Wednesday, July 30, 2014

பேய் இருக்கா! இல்லையா?

கடவுள், இறைவன், தெய்வம், ஆண்டவர் நன்மை என்று 'நல்லவரை' குறிக்கும் வார்த்தைகள் தமிழில் இருப்பது போல, அலகை, பேய், சாத்தான், தீமை என்று 'தீயவரைக்' குறிக்கும் வார்த்தைகளும் இருக்கின்றன.

அலகை என்றால் யார்? அல்லது என்ன? என்று நம்ம ஊர் சின்னஞ் சிறுசுகளிடம் கேட்டால் கண்டிப்பாக அர்த்தம் தெரியாமல் விழிப்பார்கள். 'பேய்' என்றால் எல்லாருக்கும் தெரியும். 'சாத்தான்' என்ற வார்த்தை உடனடியாக மோடி மஸ்தானை நினைவுபடுத்துகிறது. பழைய விவிலிய மொழிபெயர்ப்பில் 'சாத்தான்' என்று இருக்க, புதிய மொழிபெயர்ப்பில் 'அலகை' என்று இருக்கிறது. அர்த்தம் எளிதில் விளங்காத வார்த்தையை ஏன் வைத்திருக்கிறார்கள் என்ற தெரியவில்லை. யோபு நூலில் வரும் எபிரேயச் சொல்லை இருப்பது போல மொழிபெயர்த்தால் 'சோதிப்பவன்' என்று பொருள் தருகிறது. 'சோதிப்பவன்' என்றாலே அலகை என்று நினைத்து விடுகிறோம். ஆனால் 'கடவுள் சோதிக்கிறார்' என்ற சொல்லாடலும் நமக்குப் பரிச்சயமானதே.

'நன்மை - தீமை', 'கடவுள் - பேய்' என்று இருதுருவங்களாகப் பிரித்துப் பார்க்கும் சிந்தனை கிரேக்க மூளையிடமிருந்து வருகிறது. இந்தக் கிரேக்க சிந்தனையைத்தான் அகுஸ்தினார் அவர்கள் மிகவும் சீரியஸாக எடுத்து கிறித்தவ சிந்தனைக்குள் நுழைத்தார். மத்திய கிழக்கு சிந்தனையில், அதாவது எபிரேய, அக்காடிய, உகாரித்து சிந்தனையில் பிளவுகள் இல்லை. இவர்கள் அனைத்தையும் ஒன்றாகவே பார்த்தனர். இவர்களின் சிந்தனையைப் பொறுத்த வரையில் சாத்தான் என்பவரும் ஒரு கடவுள். குட்டிக் கடவுள் என வைத்துக் கொள்ளலாம். கடவுளர்களை எதிர்த்து வைத்துப் பார்ப்பதை விடுத்து அடுக்கி வைத்துப் பார்த்தனர். எல்லாருக்கும் மேலே ஏல், பின் பாகால், பின் அசரா, பின் மோர்யா, பின் மோத் என அடுக்கினர். இவற்றில் ஏல் என்பவர் நன்மையின் உருவானவர். மோத் (இறப்பு) என்பவர் எல்லாருக்கும் தாழ்வானவர். அவர் தாழ்வானவராய் இருக்கக் காரணம் அவரது உறைவிடம் பாதாளத்தில் இருக்கின்றது. அவர் இருக்கும் இடத்தில் இருளும், குளிரும் மட்டுமே இருக்கின்றது. இறந்த ஒருவரை நாம் ஏன் குழி தோண்டி அடக்கம் செய்கிறோம்? நாம் வெட்டும் குழி இறந்தவர் பாதாளத்திற்குச் செல்லும் ஒரு கதவு. அந்தக் கதவு வழியே அவரை கீழே அனுப்பிவிட்டு நாம் கதவை மூடிவிடுகிறோம். இவர்களின் இந்த 'பாதாளம்' சிந்தனைதான் இன்று வரை நம்மால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு ஆயிரம் வருடங்கள் ஆனாலும் மனிதர்களுக்கென்று ஒருசில பொதுவானவைகள் இருக்கத்தானே செய்கின்றன.

யோபுவின் நூலில் வரும் அலகையும் கடவுளுக்கு எதிரானவர் அல்ல. அவர் ஒரு குட்டிக் கடவுள். அவரும் விண்ணக அவையில் பங்கேற்கின்றார். அவர் எதிரி என்றால் எப்படி அவரை அரசவையில் அனுமதிப்பார்கள்? கடவுளின் அரசவை கூடும் ஒரு நாளில் அலகையும், கடவுளும் பேசிக் கொள்வதாகத் தொடங்குகிறது யோபு நூல்.

யோபுவைப் பற்றிய சிறிய முகவுரையை அளித்துவிட்டு ஆசிரியர் நம்மை விண்ணக அரசவைக்கு அழைத்துச் செல்கின்றார். கடவுளின் சபையில் கடவுளும், குட்டிக் கடவுள்களும் கூடியிருக்கின்றனர். அந்தக் கூட்டத்தில் சாத்தானும் இருக்கின்றார். கடவுள் தான் இந்த நூலில் முதலும், கடைசியுமாகப் பேசுகின்றார்.

கடவுள்: 'எங்கிருந்து வருகிறாய்?'
அலகை: 'சும்மா ஊரையும் உலகையும் சுற்றிப்பார்த்துவிட்டு வந்தேன்!'
கடவுள்: 'என் நண்பன் யோபுவைப் பார்த்தாயா? அவனைப் போல கடவுள் பக்தி உள்ளவர்கள் யாராவது உண்டா? அவன் என் கட்டளைகளை எவ்வளவு நேர்த்தியாகக் கடைப்பிடிக்கிறான் பார்த்தாயா?'
அலகை: 'ஆமா! சும்மா யாராவது உங்க கட்டளையை கடைப்பிடிப்பாங்களா? நீங்க அவன நல்லா வச்சிருக்கீங்க. அதனால அவன் உங்க பின்னாலயே வர்றான். அவனது விவசாயம், குடும்பம், கால்நடை எல்லாத்தையும் நீங்க பத்திரமா பார்த்துக்கிடுறீங்க! அதனால அவனும் உங்களைச் சுத்தி சுத்தி வர்றான். உங்க கையை கொஞ்சம் அவன் மேல ஓங்குங்க! அப்புறம் தெரியும் அவன் உங்களைப் புகழ்கிறானா அல்லது இகழ்கிறானா என்று!
கடவுள்: 'என்னப்பா இது புது கதையா இருக்கு! சரி! உன் கையில எல்லாவற்றையும் கொடுக்கிறேன். உன் கைய அவன் மேல ஓங்கு! ஆனா அவன மட்டும் ஒன்னும் செஞ்சிடாத!'

முதல் உரையாடலின் தொடர்ச்சியாக ஒரு கதை நடை. யோபுவுக்கு என்ன ஆயிற்று என்று நமக்கு ஆசிரியர் சொல்கின்றார்.
கொஞ்ச நாட்கள் கழித்து மறுபடியும் அரசவை கூடுகிறது. கடவுளுக்கும், அலகைக்கும் உரையாடல் தொடர்கிறது.

கடவுள்: 'எங்கிருந்து வருகிறாய்?'
அலகை: 'சும்மா! ஊரையும் உலகையும் சுத்திப்பார்த்துட்டு வர்றேன்!'
கடவுள்: 'என் நண்பன் யோபுவைப் பார்த்தாயா? அவனது உடைமைகள், விவசாயம், குடும்பம் என எல்லாவற்றையும் நீ அழித்தாலும் அவன் இன்னும் நேர்மையாளனாய் இருக்கிறான் பார்த்தாயா?'
அலகை: 'அவன் உடம்பு நல்லா இருக்கு! அதான் கவலையில்லாம இருக்கிறான்.'
கடவுள்: 'என்னப்பா சொல்ற! சரி அவன் உடம்புலயும் நீ கைய வை! ஆனா உயிரை மட்டும் விட்டு வை!'

மறுபடியும் கதையாடல் தொடர்கிறது.

நூலின் தொடக்கத்தில் வரும் அலகை இறுதியில் வருவதில்லை. தொடக்கத்தில் கூடும் கடவுளின் அரசவை பற்றி இறுதியில் ஒன்றுமில்லை. அலகையின் வருகை தான் யோபு நூல் இயங்குவதற்குக் காரணமாக இருக்கின்றது. ஆசிரியரின் ஒரு கற்பனைப் படைப்பே அலகை என்று சொல்லலாம்.
அலகை என்பவர் இருக்கிறாரா?

சந்திரமுகி ஸ்டைல்ல சொல்லணும்னா, 'பேய் இருக்கா! இல்லையா? பேய் இருப்பதை எப்படித் தெரிஞ்சுக்கலாம்?'

'பேய்' என்பது 'கடவுளின் குறைவுத் தன்மை' எனச் சொல்வேன். அதாவது பேய் என்பதை '0' என வைத்துக்கொள்வோம். கடவுளை '10' என வைத்துக்கொள்வோம். இந்த எண்களை அப்படியே ஒரு கிராஃப் ஷீட்டில் எழுதுவோம். '0' விலிருந்து '10' ஐ நோக்கி ஒரு அம்புக்குறி போடுவோம். எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தால் நாம் கடவுள். ஒன்றுமே இல்லையென்றால் நாம் அலகை. நமக்கு நம்பிக்கை தருவது அனைத்தும் நமக்குக் கடவுள். நமக்கு பயம் தருவது அனைத்தும் நம் அலகை.
'பேய்' என்பது கடவுளின் 'இல்லாத் தன்மை'. 'கடவுள்' என்பது 'பேயின் இல்லாத் தன்மை'.

இந்த 'அலகை' என்னும் கதைமாந்தர் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

அ. கடவுளின் பிரசன்னத்தில் அலகைக்கும் இடமுண்டு. கடவுளின் பெருந்தன்மையை இது காட்டுகிறது. இந்த பரந்த மனப்பான்மை நமக்க வந்தால் நம் குற்றவுணர்வு மறைந்து விடும். பல நேரங்களில் நமக்குக் கவலையும், கலக்கமும் தருவது நம் கூடவே வரும் குற்றவுணர்வு. ஆயிரம் நல்ல காரியங்கள் செய்திருப்போம். ஆனால் நாம் செய்த ஒரே ஒரு கெட்ட செயல் நமக்கு அதிகக் கலக்கத்தைத் தருகிறது. 'ஐயோ! கடவுள் தண்டிப்பார்!' என நாம் புலம்பத் தொடங்க விடுகிறோம். அதற்கு மாறாக, 'ஆம்! நான் தவறு செய்துவிட்டேன்! ஏற்றுக்கொள்கிறேன்! ஆனால் அந்தத் தவறுதான் நான் எனச் சொல்லிவிட முடியுமா? என்னிடம் நல்ல குணங்களும் இருக்கின்றவே! அதில் இன்னும் நான் அதிகம் வளர்வேனே! என்னிடம் நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு! என்று ஏற்றுக்கொண்டால் நம் உள்ளமும் கடவுளின் அரசவையாக மாறும்.

ஆ. 'கடவுளை நாம் வழிபடுவது எதற்காக?' மனிதர்கள் தங்களிடமுள்ள ஒட்டு மொத்த நல்ல குணங்களையும் ஒன்றாகத் திரட்டி அதற்குக் கடவுள் என பெயர் வைத்து விட்டர்கள் எனவும் ஒவ்வொறு முறை கடவுளை வழிபடும் போது அவர்கள் தங்களையே வழிபடுகிறார்கள் எனவும் சொல்கிறார் சமூகவியல் ஆராய்ச்சியாளர் எலியாட். மக்கள் கடவுளை வழிபடுவது சுயநலத்திற்காக எனவும், 'கடவுளைக் கடவுளாக மட்டும் வழிபடுவதற்கு கடவுள் ஒன்றும் மேன்மையானவர் அல்லர்' என்று மக்களையும், கடவுளையும் ஒருசேரக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார் அலகை. இன்று நாம் கடவுளை எதற்காக வழிபடுகிறோம்? கடவுள் என்ற ஒரு கதைமாந்தர் நம் வாழ்வில் இல்லையென்றால் நாம் எப்படி இருப்போம்?

இ. அலகை கடவுளின் சொல்லைக் கேட்பவராகவும், கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றுபவராகவும் சித்தரிக்கப்படுகிறார். நாம் பல நேரங்களில், 'நான் கடவுளின் கட்டளைகளையும், திருச்சபையின் கட்டளைகளையும் நன்றாகத் தானே கடைப்பிடிக்கிறேன்!' என்று பெருமை கொள்கிறோம். நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான்: 'பேய்களும் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கத்தான் செய்கின்றன! ஆனால் அவைகளின் குணம் மாறுவதில்லை!' நம்மிடம் உள்ள குணம் என்ன?

நொடிப்பொழுதில் மின்னி மறையும் அலகையும் ஒரு வாழ்வியல் எதார்த்தம்! அவன் நம்மிடம் கொஞ்ச நேரம் இருக்க வேண்டுமா? அல்லது நம்மோடு கட்டில் போட்டு தூங்க வேண்டுமா? என்பது நம் கையில் தான் இருக்கின்றது.


2 comments:

  1. கடவுளுக்கும் அலகைக்குமிடையே நடந்த உரையாடலை சுவைபடக் கூறியுள்ளீர்கள். " நொடிப்பொழுதில் மின்னிமறையும் அலகையும் ஒரு வாழ்வியல் எதார்த்தம்" ..எனும் வரிகளைப்படிக்கும்போது சிறிது நேரம் அவனுடன் அலவலாவுவதோ, அவனுடன் உரையாடுவதோ..ஒன்றும் தப்பில்லை என்று தோன்றுகின்றது அதை ஒரு அஅநுபவமாக மட்டும் எடுத்துக்கொண்டால்.பேய் இருக்கிறதோ இல்லையோ..அவனைப்பற்றிய பயத்தைப் போக்கியதற்கு நன்றிகள்...

    ReplyDelete
  2. எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தால் நாம் கடவுள். ஒன்றுமே இல்லையென்றால் நாம் அலகை........ஆழமான உண்மை!!!

    ReplyDelete