Friday, December 31, 2021

ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!

1 ஜனவரி 2022 புத்தாண்டுப் பெருவிழா – மரியா இறைவனின் தாய்

எண்ணிக்கை 6:22-27 கலாத்தியர் 4:4-7 லூக்கா 2:16-21

ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!

என்னங்க! எல்லாரும் இங்க வந்து நிக்குறீங்க! இந்தக் குளிர்ல! கோவிலுக்கு உள்ளே, வெளியே என்று ஒரே மக்கள் கூட்டம்! போன வருடத்தோடு நம்ம வாழ்க்கையில இன்னொரு வயது கூடிடுச்சு என்று எந்த வருத்தமும் நம்மிடம் இல்லை! கடந்த ஆண்டு விட்டுச் சென்ற காயங்கள் நம்மிடம் இல்லை! நாம் இன்று அணிந்துள்ள புதிய ஆடை போல நம் உள்ளத்தில் ஒருவிதமான புத்துணர்வு.

விவிலியத்தில் முதன்முதலாகப் புத்தாண்டு கொண்டாடியவர்கள் நம் முதற்பெற்றோர் ஆதாமும் ஏவாளும்தான். ஏதேன் தோட்டத்திற்குள் அவர்கள் இருந்தது வரை அவர்களுக்குக் காலம் பற்றிய உணர்வு இல்லை. தோட்டத்திற்கு வெளியே அனுப்பப்பட்டவுடன்தான் காலம் பற்றிய உணர்வு அவர்களுக்கு வருகின்றது. ஆண்-பெண் என்று இருந்த அவர்கள், தந்தை-தாய் என்று மாறுகிறார்கள். ஏவாள் கருத்தரித்து தன் முதல் மகனைப் பெறுகிறாள். நம் முதற்பெற்றோரின் புத்தாண்டு சாபத்தில் தொடங்கியது. 'வயிற்றினால் ஊர்ந்து புழுதியைத் தின்பாய்' என்று பாம்புக்கும், 'உன் மகப்பேற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்' என்று பெண்ணுக்கும், 'நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை என்பாய்' என்று ஆணுக்கும் ஆண்டவர் சாபம் அளிக்கின்றார். நெற்றி வியர்வைதான் வாழ்வின் நியதி என்றால், நாம் இங்கே ஆலயத்தில் கூடி நிற்பது ஏன்? வேதனைதான் வாழ்வின் எதார்த்தம் என்றால், இந்த இரவில் நாம் இறைவேண்டல் செய்வது ஏன்?

இந்த இரவில் நாம் நம் காலத்தைக் கொண்டாடுகின்றோம். காலம் எப்போது தோன்றியது? என்பது பற்றிய கேள்விக்கு இன்றும் தெளிவான விடை இல்லை. ஆனால், 'காலங்கள் அவருடையன, யுகங்களும் அவருடையன' என்பது வாழ்வியல் எதார்த்தமாக இருக்கிறது. நாம் காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டவர்கள் என்றாலும், இடத்தைத் தெரிவு செய்யும் ஆற்றல் பெற்றுள்ள நாம், காலத்தின்முன் கையறுநிலையில் இருக்கின்றோம். காலம் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தை நமக்கு தருகிறது. அடுத்து வரப் போகும் ஆச்சர்யத்தையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது. 'கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார். காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கின்றார்' என்கிறார் சபை உரையாளர் (சஉ 3:11).

இந்த நாள் நமக்கு நான்கு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: கிரகோரியன் காலண்டர்படி புத்தாண்டுத் திருநாள், மரியா இறைவனின் தாய் என்னும் திருநாள், இயேசுவுக்கு பெயர் சூட்டப்பட்ட நாள், மற்றும் கிறிஸ்து பிறப்பின் எட்டாம் திருநாள். இந்த நாளின் இறைவார்த்தை வழிபாடு நமக்குத் தரும் செய்தி 'ஆண்டவரின் உனக்கு ஆசி அளிப்பாராக!'

அது என்னங்க ஆசி அல்லது ஆசீர்? எபிரேயத்தில் 'ஆசிர்' என்னும் சொல் உள்ளது. அச்சொல்லுக்கு 'செல்வம்' அல்லது 'வளம்' என்பது பொருள். தமிழ் ஒருவேளை எபிரேயச் சொல்லைத் தன் சொல்லாக ஏற்றிருக்கலாம். அல்லது தமிழ்ச்சொல் எபிரேயச் சொல்லாக மாறியிருக்கலாம் என்பது முதல் புரிதல். இரண்டாவதாக, 'ஆசீர்' என்னும் சொல்லை, 'ஆ' மற்றும் 'சீர்' என இரண்டாகப் பிரித்தால், 'ஆ' என்பது பெயர்ச்சொல்லாகவும், 'சீர்' என்பது வினைச்சொல்லாகவும் உள்ளது. 'ஆ' என்பதன் பொருள் 'பசு' என்று அறிவோம். அதைத் தவிர்த்து, 'ஆ' என்றால் 'ஆகுதல்' அல்லது 'ஆகுகை' ('வளர்தல்'), 'ஆறு' ('குணம்' அல்லது 'பண்பு'), 'ஆன்மா' ('உள்ளம்) என்ற பொருள்களும் உண்டு. ஆக, உன் 'ஆகதலும்,' 'ஆறும்,' 'ஆன்மாவும்' 'சீர் ஆகுக!' என்று சொல்வதே 'ஆசீர்

விவிலியத்தில் ஆசீர் மிக முக்கியமானதாக இருக்கக் காரணம் கடவுள் நம் முதற்பெற்றோருக்குக் கொடுத்த சாபம். அந்த சாபம் இல்லை என்றால், ஆசீருக்குப் பயன் இல்லை. ஏனெனில், சாபத்தின் சாயம் ஆசீரில் களையப்படுகின்றது. ஆசீர் நம் உழைப்பைத் தாண்டியதாக இருக்கிறது. ஆசீர் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. ஆசீர் நமக்கு ஆச்சர்யத்தைக் கொண்டு வருகிறது

படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகின் உயிரினங்களுக்கும் (தொநூ 1:24), ஆணுக்கும் பெண்ணுக்கும் (1:28) ஆசி வழங்குகின்றார். நோவாவுக்கும் புதல்வர்களுக்கும் (தொநூ 9:1), ஆபிரகாமுக்கும் (12:1) மற்ற குலமுதுவர்களுக்கும் எனத் தொடரும் ஆசி இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. கீழ்ப்படிதலுக்கான ஆசிகளை இணைச்சட்ட நூல் (28:1-14) பட்டியலிடுகிறது. ஈசாக்குக்குப் பிடித்தமான வேட்டைக் கறியுடன் வருகின்ற ஏசா, 'என் தந்தை எழுந்து தம் மகன் கொண்டு வந்திருக்கும் வேட்டைக் கறியை உண்டு மனமாற எனக்கு ஆசி வழங்குவாராக!' என இறைஞ்கின்றார். தான் தன் சகோதரனால் ஏமாற்றப்பட்டதை உணர்கின்ற அவர், ஈசாக்கை நோக்கி, 'அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா!' என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுகின்றார். அவரின் அழுகை நம்மையும் சற்றே தடுமாற வைக்கிறது

'ஆண்டவரே, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? கடந்த ஆண்டு என் வாழ்க்கையில் கஷ்டம் ஏன்? துன்பம் ஏன்? கலக்கம் ஏன்? ஏமாற்றம் ஏன்? பின்னடைவு ஏன்?' என்று இன்று நாமும் அவர்முன் அழுகின்றோம். ஏசாவுக்கு வழங்குவதற்கு அப்பா ஈசாக்கிடம் ஆசி இல்லை. ஆனால், 'அப்பா, தந்தையே!' என்று தூய ஆவியாரின் உதவியால் நாம் கதறியழும் ஆண்டவர் (இரண்டாம் வாசகம்) நமக்கு நிறைய ஆசி வழங்கக் காத்திருக்கிறார். காலத்திற்கு உட்பட்டு வாழும் நம் நிலையை அறிந்தவர் அவர். ஏனெனில், புனித பவுல், 'காலம் நிறைவுற்றபோது, தன் மகனைக் கன்னியிடம் பிறந்தவராக – அதாவது, காலத்திற்கு உட்பட்டவராக – நம் மண்ணுலகுக்கு அனுப்பினார்.' காலத்தின் வரையறுக்குள் கடவுள் வந்ததால் காலம் புனிதம் பெற்றது. காலம் அடிமை வாழ்விலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமைப் பேற்றை அளிக்கின்றது

கடவுளே நுழைந்த கால நீரோட்டத்தின் மிகச் சிறிய பகுதியே 2022 என்னும் புதிய ஆண்டு. இந்த ஆண்டுக்குள் நுழையும் நமக்குக் கடவுள் தரும் ஆசீரைப் பட்டியலிடுகின்றது முதல் வாசகம் (காண். எண் 6:22-27). மூன்று ஆசிகள், ஒவ்வொரு ஆசியிலும் இரு கூறுகள் என்று அமைந்துள்ளன: ;: (அ) 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!' இதில் ஆ ண்டவர்தான் செயலாற்றுபவர். ஆண்டவர் தான் ஆசீர் அளிப்பவர். 'உனக்கு' என்பது இரண்டாம் நபர் (முன்னிலை) ஒருமை. ஆக, இது மொத்தமாக கூட்டத்தின்முன் வழங்கப்பட்டாலும், ஆசி ஒவ்வொரு தனிநபருக்கும் உரியது. (ஆ) 'ஆண்டவர் அவர் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்வாராக! உனக்கு அருள்கூர்வாராக!' 'ஒளி' என்பது விவிலியத்தில் வாழ்வைக் குறிக்கும். ஆண்டவரின் முகம் எப்போதும் ஒளிரக் கூடியது. இந்த முகம் மனிதர்கள்மேல் படும்போது அவர்களும் ஒளி பெறுகின்றனர். வாழ்வு பெறுகின்றனர். மேலும், உருவகத்தின் அடிப்படையில் 'திருமுகம் ஒளிர்தல்' என்பது 'அருள்கூர்தல்' என்றும் பொருள்படும். 'ஹனான்' ('அருள்') என்ற வார்த்தை 'தன் குழந்தையை கூர்ந்து பார்க்கும் தாயின்' செயலைக் குறிக்கிறது. (இ) 'ஆண்டவர் தன் திருமுகத்தை உயர்த்துவாராக! உனக்கு அமைதி தருவாராக!' மீண்டும் ஆண்டவரின் திருமுகமே இங்கு செயலாற்றுகிறது. 'தாழ்ந்து போன முகம்,' அல்லது 'குனிந்த முகம்' அவமானத்தை அல்லது கோபத்தைக் குறிக்கும் (தொநூ 4:6,7). மேலும், வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொள்ளுதல் கோபத்தையும், ஒருவரிடமிருந்து விலகி நிற்பதையும், கண்டுகொள்ளாததையும் குறிக்கும் (இச 31:18, திபா 30:8, 44:25). ஆண்டவர் தன் முகத்தை தாழ்த்திக் கொள்ளாமல், வேறு பக்கம் திருப்பிக் கொள்ளாமல் உன் பக்கம் திருப்புகிறார். இறுதியாக அவர் 'ஷலோம்' ('அமைதி, நிறைவு, நலம்') தருகிறார்

இந்த மூன்று ஆசிகளையும் ஒருசேர வாசிக்கும்போது என்ன தோன்றுகிறது? எனக்கு வெளியில், என்னில், எனக்கு உள்ளே என்று மூன்று நிலைகளில் வரும் ஆசி நம்மை முழமையான மனிதர்களாக ஆக்குகின்றது – அல்லது நம் ஆகுதலைச் சீர்படுத்துகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகம் (லூக் 2:16-21), 'இடையர்களின் வருகை,' 'இடையர்களின் வியப்பு,' 'மரியாவின் பதிலுணர்வு,' 'இடையர்களின் செல்கை,' மற்றும் 'இயேசுவின் விருத்தசேதனம்' என்று ஐந்து நிகழ்வுகளாக நகர்கிறது. ஆண்டவரின் ஆசி தங்களுக்கு மீட்பாக வந்ததை இடையர்கள் வந்து கண்டு, வியப்படைகின்றனர். ஆண்டவரின் ஆசியால் தான் அடைந்த நிலையை எண்ணி மரியா அனைத்தையும் மனத்தில் இருத்திச் சிந்திக்கின்றார். ஆண்டவரின் ஆசியைப் பெறும் - தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையைப் பெறும் - விருத்தசேதனச் சடங்கு குழந்தைக்கு நிறைவேற்றப்படுகிறது. காலத்திற்கு உட்பட்ட கடவுள், அப்படி உட்படுதலின் வலியையும் உணரத் தொடங்குகின்றார்.

'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' எனக் கேட்ட எலிசபெத்து, மரியாவை இறைவனின் தாய் என வாழ்த்துகின்றார் (லூக் 1:43). கீழைத்திருஅவை ஆயர் நெஸ்டோரியஸ் அவர்களுடைய தப்பறையான கொள்கைக்குப் பதிலிறுக்கின்ற எபேசு பொதுச் சங்கம் (கிபி 431), 'இம்மானுவேல்தான் கடவுள். இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய்' என்று அறிவிக்கின்றது. நாசரேத்து மரியாவை இம்மானுவேலின் தாய், இறைவனின் தாய் என்னும் நிலைக்கு உயர்த்தியது ஆண்டவரின் ஆசியே!

'ஆ-சி' என்னும் சொல்லின் பின்புலத்தில் அன்னை கன்னி மரியாவின் வாழ்க்கை மூன்று வகை 'ஆ-சி'களால் நிறைந்துள்ளது: (அ) 'ஆண்டவரின் சித்தம்,' (ஆ) 'ஆண்டவரின் சிறப்பு,' மற்றும் (இ) 'ஆண்டவரின் சிரிப்பு.' (அ) 'ஆண்டவரின் சித்தம்' - இவ்விரண்டு வார்த்தைகளில் மரியாவின் சரணாகதி அடங்கியுள்ளது. முதல் ஏவா தன் சித்தம் நிறைவேற வேண்டும் என விரும்பியதால் ஆண்டவரின் சாபத்திற்கு உள்ளானார். இரண்டாம் ஏவா ஆண்டவரின் சித்தமே நிறைவேற வேண்டும் என விரும்பியதால் (காண். லூக் 1:37) இறைவனின் ஆசியைப் பெற்று அவரின் தாயாக உயர்கின்றார். (ஆ) 'ஆண்டவரின் சிறப்பு' – மரியா தன் புகழ்ச்சிப் பாடலில், 'இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்' (காண். லூக் 1:48) என்னும் சொற்கள் வழியாக தான் அடைந்துள்ள சிறப்பான நிலையை அறிக்கையிடுகின்றார். இது 'ஆண்டவர் தந்த சிறப்பு' என்பதை அவர் உணர்ந்தார். (இ) 'ஆண்டவரின் சிரிப்பு' – மரியா சிரித்ததாக விவிலியம் பதிவு செய்யவில்லை. ஆனால், அவர் தன் மகிழ்ச்சியை என்றும் தக்கவைத்துக்கொள்கின்றார். சிமியோனின் சொற்கள், இளவல் இயேசு காணாமற் போதல், சிலுவையின் நிழல் என்று எல்லா இடங்களிலும், தன் வலுவின்மை, இயலாமை, மற்றும் கையறுநிலை குறித்து மனதிற்குள்ளேயே சிரித்துக்கொள்கின்றார். 'ஆண்டவரின் மகிழ்வே நம் வலிமை' (நெகே 8:10) என்ற நிலையில் அவர் ஆண்டவரில் எந்நேரமும் சிரித்தவராக இருந்தார்.

இறைவனின் தாய் அவர் என்றால், இம்மானுவேலின் சகோதர சகோதரிகளாகிய நம் தாயும் அவரே. நம் முதல் தாய் ஏவா கொண்டு வந்த சாபத்தை, நம்மிடமிருந்து அகற்றி, நமக்கு ஆசியைப் பெற்றுத் தர வந்த இந்தத் தாய் நம் புத்தாண்டுக்கு வழங்கும் செய்தியும் இதுவே.

(அ) 'ஆண்டவரின் சித்தம் நிறைவேற்றுங்கள்!' வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் இறைவனின் குரலைக் கேட்டு வழிநடக்க இந்த ஆண்டு முயற்சி செய்வோம். 'நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், 'இதுதான் வழி. இதில் நடந்து செல்லுங்கள்' என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்' (எசா 30:21) என்கிறார் கடவுள். இறைவனின் குரலைக் கேட்க வேண்டுமென்றால், நம் உள்ளிருக்கும் ஓசைகள் அடங்க வேண்டும். நம் வெளிப்புறக் கவனச்சிதறல்கள் குறைய வேண்டும்.

(ஆ) 'ஆண்டவரின் சிறப்புக்கு உரியவர் நீங்கள்!' இந்த உலகின் பார்வையில் நாம் எப்படி இருந்தாலும், நம் இறைவனின் பார்வையில் மதிப்புக்கு உரியவர்கள் நாம் (எசா 43:4). ஆக, நம் தன்மதிப்பையும், மனித மாண்பையும் சீர்குலைக்கும் எதையும் செய்தல் ஆகாது. மதிப்பற்றவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது (காண். 2 திமொ 2:20-21) அவசியம்.

(இ) 'ஆண்டவரின் சிரிப்பைக் கொண்டிருங்கள்!' இந்த ஆண்டு நாம் நிறைய சிரிக்க வேண்டும். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்பதால் மட்டுமல்ல, மாறாக, இறைவன் நம்மோடு இருப்பதால். அவநம்பிக்கை, அதீத எண்ணம், கவலை உள்ளம் அனைத்தையும் ஓரத் தள்ளிவிட்டு என்ன நடந்தாலும், எதைப் பார்த்தாலும், நாமே முட்டாள்தனமாகச் செயல்பட்டாலும் ஒரு புன்முறுவல் பூத்துவிட்டு அடுத்த நிமிடத்திற்கு நகர வேண்டும்.

'ஆண்டவர் உனக்கு ஆ-சி வழங்குவாராக!' என்று நாம் வாயார ஒருவர் மற்றவரை வாழ்த்துவோம். இதையே திருப்பாடல் ஆசிரியர் தன் இறைவேண்டலாக (67), 'கடவுளே! எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக!' என முன்மொழிகின்றார்.

Thursday, December 30, 2021

யாவரும் நிறைவாக

இன்றைய (31 டிசம்பர் 2021) நற்செய்தி (யோவா 1:1-18)

யாவரும் நிறைவாக

இன்று காலண்டர் ஆண்டின் இறுதி நாள். 

இன்றைய நற்செய்தியின் மூன்று கருத்துருக்கள் இந்த இறுதி நாளில் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன:

(அ) 'அவரிடம் வாழ்வு'

'அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது. இருள் அதன்மேல் வெற்றிகொள்ளவில்லை.'

இந்த ஆண்டு முழுவதும் நம் வாழ்வில் ஒளியும் இருளும் இணைந்து பயணித்திருக்கின்றன. பெருந்தொற்று, நிதிப் பிரச்சினை, அரசியல்தளத்தில் மாற்றங்கள், புதிய வரி விதிப்புகள், விலையேற்றம், தனிப்பட்ட வாழ்வில் பிரச்சினைகள் என இருள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. ஆனாலும், 'இருள் நம்மேல் வெற்றி கொள்ளவில்லை' என்பதே நம் வாழ்வியல் அனுபவம். நாம் அனைத்தையும் கடந்து வந்துவிட்டோம். இருளின் இல்லாமையை நம் விவிலியம் வாக்குறுதியாகக் கொடுக்கவில்லை. மாறாக, இருள் இருந்தாலும், இருள் நம்மை வெற்றி கொள்ளாது என்ற நம்பிக்கையைத் தருகின்றது. ஆக, இருள் நம்மை வெற்றிகொள்ள இயலாத நேரங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

(ஆ) 'கடவுளின் பிள்ளைகள்'

'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ, உடல் இச்சையினாலோ, ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல. மாறாக, கடவுளால் பிறந்தவர்கள்.'

இந்த அருள்வாக்கியத்தின் முதல் பகுதி சோகமாக இருந்தாலும், பிந்தைய பகுதி மகிழ்ச்சியாக இருக்கிறது. 'அவரை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையைக் கொடுக்கின்றார்.' அதாவது, ஒரு ஸ்டெப் நம் வாழ்க்கையை உயர்த்துகிறார். இயேசு தன் வாழ்க்கை முழுவதிலும் தான் சந்தித்த, தன்னைச் சந்தித்த அனைவருடைய வாழ்க்கையையும் ஒரு ஸ்டெப் உயர்த்துகின்றார். உடல் விருப்பத்தில் பிறந்த மனிதர்களிடமே இவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்றால், அதைவிட உயர்வாகப் பிறந்தவர்கள் என்று சொல்லப்படுகின்ற 'கடவுளின் பிள்ளைகளிடம்' எவ்வளவு ஆற்றல் இருக்கும்! இந்த ஆற்றலே நம்மைப் புதிய ஆண்டுக்குள் உந்தித் தள்ளுவதாக!

(இ) 'யாவரும் நிறைவாக'

'இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்' என்கிறார் யோவான். ஆண்டின் நிறைவில் நம் மனமும் அவருடைய நிறைவால் நிறைந்துள்ளது. 'இது போதாது' என்ற குறைவு மனப்பான்மை, நம்மை 'இன்னும் இன்னும் வேண்டும்' என்ற தேடலுக்கு உட்படுத்தியிருக்கலாம். உறவுகளில் நம் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கலாம். தேவைகளை நாம் கூட்டிக்கொண்டே இருந்திருக்கலாம். அல்லது புதிய புதிய நிலைகளை எதிர்நோக்கியிருந்திருக்கலாம். 'போதாது என்றால் எதுவும் போதாது. போதும் என்றால் இதுவே போதும்!' என்ற மனநிலையை நாம் பெற்றுக்கொள்வோம். ஏனெனில், நம் நிறைவாக இறைவன் இருக்கின்றார்.

'நன்றி' என்ற ஒற்றைச் சொல்லால் நாம் இந்த ஆண்டிற்கு விடைகொடுப்போம்.

'யாவரும் நிறைவாக' என்று இறங்கி வந்த வானகத்தின் நிறைவு அனைவரையும் நிரப்ப ஒருவர் மற்றவருக்காக இறைவேண்டல் செய்வோம்!

Wednesday, December 29, 2021

அன்னா

இன்றைய (30 டிசம்பர் 2021) நற்செய்தி (லூக் 2:36-40)

அன்னா

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண் ஒருவர் (சிமியோன்) குழந்தை இயேசுவைத் தன் கைகளில் ஏந்தினார். அதன் இணையாக இன்றைய நற்செய்தியில் பெண் ஒருவர் (அன்னா) குழந்தை இயேசுவைப் பற்றி மற்றவர்களிடம் அறிவிக்கின்றார்.

ஆசேர் குலம் செழுமையான குலம் (காண். தொநூ 49:20, இச 33:24). இந்தக் குலத்திலிருந்து வந்தவர் அன்னா. செழுமை இழந்து காணப்படுகின்றார் இவர். மணமாகி ஏழு ஆண்டுகள் (நிறைவைக் குறிக்கும் எண்) கணவரோடு வாழ்கின்றார். இவருக்கு வயது எண்பத்து நான்கு (ஏழு முறை பன்னிரண்டு – நிறைவிலும் நிறைவு).

வாழ்வின் பயணம் மாறுகிறது இவருக்கு.

மணவாழ்க்கை என்ற இருந்த இவருடைய பயணம் கணவருடைய இறப்புக்குப் பின்னர் கடவுளுடைய ஆலயத்தில் வாழ்க்கை என்று மாறுகிறது இவருக்கு. வாழ்வின் பயணம் மாறினாலும் இனிமையாகப் பயணம் செய்கின்றார் அன்னா.

இவரைப் பற்றி லூக்கா இப்படிப் பதிவு செய்கின்றார்: (அ) 'கோவிலை விட்டு நீங்கவில்லை' - இறைவனையே தன் இல்லிடமாகக் கொண்டார். (ஆ) 'நோன்பிருந்து மன்றாடுகின்றார்' – உடல்சார்ந்த அனைத்துத் தேவைகளையும் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. (இ) 'அல்லும் பகலும் திருப்பணி செய்து வந்தார்' – தன் வாழ்க்கையை மற்றவர்களை நோக்கித் திருப்புகின்றார்.

வாழ்வில் இழப்புகளை நாம் சந்திக்கும்போது, பல நேரங்களில் நம் உள்ளம் மற்றவர்களுக்கான கதவை மூடிக்கொள்ளவே நம்மைத் தூண்டுகின்றது. ஆனால், கதவுகள் மூடப்பட்டால் இழப்பின் சோகம் அதிகமாகிறது. கதவுகள் திறந்து நாம் மற்றவர்களை நோக்கத் தொடங்கினால், வாழ்க்கை ரம்மியமாக மாறுகிறது.

அன்னா எல்லாரிடமும் குழந்தையைப் பற்றிப் பேசுகின்றார்.

தன் மகிழ்ச்சியை அவர் தன்னகத்தே வைத்துக்கொள்ளவில்லை.

வயது, தன் மணவாழ்க்கை நிலை என எதுவும் அவரைத் தடுக்க இயலவில்லை. 

ஒருவர் மற்றவரிடம் நாம் நிறைவை மட்டும் கண்டாலே, அந்த நிறைவை மட்டும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னாலே வாழ்க்கை இனிமையாகும்.

அன்னா பாட்டியைப் பற்றி ஊரார் எப்படிப் பேசினாலும், அவர் என்னவோ அனைவரையும் பற்றி நன்மையானவற்றையே பேசினார். ஏனெனில், ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ளதைத்தானே மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்!


Tuesday, December 28, 2021

வெளிப்பாடு அருளும் ஒளி

நாளின் (29 டிசம்பர் 2021) நல்வாக்கு

வெளிப்பாடு அருளும் ஒளி

இன்றைய இரண்டு வாசகங்களிலும், 'ஒளி' என்னும் உருவகம் முதன்மையாக இருக்கிறது. 

'ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில்தான் இருக்கின்றனர். தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு கொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர்' என்று முதல் வாசகத்தில் திருத்தூதர் யோவான், ஒளியில் நிலைத்திருப்பது என்பது அன்பு செய்வதைக் குறிப்பதாக முன்மொழிகின்றார்.

நற்செய்தி வாசகத்தில், குழந்தை இயேசுவை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கும் நிகழ்வில், 'மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி. இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை' என்கிறார் சிமியோன். இங்கே, ஒளி என்பது இயேசுவையும் அவர் தருகின்ற மீட்பையும் குறிக்கிறது.

ஒளி என்பதை நாம் இன்று எப்படிப் புரிந்துகொள்வது?

அன்பு என்பது ஒளியாக மாற முடியும்.

ஏனெனில், நாம் அன்பு செய்யும்போது நம்மைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் புதிய புரிதலைப் பெறுகின்றோம். அன்பின் ஒளி கொண்டு நாம் மற்றவர்களை நன்றாகப் பார்க்க முடிகிறது.

சில நேரங்களில் அன்பு என்னும் ஒளி நம் பார்வையை மறைக்கவும் செய்யலாம். நம் அன்புக்குரியவர்களின் தவறுகளை, பிறழ்வுகளை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கவும் அன்பு நம்மைத் தூண்டுகிறது.

குழந்தை இயேசுவை நம் கைகளில் ஏந்துகின்ற நாம் சிமியோன் போல அக்குழந்தையின் கண்களில் நம் கண்களைக் கண்டோம் எனில், நாமும் மீட்புப் பெறலாம்.

மாசில்லாக் குழந்தைகள்

நாளின் (28 டிசம்பர் 2021) நற்புனிதர்

மாசில்லாக் குழந்தைகள்

மாசில்லாக் குழந்தைகள் கொல்லப்படும் நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரிய ஏரோது தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள தன் வீட்டு உறுப்பினர்களையே கொல்லத் துணிந்தவர். தனக்குப் போட்டியாக ஓர் அரசர் தோன்றுவதை அவர் விரும்பியிருக்க மாட்டார். ஆனால், குழந்தைகள் படுகொலை பற்றிய எந்தக் குறிப்பும் வரலாற்றில் இல்லை.

இந்நிகழ்வு வரலாற்று நிகழ்வு இல்லை என்றால், இதை எப்படிப் புரிந்துகொள்வது?

முதலில், இது ஓர் இலக்கிய உத்தி. அதாவது, பலர் கொல்லப்பட கதாநாயகன் மட்டும் தப்பிப்பது என்பது இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஓர் உத்தி. இந்த உத்தியின் வழியாக, கதாநாயாகன் மற்ற எல்லாரையும் விட மேன்மையானவராகக் காட்டப்படுகின்றார். விவிலியத்தில் இதற்கு இரு உதாரணங்களைக் கூறலாம். முதலில், மோசே. பாரவோன் அரசன் எபிரேய ஆண் குழந்தைகளைக் கொல்ல முயற்சி செய்ய, மோசே மட்டும் காப்பாற்றப்படுகின்றார். இரண்டாவதாக, நீதித்தலைவர்கள் நூலில், கிதியோனின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட, யோத்தாம் மற்றும் தப்புகின்றார். இப்படித் தப்புகிறவர்கள் அரசாள்வர் என்பதும் இலக்கிய உத்தி.

இரண்டாவதாக, இது ஓர் இறையியல் நிகழ்வு. இயேசுவின் குழந்தைப் பருவக் கதையாடல் நிகழ்வுகளில் முதல் ஏற்பாட்டு இறைவாக்குகள் நிறைவேறுவதாகப் பதிவிடுகிறார் மத்தேயு. அந்த வரிசையில், குழந்தைகள் கொல்லப்படும் நிகழ்வில், இரு இறைவாக்குகள் நிறைவேறுகின்றன. ஒன்று, 'எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்' என்னும் ஓசேயா (11:1) இறைவாக்கு. இதில், 'என் மகன்' என்பது 'இஸ்ரயேல் மக்களை' குறிக்கின்றது. இரண்டு, 'ராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது. ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது. இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார். ஆறுதல் பெற அவள் மறுக்கிறார். ஏனெனில், அவர் குழந்தைகள் அவரோடு இல்லை' (எரே 31:15). இந்த இறைவாக்கை எரேமியா நாடுகடத்தலின் பின்புலத்தில் உரைக்கின்றார். ராகேல் என்பவர் யாக்கோபின் மனைவி. இவருடைய கல்லறை எருசலேமுக்கு வெளியே இருந்தது. இஸ்ரயேல் மக்கள் எருசலேமை விட்டு வெளியே நாடுகடத்தப்படும்போது, அவருடைய கல்லறைக்குள் இருந்து அவர் அழுவதாகப் பதிவு செய்கிறார் எரேமியா.

மாசில்லாக் குழந்தைகள் இயேசுவுக்குத் தங்கள் இரத்தத்தால் சான்று பகர்ந்தார்கள் என்று ஆன்மிக அளவில் புரிந்துகொள்வதை என் மனம் ஏற்க மறுக்கின்றது.

தன் குழந்தையைக் காப்பாற்ற நினைத்த கடவுள் மற்ற குழந்தைகளையும் காப்பாற்றியிருக்கலாமே? பெரிய ஏரோது குழந்தைகளைக் கொல்லும் வன்மம் கொண்டிருந்தால், குழந்தைகளைக் காப்பாற்றாத கடவுளும் வன்மம் கொண்டிருக்கிறார்தானே!

தன் குழந்தையின் வளர்ப்புத் தந்தையைக் கனவு வழியாக எச்சரித்த கடவுள் மற்ற தந்தையர்களையும் எச்சரித்திருக்கலாமே? அல்லது பெரிய ஏரோதுவை அழித்திருக்கலாமே!

யூதேய மலைநாட்டிலுள்ள சக்கரியா-எலிசபெத்தின் குழந்தை திருமுழுக்கு யோவான் எப்படிக் காப்பாற்றபட்டார்?

கடவுள் தனக்குத் தேவையானவர்களை மட்டும் காப்பாற்றிக்கொள்கிறார் என்றால், அவர் தன்னலம் கொண்டவர் இல்லையா?

ஒரே இரவில் பச்சிளங் குழந்தைகள் பலர் கொல்லப்பட்டதற்கு யார் காரணம்? கடவுள், ஏரோது, ஞானியர், அகுஸ்து சீசர், வானதூதர், நீங்கள், நான் என்று எல்லாருமே காரணம்தான்.

குழந்தைகளின் இயலாமை, மௌனம், மென்மை, கையறுநிலை ஆகியவை மற்றவர்களின் தன்னலத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

அதிகாரம் எப்போதும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவே விரும்புகிறது. பெரிய ஏரோதுவின் பாதுகாப்பற்ற உணர்வையும், கோழைத்தனத்தையும், மூடத்தனத்தையும் இந்நிகழ்வு வெளிப்படுத்துகின்றது. மற்றொரு பக்கம், கொடுங்கோல் ஆட்சியாளர்கள் வரலாற்றின் போக்கை தங்களுக்கு ஏற்றாற்போல மாற்ற நினைத்தாலும், இறைவன் அவற்றின் ஊடேயும் தன் திட்டத்தை நிறைவேற்றுகின்றார்.

மாசில்லாக் குழந்தைகள் இன்றும் நம் முன்னர் மடிந்துகொண்டே இருக்கின்றனர்.

Monday, December 27, 2021

மற்றச் சீடர்

நாளின் (27 டிசம்பர் 2021) நற்புனிதர்

மற்றச் சீடர்

'இயேசு அன்பு செய்த சீடர்' அல்லது 'மற்றச் சீடர்' என நான்காம் நற்செய்தி நூலில் அறியப்படுகின்ற புனித யோவானின் திருநாளை இன்று நாம் கொண்டாடுகின்றோம். இவர் செபதேயுவின் மகன் என்றும், இவருடைய சகோதரர் யாக்கோபு என்றும் ஒத்தமைவு நற்செய்தி நூல்கள் முன்மொழிகின்றன. யோவான் நற்செய்தி, மூன்று மடல்கள், மற்றும் திருவெளிப்பாடு என்று இவருடைய எழுத்துகள் இரண்டாம் ஏற்பாட்டில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியை நிரப்புகின்றன. இயேசுவின் பன்னிருவரில் இளையவராக இருந்தவர் இவரே. இவரிடமே இயேசு தன் தாயை ஒப்படைக்கின்றார். இவருடைய இதயம் கழுகு போல மேலே பறந்தது என்பதால், இவருடைய நற்செய்தி நூலுக்கு, 'கழுகு' என்னும் அடையாளம் கொடுக்கப்படுகின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் தாங்கள் இயேசுவிடம் கண்டதையும், கேட்டதையும் எழுதுவதாகப் பதிவு செய்கின்றார். மேலும், தன் எழுத்துகள் தனக்கு மகிழ்ச்சி தருகின்ற என மொழிகின்றார். நற்செய்தி வாசகத்தில், 'சென்றார், கண்டார், நம்பினார்' என்று இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்று பகர்கின்றார்.

யோவான் மற்றும் அவருடைய எழுத்துகள் இன்று நமக்கு ஆறு வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றன:

(1) 'நல்ல ஆயன் போல வாழ்வது'

இயேசுவை நல்ல ஆயனாக உருவகித்து, அதையே ஒரு சிறந்த தலைமைத்துவப் பண்பாகத் தருபவர் யோவான். வாழ்க்கையை நாம் இரு நிலைகளில் வாழ முடியும்: ஒன்று, நல்ல ஆயன் போல. இரண்டு, கூலிக்காரர் போல. கூலிக்காரர் தன் வாழ்வைச் சுமையாகப் பார்க்கிறார், அவர் தான் காட்டும் அக்கறை தனக்குப் பணமாகத் திரும்ப வேண்டும் என நினைக்கிறார், அவர் தன் பொறுப்பைத் தள்ளி விடுகிறார். ஆனால், ஆயன் தன் வாழ்வை சுகமாகப் பார்க்கிறார். கணக்குப் பார்க்காமல் அக்கறை காட்டுகின்றார். அவர் பொறுப்புணர்வுடன் வாழ்கிறார். நல்ல ஆயன் போல நாம் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். தலைமைத்துவம் நம் தனிப்பட்ட வாழ்வில் தொடங்க வேண்டும்.

(2) சீடத்துவம் நம் வாழ்வின் அனைத்துத் தளங்களையும் பாதிக்கிறது

இயேசுவின் சீடராக மாறுவது என்பது இரயிலின் ஒரு பெட்டியில் ஏறுவது போல அல்ல. மாறாக, வானூர்தியில் பறப்பது போல. அதாவது, சீடத்துவம் என்பதை நம் வாழ்வின் ஒரு பகுதியாகப் பார்க்க இயலாது. அது நம் வாழ்வின் அனைத்துத் தளங்களையும் தழுவி நிற்கிறது. இயேசுவின் சீடராகத் தான் பெற்ற அழைப்பில் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் நிலைத்து நிற்கிறார் யோவான்.

(3) இயேசு நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்

தான் இயேசுவைப் பற்றி நிறைய எழுதினாலும், இறுதியில், அனைத்தையும் எழுதினால் இந்த உலகமே கொள்ளாது எனத் தன் நற்செய்தியை நிறைவு செய்கிறார் யோவான். ஏனெனில், இயேசு அனுபவம் என்பது நம் சொற்களையும் கடந்து நிற்கிறது.

(4) சான்று பகர்தலின் ஆற்றல்

யோவான் நற்செய்தியில் இயேசுவைக் கண்ட அனைவரும் அவருக்குச் சான்று பகர்கின்றனர். 'இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி' என்று திருமுழுக்கு யோவான், 'நாங்கள் மெசியாவைக் கண்டோம்' என்று அந்திரேயா, 'வந்து பாருங்கள்' என்று சமாரியப் பெண், 'நான் பார்வையற்று இருந்தேன். இப்போது பார்க்கிறேன்' என பார்வையற்ற நபர், 'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்று மகதலா மரியா என அனைவரும் இயேசுவுக்குச் சான்று பகர்கின்றனர். இயேசுவைப் பற்றி நான் இன்று பகரும் சான்று என்ன?

(5) 'இறத்தலின்' ஆற்றல்

யோவான் நற்செய்தி முழுவதும் 'மாட்சி' இழையோடிக் கிடந்தாலும், 'இறப்பும்' இழையோடிக் கிடக்கின்றது. நற்செய்தியின் ஒவ்வொரு நகர்வும் இயேசுவின் இறப்பைப் பின்புலத்தில் கொண்டிருக்கிறது. இறப்பின் ஆற்றலை மிக அழகாக கோதுமை மணி உருவகத்தில் பதிவு செய்கிறார் யோவான்: 'கோதுமை மணி மண்ணில் விழுந்து இறந்தால்தான் பலன் தரும்!' ஆக, யோவானைப் பொருத்தவரையில், 'இறத்தல்' அல்லது 'மடிதல்' என்பது கனி தருதலுக்கான முதல் படி.

(6) தங்குதல் அல்லது இணைந்திருத்தல் ஆற்றல்

நற்செய்தியின் தொடக்கத்தில் முதற் சீடர்கள் இயேசுவுடன் சென்று தங்குகின்றனர். திராட்சைச் செடி உருவகத்தில் இணைந்திருத்தல் முதன்மைப்படுத்தப்படுகின்றது. தங்குதல் என்பது ஒரு நீடித்த அனுபவம். அந்த அனுபவம் ஒருவருடைய வாழ்வை முழுமையாக மாற்றுகிறது. நாம் இன்று செல்தலுக்குத் தரும் முக்கியத்துவத்தை தங்குதலுக்குத் தருவதில்லை. தங்குதல் என்பதை நாம் நேர விரயமாகவும் ஆற்றல் விரயமாகவும் பார்க்கின்றோம்.

(6அ) கட்டின்மை அல்லது விடுதலை

எழுதிக்கொண்டிருக்கும்போது என் மனத்தில் எழுந்த ஏழாவது பாடத்தை, '6அ' எனப் பதிவு செய்வோம். 'உண்மையை அறிந்தவர்களாக இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' (காண். யோவா 8:31-32) என்று சொல்லும் இயேசுவின் சொற்கள் யோவான் நற்செய்தியில் உள்ளன. யோவானைப் பொருத்தவரையில் மனிதர்களின் மிக முதன்மையான மற்றும் மேன்மையான உணர்வு கட்டின்மை. நம் வாழ்வு இதை நோக்கியே நகர வேண்டும். நம் விடுதலை அல்லது கட்டின்மைக்குக் குறுக்கே இருக்கும் அக மற்றும் புறக் காரணிகள் அறவே களையப்பட வேண்டும்.

மேற்காணும் வாழ்க்கைப் பாடங்களை நம் வாழ்வியல் எதார்த்தங்களாக மாற்றினால் நாமும் மற்றச் சீடரே.

இன்று நாம் கொண்டாடும் யோவானின் எழுத்துகளோடு இன்றைய நாளின் சில நிமிடங்களையாவது கழித்தல் நலம்.

Saturday, December 25, 2021

இறைவனில் உறையும் குடும்பம்

திருக்குடும்பத் திருவிழா

I. 1 சாமுவேல் 1:20-22,24-28 II. 1 யோவான் 3:1-2,21-24  III. லூக்கா 2:41-52

இறைவனில் உறையும் குடும்பம்

'குடும்பங்களை மனிதர்கள் உருவாக்கலாம். ஆனால், திருக்குடும்பத்தை இறைவனே உருவாக்குகின்றார்' என்பது நம் வாழ்வியல் அனுபவமாக இருக்கலாம். இந்த ஆண்டு நாம் கொண்டாடும் திருக்குடும்பத் திருவிழா மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: (அ) 'குடும்பமும் நற்செய்திப் பணியும்' என்ற தலைப்பில் நடந்த ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவாக வெளிவந்த 'அன்பின் மகிழ்ச்சி' (2015) என்னும் திருத்தூது ஊக்கவுரையின் ஐந்தாமாண்டு நிறைவில், இந்த ஊக்கவுரை முன்மொழிகின்ற இறையியல் மற்றும் மேய்ப்புப் பணிசார் அக்கறைகளை நாம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். (ஆ) இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி நாம் தொடங்கிய கூட்டொருங்கியக்கத்துக்கான மாமன்றம், இணைந்து பயணித்தலை வலியுறுத்துகிறது. திருஅவையின் இணைந்து பயணித்தல் அதன் அடிப்படை அலகான குடும்பத்தில்தான் தொடங்குகின்றது. (இ) பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நாம் இந்த நாள்களில் குடும்பத்தின் இருத்தலைக் கொண்டாடத் தொடங்கியிருக்கும் வேளையில், இன்னொரு பக்கம், பெருந்தொற்றின் தாக்கம் நம் குடும்பங்களின்மேல் ஏற்படுத்தியுள்ள பொருளாதார சுமைகளையும், உறவு இழப்புகளையும் தாண்டி நம்பிக்கையை அணையாமல் காத்து வருகின்றோம்.

'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்' என்று ஆண் பெண் ஏற்றுக்கொண்டு, 'ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள், 'ஆண்டவரின் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்'' என்று சொன்ன மனிதக் குடும்பம் கடந்து வந்த பாதையை நினைக்கும்போது, குடும்பம் என்ற நிறுவனம் இன்று தேவையற்ற சுமையாக, அல்லது தேவைக்கேற்ற சுகமாகப் பார்க்கும் நிலையில் வந்து நிற்கிறது.

திருமணம் என்னும் அருளடையாளத்தை நாம் ஆலயத்தில் கொண்டாடுகின்றோம். மணமகனும் மணமகளும் அருளடையாளத்தை நிறைவேற்றுபவர்கள் என்றாலும், அங்கே அவர்களின் அன்பை முத்திரையிட்டுக் காத்தருள்பவர் ஆண்டவரே. ஆண்டவரின் இல்லத்தில் தொடங்குகின்ற குடும்பம் ஆண்டவர் தங்களுடைய இல்லத்தில் இருப்பதை மறக்கும்போது பிறழ்வுபடத் தொடங்குகின்றது. அல்லது ஆண்டவர் தங்களுடைய இல்லத்தில் இருப்பதை உணர்கின்ற குடும்பம் சிறப்புடன் திகழ்கிறது.

இறைவனில் உறையும் குடும்பமே திருக்குடும்பம் என்ற மையச்சிந்தனையில் சுழல்கின்றன இன்றைய நாளின் வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், அன்னா நீண்ட காலக் காத்திருத்தலுக்குப் பின்னர், தன் இறைவேண்டலின் பயனாக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கின்றார். அந்தக் குழந்தைக்குப் பெயரிடுகின்றார். அந்தக் குழந்தையை மீண்டும் கடவுளுக்கே அர்ப்பணம் செய்கின்றார். அன்னாவின் இச்செயல் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. தவம்கிடந்து பெற்ற தன் குழந்தையைத் தனக்கென வைத்துக்கொள்ளாமல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கத் துணிகின்றார். கடவுள் கொடுத்ததை கடவுளுக்கே கொடுக்கின்றார். தன் கையில் உள்ள அனைத்துச் செப்புக்காசுகளையும் ஆலயத்தில் போட்ட கைம்பெண் போல, தன் குழந்தையைக் காணிக்கையாக்குகின்றார் அன்னா. அன்னாவின் இறைநம்பிக்கை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடமாக இருக்கிறது. தன்னையும் தன் இறைவனையும் பிரித்துப் பார்க்கவில்லை அவர். கடவுளையும் தன் இல்லத்தில் ஒரு நபராகவே பார்க்கின்றார். அல்லது தன் இல்லத்தை இறைவனின் இல்லத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கின்றார். இதுதான் முழுமையான அர்ப்பணம். அதாவது, எதையும் திரும்ப எதிர்பார்க்காத அர்ப்பணம். இந்த அர்ப்பணம்தான் குடும்பத்தில் கணவனையும், மனைவிiயும் இணைக்கிறது.

இங்கே, எல்கானா மற்றும் அன்னா என்னும் தம்பதியினர் தங்களுடைய இல்லற வாழ்வில், இறைவனைத் தொழுவதை முதன்மையான பணியாகக் கொண்டிருக்கின்றனர். அன்னா தன் கையறுநிலையில் இறைவனையே தழுவிக்கொள்கின்றார். தன் குழந்தையும் இறைவனைத் தழுவிக்கொள்ளவும், இஸ்ரயேலின் பெரிய இறைவாக்கினராகவும் அருள்பணியாளராகவும் மாறும்படி இறைவனுக்கே அதை அர்ப்பணம் செய்கின்றார். எல்கானா-அன்னா-சாமுவேல் குடும்பம் இறைவனில் உறையும் குடும்பமாக இருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா 3:1-2, 21-24) கடவுளின் குடும்பம் என்ற பெரிய குடும்பத்தைப் பற்றிப் பேசுகிறது. 'கடவுளின் மக்கள்' என அழைக்கப்படும் மக்கள், அந்த நிலையில் நிலைத்திருக்க, 'நம்பிக்கை,' 'அன்பு' என்ற இரண்டு பண்புகள் தேவைப்படுகின்றன. அல்லது, 'நம்பிக்கை' என்ற கணவனும், 'அன்பு' என்ற மனைவியும் இணைந்து 'கடவுளின் மக்களை' பெற்றெடுக்கின்றனர். இந்த இரண்டும் கடவுளின் மக்களை அவர்கள் தொடர்ந்து அதே நிலையில் நிலைத்திருக்க உதவி செய்கின்றன.

திருத்தூதர் யோவான் அனைத்து நம்பிக்கையாளர்களையும் இறைவனின் குடும்ப உறுப்பினர்களாகப் பார்க்கின்றார். கடவுள் நம்மேல் கொண்டுள்ள அன்பினால் நாம் அவருடைய பிள்ளைகளாக மாறுகின்றோம். அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்தல் வழியாக நாம் பதிலன்பு செலுத்துகிறோம்.

ஆக, யோவானைப் பொருத்தவரையில் நம்பிக்கை மற்றும் அன்பு வழியாக நாம் இறைமையில் பங்கேற்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 2:41-52) திருக்குடும்பம் ஒரு பிரச்சினையைச் சந்திக்கிறது. இளவல் இயேசுவைக் காணவில்லை. திருக்குடும்பம் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் செல்கிறது. அந்த நேரத்தில் இயேசுவுக்கு வயது 12. யூத சமூகத்தில், 12 வயதில்தான் ஒரு குழந்தை முழுப்பருவம் அடைகிறது. இந்த வயதிலிருந்து அக்குழந்தை யூதச் சட்டங்களைத் தெரிந்துகொள்ளவும், அவற்றின்படி நடக்கவும் வேண்டும் என்பது வழக்கம். அந்தச் சட்டங்களில் ஒன்றுதான் எருசலேமுக்குத் திருப்பயணம் செல்வது. இந்த வழக்கப்படியே, இயேசுவை அழைத்துக்கொண்டு தங்களின் ஆண்டு ஆன்மிகக் கடமைகளை நிறைவேற்ற திருக்குடும்பம் எருசலேமுக்கு வருகிறது.

இங்கே நற்செய்தியாளர் லூக்காவின் நோக்கம் இயேசுவைக் கடவுளின் மகன் என்று முன்வைப்பதாகவும், இயேசு செய்ய வேண்டிய பணிக்கான அர்ப்பணத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. தன் பெற்றோருடன் ஆலயம் வரும் இயேசு, அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தன் தந்தையின் இல்லத்தில் தங்கிவிடுகின்றார். அந்த இல்லத்தில்தான் அவர் மறைநூல் வல்லுநர்கள் மறைநூலைப் புரிந்துகொள்ளும் விதம் பற்றிக் கேள்வியெழுப்புகின்றார். இளவலாய் இருந்தாலும், அவருக்குத் தன் பயணம் முழுவதும் இந்த ஆலயத்தை மையப்படுத்தியதே என்று அவர் அறிந்திருந்தார்.

இயேசுவின் பெற்றோர்களின் நிலை மிகவும் கடினமானதாக இருக்கிறது. இது மரியாவின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. இருந்தாலும், தாங்கள் செய்ய வேண்டிய வேலையைச் சரியாகச் செய்கிறார்கள். முதன் முதலாக இயேசுவை எருசலேமுக்கு அழைத்து வந்து அவருக்கு அந்த நகரையும், ஆலயத்தையும் அறிமுகம் செய்கின்றனர்.

இந்த நிகழ்வைப் பற்றி, 'தந்தையின் இதயத்தோடு' என்னும் திருத்தூது மடலில் எழுதுகின்ற திருத்தந்தை பிரான்சிஸ், புனித யோசேப்பு தன் பயனற்ற நிலையை இங்கே உணர்ந்தார் என எழுதுகின்றார். பயனற்ற நிலையை உணர்தல் என்பது, தான் இல்லாமலேயே இந்த உலகில் நிகழ்வுகள் நகரும் என்னும் மெய்ஞ்ஞானம் பெறுவது. ஏனெனில், அனைத்தையும் நடத்துபவர் கடவுளே. தன்னுடைமையாக்கும் அன்பு கொண்டிருக்கும் ஒருவர் தன்னால் மட்டுமே மற்றவர்களுக்குப் பயன் என்று சொல்லி, மற்றவர்களும் தன்னைப் போல இருக்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால், தற்கையளிப்பைக் கற்றுக்கொண்ட ஒருவர், கற்புநிறை அன்போடு தன் பயனற்ற நிலையை ஏற்றுக்கொள்வார்.

'என் தந்தையின் அலுவல்களில் நான் ஈடுபட்டிருக்க வேண்டும்' என்னும் இயேசுவின் வார்த்தைகள் யோசேப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். தந்தையின் அலுவல் தச்சுத்தொழில் இல்லையா! என்று ஒரு நொடி நினைத்திருப்பார். ஆனால், உடனடியாக இறைத்திட்டத்தை உணர்ந்தவராக மௌனம் காத்திருப்பார். மரியா அனைத்தையும் தன் உள்ளத்தில் பதித்து சிந்திக்கின்றார். இயேசு நாசரேத்து திரும்புகின்றார். ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து வாழ்கின்றார்.

சாமுவேல், மற்றும் இயேசுவின் குடும்பங்களைப் போல நம்பிக்கையாளர்களின் குடும்பங்களும் இறைநம்பிக்கையையும், இறையன்பையும் அடிப்படையாகக் கொண்டு அவரில் உறைதல் நலம்.

இறைவனில் குடும்பங்கள் உறைவது எப்படி?

(அ) பற்றுகளை விடுதல்

தன் குழந்தை தன் வழியாக வந்தாலும், அது தன்னுடையது அல்ல என்று உணர்கின்றார் அன்னா. தான் குழந்தையின் வளர்ப்புத் தந்தையே என்ற வரையறையை உணர்ந்து, நிழல்நில் தந்தையாக இயேசுவோடு வலம் வரத் துணிகின்றார் யோசேப்பு. தன் மகனுடைய செயல்கள் தனக்கு வியப்பைத் தந்தாலும், அவரை ஏற்றுக்கொள்கின்றார் மரியா. தங்கள் குழந்தைகள் தங்களுக்குரியவர்கள் அல்லர் என்ற மெய்யறிவு பெற்றவர்களாக இருத்தல் முதல் படி.

(ஆ) நம்பிக்கை வழி நீட்சி

நம் குடும்பத்தை இந்த உலகில் தனியொரு குடும்பமாகக் காணாமல், இறைநம்பிக்கையின் வழியாக கடவுளுக்குள் நீட்டித்துத் தங்கள் குடும்பங்களைக் காணுதல் இரண்டாம் படி. இரண்டாம் வாசகத்தில் யோவான் இத்தகைய நம்பிக்கையைத்தான் வலியுறுத்துகின்றார். நம்பிக்கையின் வழியாக அனைவரும் கடவுளின் மக்களுக்குரிய நிலையை அடைகின்றனர்.

(இ) அகத் தேடல்

குழந்தையை அர்ப்பணித்தல் வழியாக அன்னா தன்னையே கடவுளுக்கு அர்ப்பணம் செய்கின்றார். இளவல் இயேசுவைத் தேடுவதன் வழியாக அவருடைய பெற்றோர் தங்களையே தேடத் தொடங்குகின்றனர். தாங்கள் யாரென்றும், தங்களுடைய பணி என்ன என்பதையும் தெளிவுறக் கற்றுக்கொள்கின்றனர்.

இறைவனில் உறையும் குடும்பங்களாக நம் குடும்பங்கள் இருந்தால், நம் குடும்பங்கள் திருக்குடும்பங்களே! அன்னாவின் தியாக உள்ளம், எல்கானாவின் மனைவியை மதிக்கும் குணம், சாமுவேலின் நீடித்த அர்ப்பணம், யோசேப்பின் தேடல், மரியாளின் ஏக்கம், இயேசுவின் பணித்தெளிவு ஆகிய அனைத்தும் நம் குடும்பங்களுக்கும் ஊக்கம் தருவனவாக. இன்றைய நாளில் நம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, நம் உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் அனைவரையும் எண்ணிப்பார்த்து இவர்களின் இருப்பிற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். இவர்களே நம் ஒவ்வொருவரின் வேர்கள். இவர்களின் வேர்கள் இறைமையில் குடியிருக்கின்றன. இவர்கள் வழியாகவே நாம் 'ஆண்டவரின் இல்லத்தில் குடியிருக்கின்றோம்' (காண். திபா 84).

Friday, December 24, 2021

ஒளி-மகிழ்ச்சி-பயணம்

கிறிஸ்து பிறப்பு பெருவிழா (நள்ளிரவுத் திருப்பலி)

I. எசாயா 9:2-4,6-7  II. தீத்து 2:11-14  III. லூக்கா 2:1-14

ஒளி-மகிழ்ச்சி-பயணம்

மிகவும் பரிச்சயமான கதை ஒன்றுடன் தொடங்குவோம். பார்வையற்ற நபர் ஒருவர் ஜென் துறவி ஒருவரைச் சந்திக்க மாலை வேளையில் சென்றார். 'என்ன இந்த மாலை மங்கும் வேளையில்?' எனக் கேட்கிறார் துறவி. 'பார்வையற்ற நபருக்குக் காலையும் இருள்தான், மாலையும் இருள்தான்!' என்கிறார் வந்தவர். போதனை முடிந்து புறப்படுகிறார் பார்வையற்ற நபர். துறவி அவரிடம் ஒரு கைவிளக்கைக் கொடுத்து, 'இதை எடுத்துச் செல்லுங்கள், இரவாயிற்று!' என்கிறார். 'இது என்ன?' எனக் கேட்கிறார் வந்தவர்.

'கைவிளக்கு!'

'பார்வையற்ற எனக்கு விளக்கு எதற்கு?'

'விளக்கு, உனக்கு அல்ல. உன் எதிரில் வருபவருக்கு. நீ மோதாமல் இருக்க அல்ல. உன்மேல் எவரும் மோதிவிடாமல் இருப்பதற்கு!'

ஞானம் பெற்றார் வந்தவர்.

கொஞ்ச நேரம் கண்களை மூடுங்களேன். மூடிய நீங்கள் அப்படியே கண்கள் மூடியவாறு இங்கும் அங்கும் வேகமாக நடங்களேன்! மூடியபடி நடப்பதா? வேகமாக நடப்பதா? - இதுதான் நம் கேள்வியாக இருக்கும்.

'காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல்சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி விதித்துள்ளது!' எனத் துள்ளிக் குதிக்கிறார் எசாயா (முதல் வாசகம்). காரிருளில் எப்படி நடக்க முடியும்? அதாவது, காரிருள் சூழ்ந்த இடத்தில் இருப்பவர்கள் எங்கும் நகராமல் தேக்க நிலையில் இருந்தனர். சாவின் நிழல் சூழ்ந்திருந்ததால் மக்கள் எங்கும் செல்லாமல் படுத்த இடத்திலேயே கிடந்தனர். அதாவது, திடீர்னு இப்ப மின்சாரம் கட் ஆகி, மீண்டும் வந்தால் நம் முகத்தில் சிரிப்பு வருவது போல, அன்று இருளில் இருந்தவர்களுக்கு ஒளி வருகின்றது.

கிறிஸ்து பிறப்பு தருகின்ற முதல் செய்தி ஒளி. மங்கள வார்த்தை திருநாளிலிருந்து ஒன்பது மாதங்கள் கழித்து என்பதாலும், குளிர்காலத்தில் தூரத்தில் தெரியும் கதிரவன் தங்கள் அருகில் வந்து தங்களுக்கு ஒளி தர வேண்டும் என்று மன்றாட வேண்டும் என்னும் உரோமை வழக்கத்தாலும் கிறிஸ்து பிறப்பு டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், லூக்கா நற்செய்தியாளர் பதிவு செய்துள்ள கிறிஸ்து பிறப்பு நிகழ்வை வாசிக்கக் கேட்டோம். இன்று கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகளை நம் தொழில்நுட்பப் பின்னணியில் வாசித்தால், இந்த நிகழ்வில் எந்தவொரு லாஜிக்கும் இல்லாதது போன்று தோன்றும்! 'பெயரைப் பதிவு செய்ய மரியாவும் யோசேப்பும் நீண்ட பயணம் செய்தவற்குப் பதிலாக, அவர்கள் கூகுள் ஃபார்ம் வழியாகப் பதிவு செய்திருக்கலாம்! அல்லது ஆதார் எண்களைக் கொண்டு மக்கள் தொகையைக் கணக்கிட்டிருக்கலாம்! சத்திரத்தில் இடம் கிடைக்காமல் போகலாம் என்ற காரணத்தால் மேக்-மை-ட்ரிப் வழியாக இடம் புக்கிங் செய்திருக்கலாம்! கீழ்த்திசை ஞானியர் கூகுள் மேப் பயன்படுத்தி எளிதாக வந்திருக்கலாம்!' அன்றைய நிகழ்வுகள் இன்றைய காதுகளுக்குப் புதிதாகவே இருக்கின்றன.

வெளிப்படுத்தும் வார்த்தைகள் இன்று வேறு என்றாலும் உணர்வுகள் என்னவோ ஒன்றாகவே இருக்கின்றன. கிறிஸ்து பிறப்பு இரவின் குளிர் மற்றும் அமைதி நம்மை அறியாமலேயே நம்மைத் தழுவிக் கொள்ளவே செய்கின்றது.

கிறிஸ்து பிறப்பு நிகழ்வு தரும் செய்தியைத் தருகின்ற இன்றைய நற்செய்தி வாசகத்திலிருந்து அன்றைய சமூக, அரசியல், பொருளாதார நிலையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது:

(அ) அரசியல் தளத்தில், கர்ப்பிணிப் பெண்களும் நீண்ட தூரம் பயணம் செய்து பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிடும அதிகாரத்தின் கொடுங்கோண்மை.

(ஆ) சமூகத் தளத்தில், தேவை என்று வந்த ஒருவருக்கு சத்திரத்தில் இடம் ஒதுக்கிக் கொடுக்க இயலாத மக்களின் கண்டுகொள்ளாத்தன்மை.

(இ) பொருளாதாரத் தளத்தில், இரவெல்லாம் தூக்கம் மறந்து கிடைக்குக் காவல் காக்கும் தொழில் செய்யும் ஆடு மேய்ப்பவர்களின் கையறுநிலை.

இப்படிப்பட்ட தளத்தில்தான் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு நடந்தேறுகிறது.

இந்நிகழ்வு தருகின்ற முதல் செய்தி, 'ஒளி.' முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும், 'ஒளி' என்னும் அடையாளம் மிகவும் அழுத்தமாக முன்மொழியப்படுகிறது. முதல் வாசகத்தில், மக்கள் 'பேரொளியைக் காண்கின்றனர்,' 'அவர்கள்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.' ஆக, ஒளி வந்தவுடன் அவர்கள் வாழ்வில் இயக்கமும் உற்சாகமும் வந்துவிடுகிறது. நற்செய்தி வாசகத்தில், வயல்வெளியில் ஆண்டவரின் மாட்சி இடையர்களைச் சுற்றி ஒளிர்கிறது.

யோவான் நற்செய்தியாளரும் உருவகமாக (பகல் திருப்பலி நற்செய்தி வாசகம்), 'அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது. இருள் அதன்மேல் வெற்றிகொள்ளவில்லை ... அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது' (யோவா 1:5,9) என்று பதிவு செய்கின்றார். தன் பணிவாழ்வில் இயேசு தன்னையே உலகின் ஒளி என்று அறிக்கையிடுகின்றார்.

இருளில் இருப்பவர்தான் ஒளியின் பொருளை உணர முடியும். படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் முதன் முதலாக ஒளியை உண்டாக்குகின்றார். விடுதலைப் பயண நூலில் இரவில் நெருப்புத் தூணாக ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களோடு வழிநடக்கின்றார். இவ்வாறாக, கடவுளின் உடனிருப்பு ஒளியின் வழியாக வெளிப்படுத்தப்படுகின்றது. இன்று நம்மைச் சுற்றி விண்மீன்கள், ஒளிவிளக்குகள், மெழுகுதிரிகள் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன. கிறிஸ்து பிறப்பின் இரவில் நின்றவர்களாக நாம் ஒளியை உணர்கின்றோம்.

'பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது' என்று தன் திருஅவைக்கு எழுதுகின்றார் பேதுரு (2 பேது 1:19). அதாவது, கிறிஸ்து என்னும் ஒளி நம்மில் தோன்றாதவரை நாம் வைத்திருக்கும் அனைத்து வெளிச்சங்களும் சிறிய விளக்குகளே. கிறிஸ்துவே இவ்விளக்குகளை அகற்றிவிட்டு நமக்கு நிரந்தரமான ஒளியைத் தருபவர்.

ஒளிக்கு எதிரி இருள் மட்டும் அல்ல. ஏனெனில், ஒளி இருந்தும் அதை மூடி வைப்பதால் என்ன பயன்? அல்லது ஒளி நம் செயல்களை மற்றவர்களுக்குக் காட்டிவிடும் என்பதால் அதை நானே விரும்பி அணைப்பதால் என்ன பயன்? இன்று என் வாழ்வில் ஒளி பெற வேண்டிய இடங்கள் எவை?

இரண்டாவதாக, இந்த நாளின் அடுத்த செய்தி, 'மகிழ்ச்சி.' 'ஒளி மகிழ்ச்சியூட்டும். கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும். மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்' என்கிறார் சபை உரையாளர் (காண். சஉ 11:7). ஆக, ஒளியிலிருந்து மகிழ்ச்சி புறப்படுகின்றது. 'கதிரவனைக் காணுதல்' என்பதற்குப் 'பிறத்தல்' என்பதும் பொருள். இன்றைய முதல் வாசகத்தில், மகிழ்ச்சி மூன்று உருவகங்களால் தரப்பட்டுள்ளது: ஒன்று, 'அறுவடை நாளின் மகிழ்ச்சி'. நாம் பட்ட கண்ணீரெல்லாம் பலன் கொடுக்கிறது என்றும், நம் உழைப்புக்கு ஏற்ற பயன் கிடைக்கிறது என்றும் நம்மை உணர வைப்பது அறுவடை. இரண்டு, 'கொள்ளைப் பொருளைப் பங்கிடும் மகிழ்ச்சி.' இது திருட்டுப் பொருளை அல்ல. மாறாக, எதிரிகள் அழிக்கப்பட்டு, அவர்கள் நாட்டிலுள்ள கொள்ளைப் பொருள் பங்கிடப்படுவது. பொருள் தரும் மகிழ்ச்சியைவிட எதிரியின் அழிவு இங்கே அதிக மகிழ்ச்சி தருகிறது. மூன்று, 'ஒரு குழந்தை பிறந்துள்ளார்.' அதாவது, ஒரு புதிய உயிர் தோன்றியது என்பது மட்டுமல்ல. மாறாக, ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும் என்பதால். ஆக, நம் சுமைகளைத் தூக்கிக்கொள்ள நமக்கு ஒரு தோள் கிடைத்துவிட்டது. ஆக, அறுவடை வழியாக உணவு, எதிரிகள் அழிவு வழியாக பாதுகாப்பு, அரசர் பிறந்ததன் வழியாக பராமரிப்பு என மூன்று நிலைகளில் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். நற்செய்தி வாசகத்தில், இடையர்களுக்கு குழந்தையின் பிறப்புச் செய்தியை அறிவிக்கின்ற ஆண்டவரின் தூதர், 'அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்' என்று அனைவருக்கும் மகிழ்ச்சியை அறிவிக்கின்றார்.

'ஆண்டவர்-மெசியா-மீட்பர்' என்னும் மூன்று கிறிஸ்தியல் தலைப்புகளைப் பயன்படுத்துகின்றார். 'உணவு-பாதுகாப்பு-பராமரிப்பு' என்று எசாயா அறிவித்தது போல லூக்கா மூன்று தலைப்புகளின் வழியாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்.

ஒளியைக் காண்கின்ற முகம் மகிழ்ச்சியால் சிரிக்க வேண்டும். மகிழ்ச்சி என்பது பொதுவானதா? தனிநபர் சார்ந்ததா? நம் உள்ளத்தில் உதிக்கிறதா? வெளியிலிருந்து வருகிறதா? நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா? அல்லது மகிழ்ச்சியாக மாறுகிறோமா? எது நிரந்தரமான உணர்வு? மகிழ்ச்சி, இன்பம், திருப்தி போன்றவற்றை என்னால் வேறுபடுத்தி அறிய முடிகிறதா?

கிறிஸ்து பிறப்பு தருகின்ற மூன்றாவது செய்தி, 'பயணம்.' கடவுள் மனிதராகப் பிறந்ததே வரலாற்றில் நடந்த நீண்ட பயணம் என்று சொல்லலாம். ஆதாம் தொடங்கி, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, ஆரோன், அரசர்கள், இறைவாக்கினர்கள் என தேடல் தொடர்ந்து, இன்று அது நிறைவுபெறுகிறது. கடவுள் மனிதராகப் பிறக்கின்றார். குழந்தையின் வலுவின்மை ஏற்கின்றார். 'குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்' என்கிறார் வானதூதர். முதல் வாசகத்தில், காரிருளில் வாழ்ந்த மக்களின் நுகம் உடைத்தெறியப்படுகிறது. நுகம் உடைந்ததால் இனி அவர்கள் தங்கள் விருப்பம் போல பயணம் செய்யலாம். அவர்கள் கால்கள் கட்டின்மையைப் பெற்றுவிட்டன. நற்செய்தி வாசகத்தில், யோசேப்பும் மரியாவும் நாசரேத்திலிருந்து பெத்லமேகம் நோக்கிப் பயணம் செய்கின்றனர். வானதூதர்கள் இடையர்கள் நோக்கிப் பயணம் செய்கின்றனர். இடையர்கள் குழந்தையை நோக்கிப் பயணம் செய்கின்றனர். இரண்டாம் வாசகத்தில், புனித பவுல், 'கடவுளின் அருள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது' என எழுதுகின்றார். ஆக, மறைந்திருந்த ஒன்று வெளிச்சம் நோக்கிப் பயணம் செய்கின்றது.

'பாதை மாறுவதே பயணம்' என்பது வாழ்வியல் எதார்த்தம். பாதைகள் மாற, மாற பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

பயணம் செய்தல் என்றால் என்ன? உள்ளொளிப் பயணமே நாம் இன்று மேற்கொள்ள வேண்டிய நீண்ட பயணம்.

ஒளி-மகிழ்ச்சி-பயணம் என்னும் செய்தியைக் கிறிஸ்து பிறப்பு நிகழ்வின் வழியாகப் பெறுகின்ற நாம், ஒளி பெற்றவர்களாக, மகிழ்ச்சி நிறைந்தவர்களாக, இறைவன் நோக்கியும், ஒருவர் மற்றவர் நோக்கியும் பயணம் செய்தல் சால்பு!

கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துகள்!

Thursday, December 23, 2021

ஆண்டவர் உம்மோடு

 

கிறிஸ்து பிறப்பு முன்நாள் (24 டிசம்பர் 2021)

இன்றைய முதல் வாசகத்தில் (2 சாமு 7:1-5,8-12, 16) ஆண்டவராகிய கடவுள் நாத்தான் இறைவாக்கினர் வழியாக தாவீது அரசருடன் உடன்படிக்கை செய்துகொள்கின்றார். இந்த நிகழ்வில் மூன்று விடயங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன:

(அ) 'ஆண்டவர் அளிக்கும் ஓய்வு'

'தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறிய பின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார்' என்கிறார் ஆசிரியர். 'ஓய்வு' என்பது இறைவன் அளிக்கும் கொடை. படைப்பின் ஆறு நாள்களும் ஓய்வு நாளாகிய ஏழாம் நாளை நோக்கியே இருக்கின்றன. வெறும் உழைப்பு மட்டுமே இருந்தால் மனித குலம் வறண்டுவிடும். நம் வாழ்க்கைப் பயணத்தைப் பார்த்தால், 'மழலைப் பருவம்' என்னும் ஓய்வில் தொடங்கி, 'முதுமைப் பருவம்' என்னும் ஓய்வில் நிறைவு செய்கின்றோம். ஓய்வுக்கும் ஓய்வுக்கும் இடையே தேவையற்ற பரபரப்பு. 40 மற்றும் 45 வயதுகளில் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவது நல்லது இன்று பலர் அறியத் தொடங்கியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆண்டவர் தரும் ஓய்வே நமக்கு நீடித்த அமைதியைத் தருகிறது.

(ஆ) 'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'

'நீர் விரும்பியது அனைத்தையும் செய்து விடும். ஏனெனில், ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்று நாத்தான் தாவீதிடம் கூறுகின்றார். ஆண்டவர் நம்மோடு இருக்கும்போது, அனைத்தையும் செய்துவிடும் துணிச்சல் நம்மில் பிறக்கிறது. ஆண்டவருடன் இணைந்த 'கூட்டியக்கம்' நம் ஆற்றலை அதிகரிக்கிறது.

(இ) 'ஆடு மேய்த்த நாள் முதல்'

'என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன்' என்று தாவீதிடம் மொழிகிறார் ஆண்டவராகிய கடவுள். தாவீது தன்னிறைவு கொள்கின்றார். இதை ஆண்டவர் தீமையாகப் பார்க்கிறார். அதாவது, 'எனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது. நான் ஆண்டவருக்கு ஏதாவது செய்ய வேண்டும்' என்று தாவீது மமதை அடையும்போது, 'தம்பி! நீ இன்று இருப்பது போல முன்னர் இருந்ததில்லை' என்று அவருடைய எளிய பின்புலத்தை நினைவூட்டுகின்றார். மேலும், இந்த இடத்தில் எளிய பின்புலத்திலிருந்த தாவீதை ஆண்டவர் தேர்ந்துகொண்டார் என்பதையும் அவருக்கு நினைவூட்டுகின்றார். ஆக, நம் உயர்வு ஆண்டவரிடமிருந்தே வருகிறது.

நற்செய்தி வாசகத்தில் (லூக் 1:67-79) சக்கரியாவின் பாடலை நாம் வாசிக்கின்றோம். 'இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளி தரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது' என்று தன் கண்களை உயர்த்திப் பார்க்கின்றார் சக்கரியா. 'ஓர் ஊமையனின் பாடல்' என்றழைக்கப்படும் இப்பாடலின் கதாநாயகராக இருப்பவர் கடவுளே.

இன்று, 'தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்கிறார்' ஆண்டவர். அந்த மீட்பர் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பிறக்க நம்மைத் தயாரிப்போம்.

Wednesday, December 22, 2021

இம்மானுவேலே வாரும்

கிறிஸ்து பிறப்பு நவநாள் - 7 (23 டிசம்பர் 2021)

இம்மானுவேலே வாரும்

'இம்மானுவேல்' ('கடவுள் நம்மோடு') என்னும் இறைவாக்கு ஆகாசு அரசருக்கு வழங்கப்படுகிறது. மத்தேயு நற்செய்தியாளர், இந்த இறைவாக்கு இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுவதாகப் பதிவு செய்கின்றார். 'கடவுள் நம்மோடு' என்பது முதல் ஏற்பாட்டில் வாழ்த்தொலியாகவும் வாக்குறுதியாகவும் இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில், மலாக்கி இறைவாக்கினர் முன்மொழியும் 'தூதர்' பற்றி வாசிக்கின்றோம். எபிரேய விவிலியத்தின் இறுதி நூலாக இருக்கின்ற இந்தப் புத்தகத்தில், மெசியாவின் வருகைக்கு முன்னர், 'தூதர்' ஒருவர் அனுப்பி வைக்கப்படுவார் என்னும் செய்தி தரப்படுகின்றது. இவர் யார்? இவர் படைகளின் ஆண்டவரால் அனுப்பப்படுபவர். இவர் என்ன செய்வார்? தலைவருக்கு முன் சென்று வழியை ஆயத்தம் செய்வார். அவர், 'உடன்படிக்கையின் தூதர்' என்றும் அழைக்கப்படுகின்றார். அவர் 'பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புகிறார்.'

இத்தூதர் திருமுழுக்கு யோவானையே குறிக்கிறது என்பது நற்செய்தியாளர்களின் கருத்தாக இருக்கின்றது. ஏனெனில், திருமுழுக்கு யோவான் தன்னை, 'தூதர்' என்றே முன்மொழிகின்றார்.

நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவானின் பிறப்பு செய்தியை வாசிக்கின்றோம். நிகழ்வு மூன்று பகுதிகளாக நடக்கிறது: முதலில், எலிசபெத்து குழந்தையைப் பெற்றெடுக்கின்றார். இரண்டாவதாக, எலிசபெத்தின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். மூன்றாவதாக, குழந்தைக்குப் பெயர் வழங்கப்படுகிறது. ஒரு குழந்தைக்குப் பெயரிடும் உரிமை தந்தைக்கே உரித்தானதாக இருந்தது. மத்தேயு நற்செய்தியில், யோசேப்புக்குக் கனவில் தோன்றுகின்ற வானதூதர், 'அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்!' என்று, பெயரிடும் உரிமையைக் கொடுக்கின்றார். பெயரிடுகின்ற அந்த நொடியிலிருந்து இயேசுவின் வளர்ப்புத் தந்தையாக மாறுகிறார் யோசேப்பு.

'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்று சக்கரியா எழுதத் தொடங்கியவுடன் அவருடைய நா கட்டவிழ்கிறது. ஆண்டவருடைய குரலாக யோவான் ஒலிக்கப் போகிறார் என்பதை இந்நிகழ்வு அடையாளப்படுத்துகிறது.

'அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது' என்ற ஒற்றை வரியில் திருமுழுக்கு யோவானைப் பற்றிச் சொல்கிறார் லூக்கா.

வயது முதிர்ந்த பெற்றோர். எளிய குடும்பப் பின்புலம். உறவினர்களின் பலத்த எதிர்பார்ப்பு. இவற்றை எதிர்கொள்ள ஆண்டவரின் கைவன்மை மிகவே அவசியம்.

இன்று மாலை முதல், 'இம்மானுவேலே, வாரும்!' அழைக்கத் தொடங்குகிற நாம், ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றவர்கள் என்பதை உணர்ந்து வாழ்தல் நலம்.

நாடுகளின் அரசரே, வாரும்!

கிறிஸ்து பிறப்பு நவநாள் - 6 (22 டிசம்பர் 2021)

'நாடுகளின் அரசரே, வாரும்!'

இயேசு தன் பிறப்பின் போதும், பணித் தொடக்கத்திலும், தன் வாழ்வின் இறுதியிலும், 'யூதர்களின் அரசர்' என்று அழைக்கப்படுகின்றார்: அவர் பிறந்த போது அவரைத் தேடி வருகின்ற கீழ்த்திசை ஞானியர், 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று கேட்டுத் தேடி வருகின்றனர் (காண். மத் 2:2). பிலிப்பு இயேசுவிடம் நத்தனியேலை அழைத்து வருகின்றார். இயேசுவைக் கண்ட நத்தனியேல், 'ரபி, நீர் இறைமகன். நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்' (யோவா 1:49). இயேசுவின் இறப்பின் போது, அவருடைய சிலுவையில், 'நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்' என்னும் குற்ற அறிக்கை வைக்கப்படுகிறது (யோவா 19:19). மத்தேயு நற்செய்தியின் நிறைவுகாலப் பொழிவில், மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு வழங்கும் அரசராக இயேசு தன்னை உருவகப்படுத்துகின்றார் (காண். மத் 25:31-46). ஆக, யூதர்களின் அரசராகவும், ஒட்டுமொத்த அனைத்து நாடுகளின் அரசராகவும் இயேசுவை நற்செய்தி நூல்கள் முன்மொழிகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 சாமு 1:24-28), சாமுவேல் பால்குடி மறந்ததும் அவரைத் தூக்கிக் கொண்டு சீலோவிலிருந்த ஆண்டவரின் இல்லத்திற்குச் செல்கின்ற அன்னா, 'நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்' என்று சொல்லி ஆண்டவர்முன் அவரை ஒப்படைக்கின்றார். தான் கேட்டு வாங்கிப் பெற்ற மகனை ஆண்டவருக்கே அர்ப்பணிக்கின்றார். தனக்கெனக் கடவுள் கொடுத்த மகனை தனக்கு வேண்டாம் என்று சொல்லி கடவுளுக்குக் கொடுக்கின்றார் அன்னா. எப்ராயிம் மலைநாட்டிலுள்ள இராமாத்தயிம் சோப்பிம் என்னும் கிராமத்தில் அறியாக் குழந்தையாக மறைந்து போயிருக்கும் ஒரு குழந்தை, ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டதால், இஸ்ரயேலில் அரசரை ஏற்படுத்திய இறைவாக்கினர் சாமுவேல் என்னும் பெயர் பெறுகிறது. சாமுவேல் 'தூக்கிச் செல்லப்பட்டார்' என்னும் சொல்லாடல், சாமுவேலின் மழலைப் பருவத்தை நம் கண்முன் கொண்டுவருகின்றது. சாமுவேல் என்னும் குழந்தையின் விருப்பம் கேட்டறியப்படவில்லை. அதனால்தான் என்னவோ, சாமுவேலின் மகன்கள் யோவேல் மற்றும் அபியா ஆகியோர் 'சாமுவேலின் வழிமுறைகளில் நடவாமல், பொருளாசைக்கு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை' (1 சாமு 8:3).

தன் வாழ்வில் ஆண்டவர் ஏற்படுத்திய தலைகீழ் மாற்றத்திற்காக அவரைப் புகழ்ந்து பாடுகின்றார் அன்னா. ஆண்டவர் ஏற்படுத்திய தலைகீழ் மாற்றம் என்ன? (அ) மலடியாக இருந்தவர் நிறைவான குழந்தையைப் பெற்றெடுத்தார், (ஆ) தன் கையில் ஒன்றுமில்லை என்று ஏழையாக இருந்தவரை, என் கையில் உள்ளது அனைத்தும் உனக்கு என்று கடவுளுக்கே தானம் செய்யும் அளவுக்குச் செல்வராக்குகின்றார், (இ) கிராமத்து இளவல் சாமுவேல் அரசர்களோடு அரசர்களாக அமர்ந்து உண்ணும் நிலைக்கு உயர்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் (லூக் 1:4-56) அன்னை கன்னி மரியாவின் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் முழுக்க முழுக்க அன்னாவின் பாடலின் தழுவல் என்பது விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. எலிசபெத்தைச் சந்திக்கும் நிகழ்வில், எலிசபெத்து மரியாவைப் புகழ, மரியாவோ தன் புகழ்ச்சியைக் கடவுளை நோக்கி ஏறெடுக்கின்றார். இது மரியாவின் மகிழ்ச்சியின் பாடலாக இருக்கின்றது. ஆண்டவராகிய கடவுள் மரியாவின் வாழ்விலும், இந்த உலகத்திலும் ஏற்படுத்துகின்ற தலைகீழ் மாற்றத்தை இப்பாடல் நம் கண்முன் கொண்டு வருகின்றது.

இன்றைய வாழ்த்தொலியான, 'நாடுகளின் அரசரே, வாரும்!' என்பதை இவ்வாசகங்களின் பின்புலத்தில் எப்படிப் புரிந்துகொள்வது?

'கடவுள் வல்லவர்' என்னும் கருத்துரு இரு பாடல்களிலும் உள்ளது. வல்லவரான கடவுள் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்துகின்றார். அனைத்தின்மேலும் அதிகாரம் கொண்ட கடவுளாக அவர் வீற்றிருக்கின்றார். அனைத்தையும் தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டுள்ள ஒருவரே அனைத்தையும் புரட்டிப் போட முடியும்.

'நாடுகளின் அரசரே, வாரும்!'

Monday, December 20, 2021

விடியலே வாரும்!

கிறிஸ்து பிறப்பு நவநாள் - 5 (21 டிசம்பர் 2021)

விடியலே வாரும்!

இலத்தீன் மொழியில், 'ஓ ஓரியன்ஸ்' ('ஓ கிழக்கே!') என்பதை 'ஓ விடியலே' என மொழிபெயர்த்துக்கொள்வோம். 'விடியற்காலை விண்மீனே' என்றும் சில இடங்களில் மொழிபெயர்க்கப்படுகிறது. நாளின் விடியலை நமக்குச் சுட்டிக்காட்ட கிழக்கில் தோன்றும் விண்மீனை இது குறிக்கிறது. அதாவது, இரவும் இருளும் முடிந்துவிட்டன என்றும், புதிய நாளும், ஒளியும் வரவிருக்கின்றன என்பதையும் இந்த நட்சத்திரம் நமக்கு நினைவுபடுத்துகிறது. 'இருள்' என்பது இறப்புக்கு ஒப்பிடப்படுவதால், 'ஒளி' என்பது எதிர்ப்பதமாக வாழ்வைக் குறிக்கிறது. 'காரிருளில் வாழ்ந்த மக்கள் பேரொளியைக் கண்டனர்' (எசா 9:2) மற்றும் எசா 60:1-2, மற்றும் மலா 4:2 ஆகிய அருள்வாக்கியங்கள் இந்த அழைப்பின் பின்புலத்தில் இருக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்திற்கு இரு பகுதிகள் தரப்பட்டுள்ளன. இனிமை மிகு பாடலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதியில் (2:8-14), தலைவி மற்றும் தலைவனின் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காதலின் மயக்கத்தில் இருக்கும் காதலி தன் தலைவனின் வருகையை எதிர்நோக்கியிருக்கிறாள். தலைவனின் வருகை தலைவிக்கு மகிழ்ச்சி. தலைவனின் எதிர்பாராத வருகை தலைவிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தலைவி கூற்றாக இங்கே உள்ள பகுதி, தலைவனை எதிர்பார்த்து தலைவி பாடுவதாகவும், அதே வேளையில் தலைவன் இப்படிப்பட்ட ஓர் இன்ப அதிர்ச்சியை நமக்குத் தரமாட்டானா என்ற ஆவலை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. தலைவரின் வருகையை கலைமானின் ஓட்டத்தோடு ஒப்பிடுகிறார் தலைவி. மேலும், கார்காலத்து மழைச்சாரல் பொழியும் நேரமும் தலைவனின்மேல் உள்ள ஆர்வத்தை அதிகரிக்கிறது. தலைவன் தன் தலைவியை வெண்புறாவுக்கு ஒப்பிட்டுப் பாடுகின்றார். கலைமானும், வெண்புறாவும் சந்திக்கும் நிகழ்வு இன்பமயமானதாக இருக்கும்.

இன்னொரு தெரிவாகக் கொடுக்கப்பட்டுள்ள செப்பனியா இறைவாக்குப் பகுதியில் (3:14-17), எருசலேம், 'மகளுக்கு' ஒப்பிடப்படுகின்றது. 'மகிழ்ச்சியால் ஆர்ப்பரி' என்று எருசலேமை உற்சாகப்படுத்துகின்றார் ஆசிரியர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:39-45), மரியா எலிசபெத்தைச் சந்திக்கச் செல்லும் நிகழ்வு தரப்பட்டுள்ளது. இனிமைமிகு பாடல் வாசகத்தோடு இதை இணைத்துப் பார்த்தால், மரியாவின் வயிற்றில் இருக்கும் இயேசுவைத் தலைவன் என்றும், எலிசபெத்தின் வயிற்றில் இருக்கும் திருமுழுக்கு யோவானை தலைவி என்றும் உருவகித்து, மெசியாவின் வருகையை முன்னுரைக்கத் துடிக்கும் யோவானின் மகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்.

தலைவனின் வருகை தலைவிக்கு விடியலாக இருக்கிறது! துன்பம் மறைந்து இன்பம் கிடைக்கிறது.

அரசரின் வருகை எருசலேமுக்கு விடியலாக இருக்கிறது! அடிமைத்தனம் மறைந்து அமைதி கிடைக்கிறது.

மரியாவின் வருகை எலிசபெத்துக்கு விடியலாக இருக்கிறது! எதிர்நோக்கு கனிந்து மகிழ்ச்சியாக மாறுகிறது.

இன்று நம் வாழ்வில் விடியல் தேவைப்படும் பகுதி எது? நம்மால் புரிந்துகொள்ள இயலாத வாழ்வியல் சூழல் எது? இருள்சூழ் பள்ளத்தாக்குப் பயணம் போல இன்று நம் வாழ்வில் நிகழ்வது என்ன?

'ஓ விடியலே வாரும்!' என்னும் புகழ்ச்சி, அவரை நோக்கிய இறைவேண்டலாக உயரட்டும். நம் வாழ்வின் விடியல் விரைவில் வரட்டும்!