Monday, July 21, 2014

இது யாருடைய உருவம்?

(19.10.2014 பொதுக்காலம் 29ஆம் ஞாயிறுக்கான மறையுரை. நற்செய்தி: மத்தேயு 22.15-21)

நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து உலகின் பல பகுதிகளிலும் ஒரு கருத்துப் புரட்சியை ஏற்படுத்திய புத்தகம்: 'Zealot: The Life and Times of Jesus of Nazareth'. இயேசுவின் சமகாலத்தை ஆராய்ச்சி செய்கின்ற ஆசிரியர் Reza Aslan, இயேசு 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாதாரண ஒரு போராளி எனவும், தூய பவுலடியார் தான் அவரை கிறிஸ்துவாக மாற்றி விட்டார் எனவும், 'கிறிஸ்து' என்ற ஒரு நபருக்கு நாம் அளிக்கும் மரியாதை, வழிபாடை விட இயேசு என்ற போராளிக்குத் தான் அதிக மரியாதை கொடுக்க வேண்டும் எனவும் எழுதுகின்றார். முழுக்க முழுக்க வரலாற்றுச் சுவடுகளைத் தழுவி எழுதப்பட்ட நூல். அவர் சொல்லும் கருத்துக்களுக்கு எதிர்ப்புக்கள் வராததற்குக் காரணம் அவர் வைக்கும் வரலாற்றுச் சான்றுகளே.

இயேசுவின் வாழ்வில் குறிப்பிடும் முதல் நிகழ்வாக அவர் குறிப்பிடுவது இன்றைய நற்செய்திப் பகுதியைத் தான்: 'சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்'. பல நேரங்களில் இயேசுவின் மதிப்பீடுகளைச் சுருக்கிச் சொல்லும் போது 'இறையன்பு', 'பிறரன்பு' எனச் சொல்லுகிறோம். ஆனால் அன்பு என்ற வார்த்தையை வைத்து நாம் இயேசுவின் மதிப்பீடுகளைப் பிரிப்பது மிகவும் பரந்த ஒன்றாக இருக்கின்றது. இயேசு என்ற சாதாரண மனிதனின் கருத்தியல் மிக எளிதானது: 'சீசருக்கு உரியது சீசருக்கு. கடவுளுக்கு உரியது கடவுளுக்கு'.

இதற்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் இருக்கின்றது. இயேசுவின் காலத்தில் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு உரோமையர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. உரோமையின் அடிமைத்தளத்திலிருந்து யாராவது நம்மை விடுவிக்க மாட்டார்களா என எல்லாரும் எண்ணிக் கொண்டிருந்தனர். 'செலட்டுகள்' என்று அழைக்கப்பட்ட ஒரு குழுவினர், தீவிரவாதத்தின் வழியாகவும், வன்முறையின் வழியாகவுமே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என நினைத்தனர். இயேசுவும் அவர்களின் சிந்தனையைப் பகிர்ந்தவர் தான். 'சீசருக்கு உரியதை சீசருக்கு கொடுங்கள், கடவுளுக்கு உரியதை கடவுளுக்குக் கொடுங்கள்' என்று சொல்வதில் ஒரு கோபம் ஒளிந்திருப்பது உங்களுக்குத் தெரிகிறதா? அதாவது, சீசருக்கு உரியது உரோம். அதை விடுத்து விட்டு அவன் இங்கே என்ன செய்கிறான். இந்த மண்ணும், மக்களும் கடவுளுக்கு உரியது. அதை கடவுளுக்குக் கொடுத்துவிட்டு அவன் தன் ஊர் திரும்ப வேண்டும் என்ற தன் கருத்தை நாசுக்காகச் சொல்கின்றார் இயேசு.

இந்த வரலாற்றுப் பின்புலம் நற்செய்தி நூல்களில் கறுப்படிக்கப்பட்டுள்ளது. நற்செய்தியாளர்கள் இதை இயேசுவின் இறப்பின் பிண்ணனியில் நடக்கும் நிகழ்வாக எழுதுகின்றனர். இயேசு எருசலேமிற்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைகின்றார். அவரின் இறப்பிற்கு பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர், தலைமைக்குருக்கள் என எண்ணற்ற நபர்கள் காரணமாக இருக்கின்றனர். அவர்கள் எப்படிக் காரணமாக இருக்கின்றார்கள் என்பதற்கு காரணம் சொல்ல வேண்டுமல்லவா? நற்செய்தியாளர் இந்த அதிகாரம் முழுவதும் ஒவ்வொரு குழுவாக இயேசுவிடம் வருவதாக எழுதுகின்றார். அப்படி இன்று இயேசுவிடம் வருபவர்கள் 'ஏரோதியர்கள்'. ஏரோதியர்கள் என்பவர்கள் அந்தக் காலத்து 'ரெண்டுங்கெட்டான்கள்'. தங்களை ஒரு யூதர் தான் ஆள வேண்டும் என்று விரும்பியவர்கள். ஆகையால் தங்கள் பிரமாணிக்கத்தை ஏரோதுக்கு மட்டும் அளித்தனர். அதே நேரத்தில் உரோமை அரசுக்கு வரிகட்டுவதிலும், அவர்களுக்குக் கடை விரிப்பதிலும் மும்முரமாய் இருந்தனர். ஆகையால் தான் எந்நேரமும் சீசரின் முகம் பதித்த நாணயத்தை தூக்கிக் கொண்டு திரிகின்றனர்.

'சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?' - இதுதான் அவர்கள் இயேசுவிடம் வைக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கு 'ஆம்' என்று சொன்னால், 'இயேசு மெசியா அல்ல!' என்று சொல்லத் தொடங்குவார்கள். 'இல்லை' என்று சொன்னால், 'உரோமைக்கு எதிரான தீவிரவாதி!' என்று பட்டம் கட்டுவர். பழிதீர்ப்பர். இப்படி எந்தப் பதில் சொன்னாலும் அவர் அகப்பட்டு விடுவார் என்று நினைத்தவர்களுக்கு, இயேசுவின் பதில் கண்டிப்பாக அவர்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

'சீசருக்கு உரியது சீசருக்கு! கடவுளுக்கு உரியது கடவுளுக்கு!' - இதை இன்று நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

அ. இன்று உலகின் பல பிரச்சினைகளுக்குக் காரணம், ஏன், இயேசு பிறந்த பாலஸ்தீனத்திலேயே இன்று இரத்தமும், கண்ணீரும் ஓடக் காரணம் சீசரும், கடவுளும் இணைந்திருப்பது தான். இருவரையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பி விட்டோம் நாம். 'ராம் ராஜ்யம்', 'ஜிகாத்', 'சிலுவைப் போர்' என வரலாற்றின் அனைத்து இரத்த வாடைக்கும் காரணமும் இந்தக் குழப்பம் தான். கடவுள் இல்லாமல் இருந்தால் மனுக்குலம் நன்றாக இருந்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கிறித்தவர்களாகிய நாம் பல நேரங்களில் இந்திய அரசா, வத்திக்கான் அரசா என்ற குழப்பம் நிறையவே இருக்கிறது. வத்திக்கானுக்கு நாம் காட்டும் பிரமாணிக்கத்தை நம் தமிழக அரசுக்கு நாம் காட்டுவதில்லையே! 'கோவிலுக்கு வரி கட்டியாச்சா! திருவிழாவுக்கு வரி கட்டியாச்சா!' என்று மாய்ந்து, மாய்ந்து கேட்கும் பங்குத்தந்தையரும், அன்பியப் பொறுப்பாளர்களும் 'அரசுக்கு வரி கட்டியாச்சா!' என்று என்றாவது கேட்டதுண்டா? தமிழக அரசிடமும், இந்திய அரசிடமும் உரிமைகளைப் பெற விரும்பும் நாம், கடமைகளை மட்டும் வத்திக்கான் அரசுக்குக் காட்டுகிறோம். இந்த வத்திக்கானுக்கு நாம் கிறிஸ்தவர்களாய் இருந்தாலும் ஒன்றுதான், இல்லையென்றாலும் ஒன்றுதான். நாமெல்லாம் இவர்களுக்கு வெறும் 'நம்பர்' தான். நம்மால் இவர்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அப்படியிருக்க நாம் ஏன் இயேசுவின் வார்த்தைகளை சீரியஸாக எடுக்கக் கூடாது?

ஆ. வழிபாடு என்ற வார்த்தையின் கிரேக்க மூலத்திற்கு அர்த்தம் என்ன? 'அவரவர்க்கு உரியதை அவரவர்க்குக் கொடுப்பது'. நம் அனைத்து உறவு நிலைகளிலும், நம் பணிகளிலும், படிப்பிலும் நம்மைச் சிறந்தவர்களாக்குவதும் இயேசுவின் இன்றைய போதனைதான். படிப்பிற்கு உண்டான நேரத்தைப் படிப்பிற்கும், காதலுக்கு உள்ள நேரத்தை காதலுக்கும், குடும்பத்திற்கு உள்ள நேரத்தை குடும்பத்திற்கும் கொடுக்க வேண்டும். இதில் குழப்பம் வரும்போதுதான் தோல்வியும், பின்னடைவும் வருகிறது. சில நேரங்களில் சமரசம் செய்யவும் தொடங்குகிறோம். படிக்கும் நேரத்தில் காதல், காதல் நேரத்தில் நட்பு, நட்பு நேரத்தில் வியாபாரம் என எண்ணற்ற நேரங்களில் நாம் அவரவருக்கு உள்ளதை அவரவருக்கு நாம் கொடுப்பதில்லை தானே!

இ. நாணயத்தில் பொறித்திருப்பது யாருடைய உருவம்? எனக் கேட்கிறார் இயேசு. நம் உள்ளத்தில் கடவுளின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. நம் அரசின் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. நம் மனத்திற்கு கடவுள் தேவைப்படுகிறார் என்றால், நம் உடலுக்கு இந்த உலகமும் நாடும் தேவைப்படுகிறது தானே. அப்படியிருக்க இரண்டையும் ஏன் நாம் சமநிலைப் பார்வையோடு பார்ப்பதில்லை?

2 comments:

  1. இன்றைய செய்தி கொஞ்சம் 'ஓவர் டோஸ்' தான்.நிறைய பின்புலங்கள் பற்றிய விளக்கம்.இருப்பினும் இறுதி வரிகளில் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக்கியுள்ளீர்கள். நம் இறைப்பற்றும் நாட்டுப்பற்றும் பல நேரங்களில் சமன் செய்யப்படுவதில்லைதான்( ஆனால் சமன் செய்வது சரியா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது) கண்டிப்பாக ' சீசருக்குச் செலுத்த வேண்டியதை சீசருக்குச் செலுத்துவோம்.அதில் எந்தக் குழப்பமும் இல்லை.நன்றி....

    ReplyDelete
  2. தந்தையே உங்கள் கருத்துடன் Jonathan Reedன் கருத்தையும் இணைத்தல் சற்று விரிவாக்க நமக்கு கிடைக்கும். தெனாரியம் நாணயம் தொடர்பாக Jonathan Reed என்ற வரலாற்று ஆசிரியரின் கருத்துப்படி அகுஸ்துஸ் சீசர் காலத்தில் பொறிக்கப்பட்ட நாணயத்தில் மன்னரது வாகைசூடிய தலை ஒரு பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அப்பக்கத்தில் இலத்தீனில் CAESAR AVGVSTVS (சீசர் அகுஸ்துஸ்) என்னும் பெயர் உள்ளது. மறு பக்கத்தில் ஏழு கதிர்களைக் கொண்ட ஒரு வால்நட்சத்திரம் காட்டப்படுகிறது. அதன் வால் மேல் நோக்கி உள்ளது. அதன் இரு புறமும் தொடர் எழுத்தாக இலத்தீனில் Divus Iulius (தெய்வம் போன்ற மகன்) என்றுள்ளது. இதைப் பொதுமக்கள் “கடவுளின் மகன்” என்று புரிந்துகொண்டார்கள். இக்குழப்பத்தை வேண்டுமென்றே உரோமை அரசவை தீர்த்துவைக்காமல் விட்டுவிட்டது.

    பின்னர், உரோமைப் பேரரசர் திபேரியு மக்களால் “தெய்வ அகுஸ்துசின் மகன்” என்று அழைக்கப்படலானார். இதன் பின்னணியில் தான் இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. சீசருக்கு வரி செலுத்துவது சரியா? இயேசு அளிக்கின்ற பதில் வரிகொடுக்கப் பயன்படும் நாணயத்தில் சீசருடைய உருவம் உள்ளது. அந்த சீசர் தன்னையோ கடவுளின் மகன் என்று சொல்லிக்கொள்கின்றார். அப்படியானால் அந்தக் “கடவுளின் மகன்” பொறிக்கப்பட்ட நாணயத்தை அவருக்கு வரியாகக் கொடுங்கள். ஆனால் நீங்கள் கடவுளுக்கு உரியவர்கள் ஆதலால் உங்களையே கடவுளுக்குக் காணிக்கையாக்குங்கள் என்று இயேசு கூறியதாகப் பொருள்கொள்வது முறையாகிறது.

    ReplyDelete