Tuesday, July 29, 2014

நம் தழுவலும், நூலின் நழுவலும்!

எல்லா மனிதர்களையும் ஒரே போல நாம் பார்ப்பதில்லை. ஒவ்வொரு மனிதரையும் நாம் ஒவ்வொரு விதமாக அணுகுகிறோம். எல்லாரையும் ஒரே அளவுகோலால் அளக்க முடியாது.

இந்த விதி எல்லாப் புத்தகங்களுக்கும் பொருந்தும். நாம் 'ஆனந்த விகடன்' படிப்பதற்கும், நம் இனியவளின் 'கடிதம்' வாசிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. இரண்டிலும் எழுத்துக்கள்தாம் இருக்கின்றன. நாம் விவிலியம் வாசிப்பதற்கும், ஹிட்லரின் 'எனது போராட்டம்' வாசிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

விவிலியத்தை வாசிக்கும் போதும் எல்லா நூலையும் ஒரே மாதிரி வாசிக்க முடியாது. ஒவ்வொரு நூலின் நடையும் வௌ;வேறாக இருப்பதால் ஒவ்வொன்றையும் நாம் அதன் நடைக்கேற்றாற் போலவே வாசிக்க வேண்டும்.

திருப்பாடல்களை நாம் செபமாக வாசிக்கின்றோம். நீதித்தலைவர்கள் நூலை ஒரு வரலாற்று நூல் போல வாசிக்கின்றோம். நீதிமொழிகள் நூலை ஒரு அறநூலாக வாசிக்கின்றோம். நற்செய்தி நூல்கள் வாசிக்கும் போது நம்மையறியாமலேயே இயேசு என்ற வரலாற்று நாயகன் நம்மோடு நடப்பது போல இருக்கிறது. திருவெளிப்பாடு வாசிக்கும் போது ஒரு பயம் நம்மை பற்றிக்கொள்கிறது.

ஒவ்வொரு நூல் நம்மேல் ஏற்படுத்தும் தாக்கமும் வௌ;வேறாக இருக்கிறது.

யோபு நூலை எப்படி வாசிப்பது?

தமிழ் எழுத்து நடையை உரைநடை, செய்யுள் என இரண்டாகப் பிரிக்கிறோம். இந்த நடை எபிரேய இலக்கியத்திற்கும் பொருந்தும்.

யோபு என்ற நூலை வெறும் எபிரேய இலக்கியம் என்று எடுத்து வாசித்தால் நமக்குத் தெரிவது இந்த இரண்டு தான்: உரைநடை, செய்யுள்.

யோபு நூலின் மூன்றில் இரண்டு பங்கு செய்யுள் அமைப்பிலும், ஒரு பங்கு உரைநடை அமைப்பிலும் உள்ளது. யோபுவின் செய்யுள் பகுதி எபிரேய இலக்கியத்தின் மிகவும் கடினமான பகுதி. ஏனெனில், இந்நூலில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் வேறு இலக்கியங்களிலும், வேறு விவிலிய நூல்களிலும் இல்லை. இந்நூலின் ஆசிரியர் நிறைய புதிய வார்த்தைகளை உருவாக்கியிருக்கின்றார்.
மற்றொரு கோணத்தில் பார்த்தால், யோபு நூலை வாசிக்கும் போது இரண்டு பேரின் குரல்கள் நமக்குக் கேட்கின்றன:

முதலாமவர், கதை சொல்பவர். அதாவது, ஒரு ஊரில் யோபு என்ற ஒருவர் இருந்தார். அவருக்கு நிறைய பிள்ளைகள் இருந்தார்கள். ஒரு நாள் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்...எனத் தொடரும் ஒரு நடைதான் கதை சொல்பவரின் நடை.

மற்றவர், உரையாடுபவர். யோபு நூல் முழுவதும் பலர் ஒருவர் மற்றவரோடு பேசும் உரையாடல் நிறைந்திருக்கின்றது. கடவுள் - அலகை, யோபு - மனைவி, யோபு - எலிப்பாசு, யோபு - பில்தாது, யோபு - சோப்பார், யோபு - எலிகு, யோபு - கடவுள் என ஏழு பெரிய உரையாடல்கள் இப்பகுதியில் உள்ளன.

நம் நோக்கம் யோபு நூலின் கதைமாந்தர்களைப் படிப்பது தான். இந்நூலில் வரும் கதைமாந்தர்கள் வாழும் மாந்தர்களாகிய நம்மைப் பிரதிபலிக்கிறார்கள். கடவுள், அலகை, யோபு, மனைவி, பிள்ளைகள், எலிப்பாசு, பில்தாது, சோப்பார், எலிகு என ஒன்பது நபர்களை நாம் இந்நூலில் சந்திக்கின்றோம்.
அ. இந்த ஒன்பது கதைமாந்தர்களும் 'கதையாடலிலும்', 'உரையாடல்களிலும்' எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள்?
ஆ. இவர்கள் இன்று நம் உள்ளத்தின் கேள்விக்கு பதிலாக இருக்கிறார்களா அல்லது நாம் கொண்டிருக்கும் பதில்களை கேள்விக்கு உட்படுத்துகிறார்களா?
இ. இந்த நூலின் கதாபாத்திரங்கள் நம் உள்ளத்தில் எழுப்பும் தாக்கங்கள் எவை?

நாம் என்ன முயற்சிகள் எடுத்து நூலைத் தழுவினாலும், அது நம்மை விட்டு நழுவிப் போய்க் கொண்டேதான் இருக்கும்!

தழுவலும், நழுவலும் தானே வாழ்க்கை!
(சும்மா சின்ன ரைமிங். ரொம்ப யோசிக்காதீங்க!)


1 comment:

  1. நம் கையில் வந்து விழும் ஒரு பொருளை விட நம், கையைவிட்டுச் செல்லும் பொருளுக்கு 'மவுசு' இருப்பது இயற்கையே.யோபு நூலைப்பற்றி சற்று அதிகமாகவே முன்னோட்டம் கொடுத்து ஆவலைத் தூண்டிவிட்டுள்ளீர்கள்.எப்பொழுது மெய்ன் பிக்சருக்கு வருவீர்கள்? காத்துக்கொண்டிருக்கிறோம்..

    ReplyDelete