Sunday, September 30, 2018

சின்ன வழி

நாளைய (1 அக்டோபர் 2018) நற்செய்தி (மத் 18:1-5)

சின்ன வழி

'வானிலிருந்து வரங்களை ரோசா மலர்களாக அள்ளித் தெளிக்கும் சின்ன ராணி குழந்தை தெரசாளின்' திருநாளை நாம் நாளை கொண்டாடுகிறோம். இவரை மறைவல்லுநர் எனவும் திருச்சபை கொண்டாடுகிறது.

இவரின் 'சின்ன வழி' மிகவும் போற்றுதற்குரியது.

ஒருவழி, இருவழி, நான்குவழி, ஆறுவழி, எட்டுவழி என உலகம் அடுத்தவரை மிதித்து வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்ற வேளையில் இவரின் சிறுவழி நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

நாளைய நற்செய்தி வாசகத்தில், 'விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?' என்ற சீடர்களின் கேள்விக்கு, 'சிறுபிள்ளை போல தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்' என்கிறார் இயேசு.

'நம்பிக்கையின் தந்தை' ஆபிரகாம், 'விடுதலையின் பிதாமகன்' மோசே, 'சிறந்த பேரரசன்' தாவீது என இவர்களில் யாரையாவது, 'பெரியவர்' என்று சொல்லியிருக்கலாமே!

இயேசு, குழந்தையை எடுத்துக்காட்டாகச் சொல்லக் காரணம் என்ன?

நம் மனித வாழ்க்கை நிலையை நம் நடையை வைத்துச் சொல்லிவிடலாம். பிறந்தவுடன் நாம் முதலில் மல்லாக்க படுக்கிறோம். பின் குப்புறப் படுக்கிறோம். பின் தத்தி தத்தி தவழ ஆரம்பிக்கிறோம். பின் முதல் அடி. இரண்டாம் அடி. கொஞ்சம் சறுக்கல். அழுகை. எழுதல். நிற்றல். நடத்தல். ஓடுதல். இப்படியே வளர வளர நம் நடையின் வேகம் கூடுகிறது. இளமை மற்றும் முதிர்பருவத்தில் நம் நடை உச்சகட்ட வேகத்தைத் தொடுகிறது. பின் மறுபடியும் வேகம் தளர்கிறது. பின் இரண்டு கால்கள் தடுமாற, மூன்றாம் காலாக கையில் குச்சி முளைக்கிறது. தள்ளாடிய நடை. என வாழ்க்கை தளர்ச்சியாக முடிகிறது.

நாம் ஓட்டும் வாகனங்கள் அல்லது நாம் பயணம் செய்யும் வாகனங்கள்கூட நம் கால்களின் நீட்சிகளே.

குழந்தையின் ஒரு இயல்பு வேகம் குறைப்பது.

சின்ன வழியில் நுழைய வேண்டுமெனில் வேகம் குறைப்பது அவசியம். அல்லது வேகம் குறைப்பவரே சின்ன வழியில் நடக்க முடியும்.

ஆகையால்தான், நாளைய முதல் வாசகத்திலும் (காண். எசா 66:10-14) பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களை மீட்டுக்கொண்டு வரும் யாவே இறைவன், அவர்களை சிறு குழந்தைகளாக தோளில் போட்டுக்கொண்டு வருகிறார். அவர்கள் வேகமாக நடந்ததாலும், சிலைவழிபாடு போன்ற பெரிய வழிகளில் நுழைந்ததாலும் அவர்கள் அடிமைகள் ஆகின்றனர். இறைவனின் கைகளில் சிறு குழந்தைகளாக இருக்கும் அவர்கள் இனி வேகம் குறைக்க வேண்டும்.

ஆக, என் வாழ்வின் வேகத்தையம், ஓட்டத்தையும் குறைத்து, சின்னச் சின்னதாய் நடக்க நம் சின்ன ராணி அழைக்கிறார்.


Friday, September 28, 2018

அதிதூதர்கள்

அதற்கு இயேசு, 'இதைவிட பெரியவற்றைக் காண்பீர். வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று நத்தனியேலிடம் கூறினார். (யோவான் 1:51)

நாளை (செப்டம்பர் 29) அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஆங்கிலத்தில் இந்தத் தூதர்களின் முதல் எழுத்தைச் சுருக்கி, எம்.ஜி.ஆர் திருநாள் என்றும் இதை அழைப்பர்.

வானதூதர்கள் பற்றிய நம்பிக்கை எப்படி உருவானது?

முதல் ஏற்பாட்டு நூல்களில் விடுதலைப்பயணம், நீதித்தலைவர்கள், தானியேல் போன்ற நூல்களில் அடிக்கடி வரும் ஒரு நபர் 'மலாக் எலோகிம்' (கடவுளின் தூதர்). ஆனால் 'மலாக் எலோகிம்' வானதூதர் அல்ல. முதல் ஏற்பாட்டு நூலின் ஆசிரியர்கள் கடவுள் என்ற பெயரை பயன்படுத்தாமல் சில நேரங்களில் 'கடவுளின் பிரசன்னம்' மற்றும் 'கடவுளின் தூதர்' என்னும் வார்த்தைகளை மரியாதை நிமித்தமாகப் பயன்படுத்தினர்.

முதன்முதலாக முதல் ஏற்பாட்டில் வானதூதர் என்ற சிந்தனை இஸ்ரயேல் மக்களின் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின்பே வந்தது. யூப்ரடிஸ், டைக்ரீஸ் நதியோரங்களில் வாழ்ந்த மக்கள் கடவுள் நம்பிக்கையை விட கடவுளின் தூதர்கள் மேல் நம்பிக்கை வைத்தனர். இறக்கும் நம் முன்னோர் அனைவரும் கடவுளி;ன் தூதர்களாக மாறிவிடுகிறார்கள் என்பதும் அவர்களின் நம்பிக்கை. இந்தக் கடவுளின் தூதர்கள் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையே தூது செல்பவர்கள்.

தூதர்கள் என்பவர்களின் தலைவர்களே அதிதூதர்கள்.

வானதூதர்களின் மேல் உள்ள நம்பிக்கை கிறித்தவ மதத்தில் மட்டுமல்ல, மத்திய கிழக்கில் பிறந்த அனைத்து மதங்களுமே வானதூதர்கள் இருப்பதாக நம்புகின்றன. கிறித்தவர்களுக்கு, அதுவும் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல் என்னும் மூன்று அதிதூதர்கள் இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் 'ஆர்த்தடாக்ஸ்' எனப்படும் கிறித்தவர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல், உரியேல், செயால்தியேல், யெகுதியேல், பராக்கியேல் மற்றும் யெராமியேல் என்னும் எட்டு அதிதூதர்கள் இருப்பதாக நம்புகிறார்கள்.

யூத மரபில் ஏழும், இசுலாமில் நான்கும், ஸோராஸ்டிரியத்தில் ஏழும் கடவுளின் அதிதூதர்களின் எண்ணிக்கை.

மிக்கேல் என்றால் 'மிக்கா ஏல்', அதாவது 'கடவுளுக்கு நிகர் யார்?' என்பது பொருள். பாரம்பரியமாக வலது கையில் ஒரு அம்பை வைத்து லூசிஃபர் என்னும் சாத்தானின் தலைவனை தன் காலடியில் போட்டிருப்பவராகவும், மற்றொரு கையில் சில நேரங்களில் தராசும், சில நேரங்களில் ஒலிவக் கிளையும் ஏந்தியவராகச் சித்தரிக்கப்படுகிறார். யாக்கோபு 1:9, தானியேல் 10:13, 12:1 மற்றும் திவெ 12:7 ஆகிய இடங்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் உண்டு.

கபிரியேல் என்றால் 'கபார் ஏல்', அதாவது 'கடவுளின் வல்லமை'. 'கடவுள் வல்லமையானவர்' என்றும் மொழிபெயர்க்கலாம். மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் வரும் இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளில் சக்கரியாவுக்கு, மரியாவுக்கு, யோசேப்புக்கு மற்றும் வானதூதர்களுக்கு 'மங்கள வார்த்தை' சொல்பவர் இவரே.

ரபேல் என்றால் 'ரஃபா ஏல்', அதாவது 'கடவுள் குணமாக்குகிறார்' என்பது பொருள். தோபித்து நூலில் (3:17, 12:15) தோபியாவின் கண்ணுக்குப் பார்வை அளிப்பவராக, தோபித்தின் மனைவி சாராவைப் பிடித்திருந்த பேயை வெளியேற்றுபவராக வருகிறார். தோபித்தின் பயணத்தில் உடனிருப்பவர் இவரே.

நாம் அன்பு செய்யும் அனைவருமே நம்மைச் சுற்றியிருக்கும் தூதர்கள் தாம். நாம் முன்பின் பார்த்திராத கடவுளை நமக்குக் காட்டுபவர்கள் இவர்களே. இவர்களே நமக்கு கடவுளாகவும், கடவுளின் வல்லமையாகவும், குணமாக்குபவர்களாகவும் நம் அருகில் வருகிறார்கள்.

இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள் இவர்கள்.

கடவுளைப் போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள்.

என்னைப் பொறுத்தவரையில் நம் குடும்பங்களில் அல்லது நம் நண்பர்கள் வட்டத்தில் இறந்த நம் முன்னோர்களும் காவல்தூதர்களே. இவர்கள் எந்நேரமும் நம்மைச் சுற்றி சுற்றி வருகிறார்கள். நாம் நம் அறையில் தனியாக இருந்தாலும், நெடுந்தூரம் பயணம் செய்தாலும் இவர்கள் அருகில் இருக்கிறார்கள்.

ஆக, அதிதூதர்கள் தரும் முதல் செய்தி 'உடனிருப்பு.'

நாம் தனிமையில் இல்லை. அவர்கள் என்றும் நம் உடனிருக்கிறார்கள்.

இரண்டாவது, நாமும் இந்த அதிதூதர்கள் போல பிறர்வாழ்வில் உடனிருக்க நம்மை அழைக்கிறார்கள்.

இன்று பல நேரங்களில் நமக்கு எல்லாம் இருப்பது போல இருக்கும். ஆனால், ஏதோ ஒரு தனிமை கன்னத்தில் அறைந்துகொண்டே இருக்கும். நான் தனிமையாக இருக்கிறேன் என புலம்புவதை விட்டு, அடுத்தவரும் அப்படித்தானே நினைத்துக் கொண்டிருப்பார் என அவரின் அருகில் சென்றால் நாமும் அதிதூதர்களே.

'கடவுளின் தூதர் ஏறுவதையும் இறங்குவதையும்' காட்சியில் காண்கிறார் யாக்கோபு (காண். தொடக்கநூல் 28:12).

தன் அண்ணன் ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமை மற்றும் தந்தையின் ஆசியைப் பெற்றுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் யாக்கோபு பெத்தேலில் கனவு காண்கின்றார். அந்தக் கனவில்தான் இந்தக் காட்சியைக் காண்கிறார்.

'நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு திரும்பிவரச் செய்வேன்' என்று கடவுள் அவருக்கு வாக்குறுதி கொடுப்பதும் இக்காட்சியில்தான்.

ஆக, முதல் ஏற்பாட்டிலும் இரண்டாம் ஏற்பாட்டிலும் கடவுளின் தூதர்கள் பற்றிய செய்தி 'கடவுளின் உடனிருப்பை' நமக்கு உறுதி செய்கிறது.

இன்று ஒட்டுமொத்தமாக நம் எண்ணத்தில் குறைவுபடுவது இந்த உடனிருப்பு உணர்வே.


இதை நாளைய திருநாள் நிறைவுசெய்வதாக.

Thursday, September 27, 2018

ஒவ்வொன்றுக்கும் காலம்

நாளைய (28 செப்டம்பர் 2018) நற்செய்தி (லூக் 9:18-22)

ஒவ்வொன்றுக்கும் காலம்

கடந்த ஆண்டு தன் வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட ஒரு ஓட்டுநரிடம், 'என்ன ஆயிற்று?' என்று விசாரித்தேன். 'என் நேரம் சரியில்லை. அவ்வளவுதான். சீக்கிரம் சரியாயிடும்' என்றார்.

'நேரத்தில் என்ன இருக்கிறது? எல்லா நேரமும் நல்ல நேரம்தான்' என்பர் சிலர்.

ஆனால், நாளைய முதல் வாசகத்தில் (காண். சஉ 3:1-11) நாம் சந்திக்கும் சபை உரையாளர், 'ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு' என்கிறார். விவிலியத்தில் 'விதி,' மற்றும் 'நேரத்தின்' மேல் நம்பிக்கை கொண்டுள்ள ஒரே நபராக நாம் சபை உரையாளரைத்தான் பார்க்கிறோம்.

'விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் எல்லாம் நேரிடும்.' (சஉ 9:2,3)

'உலகில் வேறொன்றையும் கண்டேன்: ஓட்டப்பந்தயத்தில் விரைந்து ஓடுபவரே வெற்றி பெறுவார் என்பதில்லை. வலிமை வாய்ந்தவரே போரில் வெற்றி அடைவார் என்பதில்லை. ஞானமுள்ளவருக்கு வேலை கிடைக்கும் என்பதில்லை. அறிவுள்ளவரே செல்வம் சேர்ப்பார் என்பதில்லை. திறமையுடையவரே பதவியில் உயர்வார் என்பதில்லை. எவருக்கும் நேரமும் வாய்ப்பும் செம்மையாய் அமைய வேண்டும்.' (சஉ 9:11)

'ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு' என்பதை அழகிய பாடலாக சபை உரையாளர் முன்வைக்கிறார். இவர் பேசும் நேரம் 'கடிகார' நேரம் அல்ல. மாறாக, ஒவ்வொன்றும் நடக்கும் 'நிகழ்வு' நேரம். 'பிறப்புக்கு' 'இறப்புக்கு,' 'சேகரித்தலுக்கு' 'வீசி எறிவதற்கு' என ஒவ்வொன்றையும் எதிர்ப்பதமாக பதிவு செய்கின்றார். ஆனால், இவை எதிர்ப்பதங்கள் அல்ல. மாறாக, ஒன்றோடொன்று பொருந்துபவை. 'இறப்பு' என்பது 'பிறப்பின்' எதிர்ப்பதம் அல்ல. மாறாக, அது பிறப்பை நிறைவு செய்யும் மற்றொரு பகுதி. அவ்வளவுதான்.

வாழ்வில் எல்லாமே ஒன்றாக - அதாவது, பிறப்பு, மகிழ்ச்சி, அன்பு என்று மட்டும் - இருக்க வேண்டும் என நினைத்தல் தவறு. இவற்றின் மறுபகுதிகளான இறப்பு, துன்பம், வெறுப்பு என அவற்றையும் எடுத்துக்கொள்ளல் வேண்டும். வாழ்வு இயல்பாகவே இருமுனையைக் கொண்டுள்ளது. அதை ஒருமுனையாக்கிப் பார்ப்பது சால்பன்று.

ஆக, இன்று வேலையை விட்டு விலக்கும் நேரம் தனக்கு வந்தால், வேலைக்கு தன்னைச் சேர்க்கும் நேரம் வரும் என்று அந்த ஓட்டுநர் நம்பினார். அவ்வாறே, அவர் மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

இரண்டாவதாக, 'கடவுள் அனைத்தையும் அதனதன் நேரத்தில் செம்மையாகச் செய்து முடிக்கின்றார். காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கின்றார். இருந்தாலும், மனிதர்களால் கடவுள் செய்வதை அறிந்துகொள்ள முடியாது' என்கிறார் ஆசிரியர்.

ஆக, அனைத்தையும் செய்பவர் கடவுள்.

நாம் இவ்வுலகில் நேரம் மற்றும் இடத்திற்குள் வாழ்கிறோம். நம் இடத்தை நம்மால் முடிவு செய்ய முடியும். ஆனால், இந்த நேரத்தில் என் வாழ்வு இருக்கிறதா, இல்லையா என்பதை முடிவு செய்பவர் நானல்ல. ஆக, நேரம் என் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.

ஆக, நேரத்தைப் பற்றிய உணர்வுதான் என்னில் இருக்கிறதே தவிர, நேரத்தில் என்ன நடக்கும் என்பது என் கையில் இல்லை.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் இறப்பை முன்னறிவிக்கிறார். அதற்கு முன் தான் யார் என்பதை தன் சீடர்களிடம் கேட்கின்றார்.

தான் பிறக்க ஒரு நேரம், இறக்க நேரம். கொல்லப்பட ஒரு நேரம், உயிர்க்க ஒரு நேரம் - என இயேசு அறிந்திருந்ததால்தான் எல்லா நேரத்தையும் ஒன்றுபோல அவரால் எதிர்கொள்ள முடிந்தது.

'அனைத்தையும் அதனதன் நேரத்தில் செய்து முடிக்கின்ற அவரிடம்' சரணாகதி ஆவதே சால்பு.

ஏனெனில், 'காலங்கள் அவருடையன. யுகங்களும் அவருடையன.'