Friday, July 18, 2014

வன்முறையின் குழந்தை வன்முறை

(05.10.2014 பொதுக்காலம் 27ஆம் ஞாயிறுக்கான மறையுரை. நற்செய்தி மத்தேயு 21:33-43)

விண்ணரசு பற்றிய இயேசுவின் தொடர் உவமை ரத்தமயமாக இருக்கிறது. உவமையின் கருப்பொருள் திராட்சைத் தோட்டம். இப்போது வாசகரின் கவனம் திராட்சைத் தோட்டப் பணியாளர்கள் மேல். திராட்சைத் தோட்டம் ஒப்பந்த அடிப்படையில் சில பணியாளர்களிடம் தரப்படுகிறது. தோட்டத்தின் விளைச்சலைப் பெற்று வருமாறு தலைவர் முதலில் பணியாளர்களை அனுப்புகின்றார். அவர்களில் சிலரை தோட்டத் தொழிலாளர்கள் கல்லால் எறிகின்றனர், சிலரை கொல்கின்றனர், சிலரை விரட்டி அனுப்புகின்றனர். இரண்டாவதாக, முன்பைவிட அதிக பணியாளர்கள் அனுப்பப்படுகின்றனர். அவர்களுக்கும் அதே கதிதான். இறுதியாக, தலைவரின் ஒரே மகன். தலைவரின் எதிர்பார்ப்பு ஒரு மாதிரி இருக்க, நடப்பது என்னவோ வேறு மாதிரி இருக்கிறது. 'இவனே சொத்துக்குரியவன். இவனைக் கொன்றால் தோட்டம் நம்முடையது!' என அவர்கள் சொல்லிக் கொண்டே அந்த மகன் மீது பாய்ந்து கொல்கிறார்கள்.

இந்த இடத்தில் வாசகருக்கு உச்ச கட்ட கோபம் வருகின்றது. மகன் சின்னஞ்சிறுவனாகத் தான் இருந்திருக்க வேண்டும். தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் திராட்சைத் தோட்டம் எடுத்தால் அது விளைந்தவுடன் முதல் வேலையாக தலைவனுக்குரிய பங்கைத் தர வேண்டும் என்பது இணைச்சட்ட நூலின் பரிந்துரை. அவர்களின் முதல் தவறு, 'தலைவனுக்குச் சேர வேண்டியதைத் தனக்கென வைத்துக்கொண்டது!' - இதை பேராசை, ஊழல், பதுக்குதல் என அழைக்கலாம். இரண்டாவதாக, வன்முறை. யார்மேல்? தலைவனின் பணியாளர்கள் மேல். மூன்றாவதாக, கொலை. யாரை? ஒரே மகனை.

இப்படிப்பட்ட தொழிலாளர்கள் பற்றி தலைவனுக்குத் தெரியவில்லையா? தெரிந்திருந்தும் அவர்களிடம் தோட்டத்தை ஏன் ஒப்படைத்தார்? தொழிலாளர்களுக்கு தலைவன் மேல் அப்படி என்ன கோபம்? அப்படிக் கோபம் இருந்தால் அதை தலைவன் மேல் காட்டியிருக்கலாமே? ஏன் மற்றவர்கள் மேல் காட்ட வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு உவமையில் பதில் இல்லை.

இந்த உவமையை இயேசுவே சொன்னார் என்றால் அது தன் இறப்பை முன்குறிப்பதாக இருக்கிறது. இல்லை, இது நற்செய்தியாளரின் கற்பனை என்போமாகில் இயேசுவின் படுகொலையை அவர்கள் உருவகமாக எழுதி, 'புதிய ஒப்பந்தப் பணியாளர்கள்' என்ற புதிய கிறித்தவர்களுக்கு ஆறுதல், நம்பிக்கை, புத்துணர்ச்சி தரவதற்காக எழுதப்பட்டது. இந்த இரண்டு எண்ண ஓட்டங்களிலும், தந்தை என்பது வானகத் தந்தையையும், தந்தையின் பணியாளர்கள் என்பவர்கள் இறைவாக்கினர்களையும், மகன் என்பவர் இயேசுவையும், தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் பரிசேயர்கள், மறைநூல் வல்லுநர்கள், தலைமைக்குருக்கள் எனவும் உருவகம் செய்து கொள்ளலாம்.

இந்த விண்ணரசு உவமை நமக்குச் சொல்வது என்ன?

அ. இந்த உவமையில் நாம் யார்? மற்றவர்களை அப்படியே நம்பும் 'தாராளமான' தந்தையா? தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் தொடர்ந்து தங்கள் வேலையைச் செய்த தந்தையின் பணியாளர்களா? தந்தையின் ஒரே மகனா? அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்களா? இந்த நால்வருமே நம்மில் எங்கோ ஒளிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நான்காம் மனநிலை தான் நம்மிடம் இருக்கக் கூடாத மனநிலை.

ஆ. நேற்றைய தினம் (17 சூலை 2014) உக்ரைனின் வானின் மேல் பறந்து கொண்டிருந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றை இரஷ்ய கிளர்ச்சி ஆதரவாளர்கள் ஏவுகணை கொண்டு தாக்க, அது வெடித்து அதில் பயணம் செய்த 295 பேரும் இறந்து விட்டார்கள் என்பது மிகவும் வருத்தம் தரும் ஒரு நிகழ்வு. கிளர்ச்சியாளர்களுக்கும், வானில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்திற்கும், அதில் பயணம் செய்த அப்பாவி மனிதர்களுக்கும் என்ன தொடர்பு? எதற்காக கிளர்ச்சியாளர்கள் அவர்களைத் தாக்க வேண்டும்? நம்மையறியாமல் கிளர்ச்சியாளர்கள் மேல் ஒருவித கோபம் கொப்பளிக்கிறது. உனக்கும் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் பிரச்சனையென்றால் ஒருவர் மற்றவரை அடித்துக் கொள்ள வேண்டியதுதானே! பக்கத்துத் தெருவில் இருக்கிறவன் என்ன செய்தான்? மனித மனதில் குடிகொள்ளும் வன்முறை பல நேரங்களில் அப்பாவி மக்களிடமே திருப்பப்படுகின்றது. சிறு வயதிலேயே யாரோ மேல் உள்ள கோபத்தை தான் கையில் வைத்திருக்கும் பொம்மை மேல் காட்டிவிடுகிறது குழந்தை. இந்தக் கிளர்ச்சியாளர்களும் பொம்மை மேல் காட்டுவதற்குப் பதில் விமானத்தின் மேல் காட்டிவிட்டார்கள். உவமையில் வரும் தொழிலாளர்கள் தலைவனின் பணியாளர்மேலும், மகனின் மேலும் காட்டிவிட்டார்கள். வன்முறை வன்முறையைத் தான் பெற்றெடுக்க முடியும். 'பாலியல் உணர்வு, வன்முறை' - இந்த இரண்டும் மனிதர்களில் குடிகொள்ளும் மிகவும் சக்திவாய்ந்த உணர்வுகள் என்கிறார் பிராய்ட்.

இ. நம்மிடம் எதிர்பார்க்கப்படும் செயல் நம்மிடம் இல்லாதபோது வாய்ப்பு நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும். கதையின் இறுதியில் திராட்சைத் தோட்டம் மற்ற தொழிலாளர்களின் கையில் கொடுக்கப்படுகிறது. வன்முறையில் இறங்கிய தொழிலாளர்களும் அழிக்கப்படுகின்றனர். நம் வாழ்வில் நாம் அதற்கேற்ற கனிகள் கொடாதபோது வாழ்வு நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு விடுகிறது. இது உவமையின் பொருள் மட்டுமல்ல. டார்வினின் உயிரியல் பரிணாமக் கோட்பாடும் இதுதான். நாம் பயன்படுத்தாத, பயன் தராத எதுவும் காலப்போக்கில் அழிந்துவிடும்.


1 comment:

  1. சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் சிறு மனத்தாங்கல்கள் சரிசெய்யப்படாமல் குப்பிக்குள் அடைத்த வாயுபோன்று அழுத்தம் அதிகரித்து நாளடைவில் அது நாமும் அழிந்து பிறரும் அழியக் காரணமாகிவிடுகிறது..இந்த உவமையில் வரும் ஒப்பந்தத்தொழிலாளர்கள் போலவும்...மலேசிய விமானத்தைத்தாக்கிய இரஷ்ய கிளர்ச்சியாளர்கள் போலவும்...."கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்"என்ற உண்மையை டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் இணைத்துக் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.

    ReplyDelete