Thursday, July 31, 2014

அன்புடன் அந்தரங்கம்!

நேற்று முன்தினம் மாலை கொலோன் நகரில் இருந்து ரோம் வந்து சேர்ந்தேன். எங்கும் அமைதி இன்று ஒரு மாதம் இருந்து விட்டு, எங்கும் சத்தத்தைக் கேட்டவுடன் ரோம் வந்துவிட்டது என்று உறுதிசெய்து கொண்டேன்.

செக்-இன் செய்த புல்மேன் எந்த பெல்ட்டில் வருகிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன். திரையில் எண் '8' ப்ளிங் ஆனது. 15, 14, 13 என எல்லா பெல்ட்களும் ஓடிக்கொண்டிருக்க '8' மட்டும் ஓடாமல் நின்றிருந்தது. அந்த பெல்டைச் சுற்றி என்னுடன் உடன் வந்த பயணிகள். அவர்களைப் பார்த்தவுடன், 'சரியான பெல்டில்தான் நின்று கொண்டிருக்கிறேன்!' என்று உள்ளுக்குள் மகிழ்ச்சி. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 30 நிமிடங்கள் காத்திருக்கவும் என்று அறிவிப்பு வந்தது.

30 நிமிடம் என்ன செய்வது என்றபடி அங்கிருந்த வரிசை நாற்காலிகளில் ஒன்றைப் பார்த்து அமர்ந்தேன். எனக்கு முன் இரண்டு வரிசைகள் தள்ளி ஒரு பையன் அமர்ந்திருந்தான். அவன் மட்டும் எப்படி கண்ணில் பட்டான் என்கிறீர்களா? நாம் உட்கார்ந்து முதுகு சாயும் இடத்தில் அமர்ந்து, கால்களை அமரும் இடத்தில் வைத்திருந்தான். அவன் முன் அமர்ந்திருந்தது அவனது தோழி. அந்தத் தோழியின் அழகிய வெளிர்மஞ்சள் நிற முடியைக் கோதிக் கொண்டிருந்தான். கோதிக் கொண்டே அதை நுகர்ந்து பார்க்கத் தொடங்கினான்.

'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இருக்கிறதா?' என்ற திருவிளையாடல் கேள்விக்கு விடை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறான் என நினைத்துக் கொண்டேன்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவனது தோழி தன் ஐஃபோனில் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள். இவனும் அவளது கூந்தலைக் கோதிக் கொண்டே அவள் என்ன அனுப்புகிறாள் என்று பார்க்க முனைந்து கொண்டிருந்தான். ஆனால், அவள் கள்ளி! இவன் அப்படிப் பார்க்க முயல்வதைக் கண்டுகொண்டு மிகவும் சிரத்தை எடுத்து மறைத்து, மறைத்து மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள்.

இப்ப உள்ள காதலில் இதுதான் ஸ்பெஷல். நீங்கள் காதலிக்கும் நபரின் உடலைத் தொட உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அவர்களின் மொபைலைத் தொட உங்களுக்கு உரிமை இல்லை.

'பிரைவசி' என்ற சொல்லுக்கு இன்று அர்த்தம் மாறிக்கொண்டே வருகின்றது. நாம் குளிக்கும் அறைக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்தால் அவர் நம் 'பிரைவசிக்குள்' நுழைந்துவிட்டார் என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் நம் மெசேஜ்களை வாசித்தாலோ, நம் இன்பாக்ஸைப் பார்த்தாலோ, நம் கான்டாக்ட் லிஸ்டைப் பார்த்தாலோ நம் பிரைவசி பாதிக்கப்பட்டதாக நாம் புகார் கொடுக்கலாம்! அந்த நபரோடு சண்டை போட்டு உறவையே முறித்துக்கொள்ளலாம்!

இந்த பிரைவசி பிராப்ளம் இன்று பல நாடுகளுக்கிடையே பனிப்போரையும் தொடங்கி வைத்துவிட்டது. தன் நாட்டு விவரங்களை அமெரிக்கா உளவு பார்க்கிறது என்று உணர்ந்த ஜெர்மனி கம்ப்யூட்டரை விடுத்து டைப்ரைட்டர் பயன்படுத்த அனைவரையும் ஊக்குவிக்கிறது. இந்த மாதிரி பிரச்சனை வரும் என்று முன்கூட்டியே நினைத்த சீனா தனக்கென்று ஒரு இரும்புக்கோட்டையைக் கட்டி தனி கூகுள், தனி யூடியூப் என்று எல்லாமே தனியாக வைத்துக் கொண்டது. கடந்த வாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக நம் இந்திய அரசும் வழக்கு தொடர்ந்திருப்பது நினைவுகூறத் தக்கது.

கொஞ்ச வருடங்களுக்கு முன்பாக, ஜூனியர் விகடன் இதழில் 'அந்துமணி பதில்கள்' என்று ஒரு பக்கம் வந்து கொண்டிருந்தது. இன்னும் வருகிறது என்றே நினைக்கிறேன். 'அந்துமணி பதில்களுக்கு' முன்னால் உள்ள பக்கமோ, அடுத்த பக்கமோ ஒவ்வொரு வாரமும் வரும் மற்றொரு பகுதி 'அன்புடன் அந்தரங்கம்!'

'ஏபிசி வாசகி!' 'பெயர் வெளியிட விரும்பாத வாசகி!' 'உங்கள் தோழி!' என்ற பெயரில் யாராவது கேட்ட கேள்விக்கு ஒரு பெண் மருத்துவர் மற்றும் உளவியல் நிபுணர் பதில் சொல்வார். கேள்விகள் எல்லாம் உடலியலை மையப்படுத்தியதாகவும், உறவுகளில் எழும் சந்தேகம், பயம், கண்டுகொள்ளாத்தன்மை,
ஏமாற்றம், வெறுப்பு போன்றவை பற்றியதாகவும் இருக்கும். மருத்துவரும் மிகவும் சாமர்த்தியமாக பதில் சொல்வார். பதிலைப் படித்த பல நேரங்களில் நமக்கு என்னதான் அவர் சொல்கிறார் என்றும் புரியாது.

இன்னும் கொஞ்ச நாட்களில் 'அன்புடன் அந்தரங்கம்' பகுதிக்கு எப்படிப்பட்ட கேள்வி வரும் தெரியுமா?

இன்று என் கணவர் என்னுடைய மொபைலை எடுத்து அதில் இருக்கும் எல்லா எஸ்எம்எஸ்களையும் வாசித்து விட்டார். என் மேல் சந்தேகம் கொள்கின்றார். இதை அனுப்பியது யார்? அதை அனுப்பியது யார்? என்று கேட்கின்றார். எனக்கென்று பிரைவசி இல்லையா? நான் அவர் மொபைலைத் தொடுவதில்லையே! எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?

அன்புடன்,

எஸ்எம்எஸ் வாசகி

இதற்கு டாக்டரின் பதில் என்னவாக இருக்கும்?

அன்புடன் அந்தரங்கம்!


3 comments:

  1. அன்றாடம் நம் கண்களில் படும் ஒரு சாதாரண விஷயத்தில் ஆரம்பித்து அதைத் தனி நபர் பிரைவசி, உலக அமைதி என்று இமாலய உயரத்திற்கு யோசிக்கத் தூண்டும் தங்களுக்கு ஒரு பாராட்டு! தொடரட்டும் தங்களின் 'சமூகப் பணியும்,அக்கறையும்'.

    ReplyDelete
  2. You are really great Yesu.You have written something differently to the society.Congrats

    ReplyDelete
  3. You are really great Yesu.You have written something differently to the society.Congrats

    ReplyDelete