Tuesday, February 28, 2017

திருநீறு

மொக்குராய் என்பவர் ஒரு ஜென் துறவி. அவருக்கு டோயோ என்ற 12 வயது மகன் இருந்தான். அவன் மிகவும் புத்திசாலி. எப்போதும் துறுதுறுவென்று இருக்கக் கூடியவன். தன் தந்தையைப் போலவே ஜென் தியானம் செய்ய அவனுக்கு மிகவும் ஆசை. தியானம் செய்யும் இடத்திற்குத் தன்னையும் அழைத்துக் கொண்டு போகுமாறு சொல்லிக் கொண்டே இருக்கிறான். ஆனால் அவன் தந்தை, 'உனக்கு வயது போதாது. இன்னும் சில ஆண்டுகள் காத்திரு!' எனச் சொல்லிவிடுகின்றார். ஆனால் டோயோ தன் தந்தைக்கும் தெரியாமல் ஒரு நாள் தியானம் நடக்கும் இடத்திற்குச் சென்று விடுகிறான். அங்கே தியானம் சொல்லிக் கொடுக்கும் துறவி சன்சானின் முன் சென்று மற்றவர்களைப் போலவே மூன்று முறை விழுந்து வணங்குகிறான். பின் ஒரு இடம் தேடிச் சென்று அமர்கிறான். சன்சான் தன் போதனையைத் தொடங்குகிறார்: 'உங்கள் எல்லாருக்கும் இரண்டு கைகள் எழுப்பும் ஓசை தெரியும். நிச்சயம் கேட்டீருப்பீர்கள்! யாராவது ஒரு கை எழுப்பும் ஓசையைக் கேட்டிருக்கிறீர்களா?' என்கின்றார். டோயோ ரொம்ப நேரம் யோசிக்கின்றான். தன் வீட்டிற்கு அருகில் ஒரு ஓடையில் தண்ணீர் ஓடும் சப்தம் கேட்கிறது. சன்சானிடம் போய் 'தண்ணீரின் சப்தமே ஒரு கை எழுப்பும் சப்தம்' என்கிறான். 'இல்லை. தண்ணீரும், கற்களும் இணைவதால் அது இருகை சப்தம். ஒரு கை சப்தமல்ல' என்று மறுத்துவிடுகிறார் சன்சான். 'மணியின் சப்தம், ஆந்தையின் அலறல், வெட்டுக்கிளியின் சப்தம்!' என நிறைய சப்தங்களைச் சொல்ல 'இல்லை!' என மறுத்துவிடுகிறார் சன்சான். பல ஆண்டுகள் முயற்சி செய்தும் கேட்க முடியவில்லை. இறுதியில் தியானம் செய்யத் தொடங்குகிறான் டோயா. 'எந்தச் சப்தமுமே கேட்கவில்லை!' என்று ஒரு கட்டத்தில் சரணடைந்து விடுகிறான். 'அதுவே ஒரு கை எழுப்பும் சப்தம்!' என்கிறார் சன்சான். ஞானம் பெற்றான் டோயோ.

இன்று திருநீறு அணிந்து தவக்காலத்தைத் தொடங்குகிறோம். இது பாவத்தை நினைத்து பரிதவிக்கும் பாவத்தின் காலமோ, பூ வைக்காமல், பொட்டு வைக்காமல், முகச்சவரம் செய்யாமல், செருப்பு அணியாமல் இருக்கும் சோகத்தின் காலமோ அல்ல. இது ஒரு தயாரிப்புக் காலம். உயிர்ப்பின் மகிழ்ச்சியை நமதாக்கும் காலம். இந்தக் காலத்தில் ஆலயத்திலும் பூ வைக்கக் கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். மேலை நாடுகளில் இந்தப் பருவத்தில் பூக்கள் பூக்காது. அதனால் அவர்கள் பூ வைப்பதில்லை. அவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு ஏற்படுத்திக் கொண்டதை நாம் ஏனோ வெறும் சடங்காகவே மாற்றிக் கொண்டுவிட்டோம். நம் நாட்டின் பருவநிலை சமநிலையானது. எல்லா நாட்களிலும் இங்கு பூக்கள் பூக்கும். எல்லா நாளும் நமக்குத் திருநாளே. வருடம் எல்லாம் இறைச்சி, வெண்ணெய் எனச் சாப்பிட்டு கொழுத்துவிட்டு நாற்பது நாட்கள் தவக்காலத்தில் அவர்கள் நோன்பு இருப்பது உடல்நலத்திற்காகத்தான் அன்றி அதில் ஆன்மீகம் இல்லை. ஆனால் இங்கே நோன்பு என்பது வருடம் முழுவதும் ஒரு சில வீடுகளில் பட்டினி என்று தவம் கிடக்கிறது. ஆகையால் எக்காலம் போல தவக்காலத்திலும் இயல்பாக வாழ்வோம்.

தவக்காலத்தின் தொடக்க நாளாகிய இன்று நாம் வாசித்த வாசகம் செபம், நோன்பு, பிறரன்புச் செயல் பற்றி இருக்கின்றது. இதை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் செபம் என்பது 'இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு', நோன்பு என்பது 'நமக்கும் நமக்கும் உள்ள உறவு', பிறரன்புச் செயல் என்பது 'நமக்கும் பிறருக்கும் உள்ள உறவு'. இந்த மூன்று உறவுகளையும் மறுஆய்வு செய்ய தவக்காலம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

இந்த மூன்றிலும் இயேசு முன்வைப்பது என்னவென்றால், 'நாம் செய்வது நமக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிய வேண்டும்'. நாம் செய்வது நம்மைப் பற்றிய தம்பட்டம் அடிக்கவோ, நம்மை நாமே நீதிமான்கள் என்று காட்டுவதற்காகவோ இருக்கக் கூடாது என்பதுதான். ஜென்னின் வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால் இந்த மூன்று செயல்களுமே 'ஒரு கை எழுப்பும் ஓசையாகத்தான் இருக்க வேண்டுமே' தவிர 'இரு கை எழுப்பும் சப்தங்களாக இருக்கக் கூடாது'.

நோன்பு - நமக்கும் நமக்கும் உள்ள உறவு. நோன்பு என்பது எல்லா மதங்களிலும் முன்வைக்கப்படும் ஒன்று. நோன்பு என்பது ஆன்மீக மதிப்பீடு என்பதைவிட உடலியல் சார்ந்த மதிப்பீடே என்று சொல்லலாம். 'வாழும் கலை' என்ற தியான மையத்தின் சிந்தனைகளில் ஒன்று என்னவென்றால் நம் உடலுள் நடக்கும் நிகழ்வுகளைச் சிந்திப்பது. நம் உடலின் வெளிப்புறத்தை நாம் பாதுகாக்கும் அளவிற்கு நம் உடலின் உட்புறத்தை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. 'எல்லாம் நன்றாக நடப்பதால்' அதைக் கண்டுகொள்வது கிடையாது. சிறுநீரகக் கல் என்று ஒன்று வந்தால்தான் நம் உடலில் சிறுநீரகம் இருப்பதே தெரிகின்றது. மாரடைப்பு வந்தால்தான் இதயம் நினைவிற்கு வருகிறது. மூச்சுத்திணறல் வந்தால் தான் நுரையீரல் நினைவிற்கு வருகிறது. நம் பிறப்பு முதல் நம் இறப்பு வரை நம் உடன் வருவது நம் உடலில் உள்புறங்கள். நாம் பிறந்த அன்று நம்மில் தொடங்குகிற இரத்த ஓட்டம் நாம் இறப்பதற்குள் எத்தனையோ இலட்சம் மைல்கள் பயணம் செய்கின்றன. நோன்பு நம் உடலைப் பற்றி நினைக்க நமக்கு அழைப்பு விடுகிறது. உடலின் இயக்கத்திற்கு நாம் தரும் சிறு ஓய்வே நோன்பு. தவக்காலத்தில் மட்டுமல்ல ஆண்டு முழுவதும் நாம் அடிக்கடி மேற்கொள்ளும் நோன்பு நமக்கு மிகுந்த பயன் தருகிறது. மேலும் நோன்பில் நமக்கு நம் பசியும், நமக்கருகில் இருப்பவர்களின் பசியும் நினைவிற்கு வருகிறது.

இறைவேண்டல் - நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு. நம் உடலின் இயக்கமாக இருப்பவர் இறைவன். அவர் நம்மை இயக்குவதை நாம் உணரும் ஒரு வழியே இறைவேண்டல். 'எனக்கு அது வேண்டும், இது வேண்டும்' என்று கேட்கும் விண்ணப்பம் மட்டும் இறைவேண்டல் அல்ல. நன்றி, புகழ், மன்னிப்பு என அனைத்துமே இறைவேண்டல்தான். இயற்கைக்கும், இயற்கையைக் கடந்த இறைவனுக்கும் இடையே நடக்கும் உறவே இறைவேண்டல். எப்போதெல்லாம் நாம் இறைவேண்டல் செய்கிறோம்?

பிறரன்புச் செயல் - நமக்கும் பிறருக்கும் உள்ள உறவு. நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய அழைக்கப்படுகின்றோம். ஆனால் பல நேரங்களில் நாம் செய்யும் உதவி மேலிருந்து கீழ் செல்லும் ஒன்றாகத் தான் இருக்கின்றது. நாம் செய்யும் உதவிகள் பல நேரங்களில் 'இருப்பவர் - இல்லாதவர்' என்ற நிலையைத் தொடர்ந்து தக்கவைக்கும் ஆபத்தும் இருக்கின்றது. உதவி என்றால் பொருளுதவி என்றே பல நேரங்களில் நாம் நினைக்கிறோம். நம் அனைவருக்குமே பொதுவாக இருக்கும் அறிவு, ஆற்றல், நேரம் என அனைத்தையும் பிறரோடு பகிர்வதும் பிறரன்புச் செயலே.

Thursday, February 23, 2017

நட்பு

'அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.'
(குறள் 787)

விளக்கம்: அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

நட்பின் தன்மையும், பண்பும் பற்றி இப்படித்தான் எழுதுகிறார் திருவள்ளுவர்.

நாளைய முதல் வாசகத்தில் (காண். சீராக் 6:5-17) நான்கு வகையான நண்பர்களைப் பற்றி எழுதுகின்றார்:

அ. தன்னலம் தேடும் நண்பர்கள்
இவர்கள் உனக்கு கஷ்டமான நேரத்தில் உன் உடன்வர மாட்டார்கள்.

ஆ. பகைவர்களாய் மாறும் நண்பர்கள்
உன்னுடன் இருந்து உன் நல்லது கெட்டதை அறிந்து கொண்டு, உன் நிழல் பகுதியைப் பற்றி மற்றவர்களிடம் பேசி உன் பெயரைக் கெடுத்துவிடுவார்கள்.

இ. விருந்துண்ணும் நண்பர்கள்
நீ நல்ல நிலையில் இருக்கும் போது உயிருக்கு உயிராய் உன்னுடன் இருப்பார்கள். தாழ்ந்துவிட்டால் உன் முகத்தில் விழிக்க மாட்டார்கள்.

ஈ. நம்பிக்கைக்குரிய நண்பர்கள்
பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள். இவர்கள்தாம் நீ கண்டுகொள்ளும் புதையல்கள். இவர்களின் தகைகை (கேரக்டர்) அளவிட முடியாதது. இவர்கள் நலம்தரும் மருந்து போன்றவர்கள்.

இந்த நான்காம் வகை நண்பர்களைக் கண்டறிய ஒரு குணம் மட்டும் போதும். அது என்ன?

'ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகையை நண்பர்களைக் கண்டடைவர்' என்கிறார் சீராக்.

மேலும் 'ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்பைப் பேணுவர். அவர்களின் நண்பர்களும் அவர்களைப் போலவே இருப்பர்.'

என்னைச் சுற்றி இருக்கும் நண்பர்களில் யார் யார் எந்த கட்டத்திற்குள் வருவார்கள் என்று ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு, ஒவ்வொரு நட்பிலும் நான் எத்தகையவராய் இருக்கிறேன்? என்று நான் என்னையே ஆராய்ந்தால் நலம்.

நிற்க.

நட்பு - மிக இனிமையான அனுபவம்.

கூடப் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் நம்மேல் திணிக்கப்படுபவர்கள். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவர்கள் நம்முடன் இருந்தே தீருவார்கள்.

ஆனால், நண்பர்கள் அப்படி அல்லர்.

அவர்களை நாம் தேர்ந்து கொள்ளலாம்.

நல்ல நண்பர்கள் நமக்குக் கிடைக்க ஒரே வழி, 'நாம் நல்ல நண்பர்களாக இருப்பதுதான்!'

தாவீது-யோனத்தான், கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார், காரல் மார்க்ஸ்-எங்கெல்ஸ் என வரலாற்றில் நாம் காணும் நல்ல நட்பு ஏராளம்.

இரத்த உறவையும், திருமண உறவையும் தாண்டிய உறவுதான் நட்பு.

அந்த நட்பு உறவே உடன்படிக்கை உறவு.

Wednesday, February 22, 2017

அடிமையாகாதே

'உன் நாட்டங்களுக்கும், வலிமைக்கும் அடிமையாகாதே!'

(காண். சீராக் 5:1-8)

இரண்டு நாள்களுக்கு முன் நாம் வாசித்த சீராக்கின் அறிவுரைப்பகுதி தொடர்கிறது.

'நாட்டம்' என்பது இதயம் சார்ந்தது. 'வலிமை' என்பது உடல் சார்ந்தது. 'வலிமை' சில நேரங்களில் மனம் சார்ந்ததாகவும் இருக்கலாம்.

நாட்டம் மற்றும் வலிமை சீக்கிரம் மறையக்கூடியது.

உதாரணத்திற்கு, இன்று வெண் பொங்கல் மேல் இருக்கும் நாட்டம் நாளைக்கு இருக்காது.

இன்று எனக்கு இருக்கும் உடல் வலிமை நாளை இருக்காது.

ஆக, நிலையற்றவைகளுக்கு அடிமை ஆகிவிடக்கூடாது.

நிலையற்றவைகள்தாம் பல நேரங்களில் நிலையானவை போன்ற ஒரு மாயையை உருவாக்கிவிடுகின்றன. இந்தப் பின்புலத்தில்தான் இடறலாக இருக்கும் எந்த உறுப்பையும் வெட்டிவிடுமாறு சொல்கிறார் இயேசு.


Tuesday, February 21, 2017

அன்பின் வலிமை

நாளை பேதுருவின் தலைமைப்பீட விழாவைக் கொண்டாடுகிறோம்.

உரோமை தூய பேதுரு பேராலயத்தில் நம் வலது புறத்தில் பேதுருவின் வெண்கலச்சிலை ஒன்று உண்டு. வழக்கமாக வைத்திருக்கும் சாவிகள் இல்லாமல் ஒரு நாற்காலி, ஒரு தொப்பி என ஒய்யாரமாக அமர்ந்திருப்பார். அவரின் பாதங்கள் பக்தர்களின் கரம் பட்டதால் சூம்பிப்போய் இருக்கும்.

பேதுருவின் வித்தியாசமான இந்த முகத்தையே நாளை திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

பேதுருவின் வாழ்க்கையை 'கண்ணீருக்கு முன்,' 'கண்ணீருக்கு பின்' என்று இரண்டாகப் பிரிக்கலாம். சேவல் கூவிய அந்த இளங்காலைப் பொழுதில் அவர் வடித்த கண்ணீர்த்துளிகள்தாம்.

தினமும் காலையில் சேவல் கூவும் சத்தம் கேட்கும்போதெல்லாம் இவருக்கு தான் செய்த பாவம்தானே நினைவிற்கு வந்திருக்கும்!

பழையது நல்லது என்றால் நாம் திரும்ப நினைத்து அசைபோடுகின்றோம்.

கெட்டது என்றால் அதைப்பற்றியே நினைக்க மறுக்கின்றோம்.

பேதுருவை தலைமைத்துவத்திற்கு உயர்த்தியது கடவுளின் அருள்தான் என்றாலும், அவரின் இந்த நல்ல குணமும்தான். அதாவது, தவறு செய்துவிட்டேன். கண்ணீர் வடித்துவிட்டேன். மாறிவிட்டேன். தன் குற்ற உணர்வு தன்னைக் கட்டிப்போட அவர் அனுமதிக்கவில்லை.

இந்தக் கட்டின்மையே எல்லா ஆன்மீகத்தின் ஆணிவேர்.

வருகிற 24ஆம் தேதி கோவைக்கு அருகில் இருக்கும் ஈஷா மையத்தில் நிறுவப்பட்டுள்ள 112 அடி சிவன் சிலையை திறந்து வைக்க மோடி வருகிறார் என்று ஒரே ஆரவாரமாக இருக்கிறது. 'இந்த சிலையால் என்ன பயன்?' 'இது நிறுவப்பட்ட இடம் பழங்குடியினரின் இடம்?' 'ஈஷா ஒரு குழப்பம்' என்றெல்லாம் நிறைய விமர்சனங்கள் எழுந்தாலும் சிலை கம்பீரமாக இருக்கிறது.

ஆனால், சிலை, கடவுள், பீடம், நன்மை இவையெல்லாம் தராத ஓர் ஆன்மீக அனுபவத்தை பேதுரு பெறுகின்றார். பேதுருவின் அந்த அடித்தள அனுபவம் தீமை அதிகம் புழங்கும் பிலாத்துவின் அரண்மனை வளாகத்தில் நிகழ்கிறது.

ஆக, எந்த இடத்திலும் நமக்கு ஆன்மீக அனுபவம் கிடைக்கலாம்.

எந்த இடத்திலும் நாம் கட்டின்மையை அடையலாம்.

இறுதியாக,

'ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே!
எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?'

என்கிறார் பேதுரு.

தான் மறுதலித்ததையும் மறந்துவிட்டார் பேதுரு. அன்பின் வலிமை இதுவே.

Monday, February 20, 2017

ஆன்மீக குரு

நாளை நாம் வாசிக்கும் முதல் வாசகம் (காண். சீஞா 2:1-11) நான் அதிகமாக வாசித்த விவிலிய பகுதிகளில் ஒன்று.

நான் உரோமைக்குச் செல்லும் வரை எனக்கென ஒரு ஆன்மீக குரு ஒருவரை வைத்திருந்தேன். மாதா மாதம் அவரைப் போய் சந்திப்பேன். அவரோடு பேசுவேன். காலப்போக்கில் அவரைத் தேடி நான் செல்லுமுன், 'இந்த மாதம் நீ வரலயா?' என்று அவர் கேட்க ஆரம்பித்தார். ஒவ்வொரு மாதத்தின் நான்காம் செவ்வாய் அவரோடு என முடிவெடுத்தேன். அவருக்கு வயதாகிக்கொண்டே போனது. நான் உரோமையில் இருந்தபோது அவர் இறந்தும் விட்டார்.

உரோமையில் இருந்தபோது நான் மிஸ் பண்ணிய பல விஷயங்களில் ஒன்று ஆன்மீக குரு.

யாரை எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.

அங்குள்ள ஓர் அருள்பணியாளரை எடுத்தேன். ஆனால் முதல் சந்திப்பே மறக்க முடியாத மறக்க வேண்டிய சந்திப்பாக மாறிவிட்டது. அதுமுதல் நான் யாரையும் வைத்துக்கொள்ள மெனக்கெடவில்லை.

அந்த நாள்களில்தான் சீராக்கின் இந்த இறைவாக்குப் பகுதியை வாசித்தேன்.

வாசித்த முதல் நாளே எனக்குப் பிடித்துப்போனது.

'குழந்தாய், ஆண்டவருக்கு பணிபுரிய நீ முன்வந்தால்' எனத் தொடங்கும் இந்தப்பகுதி. 'ஆண்டவருக்கு பணிபுரிய முன்வருபவர்' ஓர் அருள்நிலை இனியவராய்த்தானே இருக்க முடியும்.

ஒரு அருள்பணியாளர் அல்லது அருள்சகோதரி எப்படி இருக்க வேண்டும் என்பதை அப்படியே எழுதுகிறார் சீராக்கு:

'சோதனைகளை எதிர்கொள்!'

'உள்ளத்தில் உண்மை'

'உறுதி'

'துன்ப வேளையில் நோ பதற்றம்'

'ஆண்டவரைச் சிக்கென பிடி!'

'என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்'

'இழிவு வரும்போது பொறுமையாய் இரு'

'ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்'

'அவரை நம்பு'

உரோம் நாட்களில்தான் நான் நம்பிக்கையில் தடுமாறினேன். 'கடவுள் இல்லை' என்ற நிலைக்கு வந்துவிட்டேன். ஆனாலும் அவர்மேல் உள்ள நம்பிக்கை குறையவில்லை. குழப்பமா இருக்கா? இதைவிட குழப்பமாக இருந்தது எனக்கு.

சீராக்கின் இந்த அறிவுரைகள் மட்டுமாவது நான் வாழ நினைக்கிறேன்.


Sunday, February 19, 2017

எவ்வளவு காலமாயிற்று?

'இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?' என்று கேட்டார்.

அதற்கு அவர், 'குழந்தை பருவத்திலிருந்து இது இருந்து வருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பல முறை அந்த ஆவி இவனை தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்' என்றார்.

(காண். மாற்கு 9:14-29)

நான் உரோமில் பங்குத்தலத்தில் இருந்தபோது ஞாயிறு மாலைத் திருப்பலிக்கு மனநலம் சரியில்லாத ஒருவரை அவரது அன்னை அழைத்துவருவார். அவருக்கு வயது எப்படியும் 40 இருக்கும். திருப்பலி நேரத்தில் திடீர் திடீரென்று சத்தம் போடுவார்.

சின்ன சத்தம் கேட்டாலும் அதைத் தொந்தரவு என நினைக்கும் எனக்கு (இப்ப இல்ல! அப்போ!) அவரது பிரசன்னம் சில நேரங்களில் நெருடலாக இருந்தது.

ஆனால் திடீரென்று ஒரு நாள் எனக்குள் ஒரு சிந்தனை வந்தது:

வாரத்திற்கு ஒரு நாள் 35 நிமிடம் அவரை நான் சந்திக்கின்றேன். அந்த 35 நிமிடங்களே என்னால் அவரை  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அவரின் அம்மாவும், அப்பாவும், உடன் பிறந்தவர்களும் வருடம் முழுவதும் அவரை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்? என்னதான் தன் பிள்ளையாக, உடன்பிறப்பாக இருந்தாலும் அவர்களுக்கு கடவுள்மேல் ஏன் கோபமில்லை?

நாளைய நற்செய்தி வாசகத்தில் இப்படிப்பட்ட ஒருவர்தான் இயேசுவிடம் கொண்டுவரப்படுகின்றார்.

குழந்தை பருவத்திலிருந்து தீய ஆவியால் பிடிக்கப்பட்டிருந்த தன் மகனை இயேசுவிடம் அழைத்துவருகின்றார். அந்தப் பேய் அந்தச் சிறுவனை நெருப்பிலும், தண்ணீரிலும் தள்ள முயற்சித்த போதெல்லாம் இந்தத் தந்தைதான் அருகிருந்து பார்த்திருக்க வேண்டும்.

இவரின் பொறுமை எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

அதாவது, தன் குழந்தைக்கு ஒரு நாள் தீய ஆவி நீங்கும் என்று நம்புகின்றார். அந்த நம்பிக்கையில் நிலைத்து நிற்கின்றார்.

வாழ்க்கையை முழுமையாகப் பார்க்கின்ற ஒருவரால்தான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்க முடியும்.

Friday, February 17, 2017

அன்பில்

'தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்' (மாற்கு 9:2-13)

மிக அண்மையில் என்னை அதிகம் அச்சத்து உள்ளாக்கிய ஒரு காணொளி திருமதி சசிகலா அவர்கள் பற்றியது. தான் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைக்குச் செல்லுமுன் தன் தலைவி-அக்கா செல்வி ஜெயா அவர்களின் கல்லறைக்குச் சென்று பாஞ்சாலி சபதம் எடுக்கின்றார். மூன்றுமுறை அவர் ஓங்கி அடிக்கும்போது அவரின் கண்களில் தெறியும் கோபமும், வெறியும், அவரின் முகபாவணையும் எனக்கு மிகுந்த அச்சம் தருவதாக இருந்தது.

இப்படி ஓங்கி அடித்த கைகளில்தான் தமிழக முதலமைச்சர் பதவியைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என அவர் விரும்பினார்.

கல்லறையில் மூன்றுமுறை ஓங்கி அடித்தார். அவர் செய்வது என்னவென்று அவருக்குத் தெரிந்தேதான் இருந்தது. அப்போது எல்லாரையும் ஓர் அச்சம் ஆட்கொண்டது.

இந்த நேரத்தில் யீட்ஸ் அவர்களின் 'இரண்டாம் வருகை' என்ற கவிதை நினைவிற்கு வருகிறது:

'நல்லவர்கள் தங்களுக்கென்று எந்த ஒரு கொள்கைப்பிடிப்பும் இருந்தனர்.
கெட்டவர்களோ தாங்கள் செய்யப்போவது பற்றி மிக வெறியோடு இருந்தார்கள்.'

நிற்க.

நாளைய நற்செய்தியில் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை வாசிக்கவிருக்கின்றோம்.

இயேசுவின் உருமாற்றம் இயேசுவுக்குத் தேவைப்பட்டதோ இல்லையோ, சீடர்களுக்குத் தேவைப்பட்டது. ஏனெனில் அங்கேதான் இயேசுவின் இறைத்தன்மையை அவர்கள் கண்டுகொள்கின்றனர்.

வழக்கம்போலவே இயேசுவை தவறாகப் புரிந்து கொள்கின்றனர் சீடர்கள்.

கடவுளின் மாட்சி முதல் ஏற்பாட்டில் இறங்கி வந்தபோது மோசே சந்திப்புக் கூடராம் கட்டினார். அப்படித்தான் இயேசுவையும் ஒரு கூடாரத்திற்குள் அடக்கி வைக்க நினைக்கின்றார் இயேசு.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் அச்சத்தில் இருக்கும் பேதுரு வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி முடிக்கின்றார். முதல் ஏற்பாட்டு சந்திப்புக் கூடாரமும் அச்சத்துக்குரிய இடமாகவே இருந்தது.

கடவுள் முன்னிலையில் நாம் கொள்ள வேண்டிய அச்சம் தேவையான அச்சம். இதை சமய எழுத்தாளர் ஓட்டோ அவர்கள், 'மிஸ்தேரியும் திரமெந்தும்' என்கிறார்.

நம் அன்பிற்குரியவர்களிடத்திலும் சில நேரங்களில் நாம் இந்த அருள்நிலை அச்ச உணர்வோடு இருக்கிறோம்.

பேதுருவிடம் இருந்த பிரச்சினை என்னவென்றால் என்ன சொல்கிறோம் என்று தெரியாமலேயே எதையாவது சொல்லி விடுவது. பின் வாங்கிக்கட்டிக்கொள்வது.

ஆக, இன்று இறைவனையும், என் அன்பிற்குரியவர்களையும் பார்க்கும்போது நான் என்னவாகிலும் பேசிவிடுகிறேனா? ஏன் இந்த அச்சம்?

'அன்பில் அச்சத்திற்கு இடமில்லைதானே!'


Thursday, February 16, 2017

மழலை மொழி

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் ஒரு காட்சியில் கமல் ஆபரேஷன் செய்துகொண்டிருப்பார். அவருக்கு அருகில் இருக்கும் நபர், 'டாக்டர், நாங்களும் ஆபரேஷன் பண்ணலாமா?' என்று கேட்பார். அதற்கு அவர், 'கோஆபரேஷன்னு கேள்விப்பட்டதில்லையா. அத பண்ணுங்க!' என்பார்.

இன்று மேலாண்மையில் அதிகம் பேசப்படும் ஒரு பண்பு 'கூட்டு முயற்சி' அல்லது 'கூட்டு இயக்கம்' அல்லது 'கூட்டு ஆற்றல்.' ஒரு குடும்பம், நிறுவனம், கட்டமைப்பு என எது முன்னேற்றம் காண வேண்டுமென்றாலும் அங்கே கூட்டு முயற்சி அவசியம்.

மற்றொரு பக்கம் கூட்டு முயற்சியே தேவையில்லை எனவும், நாடு, நகரம், சமூகம், அரசியல், மதம் என்னும் அனைத்துக் கூட்டு முயற்சிகளும் வீண் என்பது சிலரின் வாதம்.
நாளைய முதல் வாசகத்தில் பாபேல் நகரத்துக் கோபுர வீழ்ச்சி நிகழ்வை நாம் வாசிக்கின்றோம்.

'பாபேல்' என்றால் எபிரேயத்தில் 'மழலையின் பெபெபெ - மழலைமொழி' என்பது அர்த்தம். மானிடத்தின் மழலைமொழி தோன்றியதை பாபேல் நிகழ்வு நமக்குச் சொல்கிறது.

ஒரே கூட்டமாக மக்கள் இருக்கிறார்கள். ஒரே மொழி பேசுகிறார்கள். ஒரே மாதிரி சாப்பிடுகிறார்கள். இந்த ஒரே என்ற நிலை நிலைத்து நிற்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசையோடு களிமண், கறும்புச்சாறு, முட்டை கலந்து கோபுரம் ஒன்றைக் கட்டுகின்றனர்.

அது மிஸ்டர் காட் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

இந்த மிஸ்டர் காட் அவர்களை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. நாம் செய்யும் சிலவற்றை தனக்குப் பிடிக்கிறது என்கிறார். சிலவற்றை பிடிக்காது என்கிறார்.

மக்கள் சேர்ந்து இருப்பது, ஒரே மொழி பேசுவது இவருக்குப் பிடிக்கவில்லை. ஸேடிஸ்ட் காட்!

சின்ன குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறார். 'செங்கல்' என்று கேட்டவரை 'மண்' என புரிந்து கொள்கிறார். 'மண்' என்று கேட்டவரை 'தண்ணீர்' எனப் புரிந்து கொள்கிறார். ஒரே குழப்பம். 'அப்பம் கேட்டால் கல்லையும், மீன் கேட்டால் பாம்பையும் கொடுக்கும்' நிலை வந்துவிடுகிறது. தங்களைப் புரிந்து கொண்டவர்களை இணைத்துக்கொண்டு சின்ன சின்ன குழுவாக மக்கள் பிரிய ஆரம்பிக்கிறார்கள்.

பாபேல் கோபுரம் பாதியிலேயே நிற்கின்றது.

நான் பயணம் செய்யும்போது நிறைய வீடுகள் மற்றும் கோவில்கள் பாதியில் கட்டப்பட்டு நிற்பதைப் பார்த்திருக்கிறேன்.

பணத் தட்டுப்பாடா, கட்டியவர் இறந்துவிட்டாரா, அல்லது அபசகுணமாக ஏதோ ஒன்று நடந்துவிட்டதா - எல்லாம் பாதியில் நிற்கின்றன.

பாதியில் நிற்கும் எல்லாவற்றுக்குப் பின்னும் பாபேல் மாதிரி ஒரு கதை இருக்கும். இந்தக் கதையில் கண்ணீர் இருக்கும்.

ஆனால், பாபேல் கோபுரம் பாதியில் நின்றாலும் மானுடம் தன் கிளைகளைப் பரப்பி வளர்கின்றது. மக்கள் மீண்டும் சேர்ந்து வாழ்கின்றனர். நிறைய கோபுரங்களைக் கட்டுகின்றனர்.

நாம் கட்டும் கோபுரங்களை, நாம் காணும் கனவுகளை, நாம் எழுதும் திட்டங்களை, மொத்தத்தில் நமது பாபேல்களை சில நேரங்களில் கடவுளே கலைத்துவிடுவார். அந்த நேரங்களில் கவலை வேண்டாம். ஏனெனில், நாம் மற்ற இடத்தில் சென்று நம்மையே பரப்பிக்கொள்ள அவர் இடத்தை ஏற்பாடு செய்திருக்கின்றார்.

கண்ணாடியின் முன் நின்று நானும் 'பெபெபெ' என்று மழலை பேச ஆசை.

வாழ்க்கை முழுவதும் மழலை மொழி மட்டுமே நாம் பேசிக்கொண்டிருந்தால் எத்துணை நலம். மழலை மொழி யாரையும் காயப்படுத்துவதில்லை. மழலை மொழியை யாரும் தவறாகப் புரிந்துகொள்வதில்லை. மழலை மொழியால் சண்டைகள் வருவதில்லை.

மானிடத்தின் மழலை மொழி பாபேல். என் வாழ்வின் பாபேல்களுக்கும் அதுவே மருந்து.

Wednesday, February 15, 2017

கூப்பிட

'என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்' (காண். மாற்கு 8:27-33)

இந்த நற்செய்திப் பகுதியை வாசிக்கும்போது எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது:

தான் போதித்ததை வாழ்ந்து காட்ட இயேசுவுக்கே கஷ்டமாக இருந்ததா?

'சினம் கொள்ளாதீர்கள். உங்கள் சகோதரரை 'முட்டாள்,' என்றோ, 'அறிவிலியோ,' என்று அழைக்காதீர்கள்!' என்று சொன்ன இயேசுவால் தன் அன்புச்சீடர் பேதுருவை, 'சாத்தானே' என்று எப்படி அழைக்க முடிந்தது?

நமக்கு அடுத்திருப்பவர் நல்லது செய்தால் அவரை, 'கடவுளே' என்று புகழ்வதில்லை.

ஆனால், கெட்டது செய்தால் உடனடியாக, 'சாத்தானே' என்று திட்டிவிடுகிறோம்.

இருட்டில் திடீரென எதையாவது பார்த்து பயந்தால், 'பேய்' என அலறுகிறோம். ஏன் 'கடவுள்' என்று அலறுவதில்லை. பேய் இருப்பதை நம்பும் அளவுக்கு கடவுள் இருப்பதை நாம் நம்புவதில்லை.

பேதுருவைப் பார்க்க எனக்கு பாவமாக இருக்கிறது.

'நான் ரொம்ப கஷ்டப்படுவேன். எல்லாரும் என்னை அடிப்பாங்க. சிலுவையில அறைவாங்க!' என புலம்புகிறார் இயேசு.

'இல்லப்பா...உனக்கு இப்படி எல்லாம் நடக்காது!' என நேர்முகமாக சப்போர்ட் செய்கிறார் பேதுரு.

ஆக, நேர்முகமாகப் பார்ப்பதும் கூட கடவுள் பார்வையில் தவறாக இருக்கலாம்.

பேதுரு செய்த தவறுதான் என்ன?

'குறுகிய பார்வை அல்லது எண்ணம்'

மனிதர்கள் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள். இவர்களால் இந்த இரண்டிற்கும் உட்பட்டுத்தான் எண்ணவும், பேசவும் முடியும்.

ஆனால், துன்பம், சிலுவை, இறப்பு என்பவை எல்லாம் உயிர்ப்பு என்ற ஒன்றோடு தொடர்புடையவை என்பது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.

பேதுரு மனிதர்தான். ஆக, அவரால் மனிதர்நிலையில்தான் சிந்திக்க முடியும்.

அதற்காக, அவரை 'பேய்' என்று திட்டுவதா?

பேதுருவின் மனைவி இதைக் கேள்விப்பட்டிருந்தால் நிச்சயம் இயேசுவை ஒரு வழி பண்ணியிருப்பார்.

'ஏன்யா...போனாப் போகுதுன்னு உன் பின்னாடியே சுத்துனா, என் வீட்டுக்காரரையே 'பேய்'னு கூப்பிடுறியா?' என்று கண்டிப்பாக சண்டை போட்டிருப்பார்.

'இல்லம்மா...நான் என்ன சொல்ல வந்தேன்னா...உன் வீட்டுக்காரர் கொஞ்சம் பெருசா எண்ணலாம்தான்னு சொன்னேன்!' என்று இயேசுவும் சமாதானம் செய்திருப்பார்.

இன்னைக்கு நாம யாரையும் தயவுசெய்து இப்படி கூப்பிட வேண்டாம்!


Tuesday, February 14, 2017

மரங்களைப் போல

'மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகின்றார்கள். ஆனால், நடக்கிறார்கள்' என்று சொன்னார். (காண். மாற்கு 8:24)

மாற்கு நற்செய்தியில் வரும் இந்தப் பார்வையற்றவர் எனக்குள் அதிக ஆச்சர்யத்தைத் தூண்டுபவர்.

இவர் பிறவியிலேயே பார்வை அற்றவராக இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்திருந்தால் மரங்கள் எப்படி இருக்கும், மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்திருக்கும் இவருக்கு.

இவர் ஒரு ஞானியாகத்தான் இருக்க வேண்டும்.

இந்த பார்வையற்ற மனிதரை இங்கே ஓர் உருவகம். மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் சீடர்களை வரையறுக்கப் பயன்படுத்தும் உருவகமே இவர்.

எப்படி?

'பார்வை' என்பது இங்கே 'நம்பிக்கை'

மாற்கு நற்செய்தியில் சீடர்களின் நம்பிக்கை மூன்று நிலைகளில் வளர்கிறது:

அ. இயேசுவின் மேல் முற்றிலும் நம்பிக்கை அற்று இருக்கிறார்கள். அதாவது, இதுதான் முழுவதுமான பார்வையற்ற நிலை.

ஆ. கொஞ்சம் நம்பிக்கை. கொஞ்சம் சந்தேகம். இதுதான் இன்றைய பார்வையற்றவரின் மனநிலை. இருக்கிறது போல இருக்கிறது. ஆனா இல்ல. மரங்கள் போல இருக்கிறார்கள். ஆனால் மனிதர்கள். அசையாமல் நிற்கிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்.

இ. முழு நம்பிக்கை. 'நீரே இறைமகன்'. இந்ந நம்பிக்கையை சீடர்கள் சார்பாக வெளிப்படுத்துபவர் பேதுரு. மாற்கு நற்செய்தியின் முதல் 8 அதிகாரங்களும் பேதுருவின் நம்பிக்கை அறிக்கையை நோக்கி நகர்வதாகவே இருக்கிறது. இதுதான் முழுப்பார்வை. இதையே மாற்கு நற்செய்தியாளர், 'அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்' (8:25) எனப் பதிவு செய்கின்றார்.

இறுதியாக, இயேசு அவரிடம், 'ஊருக்குள் நுழைய வேண்டாம்' என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார் - என்று நிகழ்வை நிறைவு செய்கிறார் மாற்கு.

அப்படின்னா அவர் வெளியூர்க்காரரா மிஸ்டர் மாற்கு?

அல்லது அவரின் உருவகத்தை நிறைவு செய்வதற்காக அவரை அப்படியே அனுப்பிவிட்டீர்களா?

நிற்க.

நாம் கடவுளைப் பார்க்கும் ஒரு பயணம் நம்பிக்கைப் பயணம்.

முதலில் ஒன்றும் தெரியாது.

பின் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.

அப்புறம் முழுமையா தெரியும்.

இதை நம் சக உறவுகளுக்கும் பொருந்தும்.

அன்புடை நெஞ்சங்கள் நெருங்கும்போது முதலில் ஒன்றும் தெரியாது. பின் கொஞ்சம் தெரியும். அப்புறம் முழுமையாகத் தெரியும்.

சில நேரங்களில் நாம் மனிதர்களை வேண்டுமென்றே மரங்கள் போல பார்க்கின்றோம்.

அது தவறு. சரியா?

Monday, February 13, 2017

புரியவில்லையா

'இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?' (காண். மாற்கு 8:14-21)

என்று நாளைய நற்செய்தியில் கேட்கின்றார் இயேசு.

'புரியவில்லையா?' - எல்லா மொழிகளிம் பயன்படுத்தப்படும் அதிகமான சில வார்த்தைகளில் ஒன்று இது.

இந்தக் கேள்வி வித்தியாசமான கேள்வி.

இந்தக் கேள்விக்கு விடையாக 'ஆம்' என்று சொன்னாலும் குழப்பமாக இருக்கும். 'இல்லை' என்று சொன்னாலும் குழப்பமாக இருக்கும்.

இயேசு தன் சீடர்களிடம் பரிசேயர்களின் புளிப்பு மாவு பற்றிச் சொல்கின்றார். சீடர்கள் அப்பத்தைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

பேசுபவரும் கேட்பவரும் ஒரே தளத்தில் இருக்கும்போதுதான் தகவல் பரிமாற்றம் சாத்தியமாகிறது.

இயேசு நிற்கும் தளமும் சீடர்கள் நிற்கும் தளமும் ஒன்றாக இல்லை. ஆகையால் தகவல் சிதறுகிறது.

புரிந்து கொள்வதற்கு இரண்டு அடிப்படை தேவைகளை முன்வைக்கின்றார் இயேசு:

அ. மழுங்காத உள்ளம். அதாவது கூர்மையான உள்ளம். தயாரான உள்ளம்.

ஆ. பார்க்கின்ற கண்கள், கேட்கின்ற காதுகள். அதாவது ஒவ்வொரு உறுப்பும் தான் செய்ய வேண்டிய வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும்.

இயேசுவைப் புரிந்துகொள்ள மட்டுமல்ல, நாம் ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளவும் இவைகள் அடிப்படையே.


Sunday, February 12, 2017

வயல்வெளி

'நாம் வயல்வெளிக்குப் போவோம்' (காண். தொநூ 4:1-15, 25)

ஆதாம் - ஏவாள் என்னும் நம் முதற்பெற்றோரின் முதல் பிள்ளைகள் காயின் - ஆபேல், நம் மூத்த சகோதரர்களின் வாழ்க்கை நிகழ்வு ஒன்றை நாம் நாளைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம்.

ஆபேல் ஆடு மேய்ப்பவர். காயின் விவசாயம் செய்பவர். மனுக்குலத்தின் தொடக்ககால பணிகள் இவை இரண்டும்தான். இரண்டு பேருமே ஆண்டவருக்குப் பலி செலுத்துகின்றனர். ஆபேலின் பலி ஏற்கப்படுகிறது. காயினின் பலி நிராகரிக்கப்படுகின்றது. காயினுக்கு பொறாமை வந்துவிடுகிறது. தன் சகோதரன் ஆபேலைக் கொன்றுவிட முடிவெடுக்கின்றார்.

'வயல்வெளிக்குப் போவோம்' என்கிறார் காயின்.

தன் வாழ்விடத்திற்கு தன் தம்பியை அழைக்கிறார் காயின்.
வயல்வெளியில் இருக்கும்போது அவர்மேல் பாய்ந்து கொல்கின்றார் காயின்.

'வயல்வெளி' விவிலியத்தில் ஒரு முக்கியமான இடம்.

யோசேப்பு தன் சகோதரர்களைக் கண்டது வயல்வெளியில்தான்.

மோசே எகிப்தியன் ஒருவனைக் கொன்றது வயல்வெளியில்தான்.

வயல்வெளி என்பது வெட்ட வெளி.

சின்ன வயசுல எங்க ஊருல வயல்காட்டு வழியாக சுத்தித் திரிவதுண்டு. வயல்வெளி இயல்பாகவே பயத்தைத் தரும்.

காயின் எதற்காக வயல்வெளியைத் தேர்ந்தெடுத்தார்?

தன் சகோதரனை காட்டு விலங்கு கொன்றுவிட்டது என்று காட்டவா?

அல்லது தன் இடம் என்பதால் தனக்கு பாதுகாப்பு என்றா?

எப்படி இருந்தாலும், வயல்வெளியில் இருவர் சாட்சிகளாக திகழ்கின்றனர். மேலே வானம். கீழே பூமி. வானமும், வானத்தில் உறையும் கடவுள் மேலிருந்து இந்தக் கொலையைப் பார்க்க, பூமி தன் வாயைத் திறந்து இரத்தத்தைக் குடித்துவிடுகிறது.

எது தனக்கு பாதுகாப்பு என காயின் நினைத்தாரோ அதுவே அவர் காலுக்குக் கண்ணியாகிவிடுகிறது.

எனக்கு இங்கே ஒரு கேள்வி:

தனக்கு ஏற்புடைய பலி செலுத்தி தனக்கு ஏற்புடையவராக இருந்த ஆபேலை கடவுள் ஏன் காப்பாற்றவில்லை?

'ஆபேல்' என்ற வார்த்தையிலிருந்து 'ஹாவேல்' என்ற வார்த்தையை உருவாக்கும் சபை உரையாளர் 'ஹாவேல் ஹவாலிம்' ('வீணிலும் வீண்') என்கிறார். ஆபேல் அநியாயமாகக் கொல்லப்பட்டதன் பின்புலத்தில்தான், 'விதித்துள்ளபடிதான் எல்லாம் நேரிடும். நேர்மையானவர்களுக்கும், பொல்லாதவர்களுக்கும், நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும், மாசற்றவர்களுக்கும், மாசுள்ளவர்களுக்கும், பலி செலுத்துகிறவர்களுக்கும், பலி செலுத்தாதவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும்' (சஉ 9:2) என்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

நம் பலி கடவுளின் மனதை மாற்றுவது இல்லை.

நிற்க.

நாம் கற்கும் பாடம் என்ன?

நம் அண்ணனே கூப்பிட்டாலும் நமக்கு உரிமை இல்லாத இடத்திற்குச் சென்றால் நாமும் அங்கே மடிய வாய்ப்புண்டு.

ஆபேல் பாய் தன் ஆடுகளோடு இருந்திருக்கலாம்!

'வயல்வெளிக்குப் போவோம்!'

Saturday, February 11, 2017

லூர்த் அனுபவம்

இன்று (11 பிப்ரவரி) லூர்தன்னையின் திருநாள்.

கடந்த ஆண்டு மே மாதம் 10-12 வரை நான் பிரான்சு நாட்டின் லூர்து நகர் சென்றிருந்தேன். சென்று வந்து திரும்பிய என் அனுபவத்தை நான் என் டைரியில் பதிவு செய்தேன்.

அந்த டைரிக்குறிப்புகளின் சில வரிகளை இங்கே நான் பகிர்ந்து கொள்கிறேன்:

லூர்த் அனுபவம் மிக இனிய அனுபவமாக இருந்தது.

விமானம், பேருந்து, இரயில் என மூன்றிலும் பயணம் செய்து அன்னையின் ஆலயத்தை அடைந்தபோது இரவு 9 ஆகிவிட்டது. புதிய இடம்தான் என்றாலும் ஏதோ வந்து போன இடம் போலவே இருந்தது. நான் தங்க வேண்டிய ஓட்டலை நானே தேடி கண்டுபிடித்து அடைந்தேன். திருத்தலத்தின் மேல் ஐந்நூறு மீட்டரில் அது இருந்தது. இம்மாகுலேட் கன்செப்ஷன் அருட்சகோதரிகளில் அது நடத்தப்படுகிறது. பாவப்பட்ட இடம். ஆனால், இனிமையான வரவேற்பு.

ஐந்து முக்கிய வாழ்க்கைப் பாடங்களை இந்த திருப்பயணத்தில் நான் கற்றுக்கொண்டேன்:

1. வேற்று ஊரில் இருக்கும்போதுதான் நம் சொந்த ஊரின் இனிமை புரிகிறது. வேற்று இல்லத்தில் இருக்கும்போதுதான் நம் சொந்த இல்லத்தின் இனிமை புரிகிறது. தங்கும் இடம், உணவு, தட்பவெப்பநிலை எதுவும் பிடிக்கவில்லை. ஆனால், எனக்கே ஆச்சர்யம். ஒரு நொடி கூடி நான் அவற்றின் அசௌகரியம் உணரவில்லை. 'இல்லை' என்பதை ஏற்றுக்கொண்டாலே அங்கே அதனுடனான போராட்டம் மறைந்துவிடும்போல. 

2. லூர்து மாதா ஊற்றில் குளித்தபோது உடையில்லாமல் மற்றவர் முன் நின்றபோது, ஒரு கட்டத்தில் நம் வாழ்வில் நம்மையே விரித்துக் கொடுக்கும், நம்மேல் நமக்கே உரிமை இல்லாமல் போகும் நிலை வரும் என்று உணர்ந்தேன். எந்தவித தயக்கமோ, எந்தவித வருத்தமோ இன்றி நான் தண்ணீருக்குள் இறங்கினேன். 'உங்கள் கருத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!' என்றார் அங்கிருந்தவர். அந்த நேரத்தில் என் மனத்தில் ஒரு கருத்தும் தோன்றவில்லை என்பதுதான் ஆச்சர்யத்தின் உச்சகட்டம்.

3. பணம், படிப்பு, பெயர், புகழ், அம்பிஷன் - இவை மட்டும் வாழ்க்கை அல்ல. சொல்லப்போனால் இவை வாழ்க்கை அல்ல. இந்த எந்தவொரு நோக்கத்திற்கும் அல்லாமல் தங்கள் வாழ்வை அந்த ஆலயத்திற்காக தன்னார்வமாக அர்ப்பணித்த நிறையப் பேரைச் சந்தித்தேன். 'எப்படி அவர்களால் இப்படி இருக்க முடிகிறது?' என்ற ஆச்சர்யம்தான் எனக்கு இருந்தது.

4. முழுவதும் அடுத்தவரை நம்பியிருந்த அனுபவம் இனியதாக இருந்தது. மொழி தெரியாது, நபர்கள் தெரியாது, ஒரு ஃபோட்டோ எடுக்கக் கூட அடுத்தவர்களின் துணையை நாட வேண்டி இருந்தது. எல்லாவற்றிற்கும் அடுத்தவரைச் சார்ந்து நின்ற அந்த ஒவ்வொரு நொடியும் தாழ்ந்து போவதற்கும், உதவி கேட்பதற்கும்கூட துணிச்சல் வேண்டும் என உணர்ந்தேன்.

5. மாதா அங்கே தோன்றினார்கள், அல்லது தோன்றவில்லை என்ற தயக்கம் ஒரு பக்கம் இருந்தது. இன்னும் இருக்கிறது. அந்தத் தயக்கத்தை போக்குவது என் திருப்பயணத்தின் நோக்கமில்லை. ஆனால், இந்தத் தயக்கத்தையும் தாண்டி அங்கு நம்பிக்கையோடு வரும் திருப்பயணிகள்தாம் என் நம்பிக்கையைத் தட்டி எழுப்புகின்றனர். கேள்வி கேட்பதற்குத் துணிச்சல் தேவையில்லை. கேள்வி கேட்காமல் நம்புவதற்குத்தான் துணிச்சல் அதிகம் தேவை. 

என் அருட்பணி வாக்குறுதிகளைப் புதுப்பித்தேன். நான் தவறிழைத்த எல்லாரிடத்திலும் மனதளவில் மன்னிப்பு வேண்டினேன். என் அர்ப்பணத்தின் புதுப்பித்தலின் அடையாளமாக பின்வரும் இறைவாக்கை எடுத்தேன்:

'ஆகையால் நீங்கள் உங்கள் 
நம்பிக்கையோடு நற்பண்பும்,
நற்பண்போடு அறிவும்,
அறிவோடு தன்னடக்கமும்,
தன்னடக்கத்தோடு மன உறுதியும்,
மன உறுதியோடு இறைப்பற்றும்,
இறைப்பற்றோடு சகோதர நேயமும்,
சகோதர நேயத்தோடு அன்பும்
கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்'
(2 பேதுரு 1:5-7)


இந்த எட்டு பண்புகள்தாம் என்னிடம் தேவை என்பதை உணர்கிறேன்.

Friday, February 10, 2017

ஏதேன் தோட்டம்

மனிதர்களுக்கு மட்டுமல்ல. கடவுளுக்கும் இரட்டை குணங்கள் உண்டு.

அடிக்கத் தெரிவது பொல அரவணைக்கத் தெரியும்.

காயப்படுத்தத் தெரிவது போல கொஞ்சத் தெரியும்.

தண்டிக்கத் தெரிவது போல பரிவு கொள்ளத் தெரியும்.

இத்தணூன்டு பழத்தைத் தின்றதற்காக மனுக்குலத்தின் தாயும் தந்தையும் ஏதேன் தோட்டத்தைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். அவர்கள் மேல் பெரிய சாபங்கள் இடப்படுகின்றன.

நம் வாழ்வில் நாம் செய்யும் செயல்களும் தண்டனைகளும் பொருந்திப் போவதில்லை என்பதை சொல்லாமல் சொல்கின்றார் விவிலிய ஆசிரியர்.

இந்த இறைவாக்குப் பகுதியை எழுதிய ஆசிரியரின் கற்பனை வளத்தை நாம் பாராட்டிய தீர வேண்டும். கடவுள் - ஆதாம் - ஏவாள் - பாம்பு என நால்வர் மட்டுமே இருந்த தோட்டத்தின் எந்தப் பகுதியில் ஒளிந்திருந்து அவர் இந்த உரையாடல்களைக் கேட்டார்? கடவுளின் உள்ளக்கிடக்கையையும் அறிய அவரால் எப்படி முடிந்தது?

'உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்.'

இந்த மேற்கோளை ஆசிரியர்கள் புரோட்டோ-எவாஞ்சலியம் என்கின்றனர் (நற்செய்தியின் முன்சுவை).

ஆனால் இதை நான் நன்மைக்கும், தீமைக்குமான போராட்டம் என்றே பார்க்கின்றேன். பல நேரங்களில் நன்மை தீமையை வெல்லும் என நாம் நினைக்கிறோம். 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். பின் தர்மமே வெல்லும்' என்கிறோம். நன்மையும், தர்மமும் இறுதியில் வென்றாலும் அவைகளும் காயம்படவே செய்கின்றன. இங்கே நன்மையின் குதிங்கால் காயப்படுகிறது. குதிங்கால் காயப்பட்டால் நாம் நொண்டி நொண்டிதான் நடக்க வேண்டும். ஆனால் இந்த குதிங்கால் தீமையின் தலையை நசுக்கிவிடுகிறது. ஆக. நன்மை தீமையை வெல்லும் என்பது விவிலியத்தின் பாடமாகவும் இருக்கிறது.

'நீ உண்டாயா? பெண்தான் எனக்குக் கொடுத்தாள். நீ ஏன் அப்படிச் செய்தாய்? பாம்பு என்னை ஏமாற்றியது.'

'நீ உண்டாயா?' என்ற கடவுளின் கேள்விக்குப் பெயர் ரெட்டரிக் கேள்வி. அதாவது கேட்பவருக்கும், வாசகருக்கும் விடை  தெரியும் ஒரு கேள்வி. 'ஆம்' என்பதுதான் பதில். ஆனால், அவனும், அவளும் தங்களுக்குக் கீழ் இருப்பவர்மேல் பொறுப்பைப் போடுகின்றனர்.

இந்த உலகத்தில் நடக்கும் தீமைக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை என்ற அடுத்த உண்மையை இது காட்டுகிறது.

நம் இந்தியாவின் வறுமைக்கு அல்லது ஊழல் ஏன்? என குடியரசுத்தலைவரைக் கேட்டால் அவர் பிரதமரை, அவர் அமைச்சர்களை, அவர் அரசுப் பணியாளர்களை, அவர் தனக்குக் கீழ் இருப்பவர்களை, அவர் அடித்தட்டு மக்களைச் சுட்டிக் காட்டுவார்கள்.

'நீ உன் கணவன் மேல் வேட்கை கொள்வாய். அவன் உன்னை ஆள்வான்.'

பெண்ணுக்கு ஆணின்மேல் இருக்கும் ஈர்ப்பையும் அந்த ஈர்ப்பினால் வரும் பயனையும் இங்கே காண்கிறோம்.

தனக்குப் பிடித்தவன் தன்னை ஆள வேண்டும், தனக்குக் கட்டளை இட வேண்டும், தன்னவளாகக் கொள்ள வேண்டும் என அதிகமாக மெனக்கெடும் அவள், சட்டென்று ஒருநாள், 'நான் என்ன உனக்கு அடிமையா?' எனக் கேட்பாள். ப்ரியம் என்ற ஆணின் மதுவில் இளைப்பாறும் அவள் திடீரென்று இப்படிக் கேட்பது அவனை அலைக்கழிக்கும். இதுதான் பெண் அரசியல்.

'நீ மண்ணிற்குத் திரும்பும்வரை நெற்றிவியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய்.'

நாம் பிறப்பதற்கும், இறப்பதற்கும் இடையே உள்ள நோக்கத்தை இங்கே பதிவு செய்கின்றார் ஆசிரியர். உழைப்பதும், அந்த உழைப்பின்வழி உண்பதும்தான் நம் வாழ்வின் நோக்கம். இந்த உழைப்பு என்ற ஒன்று இல்லையென்றால் ஓய்வு என்பதன் அருமை நமக்குத் தெரியாது. உழைப்புதான் நம்மை அடையாளப்பத்துகிறது. சாக்பீஸ் என்பது என்ன? உழைப்பும் சுண்ணாம்பும் கலந்த கலவை. கணிணி என்பது என்ன? உழைப்பும் வன்பொருள், மென்பொருளும் கலந்த கலவை. நாம் பயன்படுத்தும் பொருள்களிலிருந்து உழைப்பை மைனஸ் செய்துவிட்டால் அங்கே மிஞ்சுவது வெறும் மூலப்பொருளே.

'தன் மனைவிக்கு 'ஏவாள்' எனப் பெயரிட்டான்.'

'ஏவா' என்றால் எபிரேயத்தில் 'பெண்' என்பது பொருள். சரியான பெயர்தான் பெண்ணுக்கு. ஆணின் விந்து ஒரு மனிதனுக்கு உடல் தருகின்றது என்றால், பெண்ணின் விந்து உயிர் தருகிறது என்பது எபிரேய நம்பிக்கை. பெண்தான் மனிதரின் உயிர், ஆற்றல் எல்லாம்.

இறுதியாக, தான் படைத்த தன் மகனை, தன் மகளை தன் தோட்டத்திலிருந்து, 'போத் ஆஃப் யூ, கெட் அவுட்' என்று சொல்லிவிடுகின்றார்.

இன்றைய நற்செய்தியில் வரும் புதிய ஏற்பாட்டு இயேசு பசியால் வாடி நின்றவர்கள்மேல் இரக்கம் கொண்டு, அப்பம் பலுகச் செய்கிறார்.

இதுதான் கடவுளின் இரண்டாம் முகம். பரிவு முகம்.

ஏதேன் தோட்டத்தை கண்டுபிடித்துவிட்டதாக சில பாஸ்டர்கள் டிவியில் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அதைத் தேடி அலைய வேண்டாம் நாம்.

நம் உள்ளமும், நம் இல்லமும்தான் ஏதேன் தோட்டம்? எப்போது? வாழ்வின் இரட்டைத்தன்மைகளை நாம் அறிந்து ஏற்றுக்கொள்ளும்போது.

'ஆண்-பெண்,' 'நன்மை-தீமை,' 'தலை-குதிங்கால்,' 'வேட்கை-ஆள்கை,' 'உழைப்பு-ஓய்வு,' 'வா-போ,' 'அதட்டல்-பரிவு' என்னும் இரட்டைத்தன்மைகளை அப்படியே ஏற்று வாழ்வதுதான் ஏதேன் தோட்டம்.

Thursday, February 9, 2017

விலக்கப்பட்ட கனி

இன்று மாலை டிவியில் இரண்டு கூட்டங்களைப் பார்த்தேன்.

பொதிகை டிவியில் மாலை 6 முதல் 7 வரை காட்டப்பட்ட மேல்மருவத்தூர் தைப்பூச ஜோதியைக் காணவந்தவர்களின் கூட்டம். இந்தக் கூட்டத்தின் மையமாக இருப்பவர் அருள்திரு பங்காரு அடிகளார். ஆதி பராசக்தி இவருக்குள் குடி கொள்வதால் இவரை 'அம்மா' என அழைக்கின்றனர். இவர் நடுவில் இருந்து ஜோதியை ஏற்றினார். ஏறக்குறைய 2 இலட்சம் பேர் இதை நேரிடையாகவும், தொலைக்காட்சி வழியாகவும் கண்டிருப்பார்கள். இவ்வளவு பெரிய கூட்டத்தின் முன் நிற்கும் இந்த 'அம்மா' அவர்களின் உள்ளத்து உணர்வு எப்படி இருந்திருக்கும்?

(மேல்மருவத்தூர் பக்தி பற்றி ஆய்வு செய்ய எனக்கு ரொம்ப நாள் ஆசை. விரைவில் செயல்படுத்த வேண்டும்)

இரண்டாவது கூட்டம் ஏறக்குறைய அனைத்து செய்தி சேனல்களிலும் காட்டப்பட்ட சசிகலா ஆதரவாளர்கள் கூட்டம். போயஸ் கார்டன் - மெரினா - ஆளுநர் மாளிகை என சசிகலா சென்ற இடங்களில் எல்லாம் நின்ற அல்லது நிற்க வைக்கப்பட்ட கூட்டம். இந்தக் கூட்டத்தைப் பார்த்தவுடன் சசிகலாவின் உள்ளத்து உணர்வு எப்படி இருந்திருக்கும்?

இந்த இரண்டு கூட்டத்திலும் ஒன்று மட்டும் வெளிப்படையாகத் தெரிந்தது.

இந்தக் கூட்டத்தின் நாயகர்கள் மட்டுமல்ல. இங்கிருந்த எல்லாருமே தங்களை கேமராவில் பதிவு செய்ய விரும்பினர். கேமரா தங்கள் பக்கம் திரும்பும்போது அவர்களின் செயல்பாடுகள் தங்கள் இருப்பை பதிவு செய்யும் விதமாக இருந்தன.

நிற்க.

கடவுள் தன் கேமராவுடன் ஏதேன் தோட்டத்திற்குள் வருகின்றார்.

தங்கள் இருப்பை பதிவு செய்ய விரும்பாத ஒரு இளைஞனும், இளவலும் தங்களுக்கென அத்தி இலைகளைத் தைத்துக்கொண்டு மரங்களுக்குப்பின் ஓடி மறைகின்றனர்.

இவர்களின் இந்தச் செயலில் இருந்துதான் மிகப்பெரிய இராணுவ உத்தி வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். போரின் போது காடுகளுக்குள் பயணம் செய்கின்ற அல்லது பதுங்குகின்ற வீரர்கள் தங்கள் உடல் முழுவதும் மரக்கிளைகளை அல்லது கிளைகள் போன்ற நிறம் உடைய ஆடையை அணிந்து கொண்டு மரமோடு மரமாக ஒட்டிக்கொள்வர் அல்லது நடந்து செல்வர்.

மனிதர்களாக நிற்க வேண்டியவர்கள் மரங்கள் போல நின்றனர் - ஆதாம், ஏவாள்.

ஓடியாடி விளையாட வேண்டியவர்கள் மரத்தோடு மரமாக ஒட்டிக்கொண்டு நின்றார்கள்.

இதுதான் கூட்டத்தில் நமக்கு ஏற்படும் உணர்வு.

நாம் நம் இயல்பை, தன்மையை மறந்து மற்றவரோடு ஒட்டிக்கொள்கிறோம்.

கூட்டம் எப்போதும் ஆபத்தானது.

மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாருக்குப் பின் கூட்டம் என்ன ஆகும்?

சசிகலா - ஓபிஎஸ் நாற்காலி சண்டைக்குப் பின் கூட்டம் என்ன ஆகும்?

'என் கூட்டத்தில் நீ இருந்தால்தான் உனக்கு மரியாதை, அடையாளம், அருள்' என கூட்டங்கள் எப்போதும் மற்றவர்களைத் தங்களிடம் அழைக்கின்றன. கூட்டத்தோடு இணையாதவருக்கு 'கிறுக்கன், முட்டாள், ஒத்துவாழ தெரியாதவர்' என்றெல்லாம் பெயரும் வைக்கப்படுகின்றன.

ஆனால், நாளைய நற்செய்தி வாசகத்தின் (காண். மாற்கு 7:31-37) இயேசு கூட்டத்தின் ஆபத்தை உணர்ந்தவராக இருக்கிறார். ஆகையால்தான் காதுகேளாத அந்த இனியவரை 'கூட்டத்தைவிட்டு தனியே அழைத்துச் செல்கின்றார்.'

இன்றைய தமிழக அரசியல் மற்றும் ஆன்மீகம் கூட்ட அரசியலாக, ஆன்மீகமாக மாறிவிட்டது.

யார் பின்னால் அதிக கூட்டம் இருக்கிறதோ அவர் முக்கியமானவர், நல்லவர் என்றெல்லாம் நம்புவதற்கு நம் மனம் பயிற்றுவிக்கப்படுகின்றது.

கூட்டத்திலிருந்து யார் ஒருவர் பிரிய முடிகிறதோ அவரே ஆன்மீக மற்றும் அரசியல்வாதி.

ஆதாமையும், ஏவாளையும் மரத்திலிருந்து பிரிக்க நினைக்கின்றார் கடவுள். ஆகையால்தான் அவர்களுக்கு தோலால் ஆடை அணிவிக்கின்றார்.

நீ யாரிடமும் ஒட்டிக்கொள்ளாதே ஆதாம், ஏவாள்!

ஒட்டிக்கொண்டு உன் அடையாளத்தைத் தேடினால் விலக்கப்பட்ட கனியை நீ உண்டுவிட்டாய்.


Wednesday, February 8, 2017

அவ(ர்க)ள் வெட்கப்படவில்லை

வெட்கம் - ஒரு வித்தியாசமான உணர்வு.

'இதைச் செய்ய உனக்கு வெட்கமாயில்லையா?' என்று இந்த வார்த்தையை அழுத்தமாகவும் பயன்படுத்தலாம்.

'போங்க...எனக்கு வெட்கமா இருக்க!' என்று இந்த வார்த்தையை ரொம்ப மெதுவாகவும் பயன்படுத்தலாம்.

அச்சம்இ மடம்இ நாணம்இ பயிர்ப்பு என்று சங்ககாலம் பெண்களின் உணர்வுகளைப் பட்டியலிடுகிறது. இவற்றில் நாணம் என்பதுதான் வெட்கம்.

நாளைய முதல் வாசகத்தில் 'ஆணும்இ பெண்ணும் ஆடையின்றி இருக்கின்றனர். ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.' நற்செய்தி வாசகத்தில்இ 'பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுவது நல்லதல்ல' என்று சொல்லி இயேசு தன்னை மறைமுகமாக 'நாய்' என அழைத்தாலும்இ சிரிய பெனிசியப் பெண் வெட்கப்படவில்லை.

'இதுதான் நான்!' என்று சொல்பவர்கள் வெட்கப்படத் தேவையில்லை. இப்படிப்பட்ட ஒரு வெட்கம் இல்லாத நிலைதான் அகுஸ்தினாரைஇ 'கன்ஃபஷென்ஸ்' என்ற நூல் எழுத தூண்டியிருக்க வேண்டும்.

'இதுதான் நான் - ஆனால் இப்படி இருப்பதை நான் உனக்கு தெரிவிக்க விரும்புவதில்லை' என்று சொல்பவர்கள்தாம் வெட்கப்படுவார்கள்.

'இதுதான் நான்!' என்று நாம் நம்மையே எப்போது காட்டுகிறோம்?

இறைவன் முன்னிலையிலும்இ நமக்கு நெருக்கமானவர்கள் முன்னிலையிலும்.

இவ்விரண்டு பேரும் நம்மை இருப்பது போல ஏற்றுக்கொள்கின்றனர்.

'அவமானம்' என்ற உணர்வு 'வெட்கம்' என்ற உணர்வோடு சேர்ந்தே போகிறது.

மிஷல் ஃபூக்கோ என்கிற மெய்யியல் அறிஞர்இ 'நாம் ஒரு வீட்டில் இருக்கிறோம். அந்த வீட்டின் சாவித்தூரம் வழியாக அடுத்தவர்கள் நம்மை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பார்க்கிறார்கள் என்ற அவமானமும்இ அதனால் வரும் வெட்கமும்தான் நாம் கொண்டிருக்கின்ற மரபுஇ பாரம்பரியம்இ கலாச்சாரம்இ நாகரீகம் அனைத்திற்கும் காரணம்' என்கிறார்.

'இதுதான் நான்!' என்று என்னையே அறிந்து கொள்ளஇ ஏற்றுக்கொள்ள முடிந்தால் எத்துணை நலம்!

Tuesday, February 7, 2017

உள்ளே வெளியே

எங்கள் குருத்துவப் பயிற்சியின் ஒரு பகுதியாக ஆன்மீக ஆண்டு என்ற ஒன்று உண்டு. அந்த ஆண்டில் நிறைய தியான பயிற்சிகள் நடைபெறும். ஒரு பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர் மூச்சுப் பயிற்சி நடத்தினார். இந்த மூச்சு பயிற்சியில் முக்கியமானது என்னவென்றால், 'நாம் மூச்சை உள்ளே இழுக்கும்போது அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, ஊக்கம் போன்ற நல்ல குணங்களை நம் உள்ளே இழுக்க வேண்டும். நாம் மூச்சை வெளியே விடும்போது கலக்கம், துன்பம், பயம், விரக்தி போன்ற கெட்ட குணங்களை வெளியே தள்ள வேண்டும்.'

இந்தப் பயிற்சியை தொடங்குமுன், 'எல்லாம் புரிந்ததா? எதுவும் டவுட்டா?' என்று கேட்டார் ஆசிரியர்.

'ஒரு டவுட்டு' என்று கைதூக்கினார் மாணவர் ஒருவர்.

'என்ன?'

'இல்லை. ஏற்கனவே இந்த உலகத்துல கலக்கம், துன்பம், பயம், விரக்தி நிறைந்து கிடக்கு. இதுல என்னிடம் உள்ளதையும் நான் வெளியேற்றி அழுக்கை கூட்ட வேண்டுமா? நல்லதை நான் உள்ளே இழுத்துக்கொண்டு கெட்டதை நான் வெளியே தள்ளினேன் என்றால் நான் சுயநலவாதியாக அல்லவா இருக்கிறேன். சுயநலத்தைக் கற்றுத்தருவதுதான் இந்தப் பயிற்சியின் நோக்கமா?'

சற்று நேரம் அமைதி.

நிற்க.

உள்ளே வருவது மனிதரை தீட்டுப்படுத்துவதில்லை. மனிதரிடமிருந்து வெளியே செல்வதுதான் தீட்டுப்படுத்துகிறது என்கிறார் இயேசு.

நாளைய முதல் வாசகத்தில் மனிதரைப் படைத்தல் நிகழ்வை வாசிக்கின்றோம். மனிதரை தன் உருவில் உருவாக்கும் இறைவன் அவரை ஏதேன் தோட்டத்தில் குடிவைக்கின்றார். இறைவனின் உருவைத் தாங்கிய மனிதருக்குள் எப்படி வந்தது தீட்டு?

தன் சமகாலத்து பரிசேயர்கள் தங்கள் உடலில் உள்ள தூய்மை கெட்டுவிடாது என்று பார்த்தார்களே தவிர, தங்கள் உள்ளத்து தூய்மை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

உள்ளம் என்பது நம் சிந்தனை.

பரத்தைமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு போன்றவை எல்லாம் இரண்டு முறை நடைபெறுகின்றன. ஒன்று மனிதரின் உள்ளத்தில். இரண்டு வெளியே செயலில்.

ஆக, உள்ளம் சரி செய்யப்பட்டால் வெளியே நடக்கும் செயலை சரிசெய்து விடலாம்.

Monday, February 6, 2017

கழுவாத கைகள்

பாலைவனத்தில் பயணம் செய்துவிட்டு வீட்டிற்குள் வரும் ஒருவர் கைகளைக் கழுவிவிட்டு சாப்பிட அமர வேண்டும். அதுதான் சுகாதாரம்.

ஆனால், வெளியில் பயணம் செய்யாத ஒருவர் சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவிவிட்டு அமர்ந்தால் அது மரபு.

நாலு பேரு நாலு நாள்கள் செய்வது எளிதாக மரபாகிவிடுகிறது.

பூசை வைக்கும் குரு காணிக்கையை ஒப்புக்கொடுத்ததும் கைகளைக் கழுவுகிறார்.

எப்படி வந்தது இந்த மரபு?

2000 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பலி உருவம் பெறத் தொடங்கிய வேளையில் நிறையப் பேர் காணிக்கை கொண்டுவந்திருக்கலாம். ஆடு, மாடு, கோழி, அரிசி, பருப்பு, தானியம் என வந்த காணிக்கைகளை குரு வாங்கியிருப்பார். இப்படி வந்த காணிக்கைகள் அவருடைய கைகளில் பட்டு அழுக்கானதால் கைகளைக் கழுவிவிட்டு திருப்பலியைத் தொடர்ந்திருக்கலாம்.

ஆனால், இன்று கைகள் கறை படும் அளவிற்கு காணிக்கைகள் வருவதில்லை.

இருந்தாலும் நாம் கைகளைக் கழுவுகின்றோம்.

இப்போது அதே செயலுக்கு புதிய அர்த்தம் கொடுத்து, 'என் பாவங்களைக் கழுவி என்னைத் தூய்மையாக்கும்' என்று குரு செபிக்க ஒரு செபத்தையும் கொடுத்து, இதே தண்ணீர் நம் அக அழுக்கை அகற்றுகிறது என்ற இறையியலையும் புகுத்திவிட்டோம்.

மரபை மீறுவதற்கு நாம் பயப்படுகிறோம். ஏனெனில் மரபைக் கடைப்பிடிப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. புதியதாக எதுவும் சிந்திக்கத் தேவையில்லை. ஏற்கனவே இருக்கும் ஒன்றை அப்படியே பின்பற்றினால் போதும். மேலும் மரபைப் பின்பற்றும்போது மற்றவர்களும் நம்மை எளிதாக ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆனால் இந்த மரபினால் பாதிக்கப்படும் மானுடம் இருக்கத்தான் செய்கிறது.

என் வீட்டு வாட்ச்மேன் சைக்கிள் ரிப்பேர் ஆகி உருட்டிக் கொண்டே போகிறார்.

அவருக்கு 50 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் அனுப்பலாம் என நினைத்தால்,

உடன் வந்தவர், 'அப்படிக் கொடுக்காதே! அதுவே பழக்கமாயிடும்!' என்று எச்சரிக்கை செய்கிறார்.

அப்படி என்றால் நல்லது செய்வதை பழக்கமாக்கிக்கொள்ளல் கூடாதா?

மரபு, வழக்கம், பழக்கம் என நாம் நினைக்கும் பல நம்மை அடிமையாக்கி விடுகின்றன.

நாளைய முதல் வாசகத்தில் இறைவனின் படைப்பு நிகழ்வை வாசிக்கின்றோம்.

படைப்பின் ஒவ்வொரு நாளும் புதுமை நிகழ்கின்றது. அங்கே மரபும், வழக்கமும், பழக்கமும் இல்லை.

மரபு நம் படைப்புத்திறனையும் அழித்துவிடலாம்.

கொஞ்சம் கவனமாயிருக்கணும் பாஸ்!

Sunday, February 5, 2017

ஆடைகளின் ஓரங்கள்

'அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள்.'

(காண். மாற்கு 6:53-56)

நம் ஆடைகளின் ஓரங்கள் ஆச்சர்யமானவை.

ஓரங்களைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.

ஓரத்தில தான கிழிஞ்சிருக்கு,

ஓரத்தில தான அழுக்காயிருக்கு என அவைகளை நாம் கண்டுகொள்வதில்லை.

ஓரத்தை வெட்டி எடுத்தாலும் பரவாயில்லை.

ஆனால், ஆடையின் ஓரங்களுக்கும் நலம்தரும் குணம் உண்டு என்பதைக் கண்டுகொள்கின்றது இயேசுவைப் பின்பற்றி வந்த கூட்டம்.

அவர்கள் தொட்டவுடன் பெற்ற நலம் ஆடையில் இருந்ததா?

இல்லை.

அவர்களின் நம்பிக்கையில்தான் இருந்தது.

நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு ஓரங்களும் மையமே.

இன்று நாம் கடவுளை 'மையப்படுத்தியே' பார்த்துப் பழகிவிட்டோம். ஆகையால் அவரை விளிம்புகளில் பார்க்க நம்மால் முடிவதில்லை.

'நான் உன்னைப் பார்க்க விரும்புகிறேன்'  என்ற அழகிய செபத்தை என் நண்பர் பெர்னார்ட் அவர்கள் அனுப்பியுள்ளார். இதன் ஆசிரியர் ஜான் மெக்கின்தி. ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்கிறேன் இங்கே:

'என் ஆசை உன்னைப் பார்க்க விரும்புவது.
உண்மையில் நீ யார் என்பதை.

உன்னைப் பற்றி நான் வாசிக்கும் போது என் மனம் உருவாக்கும் உருவத்தை அல்ல.
'வார்த்தை' என்ற வார்த்தையை நான் வாசிக்கும் போது என்னுள் உருவாகும் உணர்வை அல்ல.
என் தனிமையிலும், விரக்தியிலும், பயத்திலும், பாவத்திலும்என் மனம் கற்பனை செய்யும் கடவுளை அல்ல.

அடுத்தவர்கள் உன்னைப் பற்றிச் சொன்ன உன்னை அல்ல.
என் இளமைப் பருவத்தில் நான் உன்னைப் பின்பற்றத் தொடங்கியபோது
மேசை, கல்லறை, கல்லறைக்கு அப்பால் என்று நான் பின்பற்றிய உன்னை அல்ல.

மிக நேர்த்தியாக தலை சீவிய போதகர்கள் போதிக்கும் உன்னை அல்ல.
உன்னைப் பற்றி சண்டை போடுபவர்கள் வேகமாகச் சொல்லிக் கொள்ளும் உன் பெயரை அல்ல.

என் ஆசை எல்லாம் உன்னைச் சந்திப்பதே.
யார் கையிலும் சிக்கி கசங்கி விடாத உன்னைச் சந்திப்பதே.
அதிரச் செய்யும் உன்னை.
உன் எல்லா குணங்களாலும் அதிரச் செய்யும் உன்னை.

எல்லாப் புயல்களைவிட வலிiயான,
ஆனால் மிகவும் மென்மையான,
மிக நீண்ட பாலைநிலம் ஆன,
ஆனால் மிகவும் மெல்லிய மணல் துகளாக,
இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களைவிட கூட்டாக,
இருந்தாலும் ஒரு சின்ன புள்ளி மற்றும் டிஎன்ஏவின் நுணி போல.

இப்படிப்பட்டன உன்னைத்தான் நான் சந்திக்கவும், கேட்கவும் விரும்புகிறேன்.
நீ என்னைத் தேடுகிறாயோ,
அல்லது நான் உன்னைத் தேடுகிறேனோ,
அல்லது நீயும் நானும் ஒருவரை ஒருவர் சேர்ந்து தேடுகிறோமோ,
உன்னைச் சந்திக்கணும் நான்.

அந்த ஒரு சந்திப்பில்
நான் என்னையே நிறைவு செய்வேன்.
அந்த நிறைவே என் தொடக்கமாக இருக்கும்.

ஒளியின் ஒளியே
இந்த இருளின் ஆடைக்குள் வா!
வந்து ஒளிர்!
உனக்குப் பயப்படுகிறேன் நான்!
உன்னைக் காதலிக்கிறேன் நான்!

எனக்குப் பயப்பட ஒன்றுமில்லை.
ஆனால் காதலிக்க எல்லாம் இருக்கிறது...

இப்போதே வா!'

சீடரின் குணம்

'மலைமேல் இருக்கும் ஊர் மறைவாய் இருக்க முடியாது!'

கொடைக்கானல் மலையில் தங்கியிருந்து இரவில் சுற்றிலும் பார்த்தால் நிறைய விளக்குகள் எரிவது தெரியும். நின்று எரியும் விளக்குகள். நகர்ந்து கொண்டே இருக்கும் வாகனங்களின் விளக்குகள். ஆலய எல்.இ.டிக்கள், ஹோட்டல் விளம்பரங்கள் என நிறைய தெரிவது வானத்து நட்சத்திரங்கள் கொஞ்சம் இறங்கி வந்தது போல இருக்கும்.

தமிழில் 'உள்ளங்கை நெல்லிக்கனி,' 'வெள்ளிடை மலை,' 'கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு' என்ற சொல்லாடல்கள் உள்ளன.

அதாவது, நேருக்கு நேர் தெரிகின்ற ஒன்றை மறைக்க முடியாது.

இப்படித்தான் இருக்க வேண்டும் சீடரின் குணம் என்கிறார் இயேசு.

மற்றவரால் மறைத்துவிட முடியாத அளவிற்கு நம் குணம் உயர்ந்துவிட்டால் நாமும் ஒளிவீசலாம். இல்லையா?

'துன்பத்தால் மனஉறுதியும்,
மனஉறுதியால் தகைமையும்,
தகைமையால் எதிர்நோக்கும் விளையும்' (உரோ 5:3) என்ற பவுலின் வார்த்தைகள் இன்றைய காலை செபத்தில் வந்தன.

'தகைமை' என்றால் 'கேரக்டர்' அல்லது 'நடத்தை' என்று இன்று நான் கண்டுபிடித்தேன்.

ஆக, மனஉறுதிதான் என் நடத்தையை உருவாக்குகிறது.

ஒளியாக, உப்பாக இருப்பதும் ஓர்நாள் நிகழ்வு அல்ல. அது என் தொடர்நடத்தையால் வரும் பயன்.

Friday, February 3, 2017

கோதுமை மணி

நாளை தூய அருளானந்தரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஓரியூரின் ஒளிவிளக்காய் திகழ்ந்து மதுரை மற்றும் சிவகங்கை மறைமாவட்டங்களின் பாதுகாலராய் திகழும் அஞ்சா நெஞ்சரின் திருநாள்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் 'கோதுமை மணி' உருவகத்தை வாசிக்கின்றோம்: 'கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய...'

1. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிய வேண்டும்.
2. தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதவராக இருக்க வேண்டும்.
3. என்னை (இயேசுவை) பின்பற்ற வேண்டும்.

கோதுமை மணி

இயேசு சொல்லும் இந்த உருவகம் ஒரு விவசாய உருவகம். நாம் விவசாயம் செய்து விதைகள் விதைக்கும் போது, நாம் செய்யும் விவசாயத்தின் நோக்கம் நாம் தெளிக்கும் விதைகள் எல்லாம் நம் வயலின் மேல் கிடந்து அதை அலங்கரிக்க வேண்டும் என்பதா? இல்லை. விதைக்கப்படுகின்ற விதைகள் போராட வேண்டும். முதலில் விதை மண்ணோடு போராட வேண்டும். மண்ணைத் துளைத்து உள்ளே சென்று தன்னையே மறைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, தன்னை மறைத்துக் கொள்ளும் விதை மடிய வேண்டும். தன் இயல்பை முற்றிலும் இழக்க வேண்டும். மூன்றாவதாக, அதே போராட்டத்துடன் மண்ணை முட்டிக் கொண்டு மேலே வர வேண்டும். இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் விதையின் போராட்டம் தடைபட்டாலும் விதை பயனற்றதாகிவிடுகிறது. 'இல்லை! நான் என்னை மறைக்க மாட்டேன். கீழே போக மாட்டேன். என்னை எல்லாரும் பார்க்க வேண்டும்!' என்று அடம்பிடித்தால் வானத்துப் பறவைக்கு உணவாகிவிடும். அல்லது கதிரவனின் சூட்டில் கருகிவிடும். மடிய மறுத்தாலோ அல்லது போராடி உயிர்க்க மறுத்தாலோ அது மட்கிப்போய் விடுகிறது. இயேசுவின் வாழ்வையும் விதையின் இந்த போராட்டத்தைப் போலத்தான் இருக்கிறது: பாடுகள் படுகின்றார், இறக்கின்றார், உயிர்க்கின்றார். இயேசுவைக் காண விரும்பும் நம் மனநிலையும் இப்படித்தான் இருக்க வேண்டும். கோதுமை மணி போல மடிவது என்றால் நம் உயிரை மாய்த்துக்கொள்வது அல்ல. நாம் எதற்காக படைக்கப்பட்டோமோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது. நாம் விதியினாலோ. இயற்கையின் விபத்தினாலே வந்தவர்கள் அல்லர். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. வெறும் ஐந்து ரூபாய் கொடுத்து 10 நிமிடம் செல்லும் பயணத்திற்கே இலக்கும் நோக்கமும் இருக்கிறது என்றால் பல வருடங்கள் பயணம் செய்கின்ற நம் வாழ்க்கைப் பயணத்திக்கு இலக்கும், நோக்கமும் இல்லாமல் இருக்குமா? இயேசுவின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வாழ்க்கை 'சராசரி' வாழ்க்கையாக இருந்துவிடக் கூடாது. நம் முழு ஆற்றலும் வெளிப்படுகின்ற வகையில் நம் வாழ்க்கை ஓட்டம் அமைய வேண்டும். மாணவராக இருக்கிறோமா! முழு அர்ப்பணத்துடன் படிக்க வேண்டும். டாக்டராக, ஆசிரியராக, அன்றாட கூலியாக நாம் என்னவாக இருந்தாலும் அதில் நாம் முழுமையாக மடிய வேண்டும். பலன் தர வேண்டும்.

2. தமக்கென்று வாழ்வோர் - தமக்கென்று வாழாதோ

இரண்டாவதாக, இயேசு இரண்டு வகை மனிதர்களைக் குறிப்பிடுகின்றார்: 'தமக்கென்று வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுகின்றனர்', 'தம் வாழ்வை ஒருபொருட்டாகக் கருதாதவர் நிலைவாழ்வு பெறுகின்றனர்'. இரண்டும் ஒன்றிற்கொன்று தொடர்பு இல்லாததுபோல இருக்கிறது. இரண்டாவது வாக்கியம் லாஜிக் படி பார்த்தால், 'தமக்கென்ற வாழாதோர்' என்றுதானே இருக்க வேண்டும். இயேசுவின் இந்தப் போதனையின் நோக்கம் நாம் நமக்காக வாழ வேண்டுமா அல்லது பிறருக்காக வாழ வேண்டுமா என்பதல்ல. மாறாக, வாழ்வின் மேலான நம் கண்ணோட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதுதான். 'ஒருவர் உலகம் முழுவதும் தமதாக்கிக் கொண்டாலும், தன் வாழ்வை இழந்து விட்டால் அதனால் வரும் பயன் என்ன?' (மத்தேயு 16:26) என்னும் இயேசுவின் போதனை இப்போது முரண்படுகிறது போல தெரிகிறதல்லவா! வாழ்வை ஒரு பொருட்டாகக் கருதாதது என்றால் சரியாகக் குளிக்கக் கூடாது, நல்ல டிரஸ் போடக்கூடாது, எம்.பி.3 ப்ளேயரில் பாட்டுக் கேட்கக் கூடாது என்பதல்ல. மாறாக, எதற்கும் நான் உரிமையாளன் அல்ல என்ற நிலையில் வாழ்வது. நாம் நம் வாழ்விற்கும், நம் உயிருக்கும், நம் உறவுகளுக்கும் கண்காணிப்பாளர்கள் தாம். நம் மேலும், நம் உறவுகள் மேலும் நமக்கு உரிமையில்லை. நம் வாழ்வில் அருட்பணி நிலையில் ஒரு பங்கோ, பொதுநிலை வாழ்வில் கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ தரப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் மேல் ஆட்சி செலுத்துவதற்கும், உரிமை கொண்டாடுவதற்கும் அல்ல. மாறாக, கண்காணிப்பதும், பராமரிப்பதும் தான் நம் வேலை. 'எது இன்று உன்னுடையதோ, அது நாளை வேறொருவனுடையது!' என்ற கீதையின் சாரமும் இங்கே நினைவுகூறத்தக்கது. எதன்மேலும் உரிமையில்லை என்பதற்காக, 'வந்த மாட்டையும் கட்ட மாட்டேன், போன மாட்டையும் தேட மாட்டேன்' என்ற கண்டுகொள்ளாத மனநிலையிலும் இருந்துவிடக்கூடாது.

3. எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும்

இயேசுவின் சீடரோ அல்லது இயேசுவைக் காண விரும்புவரோ இருக்க வேண்டிய இடம் இயேசு இருக்கும் இடம்தான். ஒழுக்கம் என்றால் என்ன? 'இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய பொருள் இருப்பதும், செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டிய வேலையைச் செய்வதும்தான்!' உதாரணத்திற்கு, படிக்கின்ற மாணவர்கள் திங்கள் கிழமை காலை 10 மணிக்கு வகுப்பறையில் இருக்க வேண்டும் என்பது ஒழுக்கம். அதே மாணவர்கள் திங்கள் கிழமை 10 மணிக்கு தியேட்டரில் இருந்தால் அது ஒழுங்கீனம். இயேசு இருக்க வேண்டிய இடத்தில் அவரைத் தேடுவோரும் இருப்பதும், இயேசு கொண்டிருந்த மனநிலையைக் கொண்டிருப்பதும் தான் ஒழுக்கம். இயேசுவைப் பின்பற்றுவது என்றால் என்ன? பின்பற்றுவது அல்லது ஃபாலோ செய்வது என்றால் உடனடியாக நம் நினைவிற்கு வருவது டுவிட்டர்தான். டுவிட்டரில் நாம் சிலரைப் பின்பற்றுகிறோம். அல்லது சிலர் நம்மைப் பின்பற்றுகிறார்கள். நாம் யாரைப் பின்பற்றுகிறோமோ அவர்களின் கருத்தியலைப் பகிர்ந்து கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், படிப்பு, வேலை என எல்லாத் தளங்களிலும் நாம் சிலரைப் பின்பற்றுகிறோம். நாம் பின்பற்றும் நபர்கள் நம்மையறியாமலேயே நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். டுவிட்டரில் அடுத்தவர்களைப் பின்பற்றுவதற்கு மெனக்கெடும் நாம் இயேசுவைத் தேடுவதற்கும், பின்பற்றுவதற்கும் மெனக்கெடுவதில்லை என்பதுதான் வேதனையான விஷயம். அன்று கிறிஸ்தவராக மாறுவது கடினம். ஆனால் வாழ்வது எளிது. இன்று, கிறிஸ்தவராக மாறுவது எளிது. ஆனால், வாழ்வதுதான் கடினம்.

அருளும், ஆனந்தமும் தரட்டும் இந்தக் கோதுமை மணி!

Thursday, February 2, 2017

முறையல்ல

'உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறையல்ல!' (காண். மாற்கு 6:14-29)

நாளை திருமுழுக்கு யோவானின் கொலை பற்றிய நற்செய்தியை வாசிக்கின்றோம்.

'மனம் மாறுங்கள்' என்ற செய்தியை விடுத்து, திருமுழுக்கு யோவான் பேசியதாக பதிவு செய்யப்படும் அவரின் வார்த்தைகள் இதுதாம்:

'உன் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறையல்ல!'

ஜோசப் ப்ளேவியு அவரின் கருத்துப்படி இது ஒரு பெரிய குற்றச்சாட்டே அல்ல. ஏனெனில் அரசருக்கு தன் ஆளுகைக்கு உட்பட்ட அனைவர்மேலும் அனைத்து உரிமையும் கொள்ள அவருக்கு உரிமை உண்டு.

அவர் அரசர். அவ்வளவுதான். அந்த தகுதி போதும் அவருக்கு.
மேலும், ஏரோதியாவும் விரும்பிதான் ஏரோதுவோடு இருந்திருக்கிறார்.

ஆக, ஏரோது எந்த பலவந்தமும் செய்யவில்லை.

'உனக்கும் பிடிச்சிருக்கு. எனக்கும் பிடிச்சிருக்கு!' அவ்வளவுதான்.

'உனக்கும் பிரச்சினையில்லை. எனக்கும் பிரச்சினையில்லை!' அவ்வளவுதான்.

மேலும், ஒருதார முறை அந்த நாட்களில் புழக்கத்தில் இருக்க வாய்ப்பில்லை.

இயேசு தன் பணியை தொடங்க வேண்டும். திருமுழுக்கு யோவான் இறக்க வேண்டும். இந்த தேவையில் எழுதப்பட்ட ஒரு நிகழ்வாகத்தான் ஏரோது-ஏரோதியா-சலோமி-யோவான் நிகழ்வு அமைந்திருக்க வேண்டும் என்பது ஆசிரியர்களின் கருத்து.

நிற்க.

இந்த நிகழ்வு நமக்கு நிறைய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றது:

'எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் நாம் ஒருபோதும் அந்த நேரத்தில் ப்ராமிஸ் செய்துவிடவே கூடாது!' - ஏரோது

'எனக்கு எதிராக பேசிய ஒருவரை நான் பழிவாங்கும் எண்ணம் கொண்டிருத்தல் கூடாது!' - ஏரோதியா

'அரங்கில் உள்ள அனைத்து விருந்தினர்களையும் மகிழ்வித்த, நடனமாடிய எனக்கு என் சொந்த புத்தி எங்கே போனது? நான் ஏன் எதற்கெடுத்தாலும் என் அம்மாவிடம் ஓட வேண்டும்?' - சலோமி

'அமைதியா இருக்க வேண்டிய இடத்துல அமைதியா இருக்கணும். பேச வேண்டிய இடத்துல மட்டும் பேசணும்!' - தி.யோவான்.

Wednesday, February 1, 2017

அர்ப்பணம்

'அவர் புடமிடுபவர் போலவும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் அமர்ந்திருப்பார்.
லேவியரின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப் போல் அவர்களைப் புடமிடுவார்.
அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள்.'
(காண். மலா 3:1-4)

நாளை அர்ப்பணத்தின் திருநாள்.

ஆண்டவர் இயேசுவை அவரது பெற்றோர் எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நாள்.

இதை ஒளியின் திருநாள் என்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்று நம்மையே நாம் மெழுகுதிரியின் ஒளியாக இறைவனின் ஒளியில் கரைத்துக்கொள்கின்றோம்.

நாளைய முதல் வாசகத்தில் புடமிடும் உருவகம் தரப்பட்டுள்ளது.

அந்த உருவகத்தை மட்டும் இன்று சிந்திப்போம்.

'வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போல' அவர் அமர்ந்திருப்பார்.

கொல்லன் பட்டறையில் வெள்ளியைத் தூய்மைப்படுத்துவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இயல்பாகவே அழுக்குகள் நிறைந்திருக்கும் வெள்ளிக்கட்டி. அந்தக் கட்டியை நெருப்பில் இட்டு அந்தக் கொல்லன் அதைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அந்த வெள்ளி கண்ணாடி போல கொல்லனின் முகத்தை பிரதிபலிக்கும். அதுதான் சரியான பதம். அந்த நேரத்தில் அதை அவர் வெளியே எடுத்துவிட வேண்டும். அல்லது வெள்ளி நெருப்பில் கரைந்துவிடும்.

ஆக, கொல்லனின் முகத்தை பிரதிபலிக்கும் வரை நெருப்பில்  வெள்ளி இடப்படுவது அவசியம்.

அர்ப்பணம் என்பது நான் என் அருள்பொழிவு நாளன்று கொடுப்பதா?

இல்லை.

அன்று, நெருப்பில் நான் என்னையே இடுகிறேன். அதுமுதல் என் அர்ப்பணத்தை ஏற்றுக்கொண்டவர் என்னைப் பார்த்துக்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் என் இயல்பில் அவரின் முகம் என்னில் தெரியும். அப்போதுதான் என்னை நெருப்பிலிருந்து அவர் வெளியே எடுப்பார்.

ஆக, அர்ப்பணம் என்பது ஓர் அன்றாட நிகழ்வு.

இயேசு ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட நாள் அன்று அவரின் அர்ப்பணம் தொடங்குகிறது.

நம் கைகளில் மின்னும் எல்லா வெள்ளியுமே புடமிடப்பட்டு, மெருகூட்டப்பட்டு, வடிவமைக்குப்பட்டு நம் கைகளில் ஏறுகிறது.

இன்று என்னையே நான் கண்ணாடி முன் நின்று பார்ப்பது போல,

என்னையே கண்ணாடியாக மாற்றி நான் அவர் முன் நிற்க வேண்டும்.

அவரின் முகம் என்னில் தெரியத் தொடங்குகிறதா?