருப்பவர்கள், அதிலும் குறிப்பாக தனக்குக் கீழிருக்கும் சீடர்களின் வெற்றியைத் தன் வெற்றியாகக் கொண்டாடுகிறார்.

இது எப்படி அவரால் முடிந்தது? அல்லது இன்று நான் எனக்கு அடுத்திருப்பவர் வெற்றி பெறுவதை கொண்டாடத் தடையாக இருக்கும் பொறாமை அல்லது ஒப்பீட்டை அகற்ற நான் என்ன செய்ய வேண்டும்?

மூன்று விடயங்கள்:

ஒன்று, வெற்றி பெற்றவரை வாழ்த்துவது. நேருக்கு நேர் வாழ்த்தும்போது எந்தவித எதிர்மறை எண்ணமும் மனத்தில் ஒட்டிக்கொள்வது இல்லை.

இரண்டு, அவருடைய வெற்றியில் கடவுளின் கரத்தைக் காண்பது. ஆக, என்னில் பிறரில் என எல்லாரிலும் செயலாற்றுபவர் கடவுளே என அறிக்கையிடுதல்.

மூன்று, அவருடைய பேறுபெற்ற, உயர்ந்த நிலையைச் சுட்டிக்காட்டுவது. அதாவது, அவருக்கு அடுத்த நிலையில் தான் நின்றுகொள்வது.

இம்மூன்றையும் செய்வதற்கு பரந்த மனமும் தாராள உள்ளமும் மிகவும் அவசியம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். பாரூ 4:5-12, 27-29) இதற்கு மாறான சோகமான நிகழ்வு ஒன்றைப் பார்க்கிறோம். 'சோகமான நிகழ்வில் இறைவனை அழையுங்கள். அவரே உங்களுடைய மகிழ்ச்சியைத் திரும்பத் தருவார்' என மக்களுக்கு அறிவுறுத்துகின்றார் பாரூக்கு.

சோகம், வெற்றி இரண்டிலும் நம் உள்ளம் பிறரைத் தேடுகிறது.

இவை இரண்டையும் பகிர்ந்து கொள்ளத் தோள்கள் பெற்றவர்கள் பேறுபெற்றவர்கள்.


Thursday, October 3, 2019

அசிசி நகர் பிரான்சிஸ்

இன்றைய (4 அக்டோபர் 2019) திருநாள்

அசிசி நகர் பிரான்சிஸ்

இன்று நாம் அசிசி நகர் புனித பிரான்சிஸின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறோம். 'இவர் பெற்றிருந்த மகிழ்ச்சி, மனநிறைவு, மனச்சுதந்திரம் ஆகியவற்றை நாங்களும் பெற்றுக்கொள்ள வரம் தாரும்' என்று இன்றைய திருப்பலி சபை மன்றாட்டு செபிக்கிறது.

மகிழ்ச்சி, மனநிறைவு, மனச்சுதந்திரம்.

இன்று நமக்குத் தேவையான மதிப்பீடுகளும் கொடைகளும் இவை.

இந்நாள்களில் சிறுநுகர் வாழ்வு ('மினமலிஸ்ட் லிவிங்') அதிகமாக பேசப்படுகிறது, செயல்படுத்தப்படுகிறது. வீட்டிலிலுள்ள தொலைக்காட்சி, கணிணி, மியூசிக் ப்ளேயர், புத்தகங்கள், ப்ளான்னர் என அனைத்தையும் அகற்றிவிட்டு, அனைத்தையும் உள்ளங்கைக்குள் ஸ்மார்ட்ஃபோனாக வைத்துக்கொள்ளச் சொல்கிறது சிறுநுகர் வாழ்வு. பொருள்கள் இன்று குறைந்து நம் வீடு வெறுமை ஆனாலும், நம் மனத்தில் இன்னும் வெறுமை இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

பிரான்சிஸ் பெர்னாதோனே என்ற செல்வ இளவலாக இருந்த அவர் தன்னுடைய நகரின் முற்றத்தில் தன் மேலாடையையும் அகற்றிவிட்டு தன்னுடைய இறைவனைப் பின்பற்றிச் செல்பவராக மாறுகின்றார் அசிசி நகர் பிரான்சிஸ்.

இவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏழு வாழ்க்கைப் பாடங்களை இன்று சிந்திப்போம்.

1. நம் அனைவருக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு

'பிரான்சிஸ் பெர்னாதோனே தன்னுடைய 20 வயது வரை நேரத்தையும் பணத்தையும் வீணாக்குகின்ற இளவலாக இருந்தார்' என்று பிரான்சிஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும், 'நானே பாவத்தில்தான் இருந்தேன்' என்று பிரான்சிஸூம் எழுதுகின்றனர். ஆனால், இயேசுவைப் பின்பற்றிய நாளில் அவர் தன்னுடைய இறந்தகாலத்தை அப்படியே துடைத்தெறிந்தார். குற்றவுணர்வால் குறுகிவிடவோ, தன்னுடைய பிரமாணிக்கமின்மையை முன்னிட்டு அழவோ இல்லை அவர். இன்று நான் என்னுடைய இறந்தகாலத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு, என்னை மன்னிக்கத் தயாரா?

2. கடவுள் நம் துன்பத்தின் வழியாகப் பேசுகிறார்

தன்னுடைய உடலில் இயேசுவின் ஐந்து காயங்களை ஏற்கும் வரையும், ஏற்ற பின்பும் நிறைய துன்பங்களை அனுபவித்தார் பிரான்சிஸ். தனிமை, விரக்தி, சோர்வு, உடல்நலக்குறைவு, சகோதரர்களின் புரிந்துகொள்ளாமை என நிறைய துன்பங்களை எதிர்கொண்டாலும் இவை அனைத்திலும் இறைவனின் முகத்தைப் பார்த்தார் பிரான்சிஸ். என்னுடைய வாழ்வில் தனிமை, விரக்தி, சோர்வு, ஏமாற்றம், பிரிவு வரும்போது, 'ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு வியப்பாயிற்று' என்று என்னால் சொல்ல முடியுமா?

3. நம்முடைய பாதுகாப்பு வளையத்திலிருந்து நாம் வெளியேற வேண்டும்

நம்முடைய வலுவின்மையே நம்முடைய பாதுகாப்பு வளையம். 'இப்படியே இருந்துவிடலாமே!' 'இந்த நுகத்தை நான் அப்படியே என் கழுத்தில் மாட்டிக்கொள்கிறேனே' என்று நாம் விடமுடியாத பல வலுவின்மைகளைத் தூக்கிக்கொண்டு திரிகிறோம். 'விடமுடியாத பழக்கம் விரைவில் தேவையாகிவிடும்' என எச்சரிக்கிறார் அகுஸ்தினார். பிரான்சிஸ் தன்னுடைய விருப்பு, வெறுப்பு என்னும் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறினார். பிரான்சிஸிடம் இருந்த மிகப்பெரிய வலுவின்மை அவர் மற்றவர்கள் மேல் காட்டிய வெறுப்பு. ஆனால், இப்படி வெறுப்பு காட்டிய அவர் காலப்போக்கில், 'அண்ணன் கதிரவனே, தங்கை நிலாவே' என்று இயற்கையின்மேலும் அன்பு பாராட்டுகிறார். ஏனெனில், அவர் தன்னுடைய பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறினார்.

4. மனசே, உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

தானும் தன்னுடைய சபையின் சகோதரர்களும் தாழ்ச்சி, எளிமை என்று வாழ வேண்டும் என்றும், நிறைய தவமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்த பிரான்சிஸ் சில நேரங்களில், நம் மனதிற்கும் உடலுக்கும் தளர்வு தேவை என்று உணர்ந்தார் பிரான்சிஸ். நோன்பு இருந்த ஓர் இரவில் தன்னுடைய உடன் சகோதரர், 'ஐயோ! பசி! சாகப் போகிறேன்!' என்று அழுது புலம்பியபோது, உடனடியாக உணவு கொடுத்த பிரான்சிஸ், அச்சகோதரரைக் கடிந்துகொள்ளவில்லை.

5. குழப்பம் நல்லதுதான்

ஆண்டவரின் ஆலயத்தைக் கட்டி எழுப்பிய, ஆண்டவரின் காயங்களைத் தன்னகத்தே தாங்கிய, ஆண்டவரிடம் இறைவேண்டலில் இணைந்திருந்த பிரான்சிஸின் வாழ்வில் நிறைய மனக்குழப்பங்களும் இருந்தன. ஐயமும், குழப்பமும் அவரை பல நேரங்களில் வருத்தின. குழப்பங்கள், பயம் வரும்போதெல்லாம், 'இது ஏன்?' என்று தன்னையே இன்னும் குழப்பிக்கொள்ளாமல், காத்திருந்தார். ஐயம் என்னும் மேகம் வேகமாக மறைந்தது, கரைந்தது. இன்று என்னுடைய வாழ்வில் குழப்பமான பொழுதுகளில் நான் எவ்வளவு அங்கலாய்க்கிறேன்? ஏன் பொறுமை இழக்கிறேன்? 'கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்' (காண். உரோ 8:28) என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா?

6. கற்புநெறி போராட்டமும் நல்லதே

ஆண்டவருக்கான அர்ப்பணம் தன் உடலிலிலும் இருக்க வேண்டும் என்று விரும்பியவர் பிரான்சிஸ். ஆனால், அதற்கு நிறையச் சோதனைகள் வந்தன. அவற்றை எதிர்கொண்டார் அவர். தான் உடல் அளவில் கிளர்ச்சி அடைந்தபோதெல்லாம் வெளியில் ஓடிவந்து பனியில் உருண்டும் அதைச் சரி செய்தவர். ஒருமுறை இவரைச் சந்திக்க இவருடைய தோழி கிளாரா புறப்பட்டு வரவா என்று கேட்டபோது, 'நம் வாசலில் லீலீ மலர் பூக்கும் நேரம் நீ வா!' என்று அவரைச் சந்திப்பதைத் தள்ளிப் போடுகிறார் பிரான்சிஸ். பனி பெய்துகொண்டிருந்த நேரத்தில் லீலி எப்படி பூக்கும்? 'நான் சந்திக்கும் ஆன்மீகச் சந்திப்பையும் உடல் சந்திப்பாக இவர் நினைத்துவிட்டாரே?' என்று கடவுளிடம் கிளாரா புலம்ப, பனியிலும் லீலி பூத்தது என்பது வரலாறு.

7. இறைவேண்டல் இன்றியமையாதது

இன்றைய நாள்களில் இதை நான் மிகவும் உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன். இறைவேண்டலில் நான் என்னுடைய இறைவனின் தொப்புள்கொடியோடு என்னையே இணைத்துக்கொள்கிறேன். நான் பெறுகின்ற எந்தக் கிளர்ச்சி அனுபவத்திற்கும் தளர்ச்சி உண்டு. ஆனால், தளர்ச்சி தராத ஓர் அனுபவம் இறைவேண்டல் மட்டுமே. 'ஆனால் தேவையானது ஒன்றே' என்று அறிந்திருந்தார் பிரான்சிஸ். எனக்கு எது தேவையோ அதைப் பொறுத்தே ஒன்றிற்கு நான் மதிப்பு அளிக்கிறேன். தேவையும் மதிப்பும் இணைந்தே செல்கின்றன. எழுதுவதற்குத் தேவை இருக்கும்போதுதான் பேனா மதிப்பு பெறுகிறது. தேவை இல்லாத எதுவும் சுமையாக மாறிவிடுகிறது. எழுதாதபோது பேனா பைக்குச் சுமைதானே. இறைவனின் தேவையை நான் உணர்ந்தால் இறைவேண்டலுக்கான மதிப்பு கூடும்.

இன்றைய புனிதர் இப்பாடங்களை நாம் வாழ்வாக்க நம்மைத் தூண்டி எழுப்புவாராக!