Sunday, January 31, 2016

சிமயி

நம்மிடம் மற்றவர்கள் கோபப்படும்போது,

நம்மை புரிந்து கொள்ளாதபோது,

நம்மிடம் பகைமை பாராட்டும்போது

நாம் எப்படி இருக்க வேண்டும்?

நாளைய முதல் வாசகத்தில் தாவீது இதற்கு விடையளிக்கின்றார்.

சிமயி என்பவன் தாவீதை, 'ரத்த வெறியனே! பரத்தையின் மகனே!' என சாடுகிறான்.

தாவீதுடன் இருந்தவர்கள் சிமயின் மேல் கோபப்படுகின்றனர்.

ஆனால் தாவீது ரொம்ப கூலாக இருக்கின்றார்:

சிமயி திட்டுவதை இரண்டு நிலைகளில் நேர்முகமாக பார்க்கின்றார் தாவீது:

ஒன்று, ஒருவேளை ஆண்டவரே இதைச் செய்யும்படி சிமியிடம் சொல்லியிருக்கலாம். இதுதான் தாவீதின் உச்சகட்ட நம்பிக்கை. நம் வாழ்வில் நடப்பது எல்லாவற்றுக்கும் காரணம் ஆண்டவர் என நினைப்பது.

இரண்டு, ஒருவர் செய்த தீங்கை ஆண்டவர் நமக்கு நன்மையாக மாற்றுவார்.


Saturday, January 30, 2016

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

இந்த வாரம் நான் இரசித்த பட்டினத்தார் பாடல் ஒன்றை இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

பட்டினத்தார் துறவு மேற்கொண்டு ஊர் ஊராய் சென்று கொண்டிருக்க, காவிரிப்பூம்பட்டிணத்தில் இருந்த அவரது தாய் இறந்து விடுகிறார். தன் தாய் இறந்த நிகழ்வை தானாகவே உணர்ந்து தன் சொந்த ஊர் வருகின்றார் பட்டினத்தார். இறந்த தாயின் உடலை தகனம் செய்வதற்காக ஊரார் ஏற்கனவே இடுகாட்டில் கூடியிருக்கின்றனர். 'பட்டினத்தார் வருவாரா? மாட்டாரா?' என எல்லாரும் கேட்டுக்கொண்டிருக்க, அங்கே வந்து சேர்கின்றார் பட்டினத்தார். தாயின் உடலைத் தகனம் செய்யுமாறு அவரின் கைகளில் கொள்ளியைக் கொடுக்கின்றனர். அந்த நேரத்தில் அவர் குரலெழுப்பி பாடிய பாடலே இது.

'எப்படி நான் தீ இடுவேன்?' என்ற கேள்விகளால் நிறைந்திருக்கும் இப்பாடல் பட்டினத்தாருக்கு தாயின் மேலிருந்த பாசத்தை நினைவுபடுத்துகிறது.

தாயின் பண்புகளாக அவர் நான்கைக் குறிப்பிடுகின்றார்:

அ. 'பையல் என்றபோதே பரிந்து எடுத்துச் செய்ய...'

'பிறந்திருப்பது பையன் என்றபோதே பரிவோடு எடுத்தார்' என்பது பொருள். 'பையன்' என்பதற்காக எடுத்தார் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. 'பரிவு' என்ற வார்த்தையைத்தான் நாம் இங்கே பார்க்க வேண்டும். ஒரு தாய்க்கு தன் குழந்தையின் மேல் ஏற்படும் முதல் உணர்வு அன்பு அல்லது பாசம் அல்ல. மாறாக, பரிவு. அதாவது, பரிவு என்ற வார்த்தையில் அடுத்தவரின் சார்பு நிலை அடங்கியிருக்கிறது. குழந்தையின் மேல் யார் வேண்டுமானாலும் அன்பு காட்டலாம். அல்லது, அன்பு செய்வதில் சார்பு நிலை தேவையில்லை. ஒரு குழந்தை தனக்கு வேண்டியதை தானே செய்து கொள்ள முடியாது. முற்றிலும் அடுத்தவரை சார்ந்தே அது இருக்கின்றது. அந்த சார்பு நிலைக்கு தாய் தரும் உடனிருப்பே பரிவு.

ஆ. 'வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்து என்னை காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகில் இட்டு தீ மூட்டுவேன்'

'வட்டில்' என்பது 'பிறந்தவுடன் குழந்தையை கிடத்தியிருக்கும் வட்ட வடிவமான தட்டு.' இது இன்றும் நகரத்தார் சமூகத்தவரால் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் கிடத்தும்போது குழந்தையின் தண்டுவடம் நேராகிறது. கழுத்தின் அமைப்பு, பின் தலையின் அமைப்பு நேராகிறது. வட்டில், தொட்டில், மார்பு, தோள், கட்டில் என்னும் வார்த்தைகள் ஒரு குழந்தை அடையும் வளர்ச்சியைக் குறிக்கின்றது. குழந்தையின் எல்லா வளர்ச்சியையும் சரியாகக் கவனித்து அதை அக்கறை எடுத்துப் பார்க்கிறாள் தாய். வட்டிலில் போட வேண்டிய குழந்தையை தோள்மேலும், தோள்மேல் போட வேண்டிய குழந்தையை தொட்டிலிலும் போட்டால் வளர்ச்சி எசகுபிசகாவிடும்.

மேலும், பரிவுக்கு அடுத்தபடியாக தாய் குழந்தையின் மேல் காட்டும் உணர்வு 'காதல்'. அதாவது, காதல் செய்யும் ஒருவர், தான் காதலிக்கும் நபர்மேல் சார்ந்திருக்கத் தொடங்குகின்றார். பரிவின் அடுத்த பரிணாமம் காதல். பரிவில் கீழிருப்பவர் மேல் நோக்கி சார்ந்திருக்கிறார். காதலில் மேலிருப்பவர் கீழ்நோக்கி சார்ந்திருக்கிறார். காதலும், பரிவும் ஒரு தாயின் இரண்டு பண்புகளாக இருக்கின்றன.

இ. 'அரிசியோ நான்இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசை இட்டுப்பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வதிரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு'

வாய்க்கு அரிசியிடல் என்பது சைவ அடக்கச் சடங்கின் ஒரு பகுதி. இதை கிறிஸ்தவ மரபிலும் சில இடங்களில் கடைப்பிடிக்கின்றனர். இந்த வாயினால்தான் தன் தாய் தன்னைக் கொஞ்சினாள் என நினைவுகூறுகின்றார் பட்டினத்தார்.

எப்படி வாழ்த்தினாராம் தாய்? ருசியுள்ள தேனே, அமிர்தமே, செல்வமே, திரவியமே, பூவே, மானே என வாய்நிறைய பட்டினத்தாரை அழைத்திருக்கின்றார் அவரின் தாய்.

மேலும், 'ஆத்தாள்' என்ற வார்த்தையை இங்கே பயன்படுத்துகின்றார். 'ஆத்தா' என்பது இன்றும் சிலர் அம்மாவை அழைக்க பயன்படுத்தும் வார்த்தை. 'ஆள்' ('ஆட்கொள்') என்ற வினைச்சொல், அல்லது 'அத்' ('பெற்றெடுத்தல்' என்று அர்த்தம் அக்காடிய மொழியில்) என்ற பெயர்சொல்லை தொடக்கமாகக் கொண்டு, இந்த வார்த்தை வந்திருக்கலாம். மேலும், பெண் தெய்வங்களுக்கும் இந்தப் பெயர்தான் முதலில் வழங்கப்பட்டது என்பதை மறந்துவிட முடியுமா? நாம் இன்றழைக்கும் மாரியம்மன், செல்லம்மாள் என்பவர்களெல்லாம் தொடக்கத்தில் மாரியாத்தா, செல்லாத்தா என இருந்தவர்கள்தாம்.

ஈ. 'முகம்மேல் முகம் வைத்து முத்தாடி என்றன்
மகனே என அழைத்த வாய்க்கு'

இன்றும் என் கிராமங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தையை தங்களுக்கு நேர்முகமாக பிடித்துக்கொண்டு, தங்கள் நெற்றியை குழந்தையின் நெற்றியோடு இணைத்து, 'முட்டு...முட்டு...' என விளையாடுவார்கள். இது 'முத்து...முத்து...' என்று அந்த குழந்தைக்கு கேட்கும். இந்த விளையாட்டில் குழந்தை அழகாக புன்முறுவல் செய்யும். இந்த விளையாட்டு சாதாரணமாக தெரிந்தாலும், இந்த விளையாட்டில்தான் தன் சிரிப்பை தன் குழந்தைக்குத் தருகிறாள் தாய். சிரிப்பு என்பது ஒரு பழக்கம். அதை நாம் கற்றால்தான் நமக்கு இயல்பாக வரும். மேலும், தாயின் முகம் குழந்தையினுள் அப்படியே பதிவதும் இந்த நேரத்தில்தான்.

இந்த விளையாட்டைத்தான் 'முகம்மேல் முகம் வைத்து முத்தாடி' என்கிறார் பட்டினத்தார்.

(இத்துடன் புழக்கத்தில் உள்ள இன்னொரு விளையாட்டு என்னவென்றால், குழந்தையை தாய் தன் முதுகில் போட்டு, தன் கழுத்துக்குப்பின் அதன் இரு கைகளையும் போட்டுக்கொள்வாள். குழந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு முன்னும் பின்னும் சாய்ந்து, 'சாய்ந்தாடம்மா...சாய்ந்தாடு...' என்று பாடுவாள். இந்த விளையாட்டில் குழந்தையின் கைகள் வலுப்பெறுகின்றன. மேலும், குழந்தையைப் பெற்றெடுத்தபின் பெண்களின் வயிற்றில் பதிந்திருக்கும் சுருக்கம் மறைகிறது. ஆக, இந்தக் குழந்தையில் தாயும், சேயும் ஒருசேர பயன்பெறுகின்றனர். இப்படி எளிதான வழிகளை விடுத்துவிட்டு, இன்று நம் மகளிர் ஜிம் நோக்கி விரைகின்றனர்.)

இறுதியாக,

'வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறுஆனாள் பால்தெளிக்க
எல்லாரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்...'

என முடிக்கின்றார்.

ஒரே பாடலில் தன் தாயின்மேலுள்ள பாசத்தையும், தான் சிவனுக்காக மேற்கொண்ட துறவையும் சொல்லி முடிக்கின்றார் பட்டினத்தார்.


Friday, January 29, 2016

ஏன் நடந்தது

தாவீது பெத்சபாவுடன் செய்த பாவத்தை சுட்டிக்காட்ட, இறைவன் நாத்தான் இறைவாக்கினரை அவரிடம் அனுப்புகிறான்.

அரசன் முன் எப்படி நேரிடையாகச் சொல்வது என யோசிக்கின்ற நாத்தான், 'ஒரு ஊருல...' என ஒரு குட்டிக் கதையையும் சொல்கின்றார்.

கதையின் முடிவில், 'அந்த மனிதன் கொல்லப்படவேண்டும்' என்று எழுகிறார் தாவீது.

'தம்பி...அந்த மனிதன் நீங்கதான்!' என நாத்தான் சொன்னவுடன்,

'நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன்!' என சரணாகதியாகின்றார் தாவீது.

இதுதான் தாவீதிடம் பாராட்டப்படவேண்டிய குணம்.

தாவீது நல்லவர்தான். அடுத்தவர்களை நீதியோடு நடத்த வேண்டும் என நினைப்பவர்தான். ஆகையால்தான், 'ஒரு ஆடுதான!' என்று சும்மா விடாமல், நீதியைக் காக்க துடிக்கின்றார். கொஞ்சம் சபலப்பட்டு மயங்கிவிட்டார்.

மதிய நேரத்துல அவர் தூங்கியிருந்தார்னா இவ்ளோ பிரச்சினை வந்திருக்காது.

பாவி மக! பெத்சபா! அந்த நேரத்துலதான் குளிக்கணுமா? விளக்கு வச்சதுக்கப்பறம் குளிச்சுருக்கலாம்?

சரி பரவாயில்லை! நடந்தது நடந்து போச்சு, நடக்காதது நட்டுனு போச்சு! என விட்டுவிடுவோம்.

நாத்தான் சொன்ன கதை பாதியில் முடிவதுபோல இருக்கிறதை கவனித்தீர்களா?

அதாவது, விருந்தினர் வந்தவுடன் ஏழைக்குடியாவனின் ஆட்டுக்குட்டியை எடுத்து விருந்து வைக்கிறான் பணக்காரன். ஆனால், தாவீது, அந்தக் குட்டியை குழம்பு வைத்து குடித்தது மட்டுமல்லாமல், குடியாவனையும் கொன்றுவிடுகிறார்.

இனி தாவீதுக்கு வருவதெல்லாம் கெட்ட நேரம்தான்.

'நீ யாருக்கும் தெரியாமல் செய்ததை நான் வெட்ட வெளிச்சமாக்குவேன்!' என்றும், 'உன் வீட்டை விட்டு வாள் நீங்காது!' எனவும் ஆண்டவர் சொல்லிவிடுகின்றார்.

இனி 2 சாமுவேல் நூல் இரத்தமயமாகவே இருக்கும்.

'பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா பிற்பகற் தானே வரும்!' என்பது உண்மைதான் போல!

உப்பைத் திண்ணவன் தண்ணி குடிச்சிதானே ஆகணும்!

(சோறு இருக்கும்போது உப்பை ஏன் திண்ணான்? - கேட்க வேண்டிய கேள்வி)

ஆனால், ஆண்டவர் பச்சிளம் குழந்தையை தாக்கியதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

அவர் ஆண்டவர். அவர் மனதுக்கு எது தோன்றுகிறதோ அதைச் செய்வார்.

நாம் ஒன்றும் கேட்க முடியாது.

இன்று மாலை வாக்கிங் போய் திரும்பியபோது ஒரு வீட்டின் முன் ஒரே கூட்டம். எங்கும் புகைமூட்டம். என்னவென்றால், மதியம் சமைத்துக்கொண்டிருந்த ஒரு வயதான பாட்டி அப்படியே பாதியில் இறந்துவிட, அடுப்பு பற்றி, அறை பற்றி, வீடே பற்றி எரிந்துவிட்டது.

'இதுதான் முதிர்வயது தனிமையின் சாபம்!' - என வெளியே நாலுபேர் பேசிக்கொண்டனர்.

இது ஏன் நடந்தது என்று நம்மால் கேள்வி கேட்க முடியவில்லையே!


Thursday, January 28, 2016

தனிஒருவன் தாவீது

'தனிஒருவன்' திரைப்படத்தில் சித்தார்த்-அபிமன்யுவிடம் (அர்விந்சாமி) மித்ரன் (ஜெயம் ரவி) பரிசு வாங்கும்போது, தன் கையில் கையுறை அணிந்திருப்பார். அந்த காட்சியில் இந்த கையுறை பெரிய விஷயமாக தெரியாது. ஆனால், இறுதிக்காட்சிளை விறுவிறுப்பாக்குவது, இந்த கையுறை அணிந்த காட்சிதான்.

திரைப்படங்களிலும், கதைகளிலும் கொடுக்கப்படும் ஒவ்வொரு டீடெய்லும் கதையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை.

ஆகையால்தான், சின்னச் சின்ன குறிப்புகள்கூட சின்னவை அல்ல 'details are not in detail' என்பார்கள்.

இந்தக் கூற்றை விவிலிய நிகழ்வுகளிலும் காணலாம்.

நாளைய முதல்வாசகம் (2 சாமு 11:1-4, 5-10, 13-17), முதல் ஏற்பாட்டின் கிலுகிலுப்பான பகுதிகளில் ஒன்று. நாம் அனைவரும் அடிக்கடி கேட்ட ஒன்றுதான்: தாவீது-பத்சேபா உறவு.

இதில் நான் இதுவரை கவனித்திராத இரண்டு சின்ன விஷயங்களை நான் இன்று பகிர்ந்து கொள்கிறேன்:

அ. 'தாவீது தூதரை அனுப்பி அவளை வரவழைத்தார். அப்பொழுதுதான் மாதவிலக்கு முடிந்து அள் தன்னைத் தூய்மைப்படுத்தியிருந்தாள். அவள் தம்மிடம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார்.'

இதில், அவளை வரவழைத்தார், உடலுறவு கொண்டார் என வேகமாக கதையை நகர்த்தியிருக்கலாம் ஆசிரியர். எதற்காக ஒரு இன்-பிட்வின் டீடெய்ல் - அவள் மாதவிலக்கு முடிந்து... - கொடுக்கிறார்?

இரண்டு காரணங்கள்?

ஒன்று, இப்போது தாவீதின் உறவினால் ஏற்படும் கர்ப்பத்திற்கு காரணம் தாவீது மட்டுமே.

இரண்டு, கொஞ்ச நேரத்தில் இங்கே அழைத்துவரப்படும் உரியா தன் வீடு செல்லவும், தன் மனைவியைத் தழுவவும் மறுப்பார். ஆக, உரியாவினால் விழைந்த கர்ப்பம் எனவும் சொல்லிவிட முடியாது.

தாவீது இப்போது பத்சேபாவினாலும், உரியாவாலும் கட்டம் கட்டப்படுகிறார். ஒருவேளை 'மாதவிலக்கு' பற்றிய அந்த வரி இல்லையென வைத்துக்கொள்வோம். வாசகர்கள் பத்சேபா வேறு ஆணிடம் அல்லது தன் கணவன் போருக்கு செல்லுமுன் நிகழ்ந்த உறவால் கர்ப்பம் தரித்திரிக்கலாம் என்று ஐயம் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆக, தாவீது மட்டுமே இந்த நிகழ்வுக்கு முழுக்காரணம் என்பதைக் காட்ட ஆசிரியர் இந்த தேவையற்ற, ஆனால் முக்கியமான டீடெய்ல் கொடுக்கிறார்.

ஆ. தாவீது உரியாவிடம், 'உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக்கொள்!' என்றார்.
... ...
உரியா தாவீதிடம், 'நான் மட்டும் வீட்டிற்குச் சென்று உண்டு குடித்தும், என் மனைவியோடு உறவுகொண்டும் இருப்பேனா! உம் மேலும், உம் உயிர்மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யவே மாட்டேன்!'

'பாதங்களைக் கழுவிக்கொள்' என்பதன் அர்த்தம் 'உடலுறவு கொள்' என்பது. 'பாதம்' என்பது 'ஆண்குறி' என்பதன் மங்கலச்சொல் (euphemism). 'கழுவிக்கொள்' என்பது இன்னும் செக்ஸியாக இருப்பதால் நானே சென்சார் செய்துகொள்கிறேன்.

மேற்காணும் உரையாடலில் ஆணையிடும் பகுதியைக் கவனித்தீர்களா?

வழக்கமாக, ஆணையிடும் பகுதியில், 'உம்மேலும், கடவுள்மேலும் ஆணை' (1 சாமு 26:10, 2 அர 4:30, எரே 5:2) என்றுதான் இருக்கும். ஆனால், இங்கே ஆசிரியர் கொஞ்சம் மாற்றி, 'உம்மேலும், உம் உயிர்மேலும்' என எழுதுகிறார்.

இந்த 'உயிர்' என்ற வார்த்தைதான் தாவீதை அவரின் அடுத்த செயலான கொலைக்கு தூண்டுகிறது. 'உயிர் னா சொல்ற! உன் உயிரையே எடுக்கிறேன்!' என உரியாவைக் கொல்வதற்கு திட்டம் வகுத்து, அதை உரியாவிடமே கொடுத்தனுப்புகிறார்.

ஆக, சின்னச் சின்ன குறிப்புகள்கூட சின்னவை அல்ல!


Wednesday, January 27, 2016

மனித வழக்கம்

மனித வழக்கம் இதுவல்லவே!

தாவீது இறைவனுக்கு ஆலயம் கட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்க, நாத்தான் இறைவாக்கினரை அவரிடம் அனுப்புகின்ற கடவுள், தானே தாவீதுக்கு வீடு ஒன்றை, அதாவது சந்ததி ஒன்றைக் கட்டி எழுப்புவதாக வாக்களிக்கின்றார்.

இதைக் கேட்டவுடன் ஆண்டவரின் இல்லத்திற்கு ஓடிச் செல்கின்ற தாவீது பாடும் நன்றிப்பாடலே நாளைய முதல் வாசகம் (2 சாமு 7:18-27)

ஆண்டவர் இதுவரை தமக்கும், தம் வீட்டாருக்கும் செய்த அனைத்தையும் பட்டியல் போடுகின்றார் கடவுள்.

தாவீதின் பாடலை கொஞ்சம் அரசியல் கலந்து பார்ப்போம்.

நேற்று 67ஆம் குடியரசு தின விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.

கடந்த வருடம் நம்ம பிக் பிரதர் ஒபாமா. இந்த வருடம் பிரெஞ்சு அதிபர் ஹாலந்தே.

நம் இந்திய பாதுகாப்பின் மேல் நம்பிக்கை இல்லாததால் என்னவோ, தானே தன் இராணுவத்தை அழைத்துவந்திருந்தார். மேலும், அந்த இராணுவத்தை நம் இராணுவத்தின் அணிவகுப்பில் சேர்த்ததுதான் கேலிக்கூத்து.

இன்னொரு கேலிக்கூத்து நம்ம ரஜனிக்கு பத்ம விபூஷன் விருது கொடுத்தது. அவர் நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். அவ்வளவுதான். மடையனுக! இதற்கெல்லாமா விருது கொடுப்பார்கள்? என்ன டயலாக் தனக்கு கொடுக்கப்படுகிறதோ, அதை வாசித்து சம்பளம் வாங்கப்போகிறவர் அவர். அவர் பேசும் டயலாக்கினால் என் வீட்டில் அல்லது உங்கள் வீட்டில் சோற்றுப்பானை பொங்கி வழியுமா? இன்னொரு கூத்து கேரளாவில். நடிகை ஊர்வசியின் அக்கா கல்பனாவின் (அவரும் நடிகைதான்) அடக்கத்தின் போது 21 குண்டுகள் முழங்க அரச மரியாதை வழங்கப்படுமாம். கலைக்கூத்தாடிகளின் உலகம் ஆகிவிட்டது கண்ணம்மா!

திரிபுரா குடியரசு தின விழாவில் பங்கேற்ற பெண் அமைச்சர் ஒருவர், 'எல்லாருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்' என முக்கா, முக்கா மூணு தடவை சொல்லிவிட்டார். பாவம் புள்ள. பாதித்தூக்கத்துல விழாவுக்கு வந்துருச்சு போல.

கடந்த வாரம் எஸ்.வி.எஸ். ஓமியோபதி கல்லூரி வளாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மூன்று மாணவியர், நாம் வாழும் குடியரசு என்னும் குட்டிச்சுவற்றைக் காட்டிவிட்டார்கள். தங்கள் உரிமைக்காக அவர்கள் 19 அரசு எந்திரங்களிடம் முறையிட்டிருக்கிறார்கள். யாரும் கண்டுகொள்ளவில்லை?

குடியரசு என்பது நம்ம ஊரில் தேர்தலோடு மட்டும் முடிந்துவிடுகிறது. குடிமக்கள் ஓட்டு போடுகிறார்கள். ஆனால், அரசு என்னவோ விளம்பரதாரர்களுக்கும், வியாபாரிகளுக்கும்தான் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் இப்போது தேர்தல் காய்ச்சல் அடிக்கிறது. திராவிட கட்சிகள் வழக்கம்போல ஒருவர் மற்றவரை வசைபாடிக்கொண்டும், தங்களைத் தாங்களே துதி பாடிக்கொண்டும் இருக்கின்றனர். இந்த இரண்டு கட்சிகளும் குடும்ப ஆட்சி நடத்துபவை என குற்றம் சுமத்துகின்றார் திருமா. விஜயகாந்த் இன்னும் ஸ்டெடி ஆகவில்லை. சீமான் போன்றவர்கள் எப்படியாவது அரசாண்டு பார்க்க நினைக்கிறார்கள்.

நம் எல்லாருக்கும் நடப்பது என்னவோ வேடிக்கையாகவே இருக்கிறது.

மேலே மோடி அடுத்த எந்த நாட்டிற்கு சுற்றுலா போவது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க பிரான்சுடன் ஒப்பந்தமாம்.

குடியரசு என்பது எட்டாக்கனியாக இருக்கிறது.

இந்த உலகிற்கு வருகிறோம். கொஞ்ச நாள் இருக்கிறோம். சுவடுகளே இல்லாமல் சென்று விடுகிறோம்.

கொஞ்ச நாள் இருக்கும் இந்த கொஞ்சப் பொழுதில் எவ்வளவு பிரச்சினைகள்?

ரொம்ப பாவம் நாம்!

தாவீதுக்கு தானே ஒரு வீட்டைக் கட்டுவதாக வாக்களித்த இறைவன் ஏனோ, நம் குடியரசை இந்த அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்றி நமக்கே தர மறுக்கின்றார்.


இடைவெளி

நேற்று கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.

ஒரு தாத்தா தன் பேரனின் விரலைப்பிடித்து பள்ளியிலிருந்து அவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தார்.

வழியில் ஃபாரக்ஸ் ஒன்று இருந்தது. அதாவது, அந்நிய பணமாற்று மையம்.

பேரன் தாத்தாவைப் பார்த்து, 'இது என்ன?' என்று கேட்டான்.

'நம்ம நாட்டுல யூரோ பயன்படுத்துறோம். ஒருவேளை அமெரிக்காவுக்கு டூர் போனா, நாம இங்க வந்து யூரோவைக் கொடுத்துவிட்டு, அமெரிக்க டாலர் வாங்கணும். ஏன்னா அமெரிக்காவுல டாலர் பயன்படுத்துவாங்க!' என்று சொன்னார்.

'நாம ஏன் அமெரிக்கா போகணும்?' என்று அடுத்த கேள்விக்கு தாண்டினான் பேரன்.

எனக்கு என் தாத்தா ஞாபகம்தான் வந்தது.

'பத்து ரூபாய்க்கு சில்லறை கேட்டு அவரது கடைக்குச் சென்றாலே, காச் மூச்சென்று திட்டுவார்!'

டாலர், யூரோவைப் பற்றி அவரிடம் கேட்டிருந்தால் அவ்வளவுதான்.

இதுதான் தலைமுறை இடைவெளி.

ஒரு காலத்தில் தன் மருமகள் வீட்டில் நைட்டி அணிவதைப் பொறுத்துக்கொள்ளாத மாமியார்கள், இன்று தங்கள் பேத்திகள் லெக்கிங்ஸ் போடுவதைப் பொறுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். (இப்போது ஜெக்கிங்ஸ் வந்துவிட்டது, அதாவது ஜீன்ஸ் மற்றும் லெக்கிங்ஸின் கலவை)

சரி. இதுல இருந்து என்ன சொல்ல வர்றீங்க!

ஒன்னும் சொல்லல! எல்லா நாளும் ஏதாவது சொல்லணுமா என்ன?

சின்ன ப்ரேக்.

Monday, January 25, 2016

என் பிள்ளை

நாளை திமோத்தேயு, தீத்து திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இவர்கள் ஆயர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டபோது, அல்லது பவுல் இவர்களை முதலில் தெரிந்துகொள்ளும்போது இவர்களுக்கு 18 முதல் 23 வயதுதான் இருந்திருக்க வேண்டும். பவுல் இருவரையும், 'என் பிள்ளை' என்றே அழைக்கிறார்.

இந்த இரண்டு பெயர்களையும் நினைத்தவுடன் எனக்கு இளவல்களின் உருவங்கள்தாம் கண்முன் வருகின்றது.

தொடக்கத்திருஅவையில் பவுல் நியமித்த முதல் ஆயர்கள் இவர்கள். இவர்களுக்கு பவுல் எழுதிய, அல்லது பவுல் எழுதியதாக சொல்லப்படுகின்ற திருமுகங்கள், மேய்ப்புப்பணி திருமுகங்கள் என அழைக்கப்படுகின்றன.

1. திமொத்தேயு

இருவரில் இவர்தான் பவுலுக்கு நெருங்கியவராக இருந்திருக்க வேண்டும். இரண்டு கடிதங்களில் மூன்று முறை பவுல் இவரை, 'பிள்ளையே,' 'மகனே' என அழைக்கிறார். மேலும், இவரின் குடும்பம் - பாட்டி லோயி மற்றும் அம்மா யூனிக்கி - பவுலுக்கு தெரிந்திருக்கிறது (2 திமொ 1:5). திமொத்தேயுவிடம்தான் பவுல் தன் வாழ்வின் இறுதிகட்ட நிகழ்வுகளைப் பற்றி மனம் திறக்கிறார். இன்று பல கல்லறைகளில் எழுதப்பட்டுள்ள பவுலின் வரிகள் எழுதப்பட்டதும் திமொத்தேயுவுக்கே: 'நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்' (2 திமொ 4:7).

ஒரு அருள்பணியாளராக நான் அடிக்கடி என்னையே திமொத்தேயுவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன். ஒரு அருட்பணியாளரின் வாழ்வு ரோஜா படுக்கை அல்ல என்பதை திமொத்தேயுவின் கடிதம் வெள்ளிடைமலையாகக் காட்டுகிறது. அருட்பணியாளரின் வாழ்வில் வரும் தனிமை, சோர்வு, உடல் உணர்வுகளின் போராட்டம், மற்றவர்களால் அவர் புறக்கணிக்கப்படுதல், உடல்நலமின்மை என அனைத்தின் உருவகமாக இருக்கிறார் திமொத்தேயு. இந்த பிரச்சினைகளைக் குறித்த இவர் தன் 'அப்பாவாகிய' பவுலுக்கு எழுதியிருக்க வேண்டும். ஆகையால்தான், பவுல் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வை தன் கடிதங்களில் எழுதியிருக்கிறார்:

'நீ இளவயதின் இச்சைகளை விட்டு ஓடிவிடு!' (2 திமொ 2:22)

'அனைத்திலும் அறிவுத்தெளிவோடு இரு. துன்பத்தை ஏற்றுக்கொள். நற்செய்தியாளனின் பணியை ஆற்று. உன் திருத்தொண்டை முழுமையாகச் செய்.' (2 திமொ 4:5)

'நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னை தாழ்வாக கருதாதிருக்கட்டும்' (2 திமொ 4:11)

'உன்மீது கைகளை வைத்து திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே!' (1 திமொ 4:14)

'வயது முதிர்ந்த பெண்களை அன்னயைராகவும், இளம் பெண்களை தூய்மை நிறைந்த மனத்தோடு தங்கையராகவும் கருதி அறிவுரை கூறு!' (1 திமொ 5:2)

'தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து!' (1 திமொ 5:23)

'உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தைவிட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது!' (1 திமொ 6:7)

2. தீத்து

தீத்து கொஞ்சம் இன்ட்டலெக்சுவல் டைப். இவருக்கான அறிவுரைகளில் 'நலந்தரும் போதனை' என்ற வார்த்தையை நான்கு முறை பயன்படுத்துகின்றார் பவுல்.

திமொத்தேயு, தீத்து - இருவரும் கிறிஸ்தவ மறையின் தொடக்ககால நம்பிக்கை நட்சத்திரங்கள்.

தங்களுக்கு கொஞ்ச வயதே ஆகி, குறைவான வாழ்க்கை அனுபவமே இருந்தாலும், அர்ப்பணத்தோடும், பிளவுபடா உள்ளத்தோடும், புன்னகையோடும், முணுமுணுக்காமலும் தங்கள் பணியைச் செய்தனர்.

இந்த இளவல்கள் எல்லா அருள்நிலை இனியவர்களுக்கும் முன்னோடிகள்.


எப்பொழுதும்

நாளை தூய பவுலின் மனமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

புதிய நம்பிக்கையாக வளர்ந்து கொண்டிருந்த நசரேய மதத்தை (கிறிஸ்தவம்) வேரறுக்க, கையில் வாளோடு புறப்பட்டவர், இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறார்.

ஆட்கொள்ளப்பட்ட அன்றே ஆள் புதிய மனிதராகின்றார்.

'நான்' என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும் மனம், இறைவன் பக்கம் திரும்பி, இனி எப்போதும் 'நீ' என்று சொல்வதுதான் மனமாற்றம்.

பவுல் இதை ஒருமுறை சொன்னது மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ்ந்தும் காட்டுகிறார். அதனால்தான் அவரால், 'வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்!' என சொல்ல முடிந்தது.

தன் பின்புலம், தன் திருச்சட்டம், தன் இனம், தன் உறவு, தன் தொழில், தன் விருப்பு-வெறுப்பு, தன் நண்பர்கள் வட்டம், தன் சொந்த ஊர் அனைத்தையும் விட்டுவிட அவரால் எப்படி முடிந்தது? அவரின் தைரியம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

இன்று நமக்கெல்லாம் மனமாற்றம் தேவையில்லைதான்.

நாம் பிறந்தவுடன் இயேசுவின் உடலுக்குள் திருமுழுக்கு பெற்றுவிட்டோம்.

இது மட்டும் போதுமா?

இல்லை.

மனமாற்றம் என்பது அர்ப்பணம்.

எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் வாக்குறுதி இது.

காலையில் 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து படிக்க வேண்டும் என்று தூங்கப்போய், 6 மணிக்கு அலாரம் அடிக்கும் போது, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்! என போர்வையை இழுக்க கை போகும்போது, 'வேண்டாம்' என்று என் மனம் சொன்னால், அது மனமாற்றம்.

அர்ப்பணத்தில் என்ன பிரச்சினை என்றால், அது நீண்ட காலம் நீடிக்க முடியாததுதான்.

மனமாற்றம் என்பது நீண்டகால அர்ப்பணம் (long-term or perpetual commitment).

இன்று நாம் வாழும் வியாபார உலகத்தில் எதுவும் நீண்டகாலம் இருப்பதற்கு உற்சாகப்படுத்தப்படுவதில்லை. இன்றைய மார்க்கெட் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு தேதியை குறித்து விடுகிறது. சீக்கிரம் முடிவு தேதி இருந்தால், சீக்கிரம் மக்கள் பயன்படுத்தி, சீக்கிரம் வியாபாரம் நடக்கும் என எல்லாமே நடக்கிறது. பால், தண்ணீர், பிஸ்கட், அரிசி, பருப்பு, கோக், தேன், மருந்து, பற்பசை, ரோஸ் பவுடர், மாய்சரைசர், எண்ணெய், க்ரீம், சீப்பு, சோப்பு, கண்ணாடி என எல்லாவற்றுக்கும் எக்ஸ்பைரி டேட் இருக்கிறது.

நாம் வாங்கிய இரண்டு நாட்களில், மற்றொரு புதிய பொருள் வந்துவிடுகிறது.

இது பொருட்களில் மட்டுமல்ல. நம் வாழ்க்கை மதிப்பீடுகளையும் முழுமையாக மாற்றிவிட்டது.

40 வருட திருமண வாழ்வு, 40 வருட ஆசிரியப் பணி என்றெல்லாம் இனி நாம் பெருமையடைய முடியாது. திருமணம், வேலை, நட்பு நீடிக்கும் காலமும் குறைந்துகொண்டே வருகிறது.

நாம் வாழும் நாட்களை கூட்டிவிட்டோம். ஆனால், இந்த நாட்களுக்குள் வாழும் வாழ்க்கையை குறைத்துவிட்டோம். இதுதான் பெரிய முரண்.

இன்று ஒருநாள் நான் குடிக்காமல் இருப்பதோ, திருடாமல் இருப்பதோ, இலஞ்சம் வாங்காமல் இருப்பதோ கஷ்டமல்ல. நீண்டகாலம் குடிக்காமலும், திருடாமலும், இலஞ்சம் வாங்காமலும் இருப்பதுதான் கஷ்டமாக இருக்கும்.

இப்பொழுதின் ஒவ்வொரு பொழுதும், 'நான்,' 'நீ' என இறைவன் பக்கம் நான் திரும்பினால், இப்பொழுது மட்டுமல்ல...எப்பொழுதும் மனமாற்றம், அர்ப்பணம் சாத்தியமே.


Sunday, January 24, 2016

கண்காணாதவை

கிறிஸ்து பிறப்பு கால திருப்பலி தொடக்கவுரையில் வரும் ஆறு வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை:

'ஏனெனில் வார்த்தை மனிதரானார் என்னும்
மறையுண்மையின் வாயிலாக உமது மாட்சியின் பேரொளி
எங்கள் மனக் கண்களுக்கு புதிதாய் ஒளி வீசியது.
எனவே, நாங்கள் கடவுளைக் கண்கூடாய்க் காண்கிறோம்.
அவர் வழியாகவே கண்காணாதவைமீதுள்ள அன்பு
எங்களை ஆட்கொள்கிறது!'

அதாவது,

கண்காணாத கடவுளை நாம் கண்கூடாகக் கண்டதால்
கண்காணாதவை மீதுள்ள பற்று அதிகமாகிறது!

என்னே அழகிய வரிகள்!

இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் நம்ம அகுஸ்தினார்தான்!

நாளைய இரண்டாம் வாசகத்தில் (1 கொரிந்தியர் 12:12-30) பவுலடியார் உடலின் உறுப்புகளின் ஒருங்கமைவை உருவகமாக முன்வைத்து ஒற்றுமை என்னும் பாடத்தைக் கற்பிக்கின்றார்.

கை, கண், காது, கால் என வெளியில் தோன்றும் உறுப்புக்களைப்பற்றிப் பேசினாலும், 'நம் மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்பு பெறுகின்றன!' என்கின்றார்.

உணவுக்கு ருசி கொடுக்கும் உப்பு
நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

காஃபிக்கு இனிப்பு கொடுக்கும் சர்க்கரை
நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

வானளாவ ஒரு கட்டடம் உயர்ந்து நிற்க, தன்னையே பூமிக்குள் மறைத்து நிற்கும் அடித்தளம்
நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

நாம் உண்ணும் உணவை நெறிப்படுத்தும் நம் உடலின் ஆய்வுக்கூடம்
நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

நம் உணர்வுகளின் இயக்கமாகிய மூளை
நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

நம் சுவாசத்தின் மையம் நுரையீரல், நம் இரத்த ஓட்டத்தின் மையம் இதயம் எதுவும்
நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

கண்ணுக்குத் தெரியாத இவைகள் மதிப்பு மிக்கவை இல்லையா?

நம் கண்களுக்கு முன் இருந்து, இன்று நம் கண்களில் இருந்து மறைந்து நிற்கும்

நம் அன்புக்குரியவர்களும் மதிப்பு மிக்கவர்களே!


Friday, January 22, 2016

மூவொரு உறவு

'நீ எங்கிருந்து வருகிறாய்?'

'போர்க்களத்திலிருந்து வருகிறேன்.'

'என்ன நடந்தது? சொல்!'

'வீரர்கள் பலர் ஓடினர். பலர் மடிந்தனர்.
சவுலும், யோனத்தானும் இறந்துவிட்டனர்!'

சவுலும், யோனத்தானும் இறந்த செய்தியை நேரிடையாக தாவீதுக்கு சொல்லத் தயங்கும் வீரன், 'எல்லாரும் இறந்துவிட்டார்கள்' என்று சுற்றி வளைத்து சொல்கிறான்.

ஆறாம் வகுப்பு அரையாண்டில் ஆங்கிலத்தில் நான் 16 மதிப்பெண்கள் வாங்கியிருந்தேன். வீட்டில் வந்து, 'நான் ஆங்கிலத்தில் பெயில்' என்று சொல்வதற்கு பயந்து கொண்டு, 'எங்க கிளாஸ்ல எல்லாரும் பெயிலு, நானும் பெயிலு!' என்று சொன்னது இன்னும் நினைவிருக்கிறது.

சவுல் மற்றும் யோனத்தான் இறந்த செய்தியை கேட்டு தாவீது புலம்பல் பாடல் ஒன்று இசைக்கின்றார். அதில் சில வார்த்தைகள் மிக அழகாக இருக்கின்றன:

'அன்புடையார், அருளுடையார்!'

'வாழ்விலும், சாவிலும் இணைபிரியார்!'

'சகோதரன் யோனத்தான்!'

'என் உள்ளம் உடைந்து போனது!'

'எனக்கு உவகை அளித்தவன் நீ!
என்மீது பொழிந்த பேரன்பை என்னென்பேன்!
அது மகளிரின் காதலையும் மிஞ்சியது அன்றோ!'

தாவீது யோனத்தானை மூன்று உறவு நிலைகளில் வைத்திருக்கிறார்: நண்பன், சகோதரன், காதலி

இரத்தம் மற்றும் திருமண உறவு வழியாக வராமல், மற்ற வழிகளில் நம் வாழ்விற்குள் வரும் உறவுகளுக்கு சில நேரங்களில் நாமும் பெயர் வைக்க முடிவதில்லை.

ஒரு சிலர் ஒரே நேரத்தில் இந்த மூன்றுமாகவும் இருப்பார்கள்.

இந்த மூவொரு உறவு நிலையை கம்பனும் பதிவு செய்துகின்றார்:

'பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்,
இருவரும் மாறிப்புக்கு, இதயம் எய்தினார்'

(கம்பராமாயணம், பால காண்டம், மிதிலை காட்சிப் படலம், 37)


Thursday, January 21, 2016

நல்லவராக

சவுலுக்கு கெட்ட நேரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

யாரோ ஒரு குரூப், வாட்ஸ்ஆப்பில், 'தாவீது உன்னைக் கொல்லத் தேடுகிறான்! கவனமாக இரும்!' என்று தட்டிவிட, அதை சீரியசா எடுத்துக்கொண்டு, அரச வேலைகளை விட்டு, காடு, மேடு என்று சுற்றி, தாவீதைத் தேடித் திரிகிறார் சவுல்.

சவுலுக்கு ஒன் பாத்ரூம் வர ஒரு குகைக்குள் நுழைகிறார். அந்த குகைக்குள் ஏற்கனவே ஒன் பாத்ரூம் போயிருந்த தாவீது, சவுலுக்கு தெரியாமல், சவுலின் ஆடையின் நுனியை தன் கத்தியால் வெட்டிவிடுகிறார்.

சவுல் வெளியே சென்றபோது, தூரத்தில் நின்று கொண்டு தான் அறுத்தெடுத்த துணியைக் காட்டி, தான் சவுலுக்கு ஒருபோதும் தீங்கு நினைப்பதில்லை என சத்தம் போட்டு அறிக்கையிடுகின்றார் தாவீது.

தாவீது ரொம்ப நல்லவராக இருக்கிறார்:

1. தீமை கிடைக்க வாய்ப்பு கிடைத்தும் தீமை செய்யாமல் இருக்கிறார். தாவீதின் நல்ல குணம் எனக்கு இரண்டு திருக்குறள் வரிகளை நினைவுபடுத்துகிறது:

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல் (203)

(அறிவினுள் சிறந்த அறிவு என்பது தமக்கு தீமை செய்தவர்க்கும் தாம் தீமை செய்யாது இருந்துவிடல்)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் (314)

2. 'Character is what you are in the dark' (நல்ல பண்பு என்பது நீ இருளில் எப்படி இருக்கிறாயோ அதுவே!)
யாரும் பார்க்கவில்லையென்றாலும் நாம் எப்படி நடக்கிறோமோ அதுதான் நம் கேரக்டர். அடுத்தவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக நல்லவர்களாக இருப்பதைவிட, எப்போதும் நல்லவர்களாக இருப்பது.

3. திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் கைவைக்க கூடாது. அதாவது, ஆண்டவரின் கை பட்ட ஒருவர்மேல் தன் கையை வைக்கக் கூடாது என்று இங்கே தாவீது ஆண்டவரின் அருள்பொழிவை மதிக்கிறவராக இருக்கின்றார்.

4. 'என் தந்தையே.' தனக்கு தீங்கிழைக்க வந்த சவுலை, 'அப்பா' என அழைக்கிறார் தாவீது. ஒரு தந்தை தன் மகனுக்கு தீங்கிழைக்கலாமா? அல்லது மகன்தான் தந்தைக்கு தீங்கிழைப்பானா? என நினைவுபடுத்துகிறார் தாவீது.

5. இறுதியாக, தன்னை செத்த நாய் என்றும், தௌ;ளுப்பூச்சி என்றும் தாழ்த்திக்கொள்வதோடல்லாமல், 'நீ அரசனுக்குரிய நிலையிலிருந்து உன்னையே தாழ்த்திக்கொள்ளலாமா?' என சவுலுக்கு, தன்மதிப்பை அறிந்துகொள்ளத் தூண்டுகிறார்.

சவுலும் தாவீதின் நல்ல உள்ளத்தை உடனே புரிந்து கொள்கிறார்.

'இன்று நீ எனக்கு செய்த நன்மைக்கு ஈடாக, ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக!
நீ அரசனாய் இஸ்ரயேலை உறுதிப்படுத்துவாய்!'

என வாயார தாவீதை வாழ்த்துகிறார்.

தாவீதும் சவுலின் வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இணைந்துகொள்கிறார்.

Wednesday, January 20, 2016

காற்றோடு வந்து


'பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்' என்று சொல்வது போல,

சவுலுக்கு அடுத்தடுத்து பிரச்சினை வருகிறது.

ஏற்கனவே அமலேக்கியரோடு ஏற்பட்ட போரில் கடவுளுக்கு கீழ்ப்படியாததால் அவரின் கோபத்தை சம்பாதித்த சவுல், இப்போது பொறாமை என்னும் தீயால் அலைக்கழிக்கப்படுகின்றார்.

'சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்.
தாவீதோ பதினாயிரும் பேரைக் கொன்றார்.'

என்று பாடி கடுப்பேத்துகின்றனர் பெண்கள்.

இப்படித்தான் நாம் சும்மாயிருந்தாலும், பல நேரங்களில் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் கும்மி அடித்து நம்மை கடுப்பேற்றுவார்கள்.

சவுல் இந்தப் பொண்ணுங்க வார்த்தையை ரொம்ப சீரியசா எடுத்துக்கொள்கிறார்:

'எனக்கு ஆயிரம் பேர் எனச் சொல்லி, தாவீதுக்கு பத்தாயிரம் என்று சொல்கின்றனரே' என்று எல்லாரிடமும் புலம்புகின்றார்.

இது பங்குத்தளங்களில் நடக்கும்.

சின்ன ஃபாதருக்கும், பெரிய ஃபாதருக்கும் இடையில் சண்டையை மூட்டிவிடுவதற்கு ஒரு கூட்டம் இருக்கும். 'சின்ன ஃபாதர் பூசை வச்சா கோயில் ஃபுல்லா ஆட்கள் இருக்காங்க. பெரிய ஃபாதர் பூசை வச்சா கோவில் காத்தாடுது' என்று சொல்லி உசுப்பேத்தி அழ வைப்பார்கள்.

சவுலின் பொறாமைக்கு காரணம் என்னவென்றால், தான் கேட்டதையெல்லாம் உட்கார்ந்து அசைபோட்டுக் கொண்டிருந்ததுதான்.

காற்றோடு வந்து நம் காதுகளில் விழுந்தவை காற்றோடு போகவேண்டும்.

அதைவிட்டுவிட்டு, சவுல் boy மாதிரி நாமும் பாய் விரித்துக்கொண்டு மல்லாக்கப் படுத்து யோசிச்சுக் கொண்டிருந்தால், வாழ்க்கை ரொம்ப கஷ்டமாகிடும் பாஸ்!


Tuesday, January 19, 2016

கவனின் பெயரால்

போர் மற்றும் சண்டைக் காட்சிகளை வர்ணிப்பதில் விவிலிய ஆசிரியர்கள் திறமை இல்லாதவர்கள். போர் மற்றும் சண்டை நடப்பதற்கு முன் அது பற்றி நிறைய பில்ட்-அப் இருக்கும். ஆனால், போர் அல்லது சண்டை சப்பென்று முடிந்துவிடும்.

நாளைய முதல்வாசகத்தில் (1 சாமு 17:32-33, 37, 40-50) இப்படியொரு சண்டையைத்தான் வாசிக்கின்றோம். தாவீது கோலியாத்தை எதிர்கொண்டு வெற்றிபெரும் நிகழ்வே நாளைய இறைவாக்கு பகுதி.

வாளோடு வானாளவ உயர்ந்து நின்றவனை, ஒரு கவன் மற்றும் கைத்தடியோடு எதிர்கொள்கிறார் இளவல் தாவீது.

'நீயோ வாளோடும், ஈட்டியோடும், எறிவேலோடும் வருகின்றாய்.
நானோ ஆண்டவர் பெயரால் வருகிறேன்!'

இதுதான் பஞ்ச் லைன்.

இது எனக்கு மகாபாரத நிகழ்வு ஒன்றை நினைவுபடுத்துகிறது.

பாரதப்போரில் பகவான் கண்ணன் (கிறிஷ்ணன்) யார்பக்கம் இருக்கிறார் என்று கேட்பதற்காக துரியோதனனும், தருமனும் கண்ணனின் வீட்டிற்கு செல்வர். கண்ணன் ஒய்யாரமாக தூங்கிக் கொண்டிருப்பார். துரியோதனன் வேகமாய் போய் கண்ணனின் தலைமாட்டில் அமர்ந்து கொள்வான். தருமன் கண்ணனின் காலடியருகில் அமர்ந்திருப்பான். தூக்கம் விழிக்கும் கண்ணனின் பார்வையில் தருமன்தான் படுவான். 'என்ன விடயம் தருமா?' என்று கேட்க, துரியோதனும், தருமனும் சேர்ந்து, 'நீர் போரில் யார் பக்கம்?' எனக் கேட்பர். கண்ணனோ, 'நீங்களே முடிவெடுங்கள். என் படைபலம், படைக்கலம் அனைத்தும் ஒரு பக்கம். நிராயுதபாணியாய் நான் மறுபக்கம். உங்களுக்கு எது வேண்டும்?' துரியோதணன் உடனே, 'உம் படைபலமும், படைக்கலங்களும் எனக்கு!' என்பான். தருமனுக்கு நிராயுதபாணியான கண்ணனைத் தேர்ந்தெடுப்பதை தவிர வேறு வழியில்லை. இருந்தாலும் மகிழ்வோடு வீடு திரும்புவான். போரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தாவீது செய்யும் ஒரு விடயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன்:

நீரோடையிலிருந்து, வழுவழுப்பான, ஐந்து கூழாங்கற்களை எடுத்துக்கொள்கிறான் தாவீது.

ஆனால், தாவீது பயன்படுத்துவது ஒரே ஒரு கல்லைத்தான்.

இங்கேதான் கடவுளின் வெற்றி மிக அழகாக சித்தரிக்கப்படுகிறது.

சின்ன வயதில் கவன் பயன்படுத்தி அணில் மற்றும் பறவைகளை அடித்து விளையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்:

அ. கவனில் வைக்கப்படும் கல் ஈரமாக இருக்கக் கூடாது. ஈரப்பசை இருந்தால் காற்றின் பதம் படுவதால் வேகம் குறையும். மேலும் கவனோடு கல் ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

ஆ. கவனில் வைக்கப்படும் கல் ஒரு பக்கம் கூர்மையாகவும், மற்ற பக்கம் தட்டையாகவும் இருக்க வேண்டும். கூர்மையான பகுதி முன்னோக்கி இருக்க வேண்டும். (விமானம் மற்றும் ராக்கெட் அறிவியிலில் இதே டெக்னாலஜிதான் பயன்படுத்தப்படுகிறது. முன்பகுதி கூர்மையாக இருந்தால்தான் வேகம் கிடைக்கும். காற்றை எதிர்த்துச் செல்ல முடியும்.)

இ. ஒரே நேரத்தில் ஒரு கல்தான் கவனில் ஏற்ற முடியும். ஆர்வக் கோளாறில் இரண்டு கற்களை வைத்து அடித்தால், கற்கள் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டு எதிரெதிர் திசைகளில் சென்றுவிடும்.

இப்போது தாவீது செய்ததைப் பார்ப்போம்.

அ. நீரோடையிலிருந்து எடுத்த கல் கண்டிப்பாக ஈரமாக இருந்திருக்கும்.

ஆ. வழுவழுப்பான கற்களை தாவீது எடுத்துக்கொள்கிறார்.

இ. ஐந்து கற்களை ஒரே நேரத்தில் வீசினால் ஏதாவது ஒன்றாவது கோலியாத்து மீது படும் என நினைக்கிறார். அதாவது, குருட்டாம் போக்கில் எறிய நினைக்கிறார்.

ஆனால், என்ன ஆச்சர்யம்?

பேசிக் கவன் டெக்னாலஜி பிழைத்தாலும், கடவுள் வெற்றி தருகின்றார்.

ஏனெனில் தாவீது தன் கவனின் பெயரால் வரவில்லை. மாறாக, கடவுளின் பெயரால் வருகின்றார்.

இன்று நான் வருவது கவனின் பெயராலா அல்லது கடவுளின் பெயராலா?


Monday, January 18, 2016

வியப்புக்களின் இறைவன்

சவுலைப் புறக்கணிக்கும் கடவுள், அடுத்த அரசராக தாவீதை திருப்பொழிவு செய்ய சாமுவேலை அனுப்புகிறார்.

நாளைய முதல் வாசகத்தில் இரண்டு இடங்களில் 'பயம்' இருக்கிறது:

அ. சாமுவேல் சவுல் இருக்கும் நாட்டிற்குள் செல்லப் பயப்படுகின்றார். ஓர் அரசன் ஏற்கனவே இருக்கும்போது, இன்னொரு அரசனை திருப்பொழிவு செய்வது எப்படி என்பதுதான் இவரது பயத்திற்கான காரணம். இந்த பயத்தை போக்க கடவுள் அவரை பலி செலுத்த செல்வதுபோல அனுப்புகிறார்.

ஆ. சாமுவேலைக் கண்டவுடன் மக்கள் பயப்படுகின்றனர். அதாவது, இறைவாக்கினரின் வருகை அவர்களுக்கு சமாதானத்தைக் கொண்டு வருகிறதா அல்லது போரைக் கொண்டுவருகிறதா என்ற பயம்.

தான் சமாதானத்திற்காக வந்ததாகச் சொல்கிறார் சாமுவேல்.

பலியிட எல்லாரும் வரும்போது, தாவீது மட்டும் தூர இருக்கின்றார்.

ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தவர் அருள்பொழிவு பெறுகின்றார்.

இறைவன் வியப்புக்களின் இறைவன் என்பது மீண்டும் இங்கே புலனாகிறது.


Sunday, January 17, 2016

எலய எடுடான்னா

நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு:

'எலய எடுடான்னா, தலய எண்ணுற வேலை உனக்கெதுக்கு?'

அதாவது, திருமண விருந்து முடித்து இலையை எடுடான்னு ஒருவனுக்கு வேலை கொடுக்கப்பட, அவன் அத்தோடு சேர்ந்து தலையையும் எண்ணிக்கொண்டிருந்தானாம்!

அதாவது, நமக்குச் சொல்லப்படும் வேலை ஒன்று. ஆனால் நாம் செய்யும் வேலை வேறொன்று.

இதை நம்ம ஊர் கடைகளில் நிறைய பார்க்கலாம்.

'நாம் 'ரின் சோப்' கொடுங்கள்!' என்று கேட்டால், கடைக்காரர், 'ஏரியல்' சோப் கொடுத்து, 'இது நல்லா இருக்கும் தம்பி!' என்பார். கடைக்காரர்கள் வாடிக்கையாளர்கள் கேட்பதை தரவேண்டுமே தவிர, தங்களிடம் இருப்பதை தரக்கூடாது. இல்லையா?

இப்படித்தான் நடக்கிறது நாளைய முதல்வாசகத்தில் (1 சாமு 15:16-23).

சவுலிடம், 'இலையை எடுடா' என ஆண்டவர் சொல்ல, அவரோ, 'தலையை எண்ணிக்கொண்டு' நிற்கிறார்.

அமலேக்கியருக்கு எதிரான போர். இதுதான் சவுலின் முதல் போர்.

அமலேக்கிய நாட்டிலுள்ள உடைமைகள், ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், பாலகர்கள், மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்றுவிடுமாறு சவுலுக்கு கட்டளையிடுகின்றார் இறைவன்.

இந்த இடத்தில் நமக்கு ஒரு கேள்வி வரலாம். அன்பும், இரக்கமும் உள்ள இறைவன் எப்படி எல்லா உயிர்களையும் கொல்லுமாறு சொல்லலாம்? வாக்களிக்கப்பட்ட நாட்டில் இஸ்ரயேலர் குடியிருக்கும்போது, அது நன்றாக அழித்து, சுத்தம் செய்யப்பட்ட புதிய கரும்பலகை போல இருக்க வேண்டும். இதற்காகத்தான் இந்தக் கட்டளை.

சவுல் அமலேக்கியரை வென்றாலும், தான் கண்டதில் சிறந்தவற்றையெல்லாம், தனக்கும், தன் வீரர்களுக்கும் என வைத்துக்கொள்கிறார் - பெண்கள், ஆடுகள், மாடுகள் போன்றவற்றில் சிறந்தவற்றை வைத்துக்கொண்டு, பயனற்றவற்றை அழித்துவிடுகின்றனர்.

இது ஆண்டவருக்குப் பிடிக்கவில்லை. சாமுவேலை அனுப்பி, 'தம்பி! ராசா! ஏம்ப்பா இப்படி செய்தாய்?' என்று கேட்டபோது, சவுல் ரொம்ப கூலா, 'இது எனக்கா! இல்லை கடவுளுக்கு பலி செலுத்த!' என்கிறார்.

ஆனால், இந்தக் காரணத்தை ஆண்டவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

சவுல் புறக்கணிக்கப்படுகிறார்.

மூன்று காரணங்கள்:

அ. தனக்கு எல்லாம் தந்தவர் கடவுள். இன்னும் தனக்கு தரவல்லவர் அவர் என்பதை சவுல் மறந்துவிட்டு, தன் கையிருப்பை பார்க்கத் தொடங்குகிறார்.

ஆ. 'அவர் சொன்னதைச் செய்துவிட்டு அமைதி காண்போம்' என்று இருப்பதற்கு பதிலாக, தானே ஒரு புதிய செயலைச் செய்து, அதை பலி என்ற பெயரில் நியாயப்படுத்துகிறார்.

இ. சவுல், கடவுளை மகிழ்ச்சிப்படுத்துதலை விட்டு, தனக்கு கீழ் இருக்கும் படைவீரர்களுக்கு அன்பளிப்பு கொடுத்து குஷிப்படுத்த நினைக்கிறார்.

இலையை எண்ணச் சொன்னாலோ, எடுக்கச் சொன்னாலோ,
இலையை மட்டும் எண்ணலாமே! எடுக்கலாமே!

Saturday, January 16, 2016

ஞானம் பெற்றவரே


'பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்துஇட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்றுநன் மங்கையரைத்
தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்
சேய்போல் இருப்பர்கண் டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!'

(பட்டினத்தார், பொது, பாடல். 35)

2016ஆம் ஆண்டில் எப்போதும் மனதில் நிறுத்தி வாழ வேண்டிய நன்மொழியாக எதை எடுக்கலாம் என தேடியபோது என் மனதில் நின்றதுதான் மேற்காணும் பட்டினத்தார் பாடல்.

கொஞ்சம் 'கடாமுடா கணேசா' பாடலாக இருந்தாலும், அதன் பொருள் மேன்மையாக இருக்கிறது.

முதலில் பாடலின் பொருள் உணர்வோம்:

1. 'பேய்போல் திரிந்து'
பேய் இருக்கும் என பட்டினத்தார் நம்புகிறார். பேயின் குணநலன் திரிவது. ஆனால், அர்த்தம் இல்லாமல் அது திரிவது கிடையாது. அதன் ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு இலக்கு இருக்கும். மேலும், எந்த ஒரு இடத்திலும் அது நிலைத்து நிற்காது.

2. 'பிணம்போல் கிடந்து'
நான் அலைந்து திரியும் வேலை எப்படி இருக்க வேண்டுமென்றால், நான் படுத்தவுடன் தூங்கிவிட வேண்டும். நான் படுக்கையில் எனக்கு தூக்கம் வரவில்லையென்றால், அன்று நான் வேலை செய்யவில்லை என்றுதான் அர்த்தம். படுத்துக்கொண்டே டிவி சேனல் மாத்துவது, புத்தகத்தை புரட்டுவது இதற்கெல்லாம் நேரம் இருக்கக் கூடாது.

3. 'இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி'
'பிச்சை' என என் உணவை ஏற்றுக்கொள்வது. அதாவது, உணவு ஒரு கொடை. நாய்போல மிச்சம் வைக்காமல், அல்லது எதிர்ப்பு சொல்லாமல் அருந்தி. மொத்தத்தில், குறைகாணாமல் உண்பது.

4. 'நரிபோல் உழன்று'
நரி ஒன்றைத்தான் சிங்கத்தால் கூட அடக்க முடியாதாம். அதாவது, 'நான் யாருக்கும் அடிமையல்ல!' என்பதில் உறுதியாக இருக்கக் கூடியது நரி. மேலும், நரி எந்த நேரத்தில் என்ன பிரச்சினை வரும் என்பதை முன்கூட்டியே அறியக் கூடியது. விவேகத்தோடு அதை எதிர்கொள்ளக் கூடியது.

5. 'நன்மங்கையரை தாய்போல் கருதி'
விவேகானந்தரிடம் இந்த பண்பும் இருந்தது. எல்லாப் பெண்களையும் தன் தாயைப்போல கண்டுபாவிப்பது. எல்லாப் பெண்களையும் தாயைப்போல பார்க்க எளிதான வழி, எல்லாருக்கும் குழந்தைபோல மாறிவிடுவதுதான். மேலும், இதயத்தில் எந்தவித உடல்-உணர்வு எதிர்பார்ப்பும் இல்லாமல் மங்கையரை - அவர்கள் நெருக்கமான நண்பியர் என்றாலும் - அணுகுவது.

6. 'தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி'
அடுத்தவர்களை உறவினர்களாய் காண்பது. இதைக் கண்டுணர தேவையான முக்கிய பண்பு தாழ்மை. நான் மற்றவர்களை ஒரு படி முன்னால் ஏறவிட்டு, படியில் ஒரு படி நான் பின்னால் ஏறுவதால் என் பயணம் மாறிவிடுவதோ, தடைப்படுவதோ இல்லையே!

7. 'சேய்போல் இருப்பர் கண்டீர்'
குழந்தையின் அடையாளமாக நான் காண்பது சிரிப்பு ஒன்றுதான். இன்று சிரிப்பு என்பது செல்ஃபி எடுக்கும்போது வருவது என்ற நிலைக்கு அரிதாகிவிட்டது. சிரிப்புகள் குறையும்போதுதான் நமக்கு வயதாகிறது. நான் இழந்த சிரிப்பை மீண்டும் நான் கண்டெடுக்க வேண்டும்.

'உண்மை ஞானம் தெளிந்தவரே!' என்பது இந்த ஏழு குணங்களைக் கொண்டிருப்பவரைக் குறிக்கிறதா அல்லது யாரிடம் பட்டினத்தார் இந்நேரம் பேசிக்கொண்டிருக்கிறாரோ, அவரைக் குறிக்கிறதா என்று தெரியவில்லை.இரண்டு பொருளிலும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

ஆக, இதைக் கொண்டிருப்பவரும் ஞானம் பெற்றவரே. இதைக் கொண்டிருக்க வேண்டும் என நினைப்பவரும் ஞானம் பெற்றவரே.


Friday, January 15, 2016

அன்போடு வேலை

கழுதையைத் தேடிச் சென்றவர் அரசராக வீடு திரும்புகிறார்.

நாளைய முதல் வாசகத்தை இப்படித்தான் சுருக்கி சொல்ல வேண்டும்.

இஸ்ரயேல் சமூகத்தின் முதல் அரசன் தேர்ந்தெடுக்கப்படும் விதம் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.

முதலில் சவுலையும் அவரின் உடல் அழகையும் வர்ணிக்கும் ஆசிரியர் தொடர்ந்து அவரின் குடும்பம் பற்றியும் குறிப்பிடுகின்றார்.

சவுலின் அப்பா வளர்த்த கழுதை காணாமல் போய்விடுகிறது.

3000 வருடங்களுக்கு முன் கழுதை காணாமல் போவது என்பது, இன்று நாம் வைத்திருக்கும் ஆடி அல்லது ரோல்ஸ் ராய்ஸ் அல்லது பெராரி அல்லது அல்லது ஜக்வார் காணாமல்போவது போல. ஆகையால்தான் அதைத் தேடும்படி தன் பணியாளர்களை மட்டுமல்லாமல் தன் மகனையும் உடன் அனுப்புகிறார் சவுலின் தந்தை.

அவர்கள் தேடுகிறார்கள். தேடுகிறார்கள். தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் சவுல், 'போனால் போகட்டும்' என திரும்பிவிட நினைக்கின்றார்.

ஆனால் அவரின் பணியாளர்தான், 'இல்லை. இன்னும் கொஞ்சம் முயன்று பார்க்கலாம்!' என்கிறார்.
பாதியில் திரும்பிவிட நினைக்கும் சவுலின் இந்தப் போக்கு அவரின் அரசாட்சிக்கு உருவகமாகக் கூட இருக்கலாம். நன்றாக ஆட்சி செய்து கொண்டிருந்த சவுல் பாதியிலேயே கெட்டவனாகிவிடுகிறார்.

செய்யும் வேலையை - கழுதையை தேடுவதோ அல்லது அரசனாக இருப்பதோ - முழுமையாகவும், இனிமையாகவும் செய்ய அழைக்கின்றது நாளைய முதல் வாசகம்.

இன்று, நாளை, மறுநாள் என நாம் திருநாட்கள் எடுத்து சூரியனுக்கு, இயற்கைக்கு, மாடுகளுக்கு என நம் உழைப்புக்கு உடன் நிற்கும் அனைத்திற்கும், அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.

இந்த நாளில் வேலை பற்றிய கலீல் கிப்ரானின் பாடல் ஒன்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்:

'அன்போடு செய்யப்படாத எந்த வேலையும் வெறுமையானதே.
அன்போடு வேலை செய்வதென்றால் என்ன?
உன் இதயத்திலிருந்து வரும் நார்களை எடுத்து,
உன் அன்பிற்குரியவர் அதை அணிவார் என்று அவருக்கு துணி நெய்வதே அது.
உன் அன்பிற்குரியவர் அங்கே குடிபெயர்வார் என வீடு கட்டுவது அது.
அன்பில்லாமல், வேண்டா-வெறுப்பாக வேலை செய்வதை விட,
கோவிலின் வெளியே அமர்ந்து, தன் வேலையை மகிழ்ந்து செய்யும் ஒருவரிடம் இரத்தல் நலம்.
நீ அன்பில்லாமல் சமைக்கும் ரொட்டி அடுத்தவரின் அரைப்பசியைத்தான் நிரப்பும்.
நீ பகைமையோடு தயாரிக்கும் திராட்சை ரசம் விஷம் போன்றது.
அன்பின் காணக்கூடிய வெளிப்பாடே வேலை.'


பொங்கல்

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

இன்று ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்பும்போது வந்த இரயிலில் இருந்த ஒரு செய்தித்தாளின் ஒரு வரி எனக்கு ரொம்ப பிடித்திருந்தது:

When nothing is SURE
Everything is POSSIBLE.

தை பிறக்கும் இந்த நாளில் எதுவும் தெளிவாக இல்லாததுபோல இருந்தாலும்,

எல்லாம் இனிமையாகட்டும்...

வாழ்த்துக்கள்.

Wednesday, January 13, 2016

ராசியான

கடந்த வாரம் என் பங்கில் திருப்பலி முடிந்து, வெளியே நின்று எல்லாரையும் வாழ்த்தி வழியனுப்பிக் கொண்டிருந்தபோது, ஒரு பெண்மணி தன் கையில் அணிந்திருக்கும் மோதிரத்தை ஆசீர்வதித்துக் கொடுக்கச் சொன்னார்.

திருமண மோதிரம் என்றால் ஜோடியாகத் தான் மந்திரிப்பர்.

இந்த மோதிரம் தனியாக இருந்தது. மேலும், எமரால்ட் என்று சொல்லப்படும் கல் பதித்து மிக அழகாக இருந்தது.

இந்த பெண்மணிக்கு இயல்பாகவே ராசிக்கற்கள் மேல் ஒரு நாட்டம் உண்டு.

தான் ஏற்கனவே ஒரு கல் வைத்த மோதிரம் வைத்திருந்ததாகவும், அது இருந்தால் தன் வாழ்வில் எல்லாம் நன்றாக நடக்கும் என்றும் சொன்னவர், அது தொலைந்து போனதாக சொல்லி வருத்தப்பட்டார்.

...
...

ராசியான கல். ராசியான நாள். ராசியான படம். ராசியான நேரம். ராசியான பை. ராசியான சட்டை. ராசியான கடிகாரம். ராசியான மோதிரம். ராசியான நபர். ராசியான முகம்.

நாமும் ராசியான பொருட்களை வைத்திருக்கிறோம்.

இவைகள் உண்மையில் ராசியைக் கொண்டுவருகிறனவா, அல்லது இல்லையா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட நம்பிக்கை.

நாளைய முதல் வாசகத்தில் (1 சாமுவேல் 4) இப்படித்தான் ஒரு நிகழ்வு நடக்கிறது.

பெலிஸ்தியருக்கு எதிரான போரில் இஸ்ரயேலர் தோற்கின்றனர்.

தோல்வியின் காரணம் என்ன என்று எல்லாரும் யோசித்தபோது, ஊர் பெரியவர்கள் எல்லாரும் சேர்ந்து, 'ஆண்டவரின் பேழை நம் நடுவில் இல்லாததால்தான் தோற்றுவிட்டோம்!' என கண்டுபிடிக்கின்றனர்.

உடனடியாக சீலோவுக்கு ஆள்கள் அனுப்பப்பட்டு, ஆண்டவரின் பேழையும் கொண்டுவரப்படுகிறது. பேழை வந்தவுடன் ஒரே ஆர்ப்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டம் கேட்டவுடன், எதிரிகளும் நடுங்குகின்றனர்.

'ராசியான பேழை நம்மிடம் இருக்கிறது' என்று தைரியமாக போரிடச் சென்றவர்களுக்கு இன்னும் அதிக பேரதிர்ச்சி காத்திருக்கிறது.

பேழை தங்களோடு இல்லாதபோது 4000 இஸ்ரயேலர்கள் இறந்தனர். இப்போது, ராசியான பேழை இருந்தபோது, 30000 இஸ்ரயேலர்கள் இறக்கின்றனர் (ஏறக்குறைய ஏழு மடங்கு பேரழிவு!).

கடவுள் இங்கே அவர்களுக்கு மூன்று விஷயங்களைக் கற்பிக்கின்றார்:

அ. வாழ்க்கையில் ராசியானது, ராசியற்றது என எதுவும் இல்லை. எது எது எந்தெந்த நேரத்தில் நடக்குமோ, அது அது அந்த நேரத்தில் நடக்கும். பிரகாஷ்ராஜ், 'மொழி' படத்தில் சொல்வதுபோல, 'வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை வெள்ளைப் பூண்டினால் கூட காப்பாற்ற முடியாது!'

ஆ. ஆண்டவரின் பிரசன்னம் மேஜிக் பிரசன்னம் அல்ல. வேளாங்கண்ணியில் சுனாமி வந்து, பலர் அழிந்தபோது, 'அங்கிருந்த மாதாவும், கடவுளும் மக்களை ஏன் காப்பாற்றவில்லை?' என பலர் விமர்சித்தனர். கடவுள் ஒரு இடத்தில் இருக்கிறார் என்பதற்காக, அங்கே எல்லாம் நன்றாக நடந்துவிடும் என்று பொருளல்ல. ஒரே நொடியில் கசப்பானவற்றை இனிப்பானவைகளாக மாற்றும் மந்திரவாதி அல்ல கடவுள்.

இ. அவரவரின் செயல்கள்தான் அவரவரின் முடிவைக் கொண்டுவருகின்றன. இஸ்ரயேல் பெலிஸ்தியரிடம் தோற்றதற்கு அவர்களின் கீழ்ப்படியாமையும், அவர்களின் குருக்களின் மகன்களின் கீழ்ப்படியாமையும்தான் காரணம். இந்தக் காரணத்திற்காகத்தான் கடவுள் அவர்களை பிலிஸ்தியரிடம் ஒப்புவிக்கின்றார். கடவுள் இரக்கமுள்ளவர்தாம். ஆனால், சில நேரங்களில் ரொம்ப ஸ்டிரிக்ட் ஆன பி.இ.டி. மாஸ்டராகவும் இருக்கிறார்.

Tuesday, January 12, 2016

சாமுவேல்

சிறுவன் சாமுவேல் இப்போது ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவரின் இல்லத்தில் வளர்கிறான்.

அவனுக்கு கடவுளின் வெளிப்பாடு அருளப்படுவதை நாளைய முதல்வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.

மூன்று விஷயங்களை நாம் இங்கே கவனிக்க வேண்டும்:

அ. விளக்கும் கண்களும். கடவுளின் ஆலயத்தில் விளக்கும் அணைந்தும், அணையாமல் மின்னிக் கொண்டிருக்கிறது. ஏலியின் கண்பார்வையும் மங்கிக் கொண்டிருக்கிறது.

ஆ. 'ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்!' - இப்படி போய் நீ சொல்! என சாமுவேலுக்கு கட்டளையிடுகிறார் ஏலி. ஆனால், சிறுவன் என்ன சொல்கிறான் கவனித்தீர்களா? 'பேசும்! உம் அடியான் கேட்கிறேன்!' என்கிறான். 'ஆண்டவரே' என்னும் வார்த்தையை விட்டுவிடுகிறான்.

இ. ஆண்டவர் பேசுகிறார். சாமுவேலும் கேட்கிறான். ஆனால், என்ன பேசினார் என்பது நமக்கு கொடுக்கப்படவில்லை.

...
...

சாமுவேலின் இறைவாக்குப் பணி வாழ்வில் இது முக்கியமான கட்டம்.

வீட்டிலிருந்து புறப்பட்டு ஆலயத்திற்கு வந்து இருந்தால் மட்டும் ஒருவருக்கு கடவுளின் இறைவாக்கு வந்துவிடாது. மாறாக, அவர், தானாகவே இறைவனின் குரலைக் கேட்க வேண்டும்.

அருட்பணியாளர்கள் மற்றும் பயிற்சி வாழ்விற்கும் இது பொருந்தும்.

இன்று (ஜனவரி 12) விவேகானந்தரின் பிறந்தாள் விழா.

அவரைப் பற்றிய ஒரு அழகான கட்டுரையை விகடன் இணையதளத்தில் வாசித்தேன்.

அ. துறவு என்பது அனைவரையும் சகோதர, சகோதரிகளாகப் பார்க்கும் பரந்த நிலை.
ஆ. மனதை ஒருமுகப்படுத்துவது. ஒருமுறை முடிவு செய்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்காமல் இருப்பது.

இ. தேக்க நிலையை அடையாமல் முன்னேறிக்கொண்டு இருப்பது. அறிவோ, ஆன்மீகமோ தொடர் தேடல் அவசியம்.

இந்த மூன்றும் நாளை சாமுவேலின் வாழ்வில் தொடங்குகிறது.

Monday, January 11, 2016

ஆறுதல் வார்த்தை

நேற்று மாலை என் பங்கு ஆலயத்தின் அருகில் இருக்கும் ஒரு முதியோர் காப்பகத்திற்கு திருப்பலிக்கு சென்றேன்.

அங்கிருக்கும் ஒரு பாட்டி (பெயர் தெரியவில்லை!) எனக்கு என் சின்ன அய்யாமையை அதிகம் நினைவுறுத்துவார். மிக அழகாக சிரிப்பார். மறதியில் அவதிப்படும் இவருக்கு, நான் சிரித்தவுடன் அவர் சிரிப்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

(நாம் பழகிய உருவங்கள் நம்மைவிட்டு மறைந்தாலும், புதிய இடத்தில் வேறோர் உருவத்தில் அதே குணங்களை நான் பார்க்கும்போதெல்லாம், மரணம் என்பது பொய் என்றே தோன்றுகிறது. நாம் யாரும் இறப்பதில்லை. வேறோர் இடத்தில் பிறக்கிறோம். பிறந்து கொண்டே இருக்கிறோம்.)

நேற்று என் கையைப் பிடித்துக்கொண்டு, 'என் மகள் ரோஸ் அன்னா வந்திருக்கிறாளா?' எனக் கேட்டார். கேட்டபோதே அவரின் கண்களில் கண்ணீர். 'வந்திருப்பார்கள்!' என்றேன் நானும். 'அப்படின்னா அவளை மேலே கூட்டி வா! அவள் பெயர் ரோஸ் அன்னா. 'ப்ளான்ட்' முடி இருக்கும். அழகாக இருப்பாள்!' என்றார்.

'கண்டிப்பாக கூட்டி வருகிறேன்!' எனச் சொல்லிவிட்டு திருப்பலி தொடங்கினேன்.

திருப்பலி முடிந்தவுடன் திரும்பவும் என்னிடம் தன் மகளை அழைத்து வரச் சொன்னார்கள். நானும் 'சரி!' எனச் சொல்லிவிட்டு, அங்கிருந்த காப்பாளரிடம், அவரின் மகளை அழைத்து வர ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டு வந்தேன்.

இன்று காலை கல்லூரிக்கு வரும்போது அந்த காப்பகத்தின் முன் ஆம்புலன்ஸ் நின்றது.

'என்ன?' என விசாரித்ததில், என்னிடம் பேசிய அந்த பாட்டி இறந்துவிட்டதாக சொன்னார்கள்.

...
...

அந்த பாட்டி தன் மகளை சந்தித்தார்களா? அல்லது ஏக்கத்தோடு இறந்து போனார்களா?

என்னிடம் அவர் ஒப்படைத்த பணியை நான் செய்யவில்லையோ?

என பல கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன என்னுள்.

'மனநிறைவோடு செல்.
இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வார்.'

கடவுள் முன் தன் மனத்தைக் கொட்டிய அன்னாவுக்கு மேற்காணும் வார்த்தைகளால் ஆறுதல் தருகிறார் குரு ஏலி.

அவரின் வார்த்தைகளை எந்த அளவுக்கு அன்னா நம்புகிறார் என்றால், தொடர்ந்து வாசிக்கின்றோம்:

'அன்னா தம் இல்லம் சென்று உணவருந்தினார்.
இதன்பின் அவர் முகம் வாடியிருக்கவில்லை.'

குரு சொன்னால் அது கடவுளே சொன்னதுபோல என எடுத்துக்கொள்கிறார் அன்னா. இதுதான் எளிய நம்பிக்கை.

மற்றொரு பக்கம் பார்த்தால், குருவின் வார்த்தைகள் ஆறுதல் தருவனவாக இருக்க வேண்டும் என்பதே ஏலி வைக்கும் பாடம்.

இன்று அருட்பணியாளர்களை நாடி மக்கள் வருகிறார்கள் என்றால், அதற்கு காரணம் அவர்கள் தரும் ஆறுதல் வார்த்தைக்காகவே.

இன்று நம்மை சுற்றி எவ்வளவோ வார்த்தைகள் இருக்கின்றன.

ஏராளமான வார்த்தைகளை நாம் வாசிக்கின்றோம்.

ஏராளமான வார்த்தைகளை நாம் கேட்கின்றோம்.

சில வார்த்தைகள் பயம் தருகின்றன. சில வார்த்தைகள் புதிய செய்தியை தருகின்றன. சில வார்த்தைகளைப் படித்துவிட்டு, 'ஐயோ! டைம் வேஸ்ட்' என சொல்கிறோம். சில வார்த்தைகளை நாம் குறிப்பெடுத்துக் கொள்கிறோம். சில வார்த்தைகளை நாம் அழிக்கின்றோம். சில வார்த்தைகளுக்கு நாம் காதுகளை மூடிக் கொள்கிறோம்.

ஆறுதல் தரும் வார்த்தைகள் இன்று மிக குறைவு.

அதை நாம் ஒருவர் மற்றவருக்கு தந்தால் நாமும் அருட்பணியாளர்களே!


Sunday, January 10, 2016

குழந்தைப்பேறின்மை

திருவழிபாட்டு ஆண்டின் கிறிஸ்து பிறப்புக் காலம் முடிந்து பொதுக்காலம் நாளை தொடங்குகிறது.

திருப்பலி திருவுடையின் நிறம் பச்சை.

நாளைய முதல் வாசகம், சாமுவேல் முதல் நூலின் தொடக்கம்.

நாம் கடந்த சில நாட்களுக்கு முன்னால் பார்த்த எல்கானா-அன்னா குடும்பத்தையே நாம் நாளையும் பார்க்கின்றோம்.

எட்டு வசனங்களே இருக்கும் நாளைய முதல் வாசகத்தில் அன்னா மலடியாயிருப்பது பற்றி நான்கு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார்.'

இதை வைத்து நாளை சிந்திப்போம்.

முதல் ஏற்பாட்டு சிந்தனையின்படி மனித உயிர் தோன்றுவதற்கும், மறைவதற்கும் காரணம் ஆண்டவராகிய இறைவன்.

அவரே கொடுக்கிறார். அவரே எடுக்கிறார்.

இதைத்தான் 'மக்கட்பேறு ஆண்டவர் அருளும் கொடை' என்கிறார் திருப்பாடல் ஆசிரியர்.

இந்த சிந்தனையின் அடிப்படையில்தான் கத்தோலிக்க திருஅவை, கருத்தடை, கருக்கலைப்பு, செயற்கை கருத்தரிப்பு என எல்லாவற்றிற்கும் எதிராக இருக்கின்றது.

நம் அறிவியில் மற்றும் விஞ்ஞானம் மனித உயிர் என்னும் மறைபொருள் முன் மண்டியிட்டே கிடக்கின்றது.

இன்று சில வீடுகளில் குழந்தைப்பேறின்மை பெரிய சாபமாக பார்க்கப்படுகிறது. அன்னாவின் குழந்தைப்பேறின்மை பற்றி பெனின்னாவும் கேலி செய்கிறாள்.

இப்படி நினைப்பதும் தவறுதான்.

எல்லாக் குழந்தைகளுக்காவும், குழந்தைப்பேறில்லாத பெற்றோருக்காகவும் சிறப்பாக செபிக்கலாமே!

நாம் இவ்வுலகிற்கு விட்டுச்செல்லும் ஒவ்வொரு மதிப்பீடும், ஒவ்வொரு முன்னேற்ற செயல்பாடும்கூட நாம் பெற்றெடுக்கும் குழந்தைகளே.

இது நம் கைகளில்தான் இருக்கிறது.


Saturday, January 9, 2016

திருமுழுக்கு

நாளை ஆண்டவரின் பெருவிழாவை கொண்டாடுகிறோம்.

பங்கில் அருட்பணியாளராக பணியாற்றுவதில் கிடைக்கும் பல மகிழ்ச்சிகளில் ஒன்று குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுப்பது.

நான் 2008 அக்டோபர் திருத்தொண்டராக பணியாற்றியபோதுதான் முதல் திருமுழுக்கு கொடுத்தேன்.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை.

நடைபெற்ற இடம் சலேத்து அன்னை திருத்தலம்.

குழந்தையின் பெயர் ஆரோக்கிய மேரி என நினைக்கிறேன்.

அதற்குப் பின் குழந்தைகள், பெரியவர்கள், தங்கை மகன், அத்தை மகளின் மகன் என எண்ணற்ற திருமுழுக்குகள்.

இத்தாலியில் திருமுழுக்கு கொடுக்கும்போது கொஞ்சம் நடுக்கமாக இருந்தது.

நம்ம ஊரில் குழந்தையின் தலையில் கொஞ்சம் நீர் ஊற்றுகிறோம். அவ்வளவுதான்.

ஆனால் இங்கே குழந்தையை அப்படியே தொட்டியில் இறக்கி எடுக்க வேண்டும். நான் தூக்கிய குழந்தை ரொம்ப கனமாக வேறு இருந்தது. இருந்தாலும் நல்ல முறையில் முடிந்தது.

குழந்தைகளைத் தொட்டு திருமுழுக்கு அருளடையாளம் கொடுப்பது மிக இனிமையான அனுபவம்.

ஏதோ, எனக்கே பிறந்த ஒரு குழந்தையை தொடுவது போல இருக்கும்.

சில குழந்தைகள் தூங்கும்.

சில குழந்தைகள் அழும்.

சில குழந்தைகள் சிரிக்கும்.

சில குழந்தைகள் வேடிக்கை பார்க்கும்.

சில குழந்தைகள் கையை நீட்டிக் கொண்டே இருக்கும்.

தண்ணீர் பட்டவுடன் சில குழந்தைகள் அழ ஆரம்பிக்கும்.

நாளைய திருநாள் என் பங்கு அனுபவங்களை அதிகம் நினைவுபடுத்துகிறது.


Friday, January 8, 2016

உடன் நிற்க

'மணமகள் மணமகனுக்கே உரியவர்.
மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார்.
அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார்.
என் மகிழ்ச்சியும் இது போன்றது.
இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது.
அவரது செல்வாக்கு பெருக வேண்டும்.
எனது செல்வாக்கு குறைய வேண்டும்.
(காண். யோவான் 3:22-30)

நாளைய நற்செய்தி வாசகத்தில் வரும் யோவானின் மேற்காணும் வார்த்தைகள் பெரிய வாழ்க்கை தத்துவத்தை நமக்கு சொல்லித் தருகின்றன.

'மற்றவர்களின் துன்பத்தில் அவர்களோடு உடன் நிற்க முடிகின்ற நம்மால், அவர்களின் மகிழ்ச்சியில் அவர்களோடு உடன் நிற்க முடியவில்லை.'

இது உண்மைதானே.

ஒருவர் அழுதால் அவரோடு சேர்ந்து நாம் அழ முடிகிறது. ஆனால், நம் அடிமனதில், 'அவரின் துன்பம் நமக்கு இல்லை' என்ற சின்ன சந்தோஷமும் மின்னி மறைகிறது.

ஒருவர் மகிழ்ந்தால், உயர்வு பெற்றால், நன்றாக இருந்தால், நாம் அவருடன் உடன் நிற்க முடிவதில்லை. நாம் அவரின் நிலையோடு நம்மை ஒப்பிடத் தொடங்குகிறோம். அந்த ஒப்பீடு பொறாமையாக உருவெடுக்கிறது. நமக்கு நாமே ஏதோ சமாதானம் சொல்லிக் கொள்ளவும் நினைக்கிறோம்.

இந்த உணர்வை நாம் வெல்லாவிட்டால், இது காலப்போக்கில் பெரிய மனவருத்தமாக, ஏமாற்றமாக நம்மில் உருவாகிவிடும்.

அதற்கு யோவான் தரும் பாடங்கள் மூன்று:

அ. 'நான் யார் என்று அறிவது.' நான் மணமகனின் தோழன்தான், மணமகன் அல்ல என்று ஏற்றுக்கொள்கிறோம். தன்னை அறிதல்தான் முதல் படி. 'நானும் மணமகன்தான்!' என்று நாம் சொல்ல நினைப்பதுதான் பல நேரங்களில் ஏமாற்றங்களுக்கு, அதீத எதிர்பார்ப்புகளுக்கு வழி வகுக்கின்றது. 'நானும் நல்லா படிப்பேன்!' 'என்னிடமும் அந்த ஃபோன் இருக்கிறது!' 'எனக்கும் அவங்களைத் தெரியும்!' 'நானும் நிறைய காசு வச்சிருக்கிறேன்!' என்று நாம் 'ம்' போடும் எல்லா வாக்கியங்களும், நாம் இன்னும் சரியாக நம்மை அறியவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஆ. 'இருக்கும் நிலையில் மகிழ்ச்சி காண்பது.' தோழனாய் இருப்பது தாழ்வாக இருந்தாலும், அதில் மகிழ்ச்சியைக் காண்பது மட்டுமல்லாமல், அந்த மகிழ்ச்சியில் நிறைவும் காண்கிறார். எங்கள் கல்லூரியில் ஒவ்வொரு டாக்டரேட் டிஃபென்ஸ் சமயத்திலும் மைக் ஏற்பாடு செய்யும் எங்கள் கல்லூரி பணியாளர் அந்தோனியோ ஒரு ஆச்சர்யமான மனிதர். அருள்பணியாளராக இருந்தவர். ஏதோ ஒரு காரணத்திற்காக அதிலிருந்து வெளியே வந்துவிட்டார். எங்கள் கல்லூரியில் படிப்பை தொடங்கியவர். பாதி வரைதான் அவரால் முடிக்க முடிந்தது. அட்மினிஸ்ரேடர் வேலை காலியாக இருந்ததால் படிப்பை விட்டுவிட்டு அவர் அதில் சேர்ந்துவிட்டார். அவர் மைக் ஏற்பாடு செய்யும்போதெல்லாம் எனக்கு இந்த கேள்வி வரும்: 'அடுத்தவரின் படிப்பு நிறைவிற்கு மைக் ஏற்பாடு செய்யும் இவர் தன் படிப்பு முடியாமல் போனதே என்று என்றாவது வருந்துவாரா?' இல்லை என்றே நினைக்கிறேன். தான் வாழ்வில் தோற்றுவிட்டோம் என்றோ, தாழ்ந்துவிட்டோம் என்றோ அவர் என்றும் எண்ணியதில்லை. தான் இருக்கும் இடத்தில், வேலையில் மகிழ்வைக் காண்பதோடு மட்டுமல்லாமல் அதை நிறைவாகவும் காண்கிறார்.

இ. 'அடுத்தவரின் வளர்ச்சிக்கு உதவுவது.' இந்தாண்டு புத்தாண்டு வாக்குறுதி எடுத்தபோது நான் இப்படி யோசித்தேன். 'புதிய மொழி' ஒன்றை நான் கற்பதற்கு பதிலாக, மற்றவருக்கு ஏன் புதிய மொழியை கற்றுக் கொடுக்கக் கூடாது? அடுத்து என்ன படிக்கலாம் என நினைப்பதற்கு பதிலாக, அல்லது தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பதற்கு பதிலாக, நான் ஏன் படிக்க இயலாத ஒருவருக்கு உதவக் கூடாது? அடுத்தவரைச் செய்ய வைத்து அழகு பார்ப்பதை நான் அருட்பணி. ஜான் பிரிட்டோ பாக்கியராஜ் அவர்களிடம்தான் கற்றுக்கொண்டேன். நான் பிரிட்டோ பள்ளியில் களப்பணியில் இருந்தபோது, 'எல்லாவற்றையும் நீங்களே செய்யுங்கள்' என்று எனக்கும், என் நண்பர் இஞ்ஞாசிக்கும் அவர் கொடுத்த ஊக்கம்தான் இன்று பல நேரங்களில் துணிச்சலாக முடிவெடுக்க உதவுகிறது. அவர் எங்களை எப்போதும் முன்னிறுத்தி, தான் திரைக்குப் பின் நின்று கொள்வார். எங்கள் வளர்ச்சியை அவரின் வளர்ச்சியாக நினைத்து உற்சாகமும் தருவார்.

அடுத்தவரின் கண்ணீரில் உடன் நிற்பதைவிட, மகிழ்ச்சியில் உடன் நிற்கலாமே!


Thursday, January 7, 2016

விரும்பினால்

நாளைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 5:12-16) இயேசுவிடம் வருகின்ற தொழுநோய் பிடித்தவர், 'ஆண்டவரே, நீர் விரும்பினால் (if you will) எனது நோயை நீக்க உம்மால் முடியும் (you can)!' என்கிறார்.

ஆங்கிலத்தில் 'modal verbs' என்னும் துணை வினைச்சொற்களில் 'to be able' ('முடியும்') மற்றும் 'to will' ('விரும்பும்') என்பதன் அர்த்தத்தை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இரண்டும் ஒன்றல்ல.

உதாரணத்திற்கு, நம்மால் இரவு முழுவதும் விழித்திருந்து படிக்க முடியும். ஒருவேளை அதற்கான விருப்பம் நம்மிடம் இல்லாமல் இருக்கலாம்.

நம்மால் மருத்துவமனையில் இருக்கும் நம் நண்பரை போய் சந்திக்க முடியும். ஆனால் விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.

நம்மால் முடிகின்ற காரியத்தை செய்வதைக் காட்டிலும், நாம் விரும்புகிற காரியத்தில்தான் நாம் நம் முழுத்திறனையும் வெளிப்படுத்த முடிகிறது.

நேற்று மாலை எலிசா பாட்டியுடன் காஃபி குடிக்கச் சென்றிருந்தேன்.

முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட தன் தங்கையை பார்த்து வந்த நிகழ்வைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.

தான் விரும்பாத ஒரு இடத்தில் தன் தங்கை இருப்பதை, அவரின் கண்கள் உணர்த்தியதாக அவர் சொன்னார்.

மேலும், நாம் எல்லாரும் நம் விருப்பப்படி செய்கிறோம். ஆனால் ஆண்டவரின் விருப்பம்தான் வெற்றி பெறும் என்பதை மறந்துவிடுகிறோம் என்றும் சொன்னார்.

அதற்கு அவர் சொன்ன ஒரு பழமொழி: 'ஆண்டவர் சனிக்கிழமை நமக்கு படியளக்கவில்லையென்றால், ஞாயிறு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது!'

நல்லா இருக்குல சொலவடை!

தொழுநோய் பிடித்தவருக்கு இயேசுவால் 'முடியும்' அல்லது 'முடியாது' என்பது பிரச்சினையல்ல.

இயேசுவுக்கு, 'விருப்பமா' அல்லது 'விருப்பமில்லையா' என்பதுதான் அவரின் தேடல்.

'நான் விரும்புகிறேன்' என்கிறார் இயேசுவும்.

நாம் ஓர் அடி எடுத்து வைக்க, கடவுள் இரண்டு அடி எடுத்து வைப்பார் என்பது இயேசுவின் செயலில் வெளிப்படுகிறது. 'கையை நீட்டி,' 'தொட்டு,' குணம் தருகின்றார்.


Wednesday, January 6, 2016

பெஃபானா

சனவரி 6ஆம் நாளை ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா என்று கொண்டாடுகின்றோம். வசதிக்காக, இந்த நாளின் முந்தைய ஞாயிறன்றும் இது கொண்டாடப்படலாம்.

இந்த நாளை இத்தாலியில் 'பெஃபானா' என்று சிறப்பிக்கிறார்கள்.

பெஃபானா என்பதற்கு மூன்று அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன:

அ. 'எபிஃபானியா' என்ற இத்தாலிய வார்த்தையை சரியாக உச்சரிக்கத் தெரியாமல், காலப்போக்கில் அது 'பெஃபானா' என்று மாறிவிட்டது.
ஆ. 'பெஃபானா' என்றால் 'முகம் மாற்றம்.' அதாவது, குழந்தை இயேசுவைச் சந்திக்க வந்த மூன்று ஞானியரும், அவரை சந்தித்துவிட்டு போய்விடுகின்றனர். குழந்தையை தேடி நான்காவது ஞானி ஒருவர் வருகிறார். அவர் ஏரோதின் கண்ணில் அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரு மூதாட்டியை போல தன் உடையை மாற்றிக்கொண்டு, குழந்தை இயேசுவைத் தேடுகின்றார். இவரால் இறுதிவரை குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆக, தான் கையில் கொண்டு வந்த பரிசுப் பொருட்களையெல்லாம் சின்னக் குழந்தைகளுக்கு கொடுத்துவிடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் இவர் இதே நாளில் குழந்தையைத் தேடுகிறார் என்பது பரவலான நம்பிக்கை.

இ. உரோமைக் கடவுள் ஸ்த்ரினா என்பவர் சூரியக் கடவுளின் பிறந்த நாளை முன்னிட்டு எல்லாருக்கும் பரிசுகள் கொடுப்பாராம். உரோமையில் கிறிஸ்தவ மதம் வேரூன்றிய போது, ஏற்கனவே அங்கு இருந்த மதத்தின் மற்றும் மக்களின் நம்பிக்கையை தன்வயமாக்கிக் கொள்கிறது. ஆக, கிறிஸ்தவம் சூரியக் கடவுளாக இயேசுவை உருவகித்து பிறந்த நாள் கொண்டாட, அதன் தொடர்ச்சியாக, ஸ்திரினா என்பவரும் 'பெஃபானா' என்று பெயர் மாற்றம் பெற்று உள்ளிழுத்துக்கொள்ளப்பட்டார்.

இன்றைய நம்பிக்கை

இன்று கடைகளில் இந்த மூதாட்டியின் பொம்மைகளை விற்கிறார்கள்.

மூதாட்டியின் கையில் ஒரு விளக்குமாறு இருக்கும். இவர் உடல் முழுவதும் கறுப்பாக இருக்கும்.

அதாவது, ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் குழந்தையைத் தேடி பறக்கின்ற இந்த மூதாட்டியின் வாகனம் விளக்குமாறு. மேலும், இவர் வீட்டிற்குள் புகைக்கூடு வழியாகத் தான் நுழைவார். ஆக, இவர் உடலெல்லாம் கறுப்பாய் இருக்கிறது. விளக்கமாறுடன் நுழையும் இந்த மூதாட்டி, வீட்டைத் துப்புரவு செய்து, குழந்தைகளின் சாக்ஸில் மிட்டாய்களை, பரிசுப் பொருட்களை - அவர்கள் சமத்தாக இருந்தால் - வைப்பார். குழந்தைகள் சுட்டியாக இருந்தால் விளக்குமாற்றின் ஒரு குச்சியை அல்லது கரிக்கட்டையை வைத்துவிடுவார்.

மேலும், இந்த பாட்டிக்கு சாப்பிட கொடுப்பதற்காக, எல்லா வீடுகளிலும் இன்று மேசையில் ஒரு கிளாசில் ஒயினும், ஒரு தட்டில் அந்தந்த ஏரியா ஸ்பெஷல் ஸ்வீட்டும் வைப்பார்கள்.

இந்த மூதாட்டி ஒவ்வொரு புதிய ஆண்டின் பிரச்சினைகளையும் தன் விளக்குமாறால் பெருக்கி வெளியேற்றிவிடுகின்றார் என்பதும் நம்பிக்கை.

புதிய அர்த்தம்

அ. சாக்ஸ். மனித உடைகள் வளர்ச்சி பெறத் தோன்றிய காலத்தில், கைப்பைகள் உருவாகக் காரணமே காலில் அணியும் சாக்ஸாகத்தான் இருந்தது. அதாவது, குளிரிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள மக்கள் தங்கள் பாதங்கள் மற்றும் காலை மறைக்கும் அளவிற்கு தோல் மற்றும் துணி ஆடைகளை அணிந்தனர். மேலும், தங்களின் மதிப்பிற்குரிய பொருட்களை இந்த சாக்ஸில் மறைத்து வைத்தனர். மேலும், பாட்டிமார்களின் சுருக்கு பை போல இருந்தது இந்த சாக்ஸ். ஆகையால்தான், இன்றைய நாளில் வழங்கப்படும் பரிசுப் பொருட்கள் சாக்ஸில், அல்லது சாக்ஸ் போன்ற வடிவ பைகளில் வழங்கப்படுகின்றன.

ஆ. பாட்டி. பாட்டியின் பண்பு கொடுப்பது. பாட்டிமார்கள் மிக ஆச்சர்யமானவர்கள். அவர்கள் வாழ்வை வாழ்ந்து முடித்தவர்கள். இதுவரை தாங்கள் கை நீட்டி பெற்றதை, அவர்கள் இனி கைவிரித்துக் கொடுப்பார்கள். ஆகையால்தான், கொடுத்தல் மையப்படுத்தப்படும் இந்த நாளில் மனித சிந்தனை பாட்டி என்ற உருவத்தை எடுத்திருக்கிறது. அம்மா, அப்பா பிள்ளைகளுக்கு கொடுப்பதில் ஒரு ரிசர்வேஷன் இருக்கும். அதாவது, எல்லாவற்றையும் அப்படியே கொடுத்துவிட மாட்டார்கள். நம் நண்பர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களின் கொடுத்தலில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு ஒளிந்திருக்கும். ஆனால், இந்த பாட்டிகள் அப்படியில்லை. அவர்களுக்கு கொடுத்தலில் எதிர்பார்ப்பு இருக்காது. பொறாமை இருக்காது. மற்றவர்கள் கிள்ளிக் கொடுக்கும்போது, இவர்கள் மட்டும் அள்ளிக் கொடுப்பார்கள்.

(நான் இந்த இடத்தில் என் அய்யாமை (அப்பாவின் அம்மா) மற்றும் சின்ன அய்யாமை (அப்பாவின் சித்தி) இவர்களை நினைத்துப் பார்க்கிறேன். என் அய்யாமை தன் முதிர்ந்த வயதிலும், வயலில் வேலை பார்த்து சேர்த்த பணத்தை தன் மகன்களிடம் கூட கொடுப்பதில்லை. அதை அப்படியே எனக்கும், என் தங்கைக்கும் கொடுப்பார். தனக்கென்று ஒரு புதிய சேலையைக் கூட வாங்காமல், இருந்த இரண்டு சேலைகளையே மாற்றி, மாற்றி அணிந்து, எங்கள் எல்லாரையும் உடுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தவர் அவர். இப்படி உங்கள் வீட்டிலும் உங்கள் பாட்டிமார் இருந்திருப்பார்கள்.

தமிழ் மொழி பேரன், பேத்தி என அழைப்பதற்கு காரணம் என்ன? இவர்கள்தாம் தங்கள் மூதாதையரின் பெயரை எடுத்துச் செல்லக் கூடியவர்கள் - பெயரன், பெயர்த்தி. ஆக, இந்த பேரன், பேத்திகள்மேல் பாட்டிகளுக்கு கொள்ளைப் பிரியம்.

இ. விளக்குமாறு. நம்ம ஆம் ஆத்மி இதை தேர்தல் சின்னமாக வைத்து நன்றாக தொடங்கினார்கள். ஆனால், மிக மோசமாக சொதப்பிவிட்டார்கள். இன்று நம் வீடுகளில் புகைக்கூடுகள் இல்லை. ஆனால், நம் இறந்து போன முன்னோர் இன்றும் நம் கூரை வழியே இறங்குகின்றனர். நம் வீடுகளை எல்லா பிரச்சினைகளிலிருந்தும் துப்புரவு செய்கின்றனர்.

ஆக, நம் வாழ்வின் அஸ்தமனத்திலும் நாம் அழகாயிருக்க முடியும்.

நம் முகத்தில் சுருக்கம் தோன்றினாலும், உள்ளம் நேராக இருக்கும்.

நம் தலைமுடி நரைத்தாலும், கொட்டினாலும், நம் அன்பும், தியாகமும் கறுத்து நிற்கும்.


Tuesday, January 5, 2016

தண்டு வலிக்க

'பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது.
ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார்.
அப்போது எதிர்க்காற்று அடித்தது.
சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர்
கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்.
அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார்.'

(காண். மாற்கு 6:45-52)

'பொழுது சாய்ந்த பிறகும்' என்று குறிப்பிடுவதன் வழியாக மாற்கு, நடக்க கூடாத ஒன்று நடந்து கொண்டிருந்தது என அர்த்தம் கொடுக்கிறார். அதாவது, பொழுது சாய்ந்துவிட்டால் படகுகள் கரையில் ஒதுங்கவிட வேண்டும். ஆனால், இங்கே படகு இன்னும் நடுக்கடலில் இருக்கின்றது.

இரண்டு வகை துன்பங்கள் வருகின்றன:

ஒன்று, எதிர்க்காற்று.
மற்றொன்று, சீடர்களின் சோர்வு.

சீடர்கள் கரைக்கு செல்ல முயன்று கொண்டிருக்க எதிர்க்காற்று குறுக்கே நின்றிருக்கலாம். எதிர்க்காற்றுக்கு எதிராக துடுப்பு போட்டதில் அவர்களின் தண்டுவடம் வலித்திருக்கலாம்.

'தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக்' காண்கிறார் இயேசு.

இந்த சொல்லாடல் எனக்கு பிடித்திருக்கிறது.

எப்போது நமக்கு தண்டு வலிக்கும்?

அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருக்கும்போது.

அல்லது ஸோஃபாவில் அமர்ந்து கொண்டு குனிந்து ஐபேட் அல்லது மொபைலின் டச் ஸ்க்ரீனைத் தடவிக் கொண்டிருக்கும்போது.

அல்லது அளவுக்கு அதிகமான சுமைகளை கைகளில் எடுத்துக்கொண்டு, நாம் ஏற வேண்டிய எஸ்4 பெட்டி எண்ணை நோக்கி வேகமாக நடந்து ஓடும்போது.

அல்லது 'டக்குனு' திரும்புனேன் - அப்படியே புடிச்சிகிடுச்சு என்று சொல்லும் நிகழ்வு நடக்கும்போது.

அல்லது 'பாவி மக என்ன கனம் கனக்குறா?' என்று நம் காதலியைத் தூக்கிவிட்டு, மேல்மூச்சு, கீழ்மூச்சு விடும்போது.

அல்லது கட்டிலின் மெத்தை சீராக இல்லாதபோது.

அல்லது குளிர்ந்த தரையில் தூங்கும்போது.

அல்லது நம் சீடர்களைப் போல எதிர்க்காற்றில் துடுப்பு போடும்போது.

இவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் சீடர்களை நோக்கி வரும் இயேசுவைப் பற்றி மாற்கு இன்னொரு விடயத்தையும் குறிப்பிடுகின்றார்.

அதாவது, தன் சீடர்களின் துன்பம் கண்டு அவர்களை நோக்கி வருகின்றார் இயேசு.

ஆனால், வந்தவர் அவர்களிடம் சேராமல் அவர்களைக் கடந்து போக விரும்புகின்றார்.

(கடைசியில் அவர் அவர்களின் படகில் ஏறிவிடுகின்றார்)

ஆனால் இயேசு படகில் ஏறாமல் இருந்திருக்கலாம். மாற்கு ஏன் முதலில் ஏற்றாமல் பின் ஏற்றுகிறார்? இதில் முக்கியமான இறையியலை நாம் கவனிக்க வேண்டும். மாற்கு தன் நற்செய்தியை இயேசுவின் இறப்பு, உயிர்ப்புக்கு பின் எழுதுகின்றார். இயேசு இங்கே உடலோடு இனி இருக்கப்போவதில்லை. ஆக, உடலோடு இல்லாத இயேசு படகில் ஏறுவது சாத்தியமில்லை.

இயேசுவின் பிறப்பு விழாக் கொண்டாட்டத்தை நாளை திருக்காட்சி பெருவிழாவோடு நிறைவு செய்கிறோம். என்னதான் குடில் வச்சி கொண்டாடினாலும், அவர் நம் நடுவில் தன் உடலோடு இல்லை.

ஆனால், எப்போதும் அவர் நம் படகைக் கடந்து போய்க்கொண்டே இருக்கிறார்.

நாம்தான் அவரை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

அப்படி அடையாளம் காணும்போது அவர், 'துணிவோடிருங்கள், நான்தான் அஞ்சாதீர்கள்!' என்பார்.



Monday, January 4, 2016

பயிற்சி

'நாம் பேசுவதற்கு இரண்டு வயதுக்குக்குள் பழகி விடுகிறோம்.
ஆனால் பேசாமல் இருப்பதற்கு வாழ்நாள் முழுவதும் பயிற்சி தேவைப்படுகிறது!'

எங்கோ வாசித்த ஒன்று இது.

இரண்டு நாட்களுக்கு முன் அதிமுகவின் கொ.ப.செ. நாஞ்சில் சம்பத் ஏதேதோ பேசப்போய், இப்போது பதவியிழந்து நிற்கிறார்.

எல்லாமே ஒரு பழக்கம்தான் இல்லையா. அதாவது, என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதற்கு நமக்கு பயிற்சி தேவைப்படுகிறது.

நான் பணித்தளத்தில் இருந்தபோது, சில நேரங்களில் 'பேசியிருக்க வேண்டுமோ!' என்றும், பல நேரங்களில் 'பேசியிருக்க கூடாதோ!' என வருந்திய தருணங்கள் உண்டு.

சில நேரங்களில் ஞானம் காலம் பிந்தியே வருகின்றது.

நேற்றைய காலை செபத்தின் இரண்டாம் வாசகப் பகுதியில் அகுஸ்தினாரின் மறையுரை ஒன்று இடம்பெற்றிருந்தது. அதாவது, யோவானின் முதல் திருமடலில் வரும் 'அன்பு' என்ற சொல்லை வைத்து தன் உரையை எழுதுகின்றார் அகுஸ்தினார்.

என் மனதில் பதிந்தவற்றை மொழிபெயர்க்கிறேன்:

'கண்ணுக்குத் தெரியும் சகோதர, சகோதாரிகளை அன்பு செய்ய இயலாத ஒருவரால் கண்ணுக்கு தெரியாத கடவுளை அன்பு செய்ய முடியாது' என்கிறார் யோவான்.

ஏன் நேரடியாக நாம் கடவுளை அன்பு செய்ய முடியாதா? என சிலர் கேட்கலாம்.

முடியாது. ஏன்? ஏனென்றால் நம் அன்பிற்கு பயிற்சி தேவை. நம் கண்களுக்கு பயிற்சி தேவை.

கண்ணுக்கு தெரியும் சகோதர, சகோதரியை நாம் முழுமையாகப் பார்த்து அன்பு செய்து பழகினால்தான், காலப்போக்கில் நம் கண்கள் பயிற்சி பெற்று கண்ணுக்குத் தெரியாத கடவுளும் நமக்குத் தெரிவார்.

அன்பிற்கும் தேவை பயிற்சி.

நிற்க.

நாளைய நற்செய்தியிலும் இதைப் பார்க்கலாம்.

அதாவது, பெரிய கூட்டத்திற்கு உணவு கொடுக்க வேண்டும் என்று இயேசு தன் சீடர்களிடம் கேட்டபோது, 'ஐயயோ! இவ்ளோ பெரிய கூட்டத்துக்க எவ்ளோ காசுக்கு வாங்க முடியும்?' என கைகளை விரித்துவிட்டனர்.

இயேசு சிம்ப்பிளா பதில் சொல்றார்: 'உங்களிடம் எத்தனை இருக்கிறது? போய்ப் பாருங்கள்!'

'ஐந்து அப்பங்கள். இரண்டு மீன்கள்.'

இதை வைத்து அட்லீஸ்ட் ஒரு பத்து பேராவது பசியாறலாம்தானே.

எதையுமே பார்க்காமல் கைகளை விரித்துவிடுகின்றனர் சீடர்கள்.

ஒழுங்கா பார்க்கணும் பாஸ்!

ஆக, பார்க்கவும், பழகவும் பயிற்சி தேவை.


தூண்டுதல்

தூய ஆவியானவரைப் பற்றிய தூண்டுதல் கடவுளிடமிருந்து வர வேண்டும் என்று தன் திரு அவைக்கு எழுதுகிறார் யோவான் (நாளைய முதல் வாசகம்).

இயேசுவின் பிறப்பை ஒட்டி நடந்த பல நிகழ்வுகளில் தூண்டுதல் இடம் பெறுவதை நாம் பார்க்கிறோம்.

யோசேப்பு கனவில் தூண்டுதல் பெற்றதால் மரியாளை ஏற்றுக்கொள்கிறார்.

ஞானியர் தூண்டுதல் பெற்றதால் விண்மீனை அடையாளம் கண்டுகொள்கின்றனர்.

சிமியோன் தூண்டுதல் பெற்றதால் இயேசுவைக் காண எருசலேம் ஆலயத்திற்குள் வருகின்றார்.

நாம் இன்று பயன்படுத்தும் கண்டுபிடிப்புகள் அனைத்திலும் தூண்டுதல் முக்கிய இடம் பெற்றிருக்கிறது.

ரொம்ப நாளா ஒரு பிரச்சினைக்கு தீர்வு யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால், அது கிடைக்காமல் திடீரென ஒருநாள் குளித்துவிட்டு தலைதுவட்டிக் கொண்டிருக்கும்போது அதற்கான விடை கிடைத்துவிடும்.

இதுதான் தூண்டுதல் (inspiration). இது உள்ளுணர்வில் (instinct) இருந்து சற்று வித்தியாசமானது.

உள்ளுணர்வு நம் உடல் சார்ந்தது. அதாவது, பசி என்பது ஒரு உள்ளுணர்வு. உச்சி வேளையில் பசி எடுக்கும் உணர்வு. உள்ளுணர்வு பெரும்பாலும் உடனடி நிவாரணத்தை எதிர்பார்க்கும். அதாவது, உள்ளுணர்வு வந்துவிட்டால் அதை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டி இருக்கும்.

தூண்டுதல் மனம் சார்ந்தது. அதாவது, செபிக்க வேண்டும் என்ற உணர்வு. இந்த உணர்வை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதில்லை.

இன்று நான் உள்ளுணர்வால் செய்யும் காரியங்கள் எவை? தூண்டுதலால் செய்யும் காரியங்கள் எவை?

இயேசு நாளைய நற்செய்தியில் விண்ணரசை போதிக்க காரணம் தூண்டுதல்.

தூண்டுதலின் படி வாழ்தல் நீண்ட பலனைத் தரும்.

உள்ளுணர்வு உடனடி இன்பத்தையே தரும்.


Saturday, January 2, 2016

கலக்கம்

'இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான்.
அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று!'
(மத்தேயு 2:3)

'கலக்கம்' - ஒரு வித்தியாசமான உணர்வு. ஒரு செய்தியை கேட்டவுடன் அப்படியே நம் நெஞ்சுக் குழியில் ஏதோ ஒரு உணர்வு வந்துபோகும். அந்த உணர்வே கலக்கம். இதுவும் பயமும் ஒன்றல்ல.

கலக்கத்திற்கும் (being troubled or disturbed), பயத்திற்கும் (being afraid) வித்தியாசம் என்னவென்றால், பயம் நமக்கு அச்சுறுத்தல் தரும். ஆனால், கலக்கத்தில் அச்சுறுத்தல் இல்லை. மேலும், பயத்தை உருவாக்கும் காரணி மறைந்துவிட்டால் பயம் தானாக மறைந்துவிடும். ஆனால், கலக்கத்தை நான்தான் சரி செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு, நான் எபிரேயம் முதல் லெவல் படித்துக் கொண்டிருந்தபோது, இறுதித் தேர்வில் 10க்கு 5 வாங்கினேன். பாஸ் மார்க் என்பதே 6. இந்த மார்க்கை நான் என் வலைப்பக்கத்தில் பார்த்தவுடன் தோன்றிய உணர்வு கலக்கம். இந்த கலக்கத்தை நான்தான் சரி செய்ய வேண்டும். இது பயம் அல்ல. ஏனெனில் மதிப்பெண்கள் நமக்கு பயம் தருவதில்லை.

நான் தனியே அறையில் இருக்கிறேன். திடீரென கதவு தட்டும் சத்தம். கண்ணாடி வழியாக பார்க்கிறேன். ஒருவன் நீண்ட கத்தியோடு நின்று கொண்டிருக்கிறான். நான் கதவை திறக்கவில்லை. ஏனெனில் பயம். அவன் என் கதவை தட்டிக் கொண்டே இருக்கும் வரை எனக்கு பயம் இருக்கும். அவன் போய்விட்டால் பயமும் போய்விடும்.

இரண்டையும் குழப்பிக் கொண்டால்தான் பிரச்சினை வருகிறது.

ஏரோதுவும் குழப்பிக் கொள்கிறான்.

கலக்கத்தை பயம் என எண்ணிக்கொண்டு அடுத்தடுத்து தவறு செய்கிறான்:

அ. ஞானியரை தனியாக கூப்பிட்டு தானும் குழந்தையை சந்திக்க விரும்புவதாக பொய் சொல்கிறான்
ஆ. தான் ஏமாற்றப்பட்டதும் கோபம் கொள்கிறான்
இ. தன் கோபத்தை எல்லா குழந்தைகள் மேலும் காட்டுகிறான்

முதல் ஏற்பாட்டில் சவுலும் இதே நிலைக்கு ஆளாகிறார்:

தாவீதின் வளர்ச்சி கண்டு கலக்கம் கொள்கிறார். அந்த கலக்கம் அவருக்கு பயமாக மாறி அச்சுறுத்துகிறது.

ஆனால், இறுதியில் 'ஆண்டவர் தாவீதோடு இருப்பதை' உணர்ந்து கொள்கிறார்.


புதியது

புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம்.

புதியது ஒரு பக்கம் வியப்பாகவும், மறுபக்கம் பயமாகவும் இருக்கும்.

நாணயத்திற்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் இல்லையா?

இந்த நேரத்தில் எனக்கு எண்ணிக்கை நூல் 13-14தான் நினைவிற்கு வருகிறது.

இஸ்ராயேல் மக்கள் கானான் என்னும் புதிய நாட்டிற்குள் நுழையப் போகின்றனர். புதிய நாடு எப்படி இருக்கம் என எல்லார் கண்களிலும் ஏக்கம். புதிய நாட்டை வேவு பார்க்க, மோசே குலத்திற்கு ஒன்றாக 12 பேரை அனுப்புகின்றார். திரும்பியவர்கள் தாங்கள் சென்ற இடத்தில் கண்ட திராட்சை குலையை தடியில் கட்டி, இரண்டு பேர் சுமந்து வருகின்றனர். அந்த அளவிற்கு செழுமையாக திராட்சை பழுத்திருந்தது. குலையை மோசேயின் காலடிகளில் போடுகின்றனர்.

உளவாளிகளில் ஒரு குழுவினர்: 'நாம் உடனடியாக போய் நாட்டைப் பிடித்துக் கொள்வோம். ஏனெனில் நாம் அதை எளிதில் வென்றுவிடமுடியும்!' என்றும்,

மற்றவர்கள், 'நாம் அம்மக்களுக்கு எதிராக போக முடியாது. ஏனெனில் அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவர்கள்' என்றும் சொல்கின்றனர்.

மக்கள், முதலாவது குழுவினரின் நம்பிக்கை வார்த்தைகளை விடுத்துவிட்டு, இரண்டாமவர்களின் அச்சத்தின் வார்த்தைகளைப் பற்றிக் கொள்கின்றனர்.

புலம்பல்.

'எகிப்து நாட்டில் இறந்திருந்தால் எத்துணை நலம்! நாம் எகிப்து நாட்டுக்கு திரும்பி செல்வது நலமன்றோ!'

நம் மனத்தில் பயம் வரும்போது, ஒன்று இறந்துவிட நினைக்கிறோம். அல்லது, கடந்த காலத்தின் பாதுகாப்பு போர்வைக்குள் பதுங்கிக்கொள்ள விழைகிறோம்.

மோசேயும், ஆரோனும் செய்வதறியாது முகங்குப்புற விழுகின்றனர். இப்போது அவர்களுக்கு வயதாகிவிட்டது. தங்களின் வலிமையில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை.

அப்போது இரண்டு இளம் ரத்தங்கள் - யோசுவா மற்றும் காலேபு - பாய்ந்து வருகின்றனர்:

'ஆண்டவருக்கு நம்மேல் நல்விருப்பு ஏற்பட்டால் நாம் இந்த நாட்டை அடைவோம்.
ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்.
அஞ்ச வேண்டாம்.'

இந்த புதிய ஆண்டில் ஆண்டவருக்கு நம்மேல் நல்விருப்பு ஏற்பட்டால்

நாமும் நமக்கு நாமே வாக்களிக்கும் நாட்டை அடைவோம்.

ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்.

அஞ்ச வேண்டாம்.