Monday, March 13, 2023

நீதியும் இரக்கமும்

இன்றைய இறைமொழி

செவ்வாய், 14 மார்ச் 2023

தவக்காலம் 3ஆம் வாரம்

தானியேல் 3:25,34-43. மத்தேயு 18:21-35.

நீதியும் இரக்கமும்

இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கமும் இறுதியும் அறிவுரைப் பகுதிகளாக அமைகின்றன. வாசகத்தின் தொடக்கத்தில் 'எழுபது முறை ஏழு' மன்னிக்குமாறு பேதுருவுக்கு அறிவுரை வழங்குகிறார் இயேசு. வாசகத்தின் இறுதியில் அனைவரும் ஒருவர் மற்றவரை மன்னிக்க வேண்டும் என இயேசு அழைப்பு விடுக்கிறார். இவ்விரு அறிவுரைப் பகுதிகளுக்கும் இடையே விண்ணரசு பற்றிய உவமை ஒன்று உள்ளது.

அரசர் ஒருவர் தன் பணியாளர் ஒருவரின் பெரிய கடனை மன்னிப்பதும், அந்தப் பணியாளர் தன் சக பணியாளரின் சிறிய கடனை மன்னிக்க மறுப்பதும்தான் உவமையின் உட்கூறு. அரசன் எவ்வளவு பெரிய கடனையும் மன்னிக்கலாம். ஏனெனில், பணம் அவருடையது அல்ல. அவர் சம்பாதித்ததும் அல்ல. பணியாளனுக்கு சிறிய கடனும் பெரிய சுமை. ஏனெனில், பணம் அவனுடையது. இன்னொரு பக்கம், முதல் முறை மன்னித்த அரசன் இரண்டாம் முறை பணியாளனை ஏன் மன்னிக்கவில்லை? மன்னிப்பு என்பது நிபந்தனைக்கு உட்பட்டதா? அல்லது சகப் பணியாளரின் கடனை அரசன் இவனுக்குத் திரும்பக் கொடுத்திருக்கலாமே? இக்கேள்விகள் நமக்கு நெருடலாக இருக்கின்றன.

விண்ணரசைப் பற்றி இந்த உவமை சொல்வது என்ன? விண்ணரசில் உறுப்பினராக மாறுபவரின் மேன்மையான பண்பு மன்னிப்பு. மன்னிக்கும்போது நாம் முழுவதுமாக நம்மையே கொடுக்கிறோம். நீதியிலிருந்து இரக்கம் நோக்கி நம்மை நகர்த்துகிறது மன்னிப்பு. மன்னிப்பு மற்றவர்கள்முன் நம் வலிமையை இழக்கச் செய்தாலும், இறுதியில் நம்மை வலிமை உள்ளவர் ஆக்குகிறது. மன்னிப்பு நம் உள் மனக் கட்டின்மைக்கு வழிவகுக்கிறது.

முதல் வாசகத்தில், அசரியாவின் இறைவேண்டலை வாசிக்கிறோம். இறைவேண்டலின் சாரம் இதுதான்: ஆண்டவராகிய கடவுள் மக்களை நீதியின்படி தண்டிக்காமல், இரக்கம் காட்டி மன்னிக்கிறார்.

இரு வாசகங்களையும் இணைத்துப் பார்ப்போம்:

நீதி கணக்குப் பார்க்கிறது. இரக்கம் கைகளைத் திறந்து கொடுக்கிறது.

நீதி தன்னைத் தானே பார்க்கிறது. இரக்கம் மற்றவர்களைப் பார்க்கிறது.

நீதி உணர்வு மூளையிலிருந்து பிறக்கிறது. இரக்கமோ இதயத்தில் ஊற்றெடுக்கிறது.


Sunday, March 12, 2023

செவிகொடுத்தல் நலம்தரும்!

இன்றைய இறைமொழி

திங்கள், 13 மார்ச் 2023

தவக்காலம் 3ஆம் வாரம்

2 அரசர்கள் 5:1-15. லூக்கா 4:24-30.

செவிகொடுத்தல் நலம்தரும்!

இன்றைய இரண்டு வாசகங்களிலும் காணப்படும் ஒரு பெயர் 'சிரிய நாட்டு நாமான்.' சிரிய நாட்டு நாமான் எலியா இறைவாக்கினரால் நலமாக்கப்படுவதை முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். இதே நிகழ்வைக் குறிப்பிட்டுத் தம் சொந்த ஊரின் தொழுகைக்கூடத்தில் உரையாற்றுகிறார் இயேசு. 

2 அரசர்கள் நூல் ஆசிரியர் மிக நேர்த்தியாக நாமானை அறிமுகம் செய்கிறார்: 'நாமான், படைத்தலைவர், மேன்மையானவர், வலிமையானவர், ஆனால், தொழுநோயாளர்.' இந்த 'ஆனால்' என்பது அதற்கு முன் சொல்லப்பட்ட அனைத்து நல்ல அடைமொழிகளையும் செல்லாததாக்கிவிடுகிறது. இந்த 'ஆனால்' என்பது நம் வாழ்விலும் உண்டு. மற்றவர்கள் நம்மைப் பற்றி வரையறை செய்யும்போது இதைப் பயன்படுத்தி நம் வாழ்வின் நன்மைத்தனத்தை கேள்விக்குட்படுத்துகின்றன. நம் வாழ்வின் முரண் மற்றும் இருட்டான பக்கத்தைக் குறிக்க 'ஆனால்' என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த இருள் அகலும் என்பதே மகிழ்ச்சியான விடயம்.

செவிமடுத்தலில் தொடங்குகிறது நாமான் நலம் பெறும் நிகழ்வு. இஸ்ரயேலிலிருந்து அடிமையாகக் கடத்திவரப்பட்ட இளவலின் சொல்லுக்குச் செவிமடுக்கிறார் படைத்தளபதியான நாமான். வேற்றுநாட்டு, அடிமை, இளவலின் குரலுக்குச் செவிமடுப்பதற்குத் நிறைய துணிச்சல் வேண்டும். இஸ்ரயலேலிருந்து நலம் 'வாங்கி விடலாம்' என்ற எண்ணத்தில் பொன்னும் வெள்ளியும் சுமந்துகொண்டு இஸ்ரயேலுக்குப் புறப்படுகிறார் நாமான். இஸ்ரயேலின் அரசர் இவருடைய வருகையைத் தவறாகப் புரிந்துகொண்டு தன் ஆடையைக் கிழி;த்துக்கொள்கிறார். இதைக் கேள்வியுறுகிற எலிசா நாமானைத் தன்னிடம் அழைக்கிறார். 'யோர்தான் ஏற்றில் ஏழுமுறை மூழ்கி எழுந்திரும்!' எனப் பணியாளர் வழியாகச் சொல்லி விடுகிறார். எலிசா வந்து தன்னைக் குணமாக்குவார் என எண்ணிய நாமான் ஏமாற்றம் அடைகிறார். யோர்தான் ஆற்றுக்குச் செல்லத் தயங்குகிறார். ஆனால், தன் பணியாளர் ஒருவருடைய சொற்களுக்குச் செவிமடுத்து தனக்குக் கட்டளையிடப்பட்டவாறே செய்து முடிக்கிறார். 

வல்ல செயல் நடந்தேறுகிறது. அவருடைய தோல் குழந்தையின் தோல் போல ஆகிறது. இஸ்ரயேலின் கடவுளே உண்மையான கடவுள் என அறிக்கையிடுகிறார் நாமான். நாமான் உடல்நலத்துடன் இணைந்து ஆன்மிக நலமும் பெறுகிறார். இஸ்ரயேலின் கடவுளிடமிருந்து அந்நியமாக நின்றவர் இப்போது நம்பிக்கையாளராக மாறுகிறார்.

நற்செய்தி வாசகத்தில், இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை எனச் சொல்கிற இயேசு, தம் ஊராருக்கு இரு எடுத்துக்காட்டுகளை முன்மொழிகிறார்: சாரிபாத்து நகர் கைம்பெண், நாமான். யூதக் காதுகளுக்கு புறவினத்தாரின் இப்பெயர்கள் நெருடலாக இருக்கின்றன. இயேசுவைக் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். இயேசுவின் பாடுகள் அவருடைய சொந்த ஊரிலேயே தொடங்குகின்றன.

ஊர் மக்களின் நெருக்கம் இயேசுவை அவர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது. இயேசுவின் சொற்களுக்குச் செவிமடுத்தல் அவர்களுக்குக் கடினமாக இருந்தது.

இரு வாசகங்களையும் இணைத்துச் சிந்திப்போம்:

(அ) நெருக்கம் பல நேரங்களில் நம்பிக்கைப் பயணத்திற்குத் தடையாக இருக்கிறது. இந்த நெருக்கத்தால்தான் நாசரேத்தூராரால் இயேசுவின்மேல் நம்பிக்கைகொள்ள இயலவில்லை. ஆனால், கடவுளிடமிருந்து அந்நியமாக நின்ற நாமான் கடவுளுக்கு நெருக்கமாகிறார். நம் வாழ்விலும் நெருக்கம் கடவுளிடமிருந்து நம்மைத் தூரமாக்கிவிடலாம்.

(ஆ) நாமான் மூன்று பணியாளர்களுக்குச் செவிகொடுக்கிறார்: மனைவியின் பணியாளரான இளவல், தன் படைவீரர் என்னும் பணியாளர், மற்றும் ஆண்டவரின் பணியாளரான எலிசா. ஆனால், இயேசுவின் ஊரார் மகனுக்கு – கடவுளின் மகனுக்கு – செவிமடுக்கத் தயக்கம் காட்டினார்கள். கடவுளுக்கு நாம் எப்படி, எங்கே செவிமடுக்கிறோம்?

(இ) நிகழ்வின் இறுதியில் நாமான் நம்பிக்கை அறிக்கை செய்கிறார். இஸ்ரயேலின் கடவுளைத் தன் கடவுள் என அறிக்கையிடுகிறார். இயேசுவின் ஊராரோ அவரைக் கொலை செய்ய, தங்களிடமிருந்து அகற்றிவிட முயற்சி செய்கிறார்கள். கடவுளை நாம் அள்ளிக்கொள்கிறோமா? தள்ளி விடுகிறோமா?


Saturday, March 11, 2023

அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்!

இன்றைய இறைமொழி

சனி, 11 மார்ச் 2023

தவக்காலம் 2ஆம் வாரம்

மீக்கா 7:14-15,18-20. லூக்கா 15:1-3,11-32.

அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்!

எபிரேய விவிலியத்தின் இறுதி நூலான மீக்கா இறைவாக்கினர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம் கடவுளின் இரக்கம் என்றென்றும் நிலைத்திருக்கிறது என்ற செய்தியைத் தருகிறது. நற்செய்தி வாசகத்தில் தந்தை தம் மகன்கள் இருவர்மேல் இரக்கம் காட்டுகிறார். மூத்தவர் தந்தையை விட்டு உள்ளத்தளவிலும், இளையவர் உடல் அளவிலும் செல்கிறார்.

நம்மீது இரக்கம் காட்டும் கடவுளும் தந்தையும் நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கிறார்கள்:

(அ) அடுத்தவர் நம் அன்பைத் திருப்பித்தரவில்லை என்றாலும் அவர்மேல் அன்பு.

(ஆ) மற்றவர்களின் தீமை என் நன்மைத்தனத்தை மாற்ற இயலாது.

(இ) மதிப்பு வெட்கம் என்னும் வரையறைகளைக் கடந்து வாழ்தல்.


Friday, March 10, 2023

நாம் அவனைக் கொல்வோம்!

இன்றைய இறைமொழி

வெள்ளி, 10 மார்ச் 2023

தவக்காலம் 2ஆம் வாரம்

தொடக்கநூல் 37. மத் 21:33-43,45-46.

நாம் அவனைக் கொல்வோம்!

மனிதர்கள் தங்கள் முழு விருப்பத்தோடு, முழு அறிவோடு, எவ்விதக் குற்றவுணர்வுமின்றி தங்கள் சக மனிதர்களைக் கொன்றழிக்கும் நிகழ்வுகளை இன்றைய வாசகங்களில் காண்கிறோம்.

முதல் வாசகத்தில் யோசேப்பு கதையாடலின் முதல் பகுதியை வாசிக்கிறோம். அவரைக் கொன்றழிக்க வேண்டும் என நினைத்த அவருடைய சகோதரர்கள், அவரை விற்றுவிடுகிறார்கள். கதையின் தொடக்கத்திலேயே அவர்களுடைய பொறாமையை நாம் உணர முடிகிறது. அவர்களுடைய தந்தை யாக்கோபு காட்டிய பாரபட்சம் பொறாமை உணர்வைத் தூண்டி எழுப்புகிறது. யோசேப்பு பகிர்ந்துகொண்ட கனவுகளும் அவர்களுடைய கோபத்தை அதிகமாக்குகின்றன. இந்த நிகழ்வின் இறுதியில் கடவுளின் கரமே அனைத்தையும் செய்துவருகிறது என்பதைப் பார்க்கும்போது, யோசேப்பு விற்கப்படுவதற்கு அவருடைய சகோதரர்கள் மட்டுமல்லாமல், யாக்கோபும் கடவுளும்கூட காரணமாகிறார்கள்.

நற்செய்தி வாசகத்தில் கொடிய குத்தகைக்காரர் உவமையை வாசிக்கிறோம். ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் நிலக்கிழார்மேல் கோபம் கொள்கிறார்கள். தங்களுக்கு உரிமை இல்லாத தோட்டத்தை உரிமையாக்கிக்கொள்ள நினைக்கிறார்கள். தோட்டத்திற்கான வாரிசைக் கொன்றழித்தால் தோட்டம் தங்களுடையதாகும் என எண்ணுகிறார்கள். இந்த உவமையைக் கேட்ட பரிசேயர்கள், அந்த உவமை தங்களை நோக்கிச் சொல்லப்பட்டதாக உணர்ந்து வெளியே சென்ற இயேசுவைக் கொன்றழிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்.

முதல் வாசகத்தில் சகோதரர்கள் சகிப்புத்தன்மை இழக்கக் காரணம் அவர்களுடைய பொறாமை மற்றும் கோபம். இரண்டாம் வாசகத்தில் குத்தகைக்காரர்கள் சகிப்புத்தன்மை இழக்கக் காரணம் அவர்களுடைய பேராசை மற்றும் தன்னலம். இவ்விரு நிகழ்வுகளிலும் நீதி மீறப்படுகிறது, மனித உயிர் அழிக்கப்படுகிறது, வலுவற்ற நபர் வெற்றிகொள்ளப்படுகிறார்.

கிறிஸ்தியல் பார்வையில் வாசிக்கும்போது, முதல் வாசக யோசேப்பும், இரண்டாம் வாசக மகனும் இயேசுவை நமக்கு அடையாளப்படுத்துகிறார்கள். ஆனால், இயேசுவின் துன்பம் கடவுளால் விரும்பட்டது என்றும், அவர் நம் பாவங்களுக்காக இறந்தார் என்றும் நாம் கற்பிக்கும் இறையியல் இத்தகைய வாசிப்புக்கு இடறலாக இருக்கிறது.

சாதாரண மனித நிலையில் இவ்விரு வாசகங்களையும் வாசிக்கும்போது, நிகழ்வுகளில் மேலோங்கி நிற்கும் வன்மம் அல்லது வன்முறை நமக்குப் புலப்படுகிறது. சிக்மன்ட் ப்ராய்ட் என்னும் உளவியல் அறிஞர், பாலுணர்வும் வன்முறை உணர்வும் மனிதர்களின் அடிப்படை உணர்வுகள் என வரையறுக்கிறார். மற்றவர்களின் துன்பம் கண்டு வருந்தும் நம் உள்ளமே மற்றவர்களுக்குத் துன்பம் இழைக்கவும் செய்கிறது. நம் கண்டுகொள்ளாத்தன்மையும் சகிப்புத்தன்மை இழப்பும் வன்முறையின் குட்டிக் குழந்தைகள். வன்முறை நம்மை நாமே அழிக்கிறது. தன் வாலையே தின்று தன்னையே அழித்துக்கொள்ளும் பாம்பு போல வன்முறை கொள்ளும் நாமும் நம்மையே அழித்துக்கொள்கிறோம். 

வன்முறை நம் பார்வையைச் சுருக்குகிறது. தாங்கள் விற்ற யோசேப்பிடமே தாங்கள் திரும்பச் செல்ல வேண்டும் என்பதை அறியவில்லை சகோதரர்கள். மகனைக் கொன்றழித்தாலும் நிலாக்கிழாராகிய தந்தைத் தங்களைப் பழிதீர்ப்பார் என அறியவில்லை குத்தகைதாரர்கள்.

இன்று நாம் மேற்கொள்ளும் தவமும் இறைவேண்டலும் நம் வன்முறை உணர்வைக் கட்டுக்குள் கொண்டுவருவதாக!


Tuesday, March 7, 2023

தவறாகப் புரிந்துகொள்ளப்படுதல்

இன்றைய இறைமொழி

புதன், 8 மார்ச் 2023

தவக்காலம் 2ஆம் வாரம்

எரேமியா 18:18-20. மத்தேயு 20:17-28.

தவறாகப் புரிந்துகொள்ளப்படுதல்

இரண்டு பேர் தங்களுக்கு நெருக்கமான மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதை இன்றைய வாசகங்கள் நம் கண்முன் கொண்டுவருகின்றன.

இறைவாக்கினர் எரேமியா எருசலேம் ஆலயத்துக்கும், நகரத்துக்கும், மக்களுக்கும் எதிராக இறைவாக்குரைக்கிறார். எருசலேம் நகரத்தார் ஒரு வகையான மிதப்புநிலையில் இருக்கிறார்கள். 'எங்களுக்கு ஒன்றும் நேரிடாது' என நினைத்த டைட்டானிக் கப்பல் பயணிகளைப் போல, எங்களுடைய நகருக்கும் நாட்டுக்கும் எதுவும் நேரிடாது என்ற நினைக்கிறார்கள். அவர்களுடைய சிலைவழிபாடு, நம்பிக்கைப் பிறழ்வு, பிரமாணிக்கமின்மை ஆகியவற்றை ஆண்டவராகிய கடவுள் எரேமியா வழியாகச் சுட்டிக்காட்டுகிறார். வரவிருக்கிற அழிவை முன்னுரைக்கிறார்.

ஆனால், எரேமியாவைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் மக்கள். அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள்: 'வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும் ஞானிகளிடமிருந்து அறிவுரையும் இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது.' கடவுளையும் கடவுளது இரக்கத்தையும் மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

தன் மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட எரேமியா ஆண்டவரிடம் ஓடி அவரிடம் அழுது புலம்புகிறார். தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதை எதிர்கொள்வதற்கான முதல் வழி இது.

நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் பாடுகளை மூன்றாம் முறையாக அறிவிக்கிறார். இயேசு ஒவ்வொரு முறையும் தம் பாடுகளை முன்னறிவிக்கும்போதும் அவருடைய சீடர்கள் அவரைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். மூன்றாம் முறையாக முன்னறிவிக்கும் நிகழ்வில் திருத்தூதர்கள் இருவர் இயேசுவின் வலப்புறமும் இடப்புறமும் அமர விரும்புகிறார்கள். 

சீடர்கள் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொள்ளக் காரணம் என்ன? (அ) அவர்கள் தங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், (ஆ) இயேசுவின் அரசநிலை மற்ற அரசர்களைப் போன்றது என நினைக்கிறார்கள், (இ) நிறைய எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்கள்.

இயேசு தம் சீடர்களோடு உரையாடி அவர்களுக்குத் தன்னிலை விளக்கம் தருகிறார். துன்பத்தின் வழியாக தன் மெசியா நிலை சாத்தியம் என்பதை உணர்த்துகிறார். பணியாளராக இருப்பதே தலைமைத்துவத்துக்கான வழி எனக் கற்பிக்கிறார்.

தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கான இரண்டாவது பதிலிறுப்பு விளக்கம் தருவது.

இரு வாசகங்களையும் இணைத்துச் சிந்திப்போம்:

(அ) நம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிவோர், மற்றும் நம் பணியின் பயனர்கள் நம்மைத் தவறாகப் புரிந்துகொள்வது இயல்பான வாழ்வியல் அனுபவம். இதை நாம் இரண்டு நிலைகளில் அணுகலாம்: ஒன்று, இறைவனிடம் எடுத்துச் சென்று இறைவேண்டல் செய்வது – எரேமியா போல, இரண்டு, அவர்களிடம் விளக்கிச் சொல்வது - இயேசு போல.

(ஆ) தாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் எரேமியாவும் இயேசுவும் தொடர்ந்து பயணம் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் இலக்கில் உறுதியாக இருந்தார்கள். இலக்கு தெளிவாகவும், நம் நடை உறுதியாகவும் இருக்கும்போது நம்மை யாராலும் வெற்றிகொள்ள இயலாது.

(இ) எருசலேம் இயேசுவுக்கு மிகவும் முக்கியமான ஒன்று: அங்கேதான் அவருடைய பணி நிறைவடைகிறதுளூ அவர் வலுவின்மையைத் தழுவுகிறார்ளூ அங்கிருந்துதான் உயிர்த்து விண்ணேறிச் செல்கிறார். விழுந்ததும் எழுந்ததும் எருசலேமில்தான். நான் விழுகின்ற இடத்திலிருந்து எழுகிறேனா?


Monday, March 6, 2023

கற்றலும் கற்பித்தலும்

இன்றைய இறைமொழி

செவ்வாய், 7 மார்ச் 2023

தவக்காலம் 2ஆம் வாரம்

எசாயா 1:10,16-20. மத்தேயு 23:1-12.

கற்றலும் கற்பித்தலும்

இன்றைய முதல் வாசகம் எசாயா இறைவாக்கினர் நூலின் முதற்பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசாயா மற்றும் எரேமியா இறைவாக்கினர் நூல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எரேமியா நூலில் முதலில் இறைவாக்கினரின் அழைத்தல் கதையாடலும் தொடர்ந்து இறைவாக்குரைத்தல் சூழலும் இடம்பெறுகிறது. ஆனால், எசாயா நூலில் முதலில் சூழலும் பின்னர் அழைத்தல் கதையாடலும் இடம்பெறுகிறது. இவ்வாறாக, இறைவாக்கினருடைய பணியின் அவசரம் மற்றும் அவசியம் நமக்குத் தெளிவுபடுத்தப்படுகிறது. 

ஆண்டவராகிய கடவுள் தம் சொந்த மக்களை, 'சோதோம் மக்களே, கொமோரா மக்களே' என அழைக்கிறார். கோபமாக இருக்கிற அப்பா தன் பிள்ளைகளை இன்னொருவருடைய பிள்ளைகள் என்று அழைப்பது போல இருக்கிறது. அதாவது, ஆண்டவராகிய கடவுள் தம் மக்கள்மேல் உள்ள உரிமையை ஏற்றுக்கொள்ள மறுத்து, அவர்களை அந்நியப்படுத்துகிறார். நாம் செய்யும் பாவங்கள் நம்மை இறைவனிடமிருந்து அந்நியப்படுத்துகின்றன என்பது இங்கே புலப்படுகிறது. தம் மக்களைத் தள்ளிவிடுகின்ற ஆண்டவராகிய கடவுள் சற்று நேரத்தில் அவர்களை அள்ளி எடுக்கிறார்: 'உங்கள் பாவங்ள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன. எனினும், உறைந்த பனிபோல் அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன. எனினும், பஞ்சைப்போல அவை வெண்மையாகும்'. இவ்வாறாக, மாற்றத்தை முன்மொழிகிறார் கடவுள்.

இப்பகுதியில் உள்ள இரு சொல்லாடல்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

(அ) 'நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்'

'கற்றுக்கொள்தல்' என்னும் அறிவுசார் சொல்லாட்சியைப் பயன்படுத்துகிறார் கடவுள். நன்மை செய்வது என்பது ஒரு கலை. அது கற்றுக்கொள்ளப்பட வேண்டியது. எப்படி? நாம் பியானோ கற்றுக்கொள்கிறோம் என வைத்துக்கொள்வோம். முதல் நாளில், பியானோவில் உள்ள சாவிகள் நமக்கு அந்நியமாகத் தெரிகின்றன. மூன்று மாதங்கள் தொடர் பயிற்சிக்குப் பின்னர் அவை ஓரளவுக்கு நம் கைக்குள் வருகின்றன. நாமாக இசைக்கத் தொடங்குகிறோம். தொடர்ந்து இரண்டு மூன்று வருடங்கள் கழித்து பியானோ வாசிப்பது நம் இயல்பாக மாறுகிறது. இதையே ராபர்ட் க்ரீன் என்னும் ஆசிரியர், (1) புகுமுக நிலை, (2) ஆராய்ச்சி நிலை, (3) ஆற்றல் நிலை என எழுதுகிறார். நம் ஆற்றலுக்கு உட்பட்ட ஒன்று நம் இயல்பாக மாறிவிடுகிறது.

(ஆ) 'வாருங்கள், நாம் வழக்காடுவோம்'

'நாம் வழக்காடுவோம்' என்னும் சொல்லாடலை, 'நாம் அமர்ந்து யோசித்துப் பார்ப்போம்' என்றும் மொழிபெயர்க்கலாம். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கும்போது அவர்களுடைய உணர்வுகளைத் தட்டி அல்ல, மாறாக, அறிவைத் தூண்டி அழைக்கிறார். 'செவ்வாய்க் கிழமைகளில் மோரியுடன்' என்னும் நூலின் ஆசிரியர், 'அன்பு செய்தல் ஓர் அறிவார்ந்த செயல்' என அழைக்கிறார். அதாவது, அன்பு என்பது வெறும் உணர்வுகள் அல்லது உணர்ச்சிகளின் வெளிப்பாடு அன்று. மாறாக, அறிவின், சிந்தனையின் வெளிப்பாடு. ஆண்டவராகிய கடவுள் நன்றாக யோசித்து அறிவார்ந்த நிலையில் மனமாற்றம் நோக்கி நகருமாறு தம் மக்களை அழைக்கிறார்.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு, மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களின் வெளிவேடம் பற்றி எச்சரிக்கிறார். அவர்களிடம் உள்ள பிரச்சினைகள் மூன்று: (1) அவர்கள் போதித்தார்கள். ஆனால், போதனையைப் பின்பற்றவில்லை. (2) மக்கள்மேல் நிறைய விதிமுறைகளைச் சுமைகளாக ஏற்றுகிறார்கள். ஆனால், அவர்கள் அவற்றைச் சுமப்பதற்கு உதவிசெய்வதில்லை. (3) தங்களுக்குத் தாங்களே ரபி, தந்தை, போதகர் என்னும் தலைப்புகளை அளித்துக்கொள்கிறார்கள்.

சீடத்துவத்தின் அடிப்படை மதிப்பீடாக தாழ்ச்சியை முன்மொழிகிறார் இயேசு.

தாழ்ச்சி என்பதன் ஆங்கிலப் பதம் ஹ்யுமிலிட்டி. இச்சொல் ஹ்யுமுஸ் என்னும் இலத்தீன் பதத்திலிருந்து வருகிறது. ஹ்யுமுஸ் என்றால் களிமண் என்பது பொருள். ஆண்டவராகிய கடவுள் நம்மை களிமண் கொண்டு உருவாக்குகிறார் (காண். தொநூ 2). தாழ்ச்சி கொள்ளும் ஒருவர் தன் வாழ்வின் தொடக்கநிலையில் தன்னை நிறுத்திப் பார்க்கிறார். தாழ்ச்சியில் நாம் கடவுளை நம் ஆசிரியராகவும், ஒருவர் மற்றவரைச் சகோதரர் சகோதரிகள் என்றும் அடையாளம் காண்கிறோம்.

இரு வாசகங்களையும் இணைத்துப் பார்ப்போம்:

(அ) நன்மை செய்யக் கற்றுக்கொள்ளவும், தாழ்ச்சியாக இருக்கப் பழகிக்கொள்ளவும், ஆண்டவரோடு அமர்ந்து யோசித்துப் பார்க்கவும் நாம் அழைப்பு பெறுகிறோம். நாம் இன்று எப்படி இருக்கிறோம் என்று ஆய்வு செய்வது முதல்படி.

(ஆ) நம் அடையாளங்கள் மற்றும் முத்திரைகளை அகற்ற முன்வருவோம். நம் அடையாளங்களைக் கொண்டு மற்றவர்கள் நம்மைக் கண்டுகொள்ள வேண்டும் எனவும், மற்றவர்களால் நாம் பாராட்டு பெற வேண்டும் எனவும் விரும்புகிறோம். மேலும், அடையாளங்களே ஒருவர் மற்றவரிடமிருந்து நம்மைப் பிரிக்கின்றன.

(இ) தாழ்ச்சி என்ற மதிப்பீடு வேண்டி இறைவேண்டல் செய்வோம். நாம் எப்போதும் எல்லாராலும் பாராட்டப்பட வேண்டும் எனவும், நாம் இந்த உலகின் மையம் என்றும் நினைக்கிறோம். நம் வீடு அல்லது பணியிடத்தை விட்டுச் சற்றே வெளியேறினால், நாம் இல்லாமலும் உலகம் இயங்கும் என்பது நமக்குப் புரிகிறது. நாம் இன்றியமையாதவர்கள் அல்லர் என்பதை உணர்த்துவது தாழ்ச்சி.


Sunday, March 5, 2023

இரக்கம் ஆண்டவரிடம் உண்டு.

இன்றைய இறைமொழி

திங்கள், 6 மார்ச் 2023

தவக்காலம் 2ஆம் வாரம்

தானியேல் 9:4-10. லூக்கா 6:36-38.

இரக்கம் ஆண்டவரிடம் உண்டு.

இன்றைய முதல் வாசகத்தில் தானியேலின் இறைவேண்டலை வாசிக்கிறோம். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கையை மறந்து பாவம் செய்கிறார்கள். அதனால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். ஆனால், இறுதியில் ஆண்டவரின் இரக்கம் செல்கிறது.

நற்செய்தி வாசகத்தில், தம் சீடர்கள் வானகத் தந்தை போல இரக்கம் உள்ளவர்களாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார் இயேசு. நீதி மற்றும் இரக்கம் என்னும் இரு தளங்களில் நாம் செயலாற்ற இயலும். இரக்கம் என்னும் அளவையால் மற்றவர்களுக்கு அளக்கும்போது நாம் இறைவனுக்கு அருகில் வருகிறோம்.



Friday, March 3, 2023

இருத்தல் மற்றும் கொடுத்தலின் நிலை

இன்றைய இறைமொழி

சனி,4 மார்ச் 2023

தவக்காலம் முதல் வாரம்

இணைச்சட்டம் 26:16-19. மத்தேயு 5:43-48.

இருத்தல் மற்றும் கொடுத்தலின் நிலை

'நம் கொடுத்தலின் அளவைப் பொருத்தே நம் இருத்தலின் அளவு இருக்கிறது' என்று சொல்லப்படுவதுண்டு. அதாவது, என்னால் எந்த அளவுக்குப் பெரியதாகக் கொடுக்க முடிகிறதோ, அந்த அளவுக்குப் பெரியதாக நான் வாழ்கிறேன்.

நம் இருத்தலின் மேன்மையை உணர்ந்து, அதற்கேற்றவாறு நம் கொடுத்தலை மேம்படுத்திக்கொள்ள இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. 

இன்றைய முதல் வாசகம் இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மோசே வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழையத் தயாராக இருந்த மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார். ஒரு தலைமுறை மறைந்து மறு தலைமுறை வந்துவிட்டது. இப்புதிய தலைமுறையினருக்கு ஆண்டவராகிய கடவுள் நிகழ்த்திய அரும் பெரும் செயல்களை, குறிப்பாக, அவர் ஏற்படுத்திய உடன்படிக்கையை அவர்களுக்கு நினைவுறுத்துகிறார். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தம் தனிப்பெரும் சொத்தாக, கண்ணின் மணியாகத் தெரிந்துகொள்கிறார். சாதாரண மனிதரோ, அல்லது அரசரோ அவர்களை உரிமைச்சொத்தாக்கவில்லை. மாறாக, ஆண்டவராகிய கடவுளே அவர்களைத் தம் உரிமைச்சொத்தாக ஆக்கிக்கொள்கிறார். ஆண்டவரால் உரிமை கொண்டாடப்படும் மக்கள் தங்கள் வாழ்வை அதற்கேற்றாற்போலத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பது மோசேயின் அறிவுரை. ஆண்டவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் ஆர்வம் காட்டுமாறு அவர்களை அழைக்கிறார். அச்சத்தினாலோ கட்டாயத்தினாலோ அல்ல, மாறாக, பிள்ளைகளுக்குரிய அன்பு மற்றும் மரியாதையுடன் அவர்கள் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இரண்டாம் வாசகம் இயேசுவின் மலைப்பொழிவின் ஒரு பகுதியாக இருக்கிறது. இதில் இயேசு தம் சீடர்களின் அடித்தள அனுபவத்தை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். அவர்கள் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள். அவர் நிறைவுள்ளவர். மண்ணகத் தந்தையர் பல நேரங்களில் நிபந்தனையுடன் அன்பு காட்டுகிறார்கள். ஆனால், விண்ணகத் தந்தை நிபந்தனைகள் இல்லாமல் அன்பு செய்கிறார். இப்படிப்பட்ட தந்தையின் அன்பைப் பெறுகிற அவர்கள், அதே அன்பை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் - நிபந்தனைகள் இல்லாமல், வேறுபாடு பாராட்டாமல்!

இவ்வாறாக, இரு வாசகங்களும் நம் இருத்தலின் மேன்மையை நமக்கு நினைவூட்டி, இன்னும் கொஞ்சம் கைகளைத் திறந்த அன்பையும் இரக்கத்தையும் கொடுக்க நம்மை அழைக்கின்றன. இயேசு தம் இருத்தலின் மேன்மையை உணர்ந்தவராக இருந்தார். தாம் திருமுழுக்கிலும் உருமாற்றத்திலும் பெற்ற அடித்தள அனுபவத்தை அடிக்கடி வாழ்ந்து பார்த்தார். ஆகையால்தான், அவரால் அனைவரையும் சகோதர சகோதரிகள் என அழைக்க முடிந்தது. சிலுவையில் தம்மையே கையளிக்க முடிந்தது.

சிந்திப்போம்:

நாம் நம்மையே மற்றவர்களுக்கு முழுமையாகக் கொடுக்க இயலாமல்போவதற்கான காரணம் என்ன? நம் அன்பு ஏன் வேறுபடுத்திப் பார்க்கிறது? நாம் ஏன் மற்றவர்களைத் தீர்ப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்? நாம் ஏன் மற்றவர்களிடம் எதிர்வினை ஆற்றுகிறோம்? மற்றவர்களின் தீமை நம் நன்மைத்தனத்தை மாற்ற நாம் ஏன் அனுமதிக்கிறோம்?

இவற்றுக்கான விடை ஒன்றுதான்: நம் இருத்தலின் மேன்மையை நாம் மறந்துவிட்டோம்! நம் இருத்தலின் மேன்மை நம் பணியாலோ, பணத்தாலோ, பொருளாலோ, அழகாலோ வருவதில்லை. மாறாக, கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்னும் நம்பிக்கையிலிருந்து வருகிறது. இது நம் வாழ்வின் அனுபவமாக மாறினால், வாழ்வின் அளவுகோல்களும் மாறத் தொடங்கும்.

நாம் இந்த அனுபவத்தை மறந்து போகிறோம்?

ஏனெனில், நாம் நம்மைப் பற்றிய எண்ணங்களில், நம் கருத்தியல்களில், அடையாளங்களில், விருப்பு வெறுப்புகளில் மூழ்கிக் கிடக்கிறோம். நம் கவனம் சிதைந்து நிற்கிறது.

நம் இருத்தலின் மேன்மையை உணர்ந்தவர்களாக, நம் கைகளை மெதுவாக மற்றவர்களுக்கு விரித்துக்கொடுப்போம் - ஒரு பூ போல!

யாரும் எதுவும் நம் அடித்தள அனுபவத்திலிருந்து நகர்த்திவிட வேண்டாம்.


Thursday, March 2, 2023

மனமாற்றம். நிலைத்தன்மை. மேன்மை.

இன்றைய இறைமொழி

வெள்ளி, 3 மார்ச் 2023

தவக்காலம் முதல் வாரம்

எசேக்கியேல் 18:21-28. மத்தேயு 5:20-26.

மனமாற்றம். நிலைத்தன்மை. மேன்மை.

இன்றைய முதல் வாசகம் இரு வகையான மனிதர்களை நம் கண்முன் கொண்டுவருகிறது: (அ) பொல்லார், (ஆ) நேர்மையாளர். இவர்கள் மீட்புப் பெறுவதற்கான வழிகள் வேறு வேறாக இருக்கின்றன. பொல்லார் தன் தீய வழியை விட்டு மனம் மாற வேண்டும். நேர்மையாளர் தன் நேரிய வழியில் நிலைத்திருக்க வேண்டும். தீய வழியிலிருந்து மனம் மாறுவதை விட நேரிய வழியில் நிலைத்திருப்பது மிகவும் கடினமானது. நற்செய்தி வாசகத்தில், மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களின் நெறியைவிடத் தம் சீடர்களின் நெறி சிறந்ததாக இருக்க வேண்டும் எனக் கற்பிக்கிறார் இயேசு. தம் சீடர்களிடமிருந்து கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கிறார் இயேசு. பரிசேயர்களுடைய நெறி செயல்பாடு சார்ந்தது, மேன்மையான நெறி உளப்பாங்கு சார்ந்தது. முந்தைய நெறி வெளிப்புறச் சடங்குகளை முன்னிறுத்துகிறது. மேன்மையான நெறி உள்புற மாற்றத்தை வலியுறுத்துகிறது. முந்தைய நெறி எளிதானது. மேன்மையான நெறி கடினமானது.

இன்றைய வாசகங்கள் நாம் எந்நிலையில் இருந்தாலும் நமக்குப் பாடங்களைக் கற்பிக்கின்றன. பொல்லாதவராக இருந்தால் மனமாற்றம் பெற வேண்டும். நேர்மையாளராக இருந்தால் நிலைத்தன்மை கொள்ள வேண்டும். என் நேர்மையாளர் நிலையில் நான் மேன்மையை விரும்ப வேண்டும்.

இவற்றிலுள்ள சிக்கல்கள் எவை?

பொல்லார் பல நேரங்களில் மனம் மாறுவதில்லை. ஏனெனில், தான் நல்லவராக இருப்பதாகவே அவர் நினைத்துக்கொள்கிறார். தனக்கு மனமாற்றம் தேவையில்லை என நினைக்கிறார்.

நேர்மையாளர் தான் நேர்மையாளராகவே நிலைத்திருக்க வேண்டுமா என அச்சம் கொள்கிறார். ஏனெனில், அவர் வாழ்கிற உலகம் பொல்லாத உலகம். அவர் நேர்மையாளராக இருந்தாலும் பொல்லார் அவரை அவ்வாறு இருக்குமாறு அனுமதிக்க மாட்டார். ஒருநாள் நேர்மையாளராக இருக்கலாம். ஒவ்வொரு நாளும் அப்படி இருக்க வேண்டுமா என்று நம் மனம் திகைப்பு அடைகிறது. குடிநோயாளர் மறுவாழ்வு நிகழ்விலும் ஒவ்வொரு நாள் முயற்சியே கற்றுக்கொடுக்கப்படுகிறது. நான் ஒவ்வொரு நாளாக நேர்மைத்தன்மையால் நிலைத்தால் நிலைத்தன்மையைக் கைக்கொள்ள முடியும்.

தம் சீடர்களின் நெறி மற்றவர்களின் நெறியைவிட மேன்மையாக இருக்க வேண்டும் என்னும் இயேசுவின் எதிர்பார்ப்பு நமக்குக் கடினமாக இருக்கிறது. ஏனெனில், பல நேரங்களில் நாம் நம்மையே மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களைவிட நாம் நல்லவர்களாக இருப்பது கண்டு மகிழ்ந்து நிறைவடைகிறோம். இயேசு சில எடுத்துக்காட்டுகள் தருகிறார். எதிர்வினை ஆற்றுதல் குறைத்து நேர்முக ஆற்றுதலுக்கு நம்மை அழைக்கிறார். கொலை செய்பவர், கோபம் கொள்பவர், மற்றவர்களைக் கடிந்துரைப்பவர் எதிர்வினை ஆற்றுகிறார். அவருக்கு வெளியிலிருந்து வரும் காரணிக்கு ஏற்பச் செயலாற்றுகிறார். ஆனால், மன்னிப்பவர், சமரசம் செய்துகொள்பவர், மற்றவரோடு அமைதியுடன் வழிநடப்பவர் நேர்முகமாகச் செயலாற்றுகிறார்.

நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று கண்டறிந்து, அந்த நிலையிலிலுள்ள சிக்கலைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்வோமாக!


Wednesday, March 1, 2023

சார்புநிலை, இணைவுநிலை, கூட்டுறவு

இன்றைய இறைமொழி

வியாழன், 2 மார்ச் 2023

தவக்காலம் முதல் வாரம்

எஸ்தர் 4:17முதல். மத்தேயு 7:7-12.

சார்புநிலை, இணைவுநிலை, கூட்டுறவு

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) மூன்று கட்டளைச் சொற்கள் வழியாக – கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் - இயேசு தம் சீடர்களுக்குக் கற்றுத் தருகிறார். (ஆ) கடவுளுடைய நன்மைத்தனம் மற்றும் பேராண்மைமேல் பற்றுறுதிகொள்ளுமாறு அவர்களை அழைக்கிறார். (இ) பொன்விதியை – மற்றவர்களின் கண்ணோட்டம் கொண்டு நம் வாழ்வை வாழ்வதை – கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துகிறார்.

மேற்காணும் மூன்று பிரிவுகளும் ஒன்று மற்றதிலிருந்து வேறுபட்டதாக இருந்தாலும், மூன்றையும் இணைக்கின்ற கூறு ஒன்று உள்ளது. அது என்ன? நம் சார்புநிலையைக் கொண்டாடுவது. தன்மையம் கொண்ட வாழ்வை விடுத்துப் பிறர்மையம் நோக்கியும் இறைமையம் நோக்கியும் நகருமாறு நம்மை அழைக்கிறார் இயேசு. பல நேரங்களில், 'என்னால் தனியாகச் சாதிக்க இயலும்,' 'என்னால் மட்டுமே சாதிக்க இயலும்' என்று நாம் நினைக்கிறோம். ஆனால், சற்றே அமைதியாக யோசித்தால் தனியாகச் சாதித்தல் இயலாது என்பதை உணர்கிறோம். ஆக, ஒருவர் மற்றவர்மேலும், இறைவன்மேலும் நாம் சார்புநிலை கொண்டிருத்தல் அவசியம்.

சிந்திப்போம்: 'கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்.'

கேட்பது என்பது தாழ்வானது எனப் பல நேரங்களில் கருதுகிறோம். 'எனக்கு இது வேண்டும்' என்றும், 'எனக்கு இதைச் செய்துகொடு' என்றும் நாம் மற்றவர்களிடம் கேட்கும்போது நம்மை நொறுங்குநிலைக்கு உட்படுத்துகிறோம். மற்றவர்கள் நம் வேண்டுதலை நிராகரிக்கவும், நாம் விரும்பாததை நமக்குக் கொடுக்கவும் வாய்ப்பு நிறையவே உள்ளது.

பல நேரங்களில் நாம் தேடுவதில்லை. ஏனெனில், எதைத் தேடுவது என்பது நமக்குத் தெரிவதில்லை. அல்லது ஒரே நேரத்தில் பலவற்றைத் தேடி அலைந்து நம் ஆற்றலை விரயம் செய்கிறோம். அல்லது 'நான் நானாக இருப்பது போதும்,' 'எனக்கு உள்ளது போதும்' என ஆறுதல் சொல்லிக்கொள்கிறோம்.

மேலும், நாம் தட்டுவதற்கும் தயங்குகிறோம். மற்றவர்களின் கதவுகளைத் தட்டுவது தகாதது என எண்ணுகிறோம். கதவு வரை சென்றுவிட்டுத் தட்டாமல் திரும்புகிறோம். கதவைத் திறப்பதற்காகக் கதவின் அந்தப் பக்கம் ஒருவர் காத்திருக்கிறார் என்பதை மறந்துவிடுகிறோம்.

இறைவேண்டலில் மட்டுமல்ல, நம் சமூக மற்றும் தொழில்சார் பரிவர்த்தனைகள் அனைத்திலும் கேட்டல்-தேடுதல்-தட்டுதல் அவசியம். நாள்கள் நகர நகர நாம் இதைக் கற்றுக்கொள்கிறோம். நமக்குத் தேவையானதெல்லாம் குழந்தைக்குரிய தாழ்ச்சியும் சரணாகதியும்தான்.

இரண்டாவதாக, விண்ணகத்தந்தை நன்மைத்தனமும் பேராண்மையும் நிறைந்த கடவுள் என நமக்குக் கற்றுத்தருகிறார் இயேசு. அவருடைய வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டவர்களாய் அவரை நோக்கி நகர்தல் நலம்.

மூன்றாவதாக, நம் வாழ்க்கையை மற்றவர்களின் பார்வையிலிருந்து வாழப் பழகுதல். அக்கரையிலிருந்து நம்மைப் பார்க்கும்போது அக்கறை உணர்வு தானாக வருகிறது. எடுத்துக்காட்டாக, கோவில் அல்லது கடைக்குச் செல்லும் வழியில் ஒருவர் நம்மை நிறுத்தி உதவி கேட்கிறார். அந்தப் பொழுதில் நாம் அப்படியே அவருடைய இடத்தில் நம்மையும் நம்முடைய இடத்தில் அவரையும் வைத்துப் பார்த்தால் நம்மை அறியாமலேயே நாம் உதவத் தொடங்குகிறோம். 

முதல் வாசகத்தில் எஸ்தர் அரசியின் இறைவேண்டலை வாசிக்கக் கேட்கிறோம். தன் மக்களின் விடுதலைக்காக அரசரிடம் முறையிடச் செல்லுமுன் விண்ணக அரசரிடம் இறைவேண்டல் செய்கிறார் அரசி. ஆக, அவர் அல்லர், மாறாக, கடவுளே மக்களுக்கு விடுதலை தருகிறார். தன்னோடு உடன் வருமாறு கடவுளை அழைக்கிறார் எஸ்தர். குழந்தைக்குரிய மனப்பாங்குடன் தட்டுகிறார், கதவுகள் அவருக்குத் திறக்கப்படுகின்றன. 

இவ்விரு வாசகங்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் எவை? (அ) சார்புநிலை – கடவுள்மேலும் ஒருவர் மற்றவர்மேலும் கொண்டிருத்தல் நலம். (ஆ) இணைவுநிலை – நாம் இங்கே இருப்பது ஒருவர் மற்றவருடன் போட்டி போட அல்ல, மாறாக, ஒருவர் மற்றவரை நிரப்பிக்கொள்ள. மற்றும் (இ) கூட்டுறவு – கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் - வெற்றியைத் தருகிறதே அன்றி, கோபமும் கூச்சலும் வெற்றி தருவதில்லை.