Thursday, July 3, 2014

நீர் போகும்போதும், வரும்போதும்!

திபா 120 முதல் திபா 134 உள்ள பாடல்கள் 'ஏற்றப்பாடல்கள்' என அழைக்கப்படுகின்றன. 'திருப்பயணப்பாடல்கள்' என்ற தலைப்பும் இத்தொகுப்பிற்கு உண்டு. ஏற்றம் என அழைக்கப்படுவது எதனால்? இதற்கு நான்கு காரணங்கள் உள்ளன:

அ. இப்பாடல்களில் ஒரு வரி, அடுத்த வரியின் தொடக்கமாக இருக்கிறது. எ.கா. திபா 124.

ஆ. எருசலேம் திருக்கோவிலுக்கு வெளியே 15 படிகள் இருந்தன. எருசலேம் ஆலயத்திற்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லாததால் அவர்கள் படிகளிலேயே நின்றனர். இப்படி 15 படிகளில் நின்ற பெண்கள், ஆண்கள் ஆலயத்திற்குள் நுழையும் போதும் ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு பாடல் பாடுவார்கள். ஆகையால் 15 திருப்பாடல்கள்.

இ. எருசலேம் ஆலயம் 'சீயோன்' என்ற மலை மேல் இருந்தது. இந்த மலைக்கு 'ஏறி' செல்லும் போது பாடும் பாடல்கள். எனவே, ஏற்றப்பாடல்கள்.

ஈ. எசேக்கியா என்பவர் யூத அரசர்களில் ஒருவர். அவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவோடு இருந்தார். தனக்கு உடல் நலம் அருளமாறு இறைவனை வேண்ட, இறைவனும் அவருக்காக கடிகாரத்தை 10 டிகிரி அளவு குறைக்கிறார். ஆகையால் எசேக்கியா மீண்டும் 15 ஆண்டுகள் வாழ்கின்றார் (காண். எசாயா 38). இந்த 15 ஆண்டுகளின் நினைவாக பாடகர் ஒருவர் எழுதிய பாடல்களே ஏற்றப்பாடல்கள்.

இல்லம் மற்றம் வாகனங்களின் ஆசிர் அளிப்பிற்கு திபா 121 இன்று பயன்படுத்தப்படுகின்றது.

வீட்டிலிருந்து எருசலேமிற்குச் செல்லும் பயணம் ஒரு ஆபத்தான பயணம். இந்தப் பயணத்தில் நம்மைப் பாதுகாக்க யாராவது ஒருவர் கண்டிப்பாக வேண்டும். மலைகளில் எப்போதும் ஆபத்து அதிகமாக இருந்தது. அங்குதான் திருடர்கள் பதுங்கி இருப்பர். ஆனால் தனக்கு ஆதரவாக இறைவன் இருப்பதாகப் பாடுகின்றார் பாடலாசிரியர்.

'உறங்குவதுமில்லை. கண்ணயர்வதுமில்லை'.

இந்தப் பாடலில் எனக்கு பிடித்த வார்த்தைகள் இவை இரண்டும் தான். மனிதர்களைக் கடவுளிலிடமிருந்து பிரித்துக் காட்டும் ஒரு உணர்வு அல்லது செயல்: உறக்கம். களைப்பின் எச்சம் உறக்கம். உறக்கத்தில் கண் மூடிக்கொள்கிறது. களைப்படையாமல் காப்பவர் இறைவன்.

கதிரவன், நிலா - இவைகள் தீங்களிக்கும் காரணிகளாகப் பார்க்கப்பட்டன.

வெளியிலிருந்து வரும் தீங்கும் நெருங்காது. நாமாக கல்லில் காலை உதைத்துக்கொள்ளும் தீங்கும் நேராது.

முழுப் பாதுகாப்பை உறுதி செய்கின்றார் இறைவன்.

வாழ்வில் ஒவ்வொரு நொடியும் நாம் அடுத்த நொடிக்கு ஏறிச்செல்கின்றோம்.

கண்ணயராத கடவுள் கண்மணி போல நம்மைக் காக்க இன்னும் கலக்கம் ஏன்?


1 comment:

  1. "கண்ணயராத கடவுள் நம்மைக் காக்க இன்னும் கலக்கம் ஏன்?" எத்துணை ஆறுதலான வார்த்தைகள்.....உடல், சுகவீனப்பட்டக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் தாய்கூட சிறிது நேரத்தில் களைப்படைந்து கண்ணயர்ந்து விடுகிறாள்.ஆனால் நம்மோடிருக்கும் நம் இறைவன் நம் வாழ்வின் ஏற்றங்களிலும்,இறக்கங்களிலும்,உச்சி வெயிலிலும், உடலை வாட்டும் குளிரிலும் நம்மைத் தன் சொந்தக் கரங்களால் தாங்கிக்கொள்கிறார்.நாம் பயணங்கள் மேற்கொள்ளும் போது சொல்லப்பட வேண்டிய தி.பா 121 நம் கூடவே வழித்துணைக்கு ஒருவர் வரும் உணர்வைக் கொடுக்கும் என்பது என் அனுபவம்.சொல்லித்தான் பாருங்களேன்....

    ReplyDelete