Thursday, July 17, 2014

ஆளை ஆளைப் பார்க்கிறார்!

(21.09.2014 ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறுக்கான மறையுரை.
நற்செய்திப் பகுதி: மத்தேயு 20:1-16)

வாழ்க்கையில் நாம் நினைப்பது போலவே எல்லாம் அமைவதில்லை. உலகில் உள்ள மனிதர்கள் எல்லாம் ஒரே மாதிரி இல்லை. வாழ்வின் வாய்ப்புகளும் அனைவருக்கும் ஒரே மாதிரி கிடைப்பதில்லை. காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு பிறக்கும் நாம் நம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு மட்டும்தான் இயங்க முடியும். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை ஒவ்வொரு மாதிரி தான் இருக்கின்றது. அவரைப் போல நான் இல்லையே எனவும், அவளிடம் உள்ளது என்னிடம் இல்லையே என வருந்துவதும் பயனற்றது.

மேலும் வாழ்வில் நாம் ஒருசிலவற்றிக்குப் பெயரிட்டிருக்கின்றோம். எடுத்துக்காட்டாக, அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அண்ணன், அண்ணி, நண்பன் என்று உறவுகளுக்குப் பெயர் கொடுக்கின்றோம். ஆனால் இந்தப் பெயர்களின் அர்த்தம் எல்லாருக்கும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? எனக்கு என் அப்பா என்பவர் யார் என்பதற்கும், உங்களுக்கு உங்கள் அப்பா யார் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது.

விண்ணரசு குறித்த ஒரு உவமையை இன்று நாம் வாசிக்கக் கேட்டோம். இந்த உவமையின் பின்புலம் என்ன? தொடக்கக் கிறித்தவர்களுக்குள், குறிப்பாக கிறித்தவம் தழுவிய யூதருக்கு ஒரு டவுட்டு: 'நம் யூத மரபில் கடவுளின் சட்டங்களுக்கும், அதற்கேற்ற செயல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டது. இப்போது நாம் புதிய நம்பிக்கைக்கு வந்து விட்டோம். நமக்கு சட்டங்கள் இல்லை. நாம் அதற்கேற்ற செயல்களையும் செய்ய முடியாது. செயல்கள் இல்லாமல் எப்படி மீட்பு பெற முடியும்?' இந்தக் கேள்விக்கு நற்செய்தியாளர் தரும் பதிலே இயேசுவின் விண்ணரசு பற்றிய உவமை. விண்ணரசு என்பது புதிய கிறித்தவ நம்பிக்கை. இந்தத் தோட்டத்தின் தலைவர் கிறஸ்து அல்லது கடவுள். காலையிலிருந்து மாலை வரை வெயிலின் கொடுமையில் வேலை செய்தவர்கள் யூதர்கள். வெயில் என்பது திருச்சட்டம். மாலையில் சில மணி நேரமே வேலை செய்தவர்கள் புதிய நம்பிக்கையின் உறுப்பினர்கள். மாலையில் சம்பளம் கொடுக்கும் போது அனைவருக்கும் ஒரே சம்பளமே கொடுக்கப்படுகிறது. தன் உழைப்பால் யாரும் அதிகம் பெற்றுவிட முடியாது எனவும், இறைவனின் கொடையால் தான் மீட்பு என்னும் சம்பளம் கிடைக்கிறது எனவும் இந்த எடுத்துக்காட்டு நமக்குச் சொல்கிறது.

மேலோட்டமாக வாசித்தால் இந்த உவமையில் வரும் தலைவன் அநீதியானவராகத் தெரிவார். ஆனால் ஆழமாக வாசிக்கும் போது தலைவன் யாரைக்கும் அநீதி இழைக்கவில்லை எனவும், மேலும் நீதியே செய்கிறார் எனவும் தெரிகிறது.

இந்த உவமை நமக்கு வைக்கும் பாடங்கள் மூன்று:

அ. வரிசை தலைகீழாகிறது. மேலிருந்து கீழ் என்னும் வரிசை கீழிருந்து மேல் எனத் திருப்பப்படுகிறது. முதலில் வந்தவர்கள், இரண்டாவது வந்தவர்கள், மூன்றாவது வந்தவர்கள், நான்காவது வந்தவர்கள், ஐந்தாவது வந்தவர்கள் என வேலைக்கு வந்தவர்கள், கூலி பெறும்போது ஐந்தாவது, நான்காவது, மூன்றாவது, இரண்டாவது, முதலாவது என வரிசை மாறுகிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் நமக்குத் தெரியவில்லை. அதுபோலத்தான் வாழ்க்கையும். அதுபோலத்தான் விண்ணரசும். 'ஏன்?' இப்படி என்று நம்மால் வாழ்வின் நிகழ்வுகளுக்கு அர்த்தம் தேட முடியாது. அப்படித் தேடினாலும் நாம் விரும்பும் பதில் நமக்குக் கிடைப்பதில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் வரிசையைப் பின்பற்றுவதுதான். அப்படியென்றால் மனிதர்களுக்குச் சுதந்திரம் இல்லையா? என்றெல்லாம் மார்தட்டாதீர்கள். வாழ்வின் எதார்த்தங்கள் புரியாமல் இருப்பதுதான் வாழ்வின் இனிமையே.

ஆ. வேலைக்கு வந்தவர்கள் தங்களின் உழைப்பைப் பார்க்கின்றனர். ஆனால் தலைவனோ அவர்களின் தேவையைப் பார்க்கின்றார். ஒவ்வொருவருக்கும் திராட்சைத் தோட்டத்தில் வேலை பார்க்கக் கிடைத்த நேரம் வௌ;வேறாக இருந்தாலும் அனைவருக்கும் வயிறு ஒன்றுதூன். அனைவருக்கும் தேவை ஒன்றுதான். அவரவர் தேவைக்கேற்ப அனைத்தும் கிடைக்க வழி செய்கிறார் தலைவன். வேலைக்கு வந்தவர்கள் நேரத்தை வைத்து தங்கள் வாழ்க்கையின் பலனை கணக்குப் போடுகின்றனர். ஆனால் தலைவன் அவர்களின் உள்ளத்திற்கு மகிழ்ச்சி எது தரும் என நினைத்துப் பார்க்கின்றார். நாம் இறந்தபின் விண்ணகத்திற்குத் திரும்பும் போது (விண்ணகம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்!) கடவுள் நாம் செய்த நற்செயல்களை ஆண்டுகளைக் கொண்டு கணக்கிட மாட்டார். கடைசி நாளில் ஒரு சின்ன நல்ல காரியம் செய்தால் போதும். பலன் எல்லாருக்கும் ஒன்றுதான். நம் கணக்கும், கடவுள் கணக்கும் ஒன்றாக இருப்பதில்லை என்பதே உண்மை.

இ. கடவுளின் பெருந்தன்மை. 'ஒரு தெனாரியத்திற்கு வா!' என்றுதான் காலை எட்டு மணிக்கு வேலைக்கு வந்தவர்களுக்கு அழைப்பு விடப்படுகிறது. பேசப்பட்ட கூலியும் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. மற்றவர்கள் பெற்றதும் ஒரு தெனாரியம் என்றாலும் அது அவர்களின் உழைப்பின் பலன் என்று சொல்வதை விட தலைவனின் பெருந்தன்மை என்றே சொல்ல வேண்டும். 'நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?' என்ற தலைவனின் கேள்வி இன்றும் நம்மிடம் கேட்கப்படுகிறது. பல நேரங்களில் நம் உழைப்பிற்கேற்ற பலன் நமக்குக் கிடைப்பதில்லை. நாம் வேண்டுவது நமக்குக் கிட்டுவதில்லை. வாழ்க்கை எனக்கு மட்டும் வஞ்சகம் செய்கிறது எனப் புலம்புகிறோம். இந்தப் புலம்பலில் நாம் செய்வது என்ன? அடுத்தவர்களின் கையில் என்ன இருக்கிறது என்று பார்க்கிறோம். பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதை நம் கையில் இருப்பதோடு ஒப்பீடும் செய்கின்றோம். ஒப்பீடு செய்வதோடு மட்டுமல்லாமல் அதைக் குறித்து புலம்பவும் செய்கின்றோம். 'கடவுளை நாம் கடவுளாக இருக்க விடுவதில்லை தானே!' எல்லாருக்கும் நடப்பதை விட மிக நன்றாக நமக்கு நடக்க வேண்டும் என நினைக்கின்றோம். ஆனால் எது நடக்க வேண்டுமோ, அது தானே நடக்கும். ஆகையால் புலம்பும் மனநிலை விடுத்து அதிகம் பெற்றவருடன் இணைந்து அவரின் மகிழ்ச்சியில் பங்குகொள்ளும் பரந்த மனப்பான்மை கொண்டால் கடவுள் நம்மைப் பார்த்துப் பொறாமைப்படுவார்.

'ஆளை ஆளைப் பார்க்காமல், ஆட்டத்தை மட்டும் பார்க்கலாமே!'


1 comment:

  1. தங்களது எழுத்துப்புலமையாலும்,வார்த்தை ஜாலத்தாலும் தலைவனின் செயலை நியாயப்படுத்தியிருப்பினும்,நாளெல்லாம் உழைத்துக் களைத்த ஒரு பாமரனின் கோணத்திலிருந்து பார்க்கும் போது தலைவனின் செயல் அநீதியான ஒன்றுதான் என்று எனக்குப் படுகிறது.நடைமுறை வாழ்க்கையில் இது ஒத்துக்கொள்ளக்கூடியதா என்றால் அதுவும் கேள்விக்குறியே.ஆயினும் 'வாழ்வின் எதார்த்தங்கள் புரியாமல் இருப்பதுதான் வாழ்வின் இனிமையே'....ஒத்துக்கொள்ளவேண்டிய உண்மைதான்.பி.கு...ஆட்டத்தைப்பார்ப்பதே ஆட்களுக்காகத்தானே! இல்லையா!!??

    ReplyDelete