Thursday, July 31, 2014

மடியச் சொல்லும் மனைவி!

ஓடொன்றை எடுத்துத் தம்மைச் சொறிந்து கொண்டு, யோபு சாம்பலில் உட்கார்ந்தார். அப்போது அவரின் மனைவி அவரிடம், 'இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே!' என்றாள். ஆனால் அவர் அவளிடம், 'நீ அறிவற்ற பெண்போல் பேசுகிறாய்! நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமைகளைப் பெறக்கூடாது?' என்றார். (யோபு 2:8-10)

இன்று நாம் சந்திக்கும் கதைமாந்தர் யோபின் மனைவி. 'மனைவி' என்ற காரணப்பெயரைத் தவிர நமக்கு வேறு எதுவும் கொடுக்கப்படவில்லை. யோபுவின் உடைமைகள் எல்லாம் அழிவதையும், அவரின் உடல்நலம் நாளுக்கு நாள் கெடுவதையும் நேரில் இருந்து காண்கின்ற மனைவி பேசும் வார்த்தைகளே மேற்காணும் வார்த்தைகள். இந்த இடத்தில் வரும் மனைவி நூல் முழுவதும் மறைந்தே இருக்கின்றார். நூலின் இறுதியில் யோபுவுக்கு எல்லாம் திரும்பக் கிடைத்த போதும் இவரைப் பற்றிய குறிப்பு அங்கு இல்லை. 'என் மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று' (19:17) என்று போகிற போக்கில் யோபின் புலம்பலில் மட்டும் வந்து செல்கிறார் இவர்.

'இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்?'

'கடவுளைப் பழித்து மடிவதுதானே?'

இந்த இரண்டு கேள்விகளும் யோபின் சமகாலத்தவரின் கருத்தியல். அதாவது, துன்பம் என்பது நாம் செய்த பாவத்தின் விளைவு. அதிக பாவம் செய்தால் அதிக துன்பம் வரும். குறைவான பாவம் செய்தால் குறைவான துன்பம் வரும். இதையே ரிவர்ஸ் செய்தும் பார்த்தார்கள். அதாவது, ஒருவருக்கு அதிக துன்பம் இருக்கிறது என்றால் அவர் அதிகம் பாவம் செய்தவர். குறைவான துன்பம் இருக்கிறது என்றால் குறைவாகப் பாவம் செய்தவர்.

யோபின் மனைவி இந்தச் சமகாலத்தவரின் கருத்தியலைத் தான் கொண்டிருக்கின்றார். அவருடைய சொற்களும் இதையே வெளிப்படுத்துகின்றன. யோபு பெரும் பாவம் செய்தவர் என்றும், இவ்வளவு நாட்கள் நல்லவர் போல வேடமிட்டிருந்தார் எனவும் நினைக்கின்றார்.

'இன்னுமா மாசின்மையில் நிலைத்திருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்?' என்பதே சரியான மொழிபெயர்ப்பு.

யோபுவைப் பற்றிய ஒரு தவறான கருத்தைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு இன்ஸ்டன்ட் தீர்வையும் தருகின்றார்:

'கடவுளைப் பழித்து மடிவதுதானே?'

'நீரெல்லாம் மடிவதுதானே?' என்று மட்டும் கேட்டிருந்தால் அது எவ்வளவு வலி தருவதாக இருக்கும். 'இதற்கெல்லாம் காரணமான கடவுளை பழித்துவிட்டு' மடியும்! என்கிறார்.

அவரின் கண்டிப்பு இரண்டு: ஒன்று, கடவுளைப் பழி! இரண்டு, செத்து மடி!

இரண்டுமே இன்ஸ்டன்ட் தீர்வுகள்.
'கடவுளைப் பழிப்பது' என்பது பண்டைக்கால மக்களின் ஒரு ஆன்மீகச் செயல். அதாவது நாம் கோவிலுக்குப் போய் ஆடு வெட்டி பலி செலுத்துகிறது போல, கோவிலுக்குச் சென்று கடவுளைப் பழிக்கவும் செய்யலாம். இதற்கென்று பயிற்சி பெற்ற, தகுதி பெற்ற குருக்களும் இருந்தனர்.

இந்த ஆன்மீகச் செயலுக்கு ஒரு நல்ல உதாரணம் எண்ணிக்கை நூலில் (22) நாம் சந்திக்கும் பிலயாம் இறைவாக்கினர். பாலாக் மன்னன் இஸ்ரயேலரைச் சபிக்கவும், இஸ்ரயேலரின் கடவுளான யாவே இறைவனைப் பழிக்கவும் பிலயாமை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்புகின்றார். வானதூதரால் தடுத்து நிறுத்தப்பட்டு, பின் பழிப்பதற்குப் பதிலாக வாழ்த்தி விட்டுச் செல்கின்றார் பிலயாம்.

இந்த சித்தாந்தத்தின் பின் இருப்பது என்ன? கடவுள் ஒரு கைப்பாவை. நாம் புகழ்ந்தால் சந்தோஷமடைவார். இகழ்ந்தால் வருத்தப்படுவார். மனிதர்களின் உணர்வுகளையே கடவுளும் கொண்டிருக்கிறார் எனவும், கடவுள் நேரத்திற்கு நேரம் குணம் மாறக்கூடியவர் என்பதும் இந்தச் சித்தாந்தத்தின் பின்புலம்.

யோபு கடவுளைப் பழித்தால் அது 'கண்ணுக்குக் கண்! பல்லுக்குப் பல்!' என்று பலி தீர்த்துக் கொண்டதாக இருக்கும் என நினைக்கின்றார் மனைவி.

மனைவியின் அடுத்த வேண்டுகோள்: 'செத்து மடி!' இன்னும் கொஞ்சம் கொடூரமாகச் சொல்ல வேண்டுமானால் 'தற்கொலை செய்து கொள்!' வலிக்கு மிக எளிய மருந்து வலியை உணர வைக்கும் உயிரை எடுத்து விடுவது! என்ன அழகான தீர்வு!

துன்பப்படுகிறவர்கள், அதாவது பாவிகள், அதாவது கடவுளால் தண்டிக்கப்பட்டவர்கள் தங்கள் அருகில் இருந்தால் அது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அழிவு என்று நினைத்த அக்காலத்தவர் அவர்களை கொலை செய்யவும், தங்கள் ஊரை விட்டுத் தள்ளி வைக்கவும், அவர்களுக்கு மருத்துவ உதவிகளை மறுக்கவும் செய்தனர் என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

யோபின் மனைவி நமக்குச் சொல்வது என்ன?

அ. மாசின்மையில் நிலைக்க வேண்டுமா! நல்லவராய் இருப்பது ஒன்றும் பெரிய கஷ்டமல்ல. நல்லவராய் நிலைத்து நிற்பதுதான் கஷ்டம். நன்மைத்தனமும், விடாமுயற்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. அடிக்கடி நல்லராக இருப்பதற்கும், எப்போதும் நல்லவராக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. 'நன்மை செய்வதில் மனந்தளர வேண்டாம்!' என்ற தூய பவுலடியாரின் வார்த்தைகளே நமக்குப் பாடமாகட்டும்.

ஆ. கடவுளைப் பழி! இது ஒரு டிஃபென்ஸ் மெக்கானிசம். ஒன்று நமக்கு வலிக்கிறது என்றால் அந்த வலியை மற்றவர் மேல் திருப்பி விடுவது. இதை 'புரொஜெக்சன்' என்றும் அழைப்பர். இன்று நமக்குத் துன்பம் வந்தால் நாம் அதை நம் சமூகத்தின் மேலும், நம் குடும்பத்தின் மேலும், கடவுளின் மேலும் திருப்பிவிடவே செய்கின்றோம். இன்று நாடுகள் நாடுகளை எதிர்த்து போரிட்டுக்கொள்ளக் காரணமும் இதுவே.

இ. செத்து மடி! உயிரை ஆக்க நம்மால் முடியாது. ஆகையால் அழிக்கவும் நமக்கு உரிமையில்லை. சிம்பிள் லாஜிக். துன்பம், இழப்பு, வெறுமை தாங்காமல் இன்று தங்களையே அழித்துக்கொள்ளும் நபர்களைப் பற்றி நாம் அன்றாடம் கேள்விப்படுகிறோம். ஒரு பக்கம் அவர்களின் இழப்பு குறித்து நமக்கு தெரியாததுதான். வெளியில் இருந்து கொண்டு, 'அவர்கள் செய்தது தவறு!' என்று சுட்டிக்காட்டுவது எளிதுதான். ஆனால், அவர்கள் செயல்களும் சரி என்று சொல்லிவிட முடியாது தானே! அதேபோல, நான் வலிமையானவன். நீ வலிமையற்றவன். நீ வாழத்தகுதியற்றவள் என நாம் யாரையும் சொல்லவும், அடுத்தவரின் உயிரை எடுக்கவம் நமக்கு எந்நாளும் உரிமையில்லை. வாழ்விற்கு மட்டுமே துணை போக வேண்டும் என்று சொல்லும் கத்தோலிக்கத் திருஅவையும் கருக்கலைப்பு, யூத்தனாசியா, தற்கொலை, மரண தண்டனை என அனைத்திற்கும் எதிர் நிலைப்பாடு கொண்டிருப்பதன் பின்புலமும் இதுதான்.

யோபின் மனைவி நம்மில் எத்தனை பெர்சன்ட் இருக்கிறார்?


1 comment:

  1. "நல்லவராய் இருப்பது ஒன்றும் கஷ்டமல்ல;நல்லவராய் நிலைத்து நிற்பதுதான் கஷ்டம்"...ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கூற்று..." அடுத்தவரின் உயிரை எடுக்க உரிமை இல்லை; வாழ்விற்கு மட்டுமே துணைபோக வேண்டும்" என்று சொல்லும் கத்தோலிக்கத் திரு அவையின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை அடைகிறேன்.

    ReplyDelete