Monday, July 14, 2014

உமது அரசு வருக!

அப்பம் பகிர்ந்தளித்தலின் நிகழ்விற்குப் பின் தன்னை அவர்கள் பிடித்துக் கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்று எண்ணும் இயேசு அவர்களை விடுத்து ஓடுகின்றார். ஆனால், 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! தந்தையாம் தாவீதின் அரசு வாழ்க!' என்று மக்கள் குருத்தோலைகள் ஏந்தி ஆரவாரம் செய்யும் போது அமைதி காக்கின்றார். 'நீ யூதர்களின் அரசனா?' என்ற பிலாத்துவின் கேள்விக்கும், 'அரசன் என்று நீர் சொல்கிறீர்!' என தொட்டும் தொடாமல் பதில் சொல்கின்றார். சிலுவையில் நல்ல கள்வன், 'நீர் அரசுரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூறும்!' என்று சொல்லும் போது, மறுக்காமல், 'நீ இன்றே என்னோடு வான்வீட்டில் இருப்பாய்!' என்கிறார். இந்த நிகழ்வுகளை மட்டும் வைத்து இயேசுவை அரசர் என்று முடிவு செய்வது இயலாததாக இருக்கிறது.

13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து 'கிறிஸ்து அரசர்: அனைத்துலகிற்கும் ஆண்டவர்' என்ற திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நூற்றாண்டில் அரசர்கள் வரலாற்றில் கோலோச்சிய நேரம். தங்களைப் போல கடவுளையும் அரசராக்கி விட்டால் தங்களுக்கு எந்தவித குற்றவுணர்வும் இருக்காது என்று இயேசுவையும் அரசராக்கி விட்டார்களோ? என்றும் எண்ணத் தோன்றுகிறது.

தன் பணி வாழ்வு முழுவதும் இயேசு அரசர்கள் மற்றும் ஆள்வோரின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவராகவும், பதவி, அதிகாரம் இவற்றை நாடாதவராகவுமே காட்சியளிக்கின்றார். ஆனால் தொடக்க காலத் திருச்சபைக்கு எழுதப்பட்ட திருமுகங்களில் அவர் அரசுரிமை பெறுபவராக முன்வைக்கப்படுகின்றார். தூய பவுல் கொலோசை மற்றும் பிலிப்பி நகர மக்களுக்கு எழுதும் கடிதங்களிலும், தூய பேதுரு எருசலேமில் வாழும் தன் திருச்சபைக்கும் எழுதும் கடிதங்களிலும் இயேசு தந்தையின் வலப்பக்கத்தில் அரசுரிமை பெற்று வீற்றிருக்கிறார் என்று எழுதுவதுடன், அவர் மீண்டும் உலகை நடுத்தீர்க்க வருவார் என்றும் எழுதுகின்றனர்.

இயேசுவின் அரசுரிமையை எப்படிப் புரிந்து கொள்வது?

1. வில்லியம் ஷேக்ஸ்பியர் மேன்மையாக இருப்பதைப் பற்றி எழுதும்போது மூன்று விதமான மக்களைக் குறிப்பிடுகின்றார்: சிலர் பிறப்பிலேயே மேன்மையாக இருக்கின்றனர். சிலர் மேல் மேன்மை திணிக்கப்படுகின்றது. சிலர் மேன்மையை தங்கள் வாழ்வால் அடைகின்றனர். இது அரசுரிமைக்கும் பொருந்தும். மூன்று வகையான அரசர்களை நாம் வரலாற்றில் பார்க்கின்றோம்: ஒன்று, பிறப்பிலேயே அரசராக இருப்பவர்கள். உதாரணத்திற்கு, சாலமோன். இரண்டு, அரசுரிமை இவர்கள் மேல் திணிக்கப்படுகின்றது. உதாரணம், தாவீது. மூன்று, தங்கள் வாழ்வால் அரசுரிமையை அடைகின்றனர். உதாரணம், மோசே. இவர் அரசர் இல்லையென்றாலும் தலைவர் என்ற அடிப்படையில் இவரை அரசர் என்று எடுத்துக்கொள்ளலாம். நாம் விளையாடும் செஸ் விளையாட்டில் இந்த மூன்றையும் பார்க்கலாம். 'ராஜா!' இவர் பிறப்பால் அரசரால் இருப்பவர்கள். இவர் இல்லையென்றால் ஆட்டம் முடிந்துவிடும். 'ராணி! அமைச்சர்! பிஷப்! குதிரை! யானை!' - இவர்கள்மேல் அதிகாரம் திணிக்கப்படுகிறது. அதாவது இவர்களுக்கென்று பிரத்யேக பாதை ஆட்டத்தில் இருக்கிறது. மூன்றாவதாக, 'சிப்பாய்கள்!' - இவர்கள் அடிப்படையில் அதிகாரம் அற்றவர்கள் என்றாலும் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு முயற்சி செய்து கடந்து விட்டார்கள் என்றால் ஆட்டத்திலேயே அதிக அதிகாரம் பெற்றவர்களாக மாறி விடுகின்றனர். இயேசுவின் அரசுரிமை எந்த வகை? இயேசு இந்த மூன்று நிலைகளுக்கும் பொருந்துவார். கடவுளின் மகன் என்ற அடிப்படையில் அவர் பிறப்பால் அரசர். மற்றவர்கள் இவரை நம்பிய போது திணிக்கப்பட்ட அரசுரிமை பெறுகின்றார். இறுதியாக, தன் வாழ்வால், பணியால், இறப்பால், உயிர்ப்பால் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு கடந்து போனவராக அரசுரிமை பெறுகிறார்.
நாமும் அரசர்கள் தாம்! எப்போது? நம் வாழ்வின் அன்றாட கடமைகளைச் சரிவரச் செய்து, நாமும், நம் சக மனிதர்களும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, அதற்காக நம் ஆற்றலைச் செலவிடத் துணியும்போது!

2. அரசன் என்றால் 'பெஸ்ட்'. கால்பந்து உலகின் அரசன் 'ஜெர்மனி' என்றும், கிரிக்கெட்டின் அரசன் 'டெண்டுல்கர்' என்றும், அல்வாவின் அரசன் 'இருட்டுகடை' என்றும், பால்கோவாவின் அரசன் 'திருவில்லிபுத்தூர் புளியமரத்தடி' என்றும், சொகுசுப் பேருந்துகளின் அரசன் 'கே.பி.என்'(!) என்றும், ஃபோன்களின் அரசன் 'ஐஃபோன்' என்றும், கணிணிகளின் அரசன் 'விண்டோஸ்' என்றும் சொல்கின்றோம். அரசன் என்பவன் பெஸ்ட்டாக இருக்க வேண்டும். பெஸ்ட்டாக இருப்பது என்றால் என்ன? 'காம்ப்ரமைஸ்' செய்யாமல் இருப்பது. நம் வாழ்வின் மதிப்பீடுகளோடு நாம் சமரசம் செய்யும் போது நீர்த்துப்போய்விடுகிறோம். 'நம்ம பால்கோவா தான் ஃபேமஸ். கொஞ்சம் மைதா சேர்த்தால் யாருக்குத் தெரியும்' என்று பால்கோவாவில் சமரசம் செய்யப்பட்டால் அதை நாம் பெஸ்ட் என்று சொல்வதில்லை. இயேசு தன் வாழ்வில் ஒருபோதும் யாருடனும் 'காம்ப்ரமைஸ்' செய்யவேயில்லை. தன் மதிப்பீடுகளோடும் அவர் 'காம்ப்ரமைஸ்' செய்து கொண்டதில்லை. 'இது சரி!' என்றால் 'இது தான் சரி!' என்றார். 'இதுவும் சரி! அதுவும் சரி!' என்று சின்னச் சின்ன விஷயங்களில் செய்த சமரசங்களால் தான் சவுல், தாவீது, சாலமோன் என எல்லா அரசர்களும் தங்கள் 'பெஸ்ட்' நிலையை இழந்தனர். அரசன் என்றால் எப்போதும் 'பெஸ்ட் கண்ணா! பெஸ்ட்!' என்று இருக்க வேண்டும்.

3. இன்று நமக்குத் தேவையெல்லாம் நல்ல தலைமை. இன்று அரசர்களாக நிற்கும் அரசியல்வாதிகளும், கார்பரேட் முதலாளிகளும், ஏகாதிபத்திய நாடுகளும் அடுத்தவர்களை அழித்து தாங்கள் வாழ வேண்டும் என்றே நினைக்கின்றனர். 'தான் அழிந்தாலும் தன் மக்கள் வாழ்வு பெற வேண்டும்' என்ற இயேசுவின் அரசுரிமைச் சித்தாந்தம் இன்று செல்லாக் காசாகி விட்டது. 'எங்கிருந்தாவது ஒரு மெசியா வருவாரா? விலைவாசியைக் கட்டுப்படுத்துவாரா? வாழ்வாதாரங்களைப் பொதுவாக்குவாரா? மனித மாண்பைக் காப்பாற்றுவாரா?' என்று இன்று நாம் வானத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். 'நான் ஒரு அரசன்! நான் ஆளப்பிறந்தவன்! இலவசங்களால் என்னை வாங்க முடியாது! என் படிப்பு என் உரிமை! என் மொழி என் உரிமை! என் வேலை என் உரிமை!' என்று நாம் சிந்திக்கத் தொடங்கி நம் தன்மானத்தோடு 'காம்ப்ரமைஸ்' செய்யாமல் துணிவுடன் உறுதியாக நின்றால் நம்மைச் சுற்றி ஒரு இனிய அரசு மலரும்!

'உமது அரசு வருக!'


1 comment:

  1. இன்று நமக்கு நியாயமாக்க் கிடைக்க வேண்டிய உரிமைகள் கூட என்னவென்று தெரியாமல் நம்மை மழுங்கடித்து விட்டனர் நம் அரசியல்வாதிகள்.குடிக்கும் நீரைக்கூட அரசாங்கமே காசுக்காக விற்கும் அவலநிலை.இப்படிப்பட்டவர்களிடம் சில பல இலவசங்களுக்காக கையேந்துவதை விட்டு நான்,என்வீடு,என் குடும்பம்,என்தேசம்,என்மக்கள்,என்வாழ்க்கை என் அனைத்துக்கும் நாமே பொறுப்பேற்று அதற்கேற்ப உழைத்தால் தாங்கள் கூறும் இறை அரசு கண்டிப்பாக நம்மைச்சுற்றி மலரும்தான்....பி.கு..தாங்கள் மேல் சிறிது கோபம்..எல்லா 'பெஸ்ட்'டையும் கூறிய தாங்கள் அஅதெப்படி மலர்களின் அரசன் 'மதுரை மல்லி'யை மறந்தீர்கள்??

    ReplyDelete