Monday, July 21, 2014

அன்பு என்பது சொல் அல்ல, செயல்!

'உன் முழு இதயத்தோடும், உன் முழு மனத்தோடும், உன் முழு ஆற்றலோடும் இறைவனை அன்பு செய்' மற்றும் 'உன்னை நீ அன்பு செய்வது போல உன் அயலாரையும் அன்பு செய்' என்ற இறையன்பு மற்றும் பிறரன்புக் கட்டளைகளைப் பற்றி வாசிக்கக் கேட்கும் போதெல்லாம் எனக்கு 'மிஸ்டர் காட்! திஸ் இஸ் அன்னா' என்ற நாவலில் வரும் இளவல் அன்னா தான் நினைவிற்கு வருகிறாள்.

அன்னாவின் வீட்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் ஆலயத்திற்குச் சென்று திருப்பலி காண தயாராகிக் கொண்டிருப்பார்கள். அன்னா மட்டும் விளையாடிக் கொண்டிருப்பாள். 'சீக்கிரம் கிளம்பு! கோயிலுக்குப் போக வேண்டும்!' என அவள் அண்ணன் கட்டாயப்படுத்துவான். அப்போது அன்னா சொல்வாள்: 'எதற்காக வார வாரம் கோவிலுக்குப் போக வேண்டும்! எல்லா வாரமும் இறையன்பையும், பிறரன்பையும் பற்றித்தானே போதகர் சொல்கிறார். ஒரு வாரம் கேட்டால் போதாதா? மற்ற வாரங்கள் நாம் அதை செயல்முறைப்படுத்தலாமே!' - என்று சொல்லி ஆலயத்திற்குச் செல்ல மறுத்துவிட்டு தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் முதியவர் இல்லத்தில் உள்ள முதியவர்களைச் சந்திக்கச் சென்று விடுவாள்.

அதிகமாக கேட்டு அர்த்தம் இழந்த வார்த்தைகள் தாம் 'இறையன்பும்', 'பிறரன்பும்'. இது இயேசுவின் கட்டளைகள் அல்ல. இயேசு காலத்தில் வாழ்ந்த சம காலத்து யூதர்கள் இறைவனின் கட்டளைகளாகக் கருதியவையே இவை. இயேசு தன் இறுதி இராவுணவில், 'நான் உங்களுக்கு அன்பு செய்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்' என்று புதிய கட்டளை கொடுக்கின்றார்.

இறையன்பு, பிறரன்பு - இந்தச் சொற்களை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

இறையன்பு என்றால் இறைவனை அன்பு செய்வது என்று சொல்வதற்குப் பதில், இறைவன் நம்மை அன்பு செய்தல் என்றும், பிறரன்பு என்றால் பிறரை அன்பு செய்வதற்குப் பதில், பிறர் நம்மை அன்பு செய்தல் என்றும் யோசித்துப் பார்த்தால் எப்படி இருக்கும்?

பழைய ஏற்பாட்டின் அன்புக் கட்டளை பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்ட இஸ்ரயேலிலும், பாலஸ்தீனத்திலும், அவைகளை ஒட்டிய பகுதிகளிலும் இன்று இறையன்பும் இல்லை, பிறரன்பும் இல்லை. நேற்றைய தினம் (20 சூலை 2014), ஈராக்கில் ஒரு சிலர் கட்டாயப்படுத்தப்பட்டு இசுலாம் மதத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைக் கேட்டவுடன் கிறிஸ்தவக் கடவுளுக்கு கோபம் வந்ததோ இல்லையோ, நிறையக் கிறித்தவர்களுக்குக் கோபம் வந்தது. 'அது எப்படி?' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கிறித்தவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் மற்றவர்களை கிறித்தவர்களாக மாற்றியபோது மற்றவர்கள் அது எப்படி? என்று கேட்டிருந்தால் இவர்கள் பாடு என்னவாகியிருக்கும்?

இன்று இறைவனை நாம் அன்பு செய்யும் அளவிற்கு, இறைவன் நம்மை அன்பு செய்யவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கடவுள் நம்மை மீட்க வந்தார் என்று சொல்கின்றோம். ஆனால் இன்று கடவுளை மீட்பதே பெரும்பாடாக இருக்கின்றதே. 'கடவுளின் பெயரால்' ஏன் வன்முறை இருக்க வேண்டும்? நான் மறைசாட்சியாக இறப்பேன்! என்றும் ஒரு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் இறந்து, இறந்தபின் கடவுள் இல்லை என்று தெரிந்தால் அவர்கள் பாடு என்னவாகும்? கடவுள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாமே! இல்லையா? இன்று நாம் எடுக்கும் வழிபாடுகள், கேட்கும் மறையுரைகள், சொல்லும் நவநாள்கள் எல்லாம் நம்மைக் காப்பாற்றவோ இல்லையோ, கடவுளைக் காப்பாற்றத்தான் அவைகளைச் சொல்கின்றோம். நல்ல உடல்நலம், நல்ல வாழ்க்கை நிலை என நமக்கு எதெல்லாம் தேவையோ அதெல்லாம் அவருக்குத் தெரியுமே. பின் ஏன் தினமும் போய் அவரிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்? அவர் அவர் வேலையைப் பார்க்க, நாம் நம் வேலையைப் பார்த்தால் இன்று கண்ணீர் வடிக்காமல், இரத்தம் வடிக்காமல் நாமும் இருக்கலாமே? இன்று நாம் இறைவனை அதிகமாகவே அன்பு செய்கின்றோம்.

எல்லாம் வல்ல ஒருவரை வல்லமையே இல்லாத ஒரு மனிதகுலம் அன்பு செய்வது என்பது இயலாத காரியம். சின்ன உதாரணம், நாய்க்குட்டி மனிதரை அன்பு செய்ய முடியுமா? நம் பின்னால் வேண்டுமானால் ஓடி வரும். ஆனால் நாம் 'அன்பு' என்று சொல்லும் உணர்வை அவற்றால் ஒருபோதும் உணர முடியாது. அதுபோலத்தான் இறைமைக்கும், மனிதத்திற்கும் உள்ள இடைவெளி. நாம் செய்ய வேண்டியதெல்லாம் பிறரை அன்பு செய்வது தான்.

மற்றொரு கேள்வி: நாம் படைக்கப்பட்டது பிறரை அன்பு செய்ய என்றால், பிறர் எதற்காகப் படைக்கப்பட்டார்கள்? நம்மை அன்பு செய்யத்தானே! ஆனால் அந்த அன்பை நாம் உணர்கிறோமோ? நமக்கு மற்றவர்கள் காட்டுவதெல்லாம் வெறுப்பும், கோபமும், ஏமாற்றுதலும் என்றால் நாம் ஏன் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்?

கடவுளையும் அன்பு செய்ய முடியாது, மற்றவர்களையும் அன்பு செய்ய முடியாது என்றால் இன்றைய நற்செய்தியை எவ்வாறு புரிந்து கொள்வது?

அ. அன்பு ஒன்றே அறிவார்ந்தது. பலர் அன்புக்குக் கண்ணில்லை என்பார்கள். ஆனால் நிறைந்த அறிவோடுதான் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய முடியும். ஆகையால் தான் 'உன் முழு மனத்தோடு' என்று அன்பிற்கு அடைமொழி தருகிறது விவிலியம்.

ஆ. பிறர் என்றால் யார்? அமெரிக்காவில் இருக்கும் ஒருவரை அன்பு செய்வது எளிது. ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நம் கண்ணீர் வடிப்பது எளிது. ஆனால், நம் அருகில் இருப்பவர்களை அன்பு செய்யத்தான் இன்று நமக்குக் கடினமாக இருக்கிறது. நேரமில்லை. நேரமிருந்தால் விருப்பமில்லை. விருப்பம் இருந்தால் பொறுமை இல்லை. மற்றவரின் முகம் நம் முன் நின்று கேள்வி கேட்கிறது. மற்றவருக்கு நாம் பொறுப்பேற்க பயப்படுகிறோம். பிறரன்பின் முதற்படி 'பொறுப்பேற்றல்'. நம் குடும்பத்திலும், நம் சமுதாயத்திலும் ஒருவர் மற்றவருக்குப் பொறுப்பேற்றாலே அன்பு தானாய் வந்து விடும். இன்று யாரும் யாருக்கும் பொறுப்பேற்கத் தயாராக இல்லை. 'உன் வாழ்க்கை உன் கையில்' என்று சொல்லி நழுவி விடுகிறோம்.

இ. 'உன்னை அன்பு செய்வது போல!'. 'சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்' என்பார்கள். தன்னை அன்பு செய்யாத ஒருவரால் மற்றவரை அன்பு செய்ய முடியாது. நம்மிடம் இல்லாத ஒன்றை நாம் எப்படி மற்றவருக்குக் கொடுக்க முடியும்? நம்மை அன்பு செய்வது என்றால் நம்மை நாமே மதிப்பது, நம் உடலை, நம் உணர்வை, நம் இயல்பை இருப்பது போல ஏற்றுக்கொள்வது. நம்மிடமிருக்கும் எதிர்மறை உணர்வுகளைக் குறைத்து நேர்மறை உணர்வுகளில் வளர்வது.

முதல் ஏற்பாட்டுக் கட்டளைகளுக்கு மாற்றாக வந்ததே இயேசுவின் புதிய கட்டளை. அதை ஒருமுறை கேட்டால் போதும். 'அன்பு' என்பது சொல் அல்ல, செயல்!



1 comment:

  1. மிக மிக இயல்பாக ஆனால் உண்மைக்கு மாறாமல் உள்ளது இன்றையப் பதிவு.பிறரன்பின் முதல்படி " பொறுப்பேற்றல்'..யோசிக்க வைக்கிறது.அடுத்து..நம்மை நம்முடைய அனைத்துக்குறைபாடுகளுடனும் ஏற்றுக்கொண்டு அன்பு செய்தால் மற்றவரை அன்பு செய்வது எளிது..,எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் " அன்பு என்பது சொல் அல்ல செயல்" ..ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் சிந்திப்பது மட்டுமின்றி மற்றவரையும் சிந்திக்கத் தூண்டும் தங்களின் திறமைக்குப் பாராட்டு!

    ReplyDelete