Sunday, July 13, 2014

இது உனக்கு! இன்னும் உனக்கு!

(திருச்சிலுவை மகிமைப் பெருவிழாவிற்கான (14.09.2014) மறையுரை)

இன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.

சிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது? சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள், எபிரேயர்கள், உரோமையர்கள் என எல்லா 'கலாச்சாரங்களிலும்' ஏதோ ஒரு வகையில் மக்கள் மரத்தால் அழிக்கப்பட்டிருக்கின்றனர். செலவில்லாத மரண தண்டனை சிலுவைத் தண்டனை. ஆகையால் தான் உரோமையர்கள் இதைக் கைக்கொள்கின்றனர். எதற்காக அழியப்போகும் கைதிகள் மேல் பணத்தைச் செலவழிக்க வேண்டும். மேலும் சிலுவை மரணத் தண்டனையில் யாரும் அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்பதும் இல்லை.

இயேசுவின் காலத்தில் சிலுவைச் சாவு பல்வேறு வகைகளில் நிகழ்த்தப்பட்டது. வழக்கமாக மரண தண்டனை பெறுவோர் கொல்லப்பட்ட சிலுவை மரத்தில் ஏற்றப்பட்டனர். சிலுவையில் ஒருசிலர் அறையப்பட்டதாகவும், மற்றும் சிலர் கட்டப்பட்டதாகவும் ஜோசப் பிலேவுயுஸ் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். உயிருடன் யாராவது சிலுவையில் அறையப்பட்டால் அவர்களின் நாக்கு அறுக்கப்பட வேண்டும் எனவும், அவர்களின் ஆண்குறிகள் சிதைக்கப்பட வேண்டும் எனவும், ஆடையின்றி அறையப்பட வேண்டும் எனவும் செசரோவின் அரசியல் டைரிக்குறிப்புகள் தெரிவிக்கின்றனர். மேலும் சிலுவையில் அறையப்பட்ட உடல்களை யாரும் கல்லறையில் அடக்கம் செய்ய மாட்டார்கள். அவர்களின் உடல் வானத்துப் பறவைகளுக்கும், காட்டு நாய்களுக்கும் உணவாகப் போய்விடும். சில மாதங்கள் கழித்து சிலுவையில் தொங்கும் எலும்புக் கூட்டை எடுத்து ஒரு பள்ளத்தாக்கில் போடுவார்கள். அப்படி அவர்கள் பல ஆண்டுகளாக எலும்புக் கூடுகளை நிறைத்த இடம்தான் கொல்கொத்தா. இதன் மற்றொரு பெயர் மண்டை ஓட்டு இடம்.

சிலுவை மரணம் உரோமையருக்கு எதிராக அரசியல் குற்றம் புரிவோருக்கு என நியமிக்கப்பட்டிருந்தது. மேலும் சிலுவை மரணம் அனைவரும் பார்க்கும் வண்ணம் பொதுவாக நிறைவேற்றப்பட்டது. அப்படி இருந்தால் தான் அதைப் பார்ப்பவர்கள் திருந்துவர் என்பது அவர்களின் நம்பிக்கை.

இயேசு தலைமைக்குருவின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டபோது அவர் மேல் சுமத்தப்பட்ட ஒரே குற்றச்சாட்டு 'இவன் தன்னையே கடவுளின் மகன் என்று சொல்லி கடவுளுக்கு இணையாக்கிக் கொண்டான்!' என்பதுதான். கடவுளுக்கு எதிராக பேசும் ஒருவருக்கு யூத சட்டம் அனுமதித்த மரண தண்டனை 'கல்லெறிதல்'. ஆனால் இயேசுவுக்கு அரசியல் குற்றத்திற்கான தண்டனை வழங்கப்படுகிறது.

இயேசு சிலுவையில் அறையப்பட்டதற்கு வரலாற்றுக் குறிப்புகளை விட, 'ஆன்மீகக் குறிப்புகளே' மேலோங்கியுள்ளன. மானிடமகன் உயர்த்தப்பட்டபின் அனைவரையும் தன்னிடம் ஈர்த்துக்கொள்வார் என்று இயேசு நிக்கதேமிடம் கூறுகின்றார். இங்கே உயர்த்தப்படுதல் என்பது இயேசுவின் உயிர்ப்பை குறிக்கிறது என சிலர் வாதிட, மற்றவர்கள் சிலுவையில் அறையப்படுதலைக் குறிப்பிடுவதாகச் சொல்கின்றனர். மற்ற நற்செய்தியாளர்கள் 'உயர்த்தப்படுதல்' குறித்து எழுதவேயில்லை. வெறும் நற்செய்திக் குறிப்புகளை வைத்து இந்த விழாவிற்கு நம்மால் அர்த்தம் காண முடியாது.

வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும் போது சிலுவை இயேசுவுக்கு தந்த வலியை விட மனுக்குலத்திற்கு இன்னும் அதிக வலியைத் தந்திருக்கிறது. சிலுவைப் போர்களினால் மேற்கத்திய நாடுகள் ஒன்றைறொன்று அடித்துக் கொண்டதோடு மட்டுமல்லால், யூதர்கள், இஸ்லாமியர்கள் என மற்ற மதத்தினர் மேலும், தங்கள் காலனி ஆதிக்க நாடுகள் மேலும் போர் தொடுத்து செந்நீரும், கண்ணீரும் சிந்தி பலர் உறவுகளையும், உடைமைகளையும், உயிர்களையும் இழந்தது என்ற உண்மை நம் கன்னத்தில் அறைகிறது.

இந்தப் போர்களில் வெற்றி பெற்றவர்கள் வழியாகத் தான் திருச்சிலுவை மகிமை பெற்றதா? ஒருசிலரின் சுயநலத்திற்கான, அதிகாரத் தக்கவைப்பிற்கான முயற்சிக்காக சிலுவை பயன்பட்டதென்றால், அது அன்பின் சின்னமாக, இரக்கத்தின் சின்னமாக, மன்னிப்பின் சின்னமாக, மீட்பின் சின்னமாக எப்படி இருக்க முடியும்? என்பதும் நாம் கேட்க வேண்டிய கேள்வி.

நம் வழிபாடுகள், நம் பயணங்கள் அனைத்தையும் சிலுவை அடையாளமிட்டுத் தொடங்குகிறோம். சிலருக்கு சிலுவை இன்னும் துன்பத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. சிலர் ஆராதிக்கின்றனர். சிலர் அலறி ஓடுகின்றனர்.

இந்தச் சிலுவை நமக்கு இன்று சொல்வது மூன்று:

1. வெறுமை. கடவுள் தன்மையை தன் பிறப்பில் இழக்கின்ற இயேசு, தன் மனிதத்தன்மையை சிலுவையில் இறக்கின்றார். முந்தையதை விட அதிக வலி தருவதாக இது இருந்திருக்கும். 'இது எனக்கு! இன்னும் எனக்கு!' என்று அனைத்தையும் சேர்த்துக்கொண்டே போகும் நம் நவீன கலாச்சாரத்திற்கு மாற்றுதான் இயேசுவின் வெறுமை. 'இது உனக்கு! இன்னும் உனக்கு!' என்று மாற்றுச்சிந்தனையைத் தருவதுதான் சிலுவை.

2. சிலுவை ஒரு துணிச்சல். என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்! என்று துணிந்ததால் தான் இயேசுவால் சிலுவையை அரவணைக்க முடிகின்றது. நம் வாழ்வை நாம் முழுமையாக வாழத் தடையாக இருப்பது நம்மிடம் குறைந்து வரும் துணிச்சல். 'அதெல்லாம் நமக்கெதுக்குப்பா!' என்று ஒதுங்கும் மனநிலை வாழ்க்கையை நம்மால் முழுமையால் வாழ முடியாமல் செய்து விடுகிறது. துணிந்தவுனுக்கு தூக்கு மேடை ஒரு பொருட்டல்ல என்பதை உணர்ந்தவர்தான் இயேசு.

3. ரெட்கிராஸ், ஆஸ்பத்திரி என நாம் திரும்பும் பக்கமெல்லாம் சிலுவை நிற்கின்றது. சிலுவை என்றால் நலம் எனவும், உயிர்ப் பாதுகாப்பு எனவும் அர்த்தப்படுத்தப்படுகின்றது. நாம் சிலுவை அடையாளம் வரைவதாலும், சிலுவையால் அலங்காரம் செய்வதாலும் திருச்சிலுவைக்குக் கிடைக்காத பெருமை நாம் நலம் காப்பதிலும், உயிர் காப்பதிலும் தானே கிடைக்கிறது.


1 comment:

  1. 'பரிவட்டம் தொங்கவிடப்பட்ட சிலுவை' எப்பொழுது பார்த்தாலும் என் மனதைப்பிசையக்கூடியது.அவமானத்தின் சின்னமாக இருந்த சிலுவையை ...நம் அடையாளத்தின் சின்னமாக்கியவர்..மாற்றுக்கருத்துக்கள் பற்றி எனக்கு கவலை இல்லை." இது உனக்கு! இன்னும் உனக்கு! " ..என்று மாற்றுச் சிந்தனையைத் தருவதுதான் சிலுவை...அழகான பதிவு.

    ReplyDelete