Thursday, February 28, 2019

மணமுறிவும் நட்பும்


மணமுறிவும் நட்பும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'மணமுறிவு முறையா?' என்ற கேள்வி இயேசுவிடம் கேட்கப்படுகிறது. படைப்பின் தொடக்க நிகழ்வைச் சுட்டிக்காட்டும் இயேசு, ஆண்-பெண் உறவின் அவசியத்தை உணர்ந்து, மணமுறிவைத் தடைசெய்வதோடு, மணமுறிவு விபச்சாரத்திற்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கிறார்.

'திருமணம் முடித்துவிட்டோம் என்பதற்காக சேர்ந்தே வாழ வேண்டுமா?'

'திருமணம் முடிக்காமல் ஒருவரை ஒருவர் அன்பு செய்வது' 'திருமணம் முடித்து ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டிருப்பதை' விட நல்லதுதானே?

'பொருத்தமில்லாத் திருமணத்தில் பொருளாதார காரணங்களுக்கு வற்புறுத்தி இணைக்கப்பட்டவர்கள் இணைந்தே வாழ வேண்டுமா?'

'படைப்பு நிகழ்வே ஒரு சமுதாயப் புனைவுதானே. அதை அடிப்படையாக வைத்து திருமண உறவை எப்படி வலியுறுத்தலாம்?'

- இப்படி நிறையக் கேள்விகள் நம் மனத்தில் எழ வாய்ப்பிருக்கின்றன.

இயேசுவைப் பொறுத்தவரையில் 'திருமணம்' என்ற உறவில்தான் 'நான் உனக்கு, நீ எனக்கு' என்ற அர்ப்பணம் இருக்கிறது. ஆனால், மற்ற எல்லா இணைவு உறவுகளிலும், விபச்சாரம், ஓரினச் சேர்க்கை, ஒப்பந்த திருமணம் ஆகியவற்றில், 'நீ இல்லாவிட்டால் எனக்கு இன்னொருவர்' என்ற நிலை மேலோங்கி இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, இன்றைய முதல் வாசகத்தில் (காண். சீஞா 6:5-17), நட்பின் மேன்மை பற்றிப் பேசுகின்றார். திருமணத்திற்குள் நட்பு, திருமணத்திற்குப் புறம்பே நட்பு என்று இவர் வரையறுக்கவில்லை. 'இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும். பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும்' எனத் தொடங்குகிறது இன்றைய வாசகப் பகுதி.

நண்பர்களை நான்குவகை எனப் பட்டியலிடுகின்றார் ஆசிரியர்:

அ. தன்னலம் தேடும் நண்பர்கள் - இவர்கள் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.

ஆ. பகைவர்களாய் மாறும் நண்பர்கள் - இவர்கள் உன் இரகசியத்தையும், உன் தவறையும், உன் குற்றத்தையும், உன் நிழலையும் மற்றவருக்கு வெளிப்படுத்தி உனக்கு இழிவையும், அவமானத்தையும் கொண்டுவருவார்கள்.

இ. விருந்துண்ணும் நண்பர்கள் - இவர்கள் நெருக்கடியான வேளையில் துணைநிற்க மாட்டார்கள். நல்ல நிலையில் இருக்கும்போது உயிருக்கு உயிராக இருப்பார்கள். தாழ்ந்துவிட்டால் உனக்கு எதிராய் மாறுவார்கள். உன் முகத்தில் விழிக்கமாட்டார்கள்.

ஈ. நம்பிக்கைக்குரிய நண்பர்கள் - இவர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள். இத்தகைய நண்பர்களைப் பெற்றவர்கள் புதையலைப் பெற்றவர்கள். இவர்களுக்கு ஈடான செல்வமில்லை. இவர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள். ஆண்டவருக்கு அஞ்சுபவர்களே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர். ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்பு பேணுவோர்.

இந்த நான்கு வகை நட்பை வகைப்படுத்தும் ஆசிரியர், நான்காம் வகை நட்பான உயரிய நட்பை ஏறக்குறைய கடவுளின் கொடை என்று சொல்கின்றார். மேலும், ஆண்டவருக்கு அஞ்சுதலும் முறையான நட்பும் இணைந்து செல்கிறது என்ற முக்கியக் கருத்தையும் பதிவு செய்கின்றார். ஏனெனில், ஆண்டவர் மேல் கொள்ளும் அச்சம் குறையும்போது நட்பில் வரையறை மீறலும் நடக்க வாய்ப்புண்டு. வரையறை மீறப்பட்டவுடன் பல நேரங்களில் இந்த நட்பு முதல் மூன்று நிலை நட்பாக மாறிவிடவும் வாய்ப்பிருக்கிறது என்பதால்தான் ஆசிரியர் இப்படிப் பதிவு செய்கின்றார்.

திருமண உறவில் - கணவன், மனைவி - மேற்காணும் நட்பு நிலைகளில் நான்காம் நிலை இருந்தால், மணமுறிவுக்கு வாய்ப்பில்லை. திருமணம் அல்லாத துறவு நிலையில், நான்காம் வகை நட்பு இருந்தால் தனிமைக்கும், பிறழ்வுக்கும் வாய்ப்பில்லை.

Wednesday, February 27, 2019

உங்களுக்கு நல்லது

இன்றைய (28 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 9:41-50)

உங்களுக்கு நல்லது

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மற்றவர்களுக்கு இடறலாக இருப்பதற்கான தண்டனை பற்றிக் குறிப்பிடுகின்றார். மேலோட்டமாக வாசிக்கும்போது இயேசு முன்வைக்கும் தண்டனைகள் மிகவும் கொடூரமாக இருக்கின்றன - 'கல்லைக் கட்டிக் கடலில் தள்ளுதல்,' 'கையை வெட்டிவிடுதல்,' 'காலை வெட்டிவிடுதல்,' 'கண்களைப் பிடுங்கி எறிதல்,' 'நெருப்பில் அவித்தல்.' இலக்கியக் கூறுகளின் அடிப்படையில் பார்க்கும்போது இவற்றை நாம் 'மிகைப்படுத்துதல்' என்ற இலக்கிய நடை இங்கே இருப்பதைப் பார்க்கிறோம்.

இறுதியில், இரண்டு நேர்முக வாக்கியங்களோடு நிறைவுபெறுகிறது வாசகம்:

'நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள்'

'ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்'

அதாவது, 'உங்களுக்குள் நீங்கள் சாரம் உள்ளவர்களாகவும்,' 'அடுத்தவர்களிடம் நீங்கள் அமைதியுடனும் வாழுங்கள்' என்கிறார் இயேசு.

'உப்பின் தன்மை' இழந்துபோக வாய்ப்புண்டு. நீண்ட காலமாக உப்பை வைத்திருக்கும்போது, அல்லது அதிகமான வெயில், அதிகமான குளிர் என்று தட்பவெப்பநிலை மாறிக்கொண்டிருக்கும்போது, அல்லது தூசியான இடத்தில் வைக்கும்போது என இந்நேரங்களில் உப்பு தன் தன்மையை இழக்கும் வாய்ப்பு உள்ளது. உப்பானது நீரில் கரைக்கப்படும்போது அல்லது உணவுப்பொருள்களில் கலக்கும்போதும் அது தன் தன்மையை இழக்கும். ஆனால், அப்படிப்பட்ட இழப்பு வரவேற்கத்தக்கது. ஏனெனில், அங்கே அது பயன்பாட்டுப்பொருளாக மாறிவிடுகிறது. பயன்பாட்டுப் பொருளாக மாறாமல் தன்னிலேயே தன்மை இழப்பதுதான் ஆபத்தானது. ஏனெனில், அப்படிப்பட்ட நேரத்தில் உப்பு யாருக்கும் பயனில்லாமல் போய்விடுகிறது.

அடுத்ததாக, 'அமைதியுடன் வாழ்தல்.' இது நமக்குப் பெரிய சவால். நான் அமைதியாக அடுத்தவருடன் வாழ முற்பட, அடுத்தவர் அதற்கேற்ற நிலையில் இல்லாதபோது சவால் இன்னும் அதிகமாகிறது. இருந்தாலும், அடுத்தவரின் செயல்பாட்டால் ஒருவர் தன் அமைதியை இழந்துவிடக்கூடாது. தன்னிலே உள்ள அமைதி கெடும்போது அது மற்றவர்களின் அமைதியையும் பாதிக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில், சீராக், செல்வங்களில் நம்பிக்கை வைப்பதையும், திரும்பத் திரும்பப் பாவம் செய்வதையும் கடிந்துகொள்கிறார். இந்த இரண்டு நேரங்களிலும் ஒருவர் தன் உப்பின் தன்மையை இழந்துவிடவும், அமைதியை இழந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.

மேற்காணும் இரண்டையும் தக்கவைத்துக்கொள்ள இன்றைய பதிலுரைப்பாடல் அழகான மந்திரத்தைக் கற்றுத் தருகிறது: 'ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டோர் பேறுபெற்றோர்.'

Tuesday, February 26, 2019

நம்மைச் சாராதவர்

இன்றைய (27 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 9:38-40)

நம்மைச் சாராதவர்

கிளாடியேட்டர் என்ற திரைப்படத்தில் தன்னிடம் உள்ள கிளாடியேட்டர்களுக்குப் பயிற்சி கொடுத்து, முதன் முதலாக அவர்களை அரங்கத்திற்குள் அனுப்பும்போது அவர்களின் மாஸ்டர் ஒரு இரகசியம் சொல்லி அனுப்புவார்: 'நீ தோற்காமல் அல்லது சாகாமல் இருக்க வேண்டுமென்றால் மக்களை வெற்றி கொள்!' - வின்னிங் தெ க்ரவ்ட்.

வருகிற மே மாதம் தேர்தல் வருகிறது. அத்தேர்தலில் நாம் நிற்க அழைக்கப்படுகிறோம். தேர்தலுக்கு இன்னும் 90 நாள்களே உள்ளன. நம் தொகுதியில் 90000 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இப்போதுள்ள நிலையில் எனக்கு வெறும் 100 பேரைத்தான் இவர்களில் தெரியும். மீதியுள்ள 89900 பேரை நான் தெரிந்துகொண்டால்தான் என்னால் தேர்தலில் வெற்றி பெற முடியும். இந்த அளவு இல்லை என்றாலும் பாதிக்கு மேல் உள்ள மக்களையாவது தெரிந்தாக வேண்டும். ஆக, 'நான் அவர்களையும், அவர்களுடைய நல்லெண்ணத்தையும் வென்றால்தான் நான் வெற்றி பெற முடியும்!'

தேர்தல் தவிர்த்து நாம் அன்றாடம் செய்யும் அலுவல்களிலும் இது பயன்படும்.

என் வீட்டில் உள்ள ஒரு குழந்தைக்கு நான் பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டும் என வைத்துக்கொள்வோம். அதற்காக நான் மாநகராட்சி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு நான் சென்று, எப்போது அந்த அலுவலரை 'வெற்றி' கொள்கிறேனோ அப்போதுதான் என் குழந்தைக்குச் சான்றிதழ் கிடைக்கும். இந்த வெற்றிக்காக நாம் பயன்படுத்தும் வழிகள் பலவாக இருக்கலாம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு அன்பு செய்த சீடர் யோவான், இயேசுவின் குழுமத்தைச் சாராத ஒருவர் இயேசுவின் பெயரால் பேய் ஓட்டுவதைத் தான் தடுக்கப்பார்த்ததைச் சொல்லுகின்றார். இது இவருடைய பொறாமை அல்லது இயலாமையின் வெளிப்பாடாக இருக்கலாம். அல்லது 'குழு உணர்வு' அல்லது 'குழுமத்தின்' மேல் இருந்த அக்கறையாக இருக்கலாம். ஆக, அவர் 'நம்மைச் சாராதவர்' என்று அந்த நபருக்கு முத்திரை இடுகின்றார்.

ஆனால், இயேசுவின் பார்வை சற்று வித்தியாசமாக இருக்கிறது. அதாவது, 'பேய் ஓட்டும் அந்த நபருக்கும் உனக்கும் உள்ள வேற்றுமையைப் பார்க்காதே. ஒற்றுமையைப் பார். நீங்களும் என் பெயரால் ஓட்டுகிறீர்கள். அவரும் என் பெயரால் ஓட்டுகிறார்' என்று யோவானுக்கு மறைமுகமாக அறிவுரை கூறும் இயேசு, மறைமுகமாக பேய் ஓட்டும் அந்த நபரையும், யோவானையும் ஒரே நேரத்தில் வெற்றிகொள்கின்றார்.

யாரால் மற்றவர்களை எளிதில் வெற்றிகொள்ள முடியும்?

1. யார் ஒருவர் தனக்கும் மற்றவருக்கும் உள்ள வேற்றுமையைப் பார்க்காமல் ஒற்றுமையைப் பார்க்கிறாரோ அவர் பெற்றி பெறுவார். அதாவது, 'நீங்க தமிழ் பாடம் எடுக்குறீங்க! நான் ஆங்கிலம் எடுக்கிறேன்!' என்றால் அது வேற்றுமை. ஆனால், 'நீங்களும் நானும் ஒரே பள்ளியில் வேலை செய்கிறோம்' என்றால் அது ஒற்றுமை.

2. பார்வையை அகலமாக்க வேண்டும். நாம் ஒரு பொருளை மிகவும் பக்கத்தில் வைத்துப் பார்க்கும்போது அது தன் இயல்பைக் காட்டுகிறேன் என்ற நினைப்பில் நம் கண் பார்வையை மறைத்துவிடும். ஆனால், அதைத் தனியே மற்ற பொருள்களோடு வைத்துப் பார்க்கும்போது அது தன் தனிப்பட்ட நிலையை இழந்தாலும், அங்கே நம் பார்வை அகலமாகும். அகலமான பார்வையும், விரிந்த உள்ளமும் கொண்டவர்கள் எல்லாரையும் இணைத்தே பார்ப்பார்கள்.

3. 'ஒன்றின் தொடக்கத்தை அல்ல. அதன் முடிவையே பார்க்க வேண்டும்' என்பார் சபை உரையாளர். எடுத்துக்காட்டாக, நம் தொடக்கம் நம்மை மற்றவரிடமிருந்து பிரிக்கிறது. ஆனால், நம் முடிவு ஒருவர் மற்றவரோடு நம்மை இணைக்கிறது. இந்நிகழ்வில் 'பேய் வெளியேறுகிறது' என்பது முடிவு. யார் சொல்லி விரட்டினால் என்ன? பேய் வெளியேறினால் நல்லது - என முடிவைப் பார்க்கின்றார் இயேசு.

'மக்களை வெற்றிகொள்ளும்' இவ்வழிகளை 'ஞானம்' என்ற ஒற்றைச் சொல்லால் வரையறுக்கிறது இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 4:11-19).

அறிவு பிரித்துப் பார்க்கும் - யோவானின் அறிவு போல.
ஞானம் இணைத்துப் பார்க்கும் - இயேசுவின் ஞானம் போல.

அறிவில் தோல்வி அதிகம். ஆனால், ஞானத்தில் என்றும் வெற்றியே.


யார் பெரியவர்?

இன்றைய (26 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 9:30-37)

யார் பெரியவர்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'யார் பெரியவர்?' என்று தங்களுக்குள் வாதாடிக்கொண்டிருந்த தன் சீடர்களுக்கு சிறு குழந்தை ஒன்றை முன்மாதிரியாக வைக்கின்றார் இயேசு.

இயேசு தன் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு பற்றிப் பேசும் வார்த்தைகளைச் சீடர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர். அவர்களுடைய எண்ணமெல்லாம், 'நமக்குள் யார் பெரியவர்?' என்ற கேள்வியை மையமாக வைத்து இருக்கிறது.

நம் வாழ்வின் ஒவ்வொரு பொழுதும், நாம் நம்மைப் பற்றி நினைக்கும்போதும், நமக்கு அடுத்திருப்பவரைப் பற்றி நினைக்கும்போதும், நம்மை அறியாமலேயே நம் மூளை மற்றவருடன் நம்மையே ஒப்பீடு செய்து, 'அவரைவிட நான் எந்தவிதத்தில் பெரியவர்?' என்று கணக்குப் போடுகிறது. அல்லது எதிர்மறையாக, 'என்னைவிட அவர் சிறியவர்' என்று சிலவற்றைப் பட்டியலிடுகின்றோம். பெரியவர் - சிறியவர் பேதம் என்பது நம் மூளையின் எண்ணமே தவிர, அடிப்படையில் பெரியவர்-சிறியவர் என்ற பேதம் படைப்பில் கிடையாது. இதை நம் முன்னோர்கள் தெளிவாக உணர்ந்ததால்தான், 'நீர் வழிப்படும் புணைபோல் ஆருயிர் முறைவழிப்படும் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' (புறநானூறு 192) என்றனர்.

சிறு பிள்ளைகள் தங்கள் மனத்தில் இத்தகைய பேத உணர்வு கொண்டிருப்பதில்லை. ஆகையால்தான் இயேசு அவர்களை முன்மாதிரியாக வைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். சீஞா 2:1-11), சீராக்கு, அக்கால சீடர்களுக்கு அறிவுரை பகர்கின்றார்: அருள்பணிப் பயிற்சிக்கு வரும் மாணவன் ஒருவனிடம் பேசுவதுபோல இருக்கின்றது அவருடைய அறிவுரை: 'குழந்தாய், ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன் வந்தால், சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள். உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு. உறுதியாக இரு. துன்ப வேளையில் பதற்றமுடன் செயலாற்றாதே. ஆண்டவரைச் சிக்கெனப் பிடித்துக்கொள். அவரை விட்டு விலகிச் செல்லாதே. உன் வாழ்க்கையின் முடிவில் வளமை அடைவாய். என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள். இழிவு வரும்போது பொறுமையாக இரு.'

இப்படித் தொடரும் இவருடைய அறிவுரை சீடனுக்கு உற்சாகம் தருவதாகவும், அதே நேரத்தில் வாழ்க்கைத் தெரிவில் உறுதியாக இருக்க வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது.

ஆக, இன்று நம் மூளை, 'நீ பெரியவன்! நீ பெரியவள்!' என்று நம்மைப் பார்த்துச் சொன்னால், அல்லது 'அவனைப் பார்!' 'அவளைப் பார்!' என்று அடுத்தவைரைப் பார்க்கச் சொல்லி நம்மைத் தூண்டினால், சற்றே அமைதி காப்போம் சிறு பிள்ளைபோல. ஏனெனில், இவ்வெண்ணங்கள் உண்மை அல்ல. நம்மை ஏமாற்றும் பெரிய திருடன் நம் மூளையே. மூளை சொல்வதை விடுத்து, முதல் வாசகம் சொல்லும் மனத்திற்குச் செவிசாய்த்தால் எத்துணை நலம்!


Sunday, February 24, 2019

செத்தவன் போலானான்

இன்றைய (25 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 9:14-29)

செத்தவன் போலானான்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் ஒருவனை நலமாக்குகின்றார்.

இந்த நிகழ்வை மாற்கு மிக அழகாக சித்தரிக்கிறார். இந்த நிகழ்வில் வரும் சிறுவனின் அப்பா, 'நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்' என்கிறார். ஆனால், இந்நிகழ்வில் வரும் சீடர்களோ, இயேசு அவர்களுடைய அருகிலிருந்தும் அவரை நம்ப மறுக்கின்றனர். இந்த முரண்தான் மாற்கு நற்செய்தியாளர் தரும் பாடம்.

இந்த வாசகத்தில் வரும் 'அப்பா' என்ற கதைமாந்தரை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

அப்பாக்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். அம்மாக்கள் ஒரு குழந்தையின் 'உள் விவகாரம்' பற்றி அக்கறைப்படுகிறார்கள் என்றால், அப்பாக்கள் அக்குழந்தையின் 'வெளி விவகாரம்' பற்றி அக்கறைப்படுவார்கள். எடுத்துக்காட்டாக, குழந்தையின் உடல் நலம், மனநலம், உடல் உபாதைகள், அதைச் சரி செய்யும் விதம், குழந்தையின் உடல் வளர்ச்சி எல்லாம் அம்மா டிபார்ட்மெண்ட். ஆனால், வீட்டின் வாசலைத் தாண்டி குழந்தை செய்யும் அனைத்து விடயங்களும் - படிப்பு, வேலை தேடுதல், வேலை என எல்லாம் அப்பா டிபார்ட்மெண்ட். அப்பா தான் சமூகத்திற்கும் வீட்டிற்குமான இணைப்புப் புள்ளி. இப்படிப்பட்ட ஒரு அப்பாவைத்தான் இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கின்றோம்.

ஒரு அப்பா, பேய் பிடித்து வலிப்பு நோய் வந்து, வாயில் நுரை தள்ளித் தெருவில் கிடக்கும் மகன், தீய ஆவி விரட்ட முயன்று தோற்றுப் போகும் சீடர்கள், வேடிக்கை பார்க்கும் கூட்டம்.

இங்கே அப்பாவும் அவருடைய மகனும் சீடர்களின் பயன்பாட்டுப் பொருளாகவும், ஊராரின் கேலிப்பொருளாகவும் மாறிவிடுகின்றனர். தன் மகனின் சீக்ரெட் வெளியில் தெரியும்போது வருத்தப்படுபவர் அம்மாiவிட அப்பாதான். ஏனெனில், அதனால் வரும் விளைவுகளை உடனடியாக அவர் மனம் எண்ண ஆரம்பிக்கும். வலிப்பு வந்த சிறுவன் - எப்படிப் படிப்பான்? எப்படி வேலை பார்ப்பான்? எப்படி திருமணம் முடிப்பான்? எப்படி வாழ்வில் செட்டில் ஆவான்? என்று நிறையக் கேள்விகள் இருந்திருக்கும்.

கானானியப் பெண் நிகழ்வில் ஒரு தாய் தன் மகளுக்காக அவமானம் தாங்கவதைப் பார்க்கிறோம். இங்கே ஒரு தந்தை தன் மகனுக்காக அவமானம் தாங்குகிறார்.

இயேசு நிகழ்வுக்குள் வந்தவுடன் நிகழ்வு தலைகீழ் மாற்றம் பெறுகிறது.

இயேசுவைக் கண்டவுடன் சிறுவனின் உள்ளிருக்கும் பேய் இன்னும் வேகமாகச் செயலாற்ற ஆரம்பிக்கிறது.

'இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?' என்கிறார் இயேசு.

அதாவது, மறைமுகமாக, 'எவ்வளவு நாள் நீர் இத்துன்பத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறீர்?' என்று அப்பாவின் துயரை அறிந்தவராகக் கேட்கிறார் இயேசு.

அந்த அப்பா ரொம்ப வெகுளியானவர். பொய் எதுவும் சொல்லவில்லை. 'குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்து வருகிறது' என்கிறார். தொடர்ந்து பேய் சிறுவனுக்குச் செய்வதனைத்தையும் சொல்கின்றார். இறுதியில், 'உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள் மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்' என்கிறார்.

அப்பாக்கள் வழக்கமாக யாரையும் உதவி கேட்டு வற்புறுத்துவதில்லை. ஏனெனில், ஒவ்வொரு ஆணும் தன்னால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்றே எண்ணுவார். மேலும், தன் மகனின் முன்னிலையில் உதவி கேட்பது தன்மதிப்பு குறைவு என நினைப்பார். ஏனெனில், ஒவ்வொரு குழந்தையும் தன் அப்பாவை தன் முதல் ஹூரோ என எடுத்து வாழும். அந்த நேரத்தில் போய், தான் இயேசுவிடம் உதவி கேட்டு நின்றால் அது குழந்தையின் தன்மானத்தையும் பாதிக்கும் என்பதில் மிகவும் அக்கறையாயிருக்கிறார் இந்த அப்பா. மேலும், ஏழைகள் தங்களுக்கு உதவி வேண்டி யாரையும் வற்புறத்தமாட்டார்கள். உதவி கிடைக்கவில்லை என்றாலும் தங்கள் நிலை இதுதான் என்று எண்ணி தொடர்ந்து வாழ ஆரம்பிப்பார்கள். அப்படிபட்ட ஒரு உணர்வுப் பிரதிபலிப்பையே இங்கே பார்க்கிறோம்.

'இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்' என்கிறார் இயேசு.

அதாவது, 'என்னால் மட்டும் அல்ல. நீர் நம்பினால் உம்மாலும் நிகழும்' என்கிறார் இயேசு. தன் நிலைக்கு அந்த அப்பாவை உயர்த்துகிறார் இயேசு. அந்த அப்பாவும், 'நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்' என்று செபிக்கிறார்.

அந்த நேரத்தில்தான் இன்னொரு அதிர்ச்சி நடக்கிறது.

இயேசு பேயை ஓட்ட சிறுவன் செத்தவன் போலாகிறான்.

'அவன் இறந்துவிட்டான்' என்று மிக எளிதாகச் சொல்கிறது மக்கள் கூட்டம். அந்த நொடியில் அந்த அப்பாவும் இறந்துபிழைத்திருப்பார்.

இயேசு சிறுவனைத் தூக்கிவிடுகின்றார்.

ஆக, விரக்தி, அவமானம், அதிர்ச்சி என நம்பிக்கையில் நகரும் அப்பா இறுதியில் நலம்பெற்ற தன் மகனைத் தழுவிக்கொள்கின்றார்.

இன்றிலிருந்து நாம் முதல் வாசகமாக சீராக்கின் ஞானநூலை வாசிக்கின்றோம். இந்த நூல் முழுவதும் - ஏறக்குறைய - ஒரு அப்பா தன் மகனுக்கு அறிவுரை கூறுவதுபோலவே அமைந்திருக்கும்.

இன்று நம் அப்பாக்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம்.

அப்பாக்கள் நம்பிக்கையால் கடவுளைப் போல ஆகக்கூடியவர்கள்.


Friday, February 22, 2019

கூடாரங்கள் அமைப்போம்

இன்றைய (23 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 9:2-13)

கூடாரங்கள் அமைப்போம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை வாசிக்கின்றோம். இந்நிகழ்வில் ஓர் உயர்ந்த மலையின்மேல் இயேசுவும் அவருடைய முதல் வட்டத் திருத்தூதர்கள் பேதுருவும் யாக்கோபும் யோவானும் இருக்கின்றனர். திடீரென இயேசு தோற்றம் மாறுகிறார். அவருடைய முகம் மாறுகிறது. ஆடைகள் மின்னுகின்றன. எலியாவும் மோசேயும் தோன்றுகின்றனர். அவர்கள் இயேசுவோடு உரையாடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நேரத்தில், பேதுரு இயேசுவோடு உரையாடுகின்றார்.

'ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்கள் அமைப்போம்'

தான் பேசுவது என்னவென்று தெரியாமலேயே அவர் பேசியதாக மாற்கு பதிவு செய்கின்றார்.

பேதுரு ஒரு வித்தியாசமான நபர்.
இவர் மீன்பிடித் தொழில் செய்தவர். இப்போது தனக்குத் தொடர்பே இல்லாத ஒரு தொழில் பற்றி, 'கூடாரம் அமைப்பது' பற்றி பேசுகின்றார். மீன்பிடித் தொழில் நடப்பது கடலில். கூடாரம் அமைப்பது தரையில். மீன்பிடிக்கு படகை நகர்த்த தங்கள் கயிற்றைக் கம்பியிலிருந்து அகற்ற வேண்டும். கூடாரம் அமைக்க தங்கள் கயிற்றைக் கம்பியில் கட்ட வேண்டும். காற்று இல்லையேல் மீன்பிடி சாத்தியமில்லை. காற்று இருந்தால் கூடாரம் சாத்தியமில்லை. இப்படியாக ஒன்றுக்கு ஒன்று முரணான இயல்புகள் உடைய இரண்டையும் ஒன்றிணைப்பவராக பேதுரு இருக்கிறார்.

மேலும், மீன்பிடிக்கும் ஒருவர் 'நாம் மலையிலேயே இருப்பது நல்லது' என்று சொல்வது மிக மிக அரிது.

ஆக, உருமாற்ற நிகழ்வு இயேசுவை மாற்றியதோ இல்லையோ, பேதுருவை முழுமையாக மாற்றிவிடுகிறது. இதுதான் இறைப்பிரசன்னத்தின் வல்லமை.

ஆடு மேய்ப்பவரை எகிப்திற்கு அனுப்புவது, கொல்லச் சென்றவரைத் தடுத்தாட்டுக்கொள்வது என இறைப்பிரசன்னம் எதுவும் செய்யும். இதன் ஆற்றல் அளப்பரியது. இதன் ஆற்றலை அனுபவிக்க ஒருவர் தற்கையளிப்பு செய்ய வேண்டும் அவ்வளவுதான்.

'தற்கையளிப்பு' என்றால் என்ன?

'நான் பேசுவது என்னவென்றே எனக்குத் தெரியாத அளவிற்கு' நான் இறைவனால் ஆட்கொள்ளப்படுவதே தற்கையளிப்பு. என் பேச்சு எனக்குத் தெரியாத அந்த நேரத்தில்தான் அவரின் பேச்சு எனக்குப் புரிய ஆரம்பிக்கும். பல நேரங்களில் நான் என் பேச்சையே கேட்டுக்கொண்டிருப்பதால்தான் என்னால் அவருடைய பேச்சைக் கேட்க முடியவில்லை. என் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருப்பதால்தான் நான் என் தொழில் பற்றியே கவலைப்பட்டுக்n;காண்டிருக்கிறேன். புதிய தொழிலை அல்லது முன்னெடுப்பை எடுக்கத் தயக்கம் காட்டுகிறேன்.

இன்றைய முதல் வாசகம் (காண். எபி 11:1-7), நம்பிக்கை என்றால் என்ன என்பதை வரையறை செய்கிறது: 'நம்பிக்கை என்பது எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை.'

நான் கொள்ளும் நம்பிக்கை என்னை இறைப்பிரசன்னத்திற்கு தற்கையளிப்பு செய்யத் தூண்டுகிறது. அந்தப் பிரசன்னம் நான் நம்பிக்கையில் வளர உதவுகிறது.

Thursday, February 21, 2019

உன் பெயர் பாறை

இன்றைய (22 பிப்ரவரி 2018) திருவிழா

உன் பெயர் பாறை

இன்று நம் தாய்த்திருச்சபை திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் திருவிழாவைக் கொண்டாடுகிறது.

பேதுருவைத் தலைவராகக் கொண்டாடும் இந்நாளில், திருத்தந்தையைக் கொண்டாடும் இந்நாளில், இயேசு பேதுருவிடம் மனம் திறந்து உரையாடும் ஒரு நிகழ்வு என் மனத்தில் எழுகிறது. இதை லூக்கா மிக அழகாகப் பதிவு செய்கிறார்:

'சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால், நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து!' (லூக் 22:31)

ஆக, வலுவின்மையில் இருக்கும் பேதுரு தன் சகோதரர்களின் வலுவின்மையைக் கண்டு அவர்களை உறுதிப்படுத்த வேண்டும்.

இதையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 பேதுரு 5:1-4), பேதுரு மிக அழகாகப் பதிவு செய்கிறார்:

'உங்கள் பொறுப்பில் இருக்கும் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள். கட்டாயத்தினால் அல்ல ... மன உவப்படன் செய்யுங்கள். ஊதியத்திற்காக அல்ல ... விருப்போடு பணி செய்யுங்கள். அடக்கி ஆளாமல் ... முன்மாதிரியாக இருங்கள்'

திருஅவையின் பணிப்பொறுப்பில் இருக்கும் அனைவரும், மன உவப்பு. தன்னார்வம், முன்மாதிரி வாழ்வு என்ற மூன்று பண்புகளைப் பெற்றுக்கொள்ள முயல்வோம்.


Wednesday, February 20, 2019

கடிந்துகொண்டார்

இன்றைய (20 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 8:27-33)

கடிந்துகொண்டார்

ஆங்கிலத்தில் 'டேக்கிங் ஃபார் க்ராண்டட்' என்ற சொலவடை உண்டு. இதற்கு பல பொருள்கள் உண்டு. இவற்றில் ஒன்று, 'இதுல என்ன இருக்கு!' என்று ஒன்றை எடுத்துக் கையாளுவது. இந்த மனப்பான்மை உருவாக வேண்டும் என்றால் இருவருக்கு இடையே உள்ள உறவு அவசியம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்களிடம், 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' என முதலில் கேட்கின்றார். தொடர்ந்து, 'நீங்கள் என்னை யாரெனச் சொல்கிறீர்கள்?' எனக் கேட்கிறார்.

'நீர் மெசியா' என பேதுரு விடை சொல்லி 'வெரி குட்' வாங்கிக்கொள்கிறார்.

இயேசுவிடம் 'வெரி குட்' வாங்கிவிட்டதால், இனி அவரிடம் தான் என்னவும் சொல்லலாம் என நினைத்து, 'அவர் இயேசுவை டேக் ஃபார் கிராண்டட்' செய்கிறார்.

இயேசு தன்னுடைய பாடுகள் மற்றும் துன்பம் பற்றிப் பேச ஆரம்பித்தவுடன், அதிக உரிமை எடுத்துக்கொள்ளும் பேதுரு, இயேசுவைத் தனியே அழைத்துச் சென்று அவரைக் கடிந்துகொள்ள ஆரம்பிக்கின்றார். இயேசு வெளிப்படையாகச் சொல்கின்றார். ஆனால் பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொள்கின்றார்.

'இப்படியெல்லாம் பேசாதப்பா. உனக்கு எதுவும் நடக்காது. நாங்கள்லாம் இருக்கோம்ல' என்று ஒரு நல்லெண்ணத்தில்தான் பேதுரு இயேசுவுக்கு அறிவுரை கொடுத்திருப்பார்.

ஆனால், இப்படிச் சொன்னதன் வழியாக பேதுரு தன் ப்ரைவஸி வட்டத்திற்குள் வந்துவிட்டதாக எண்ணி பேதுருவைக் கடிந்து கொள்கின்றார். சற்று நேரத்திற்கு முன், 'ஆஹா ஓஹோ' என்று பாராட்டியவர், 'சாத்தானே! அப்பாலே போ!' என்கிறார்.

இங்கே பேதுரு இயேசுவிடம் நிறைய சுதந்திரம் எடுத்துக்கொண்டதுதான்.

மேலும், கடவுளைக் கடவுளாக இருக்கவும் இவர் அனுமதிக்கவில்லை.

இதைத்தான் இயேசு, 'நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்' என்கிறார்.

இன்று கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை எண்ணிப் பார்ப்போம்.

எத்துணை முறை நாம் கடவுளுக்கு ஆலோசனை சொல்பவர்களாக, அல்லது கடவுளின் வரையறைக்குள் நுழைய முயல்பவர்களாக இருக்கிறோம்?

Tuesday, February 19, 2019

மரங்களைப் போல

இன்றைய (20 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 8:22-26)

மரங்களைப் போல

நேற்றைய தினம் என் நண்பர் ஒருவருடன் சிறிய வாக்குவாதம். பொருள் இதுதான்: 'உதவி செய்வது.'

'யாரும் கேட்காமல் நான் யாருக்கும் உதவி செய்வதில்லை. ஏனெனில், அப்படி நானாக வலிந்து உதவி செய்தபோதெல்லாம் நான் ஒரு முட்டாளாக நடத்தப்பட்டதை நான் உணர்ந்திருக்கிறேன்' என்று என் மேசையில் அமர்ந்து அருள்பணியாளர் நண்பரிடம் சொன்னேன்.

அவர் மாற்றுக் கருத்து சொன்னார்.

'உதவி இவருக்குத் தேவைப்படும் என்று நாமாக தேடி உதவி செய்ய வேண்டும். தாய் தன் குழந்தைக்கு எப்படி உதவுகிறாளோ, அல்லது நல்ல சமாரியன் எப்படி உதவினானோ' என்று நிறைய மேற்கோள்களுடன் பேச ஆரம்பித்தார்.

நிற்க.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பார்வையற்ற ஒருவருக்கு பார்வை தருகின்றார். பார்வையற்ற நபரை ஊருக்கு வெளியே அழைத்துச் செல்கின்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, 'ஏதாவது தெரிகிறதா?' என்று கேட்கின்றார்.

அதற்கு பார்வையற்ற நபர் மிக அழகான வார்த்தைகளைப் பதிலாகச் சொல்கின்றார்:

'மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால், நடக்கிறார்கள்.'

இவ்வார்த்தைகளை நாம் மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் சாதாரண வார்த்தைகளாகத் தெரிகின்றன. ஆனால், இந்த வார்த்தைகளைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இம்மனிதனுக்கு ஒட்டுமொத்த மனிதர்கள்மேல் இருந்த கோபம், வெறுப்பு, எதிர்ப்பு தெரிகிறது. இவர் ஒரு போராளியாகவே என் கண்களுக்குத் தெரிகிறார்.

அதாவது, இவருக்கு இவ்வளவு நாள்கள் பார்வையில்லை. பார்வையற்ற இவர் கண்டிப்பாக மற்ற மனிதர்களைச் சார்ந்தே தன் வாழ்க்கையை நகர்த்தியிருப்பார். இவருக்கு உதவி சில நேரங்களில் தாமாகக் கிடைத்திருக்கும். சில நேரங்களில் இவர் கேட்டு கிடைத்திருக்கும். சில நேரங்களில் உதவி மறுக்கப்பட்டிருக்கும். உலகில் கொஞ்ச மனிதர்கள் மட்டுமே இருப்பதாக இவர் நினைத்திருக்கலாம். ஆனால், பார்வை தெரிய ஆரம்பித்தவுடன், உலகம் தெரிய ஆரம்பிக்கிறது. மனிதர்கள் தெரிய ஆரம்பிக்கிறார்கள்.

'இவ்வளவு மனிதர்கள் இருந்தும் எனக்கு இதுவரை யாரும் உதவி செய்ய முன்வரவில்லையே' என்று ஆதங்கத்தால்தான் என்னவோ, 'மனிதர்களைப் பார்க்கிறேன். இவர்கள் மரங்கள்போலத் தோன்றுகின்றார்கள். ஆனால் நடக்கிறார்கள்' என்று நக்கலாகப் பேசுகின்றார்.

'இவ்வளவு பேர் இருந்தும் எனக்கு உதவாத இவர்கள் மரங்களே. நடக்கும் மரங்களே' என்று ஒட்டுமொத்தமாக தன் கோபத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்கின்றார் இந்தப் பார்வை அற்ற (பெற்ற) நபர்.

மனிதர்கள் பெரிதாக யாருக்கும் ஒன்றும் செய்யத் தேவையில்லை. பார்வையற்ற ஒருவரை ஒரு பத்து அடி பாதுகாப்பாக நகர்த்திவிட்டால் போதும். அடுத்த பத்து அடியை இன்னொருவர் பார்த்துக்கொள்வார். பசியால் வாடும் ஒருவர் பிச்சை கேட்கிறார். அவரைக் கூட்டி வந்து வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அவருக்குத் தேவையான உணவைக் கொடுத்து, என்னைப் போன்ற இன்னொருவரை அவர் சந்திக்கும் வரை அவருடைய தேவைகளைப் பார்த்துக்கொண்டால் போதும்.

இன்று, அடுத்தவரை அடித்துப் பறிக்கும் நிலைதான் மிக அதிகமாக இருக்கிறது. 'என்னுடையதும் உன்னுடையது. உன்னுடையதும் என்னுடையது' என்ற நிலைதான் எவ்வழியிலும் சம்பாதிக்க ஒருவரைத் தோன்றுகிறது.

மரம் நல்லதுதான். அது நிழல்தரும். கனிதரும். ஆனால், மனிதர்கள் மரங்களைப் போல இருந்தால் அது நல்லதன்று. நகராத மரங்களே நிழலும் கனியும் தருகின்றன என்றால், நகர்கின்ற மரங்களாகிய மனிதர்கள் இன்னும் எவ்வளவோ செய்யலாமே!

உதவி கேட்டு வருபவருக்கு உதவுதலும் சால்பு.
உதவி கேட்காமல் நிற்பவர்களைத் தேடி உதவுதலும் சால்பு.

Monday, February 18, 2019

புரியவில்லையா?

இன்றைய (19 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 8:14-21)

புரியவில்லையா?

மாற்கு நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் கொஞ்சம் மந்தமானவர்களாகவே காட்டப்படுகின்றனர். அவர்களால் இயேசுவை இறுதிவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர் ஒன்று சொல்ல, இவர்கள் ஒன்று செய்வதுமாகத்தான் நற்செய்தி நிகழ்வுகள் நகர்கின்றன. அதன் தொடக்கம்தான் இன்றைய நற்செய்தி வாசகம்.

'பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்' என்று இயேசு பரிசேயர், மற்றும் எரோதியரிடமிருந்த 'கபடம்' மற்றும் 'தீய எண்ணம்' குறித்து எச்சரிக்கையாய் இருக்கச் சொல்கின்றார் இயேசு. 'புளிப்பு மாவு' என்பது 'கபடம்' 'தீட்டு' 'தூய்மையற்ற நிலை' மற்றும் 'பழைய இயல்பு' ஆகியவற்றைக் குறிக்கு வார்த்தை என்பது எல்லா யூதர்களுக்கும் தெரியும். ஏனெனில், நல்லுறவுப் பலிகளும் தானியப் பலிகளும் செலுத்த வருகின்ற எல்லா யூதர்களும் 'புளிப்பு' சேர்க்காத மாவையே கொண்டுவர வேண்டும் என்பது லேவியர்நூல் அவர்களுக்குத் தரும் பாடம்.

இந்தப் பின்புலத்தில் அவர்கள் இதைப் புரிந்துகொள்ளாமல், 'அப்பம் இல்லை' என்று புலம்பத் தொடங்குகிறார்கள். இதை அறிந்த இயேசு அவர்களைச் சாடுகின்றார். இருக்கின்ற சில அப்பங்களை வைத்து பல பேருக்கு உணவு கொடுத்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகின்றார். அப்படியிருந்தும் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

வேறு வேறு இருத்தல் மற்றும் இயங்குதளங்களில் இருந்ததால்தான் சீடர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ள இயலவில்லை.

சீடர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இயேசு தங்களைப் புரிந்துகொள்ளாததாகக் கூட நினைத்திருக்கலாம்.

சீடர்கள் செய்த தவறு இதுதான்: 'தங்களுடன் பெரியவர் இருக்கும்போது சின்னஞ்சிறியவைகளைப்பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தனர்.'


Sunday, February 17, 2019

அடையாளம்

இன்றைய (18 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 8:11-13)

அடையாளம்

இன்றைய நற்செய்தி வாசகத்தையும் (காண். மாற் 8:11-3), முதல் வாசகத்தையும் (காண். தொநூ 4:1-15,25) இணைக்கின்ற ஒரு வார்த்தை 'அடையாளம்.' நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் வந்து அவருடன் வாதாடுகின்ற பரிசேயர், வானத்திலிருந்து அடையாளம் ஒன்று காட்டும்படி அவரைச் சோதிக்கின்றனர். முதல் வாசகத்தில், தன் முன்னிருந்து காயினை விரட்டியடிக்கின்ற கடவுள், 'காயினைக் கண்டுபிடிக்கும் எவனும் அவனைக் கொல்லாமல் இருக்க அவன்மேல் ஓர் அடையாளம் இடுகின்றார்.'

மனுக்குலத்தின் முதல் தாய் ஏவாள், தான் பெற்றெடுக்கின்ற முதல் குழந்தையை - ஆண்-பெண் உறவில் பிறந்த முதல் குழந்தையை - 'ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனைப் பெற்றெடுத்தேன்' என்று சொல்லி 'காயின்' எனப் பெயரிடுகின்றாள். 'ஆபேல்' என்ற பெயருக்கு இங்கே பொருள் இல்லை. ஆனால், 'ஆபேல்' என்றால் 'காற்று அல்லது நீராவி அல்லது ஓட்டம்' என்பது பொருள். 'ஆபேல்' என்ற வார்த்தையைத்தான் 'ஹேபல்' ('வீண்,' 'வெறுமை,' 'காற்றைப் பிடிப்பதற்குச் சமம்') என்று சபை உரையாளர் தன் நூல் முழுவதும் எடுத்தாளுகின்றார் (காண். சஉ 1:1, 12:8).

ஆதாம், ஏவாள், ஆபேல், காயின் என அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என நான்கு பேரின் பெயர்கள் ஒருங்கே கொடுக்கப்பட்டிருப்பது இன்றைய முதல் வாசகத்தில் மட்டும்தான்.

காயினிலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். மனுக்குலத்திற்கு அறநெறி போதனை கடவுளால் முதன் முதலாக நம் மூத்த அண்ணன், பெரியண்ணன் காயினுக்குத்தான் அளிக்கப்படுகின்றது: 'நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்? நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆள வேண்டும்!'

இங்கே, பாவம் என்பதைக் கடவுள் நம் வீட்டு வாயிலுக்கு வெளியே படுத்திருக்கும் பெரிய ஆள்கொல்லி உயிரினம் போல உருவகிக்கிறார். மனிதர்களுக்கு பாவத்தின்மேல் வேட்கை இருக்கிறது என்பதைவிட, பாவத்திற்குத்தான் மனிதர்கள்மேல் வேட்கை இருக்கிறது. ஏனெனில், ஒரு பாவத்தை நான் விரும்பிச் செய்ய ஆரம்பிக்கும்போது, காலப்போக்கில் அதை நான் விட முயற்சி செய்தாலும், என்னால் விட முடிவதில்லை. ஏனெனில், இவ்வளவு நாள்கள் நான் அதைப் பிடித்துக்கொண்டிருந்தேன். இப்போது அது என்னைப் பிடித்துக்கொள்கிறது.

'நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடியிருப்பது ஏன்?

- இங்கே காயின் யார் மேல் சினமுற்றான்? தன் பலியை ஏற்க மறுத்த கடவுள் மேலா? அல்லது மற்றவனின் பலிக்காக என் பலி நிராகரிக்கபட்டதே என்று மற்றவன் மேலா? இருவர்மேலும் சினம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ஆபேலைவிட தாழ்ந்த பலியை காயின் கொடுத்ததாக நமக்குப் பாடத்தில் இல்லை. 'கடவுள் ஒருவரை ஏற்றுக்கொள்கின்றார். மற்றவரை விட்டுவிடுகின்றார்' என்பதை காயினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வழக்கமாக 'கோபத்தில்' நம் தலை மேல்நோக்கி இருக்கும். இங்கே காயினின் முகம் வாடிப்போய் கீழ்நோக்கி இருக்கிறது. கீழ்நோக்கி வாடிப்போய் நிற்கக் காரணம் அவனுடைய கையறுநிலை என்றுதான் நான் சொல்வேன். அதாவது, எனக்கு மேல் இருப்பவர் மேல் எனக்குக் கோபம் இருக்கும்போது அதை என்னால் காட்ட முடியாத நிலையில் நான் தலை தாழ்ந்து வாடி விடுகிறேன்.

'நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா?'

இங்கே பாருங்கள். 'நீ நல்லது செய்தால் உயர்வடைவாய்' என்று கடவுள் இதை அறுதி வாக்கியமாகச் சொல்லவில்லை. அதிலும் ஒரு கேள்வியை வைக்கிறார். ஏனெனில், நல்லது செய்வோர் அனைவரும் உயர்வடைவதில்லை என்பதே வாழ்வியல் எதார்த்தம். ஆனால், 'நீ நல்லது செய்யாவிட்டால் பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும்' என்பதை அறுதியிட்டுச் சொல்கிறார்.

'நாம் வயல்வெளிக்குப் போவோம்!'

ஆபேல் ஆடு மேய்ப்பவன். காயின் வயலில் வேலை செய்பவன். ஒருவனின் வேலைத்தளம் மற்றவனுக்கு கொலைத்தளம் என்பது நாம் அறிந்ததே. ஏனெனில், விவசாயி எந்த அளவிற்குக் கடலுக்குச் சென்று கடல் தொழில் செய்யப் பயப்படுவனோ அந்த அளவிற்கு மீனவன் நிலத்திற்கு வந்து விவசாயம் செய்யப் பயப்படுவான். ஆக, ஆபேலைப் பாதுகாப்பற்ற இடத்திற்கு அழைக்கின்றான் காயின். அங்கே அவன்மேல் பாய்ந்து அவனைக் கொல்கின்றான். பாதுகாப்பற்ற ஒருவனைக் கொல்வதுதான் பெரிய தவறு. நேருக்கு நேர் ஆயுதம் தாங்கி இருக்கும் ஒருவனை ஆயுதம் தாங்கிய இன்னொருவன் எதிர்கொண்டால் அது சரி. ஆனால், பாதுகாப்பு இல்லாத ஒருவனை இங்கே பாதுகாப்பான ஒருவன் தனக்குப் பாதுகாப்பான இடத்தில் நின்று கொலை செய்கின்றான்.

'உன் சகோதரன் ஆபேல் எங்கே?'

'ஆபேல் எங்கே?' என்று கேட்கவில்லை ஆண்டவர். 'உன் சகோதரன்' என்ற அடைமொழி வைத்து அழைக்கின்றார். அடையாளத்தை அழித்தவன் அடைமொழி பற்றியா கவலைப்படுவான்? 'எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?' எனக் கேட்கின்றான். இதில், 'எல்லாவற்றிற்கும் காவலாளி நீ தானே! உனக்குத் தெரியாதா?' என்று கடவுளையே ஏளனம் செய்வதுபோலக் கேட்கிறான் காயின்.

காயின் செய்த தவற்றை நாம் நியாயப்படுத்த முடியாதுதான். ஆனால், சில நேரங்களில் நம் சினத்தில், 'அடுத்தவர் நம் வாழ்வில் இல்லாமல் இருந்தால் எத்துணை நலம்!' என்று கேட்டுவிடத் தோன்றுகிறது. அத்தோடு நிறுத்தியருக்கலாம் காயின். ஒருபடி மேலே போய் ஆபேலுக்கு வாழ்வு இல்லாமல் செய்துவிட்டான்.

இது காயினின் கதை.

அடுத்து ஆபேலின் கதை.

'நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா!' என்று ஆண்டவர் கேட்டார்.

ஆபேல் நல்லது தானே செய்தான் ஆண்டவரே! அப்ப ஏன் அழிஞ்சு போனான்? அவனை நீர் காப்பாற்றியிருக்கலாமே? 'காயினுடன் போகாதே!' என்று எச்சரிக்கை செய்திருக்கலாமே! 'பலி கொண்டுவா!' என்று கேட்டு ஆபேலின் பலியை ஏற்றுக்கொண்ட நீர், அவனுக்கு ஏன் கைம்மாறு செய்யவில்லை?

- இது நாம் ஆபேலின் சார்பாக எழுப்பும் கேள்வி.

ஆனால், வாழ்வில் சில நிகழ்வுகள் நடக்க வேண்டுமென்றால், நடந்துதான் ஆகும் என்பதும் நிதர்சனமான உண்மை. இந்தப் பின்புலத்தில்தான் சபை உரையாளர், 'விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் எல்லாம் நேரிடும் ... மாசற்றவர்களுக்கும் (ஆபேல்), மாசுள்ளவர்களுக்கும் (காயின்), பலி செலுத்துபவர்களுக்கும் (ஆபேல்), பலி செலுத்தாதவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும்' (காண். சஉ 9:2) என உரக்கச் சொல்கிறார்.

வாழ்வில் நம் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையில்லை எனச் சொல்கிறது ஆபேலின் கதை.

அடுத்து ஏவாளின் கதை.

'ஆண்டவரின் அருளால் இவனைப் பெற்றெடுத்தேன்' என்று சொல்லித் தன் மகன் காயினை உச்சி முகர்ந்த ஏவாள், மூத்தமகன் இளைய மகனைக் கொன்ற நிகழ்விற்கு பதிலுணர்வு காட்டியதாக பாடத்தில் இல்லை. ஆனால், தன் வேலையைத் தொடர்ந்து செய்கிறாள்: 'காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில் இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார்' என்று சேத்து என்ற மகனைப் பெற்றெடுகின்றாள்.

'பால் பொங்கிக் கொட்டி விட்டது. பாலையோ, பாத்திரத்தையோ, அடுப்பையோ குறை சொல்லி என்ன செய்ய?' என்று மறுபடியும், பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பைப் பற்ற வைக்கிறாள் ஏவாள். இந்தப் பால் கொட்டினாலும் அவள் மீண்டும் அடுப்பு பற்ற வைப்பாள். ஏனெனில், அவள்தான் ஏவாள். அவள்தான் நம் தாய். அவள்தான் நம் வாழ்க்கைப் பள்ளிக்கூடம்.


Friday, February 15, 2019

பொறுப்புணர்வு

இன்றைய (16 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 8:1-10)

பொறுப்புணர்வு

நாசி ஜெர்மனியின் வதை முகாமில் ஒரு நிகழ்வு நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் கைதிகள் ஒவ்வொருவிதமாகக் கொல்லப்பட்டனர். ஒருநாள் ஏறக்குறைய 100 கைதிகள் ஒன்றாகக் கூட்டப்படுகின்றனர். ஒரே வரிசையில் நிறுத்தப்படுகின்றனர். 'தோட்டத்தில் உள்ள மண்வெட்டிகளின் எண்ணிக்கை ஒன்று குறைவுபடுகிறது. எடுத்தவர் ஒரு ஸ்டெப் முன் வரவும்!' என்ற கட்டளை ஒலிப்பெருக்கியில் கொடுக்கப்படுகிறது. கைதிகள் நடுவில் பயம் சட்டென உருவாகிறது. 'எடுத்தவர் கொல்லப்படுவார்' என்று நினைக்கிறார்கள். அடுத்த சில நொடிகளில், எல்லாரும் இணைந்து ஒரு ஸ்டெப் முன் வருகிறார்கள். கைதிகளுக்கும் ஆச்சர்யம். காவலர்களுக்கும் ஆச்சர்யம்.

'மண்வெட்டியைத் தவறாக வேறிடத்தில் வைத்தவர் கொல்லப்படுவார். எவரோ ஒருவர் கொல்லப்படுவதற்குப் பதிலாக, நான் ஏன் கொல்லப்படக்கூடாது?' என்று எல்லாரும் பொறுப்புணர்வோடு நடந்து கொண்டதால் எல்லாரும் உயிர் தப்புகிறார்கள் அன்று.

இன்று, தான் செய்கிற செயலுக்கேப் பொறுப்பேற்க மறுக்கும் நிலை இருக்கும்போது, அடுத்தவர்களுக்காக பொறுப்பேற்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.

பொறுப்புணர்விற்கும், பொறுப்பேற்றலுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. தன் செயலுக்குப் பொறுப்பேற்கும் ஒருவர்தான் பொறுப்புணர்வோடு செயல்பட முடியும்.

இன்றைய முதல் வாசகமும் (தொநூ 3:9-24) நற்செய்தி வாசகமும் (மாற் 8:1-10), 'பொறுப்பேற்றல்-பொறுப்புணர்வு கொள்தல்' என்ற மையத்தில் சுழல்கின்றன.

விலக்கப்பட்ட கனியைத் தின்றாயிற்று. கடவுளுக்குப் பயந்து மறைந்தாயிற்று. முதற்பெற்றோர் கொண்டிருந்த வெட்கம் அவர்களை ஒருவர் மற்றவரிடமிருந்தும், கடவுளிடமிருந்தும் அந்நியப்படுத்திவிட்டது.
ஆதாமிடம், 'நீ கனியை உண்டாயோ?' எனக் கடவுள் கேட்க, 'நீர் தந்த அந்தப் பெண் எனக்குக் கொடுத்தாள்' என்று பழியை பெண்ணின் மேல் போட, 'பாம்பு என்னை ஏமாற்றியது' எனப் பெண் பாம்பைக் காட்டுகிறாள்.

இவர்கள் இருவரும் தங்கள் செயலுக்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

ஆனால், இன்றைய நற்செய்தியில் ஒரு மாற்று நிகழ்வைப் பார்க்கிறோம்.

பாலைநிலத்தில் ஒரு கூட்டம் இயேசுவோடு மூன்று நாள்கள் தங்கியிருக்கிறது. அவர்களின் பசியை எப்படிப் போக்குவது? அல்லது யார் போக்குவது? என்ற கேள்வி எழுகிறது. சீடர்களோ முதற்பெற்றோர் போல, 'இத்தனை பேருக்குப் பாலைநிலத்தில் எப்படி உணவளிப்பது?' என்று பொறுப்பைத் தட்டிக்கழிக்க முனைகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், தங்களின் இயலாமைக்குக் காரணமாக மக்களின் எண்ணிக்கையையும், நிலத்தின் இயல்பையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், இயேசு அவர்களைப் பார்த்து, 'உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?' என்று கேட்டு, 'தரையில் அமர மக்களுக்குக் கட்டளையிடுகிறார்' - இரண்டு செயல்களும் ஒரே நேரத்தில் நடக்கின்றன.

ஆக, முதல் அற்புதம் சீடர்களுக்கும், இரண்டாம் அற்புதம் மக்களுக்கும் நடக்கிறது என்று சொல்லலாம்.

'இவர்களின் பசிக்கு நான் பொறுப்பு' என்று இயேசு பொறுப்பேற்றதால், பொறுப்புணர்வு இயல்பாகவே வந்துவிடுகிறது.

நாம் செய்கின்ற செயலுக்குப் பொறுப்பேற்கும்போதுதான் நாம் வளர முடியும். என்னிடம் உள்ள தவறான பழக்கத்தை விடுவது என்றாலும் சரி, என்னையே முன்னேற்றிக்கொள்வது என்றாலும் சரி, எல்லாமே 'பொறுப்பேற்பு' என்ற புள்ளியில்தான் தொடங்குகின்றன. இந்தப் 'பொறுப்பேற்பு' ஒவ்வொரு புள்ளியாய் நான் 'பொறுப்புணர்வோடு' கடந்து செல்ல என்னைத் தூண்டுகிறது.


Thursday, February 14, 2019

திறக்கப்பட்டன

இன்றைய (15 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 7:31-37)

திறக்கப்பட்டன

இன்றைய முதல் (தொநூ 3:1-8) மற்றும் நற்செய்தி (மாற் 7:31-37) வாசகங்களில், 'திறக்கப்பட்டன' என்ற வார்த்தை பொதுவானதாக இருக்கிறது.

'அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடன் இருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன.'

'பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி, 'எப்பத்தா' அதாவது 'திறக்கப்படு' என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன.'

இன்றைய முதல் வாசகத்தில் பாம்பு நம் முதற்பெற்றோரைச் சோதிக்கும் நிகழ்வையும், நற்செய்தி வாசகத்தில் இயேசு காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைக் குணமாக்கும் நிகழ்வையும் வாசிக்கக் கேட்கின்றோம்.

இரு நிகழ்வுகளிலும் திறக்கப்படுபவர் மற்றவரிடமிருந்து தனியே அழைத்துச் செல்லப்படுகின்றார்.

முதல் நிகழ்வில் திறக்கப்படுதல் வெட்கம் என்ற உணர்வை உண்டாக்குகிறது.

இரண்டாம் நிகழ்வில் திறக்கப்படுதல் ஆச்சயர்யம் என்ற உணர்வை உண்டாக்குகிறது.

முதல் நிகழ்வு அவர்களைக் கடவுளிடமிருந்து அந்நியப்படுத்துகிறது.

இரண்டாம் நிகழ்வு அவரைக் கடவுளோடு ஒன்றிணைக்கிறது.

'கடவுளைப் போல ஆக வேண்டும்!' என்ற ஆசையினால் அவர்கள் கனியை உண்டார்களா? அல்லது 'எல்லாவற்றையும் சொன்ன கடவுள் இதைச் சொல்லவில்லையே?' என்ற கோபத்தில் அவர்கள் கனியை உண்டர்களா? - என்று தெரியவில்லை.

நன்மை-தீமை அறியத் தொடங்கியவுடனேயே அவர்களை இறப்பு பற்றிக்கொள்கிறது. ஏனெனில், நன்மை-தீமை அறிதல் இறப்பின் காரணியாக மாறிவிடுகிறது. இருவரும் 'நான் செய்தது சரி - நீ செய்தது தவறு' என்று அதே நன்மை தீமையால் பிரிகின்றனர். வேறுபட்டு நிற்கின்றனர். வேறுபடுதலே வெட்கம் என்ற உணர்வை நம்மில் எழுப்புகிறது.

இன்றைய நற்செய்தியில் காது கேளாதவரிடமிருந்த வெட்க உணர்வை தன் அறிகுறியால் அகற்றுகின்றார் இயேசு. ஆகையால்தான், இதுவரை அவரை விலக்கிவைத்தவர்கள், அவரைத் தங்களோடு ஏற்றுக்கொள்கிறார்கள். முதற்பெற்றோரின் வெட்க உணர்வு ஆடையால் சரிசெய்யப்படுகிறது.

'திறக்கப்படுதல்' அவசியம்தான். அது நம்மை புதிய வாழ்விற்குள் இட்டுச்செல்லும்தான். ஆனால், சில நேரங்களில் அது நம்மை நமக்குள்ளே அடைத்துவிடும். இன்று என் வாழ்வில் நான் திறந்துகொள்ள வேண்டியவை எவை?

Wednesday, February 13, 2019

மை வாலண்டைன்

இன்றைய (14 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 7:24-30)

மை வாலண்டைன்

இன்றைய நாள் உலகம் முழுவதும் 'காதலர் தினமாக' ('வாலண்டைன்ஸ் டே') என்று கொண்டாடப்படுகிறது. நம் தமிழகத்தில் இது 'சகோதரிகள் தினம்' என்று அரசு அறிவித்திருக்கிறது. 'இன்றைய காதலியர் நாளைய சகோதரிகள்' என்ற தொலைநோக்குப் பார்வையோடு இப்படி அறிவித்ததா, அல்லது 'இன்றைய சகோதரிகள் நாளைய காதலியர்' என்ற எதிர்நோக்கோடு இப்படி அறிவித்ததா என்று தெரியவில்லை.

இன்றைய முதல் (காண். தொநூ 2:18-25) மற்றும் நற்செய்தி (மாற் 7:24-30) வாசகங்கள் இன்றைய நாளுக்குப் பொருந்துபவைகளாக இருக்கின்றன.

எப்படி?

இன்றைய முதல் வாசகத்தில், 'மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று' என்று கடவுள் சொல்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'பிள்ளைகளுக்கு உரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது நல்லதன்று' என்று இயேசு சொல்கிறார்.

'நல்லதன்று' என்று சொன்ன கடவுள் முதல் வாசகத்தில் ஆணுக்குத் தகுந்த துணையை உருவாக்குகிறார். 'நல்லதனற்று' என்று சொன்ன இயேசுவுக்கு ஒரு மாற்று வழியைக் கற்பிக்கின்றார் பெயரில்லா அந்தப் பெண்.

பெண் படைக்கப்பட்ட நாளும் ஆண் நன்றாகத் தூங்கிய நாளும் ஒன்றாக இருப்பது விவிலியத்தில் நாம் காணும் ஒரு விந்தை. தூங்குகின்ற ஆணின் விலா எலும்பை எடுத்து பெண்ணாகச் செய்கின்றார் கடவுள். பெண் எடுக்கப்பட்ட இடம் சதையால் அடைக்கப்படுகிறது. ஆக, ஆணின் வன்மை குறைத்து அங்கே மென்மையை நிரப்புகிறாள் பெண். ஆண் தூங்கி எழுந்தவுடன், பெண்ணை கடவுள் அவனிடம் அழைத்து வருகின்றார். பார்த்தவுடன் காதல் பற்றிக்கொள்கிறது. மற்ற விலங்குகளைக் கண்டவுடன் வெறும் பெயர்களிட்டு அமைதி காத்தவன், 'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும்...இவள் பெண்' எனக் குதிக்கிறான். ஆணின் வன்மையாக, மென்மையாக இருக்கிறாள் பெண். இருவரும் ஒரே உடலாய் இருக்கிறார்கள்.

இருவரும் வெட்கப்படவில்லை. 'வெட்கம்' என்பது வித்தியாசம் என்னும் உணர்வு. எல்லாரும் ஷூ அணிந்திருக்கிற இடத்தில் ஸ்லிப்பர்ஸ் அணிவது குறித்து நான் வெட்கம் அடைகின்றேன் எனில், அங்கே நான் என்னை அடுத்தவரிடமிருந்து வித்தியாசமாக உணர்கிறேன் என்பது பொருள்.

ஆக, வித்தியாசங்கள் இருந்தாலும் வெட்கம் அவர்களிடம் இல்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் புறவினத்துப் பெண் ஒருத்தி தன் மகளுக்கு நலம் நாடி இயேசுவிடம் வருகின்றார். இயேசுவோ, 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது நல்லதன்று' என்கிறார். பெண் பின்வாங்கவில்லை. அவள் வெட்கப்படவும் இல்லை. மாறாக, அவளின் வார்த்தைகள் இயேசுவுக்கே வெட்கத்தை உண்டாக்குகின்றன: 'ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே!' அதாவது, நாய்க்குட்டிகள் கீழே இருந்தாலும் அவைகள் வாயில் இருப்பதும், பிள்ளைகள் வாயில் இருப்பதும் ஒன்றுதானே, என்று இயேசுவின் கண்களைத் திறக்கிறார். இயேசு பிள்ளை வேறு, நாய்க்குட்டி வேறு என்று வேற்றுமை பாராட்டினார். பெண், நாய்க்குட்டியின் வாயில் இருப்பதும் பிள்ளையின் வாயில் இருப்பதும் ஒன்றே என்று ஒற்றுமை பாராட்டுகிறார்.

தான் தன் மகளுக்காக 'நாய்' என்று அழைக்கப்படவும் வெட்கப்படவில்லை இந்தப் பெயரில்லா வாலண்டைன்.

பார்த்தவுடன் துள்ளிக் குதிக்கும், பரவசமாகும் 'ஆதாம்' வகைக் காதல், விரைவில் மாறிவிடும். ஏனெனில், இன்னும் சில வசனங்கள் கழித்து இதே ஆதாம், 'நீர் என்னோடு இருக்குமாறு தந்த அந்தப் பெண்' என்று பெண்ணை அந்நியப்படுத்துவான்.

ஆனால், பொதுவிடத்தில் வெட்கம் ஏற்கும், நிந்தை ஏற்கும், அவமானப்படும், தன் குழந்தை நலம் பெற்றால் போதும் என்று விடாப்பிடியாய் இருக்கும் 'சிரிய பெனிசிய பெண்' வகைக் காதல் மாறாது. அது தான் அன்பு செய்பவருக்காக எவ்வகைத் தியாகத்தையும் தாங்கும்.
இன்று,

நிறைய சாக்லேட்டுகள், கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், குறுஞ்செய்திகள், டிக்டாக் வீடியோக்கள் பரிமாறப்படும். நிறையப் பரவசமும் துள்ளலும் இருக்கும்.

ஆனால், பரவசமும் துள்ளுதலும் காதல் ஆகிவிடாது.

காதல் செய்ய பரவசமும் துள்ளுதலும் தேவையில்லை. வலியும், வேதனையும், கேலிப் பேச்சும் போதும். இவைகளில் நிலைக்கும் காதல் என்றும் நிலைக்கும்.

இதையே வேறு வார்த்தைகளில் இன்றைய பதிலுரைப் பாடல் (திபா 128) முன்வைக்கிறது:

'ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர். நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!'

ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் வழி பல நேரங்களில் வலி நிறைந்தது. அங்கே பரவசமும் துள்ளுதலும் இருக்காது. ஆனால், நிறைய உழைப்பும், நற்பேறும், நலமும் இருக்கும்.


Tuesday, February 12, 2019

தீட்டுப்படுத்துபவை

இன்றைய (13 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 7:14-23)

தீட்டுப்படுத்துபவை

நம் மனம் எந்நேரமும் 'தூய்மை-தீட்டு' என்ற பின்புலத்தில்தான் எல்லாவற்றையும் பார்க்கிறது. காலையில் எழுந்தவுடன் படுக்கையைச் சரி செய்வது தொடங்கி, உடல், உறைவிடம், சந்திக்கும் நபர்கள், உண்ணும் உணவு என எல்லாவற்றையும் 'தூய்மை-தீட்டு' என்றே பிரித்துப் பார்க்கிறது. ஐம்புலன்கள் வழியாகத் தான் பெறும் செய்தியை வைத்து, 'தூய்மை-தீட்டு' என அனைத்தையும் பிரிக்கும் மனம் என்னவோ தன்னகத்தில் இருக்கின்ற 'தூய்மை-தீட்டு' பற்றி மிக எளிதாகக் கண்டுகொள்ளாமல் விடுகிறது.

மனத்தின் இந்த கண்டுகொள்ளாமை பற்றி எச்சரிக்கின்றார் இயேசு.

'தூய்மை-தீட்டு' என்பது நமக்கு வெளிப்புறத்தில் இல்லை.

எப்படி?

என் மனம்தான் 'தூய்மை-தீட்டு' என்ற பாகுபாட்டை உருவாக்கிறது.

மேலும், தன்னிலே அனைத்தும் பாகுபாடு இல்லாதவைதாம். எடுத்துக்காட்டாக, இரயிலில் ஊசி பாசி விற்கும் குறத்திமகள் ஒருத்தியை எடுத்துக்கொள்வோம். அவள் தான் தூய்மையற்று இருப்பதையே விரும்புகிறாள். ஏனெனில், அவள் தன்னைத் தூய்மையாக வைத்திருந்தால் அவளின் பாதுகாப்பின்மையில் அதுவே அவளுக்கு அபாயமாக மாறிவிடும். அவளைப் பொறுத்தவரையில் 'கறையும் நல்லதே!'

இரண்டாவதாக, தீட்டனாவை - குறிப்பாக, பரத்தைமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி. பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு போன்றவை - வெளியில் இல்லாமல் மனிதரின் உள்ளத்தில் ஊற்றெடுத்து அவர்களையும் அவர்களைச் சுற்றியிருப்பவர்களையும் மிகவும் மோசமாகப் பாதிக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண்.2:4-9,15-17) முதல் மனிதன் ஆதாமை ஏதேன் தோட்டத்தில் விட்டபோது, நன்மை-தீமை, வாழ்வு என இரண்டு மரங்களைச் சுட்டிக்காட்டுகின்றார். இம்மரங்கள் மனிதனைத் தீட்டாக்கியதில்லை. மாறாக, 'நான் கடவுளைப் போல இருக்க வேண்டும்' என்ற பேராசையே தன் பெண்ணோடு இணைந்து மரத்தை நோக்கிக் கையை நீட்ட அவனைத் தூண்டுகிறது.

ஆக, இரண்டு விடயங்கள்:

1. தூய்மை-தீட்டு பாகுபாடு என் மனம் சார்ந்தது. எனக்குத் தூய்மையாகத் தெரிவது மற்றவருக்குத் தீட்டாகவும், மற்றவருக்கு தூய்மையாகத் தெரிவது எனக்குத் தீட்டாகவும் தெரியலாம்.

2. மனதின் தீய எண்ணங்களை அறிதலும், அவற்றைக் களைதலும் உள் மற்றும் வெளிப்புறத் தூய்மைக்கு வழிவகுக்கும்.

Monday, February 11, 2019

காணிக்கை ஆயிற்று

இன்றைய (12 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற்கு 7:1-13)

காணிக்கை ஆயிற்று

கடந்த வாரத்தில் டுவிட்டரில் கவிதை ஒன்றைப் படித்தேன்:

'ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியும்
ஒவ்வொன்றை நினைவுபடுத்துகிறது நமக்கு.
'இன்றிலிருந்து இளைய மகனின் வீட்டுக்கு'
என்று மாதத்தின் முதல் தேதி புறப்பட்டாள் பாட்டி'

இன்று வகுப்பில் பத்துக் கட்டளைகள் நடத்திக் கொண்டிருந்தேன். பத்துக் கட்டளைகளைப் பற்றி நிறைய வாசிக்க முடிந்ததால் பத்துக் கட்டளைகளை நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

'உன் தந்தையையும், தாயையும் மதித்து நட!'

இதுதான் கட்டளை. இந்தக் கட்டளை விடுதலைப் பயணம் 20ஆம் அதிகாரத்தில் 5வது கட்டளையாகவும், நம் கிறிஸ்தவ மரபில் 4வது கட்டளையாகவும் வழங்கப்பட்டுள்ளது.

பத்துக்கட்டளைகளில் முதல் 4 கட்டளைகள் இறைவனை மையப்படுத்தியதாகவும், மற்ற 6 கட்டளைகள் மனித உறவுகளை மையப்படுத்தியதாகவும் இருக்கின்றன. மேலும், பத்துக் கட்டளைகளில் 8 கட்டளைகள் எதிர்மறையாக (அதாவது, 'இதைச் செய்யாதே!') என்றும், 2 கட்டளைகள் நேர்முகமாக (அதாவது, 'இதைச் செய்') என்றும் தரப்பட்டுள்ளன.
அந்த நேர்முகமான இரண்டு கட்டளைகளில் ஒன்றுதாம்: 'உன் தந்தையையும் தாயையும் மதித்து நட!'

'உன் தந்தை தாய்க்கு கீழ்ப்படி' என்று கட்டளை அறிவுறுத்தவில்லை. ஏனெனில், ஒருவரை வெறுத்துக்கொண்டே நாம் அவருக்குக் கீழ்ப்படிய முடியும். ஆனால், மதிப்பு இருக்கிற இடத்தில் வெறுப்பு இருக்காது. மேலும், 'மதிப்பு' என்பதற்குப் பயன்படும் வார்த்தை கடவுளுக்கும் பயன்படுத்தப்படுவதால், கடவுளையும் பெற்றோரையும் ஒரு நிலையில் வைக்கிறது பழைய ஏற்பாடு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சமகாலத்துப் பரிசேயர்களிகளின் வெளிவேடத்தைக் கேள்வி கேட்கின்றார். அதில் அவர் சுட்டிக்காட்டுவது தந்தை-தாய் மதித்தல். பரிசேயர்கள் தங்களுக்குப் பணம் வர வேண்டும் என்பதற்காக, 'ஒருவர் தன் தந்தை தாயை மதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு பரிகாரமாக ஒரு குறிப்பட்ட தொகையை கொர்பான் எனக் கோவிலுக்குச் செலுத்திவிட்டால் போதும். அவர்கள் விலக்கு அளிக்கப்படுவார்கள்' என்றார்கள். ஆக, வயதான பெற்றோருக்கு ஆகும் செலவை குறைத்துக்கொள்ளவும், ஆலயத்திற்கு காணிக்கை செலுத்திவிட்டு குற்றவுணர்விலுருந்து தப்பித்துக் கொள்ளவும் இது வசதியாக இருந்தது. இதன் காரணமாக இயேசுவின் சமகாலத்தில் நிறைய முதியவர்கள் தெருக்களில் அடுத்தவர்களின் இரக்கத்தைக் பெற்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஆக, பரிசேயர் என்ற சிலரின் தன்னலம் மற்றவர்களின் தன்னலத்திற்கும் தூபம் போடுவதாக இருக்கிறது. மனித உயிருக்கு இருக்கும் மிகப்பெரிய இன்ஸ்டிங்ட் தன்னலம். 'நான் நல்லா இருக்க எதையும் செய்யலாம்' என்று உள்ளே ஒரு குரல் நம்மைக் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த தன்னலத்திலிருந்து மனிதனைப் பிரித்து எடுக்கும் வேலையைத்தான் கட்டளைகள் செய்தன.

இன்றைய முதல் வாசகமும் நமக்கு இந்த அழைப்பையே தருகின்றது. படைப்பின் தொடக்கத்தில் கடவுள் மானிடரை 'ஆணும் பெண்ணுமாகப் படைக்கின்றார்' - ஒருவர் மற்றவருக்காகப் படைக்கிறார்.

கடவுளின் படைப்பின் தொடக்கத்திலும், பத்துக் கட்டளைகளிலும் தன்னலம் இல்லை. மனித மரபுகள் உருவான பின் தன்னலம் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.

தன்னலத்திலிருந்து விடுபட்டால் எத்துணை நலம்!


Sunday, February 10, 2019

தொட்டவர் நலமடைந்தனர்

இன்றைய (11 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 6:53-56)

தொட்டவர் நலமடைந்தனர்

நாம் விரும்பியோ, விரும்பாமாலோ ஒருவர் மற்றவரோடு இணைந்த நிலையில் இருக்கின்றோம். இல்லையா?

'கனெக்ஷன்ஸ்' இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது. ஒன்று, 'கான்டக்ட்ஸ்,' மற்றொன்று 'கம்யூனிகேஷன்.' எடுத்துக்காட்டாக, என் அறையில் உள்ள இணைய இணைப்பு வேலை செய்யவில்லை என வைத்துக்கொள்வோம். இந்தப் பிரச்சினையை நான் சரி செய்ய, முதலில் நான் இந்த இணைப்பு தரும் நிறுவனத்தோடு 'கான்டக்ட்; ஏற்படுத்த வேண்டும். பின், என் பிரச்சினை என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறாக, இரண்டு நிலைகளில் என் பிரச்சினை சரியாகிவிடும். ஆனால், ஒருவேளை நான் இதே நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என வைத்துக்கொள்வோம். நானே இந்தப் பிரச்சினையைச் சரி செய்துவிடுவேன். ஒரு நிலையில் என் பிரச்சினை சரியாகிவிடும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'இயேசுவைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்' என வாசிக்கின்றோம். நோய் வந்து, மருத்துவரைச் சந்தித்து, அவர் கொடுக்கும் மருந்துகளைச் சாப்பிட்டு நலமடைவது போல அல்லாமல், மருத்துவர் தொட்டவுடனேயே அல்லது மருத்துவரைத் தொட்டவுடனேயே நோய் சரியாகிவிடுகிறது. இதுதான் உச்சகட்ட இணைப்பு.

இயேசு எப்போதும் தன்னை மற்றவர்களோடு இணைந்த நிலையிலே வைத்திருக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் 'படைப்பு' நிகழ்வை வாசிக்கின்றோம். 'ஒளி தோன்றுக!' என்று கடவுள் சொல்ல, அது அப்படியே ஒளியாக மலர்கின்றது. கடவுளின் செயல்கள் இணைத்தும் தாமாகவே அப்படியே நிகழ்கின்றன.

நம் வார்த்தைக்கும் வாழ்வுக்கும் உள்ள இடைவெளி குறையக் குறைய, நம் வாழ்வின் தொடுதலும் அடுத்தவரை நலமாக்கும்!


Friday, February 8, 2019

சற்றே ஓய்வெடுங்கள்

இன்றைய (9 பிப்ரவரி 2019) நற்செய்தி (6:30-34)

சற்றே ஓய்வெடுங்கள்

'ஓய்வு என்பது இருப்பவர் பேசுவது. இல்லாதவருக்கு எல்லா நாளும் ஓட்டமே' என்று சிலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். இது தவறு என நினைக்கிறேன். ஓய்வு ஒன்றுதான் இருப்பவர் மற்றும் இல்லாதவர் வேற்றுமையை அகற்றுகின்றது. ஓய்வின் தன்மையும், ஓய்வின் நேரமும் மாற வாய்ப்பிருக்கிறதே தவிர, ஓய்வு என்பதே தேவையில்லை என்று நம்மால் சொல்லிவிட முடியாது.

இருவர் இருவராக இயேசு பணிக்கு அனுப்பிய சீடர்கள் திரும்பி வருகிறார்கள். வந்தவர்கள் தாங்கள் செய்தவை, கற்பித்தவை அனைத்தையும் அவருக்குத் தெரிவித்தார்கள். இது ஒரு நல்ல தலைமைத்துவப் பாடம். அனுப்பப்படுகிறவர்கள் திரும்பி வர வேண்டும். அவர்கள் நோவா பெட்டகத்துக் காகம் போல போகின்ற இடத்தில் அடைக்கலம் தேடித் தங்கிவிடக் கூடாது.

பலர் அவர்களிடம் தொடர்ந்து வந்து போய்க்கொண்டிருக்க, அவர்களுக்கு உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை. எனவே, பாலை நிலத்திலிலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் செல்கிறார்கள். அங்கேயும் மக்கள் கூட்டம் வர, ஓய்விற்காகச் சென்றவர்கள் பரிவு காட்ட ஆரம்பிக்கிறார்கள்.

இரண்டு பாடங்கள் இங்கே நமக்குத் தரப்படுகின்றன:

ஒன்று, நாம் அனைவருமே என்றாவது ஒரு நாள் யாருக்காகவாவது நாமே இட்ட ஒழுங்குகளை உடைத்திருப்போம். இயேசுவும் அப்படித்தான் உடைக்கின்றார். 'ஓய்வா,' 'மக்கள் பணியா' என்ற இரு கோடுகளை உடனுக்குடன் வரைந்து, ஓய்விற்காகச் சென்றவர், பணியாற்ற ஆரம்பிக்கிறார். 'ஒருவருக்கு மனவுறுதியாய்த் தெரிவது மற்றவருக்குப் பிடிவாதமாய்த் தெரியும்' என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஒரு செயலில் அல்லது மனநிலையில் உறுதியாக நான் இருக்கும்போது அதை நான் 'மனவுறுதி' என அழைத்துப் பெருமைப்பட்டுக்கொள்கிறேன். ஆனால், அடுத்தவர் அவருடைய செயலில் அல்லது மனநிலையில் உறுதியாக இருக்கும்போது அதை நான் 'பிடிவாதம்' என்று கடிந்துகொள்கின்றேன். இயேசு மக்களுக்காகத் தன் மனவுறுதியைத் தளர்த்திக் கொள்கின்றார். 'பெரியவவைகள் சிறியவைகளால் துன்புறக் கூடாது' என்பதில் தெளிவாக இருக்கிறார் இயேசு.

இரண்டு, பரிவிற்கு ஓய்வு இல்லை. 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார்' நாள், நேரம் பார்த்து வாடவில்லைதானே! தனிமை நாடிச் சென்றவர், வாழ்வில் தனிமை அனுபவித்தவர்களின் துணையாளராகத் தன்னையே மாற்றிக்கொள்வதுதான் அழகு.

இன்று, தனிமை புகுத்தப்பட்டு, தனிமை தேடிக்கொண்டு இருப்போர் பலர். தனிமை தவமாகவும் இருக்கலாம் - கருவறைத் தனிமை போல. தனிமை ரணமாகவும் இருக்கலாம் - வறுமை, நோய் போல.

தனிமைக்கும் பரிவிற்குமான சின்ன இடைவெளிதான் மனிதம்.

Thursday, February 7, 2019

சாட்சியத்தின் விலை

இன்றைய (8 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 6:14-29)

சாட்சியத்தின் விலை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் கொலை செய்யப்படும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

திருமுழுக்கு யோவான் - ஏரோது - ஏரோதியா - சலோமி

இந்த நான்கு பேருக்கும் இடையில் வேகமாக நடந்தேறும் நாடகத்தில் திருமுழுக்கு யோவான் தன் இன்னுயிரை இழக்கின்றார்.

'மனிதர்களின் வாழ்க்கையின் இலக்கு மகிழ்ச்சியில்தான் இருக்கின்றது. மகிழ்ந்திருக்கும் ஒவ்வொருவரும் இறைவனின் திருவுளம் நிறைவேற்றுகிறார்' என்கிறார் இரஷ்ய எழுத்தாளர் டோஸ்டாய்வ்ஸ்கி. மேலும் அவர், மறைச்சாட்சியாளர்கள் தங்கள் இன்னுயிரை அழித்துக்கொள்ளத் தயாராக இருப்பதும் இம்மகிழ்விலேயே என்கிறார் அவர்.

மேற்காணும் நான்கு பேரும் தங்கள் வாழ்வின் மகிழ்ச்சியைத் தேடுகின்றனர்.

ஏரோது - இவர் தன் மகிழ்ச்சியை தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதிலும், தன் சகோதரன் மனைவியைத் தன் பொருள்களால் கவர்ந்து கொள்வதிலும், தனக்குக் கீழிருக்கும், தான் அழைத்த விருந்தினர்களைத் திருப்திப்படுத்துவதிலும் காண்கின்றான்.

ஏரோதியா - இவர் பிலிப்பின் மனைவி. பிலிப்பும் இவரும் ஒருவரையொருவர் நெருக்கமாகக் காதலித்தவர்கள். ஒரு கட்டத்தில் பிலிப்பு இவரிடம் சொல்வார், 'அன்பே, நான் உன்னிடம் 'ஐ லவ் யு' என்று சொல்ல மாட்டேன்!' ஏனெனில், அப்படிச் சொல்வதில் உனக்கும் எனக்கும் இடைவெளி வந்துவிடுகிறது. ஆனால், 'ஐ லவ் அஸ்' என்றே சொல்வேன். நாம் இருவர் இணைந்திராமல் ஒருவர் மற்றவரை எப்படி அன்பு செய்ய முடியும்?' இப்படிச் சொன்னவரிடமிருந்து ஏரோதியா எப்படி விலகிச் சென்றார்? காரணம், ஏரோதிடம் இருந்த பதவியும், செல்வமும். மாற்றானின் தோட்டத்து மல்லிகை இவருக்கு மணமாகத் தெரிந்ததால், மணமான தன் ரோஜாவை இழக்கத் துணிகிறாள் சந்தர்ப்பவாதி. இவள் சந்தர்ப்பவாதியாக இருந்ததால்தான், 'ஒவ்வொன்றுக்கும் ஒரு சந்தர்ப்பம் அமையும்' என்று காத்திருந்ததால்தான், யோவானை அழிக்க சந்தர்ப்பம் தேடுகிறாள். இவள் தன் மகிழ்ச்சியை பொருளிலும், பொருளை வைத்திருப்பவர்களிடமும் தேடுகிறாள்.

சலோமி - சொன்னதைச் சொல்லும், செய்யும் கிளிப்பிள்ளை. நடனம் கற்ற இவளுக்கு வாழ்க்கையைக் கற்க நேரமில்லை. தாய் சொல்லைத் தன் செயலாக்குகிறாள். பாவம்! இவள் தன் பாதுகாப்பிற்குத் தன் தாயையே நம்பியிருந்தாள். இவள் தன் மகிழ்ச்சியை தன் தாயோடு சுருக்கிக் கொண்டாள்.

யோவான் - அரசன் எந்தப் பெண்ணையும் மனைவியராக்கிக் கொள்ளலாம் என்ற மரபு இருந்தாலும், பிரித்துக் கொடுக்கப்படும் அன்பு அனைத்தும் பிரிந்து போகும் என்ற உணர்ந்த யோவான் ஏரோதைக் கண்டிக்கிறார். இவரின் கண்டிப்பிலும் கரிசனை இருந்தது. ஆகையால்தான், ஏரோது இவரின் வார்த்தைகளைக் கேட்கும்போதெல்லாம் உள்ளம் கலங்குகிறான். இவர் தன் மகிழ்வைத் தன் உறுதிப்பாட்டில் தேடினார்.

இவரின் உறுதிப்பாடு அன்பின் சாட்சியாக இருந்தது. அந்த சாட்சியத்திற்கு விலை அவருடைய உயிராகவே இருந்தது.

ஏரோதியாவின் மகள் சலோமியின் ஆட்டம் அடங்கிய கொஞ்ச நேரத்தில் இவரின் வாழ்வும் அடங்கிவிடுகிறது.

ஏரோது போதை மயக்கம் தெளிந்து அடுத்த நாள் தேடியிருப்பான் யோவானை. ஆனால், இனி அவரது குரலைக் கேட்கப்போவதில்லை. அவரின் மௌனமே அவனுடைய காதுகளைக் கிழிக்கும்.

என் வாழ்வின் மகிழ்ச்சி எங்கே? அதற்கு நான் தரும் விலை எது?


Wednesday, February 6, 2019

சிறுநுகர் வாழ்வு

இன்றைய (7 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 6:7-13)

சிறுநுகர் வாழ்வு

இன்று வாழ்வியல் மேலாண்மை மற்றும் நிதி மேலாண்மையியலில் அதிகமாகப் பேசப்படும் கருத்துருக்களில் ஒன்று, 'சிறுநுகர் வாழ்வு' (மினிமலிஸ்ட் லிவிங்) - அதாவது, குறைவான பொருள்களை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்வது. 21 பொருள்களை வைத்து 21 நாள்கள் வாழ்வது, 100 பொருள்களை வைத்து 100 நாள்கள் வாழ்வது என நிறைய ஆலோசனைகள் இதில் உள்ளன. இத்ததைய வாழ்க்கை முறையின் பின்புலமாக இருப்பது நிதி மேலாண்மையும், இட மேலாண்மையும். அதாவது, எனக்கு 10க்கு 10 அறைதான் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்த அறையில் தேவையற்றதை எல்லாம் வைக்காமல் - அதாவது, காட்சி பெட்டி, மரம், செடி, கொடி - தேவையானவற்றை மட்டும் வைத்துக்கொள்வது. டிவியை நான் கணிணியில் பார்க்க முடியும் என்றால் டிவியைத் தவிர்ப்பது. கணிணியை நான் மொபைலில் இயக்க முடியும் என்றால் கணிணியைத் தவிர்ப்பது, என்னுடைய வேலைகளை மிகச் சாதாரண ஃபோனே செய்யுமென்றால் ஸ்மார்ட்ஃபோனைத் தவிர்ப்பது போன்ற செயல்கள் இதில் அடங்கும்.

நாம் ஒரு பொருளை 21 நாள்கள் பயன்படுத்தவில்லை என்றால் அது நமக்குத் தேவையற்ற பொருள் என்கிறது இக்கொள்கை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இப்படிப்பட்ட ஒரு சிறுநுகர் வாழ்வக்குத் தன் சீடர்களைத் தயாரிக்கின்றார்.

சீடர்களின் அனுமதி இல்லாமல் அவர்களை அழைத்த இயேசு, அவர்களின் அனுமதி இல்லாமலேயே அவர்களைப் பணிக்கும் அனுப்புகின்றார். அவர்களை இருவர் இருவராக அனுப்புகிறார். இது பாதுகாப்பு மற்றும் உடனிருப்புக்காக இருக்கலாம்.

எவையெல்லாம் வைத்துக்கொள்ளலாம்: கைத்தடி, மிதியடி, ஒரே அங்கி. மற்றபடி, உணவு, பை, கச்சையில் காசு அனுமதி இல்லை.

ஒரு மாற்று அங்கி கூட இயேசு அனுமதிக்காதன் காரணம் என்ன? ஒரே அங்கியைப் பல நாள்கள் பயன்படுத்துவது அங்கே ஏற்புடையதா? அல்லது இங்கே அங்கி என்பது மேலாடையைக் குறிக்கிறதா என்பது நமக்குத் தெரியவில்லை.

அதே வேளையில், அவர்கள் இடம் விட்டு இடம் நகரவும் அனுமதி மறுக்கப்படுகிறது.

குறைவான பொருள்கள், ஒரே இடம் - இந்த இரண்டும் சீடத்துவத்திற்கான அவசியமாக இயேசு முன்வைக்கின்றார்.

சீடர்கள் எந்தவொரு நிலையிலும் குறைவுபட்டுக்கொள்ளவில்லை. நற்செய்தியைப் பறைசாற்றுகிறார்கள். பேய்களை ஓட்டுகிறார்கள். உடல் நலமற்றவரைக் குணமாக்குகிறார்கள்.

இயேசுவின் இந்தப் போதனை சொல்வது இதுதான்: 'ஒரு மனிதரை அளவிடுவது அவருடைய பொருள்களோ அல்லது இயக்கமோ அல்ல. மாறாக, அவருடைய இயல்பே.'

ஒரு வகையில் பார்த்தால், இறப்பை மனதில் வைத்து வாழுங்கள் என்று சொல்வதுபோல இருக்கிறது இயேசுவின் போதனை. இப்படி யோசிப்பது கொஞ்சம் எதிர்மறையாகத் தெரியலாம். ஆனாலும், இன்று நாம் சேர்க்கின்ற பொருள்களும், நாம் நகர்கின்ற இடங்களும் நம் இயல்பையும், இருப்பையும் கூட்டுவதில்லைதானே!

பொருள்களை இன்று நாம் குறைக்கமுடியவில்லை என்றாலும் கூட்டாமல் இருந்தால் நலம்!

Tuesday, February 5, 2019

அவரால் செய்ய இயலவில்லை

இன்றைய (6 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 6:1-6)

அவரால் செய்ய இயலவில்லை

இயேசு தன் சொந்த ஊரில் போதிக்கிறார். அவருடைய போதனை அங்கே ஏற்படுத்திய தாக்கத்தை மாற்கு நற்செய்தியாளர் மூன்று வார்த்தைகளில் பதிவு செய்கிறார்:

அ. 'வியப்பில் ஆழ்ந்தனர்'

ஆ. 'தயக்கம் காட்டினர்'

இ. 'நம்பிக்கையின்றி இருந்தனர்'

'வியப்பு' 'தயக்கம்' 'நம்பிக்கையின்மை'

இம்மூன்று உணர்வுகளும், நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவில் வரவும் வாய்ப்பிருக்கின்றது. அவருடைய அரும்பெரும் செயல்கள் நம்மில் முதலில் வியப்பை ஏற்படுத்துகின்றன. பின் சில நாள்கள் கழித்து தயக்கம் காட்டுகிறோம். இறுதியாக, நம்பிக்கையின்மையும் சில நேரங்களில் நம்மைப் பற்றிக்கொள்கிறது.

இதனால்,

'வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை' என்கிறார் மாற்கு.

நம்பிக்கையின்மை கடவுளின் கைகளையே கட்டிவிடுகின்றது

Friday, February 1, 2019

திடீரென வருவார்

இன்றைய (02 பிப்ரவரி 2019) திருநாள்

திடீரென வருவார்

இன்று ஆண்டவர் இயேசு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நாளைக் கொண்டாடுகிறோம். சில கிறிஸ்தவ திருச்சபைகளின் வழிபாட்டில் இன்றுதான் கிறிஸ்து பிறப்புக்காலம் நிறைவு பெறுகிறது.

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். மலா 3:1-4) நம் சிந்தனையைத் தொடங்குவோம்:

இறைவாக்கினர் மலாக்கி - இதுதான் இறைவாக்கு நூல்களின் இறுதி நூல் - வரப்போகிற அரசர் பற்றிய முன்னறிவிப்பைக் கொடுக்கின்றார்.

'நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்!'

ஆக, தலைவரின் வருகை எதிர்பாராத விதமாக இருக்கிறது. எதிர்பாராமல் நிகழும் ஒன்று எதிர்மறையாக இருந்தால் அது நமக்கு அதிர்ச்சியையும், நேர்முகமாக இருந்தால் அது வியப்பையும் தருகின்றது. தலைவரின் வருகை நேர்முகமானது. அவரின் வருகை நமக்கு வியப்பையும் ஆச்சர்யத்தையும் கொடுக்கிறது.

இத்தலைவர் என்ன செய்வார்? 'வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போல் அமர்ந்திருப்பார்.' வெள்ளியை நெருப்பில் போட்டு அதன் கறை போகும் அளவிற்குக் காத்திருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் வெள்ளியில் கொல்லனின் முகம் தெரியும். அந்த நேரம் அவர் உடனே நெருப்பிலிருந்து வெளியே எடுத்துவிட வேண்டும். இதுதான் தூய்மையான வெள்ளிக்கு அறிகுறி. கொஞ்சம் நேரம் ஆகிவிட்டால் வெள்ளி நெருப்போடு கரைந்துவிடும். ஆக, திடீரென வருபவர் மட்டுமல்ல தலைவர். மாறாக, சரியான நேரத்தில் வருபவர்.

குழந்தையையும், நெருப்பையும் கையில் ஏந்துதல் - இதைப்பற்றிச் சிந்திப்போம்.

குழந்தை இயேசுவை பெற்றோரும், சிமியோனும், அன்னாவும் கைகளில் ஏந்தி நின்றனர் அன்று.
மெழுகுதிரிகளை ஏந்தி நிற்கின்றோம் நாம் இன்று.

அஸ்தமனத்தில் இருக்கின்ற சிமியோனும் அன்னாவும் உதய சூரியனைக் கண்டுகொள்கின்றனர். இந்த நாளில் அஸ்தமனமும், உதயமும் கை கோர்க்கின்றன. ஒரு நாளில் எருசலேம் ஆலயத்திற்கு ஏறக்குறைய 100 குழந்தைகளுக்கு மேல் கொண்டுவரப்படுவர். இப்படிப்பட்ட ஒரு பின்புலத்தில் சிமியோன் எப்படி யோசேப்பு-மரியாளின் குழந்தையை மட்டும் கண்டுகொண்டார் என்பது நமக்கு முதல் வியப்பாக இருக்கிறது.

புத்தக வாசிப்பைப் பற்றிச் சொல்லும்போது, 'நீ புத்தகத்தை தெரிவு செய்வதில்லை. மாறாக, புத்தகம்தான் உன்னைத் தெரிவு செய்கிறது' என்பார்கள். அதைப் போல, இங்கே சிமியோன் குழந்தையைக் கண்டுகொள்ளவில்லை. குழந்தைதான் சிமியோனைக் கண்டுகொள்கிறது.

சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்துகிறார்.

குழந்தையைக் கையில் ஏந்துதல் ஒரு கலை. குழந்தையைக் கையில் ஏந்துதல் நமக்கு மூன்று வாழ்க்கைப் பாடங்களைச் சொல்கிறது.
அ. குழந்தையைக் கையில் ஏந்தும் நபர் அக்குழந்தையின் முகத்தில் தன் முகம் பார்க்கிறார்.

கையில் ஏந்துபவரைக் குழந்தை அவரின் குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் செல்கிறது. இவ்வாறாக, ஒருவரின் தொடக்கத்தை, ஒருவரின் ஊற்றை, ஒருவரின் வேர்களைக் கண்டுகொள்ளச் செய்கிறது குழந்தையைக் கையில் ஏந்தும் நிகழ்வு. இவ்வாறாக, குழந்தையைக் கையில் ஏந்துதல் நம்மை நம் கடந்த காலத்தோடு இணைக்கிறது.

ஆ. குழந்தையைக் கையில் ஏந்தும் நபர் அக்குழந்தையில் புதிய உருவாக்கத்தைப் பார்க்கிறார்.

ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு நிலை உண்டு. எடுத்துக்காட்டாக, இரும்பு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இரும்பு வெறும் இரும்புதான். ஆனால், அதற்குள் நிறைய உருவாக்கங்கள் பொதிந்திருக்கின்றன. அது ஆணியாக மாறலாம், குதிரை லாடமாக மாறலாம், கடிகார ஸ்பிரிங்காக மாறலாம், பல்பின் டங்கஸ்டனாக மாறலாம். இப்படி அது நிறைய உருவாக்கங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் ஒரு தொடர்புள்ளி. அது எங்கேயும் எப்படியும் மாறிக்கொள்ளும் தன்மை கொண்டிருக்கிறது. இவ்வாறாக, குழந்தையைக் கையில் ஏந்துதல் நம்மை நம் எதிர்காலத்தோடு இணைக்கிறது.

இ. குழந்தையைக் கையில் ஏந்தும் நபர் அதன் இயல்பையும், இயக்கத்தையும், ஸ்பரிசத்தையும் இன்றில் உணர்கிறார்.

குழந்தையைக் கையில் ஏந்தும் நபர் தன் இன்றைய இருப்பை உணர்ந்து கொள்கிறார். 'இன்றுதான்' நம் வாழ்வில் மிக முக்கியமானது. அதே நேரம் நாம் அதிகம் மறந்துவிடக் கூடியது. இயேசுவைக் கையில் ஏந்தும் சிமியோன், 'உமது மீட்பை இன்று என் கண்கள் கண்டன' என்று தன் இருப்பை உணர்கிறார். தன் ஏக்கம், எதிர்பார்ப்பு அனைத்தும் இன்றில் நிறைவு பெறுவதை உணர்கிறார். ஆக, இன்றிற்கு மிகவும் அழகாக விடையும் பகர்கிறார்: 'உம் சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்!'

நாம் இன்று கைகளில் ஏந்தும் மெழுகுதிரிகளும் - நம் நேற்று, நாளை, இன்று என மூன்று காலங்களையும் நினைவிற்குக் கொண்டுவருகின்றன. திரி எரிய, எரிய அதன் நேற்று மறைகிறது. திரி எரிய, எரிய அது புதிய உருவாக்கத்தை தன் ஒளி மற்றும் கதகதப்பில் தருகின்றது. திரி எரிய, எரிய அது அதை வைத்திருப்பவரின் இருப்பை அவருக்கு நினைவூட்டுகிறது.

இன்றைய நாளை நாம் அர்ப்பணத்தின் நாள் என்றும் கொண்டடுகிறோம். குறிப்பாக, துறவற அர்ப்பணத்தை.

அர்ப்பணம் செய்யும் ஒருவர் தன் இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒருசேர ஏந்தி நிற்கிறார். அர்ப்பணம் செய்பவர் வானிலிருந்து குதித்தவர் அல்ல. அவரும் மற்றவர்களைப் போல குழந்தையாகப் பிறந்து, மனித வலுவின்மையில் வளர்ந்தவர். அவருக்கும் நிறைய காயங்களும், பழைய சுமைகளும் இருக்கும். அதே நேரம், அர்ப்பணம் செய்பவர் தன் அர்ப்பணத்தின் வழியாக தன் வாழ்வை மற்றவர்களுக்குக் கொடுத்த மற்றவர்களின் எதிர்காலத்திற்கு வெளிச்சமாக மாற விரும்புகின்றார். இந்த இரண்டு காலங்களையும் அவர் இணைத்து நிகழ்காலத்தில் தன் நொறுங்குநிலையில் நிற்கின்றார்.

இன்று நாம் அர்ப்பண நிலையில் இருக்கும் அருள்பணி இனியவர்களுக்காக இறைவேண்டல் செய்யும் வேளையில், நாமும் நம்மை இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய முன்வருவோம். நம் கடந்த காலம், எதிர்காலம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு நிகழ்காலத்தை, இன்றை வாழ அவரிடம் வரம் வேண்டும்.

இன்று என்ற நிகழ்காலம் நெருப்பில் இடப்பட்ட வெள்ளி போன்றது. அதைச் சரியாகக் கையாளவில்லை என்றால் அது காலம் என்ற நெருப்பில் கரைந்துவிடும்.

சரியாகக் கையாளத் தெரிந்த ஒருவர் இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபி 2:14-18) சொல்வது போல, 'இரக்கமும் நம்பிக்கையும் கொண்டவராய் தம் சகோதர சகோதரிகளைப் போல ஆவார்!'