Friday, July 4, 2014

ஆண்டவரின் இல்லத்திற்குப் போவோம்!

திருப்பயணப்பாடலின் மூன்றாம் பாடலே திபா 122. எருசலேம் நகரை நோக்கிப் பயணம் செய்யும் ஒருவர் அந்த நகரை வாழ்த்தும் படலமே இத்திருப்பாடல்.

'ஆண்டவரின் இல்லத்திற்குப் போவோம்!' என்ற அழைப்பு பாடகருக்கு மகிழ்ச்சி தருகிறது.

இன்று நாம் எந்த இடத்திற்கெல்லாம் போகிறோம்?

'அங்கே நாம் போவோம்!' என்று நம் நண்பர்கள் நம்மிடம் சொல்லும் போது நம் மனநிலை எப்படி இருக்கிறது?

எல்லா இடமும் ஓர் இடம்தானே! என மனம் வேகமாக முடிவெடுத்து விடுகிறதா? அல்லது 'ஆமாம்! போவோம்!' என்று உற்சாகம் கொள்கிறதா?

மூன்று நாட்களாக ஜெர்மனி நாட்டின் கொலோன் என்ற நகரில் தங்கி ஜெர்மன் படித்துக் கொண்டிருக்கிறேன். 'எங்கே போகிறோம்!' என்று தெரியாமலே புறப்பட்டு வந்த ஆபிரகாம் போல தான் வாழ்க்கை இருந்தது. மொத்தம் 23 பேர் படிக்கிறோம். 22 பேர் தனியே விடுதியில் தங்கியிருக்க நான் மட்டும் ஒரு அருட்சகோதரிகளின் இல்லத்தில் தங்கியிருக்கிறேன். முதல் நாளில் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு அறைக்குச் செல்லலாம் என்று சொன்னபோது என் அறை எங்கே எனக் கேட்டேன். காரில் ஏற்றினார்கள். மற்றவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 32 நிமிட பயணம். ஒவ்வொரு நாளும் இவ்வளவு தூரம் வர வேண்டுமா! என நினைத்துக் கொண்டே வந்தாலும், வந்திறங்கியவுடன் அருட்சகோதரிகளின் வரவேற்பு கண்டு பூரித்துப் போனேன். 23 சகோதரிகள். அனைவரும் ஜெர்மானியர்கள். அவர்களில் இளையவரின் வயது 69. எல்லோரின் முகத்திலும் ஒரு புன்சிரிப்பு. என்னதான் 100 ஆண்டுகள், 90 ஆண்டுகள், 80 ஆண்டுகள் வாழ்ந்தாலும் புதிய மனிதர்களும், புதிய நாளும் அவர்களுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கத்தானே செய்கிறது.

அவர்களை நான் தினமும் பார்க்கும் போதெல்லாம் திபா 122ன் வரிகளைத் தான் என் மனதுள் சொல்லிக்கொள்கிறேன்:

'உன்னை விரும்புவோர் நலமுடன் வாழ்வார்களாக!'

'உன் கோட்டைக்குள் அமைதி நிலவுவதாக!'

'உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!'

'உன்னுள் சமாதானம் நிலவுவதாக!'


1 comment:

  1. இந்த 122 ம் திருப்பாடல் தங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று ஏற்கனவே கூறியுள்ளீர்கள்.ஆம்....எங்கெல்லாம் மனிதர்கள் சக மனிதர்களை உறவாக,உணர்வாகப் பார்க்கிறார்களோ...எங்கெல்லாம் மகிழ்ச்சியும் புன்முறுவலும் நிரம்பி வழிகிறதோ அதெல்லாமே 'ஆண்டவனின் இல்லம்'தான்.அதில் உறைபவர்கள் யாவருமே தெய்வங்கள்தான்.நம் இல்லங்களையும் ஆண்டவனின் இல்லமாக மாற்றுவோமா?...

    ReplyDelete