Sunday, November 29, 2020

புனித அந்திரேயா

இன்றைய (30 நவம்பர் 2020) திருநாள்

புனித அந்திரேயா

சீமோன் பேதுருவின் சகோதரரும், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவருமான புனித அந்திரேயாவின் திருநாளை இன்று நாம் கொண்டாடுகிறோம். கிரேக்கத்தில் 'ஆண்ட்ரெஸ்' என்றால் 'ஆண்மை' அல்லது 'பலம்' அல்லது 'வலிமை' என்பது பொருள். எனவேதான், தமிழில் இவரது பெயரை, 'பெலவேந்திரர்' என அழைக்கின்றோம்.

இவரைப் பற்றிய குறிப்பு நான்கு நற்செய்தி நூல்களிலும் வருகிறது. ஒத்தமைவு நற்செய்திகளில் (மாற்கு, மத்தேயு, லூக்கா) இவர் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் என்றும், சீமோன் பேதுருவின் சகோதரர் என்றும், இயேசுவின் முதற்சீடர்கள் இருவரில் ஒருவர் என்றும் அறிமுகப்படுத்துகிறார். ஆனால், யோவான் நற்செய்தியில் இவரைப் பற்றிய குறிப்பு மூன்று இடங்களில் வருகிறது:

ஒன்று, திருமுழுக்கு யோவானின் சீடர்களுள் ஒருவராக இருந்த அந்திரேயா (காண். யோவா 1), 'வந்து பாருங்கள்' என்ற இயேசுவின் கட்டளை கேட்டு அவருடன் சென்று தங்குகிறார். பின், தன் சகோதரர் பேதுருவையும் அழைத்துச் சென்று, இயேசுவிடம் அறிமுகம் செய்கின்றார்.

இரண்டு, ஐந்து அப்பங்கள் ஐயாயிரம் பேருக்குப் பகிரப்படும் நிகழ்வில் (காண். யோவா 6), 'இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான்' என்று இளவல் ஒருவரை இயேசுவுக்கு அறிமுகம் செய்தது இவரே.

மூன்று, கிரேக்கர்கள் சிலர் இயேசுவைக் காண விரும்பியபோது (காண். யோவா 12), அவர்களை, பிலிப்புடன் இணைந்து, இயேசுவிடம் கூட்டிச் சென்றார்.

இவருடைய பலம் உறவு மேலாண்மையில் இருக்கிறது. காண்கின்ற அனைவருடைய ஆற்றலையும் இவரால் எடை போட முடிகிறது. எல்லாருடனும் இயல்பாகப் பேச முடிகிறது. எல்லாரையும் வெற்றிகொள்ள முடிகிறது.

இயேசுவைப் பார்த்து இவர் கேட்ட ஒற்றைக் கேள்வியை இன்றைய நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?'

இந்தக் கேள்வி அந்திரேயாவின் உள்ளத்தில் எப்படி எழுந்தது?

இது பேரார்வத்தால் கேட்கப்பட்ட கேள்வியா?

அல்லது இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்ற வேகத்தில் கேட்கப்பட்ட கேள்வியா?

அல்லது அந்நியர் ஒருவரின் இருப்பு பற்றி அறிந்துகொள்ளும் அறிவார்வத்தில் எழுந்த கேள்வியா?

அல்லது 'உம்மோடு நானும் தங்கிக்கொள்ளட்டுமா?' என்ற தன் ஆவலை உள்புதைத்துக் கேட்கப்பட்ட கேள்வியா?

அந்திரேயா தன் கேள்விகளோடு நிறுத்திக்கொள்ளவில்லை. 'வந்து பாருங்கள்' என்று சொன்னவுடன் இயேசுவோடு சென்று தங்குகிறார்.

லூக்கா நற்செய்தியில், எம்மாவு நிகழ்வில், 'எங்களோடு தங்கும்' என்று இயேசுவைச் சீடர் இருவர் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றனர்.

இங்கே அந்திரேயா இயேசுவோடு என்றும் தங்கிக்கொள்ள விழைகிறார்.

'மானேய்ன்' என்ற கிரேக்கச் சொல்லுக்கு, 'தங்குதல்', 'மதிப்பீடுகள் கொண்டிருத்தல்' என்பது பொருள். ஆக, 'உம் மதிப்பீடுகள் எவை?' என இயேசுவிடம் கேட்கின்றார் அந்திரேயா.

திருவருகைக்காலத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ள நாம், கடவுள் நம்மோடு தங்க வந்ததை நினைவுகூர்கின்றார்.

'ஆண்டவரே, போதகரே, நீங்க எங்க இருக்குறீங்க? உங்க வீடு எங்கே?' என்று நாமும் கேட்போம். பவுலோ கோயலோ என்ற நாவலாசிரியர், 'ஒருவரின் இல்லத்தை நீங்கள் அறியாமல் அவரை நம்ப முடியாது' என்பார். ஆக, இல்லத்தை அறியும்போது ஒருவரின் உள்ளத்தை அறிகிறோம். இயேசுவின் இல்லத்தையும் உள்ளத்தையும் ஒருசேர அறிந்தார் அந்திரேயா. 

இயேசுவோடு தங்குபவர்கள் எல்லாருடனும் தங்குவர். அவரில் அனைவரையும் அன்பு செய்யும் ஒருவர் நிரந்தரத்தில் அன்பு செய்கிறார்.

Saturday, November 28, 2020

நீரே எங்கள் தந்தை!

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

I. எசாயா 63:16-17, 64:1, 3-8 II. 1 கொரிந்தியர் 1:3-9 III. மாற்கு 13:33-37

நீரே எங்கள் தந்தை!

'மேகங்கள் நடுவே வானவில் பார்க்கும்போது
என் இதயம் துள்ளிக் குதிக்கிறது
என் வாழ்க்கை தொடங்கியபோது அப்படித்தான் இருந்தது.
இப்போது நான் வளர்ச்சி பெற்ற மனிதனாக நிற்கிறேன்
எனக்கு வயது முதிர்ந்தாலும்
நான் இறந்து போனாலும்
எனக்கு அப்படித்தான் இருக்கும்.
குழந்தையே மனிதனின் தந்தை.
இயற்கையான பற்றுடன் என் நாள்கள்
ஒன்றோடொன்று இணைக்கப்படுவனவாக!'

(வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், 1802)

'குழந்தையே மனிதனின் தந்தை' ('The child is the father of the man') என்ற வேர்ட்ஸ்வொர்த்தின் சொல்லாடல் இன்று வரை பலருக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், 'நான் குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்தேனோ அப்படியே வளர்ந்தபின்னும் இருப்பேன். நான் குழந்தைப் பருவத்தில் எப்படி வானவில்லை இரசித்தேனோ அப்படியே இறுதி வரை இரசிப்பேன்' என்ற மிக எளிமையான பொருளில்தான் வேர்ட்ஸ்வோர்த் இச்சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார்.

மனுக்குலத்தின் தந்தையாக வந்த குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட நாம் இன்றுமுதல் நம்மையே தயாரிக்கிறோம். ஆண்டவரின் இரண்டாம் வருகை பற்றியும், உலக முடிவு பற்றியுமே அச்சம் கொண்டிருக்கும் நாம், அவரின் முதல் வருகையை, அந்த வருகை கொண்டுவந்த மகிழ்ச்சியை மறந்துவிடுகிறோம்.

விழித்திருத்தல், பரபரப்பு, எதிர்பாராத அவருடைய வருகை, தயார்நிலை, தயார்நிலையில் இல்லையென்றால் தண்டனை என எந்நேரமும் நாற்காலியின் நுனியில் அமர்ந்திருப்பதை விடுத்து, கொஞ்சம் சாய்ந்தே அமர்ந்துகொள்வோம். பரபரப்பில் அல்ல. மாறாக, அமைதியான, ஒய்யாரமான, ஓய்வில்தான் அவருடைய வருகை இருக்கிறது. 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 63) அழகான இரண்டு சொல்லாடல்கள் உள்ளன: (அ) 'ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை', மற்றும் (ஆ) 'நாங்கள் களிமண். நீர் எங்கள் குயவன்'.

எசாயா இறைவாக்கினர் நூலின் 63ஆம் அதிகாரம், 'குழுமப் புலம்பல்' என்றழைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த இஸ்ரயேலின் சார்பாகக் கடவுளிடம் பேசும் இறைவாக்கினர், கடவுளை, 'தந்தை' என அழைக்கிறார். 'தந்தை' என்ற சொல்லாடல் புதிய ஏற்பாட்டில் பரவலாகப் பயன்பட்டாலும், பழைய ஏற்பாட்டில், பெரும்பாலும் குலமுதுவர்களை (ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு) குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்றைய முதல் வாசகப் பகுதியில், 'ஆண்டவரே தந்தை' என அழைக்கிறார் எசாயா. மேலும், 'ஆபிரகாம் எங்களை அறியார். இஸ்ரயேல் (யாக்கோபு) எங்களை ஏற்றுக்கொள்ளார்' என்று தங்களுடைய மூதாதையரின் தந்தையர்களின் இயலாமையைச் சுட்டிக்காட்டுகிறார். 

'ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை' என்னும் வார்த்தைகள், இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்காக ஏங்குவதைச் சுட்டிக்காட்டுகிறது. கடவுளோடு உறவு நெருக்கத்தில் இருக்கின்ற அவர்கள் தங்களது கடினமான வாழ்க்கைச் சூழலில், தங்கள் கையறுநிலையில் தங்கள் கடவுளிடம், குழந்தைகள் போலச் சரணாகதி அடைகின்றனர். மேலும், தங்களது பிறழ்வுபட்ட வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்கின்றனர்: 'நாங்கள் பாவம் செய்தோம் ... நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப் போல உள்ளோம் ... எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைகள் போலாயின. நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம். எங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல எங்களை அடித்துச் சென்றன.' தீட்டு, அழுக்கான ஆடைகள், கருகிய இலைகள், காற்றில் அடித்துச் செல்லப்படும் இலைகள் போன்ற உருவகங்கள் (வார்த்தைப் படங்கள்) இஸ்ரயேலின் பரிதாபமான நிலையைக் காட்டுவதுடன், இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் அவர்களுக்கு ஒரு தந்தை தேவை என்பதையும் வலியுறுத்துகிறது. தங்களுடைய மண்ணகத் தந்தையர்களான அரசர்களும், இறைவாக்கினர்களும், குருக்களும் தங்களைக் கைவிட, விண்ணகத்தில் வாழும் என்றுமுள தந்தையை நோக்கிக் கைகளை உயர்த்துகின்றனர் இஸ்ரயேல் மக்கள்.

'களிமண் - குயவன்' உருவகம் இறைவாக்கினர் இலக்கியங்களில் நிறைய முறை பயன்படுத்தப்படுகிறது. ஆண்டவராகிய கடவுளே தன்னைக் குயவன் என்று முன்வைக்கின்றார். குயவன் கையில் உள்ள களிமண் போல இஸ்ரயேல் தன்னையே கடவுளிடம் கையளிக்கக் கூடாதா? என்று கடவுளும் ஏங்கியுள்ளார். அந்த ஏக்கத்தை இஸ்ரயேல் இங்கு நிறைவு செய்கிறது. 'நாங்கள் களிமண் - நீர் எங்கள் குயவன்' என்னும் வார்த்தைகள், இஸ்ரயேல் மக்களின் சரணாகதியைக் காட்டுவதோடு, 'இதோ நாங்கள் உம் கைகளில்! உம் விருப்பம் போல எங்களை வளைத்துக் கொள்ளும்!' என்று இறைவேண்டல் செய்வது போல உள்ளன.

மேலும், 'நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வர மாட்டீரோ?' என்ற இறைவாக்கினரின் வார்த்தைகள், கடவுளின் அவசரம் மற்றும் அவசியத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 'வானங்களைப் பிளந்து கடவுள் இறங்கி வந்த நிகழ்வு' ஏற்கெனவே சீனாய் மலையில் நடந்தேறியது. அங்கேதான் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம், 'நான் உங்கள் கடவுளாய் இருப்பேன். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்' என்று சொல்லி அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். தங்களுடைய சிலைவழிபாட்டால் தாங்கள் இழந்த அதே உணர்வை மீண்டும் பெற்றுக்கொள்ள மாட்டோமா என்ற ஏக்கமும் அழுகையும் எசாயாவின் வார்த்தைகளில் இருப்பதை நாம் அறிய முடிகிறது. இழந்து போன உறவுகளை அல்லது முறிந்து போன உறவுகளை எண்ணிப் பார்த்து, 'மீண்டும் நாம் சேர மாட்டோமா?' என்று கேள்வி எழுப்புவது நம் வாழ்வியல் அனுபவமும்கூட. 

ஆக, தந்தையை விட்டுத் தூரம் போன மகன், தன் தந்தைக்காக ஏங்குவதோடு, தன் தந்தையின் கையில் தன்னையே சரணாகதியாக்குவதோடு, தன் தந்தை உடனடியாக வந்து தன்னை அள்ளிக்கொள்ள வேண்டும் என்று ஏங்குவதாக அமைகின்றது இன்றைய முதல் வாசகம்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 1:3-9), புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கொரிந்து நகரத் திருஅவையில் நிலவிய பிரிவினை, பரத்தைமை, சிலைவழிபாடு போன்ற பிரச்சினைகள் பவுலின் கண்களில் விழுந்த தூசி போல அவருக்குக் கலக்கம் தந்தாலும், 'நீங்கள் எல்லா வகையிலும் செல்வரானீர்கள்!' 'உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை!' என்று வாயார வாழ்த்துகிறார். ஏனெனில், பவுலைப் பொருத்துவரையில் இறையருள் ஒன்றே அனைத்துக்கும் அடிப்படையானது. கொரிந்து திருஅவையில் பிரிவுகளுக்கும் சண்டை சச்சரவுகளும் இருந்தாலும், இறையருள் அங்கே ஒருபோதும் குறைவுபடுவதில்லை. 

இறையருள் குழுமத்தை இரண்டு நிலைகளில் உறுதிப்படுத்துகிறது: (அ) குழுமம் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்கிறது, (ஆ) எந்தவித குறைச்சொல்லுக்கும் குழுமம் ஆளாகாதவாறு கடவுள் இறுதி வரை அதை உறுதிப்படுத்துகின்றார். 

ஆக, குழுமம் என்ற குழந்தையை நிறைவு செய்து இறுதி வரை உறுதிப்படுத்துவது தந்தையாகிய கடவுளின் இறையருளே. 

மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகம் (காண். மாற் 13:33-37) இயேசுவின் பாடுகள், மற்றும் இறப்புக்கு முன் வழங்கப்பட்ட சான்று வாக்கியம் போல அமைந்துள்ளது. 'கவனமாயிருங்கள், விழிப்பாய் இருங்கள், விழித்திருங்கள்' என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு. இயேசுவின் இரண்டாம் வருகைக்கான தயார்நிலையை இது வலியுறுத்துவதாக அமைகிறது. இரண்டாம் வருகை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பது நற்செய்தியாளரின் புரிதலாக இருந்தது. 

தயார்நிலையை ஓர் உருவகம் வழியாக எடுத்துரைக்கிறார்: நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவர். அவர் தன்னுடைய வேலைக்காரர்களைப் பொறுப்பாளகளாக்கி, அவர்களை காவல்காக்கச் செய்கின்றார். நெடும் பயணம் என்பது இயேசுவின் உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றம் அல்லது அவருடைய மறைந்த நிலையைக் குறிக்கிறது. தான் தன் சீடர்குழுவை விட்டுச் சென்றவுடன், அது தூங்கிப் போகலாம், அல்லது மந்த நிலையை அடையலாம் என்ற அச்சம் இயேசுவுக்கு இருந்ததால், 'விழிப்பாய் இருங்கள்' என அவர்களை எச்சரிக்கின்றார். ஏனெனில், சீடர்களின் பொறுப்புணர்வு பெரிது.

ஆக, வேலைக்காரர் அல்லது பணியாளர் என்ற நிலையில் இருந்த சீடர்கள், வீட்டின் பொறுப்பாளர் நிலைக்கு உயர்த்தப்படுவதுடன், வீடு முழுவதையும் கவனித்துக்கொள்ளும் கடமையையும் பெறுகிறார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், தங்கள் ஆண்டவரே தங்களுடைய தந்தையாக இருந்து தங்களை நிறைவுசெய்ய முடியும் என எசாயா ஆண்டவராகிய கடவுளிடம் சரணாகதி அடைகின்றார்.

இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்துவின் தந்தையாகிய கடவுள் தந்த இறையருள் அனைத்தையும் அனைவரையும் உறுதிப்படுத்துகிறது என்கிறார் பவுல்.

நற்செய்தி வாசகத்தில், பிள்ளைக்குரிய வாஞ்சையுடனும் உரிமையுடனும் சீடர்கள் தங்கள் தந்தையாகிய தலைவருக்காகக் காத்திருக்கின்றனர்.

இவ்வாறாக,

'ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை' என அழைத்து, 'உம் கைகளில் களிமண் நாங்கள்' என்று சரணாகதி அடைவதே இந்த ஞாயிற்றின் செய்தியாக இருக்கிறது.

கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் நாம் சந்திக்கும் கதைமாந்தர்கள் அனைவரும் - மரியா, யோசேப்பு, இடையர்கள், ஞானியர், எலிசபெத்து, செக்கரியா, சிமியோன், அன்னா - தங்களையே இறைவனின் கைகளில் சரணாகதி ஆக்கினர்.

ஏனெனில், வரவிருக்கும் குழந்தையே தங்கள் அனைவரின் தந்தை என அவர்கள் அறிந்திருந்தனர்.

இன்றைய வழிபாட்டின் வாழ்வியல் சவால் என்ன?

'நீரே என் தந்தை' என்று பெத்லகேம் குழந்தையிடம் சரணாகதி அடைவது.

இதற்குத் தடையாக இருப்பவை எவை?

நம் தீட்டுகள், பாவங்கள், இலைகள் போலக் கருகிய நம் வாழ்க்கை, காற்றில் அடித்துச் செல்லப்படும் நம் நிலைப்பாடு போன்றவை. இவற்றை நாம் ஏற்றுக்கொண்டாலே போதும் அவர் வானத்தைக் கிழித்துக் கொண்டு கீழே இறங்கி வருவார். வருபவர் நம்மை அள்ளி எடுத்து, தான் விரும்பியதுபோலச் செய்துகொள்வார். நம்மை இறுதிவரை உறுதிப்படுத்துவார். பணியாளர்களாகிய நம்மைப் பொறுப்பாளர்கள் ஆக்குவார்.

பெத்லகேம் குழந்தையை நாம் கொண்டாடுவதற்கு முன், அந்தக் குழந்தையே நம் தந்தை என அறிதல் நலம்.

'உமது வலக்கை நட்டு வைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!' (காண். திபா 80) என்பது நம் இறைவேண்டலாகட்டும்.

திருவருகைக்கால செபங்களும் வாழ்த்துகளும்!

Friday, November 27, 2020

வந்தே தீரும்!

இன்றைய (28 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 21:34-36)

வந்தே தீரும்!

வரப்போகும் இறுதிநாள் பற்றி அறிவுறுத்துகின்ற இயேசு, அந்த நாளின் வருகையின் தவிர்க்க இயலாத நிலையை முன்வைத்து இரண்டு எச்சரிக்கைகளையும், ஓர் அறிவுரையையும் வழங்குகின்றார்.

இரு எச்சரிக்கைகள்:

(அ) மந்தம் அடையாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்

எவற்றால் உள்ளம் மந்தம் அடையும்? குடிவெறி, களியாட்டம், மற்றும் உலகக் கவலைகள். வேறு எந்த எண்ணமும் நமக்குள் நுழையாத வண்ணம் இவை அந்த இடத்தில் அமர்ந்து கொள்கின்றன. இவற்றால் நமக்கு சோர்வும் நடுக்கமும் ஏற்படுமே தவிர வேறொன்றும் ஏற்படாது. ஆக, தாங்களும் அகலாமல், மற்ற நல்ல எண்ணங்களும் உள்ளே வர இயலாத நிலையில், இவை நம் உள்ளத்தை மந்தம் அடையச் செய்கின்றன.

(ஆ) கண்ணியைப் போல சிக்க வைக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்

கவனமற்ற கால்கள் கண்ணிகளில் சிக்கிக்கொள்கின்றன. கவனக்குறைவு என்பதால் வரும் விளைவு பெரிய ஆபத்தாக முடிந்தவுடன், நாம் கவலைப்பட்டு ஒன்றும் ஆவதில்லை. முதலில் கவனமாக இருந்தால் பெரிய ஆபத்து தவிர்க்கப்படலாம். 

ஓர் அறிவுரை:

விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்

லூக்கா நற்செய்தி இறைவேண்டலின் நற்செய்தி என அழைக்கப்படுகிறது. ஏனெனில், இறைவேண்டல் என்பது ஒரு செயல் என முன்வைப்பதோடு, அந்தச் செயலால் வரும் பலனும் வரையறுக்கப்படுகிறது. மானிட மகன் முன் ஒருவராய் வல்லவராய் நிறுத்துவது இறைவேண்டல் என்பது லூக்காவின் புரிதலாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திவெ 22:1-7), தண்ணீர் மற்றும் ஒளி என்னும் இரு வாழ்வு உருவகங்கள் தரப்பட்டுள்ளன. இவ்விரண்டின் ஊற்றாக செம்மறி எனப்படும் ஆட்டுக்குட்டி இருக்கின்றார். முன்னிருந்த நிலை மறைந்து புதிய நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் வாழ்வு மட்டுமே உண்டு.

ஆக, அழிவும் இறப்பும் சில காலம்தான். இறைவனின் உடனிருப்பில் வாழ்வும் ஒளியுமே நிரந்தரம்.

அந்த நிரந்தரத்துக்குள் நாம் நுழைய நேரத்தை சரியாக அறிதல் அவசியம்.

Thursday, November 26, 2020

என் வார்த்தைகள்

இன்றைய (27 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 21:29,33)

என் வார்த்தைகள்

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது:

ஒன்று, காணக்கூடிய ஒன்றிலிருந்து காண இயலாத ஒன்றை அறிந்து கொள்ள இயேசு அழைப்பு விடுக்கின்றார். காணக்கூடிய அத்திமரத்தின் தளிரிலிருந்து காண இயலாத கோடைக்காலத்தை ஒருவர் அறிந்துகொள்ள முடிகிறது. அது போல, காணக்கூடிய அறிகுறிகளைக் கொண்டு காண இயலாத இறையாட்சியை அறிந்துகொள்ள முடியும்.

இரண்டு, அனைத்தும் நிகழும் வரை தலைமுறை ஒழியாது. விண்ணும் மண்ணும் ஒழிந்தாலும் ஆண்டவரின் வார்த்தைகள் ஒழிய மாட்டா. ஆண்டவரின் வார்த்தை நிறைவேறும் என நாம் நேர்முகமாக எடுத்துக்கொள்ளலாம். எசாயா இறைவாக்கு நூலில் தனது வார்த்தை என்றென்றும் நிலைத்து நிற்பதாக ஆண்டவராகிய கடவுள் முன்மொழிகின்றார். 

கடந்த இரண்டு மூன்று நாள்களாக நிவர் புயல் பற்றிய பேச்சாக எங்கும் இருந்தது. புயலைவிட புயலைப் பற்றிய விமர்சனங்கள் அச்சம் தருவதாக இருந்தன. மக்களை அச்சத்தில் வைத்திருப்பதை அரசும் ஊடகங்களும் உறுதிசெய்துகொண்டன. பண்பலையில் கூட, 'தொட்டியில் தண்ணீர் நிரப்பியாச்சா? டார்ச் லைட் எடுத்து வச்சாச்சா? கயிறு எடுத்து வச்சாச்சா? மெழுகுதிரி எடுத்து வச்சாச்சா? ஃபோன் சார்ஜ்ல போட்டாச்சா?' என ஏகப்பட்ட அக்கறைகள். 

ஏன் இந்தப் பரபரப்பு? 

மேற்காணும் பரபரப்பினால் ஒரு பக்கம் நிறைய மக்கள் காப்பாற்றப்பட்டு விட்டார்கள் என்றாலும், இன்னொரு பக்கம் கடந்த வாரத்தில் வீசிய அரசியல் புயலையும், ஒரு வருடமாக வீசிக்கொண்டிருக்கிற கொரோனா புயலையும் மக்கள் மறந்துவிட்டனர். 

ஊடகத்தின் வார்த்தைகள் பெரும்பாலும் பரபரப்பைத் தருகின்றன. கொஞ்சம் நேரம் கழித்து அவ்வார்த்தைகள் போலி வார்த்தைகளாக அல்லது பொய்த்துப்போன வார்த்தைகளாக அல்லது நீர்த்துப் போன வார்த்தைகளாகத் தெரிகின்றன. மனித வார்த்தைகளின் நிலை அதுதான். மனித வார்த்தை செயலாக மாறாவிடில் அது வெறும் வார்த்தையே. 

எபிரேயத்தில், 'தவார்' என்னும் வார்த்தை ஒரே நேரத்தில் 'சொல்லையும்' 'செயலையும்' குறிக்கக் கூடியது. ஆக, கடவுள், 'ஒளி உண்டாகுக!' என்று சொல்கிறார் எனில், அந்தச் சொல்லோடு இணைந்து ஒளியும் உண்டாகும். அதாவது, செயலும் நடந்துவிடும். சொல்வது அனைத்தும் செயலாகிவிடும். ஆக, கடவுளின் வார்த்தை ஒருபோதும் பொய்க்காது.

இன்றைய நாளில் நாம் எப்படி வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம் எனச் சிந்திப்போம்.

கொஞ்சம் அமர்ந்து யோசித்தால் நாம் தேவையற்ற வார்த்தைகளையே நிறைய பேசுகிறோம். பல நேரங்களில் நாம் நம் மௌனத்திற்காக அல்ல, நம் பேச்சுக்காகவே வருத்தப்பட்டுள்ளோம். 

நாம் பேசும் பல வார்த்தைகள் வெறும் ஒலிகளாக நின்றுவிடுகின்றன. 

'நான் வருகிறேன்' என்று சொல்லும் வார்த்தை, 'நான் வருவதில்தான்' நிறைவு பெறுகிறது. அப்படி இல்லை என்றால், அது வெறும் ஒலிக்கோவைதான்.

இன்று என் வார்த்தைகள்மேல் என் கவனம் இருக்கட்டும்.

என் வார்த்தை இறைவனின் வார்த்தை போல உறுதியானதாகவும், நிறைவேறுவதாகவும் இருந்தால் எத்துணை நலம்!

Wednesday, November 25, 2020

தலைநிமிர்ந்து நில்லுங்கள்

இன்றைய (26 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 21:20-28)

தலைநிமிர்ந்து நில்லுங்கள்

இயேசுவின் நிறைவுகாலப் பொதனை தொடர்கிறது.

இறுதிக்காலத்தில் நிகழும் இரண்டு நிகழ்வுகள் பற்றி முன்மொழிகிறார் இயேசு.

ஒன்று, அரசியல் சூழலில் ஏற்படும் போர் மற்றும் குழப்பம்.

இரண்டு, வான்வெளியில் ஏற்படும் மாற்றங்கள்.

இவை இரண்டும் நிகழுமா, நிகழ்கின்றனவா? இவற்றை நேரிடைப் பொருளில் எடுக்கலாமா? இவற்றை இயேசுவே சொன்னாரா? அல்லது நற்செய்தி நூல்கள் எழுதப்படும்போது நற்செய்தியாளர்கள் தங்கள் காலத்தில் நடந்த நிகழ்வுகளை முற்புகுத்தி எழுதினார்களா? - என்று பல கோணங்களில் விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.

இவற்றை விடுத்து ஒன்றை மட்டும் நாம் பற்றிக்கொள்வோம்:

'நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்'

இதுதான் நாம் கொண்டிருக்க வேண்டிய மனநிலையைக் காட்டுகிறது. அதாவது, நம்மைச் சுற்றி நடப்பவை எப்படியும் இருக்கட்டும். நாம் எப்படி இருக்கிறோம்? என்பதே கேள்வி.

'தலைநிமிர்ந்து நிற்றல்' என்பது போர்க்காலத்தில் வீரர்களுக்குக் கட்டளையிடப் பயன்படும் சொல்.

இதன் பொருள், தயாராய் இருத்தல், எதிரியை எதிர்கொள்தல், போரிடத் துணிதல், புதியது ஒன்றை எதிர்நோக்குதல்.

முதல் ஏற்பாட்டு யோசேப்புடன் பொருத்தி இந்தப் பண்பைப் புரிந்துகொ
ள்வோம்.

தன் சகோதரர்கள் தனக்கு எதிராக இருந்தாலும், தன் தலைவராகிய போத்திபார் தன்னைச் சிறையில் அடைத்தாலும், தன் உடன்கைதிகள் தன்னை மறந்தாலும் தலைநிமிர்ந்து நிற்கின்றார். தன் ஆண்டவராகிய கடவுள் தன்னோடு உடனிருப்பதை உணர்கிறார்.

யோசேப்பை தன்னைச் சூழலின் கைதி என ஒருபோதும் கருதவே இல்லை.

நாமும் சூழல் கைதிகள் அல்ல. நம்மைச் சுற்றி நடப்பவை நடுவில் நாம் தலைநிமிர்ந்த நிற்க முடியும்.

தலைநிமிர்ந்து நிற்றவர்கள் ஆட்டுக்குட்டியின் விருந்துக்கு அழைக்கப்பட்டதாக முதல் வாசகம் பதிவு செய்கிறது.

Tuesday, November 24, 2020

பிரச்சினையே வாய்ப்பாக

இன்றைய (25 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 21:12-19)

பிரச்சினையே வாய்ப்பாக

இயேசுவின் நிறைவுகாலப் போதனை தொடர்கிறது. லூக்கா நற்செய்தியாளரின் பதிவுகள் நிறைவுகாலத்தைப் பற்றிய அச்சத்தைத் தருவதாக இருந்தாலும், ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் செய்தி நிரம்பி வழியும். 

'உங்களைச் சிறையில் அடைப்பார்கள் .... உங்கள் எதிரிகளால் உங்களை எதிர்த்து நிற்க முடியாது'

'உங்களை எல்லாரும் வெறுப்பார்கள் ... உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழாது'

ஒரு பக்கம் எதிர்மறையாகத் தெரிந்தாலும், இன்னொரு பக்கம் நம்பிக்கையும் மனவலிமையும் தருகின்றன இயேசுவின் வார்த்தைகள்.

இன்றைய நற்செய்தியில் வரும் ஒரு சொல்லாடல் நம்மைக் கவர்கிறது: 'எனக்குச் சான்று பகர இவை வாய்ப்பளிக்கும்'

ஆக, பிரச்சினை என்று வருகின்ற ஒன்று வாய்ப்பாக மாறும்.

இது ஒரு பெரிய மேலாண்மைப் பாடம்.

கடந்த ஞாயிறன்று வெபினார் ஒன்று நடந்தது. ஏறக்குறைய 95 பேர் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து பங்குபெற்றார்கள். எனது முனைவர் பட்ட ஆய்வின் தேர்வர் இதை நெறிப்படுத்தினார். ஒரு மாலைப்பொழுதில் இந்தியாவில் ஆங்காங்கே இருந்த அனைவரும் என் கண்முன் வர கோவித்-19 பெருந்தொற்று வாய்ப்பளித்தது. இல்லையா?

தனிமை, சமூக இடைவெளி, விழித்திருத்தல், விலகியிருத்தல், தொற்றொதுக்கம் என நாம் தனித்தனி தீவுகளாக ஒதுங்கினாலும், எந்தவொரு பயணமும் இன்றி, மிகுதியான பொருள், ஆற்றல், நேர விரயமின்றி, தங்குமிடம், உணவும் என்ற எந்த அலைச்சலும் இன்றி ஒரே மாலையில் அனைவரும் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு பிறந்ததே பெருந்தொற்று என்னும் பிரச்சினையால்தான். இல்லையா?

இதுவே மனிதர்கள் கொண்டிருக்கின்ற மாபெரும் கொடை.

பிரச்சினைகளை வாய்ப்பாக மாற்றுதல் ஒரு சிறந்த மேலாண்மைப் பாடம்.

நாம் பயன்படுத்துகின்ற புதிய புதிய தொழில்நுட்பக் கருவிகள் அனைத்தும் நம் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அல்லது பிரச்சினைகளின் விளைவாலும் வந்தவையே.

இயேசுவின் பொருட்டு ஆளுநர் முன் நிறுத்தப்படுவது ஒரு பிரச்சினை அல்ல. மாறாக, அது ஆளுநரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு. இதுவே இயேசுவின் புரிதலாக இருக்கிறது.

நம் வாழ்வில் பிரச்சினைகள் என நினைக்கும் பல, பிரச்சினைகளே அல்ல.

மற்றும் சிலவற்றை நாம் வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள முடியும்.

இயேசு இரண்டு வாக்குறுதிகள் தருகின்றார்:

(அ) யாரும் உங்களை மேற்கொள்ள முடியாது

(ஆ) உங்கள் தலைமுடி ஒன்றுகூட விடாது. அதாவது, தேவையற்றது என நினைக்கும் எதுவும்கூட உங்களிடமிருந்து பறிக்கப்படாது.

இறுதியாக, மன உறுதியோடு இருக்க அழைப்பு விடுக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் வாதைகள் முடிய, உயிர்கள் அனைத்தும் கடவுளைப் புகழ்கின்றன.

மன உறுதி கொள்பவர்களுக்கு எல்லாப் பிரச்சினைகளும் வாய்ப்புகளே!

Monday, November 23, 2020

எப்போது நிகழும்?

இன்றைய (24 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 21:5-11)

எப்போது நிகழும்?

இன்று மதியம் மேலைநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியரோடு என் ஆய்வுத்தாள் பற்றி காணொளி செயலி ஒன்றில் உரையாடிக்கொண்டிருந்தேன். நேற்றைய தினம் அவர் தன் அம்மாவைப் பார்க்கச் சென்றதாகச் சொன்னார். 'அம்மா எப்படி இருக்கிறார்கள்?' என்று கேட்டபோது, 'நன்றாக இருக்கிறார்கள். அவர்களே சமைக்கிறார்கள். துணிகளைத் தயார் செய்கிறார்கள். காரில் சென்று பக்கத்தில் பொருள்கள் வாங்கிக்கொள்கிறார்கள். அவருக்கு வயது 93' என்றார். குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் பொருத்தமான நாடுகள் மேலை நாடுகள் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில், சாலையில் செல்லும் எவரும் இவர்களுக்காக நின்று உதவிகள் செய்வர்.

நிற்க.

ஆறு மாதங்களுக்கு முன்பாக, Kāma: The Riddle of Desire என்ற ஒரு நாவல் வாசித்தேன். அதில் வரும் கதைமாந்தர் ஒருவர் 'டெத் இன்ஸ்டிங்ட்' (death instinct) ('இறப்பு உணர்வு') என்னும் விநோதமான உணர்வால் துன்புறுவார். 26 வயது நிரம்பிய அந்தப் பெண், தன் வாழ்வில் தனக்கு எல்லாம் கிடைத்து விட்டதாக உணர்வதோடு, தன் வாழ்வு இப்படியே சீக்கிரம் முடிந்துவிட்டால் நலமாயிருக்குமே என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஏறக்குறைய 36 வயதில் அவர் இறந்துவிடுவார்.

நம் வாழ்க்கையில் நாம் மேற்காணும் இரண்டு உணர்வுகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்:

ஒன்று, வயது என்பது வெறும் எண்தான். ஆக, மேன்மையான மற்றும் நேர்முகமான உணர்வுகளைக் கொண்டு, நம் வேலைகளை நாமே செய்து, யாருக்கும் தீங்கு நினையாது, நம் உறவுகளோடு அல்லது நம் தனிமையோடு நேரத்தைச் செலவழித்து, ஒவ்வொரு நாளையும் இனிமையாக வாழ்தல்.

இரண்டு, என்ன வாழ்ந்து என்ன கண்டோம்? தொடங்கியது அனைத்தும் முடியத்தானே போகிறது. ஏன் தொடங்க வேண்டும்? அழகாக நிற்கின்ற கோவில் நாளைக்கு இடிந்து விழும் என்று இயேசுவே சொல்லியிருக்கின்றார். நாம் சேர்க்கின்ற சேமிப்பு இன்னொருவருக்குப் போகும். நாம் செய்யும் வேலையின் பயனை இன்னொருவர் அனுபவிப்பார். எதையும் புதிதாகச் செய்ய வேண்டும். புதியது ஒன்றும் வாங்க வேண்டாம். யாருடனும் பேச வேண்டாம். உறவாடுகின்ற அனைவரும் ஒருநாள் நம்மைவிட்டுப் பிரியத்தானே போகிறார்கள். அப்புறம் எதுக்கு ஒட்டு? உறவு?

மேற்காணும் இரண்டு எண்ணங்களும் நம்மில் இணைந்தே எழுகின்றன. சில நேரங்களில் நாம் பெரிய ஹீரோ மாதிரி உணர்கிறோம். யாரையும் எதையும் சமாளித்துவிடலாம் என்ற மனதைரியத்தோடு இருக்கிறோம். சில நேரங்களில் அதற்கு எதிர்மாறாக, ஜீரோ மாதிரி உணர்கிறோம். சின்ன விடயத்துக்கே அஞ்சுகிறோம். துணிச்சல் சிறிதும் இல்லாமல் இருக்கிறோம்.

'எல்லாம் முடிந்துவிடும்!' என்று சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

அழகமான ஆலயமும் கல்லின்மேல் கல் இராதபடி ஆகிவிடும்!

'எல்லாம் முடிந்துவிடும்!' - என்ற வாக்கியம் ஒரே நேரத்தில் நம்மில் நேர்முகமான மற்றும் எதிர்மறையான உணர்வுகளைத் தூண்டுகிறது. எப்படி?

'எல்லாம் முடிந்துவிடும்! எனவே, சீக்கிரம் வாழத் தொடங்கு! நன்றாக வாழத் தொடங்கு!'

'எல்லாம் முடிந்துவிடும்! எனவே, வாழ்ந்தால் என்ன? நன்றாக வாழ்ந்தால் என்ன?'

எந்த உணர்வின் அடிப்படையில் நான் வாழ வேண்டும் என்பதை நான்தான் தெரிவுசெய்ய வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மூன்று எச்சரிக்கைகளை விடுக்கின்றார்:

(அ) ஏமாந்து போகாதீர்கள் - நிறைய எதிர்பார்ப்புகள் கொள்தல் தவறு. எதிர்பார்ப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாழ்க்கை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும்போது ஏமாற்றம் நிறைய ஏற்பட வாய்ப்புண்டு.

(ஆ) ஏமாற்றுபவர்கள்பின் போகாதீர்கள் - போலியான வாக்குறுதிகள் கொடுப்பவர்கள்பின் போகக் கூடாது. சமய போதகர்கள், கார்ப்பரெட் நிறுவனங்கள், அரசுகள் பல நேரங்களில் போலி வாக்குறுதிகளைக் கொடுக்கின்றன(ர்). யாரும் கடவுளர்கள் அல்லர். ஆக, யார் வாக்குறுதிகளையும் நம்பி அவர்கள்பின் செல்லத் தேவையில்லை.

(இ) திகிலுறாதீர்கள் - அச்சம் நம்மை இறுகக் கட்டும் கயிறு. நம்மை அறியாமலேயே அது நம் பாதங்களில் ஏறி, நம் உடலைக் கட்டி, நம் கழுத்தையும் நெறித்துவிடும். ஆக, நம்மைச் சுற்றி நடப்பவை பற்றிய அச்சம் தவிர்த்தல் நலம். ஊடகங்கள் பெரும்பாலும் நிகழ்வுகளை மிகைப்படுத்தியே கூறுகின்றன. தங்களுக்கு ஏற்றாற்போல சிலவற்றைக் கூட்டியும் குறைத்தும் சொல்கின்றன. ஆக, ஊடகங்களிலிருந்து விலகி இருத்தல் நலம். மற்றொரு பக்கம், வதந்திகள். நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யார் எந்தச் செய்தியைச் சொன்னாலும், அவற்றைக் கேட்டு நாம் அஞ்சுதல் கூடாது. பல நேரங்களில் நமக்குச் செய்திகள் வராமல் இருந்தாலே நம் மனம் கலக்கமற்று இருக்கும்.

தொடங்கியது அனைத்தும் முடியும் என்பது எதார்த்தம்.

முடியும் போது அது முடியட்டும். முடிவதற்கு முன் நாமாகவே முந்திக்கொண்டு முடித்துவிட வேண்டாம்.

93 வயது ஆனாலும், காரை ஸ்டார்ட் செய்தல் நலம். 26 வயதில் முடிவு பற்றி எண்ணுதல் தவறு.

Sunday, November 22, 2020

பற்றாக்குறை இருந்தும்

இன்றைய நிகழ்வ எருசலேம் ஆலயத்தில் நடைபெறுகிறது. பெண் ஒருவர் இரண்டு செப்புக்காசுகளைக் காணிக்கைப் பெட்டியில் போடுகின்றார். அவருடைய செயலை இயேசு மிகவே பாராட்டுகின்றார். 

தன்னிடம் உள்ள இரண்டு செப்புக்காசுகளையும் போடச் செய்யும் அளவுக்கு அன்றைய சமூக அல்லது சமய நெறி இருந்தது என்று நினைக்கும்போது நமக்குச் சற்று கோபம் வரவே செய்கிறது.

இந்தப் பெண் மூன்று வார்த்தைகளால் அறிமுகப்படுத்தப்படுகின்றார்:

(அ) 'வறுமையில் வாடினார்' - பொருளாதார வறுமை அல்லது ஏழ்மையே இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது, அந்தப் பெண்ணிடம் இதைத் தவிர வேறு பணம் அல்லது சேமிப்பு இல்லை.

(ஆ) 'அவர் ஒரு கைம்பெண்' - ஏழ்மையே அவரைப் பிறரைச் சார்ந்தவராக வாழச் செய்திருக்க, கைம்பெண் என்னும் நிலை அவரை இன்னும் கையறுநிலைக்குத் தள்ளுகிறது.

(இ) 'தன்னிடம் பற்றாக்குறை இருந்தும் தன்னிடம் உள்ள அனைத்தையும் காணிக்கையாகப் போட்டார்' - தனக்கென அவர் எதையும் வைத்துக்கொள்ளவில்லை. அவர் தன்னிடம் வைத்திருந்தது மிகவும் சொற்பமான பணம். ஏனெனில், ஒரு காசு என்பது 1 தெனாரியத்தில் 128இல் ஒரு பகுதியாகும்.

'பணம் என்றால் என்ன?' என்ற ஒரு காணொயைக் கடந்த வாரம் பார்த்தேன்.

பணத்தைப் பற்றிய பார்வை நமக்கு மூன்று நிலைகளில் உள்ளது: (அ) பண விருப்பம் - அதாவது, பணமின்றி ஒன்றும் செய்ய இயலாது. ஆக, அதிக பணம் சேர்க்க வேண்டும் என நினைப்பது. (ஆ) பண வெறுப்பு - அதாவது, பணம் ஒரு பேய். பணத்தைத் தேடக் கூடாது. பணம் எல்லாத் தீமைகளுக்கும் காரணம் என நினைப்பது. (இ) பணப் பயன்பாடு - அதாவது, பணம் என்பது நம்முடைய உழைப்பு, ஆற்றல், சேமிப்பின் மிச்சம். நம் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் ஒரு பணியாள். இப்படிப்பட்ட நடுநிலைப் பார்வை.

பண்டமாற்று முறையிலிருந்துதான் பணம் வந்தது. என்னிடம் 100 மூடை அரிசி இருக்கிறது. உங்களிடம் 100 மூடை கோதுமை இருக்கிறது. நாம் இருவரும் மாற்றிக்கொள்கிறோம். ஆனால், எனக்கு ஒரு கிலோ அரிசிதான் தேவையாக இருக்கிறது. நான் என்ன செய்கிறேன்? மீதமிருக்கிற 99 மூடைகளைப் பணமாக மாற்றி வைத்துக்கொள்கிறேன். அப்படி வைத்தால் எனக்குத் தேவையானதை நான் பின்னர் வாங்கிக்கொள்ள முடியும். ஆக, என்னிடம் உள்ள ஒன்றை இன்னொற்றாக மாற்றி மதிப்பைத் தக்க வைத்துக்கொள்ள உதவுவதே பணம்.

மேற்காணும் நிகழ்வில் காணும் கைம்பெண்ணின் பார்வை நடுநிலைப் பார்வையாக இருக்கிறது.

தனக்கென உள்ளதை, தன்னிடம் உள்ளதை இன்னொன்றாக மாற்றி - காணிக்கையாக மாற்றி, கடவுளுக்குக் கொடுத்து - அதன் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்கிறார்.

ஆனால், பணத்தை ஏன் கடவுளுக்குக் கொடுக்க வேண்டும்? என்ற கேள்வி அடுத்து எழலாம். நாம் கொடுக்கும் பணம் கடவுளுக்கா செல்கிறது? என்று அடுத்த கேள்வி தொடரலாம்.

அந்தப் பெண் கேள்விகள் கேட்கவில்லை. 

எழுந்தாள். நடந்தாள். தன் பணத்தைக் கடவுளுக்குக் கடன் கொடுத்து அமர்ந்தாள். தன் செப்புக் காசுகளின் மதிப்பைத் தங்கக் காசுகள் எனக் கூட்டினாள்.

'பற்றாக்குறை' என்பது மனம் சார்ந்ததே அன்றி, பணம் சார்ந்தது அல்ல என நமக்கு இந்த ஒற்றைச் செயலால் சொல்லிவிட்டாள்.

'போதும்' என்றால், இதுவே நமக்குப் போதும்!

'போதாது!' என்றால், எதுவுமே நமக்குப் போதாது!

பற்றாக்குறை இல்லாத மனம் அனைத்தையும் இழக்கும். 

இப்பெண்ணிடம் இருந்த நிறைவு நமக்குக் கிடைத்தால் எத்துணை நலம் - பொருளாதார நிறைவு மட்டுமல்ல. உறவு நிறைவு, ஆன்மிக நிறைவு, அன்பு நிறைவு, தன்மதிப்பு நிறைவும் கூட.

Saturday, November 21, 2020

விண்ணரசுக்கான அக்கறை

இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்

I. எசேக்கியேல் 34:11-12,15-17 II. 1 கொரிந்தியர் 15:20-26,28 III. மத்தேயு 25:31-46

விண்ணரசுக்கான அக்கறை

'வீடற்ற இயேசு' அல்லது 'இயேசு வீடற்றவர்' என்னும் கருத்துருவை மையமாக வைத்து, திமோத்தி ஸ்மால்ஷ் என்ற கனடா நாட்டவர் 2013ஆம் ஆண்டு உருவாக்கிய வெண்கல உருவமானது இன்று உலகின் பல பகுதிகளிலும் நிறுவப்பட்டு வருகிறது. ஒரு மர பெஞ்சில், ஒரு பெரிய போர்வையைப் போர்த்திக்கொண்டு கூனிக் குறுகிப் படுத்திருக்கும் நபரின் பாதங்களில் சிலுவையின் ஆணிகள் பதிந்த தடங்கள் இருக்கின்றன. அவருடைய ஒரே ஒரு கண் மட்டும் திறந்திருப்பது போல வைக்கப்பட்டுள்ள தோற்றம் காண்பவரின் மனத்தை உருக்குவதாக இருக்கின்றது. இந்த உருவம் நிறுவப்பெற்ற இடங்களில் எல்லாம் பல வித்தியாசமான விமர்சனங்கள் எழுந்தன. இயேசுவைக் கேலி செய்வது போல இது உள்ளது என்றனர் சிலர். சிலர், மத்தேயு நற்செய்தியின் இறுதித் தீர்ப்பு பகுதியை எங்களுக்கு நினைவூட்டுகிறது என்றனர். சிலர் இந்த உருவத்தின் காலடிகளில் அமர்ந்து செபிக்கவும், அங்கே மெழுகுதிரிகள் ஏற்றவும் தொடங்கினர். 

வீடற்ற இயேசுவைத் தொடர்ந்து, இன்று நாம், ஆடையற்ற, பசியுற்ற, தாகமுற்ற, உடல்நலமற்ற, சுதந்திரமற்ற பல இயேசுக்களைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றோம். 

விண்ணரசுக்கான தயாரிப்பு, செயலாற்றுதல் என்று கடந்த இரண்டு வாரங்கள் சிந்தித்தோம். அந்த வரிசையில், விண்ணரசுக்கான அக்கறை இன்றைய நாளின் மையச் செய்தியாக அமைந்துள்ளது. மண்ணிலிருந்து விண்ணுக்கு, இக்கரையிலிருந்து அக்கரைக்கு நாம் செல்ல வேண்டுமெனில் அக்கறை அவசியம் என்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

திருவழிபாட்டு ஆண்டின் இறுதி வாரத்தின் தொடக்கமாகிய இன்று நாம் இயேசு கிறிஸ்துவை அனைத்துலகுக்கும் அரசராகக் கொண்டாடி மகிழ்கின்றோம். தன் அரசநிலை அல்லது அரசாட்சி சின்னஞ்சிறியவர்கள்மேல் கொள்ளும் அக்கறையில் அடங்கியுள்ளது என்று மொழிகின்ற கிறிஸ்து அரசர், தன்னையே சின்னஞ்சிறியவர்களுள் ஒருவராக அடையாளப்படுத்திக்கொள்கிறார். 

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். எசே 34:11-12,15-17) நம் சிந்தனையைத் தொடங்குவோம். எருசலேமின் அழிவுக்கான காரணம் என்ன என்பதை அடிக்கடி நினைத்துப் பார்க்கும் இறைவாக்கினர் எசேக்கியேல், 'இஸ்ரயேலர்களின் ஆயர்களாகிய' தலைவர்களே எருசலேமின் அழிவுக்கு முக்கியக் காரணம் என்று பழிசுமத்துகிறார். ஏனெனில், அவர்கள் தங்கள் மக்களை மேய்ப்பதற்குப் பதிலாக, அவர்களை மேய்ந்தனர். வளர்ச்சிக்கான பாதையில் அவர்களை இட்டுச் செல்லாமல் அழிவுக்குரிய சிலைவழிபாட்டுப் பாதையில் அவர்களை இட்டுச் சென்றனர். இன்றைய வாசகத்தில் நல்ல ஆயன் என்னும் புதிய தலைவரைப் பற்றி எசேக்கியேல் பேசுகின்றார். இந்த நல்லாயன் ஆண்டவராகிய கடவுளே. 

நல்லாயனாகிய ஆண்டவராகிய கடவுள் மூன்று பணிகளைச் செய்கின்றார்: ஒன்று, சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் சென்று கூட்டிச் சேர்க்கின்றார். இங்கே, 'சிதறுண்ட ஆடுகள்' என்னும் சொல்லாடல் பாபிலோனியாவில் நாடுகடத்தப்பட்டு அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்களைக் குறிக்கிறது. ஆண்டவராகிய கடவுள் அவர்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதாகச் சொல்வது அவர்கள் விரைவில் பெறவிருக்கின்ற விடுதலை வாழ்வைக் குறிக்கின்றது. இரண்டு, காயத்திற்குக் கட்டுப் போட்டு, நலிந்தவற்றைத் திடப்படுத்துகின்றார். சொந்த நாட்டிலேயே அலைந்து திரிந்தவர்களும், பாபிலோனிய அடிமைத்தனத்தால் சிதைந்து போனவர்களும் இங்கே அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஆண்டவராகிய கடவுள், அவர்களின் உடல் காயங்களுக்கும், விரக்தி, சோர்வு, மரண பயம் என்னும் உள்ளத்தின் காயங்களுக்கும் மருந்திடுகின்றார். அவர்களைத் திடப்படுத்தி வலுவூட்டுகின்றார். மூன்று, நீதியுடன் மேய்த்து, நீதி வழங்குகின்றார். 'கொழுத்ததையும் வலிiயுள்ளதையும் அழிப்பேன்' என்னும் எச்சரிக்கை, இஸ்ரயேலின் ஆயர்கள் தங்கள் ஆடுகளைப் பேணிக்காக்கத் தவறியதற்காக, கடவுள் அவர்களுக்கு நீதியுடன் அருளும் தண்டனையை அவர்கள் ஏற்றாக வேண்டும் என்பதைக் குறிக்கிறது. மேலும், ஒவ்வோர் ஆடும் வலுவற்றதாய் இருந்தாலும், அதற்குரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்பது ஆண்டவராகிய கடவுளின் விருப்பமாக இருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 15:20-26,28), புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் இறுதிப் பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பிரிவினை, வழிபாட்டில் பிறழ்வு, சிலைகளுக்குப் படைத்தவை, பாலியல் பிறழ்வு போன்ற மேய்ப்புப்பணி பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வரையறுத்த பவுல், இறுதியாக, இறந்தோர் உயிர்த்தெழுதல் இல்லை என்று வாதிட்ட சிலருக்கு விடையளிக்கும் நோக்குடன் இறுதிக்கால நிகழ்வுகள் பற்றிய சில குறிப்புகளைத் தருகின்றார்.

இறந்தோர் உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்துவின் உயிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஒன்று. கிறிஸ்து வரும்போது இறந்த நம்பிக்கையாளர்கள் அனைவரும் உயிர்பெறுவர். 'கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிடுவார்.' எல்லாவற்றுக்கும் மேலாக, கடைசிப் பகைவனாக இருக்கின்ற இறப்பும் அழிக்கப்படும். இறப்பு அழிக்கப்படுவதன் வழியாக, படைப்பு தன் பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட்டுப் புதுப்பிக்கப்படும். அனைத்தின் மேலும் கிறிஸ்து ஆட்சி செலுத்துவார். இதனால், 'கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.' கிறிஸ்து செய்த மீட்புச் செயல், இறப்பின்மேல் வெற்றி, படைப்பில் ஏற்பட்ட ஒழுங்குநிலை, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மீண்டெழுந்த நெருக்கம் அனைத்தையும், 'கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்' என்ற ஒற்றைச் சொல்லாடல் வழியாகச் சொல்லிவிடுகின்றார். ஆக, பாவம் அழித்த அமைதியையும், ஒழுங்கையும் கிறிஸ்து மறுபடியும் கொண்டுவருகின்றார்.

இறுதிக்கால நிகழ்வுகளை எடுத்துரைப்பதன் வழியாக, பவுல், நாம் இவ்வுலகில் வாழும் வாழ்க்கை பொருளற்றது அல்ல என்றும், நம் செயல்கள் அனைத்தும் இறுதி நிகழ்வுக்கு நம்மைத் தயாரிப்பவை என்றும் முன்மொழிகின்றார். இவ்வாறாக, கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்வு வழியாகவும், குழும வாழ்வு வழியாகவும் தங்களையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மத்தேயு நற்செய்தியில் வரும் இறுதி உவமையே இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 25:31-46). 'ஆட்டுக்கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையே நீதி வழங்குபவராக' இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் வருகின்றார். எசேக்கியேலின் இறைவாக்கு இன்றைய நற்செய்தி வாசகத்தின் பின்புலமாக உள்ளது. 

அரசர் அல்லது அரசர் தொடர்புடைய நேரடி சொல்லாடல்கள் மூன்றை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம்: (அ) 'அரியணை' - 'வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்' (மத் 25:31) என்று தொடங்குகிறது நற்செய்திப் பகுதி. அரசர்களின் இருக்கைகளில் கைபிடிகளாக இரண்டு சிங்கங்கள் ('அரிமா') இருக்கும். சிங்க உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், இவை 'அரிமா ஆசனங்கள்' அல்லது 'அரியாசனங்கள்' அல்லது 'அரியணைகள்' என அழைக்கப்படுகின்றன. மேலும், 'சிங்கம்' என்பது அதிகாரம் மற்றும் ஆற்றலைக் குறிக்கும் ஒரு உருவகம். மேலும், 'அமர்வது' என்பதும் அதிகாரத்தைக் குறிக்கிறது. (ஆ) 'அரசன்' - 'அரசன்' (பஸிலேயோஸ்) என்ற வார்த்தை இரண்டு வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது (25:34, 40). 'அரசர்' என்ற வார்த்தையை நற்செய்தியாளர் நேர்மையாளர்களோடு  (வலப்பக்கம் உள்ளவர்களோடு) உரையாடும் இடங்களில் மட்டுமே பதிவு செய்கின்றார். இடப்பக்கம் உள்ளவர்களோடு உள்ள உரையாடலில் அரசன் என்ற வார்த்தை இல்லை. மேலும், இருதரப்பினரும் அவரை 'ஆண்டவர்' என அழைக்க முடிந்தாலும், வலப்பக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அவர் அரசராக இருக்கின்றார். (இ) 'அரசாட்சி' அல்லது 'அரசுரிமை' - 'அரசாட்சியை' (பஸிலேயோ) உரிமையாக்கிக்கொள்ளுமாறு அரசர் வலப்பக்கம் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். 'அரசாட்சி' என்றால் என்ன என்பது இங்கே தெளிவாகக் குறிக்கப்படவில்லை என்றாலும், இந்த அரசாட்சி உலகின் தொடக்கமுதல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று என்பது மட்டும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,இயேசுவே தன் வாயால் தன்னை 'அரசர்' என்று அழைப்பது இந்த நிகழ்வில் மட்டுமே: இயேசுவை இரண்டு பேர் அரசர் என்று நேரிடையாக மொழிந்திருக்கிறார்கள்:  ஒன்று, நத்தனியேல். 'பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்' என்று இயேசு நத்தனியேலைப் பார்த்துச் சொன்னபோது, 'ரபி, நீர் இறைமகன். நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்' என்கிறார் நத்தனியேல் (காண். யோவா 2:48-49). இரண்டு, பிலாத்து. தன்முன் கைதியாக நிறுத்தப்பட்ட இயேசுவை விசாரித்து மரண தண்டனை அளித்த பிலாத்து, இறுதியாக, எல்லாரும் பார்க்குமாறு இயேசு அறையப்பட்ட சிலுவையின் உச்சியில், 'இவன் யூதரின் அரசனாகிய இயேசு' (மத் 27:37) என எழுதி வைக்கின்றார். நல்ல கள்வன்கூட 'நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது' (லூக் 23:42) என்று சொல்கிறானே தவிர, 'அரசர்' என்று சொல்லவில்லை.

இந்த அரசர் நீதி வழங்குபவராக தன்னையே அறிமுகம் செய்கின்றார். இவருடைய முதன்மையான பணி நீதி வழங்குவது. இந்த நீதி மனிதர்களின் வெற்றிகள் அல்லது முயற்சிகளை மையமாக வைத்து வழங்குப்படுவதல்ல. மாறாக, மனிதரின் ஆறு முதன்மையான தேவைகளுக்கு அவர்கள் செய்யும் பதிலிறுப்புகளின் அடிப்படையில் நடக்கிறது. உணவு, தண்ணீர், விருந்தோம்பல், உடை, உடல்நலம், மற்றும் சுதந்திரம் என்னும் ஆறும் மனிதரின் அடிப்படைத் தேவைகள். தனக்கு அருகிருப்பவரின் மேற்காணும் தேவைகளை நிறைவேற்றியவர் ஆசிபெற்றவர் என அழைக்கப்படுகின்றார். அப்படிச் செய்ய மறுத்தவர்கள் சபிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். முழுமனித ஆளுமையும் இங்கே கருத்தில் கொள்ளப்படுகின்றது. 'உணவு, தண்ணீர், உடை, மற்றும் உடல் நலம்' ஆகிய நான்கும் உடல்சார்ந்த தேவைகள். 'விருந்தோம்பல், மற்றும் தனிமை போக்குதல்' போன்றவை உளவியல் அல்லது ஆன்மிகத் தேவைகள். 

உவமை இத்தோடு நின்றுவிடவில்லை. மானிட மகன் என்னும் அரசர், தன்னையே சின்னஞ்சிறியவர்களோடு ஒன்றிணைத்துக்கொள்கிறார். 'மிகச் சிறியோர்களாகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்' என்ற மானிட மகனின் வார்த்தைகள் கிறிஸ்தவ அறநெறியின் சாரத்தை அடையாளம் காட்டுகின்றன. நலிந்தவர்களை அடையாளம் காணுதலும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதுமே புதிய வழிபாடு என முன்மொழியப்படுகிறது. 

ஆக, 

தன் மந்தையின் மேல் அக்கறை காட்டாத ஆயர்களை அகற்றுகின்ற கடவுள், அக்கறை காட்டும் ஆயராகத் தன்னையே முதல் வாசகத்தில் முன்வைக்கின்றார்.

தங்களுடைய தனிப்பட்ட மற்றும் குழும வாழ்வின்மேல் நம்பிக்கையாளர்கள் காட்டும் அக்கறை, 'கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருக்கும்' நிலைக்கு அவர்களை இட்டுச் செல்லும் என்பது பவுலின் அறிவுரையாக இருக்கின்றது.

சின்னஞ்சிறியவர்களுக்கு அக்கறை காட்டுவதும், அவர்களின் உடல் மற்றும் உள்ளம்சார் தேவைகளை நிறைவேற்றுவதும் நம்மை அக்கரைக்கு அழைத்துச் செல்லும் என்பது நற்செய்தி வாசகத்தின் செய்தியாக இருக்கிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு விடுக்கும் சவால்கள் எவை?

அ. கறையும் அக்கறையும்

தொலைக்காட்சி விளம்பரங்களில், 'கறை நல்லது' என்ற வாசகத்துடன் சலவைத் தூள் அறிமுகப்படுத்தப்படுவதண்டு. அங்கே முதன்மைப்படுத்தப்படுவது கறை என்றாலும், அந்தக் கறையைப் போக்கும் சலவைத்தூளின் அக்கறைதான் மையம். இன்று நாம் பல நேரங்களில் மற்றவர்களின் கறைகளைப் பார்த்துவிட்டு அவர்கள் மேல் அக்கறை காட்ட மறுக்கின்றோம். பசி, தாகம், ஆடையின்மை, வீடின்மை, நோய், சிறைவாசம் ஆகியவற்றை மற்றவர்களின் சாபங்கள் அல்லது பாவங்கள் என்னும் கறைகள் என நினைத்து ஒதுங்கிவிடுகின்றோம். ஆனால், அவர்களின் கறைகளே நாம் அவர்கள்மேல் கொள்ளும் அக்கறைக்கான அழைப்பாக இருத்தல் வேண்டும்.

ஆ. அக்கறையின் வகைகள்

மூன்று வகை அக்கறை இருக்கின்றது: போலியான அக்கறை - ஆடு நனைவதைக் கண்டு வருந்தும் ஓநாயின் அக்கறை, வியாபாரத்தனமான அக்கறை - பெருநிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள்மேல் காட்டும் அக்கறை, ஆயனுக்குரிய அக்கறை. இந்த மூன்றாவது வகை அக்கறையே மேன்மையானது. ஆடுகள் தன் ஆயனுக்கு எந்த நிலையிலும் பதிலன்பு காட்ட இயலாது என்றாலும், ஆயனே தான் விரும்பி தன் ஆடுகள்மேல் அக்கறை காட்டுகின்றார். அவருடைய அக்கறையால் ஆடுகள் மீண்டும் கூட்டிச் சேர்க்கப்படுகின்றன, நலம் பெறுகின்றன, நீதி பெறுகின்றன. இன்று நான் எனக்கு அடுத்திருப்பவர் மேல் காட்டும் அக்கறை எந்த வகையைச் சார்ந்தது.

இ. கடவுளே அனைத்திலும் அனைத்துமாய்

ஆன்மிக வளர்ச்சியின் உச்சகட்டம் என நான் இதைத்தான் நினைக்கிறேன். அனைத்திலும் அனைத்துமாய் கடவுள் நிறைந்திருப்பதை நான் கண்டால் அதுவே என் உச்சகட்ட நிறைவு அனுபவம். இந்த அனுபவம் கிடைத்துவிட்டால் என்னில் எந்த எதிர்மறை உணர்வும் எழாது. நான் யாருக்கு எதிராகவும் எதையும் செய்ய மாட்டேன். அனைவரின் நலனையும் அமைதியையும் மட்டுமே விரும்புவேன். இந்த நிலை அடைவதற்கு ஒவ்வொரு பொழுதும் நானே அனைத்திலும் அனைத்துமாய்க் கடவுளைக் காணுதல் வேண்டும்.

இறுதியாக,

இன்று நாம் காட்டும் அக்கறை என்னை அக்கரைக்கு அழைத்துச் செல்லும் என்ற தன்னல நோக்கத்திற்காக நாம் மற்றவர்கள் மேல் அக்கறை காட்டுதல் தவறு. ஏனெனில், அந்த நிலையில் நாம் அடுத்தவர்களைப் பொருளாகப் பயன்படுத்தத் தொடங்குவோம். மாறாக, என்னில் இருக்கிற இறைவன் எல்லாரிலும் எல்லாமுமாய் என்ற எண்ணத்தில் அக்கறை காட்டத் தொடங்கினால், இக்கரையே நமக்கு அக்கரைதான். அங்கே, 'அவர் பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்.அமைதியான நீர் நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். எனக்குப் புத்துயிர் அளிப்பார்' (பதிலுரைப்பாடல், திபா 23).

Friday, November 20, 2020

காணிக்கை அன்னை

இன்றைய (21 நவம்பர் 2020) திருநாள்

காணிக்கை அன்னை

இன்று அன்னை கன்னி மரியாள் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக் கொண்டாடுகிறோம். நற்செய்தி நூல்களில் இந்நிகழ்வு பற்றிய குறிப்பு இல்லை என்றாலும், ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூல்கள் அல்லது திருமுறை அட்டவணைக்குள் வராத நூல்கள் என்றழைக்கப்படுகின்ற யாக்கோபின் முதன்மை நற்செய்தி, புனைபெயர் மத்தேயு நற்செய்தி, மற்றும் மரியாளின் பிறப்பு நற்செய்தி என்னும் நூல்களில் இந்நிகழ்வு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சுவக்கீம் மற்றும் அன்னா தம்பதியினர் தங்களுடைய அன்புக் குழந்தை மிரியமுக்கு ('மரியா') மூன்று வயது நிறைவுற்றபோது, அவரை எருசலேம் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று கடவுளுக்கென்று அர்ப்பணம் செய்தனர். தன் 12வது வயது வரை (அதாவது, பதின்மப் பருவம் நிறைவுபெறும் வரை) மரியாள் ஆலயத்தில் இருந்தார். 12வது வயதில் யோசேப்பு அவருடைய பாதுகாவலராக நியமிக்கப்பட்டார். 

மேற்காணும் வார்த்தைகளால் இந்நிகழ்வை அந்நற்செய்தி நூல்கள் வர்ணனை செய்கின்றன. 

சுவக்கீம் மற்றும் அன்னாவின் இச்செயல், முதல் ஏற்பாட்டு அன்னாவை நமக்கு நினைவூட்டுகின்றது. கடவுளிடமிருந்து தான் வேண்டிப் பெற்ற சாமுவேல் என்னும் தன் குழந்தையை சிலோவிலிருந்த கடவுளின் இல்லத்திற்கு அழைத்துச் சென்று கடவுளுக்கே அர்ப்பணம் செய்கின்றார் அன்னா. தங்களுடைய வயது முதிர்ந்த நிலையில் தாங்கள் கடவுளிடம் வேண்டிப் பெற்றுக்கொண்ட மிரியமை ('மரியா') அவ்வாறே கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர் அவருடைய பெற்றோர். ஆக, இன்றைய நாளில் கொண்டாடப்பட வேண்டியவர்கள் மரியாளின் பெற்றோர்களும்தான். அவர்களின் துணிச்சல் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. அவர்களின் அர்ப்பணம் நம்மைத் தூண்டியெழுப்புகிறது. அவர்களின் நம்பிக்கை நம் நம்பிக்கையின் அடிநாதமாய் இருக்கிறது.

முதல் ஏற்பாட்டு அன்னாவும் இரண்டாம் ஏற்பாட்டு அன்னாவும், தாங்கள் கடவுளிடமிருந்து கொடையாகப் பெற்றுக்கொண்ட தம் பிள்ளைகளைக் கடவுளுக்கே கொடுத்து, கடவுளை நிரந்தரக் கடனாளியாக்குகின்றனர்.

ஒன்றை நாம் காணிக்கையாக்கும்போது அல்லது அர்ப்பணம் செய்யும்போது என்ன நிகழ்கிறது?

(அ) அர்ப்பணிக்கப்படும் ஒன்றை நாம் திரும்பப் பெற இயலாது. என்னை நான் முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, 'இல்லை! இப்போது வேண்டாம்! நாளை பார்த்துக்கொள்ளலாம்!' என்று சொல்ல முடியாது.

(ஆ) அர்ப்பணிக்கப்படும் அனைத்தும் முழுமையாக அர்ப்பணிக்கப்படுகிறது. என் உடல் மட்டும்தான், உள்ளம் அல்ல என்றெல்லாம் அங்கே பிரிக்க முடியாது.

(இ) அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று அர்ப்பணிக்கப்படுபவருக்குச் சொந்தமாகிவிடுகிறது.

மரியாள் காணிக்கையாக்கப்பட்ட அந்த நிமிடமே, கடவுளுக்கு உரியவர் ஆகிவிடுகின்றார். 'தோத்துஸ் துவுஸ்' ('முழுவதும் உமக்கே') என்பது திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களின் இலக்கு வாக்கியம். அன்னை கன்னி மரியாளுக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்த திருத்தந்தை அவர். அன்னை கன்னி மரியாள் தன்னையே கடவுளுக்கு, 'முழுவதும் உமக்கே' என்று அர்ப்பணித்தவர்.

இன்றைய திருநாள் நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றது:

(அ) நம் கட்டின்மை அல்லது சுதந்திரம்

கடவுளின் திருவுளத்திற்குப் பணியவும் பணியாமல் இருக்கவும் நமக்குச் சுதந்திரம் உண்டு. அன்னை கன்னி மரியாளின் அர்ப்பணம் அவருடைய பெற்றோரும், பின்னர் அவரும் கொண்டிருந்த சுதந்திரத்தைக் காட்டுகிறது. இன்று நான் என் கட்டின்மையை அல்லது விருப்புரிமையை உணர்ந்து செயல்படுகின்றேனா?

(ஆ) கடவுள் நமக்குக் கொடுத்த கொடைகளுக்கு நாம் தரும் பதிலிறுப்பே அர்ப்பணம்

அவர் கொடுத்ததை அவருக்கே கொடுப்பது அர்ப்பணம். ஏனெனில், நம்மிடம் இருக்கும் எதுவும் நமதன்று. நமக்குக் கொடுத்த அவரிடமே நாம் அனைத்தையும் கொடுத்துவிட்டால் இருப்பது எல்லாம் நமதே. 

(இ) நம் சரணாகதி

'எனது, என்னுடைய, எனக்கு' என்பது அனைத்தும், அர்ப்பணத்தில், 'உனது, உன்னுடைய, உனக்கு' என்று ஆகிவிடுகிறது. அந்தச் சரணாகதியில்தான் நாம் நிரந்தரத்திற்குள் நுழைகின்றோம். ஏனெனில், நாம் நேரத்திற்குள் இருப்பவர்கள். அவர் நிரந்தரமானவர். நேரம் நிரந்தரத்தோடு கைகோர்ப்பதே அர்ப்பணம்.

நிற்க.

காணிக்கை அன்னையைத் தங்களின் பாதுகாவலியாகக் கொண்டிருக்கின்ற தனிநபர்கள், நிறுவனங்கள், மற்றும் துறவற சபைகளுக்கு நம் வாழ்த்துகளும் செபங்களும்.

மூன்று வயதில் எருசலேமின் ஆலயப் படிக்கட்டுகளில் முன்னேறிச் சென்ற அந்தக் குட்டி மிரியமின் குட்டிப் பாதங்கள் வழி நம் பாதங்கள் சென்றால் எத்துணை நலம்!

Thursday, November 19, 2020

என்ன செய்வதென்று தெரியவில்லை

இன்றைய (20 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 19:45-48)

என்ன செய்வதென்று தெரியவில்லை

தன் எதிரிகளின் பலத்தை இயேசு வித்தியாசமாக வெல்வதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காண்கிறோம்.

நம்மை வெறுப்பவர்கள் அல்லது நம்மை எதிர்ப்பவர்கள் முன் நாம் நல்லவர்களாக அல்லது நல்ல நிலையில் வாழ்வதே அவர்களுக்கு நாம் செய்யும் சிறந்த கைம்மாறு என்பது மூத்தோர் வாக்கு. 

இன்னொரு பக்கம், நம்மைத் துரத்துபவர்கள் நம்மைத் தொட்டுவிடாத அளவிற்கு உயர்ந்து நிற்பதும் நாம் அவர்களுக்குச் செய்யும் பதிலிறுப்பு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு அதையே செய்கின்றார். எருசலேம் கோவிலுக்குள் நுழைகின்ற இயேசு, 'என் இல்லம் இறைவேண்டலின் வீடு. நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்' என்று அங்கிருந்த குருக்களையும் சமயத் தலைவர்களையும் சாடுகின்றார். அவர்கள் அவரை ஒழித்துவிட வழி தேடுகிறார்கள். ஆனால், என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிலைக்கு அவர்களை இயேசு எப்படி இட்டுச் சென்றார்?

ஒன்று, தன் பாதுகாப்பு வளையமாகக் கடவுளைக் கொண்டார்.

இயேசு தன் வாழ்க்கையில் கடவுளைத் தவிர வேறு யாரையும் சார்ந்திருக்கவில்லை. தன் சீடர்கள் தனக்கு அருகில் இருந்தாலும் அவர்கள் தன்னைவிட்டுச் சென்றுவிடுவர் என்பது அவருக்குத் தெரியும். தன் இருத்தல் மற்றும் இயக்கத்தின் ஆதாரமாக அவர் தன் தந்தையாகிய கடவுளைக் கொண்டிருந்தார். 

இரண்டு, நன்மையே செய்தார், நன்மையே சொன்னார்.

'சிறிய காரியத்தில் கூட உனக்கு நீயே பொய் சொல்லிவிடாதே' என்பார் டால்ஸ்டாய். பொய்மை நன்மைக்கு எதிரானது. கோவிலில் இயேசு சொன்ன வார்த்தைகள் நன்மைக்கான வார்த்தைகளே தவிர தீமைக்கான அல்லது பொய்மையின் வார்த்தைகள் அல்ல. ஆக, நன்மையை எதிர்த்து நிற்க தீயவர்களான அவர்களால் இயலவில்லை.

மூன்று, மக்களை வெற்றிகொண்டார்.

'ஒருவரின் உதடுகளைப் பற்றிக்கொண்டு தொங்குவது' என்று ஆங்கிலத்தில் சொலவடை ஒன்று உண்டு. அதாவது, ஒருவரின் வார்த்தைகளால் அதிகம் கவரப்படுவது என்பது இதன் பொருள். இந்த வார்த்தையைத்தான் லூக்கா இன்றைய நற்செய்தி வாசகத்தில் பயன்படுத்துகின்றார். மக்கள் அனைவரும் இயேசுவின் உதடுகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றனர். அதாவது, அவர் சொல்வதை விரும்பிக் கேட்கின்றனர். கேட்பதோடு அல்லாமல் இன்னும் வேண்டும் என்பது போல அவரை இறுகப் பற்றிக்கொள்கின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திவெ 10:8-11), வானதூதரின் கையிலிருந்த சிற்றேட்டை யோவான் தின்கின்றார். அது வாயில் தேனைப் போல இனித்து வயிற்றில் கசக்கிறது. அதாவது, அச்சுருளேடு தரும் கடமை பெரியது. 

இயேசுவின் வார்த்தைகள் தேனைப் போல இனித்ததால் மக்கள் கூட்டம் அவரைப் பற்றிக்கொண்டது.

அவ்வார்த்தைகள் பொறுப்புணர்வைத் தூண்டியதால் அவருடைய எதிரிகளின் வயிற்றில் அவை கசந்தன.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குச் சொல்வது என்ன?

நாம் ஒவ்வொருவருமே யாரோ ஒருவருடைய கதையில் வரும் எதிரிகள்.

ஆனால், அந்த எதிரிகள் நம்மை என்ன செய்வது என்று தெரியாமல் போகும் அளவுக்கும் நலமுடன் வாழ்தல் சிறப்பு. கடவுளைப் பாதுகாப்பு வளையமாகக் கொண்டு, எந்நேரமும் நன்மையே செய்து. நாம் காணும் அனைவரையும் வெற்றிகொண்டால் எதிரிகளையும் குழப்பி விடலாம்.