Tuesday, January 30, 2018

வியந்தார்

நாளைய (31 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 6:1-6)

வியந்தார்

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சொந்த ஊருக்கு வருகிறார். அவர் அப்படியாக்கும், இப்படியாக்கும் என்று கேள்விப்பட்ட அவரின் சொந்த ஊர்க்காரர்கள் ரொம்ப சிம்ப்பிளா,

'அவரைப் பற்றி எங்களுக்கு தெரியாதாக்கும்!' 'அவர் குடும்பம், கோத்திரம் எங்களுக்குத் தெரியாதாக்கும்!' என்கின்றனர்.

அவர்கள் அவரை நம்பவில்லை.

ஆனால் அதனால் இயேசுவுக்கு கோபம் வரவில்லை.

கோபம் நமக்கு எப்போது வருகிறது?

ஒன்றை எதிர்பார்க்கிறோம். எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது கோபம் வருகிறது.

தன்னை நம்புவார்கள் என எதிர்பார்க்கிறார் இயேசு. ஆனால் மக்கள் அவரை நம்பவில்லை. அப்படின்னா அவருக்கு கோபம்தானே வரணும்.

ஆனால், 'அவர் ஆச்சர்யப்பட்டார்' 'வியந்தார்' என பதிவு செய்கிறார் மாற்கு.

'என்ன இப்படி இருக்காங்களே!' என ஆச்சர்யப்படுவது கோபத்தைவிட நல்லது என நினைக்கிறேன். இந்த ஆச்சர்யத்தின்போது இயேசுவின் உதட்டில் கண்டிப்பாக ஒரு புன்னதை நின்றிருக்கும்.

நம் உள்ளத்தில் எழும் கோப உணர்வை ஆச்சர்ய உணர்வாக மாற்றிப் பார்க்கலாமே!

நாம் நினைப்பதுபோலவே எல்லாம் அல்லது எல்லாரும் நடக்க வேண்டும் என நினைப்பது தவறு. அப்படி மற்றது அல்லது மற்றவர் மாறி நடக்கும்போது கொஞ்சம் புன்முறுவல் மற்றும் வியப்பு இருந்தால் போதும்.


Monday, January 29, 2018

அவர் தொட வருகின்றார்!

நாளைய (30 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 5:21-43)

அவர் தொட வருகின்றார்!

'இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்பெற்றெழுதலும்' என்னும் நிகழ்வை மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் (மத் 9:18-26, மாற் 5:21-43, லூக் 8:40-56) பதிவு செய்கின்றனர். ஆனால், இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்த யோவான் (காண். மாற் 5:37) இதை பதிவு செய்யவில்லை.

மாற்கு நற்செய்தியாளரின் பதிவைத்தான் இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கின்றோம்.

இந்த நற்செய்திப் பகுதியை மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. யாயிர் தன் மகளைக் காப்பாற்ற இயேசுவை அழைத்தல் (5:21-23)
ஆ. இயேசுவின் பயணம் - பயணத்தின்போது நடைபெறும் முதல் புதுமை (5:24-34)
இ. சுகம் பெற வேண்டிய மகள், உயிர் பெறுதல் (5:35-43)

மத்தேயு நற்செய்தியாளர் யாயிரின் மகள் முதலிலேயே இறந்துவிடுவதாக எழுதுகின்றார் (மத் 9:18-19). சிறுமிக்கு பன்னிரண்டு வயது என்பது மாற்கு இறுதியில் சொல்கின்றார் (5:42). ஆனால், லூக்கா அதை முதலில் சொல்கின்றார் (8:42). மாற்கு நற்செய்தியில் இயேசு உயிர்பெற்ற குழந்தைக்கு கடைசியாக சாப்பாடு கொடுக்கச் சொல்கின்றார் (8:43). ஆனால் லூக்காவில் அவள் உயிர்பெற்றவுடன் சாப்பாடு கொடுக்கச் சொல்கின்றார் (8:55). ஆக, ஒத்தமவு நற்செய்தியாளர்களின் பதிவு ஒன்றுக்கொன்று மாறுபடுகிறது.

2. இந்த நற்செய்திப் பகுதியை வெறும் இலக்கியப் பகுதியாக வாசித்தாலும் அங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது. என்ன பிரச்சினை? இயேசுவின் இரண்டு புதுமைகள் (பெண் நலம் பெறுதல், சிறுமி உயிர்பெறுதல்) வௌ;வேறு இடத்தில் சொல்லப்பட்டவை, பிற்காலத்தில் பிரதி எடுப்பவர்களின் தவற்றால் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டதா? அல்லது வேறு வேறு வாய்மொழியாக வந்த கதைகளை நற்செய்தியாளர்கள் ஒன்றாக இணைத்துவிட்டனரா? இயேசுவோடு பயணம் செய்த பெரிய கூட்டம், யாயிரின் வீடு வரவர குறைந்து போவதன் காரணம் என்ன? கதைத்தளமும், அந்தத் தளத்தில் பிரசன்னமாகியிருக்கும் நபர்களும்கூட மாறுபடுகின்றனர். சாலை, கூட்டம், நெரிசல் என இருந்த கதைதளம், திடீரென வீடு, மூன்று சீடர்கள், சிறுமி என மாறிவிடுவதன் பொருள் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?

அ. மாற்கு நற்செய்தியாளரின் இலக்கிய உத்தி. என்ன இலக்கிய உத்தி? ஒப்புமை. அதாவது, ஒற்றுமை-வேற்றுமையின் வழியாக ஒரு பொருளை உணர்த்துவது. இந்த நற்செய்திப் பகுதியில் இரண்டு அறிகுறிகள் அல்லது புதுமைகள் நடக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை - ஒருவர் நலம் பெறுகிறார். மற்றவர் உயிர் பெறுகிறார். இரண்டு பேரும் பெண்கள். ஒருவர் வறுமையில் வாடியவர். மற்றவர் செல்வச் செழிப்பில் திளைத்தவர். இருவருக்குமே பொதுவாக இருப்பவை 12 ஆண்டுகள் - முதல் பெண்ணுக்கு 12 ஆண்டுகள் துன்பம், இரண்டாம் பெண்ணுக்கு 12 ஆண்டுகள் மகிழ்ச்சி. முதல் பெண்ணுக்கு பரிந்து பேச எவரும் இல்லை. ஆனால் இரண்டாம் பெண்ணுக்கு பரிந்து பேச தந்தை, இறந்த நிலையில் அழ வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள். இருவரையும் குணமாக்குவது இயேசுவின் தொடுதல்: முதல் நிகழ்வில் பெண் இயேசுவைத் தொடுகின்றார். இரண்டாம் நிகழ்வில் இயேசு சிறுமியைத் தொடுகின்றார். முதல் நிகழ்வில் கூட்டம் மௌனம் காக்கிறது. இரண்டாம் நிகழ்வில் கூட்டம் மலைத்துப் போகிறது.

ஆ. இரண்டாம் நிகழ்வு நடப்பதற்கு முதல் நிகழ்வு தளத்தைத் தயாரிக்கிறது. அல்லது முதல் நிகழ்வின் தாமதம்தான் இரண்டாம் நிகழ்வு நடக்க காரணமாக அமைகிறது. முதல் நிகழ்வு நடப்பதற்கு முன் சிறுமி உடல்நலம் இல்லாமல் இருக்கிறாள். ஆனால், அந்தச் சிறுமி இறக்கவும், இறப்பு செய்தி அவளின் அப்பாவைத் தேடி வருவதற்கும், இறந்தவுடன் அழுவதுற்கு அவளின் குடும்பத்தார் கூடி வருவதற்கும் நேரம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தை உருவாக்கிக்கொடுக்கிறது முதல் நிகழ்வு. ஆக, முதல் நிகழ்வில் வரும் இரத்தப்போக்குடைய பெண், கூட்டம், நெரிசல் அனைத்தும் கதையின் கரு வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன.

இ. பயணநடை இலக்கிய உத்தி. நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் மற்றொரு உத்தி 'பயணநடை'. அதாவது, இயேசுவின் வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் அவரின் பயணத்தில் நடப்பதாக எழுதுவது. மிக நல்ல உதாரணம், இயேசுவின் எம்மாவு பயணம். இந்த நடையின் உட்கூறுகள் என்ன? பயணத்தின் தொடக்கம், பயணம், மற்றும் பயணத்தின் முடிவு. இன்றைய நற்செய்தியில் இயேசு மறுகரையிலிருந்து யாயிரின் இல்லத்திற்குப் பயணம் செய்கிறார். பயணத்தின் தொடக்கத்தில் சீடர்கள் அல்லது கூட்டம் இயேசுவின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றது. பயணத்தின் இறுதியில் கூட்டம் இயேசுவைக்கண்டு மலைத்துப்போய் அவரில் மேல் நம்பிக்கை கொள்கிறது. ஆக, நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு இயேசு மக்களை பயணம் செய்ய வைக்கின்றார். இந்தப் பயணத்தின் மையமாக இருப்பது நம்பிக்கை பற்றிய இயேசுவின் வார்த்தைகள்: குணம்பெற்ற பெண்ணிடம் இயேசு, 'மகளே, உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று!' என்கிறார் (5:34). உயிர்பெற வேண்டிய மகளின் தந்தையிடம், 'அஞ்சாதீர். நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்று கூறுகிறார் (5:36). ஆக, இந்த மையம் தெளிவானால், பயணநடை தெளிவாக விளங்குகிறது.

ஆக, இலக்கிய அடிப்படையில் அல்லது கதையியல் அடிப்படையில் பார்த்தால் ஒரே நிகழ்வுதான் இரண்டு தளங்களில் வளர்ச்சி பெறுகின்றது. ஆக, இவைகள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

3. முதல் புதுமை. இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதல் (5:24-34). யாயிரின் வேண்டுதலுக்கு இணங்கிய இயேசு அவரின் இல்லம் நோக்கிப் புறப்படுகிறார். வாசகரின் மனம் யாயிரின் மகளுக்கு என்ன ஆகுமோ என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், புதிய கதாபாத்திரத்தை உள்நுழைக்கின்றார் மாற்கு. இரத்தப்போக்கினால் வருந்திய பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை. கூட்டத்தில் ஒருவராக அவர் நிற்கிறார். கூட்டத்தில் நிற்கும்போது நமக்கு பெயர் தேவைப்படுவதில்லைதானே. அவரைப் பற்றி மூன்று விடயங்களைக் குறிப்பிடுகிறார் மாற்கு: அவள் பன்னிரண்டு ஆண்டுகளாய் அவதிப்படுகிறாள், மருத்துவரிடம் தன் பணத்தையெல்லாம் இழந்துவிட்டாள், இப்போது இன்னும் கேடுற்ற நிலையில் இருக்கிறாள். இப்படிப்பட்ட ஒரு பெண் மற்றவர்களைத் தொடுவது தீட்டு என்று சொன்னது லேவியர்நூல் 15:19-33. 'இயேசுவைத் தொட்டால் நலம் பெறுவேன்!' என அவள் சொல்லிக்கொள்கிறாள். ஒருவரின் தொடுதல்கூட குணமாக்க முடியும் என அக்காலத்தவர் நம்பினர். ஏன் ஒருவரின் நிழல் பட்டால்கூட நலம் பெற முடியும் என அவர்கள் நம்பியதால் தான் பேதுருவும், யோவானும் சாலையில் செல்லும்போது நோயுற்றவர்களை கட்டிலில் கொண்டுவந்து கிடத்துகின்றனர் (காண். திப 5:15). கூட்டத்தின் நடுவே வந்து தொடும் அவளின் துணிச்சல் அவள் எந்தவிதத் தடைகளையும் தாண்டத் தயாராக இருந்தாள் என்பதையும், எந்த அளவிற்கு தன் நோயினால் கஷ்டம் அனுபவித்திருப்பாள் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. இயேசு தன் உடலிலிருந்து ஆற்றல் வெளியேறுவதை உணர்கிறார். வழக்கமாக, மற்றவர்களின் மனதில் இருப்பவற்றை இயேசு உணர்வார் என்று சொல்லும் மாற்கு, இங்கு இயேசு தன்னில் நடப்பதை தான் உணர்வதாகச் சொல்கின்றார். 'யார் என்னைத் தொட்டது?' என்ற இயேசுவின் கேள்விக்கு, சீடர்கள், 'இவ்வளவு கூட்டம் நெரிசலாக இருக்கிறது! இங்க போய் யார் தொட்டது? யார் இடிச்சதுன்னு? கேட்குறீங்களே?' என்று பதில் சொல்கின்றனர் சீடர்கள். இது ஒரு 'முரண்பாடு' - என்ன முரண்பாடு? இயேசுவுக்கு அருகில் இருக்கும் சீடர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், தூரத்தில் இருக்கும் ஒரு பெண் அவரைக் கண்டுகொள்கின்றார். பயம் தொற்றிக்கொள்கிறது அந்தப் பெண்ணை. இரண்டு வகை பயம்: ஒன்று, தான் 'திருடியது' கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பது. மற்றொன்று, தான் இயேசுவைத் தீட்டாக்கிவிட்டோம் என்பது. ஆனால், இயேசு தூய்மை-தீட்டு பற்றி கவலைப்படுபவர் அல்லர். இயேசு அந்தப் பெண்ணை இப்போது அடுத்தநிலை குணமாக்குதலுக்கு அழைத்துச் செல்கின்றார். அவரின் நம்பிக்கையைப் பாராட்டுகின்றார். 'மகளே' என்று அவரை அழைப்பதன் வழியாக தன் இறையரசுக் குடும்பத்தில் உறுப்பினராக்குகின்றார் இயேசு.

4. இரண்டாம் புதுமை. யாயிரின் மகள் உயிர் பெறுதல். தன் மகளுக்கு சுகம் வேண்டி வந்தவர், தன் மகளின் உயிர் பெறுகிறார். இரத்தப்போக்குடைய பெண்ணின் எதிர்ப்பதமாக நிற்கிறார் யாயிர். தொழுகைக்கூடத் தலைவர். ஆக, கடவுளை யார் பார்க்கலாம், பார்க்கக்கூடாது என்று சொல்லக்கூடியவர் இவர். நிறைய பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர். தனக்கென வேலையாட்களையும் வைத்திருக்கின்றார். ஆனாலும், எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு தன் மகளுக்கு நலம் கேட்டு இயேசுவின் காலடியில் கிடக்கின்றார். தொழுகைக்கூடத்தலைவர் இயேசுவின் காலில் விழுகிறார் - இயேசு உயிர்த்த சில ஆண்டுகள் கழித்து, புதிய நம்பிக்கை கொண்டவர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் யூதர்களின் தொழுகைக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மாற்கு நற்செய்தியாளரின் திருச்சபையும் இப்படி வெளியேற்றப்பட்டிருக்கலாம். ஆனால், தொழுகைக்கூட தலைவரையே இயேசுவின் காலில் விழ வைப்பதன் வழியாக இயேசுவை தொழுகைக்கூடத்தை விட மேலானவர் என்றும், இயேசுவைச் சந்திக்கு தொழுகைக்கூடம் தேவையில்லை, சாலையோரம் கூட அவரைச் சந்திக்கலாம் என்ற மாற்று சிந்தனையை விதைக்கின்றார் மாற்கு. முதல் புதுமை இரண்டாம் புதுமையின் இடையில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் யாயிரின் மகள் இறந்து, அந்த இறப்பு செய்தி யாயிரின் காதுகளையும், இயேசுவின் காதுகளையும் எட்டுகிறது. 'துணிவோடிரும்! நம்பிக்கை கொள்ளும்!' என தைரியம் தருகிறார் இயேசு. யாயிரின் வீடு வருகிறது. தன் நெருக்கமான மூன்று சீடர்களுடன் (காண். 9:2, 14:33) உள் நுழைகிறார். இடையில் கூட்டத்தினரின் தடை - அதாவது, அவர்களின் கிண்டல். சிறுமியைத் தொட்டு எழுப்புகிறார். மக்கள் வியக்கின்றனர்.

5. இந்த நிகழ்வுகள் சொல்லும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

அ. துணிச்சல். 'இதற்கு மேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது!' என்று தன் நோயின் பாரம் தாங்க முடியாத பெண் இயேசுவைத் தொடும் துணிச்சல் பெறுகின்றார். தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு நபருக்கு அந்த நேரத்தில் தேவை நல்ல ஆடையோ, கையில் மோதிரமோ, காலில் செருப்போ அல்ல. மாறாக, மூச்சு. மூச்சு ஒன்றுதான். இயேசுவை நாம் தேடுவது 'நாம் செய்யும் பத்து வேலைகளில் ஒன்றாக இருக்கக் கூடாது!' அது ஒன்றே நம் தேடலாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் நலம் பெற முடியும். 'கேட்போம்! கிடைச்சா கிடைக்கட்டும்!' என்ற மனநிலையில் கடவுளை நாடிச் சென்றால் நாம் நலம்பெறுதல் இயலாது. ஆக, நம் உள்ளத்திலிருக்கும் தடையைக் களையும் துணிச்சலும், நம் வெளியில் இருக்கும் கூட்டம் அல்லது தூரம் என்னும் தடையைத் தாண்டும் துணிச்சலும் நமக்குத் தேவை.

ஆ. மாய மந்திரமா அல்லது நம்பிக்கையா? 'உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று!' என்று சொல்வதன் வழியாக இயேசு தன் உடலில் அல்லது ஆடையில் நலம்தரும் சக்தி இல்லை என்று கூறவில்லை. மாறாக, மாய மந்திரம் தான் நலம்தருகிறது என்ற நம்பிக்கையிலிருந்து அந்தப் பெண்ணை விடுதலை செய்கின்றார். ஆக, தீர்த்தம் என் மேல் விழுந்தால் நான் நலம் பெறுவேன், எண்ணெய் தடவினால் நலம் பெறுவேன், இயேசுவின் கல்லறையில் வைக்கப்பட்ட துணியைத் தொட்டத்தால் நலம் பெறுவேன் என்று சொல்வது மூட நம்பிக்கை. அவைகள் நமக்கு விடுதலை தருவதில்லை. நம் உள்ளத்தில் இருக்கும் நம்பிக்கைதான் விடுதலை தருகிறது. ஆக, கடவுளின் ஆற்றலை 'வெளியில்' இருந்து 'உள்ளுக்குள்' இழுத்துக்கொண்டு வருகிறார் இயேசு. நாம் கடவுளின் ஆற்றலை வெளியில் பார்க்கும்போது என்ன ஆபத்து வரும் என்றால், நாம் மனிதர்களை கடவுளாக்கி விடுகிறோம்? எப்படி? அந்த ஃபாதர் செபம் பண்ணுனாதான் நலம் கிடைக்கும், அல்லது அவர் சொல்றதெல்லாம் நடக்கும், அவர் கைவெச்சி செபிச்சா பிரச்சினை தீரும் என்று நாம் மனிதர்கள்பின் ஓடும்போது, நாம் அவரைக் கடவுளாக்கிவிடுகிறோம். ஆனா, அவரு நம்ம தலைமேல கைவைப்பது போல நம்ம பர்சுலயும் கைவைக்கிறார் என்பதை மறந்துவிடுகிறோம். இதில் சிலர் அருட்பணியாளர்களை ஒப்பீடும் செய்யத் தொடங்குவார்கள். அவர் நலம் தருகிறார். அவர் நல்ல ஃபாதர். இவரிடம் ஒன்றுமில்லை. இப்படியாக, ஒருவரை மற்றவர்மேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் நிலை வந்துவிடுகிறது.

இ. நோயுற்றவரும், மருத்துவ உலகமும். இரத்தப்போக்குடைய பெண் தன் சொத்துக்களையெல்லாம் மருத்துவர்களிடம் இழந்து விடுகின்றாள். அரசு மருத்துவமனையிலோ, அப்பல்லோ மருத்துவமனையிலோ கொஞ்சநேரம் சென்று நின்று பாருங்கள். பணம் இருந்தால் நலம். பணம் இருந்தால் மட்டுமே நலம். மக்களின் அவசரத்தையும், உறவினர்களின் பதற்றத்தையும் மருத்துவமனைகள் காசாக்கி விடுகின்றன. காசை வாங்கிவிட்டு ஒரு கையெழுத்தும் வாங்கிவிடுவார்கள். எதற்காக? ஒருவேளை அவர் நலம்பெறவில்லையென்றால், அல்லது இறக்க நேரிட்டால் அதற்கும், மருத்துவமனைக்கும் சம்பந்தமில்லையாம். என்ன ஒரு ஏமாற்றுவித்தை? எப்படியாவது என் வீட்டுக்காரர் பிழைக்க வேண்டும் என்று நினைக்கின்ற ஏழை மனைவி (யாயிரைப் போல) தன் ஒற்றை வடத் தாலியையும் விற்கத் துணிகின்றாள். உடல்நலனை உறுதி செய்ய வேண்டிய அரசும், காப்பீடு, ஊழல், தரமற்ற மருத்துவம் என மக்களின் உயிரோடு விளையாடி, அதில் வியாபாரம் செய்கிறது. காசிருப்பவர்கள் மட்டும்தான் உயிர்வாழ தகுதியுள்ளவர்கள் என்ற ஒரு புதிய விதியை நாம் நமக்குத் தெரியாமலேயே எழுதிக்கொண்டிருக்கிறோம்.


ஈ. தொடுதிரை உலகம். இன்று நம் செல்ஃபோன்கள் எல்லாம் ஸ்மார்ட்ஃபோன்கள் ஆகிவிட்டன. பொத்தான்கள் எல்லாம் தொடுதிரைகளாகிவிட்டன. நாம் தொட்டால் போதும், நினைப்பது நடக்கின்றது. இந்த தொடுதிரைஉலகின் முன்னோடி இரத்தப்போக்குடைய பெண்தான். தொடுகிறாள் இயேசுவை. அவள் நினைப்பது நடந்தேறுகிறது. இன்று நாம் நம் கையில் இருக்கும் தொடுதிரைகளைத் தொடும் அளவிற்கு மற்றவர்களைத் தொடுவதில்லை. நம் செல்ஃபோனோடு நெருக்கமாக இருக்கும் நாம், நம் பக்கத்துவீட்டுக்காரரோடு தூரத்தில் இருக்கிறோம். மேலும், யாரும் நம்மைத் தொடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கின்றோம். தூய்மை-தீட்டு என்றும் நாம் மற்றவர்களைத் தொட மறுக்கின்றோம். ஆனால், ஒவ்வொரு தொடுதலிலும் ஒரு குணமாதல் இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ள இன்றைய நற்செய்தி அழைக்கின்றது.

உ. சுகம் கேட்டவருக்கு உயிர் கிடைக்கிறது. கடவுளின் முன் ஒன்றை இழக்கும்போது நாம் பலவற்றைப் பெற்றுக்கொள்கின்றோம். நாம் கொஞ்சம் என கடவுளிடம் கேட்டு நின்றால், அவர் நம் கைநிறைய திணித்துவிடுகிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் கொஞ்சம் இழக்க வேண்டும். யாயிர் தன் அதிகாரத்தையும், பணபலத்தையும் இழந்து இயேசுவின் முன் முழந்தாளிடுகின்றார். உன் மகளுக்கு சுகம் என்ன, புதிய உயிரையே தருகின்றேன் என்று கைநிறையக் கொடுக்கின்றார் இயேசு.

ஊ. இறப்பு என்பது தூக்கம். 'சிறுமி இறக்கவில்லை. உறங்குகிறாள்!' (5:39) என்று இறப்புக்கு புதிய விளக்கம் தருகின்றார் இயேசு. 'தூக்கம் ஒரு சிறிய இறப்பு, இறப்பு ஒரு நீண்ட தூக்கம்' என்பார் ஷேக்ஸ்பியர். தூக்கம் நமக்கு புத்துணர்ச்சி தருவதுபோல, ஓய்வு தருவதுபோல உறக்கமும் நமக்கு புத்துணர்ச்சியும், ஓய்வும் தருகின்றது. தூங்கி விழிப்பது போல நாம் புதிய வாழ்விற்கு உயிர்த்துவிடுகிறோம். ஆக, இறப்பு பற்றிய பயம் நமக்கு தேவையில்லை.

எ. 'போ' மற்றும் 'உணவு கொடு!' இரண்டு அற்புதங்களின் நிறைவிலும் இயேசு இரண்டு கட்டளைகள் இடுகின்றார். பெண்ணிடம் 'போ' என்கிறார். சிறுமியின் தாயிடம், '(குழந்தைக்கு) உணவு கொடு!' என்கிறார். இயேசுவால் தொடப்பட்டவுடன் நாம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். இயேசுவைப் பற்றிக்கொள்வதல்ல ஆன்மீகம். நாம் தொட்ட இயேசுவை அடுத்தவர்களுக்கு எடுத்துச்செல்வதே இயேசு விரும்பும் ஆன்மீகம். பற்றிக்கொள்ளும்போதுதான் 'நான் சரி – அடுத்தவர் தவறு' என்ற பாகுபடுத்தும் மனம் பிறக்கின்றது. பற்றிக்கொள்ளும்போதுதான் கடவுள் ஒரு மயக்கமருந்தாக மாறுகின்றார். தொடுதலும், விடுதலும், பிறரை விடுவித்தலும்தான் ஆன்மீகம். இதுதான் இறைநம்பிக்கையின் அடுத்த கட்டம். ஆக, இயேசுவைத் தொட்ட நாம் பிறரைத் தொடப் புறப்பட வேண்டும். இரண்டாவதாக, உணவு கொடுத்தல் என்பது இரண்டாவது உயிர் கொடுத்தல் போன்றது. நாம் பசியால் வாடும் ஒருவருக்கு உணவு கொடுக்கும்போது அவருக்கு உயிரைக் கொடுப்பவர்களாகிவிடுகின்றோம்.

அவரைத் தொட நெருங்கிச் செல்லும் உங்களை, அவர் தொட வருகின்றார்!

Sunday, January 28, 2018

நீ வர வேண்டாம்!

நாளைய (29 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 5:1-20)

நீ வர வேண்டாம்!

இயேசு படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமால், அவரைப் பார்த்து, 'உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம் மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்' என்றார். (மாற்கு 5:18-19)

கெரசேனர் பகுதியில் இயேசு பேய்பிடித்தவர் ஒருவரை நலமாக்குகின்றார். பேயின் பெயர் 'லெகியோன்' - அதாவது படை (உரோமைப் படைவீரர்கள் 1000 பேர் குழுவாக இருப்பதற்குப் பெயர் லெகியோன்'. ஒரு மனிதருக்குள் ஆயிரம் பேர் இருந்தால் எப்படி இருக்கும்? பாவம் அவர் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்?

இந்த நற்செய்திப் பகுதியில் எனக்கு மூன்று நிகழ்வுகள் வியப்பைத் தருகின்றன:

1) இயேசு பேயை பன்றிகள் கூட்டத்திற்குள் அனுப்புகின்றார். ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அழிந்து போகின்றன. எதற்காக ஒரு அழிவிலிருந்து இன்னொரு அழிவு? பன்றிகளை அழிக்காமல் இயேசு பேய் பிடித்தவருக்கு நலம் தந்திருக்கக் கூடாதா? அல்லது இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தால் ஏன் அவர் பேயை தன்மேல் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது? நம்மூர் முனி திரைப்படம் போல! நம்ம வீட்டில தீ எறிகிறதென்றால் அடுத்த கூரையையும் பற்ற வைத்தால் நம் தீ அனைந்து விடுமா என்ன?
2) கெரசனேர் மக்கள் இயேசுவை தங்கள் ஊரைவிட்டு அகலுமாறு சொல்கின்றனர். நம்மூர் என்றாலும் நாமும் அதைத்தான் செய்திருப்போம். அந்த மக்களுக்கு பன்றிகள்தாம் அதிக மதிப்பாகத் தெரிந்திருக்கின்றன. நலம் பெற்ற மனிதரின் மதிப்பு தெரியவில்லை. இது நமக்கும் நடக்கும். இல்லாதவர் நம்மூரில் என்றும் இல்லாதவர்தான். இருக்கின்றவர் மனநிலை சரியில்லாதவராக இருந்தாலும் அவரை உலகம் மதிக்கும். வாழ்வின் அளவுகோல்கள் அப்படித்தான். நாம் அவைகளை மாற்ற முடியாது.
3) நலம்பெற்றவர் இயேசுவைப் பின்பற்றி விழைகின்றார். ஆனால் இயேசு அவரைத் தன்னோடு வர அனுமதிக்கவில்லை. 'வர்றேன்' சொல்றவரை இயேசு ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்?

இந்த மூன்றாவது கேள்வியை மட்டும் சிந்திப்போம்.

'நீ வர வேண்டாம்!'

இதைப் புரிந்த கொள்ள வேண்டுமென்றால் இந்த நற்செய்தியில் பேய் பிடித்தவரைப் பற்றிச் சொல்லப்பட்டவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவரைப் பற்றி மூன்று வர்ணனைகள் கொடுக்கப்பட்டுள்ளன:

அ. கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம்.

ஆ. அவரை எவராலும் கட்ட இயலாது.

இ. இரவும் பகலும் கூச்சலிட்டுக் கொண்டும் தன்னையே காயப்படுத்திக் கொண்டும் இருந்தார்.

கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். தாஜ்மகாலக்குப் போயிருக்கிறீர்களா? ஒரு கல்லறையைப் பார்க்க ஏன் கூட்டம் அலைமோதுகிறது? கல்லறை மற்றும் அன்பு இணைந்ததுதான் தாஜ்மகால். அன்பு இருந்தால் கல்லறையும் தாஜ்மகாலும். அன்பு இல்லையென்றால் தாஜ்மகாலும் கல்லறைதான். இந்த மனிதர் அன்பு இல்லாத இடத்தில் இருந்தார். கல்லறையில் ஒரு நாள் சும்மா இருப்பதே எவ்வளவு கஷ்டம்? அதில் அங்கேயே வாழ்வது என்றால் எப்படி? இந்த மனிதருக்கு நண்பர்கள் இல்லை. இவரைக் கண்டு கொள்வார் யாருமில்லை. பேய் பிடித்ததால் அவருக்கு இந்த நிலையா? அல்லது இந்த நிலையால் அவருக்கு பேய்பிடித்ததா?

அவரை எவராலும் கட்ட இயலாது. இதை வாசிக்கும் போது நம் கோவை மாவட்டத்தில் நடமாடிக் கொண்டிருக்கும் புலி மற்றும் சிறுத்தைகள்தாம் நினைவிற்கு வருகிறது. புறநானூற்றுக் காலத்தில் முறத்தால் பெண் புலி விரட்டிய நம் மண்ணில் இன்று ஒரு புலியைப் பிடிக்க எத்தனையோ கமாண்டோக்கள், ரகசிய கேமராக்கள். நம் வீரம் போய்விட்டதா? அல்லது நாம் வளர்ந்து விட்டோமோ? எதற்காக புலி நம் ஊருக்குள் வருகிறது? உண்மையில் புலி இருக்கும் இடத்தில் தான் நாம் இருக்கின்றோம். காடுகளை அழித்து பிளாட் போட்டுவிட்டால் அவைகள் எங்கே போகும்? ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கா போகும்? வீடுகளுக்குத் தான் வரும். இந்த மனிதர் கண்டிப்பாக ஊருக்குள் சென்றிருப்பார். எதற்காக? உணவிற்காக. அதைப் பிடிக்காத நாலு பேர் அவரிடம் வீரத்தைக் காட்டி அவரைக் கட்ட முயற்சி செய்திருப்பார்கள். பாவம் அவருக்குப் பசி? பசி வந்தால் பத்துச் சங்கிலியையும் அறுத்து விடலாம். ஆகையால் பசி வந்தால் பத்தும் பறந்து விடும் என்கிறார்கள். அவருக்கு அவர்களே உணவு கொடுத்திருந்தால் அவரைக் கட்ட வேண்டிய தேவையே இருக்காது. பல நேரங்களில் உறவுகளில் பிரச்சினைகள் வருவதற்குக் காரணம் இதுதான். என் மனைவியை சமாளிக்கவே முடியவில்லை என்றும் என் கணவரைச் சமாளிக்கவே முடியவில்லை என்றும் புலம்புவார்கள். இரண்டிலும் அவர்களுக்கு ஏதோ குறை வைத்துள்ளோம் என்று தான் அர்த்தம். அந்தக் குறையை நிவர்த்தி செய்தால் உறவுச் சிக்கல் அவிழ்ந்து விடும். அதை விடுத்து நான் ஃபோன் செய்ய மாட்டேன், பேச மாட்டேன் என முரண்டு பிடித்தால் பிரச்சினைகள் அதிகமாகவே செய்யும்.

கூச்சலிட்டுக் கொண்டு இருந்தார். நம் காரில் ஹார்ன் வைத்திருப்பது எதற்காக? மனிதர்கள் மாட்டு வண்டி காலத்திலிருந்து மாருதி கார் காலத்திற்கு எப்படி கடந்து போயிருப்பார்கள்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன். மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டு போகிறோம். வழியில் குறுக்கே ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். என்ன செய்வோம்? 'டேய்...கொஞ்சம் ஓரமா போடா. வண்டி வருது' என்று சொல்வோம். அவர் அதைக் கண்டு கொள்ளவில்லையென்றால் கொஞ்சம் சப்தமாகச் சொல்வோம். மாருதி காரில் கத்த முடியாது. அதற்குப் பதிலாக ஹார்ன் வைத்துக் கத்துகிறோம். நாம் அணியும் ஆடை, நாம் செய்யும் மேக்கப் என அனைத்துமே நாம் மற்றவர்களைப் பார்த்துப் போடும் சத்தம்தான்: 'ஏய்...என்னைப் பார்!' என்று நம் ஆடைகள் மற்றவர்களைப் பார்த்து மௌனமாகச் சத்தம் போடுகின்றன. யாரும் நம்மைக் கண்டுகொள்ளவில்லையென்றால் நாம் சத்தம் போடுகிறோம். குழந்தை அழுவது எதற்காக? தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லையே என்பதற்காகத் தான்.

இந்த மனிதரிடம் இருந்த மூன்று பண்புகளும் நம்மிடமும், மன்னி;க்கவும், என்னிடமும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கின்றன.

இந்த மூன்றிலிமிருந்து நலம்பெற்ற ஒரு மனிதரை இயேசு அவரின் உறவினர்களிடமே திரும்பி அனுப்புகின்றார். 'வர வேண்டாம்' என்று இயேசு சொல்வதும் ஒரு இறையழைத்தல்தான். எனக்கு ஒரு குட்டி ஆசை. 'நான் வருகிறேன்' என்று சொன்னபோது இயேசு என்னையும் பார்த்துச் சொல்லியிருக்கலாமே: 'நீ வர வேண்டாம்!' என்று.

இறையழைத்தல் பற்றிய ஒரு சிந்தனையை மாற்றுகின்றது இன்றைய நற்செய்திப் பகுதி. ஒருவேளை இயேசுவோடு செல்வது கல்லறைகள் மத்தியில் வாழ்வது போலவா? அதற்காகத்தான் இயேசு, 'நீ ஏற்கனவே கல்லறைகளில்தான் இருக்கிறாய். இனியாவது வீட்டுக்குப் போ!' என்று சொன்னாரோ?

அல்லது அழைத்தல் என்பது இயேசுவோடு இருப்பது மட்டுமல்ல, மாறாக, உலகில் அவரின் அன்பிற்குச் சான்றாக இருப்பது என்று அழைத்தல் குறித்த சிந்தனையை விரிவுபடுத்துகிறாரோ இயேசு?

'நீ வர வேண்டாம்!'


Friday, January 19, 2018

மதிமயங்கி இருக்கிறார்

நாளைய (20 சனவரி 2018) நற்செய்தி (மாற்கு 3:20-21)

மதிமயங்கி இருக்கிறார்

நாளைய நற்செய்தி வாசகத்தில் வரும் இயேசுவைப் பார்க்க நமக்கு பரிதாபமாகவும், பாவமாகவும் இருக்கிறது.

அவருக்கு சாப்பிடக்கூட நேரமில்லை. அந்த அளவுக்கு வீட்டில் மக்கள் கூட்டம்.

இயேசுவை 'மதிமயங்கி இருக்கிறார்' என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர். இங்கே பயன்படுத்தப்படும் கிரேக்க வார்த்தை, 'இயேசு தனக்கு வெளியே இருக்கிறார்' என்பதுதான்.


எனக்கு வெளியே இருக்கும்போது நான் மதிமயங்குகிறேன்.காதலில் இருப்பவர்களை மதிமயங்கியவர்கள் என்று சொல்ல நான் கேட்டதுண்டு. இதன் லாஜிக் ரொம்ப சிம்பிள்: 'ஒருவர் தனக்கு வெளியே சென்றுவிடுகின்றார். அடுத்தவர் உள்ளே வந்து குட்டி சேர் போட்டு அமர்ந்து கொள்கின்றார்.' இயேசுவைப் பொறுத்தவரையில் அவரது பணிதான் அவரின் முழு எண்ணத்தையும் ஆக்கிரமித்துக்கொள்கிறது.

'அவர் மதிமயங்கி இருக்கிறார்' என மக்கள் சொல்லக் கேட்டு அவரை அழைத்துக்கொண்டு போக அவருடைய உறவினர்கள் அவரிடம் வருகிறார்கள்.

இங்கே இரண்டு விடயங்கள் கவனிக்க வேண்டும்:

அ. மக்களின் பார்வை
நாம என்னதான் மாங்கு மாங்கு என்று மக்களுக்காக பாடுபட்டு உழைத்தாலும், நம் நேரம், ஆற்றல், பணம் என அனைத்தையும் தியாகம் செய்தாலும், மக்கள் நம்மை 'மதிமயங்கியவர்,' 'லூசு,' 'முட்டாள்' என பார்க்க வாய்ப்புண்டு. இயேசுவுக்கு இதுதான் நிகழ்கிறது. அவரின் பணிகள், குணமாக்குதல்கள் அனைத்தும் அவரைப் பொறுத்தவரையில் அது இறையரசுப் பணி. ஆனால் அடுத்தவரின் பார்வைக்கு அது 'மதிமயங்குதல்.' ஆக, நாம் நம்மைப் பற்றியும், நாம் செய்யும் செயல்களைப் பற்றியும் மிகவும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

ஆ. உறவினர்களின் பார்வை

இயேசுவின் உறவினர்கள் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே இயேசுவின் அன்னையும் வந்தாரா என்பது நமக்குத் தெரியவில்லை. உறவினர்களின் வருகை இயேசுவைக் காப்பாற்றுவதற்காக அமைந்ததா, அல்லது மக்கள் சொல்வதை ஆமோதிப்பதாக அமைகிறதா என்பதும் நமக்குத் தெரியவில்லை. 'நீங்களுமா என்னை அப்படி நினைத்துவிட்டீர்கள்?' என்று இயேசுவே தம் உறவினர்களிடம் கேட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.



Thursday, January 18, 2018

தாம் விரும்பியவர்களை

நாளைய (19 சனவரி 2018) நற்செய்தி (மாற்கு 3:13-19)

தாம் விரும்பியவர்களை

'இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார்.
அவர்களும் அவரிடம் வந்தார்கள்.'

நாளைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் தொடக்கவரிகள் இவை. இயேசு பன்னிருவரை அழைக்கும் நிகழ்வில் அதிகமாக கண்டுகொள்ளாமல் விடப்படும் வரிகள் இவை.

சீடர்களை அழைக்குமுன் இயேசு மலைமேல் ஏறுகின்றார். 'மலைமேல் ஏறுதல்' என்பது இயேசுவைப் பொறுத்த வரையில் 'தனிமையில் இருத்தல்,' 'செபித்தல்,' 'தந்தையோடு ஒன்றித்திருத்தல்.' மேலும், உருவகமாகப் பார்த்தோமென்றால் மலைமேல் ஏறும்போது ஒருவரின் பார்வை விசாலப்படுகிறது. நாம் கீழே நின்று மற்றவர்களைப் பார்ப்பதற்கும், மொட்டை மாடியில் நின்று பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது. கீழிருந்து பார்க்கும்போது ஒருவரின் பகுதிதான் தெரிகின்றது. ஆனால் மேலிருந்து பார்க்கும்போது ஏறக்குறைய முழுவதும் தெரிகிறது.

இயேசுவின் அழைப்பு இரண்டு நிலைகளில் இருக்கின்றது: 'அவர் அழைக்கின்றார்.' 'அவர்கள் வருகிறார்கள்.' ஆக, அழைப்பும், பதில் தருதலும் அடுத்தடுத்த தொடர்நிகழ்வாக இருக்கிறது. இயேசுவின் அழைப்பிற்கு யாரும் 'இல்லை' என்ற பதில் தராதது ஆச்சர்யமாக இருக்கிறது. ஏன் அவர்கள் 'இல்லை' என்று சொல்லவில்லை? இயேசுவின் அழைப்பிற்காக தவம் கிடந்ததுபோல உடனே 'ஆம்' என்று அவர்பின் வந்துவிடுகின்றனர்.

இயேசு 'தாம் விரும்பியவர்களை' அழைக்கின்றார்.

இறையழைப்பிற்கான ஒரே தகுதி இதுதான்: 'அவரின் விருப்பம்.'

'அருள்பணியாளராக இருந்து என்ன சாதித்தோம்?' என்று ஒருநாள் அருள்தந்தை விமி சார்லி அவர்களைக் கேட்டேன்.
'அருள்பணியாளராக இருப்பதே சாதனைதான்' என்று புன்முறுவலோடு சொன்னார்.

அதாவது, அவரின் கண்கள் நம்மேல் படுவதுதான் அழைத்தல்.

இந்த அழைப்பிற்காக ஒருவர் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகம். அழைக்கப்பட்ட 12 பேரும் - யூதாசு உட்பட - மிகக் கொடூரமான முறையில் தங்கள் உயிரைக் கையளிக்கின்றனர். இந்த விலை தெரிந்துதான் இவர்கள் முன்வந்தார்களா? என்பது அடுத்த ஆச்சர்யம்.

நாளைய தினம் அவரின் அழைத்தலுக்கு 'ஆம்' என்று சொன்ன அனைத்து அருள்நிலை இனியவர்களுக்காகவும் வேண்டுவோம்.

அதே வேளையில், அவரின் பணிக்கான அழைப்பு இன்று அரிதாகிவரும் காலத்தில் அவரின் குரலைக் கேட்கின்ற, அந்தக் குரலுக்கு பதில் தருகின்ற நிறைய இளவல்கள் தூண்டப்படவேண்டும் எனவும் மன்றாடுவோம்.

Wednesday, January 17, 2018

அவர்மீது விழுந்துகொண்டிருந்தனர்

நாளைய (18 சனவரி 2018) நற்செய்தி (மாற்கு 3:7-12)

அவர்மீது விழுந்துகொண்டிருந்தனர்

நாளைய நற்செய்தி வாசகத்தில் வரும் ஒரு வரி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது: 'நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர்'

இந்த வரியை கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் இன்னும் ஆச்சர்யம் மேலோங்குகிறது.

இந்தப் பக்கம் கடல். அந்தப் பக்கம் மக்கள் கூட்டம். நடுவில் இயேசு.

கூட்டத்தில் நீங்கள் நெரிசல் பட்டதுண்டா? கூட்டநெரிசல் எல்லாம் நம்மை அறியாமல் நிகழும் நெரிசல்கள். மேலும், நெரிப்பவர்கள் நம்மை வேண்டுமென்றே அவ்வாறு செய்வதில்லை. ஆனால், இயேசு அனுபவிக்கும் நெரிசல் சற்று வித்தியாசமானது. அவரையே மையமாக வைத்து அவர்மேல் வந்து விழுகிறார்கள் மக்கள்.

நிற்க.

கடந்த வாரம் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வு நடந்ததாக என் நண்பர் பகிர்ந்து கொண்டார்.

கணவன், மனைவி, மகள். இவர்கள்தாம் போட்டியாளர்கள். போட்டி என்னவென்றால், கணவன் மற்றும் மகளை ஒரு அறையில் வைத்துவிட்டு மனைவியை மற்ற நான்கு பெண்களோடு இன்னொரு அறையில் வைப்பர். அவர்களின் கைகள் மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும். இந்தப் பக்கம் உள்ள கணவன் மற்றும் மகளின் கண்களைக் கட்டிவிடுவர். இந்தக் கணவர் அந்த நான்கு கைகளையும் பிடித்துப் பார்த்து தன் மனைவியின் கை எது என்பதை சரியாகச் சொல்ல வேண்டும். அதே போல மகளும் தன் அம்மாவின் கை எது எனச் சொல்ல வேண்டும். நிகழ்ச்சியின் இறுதியில் என்ன வியப்பு என்றால், கணவனால் தன் மனைவி யாரென்று சரியாகச் சொல்லவில்லை. (அவருக்கு வீட்டில் அன்றிரவு என்ன நேர்ந்ததோ அது நமக்குத் தெரியாது!) ஆனால் குழந்தை சரியாகச் சொல்லிவிட்டது.

'நீ எப்படி பாப்பா சரியாகச் சொன்னாய்?' என்று கேட்டதற்கு அந்த மகள், 'அது எங்க அம்மா கை. அவ்வளவுதான்' என்றது சற்று புன்னகையோடு.

இதுதான் உணர்வு.

நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல். இந்த தோல் வழியாகவே நாம் உணர்கிறோம். நம்மை உணர்த்துகிறோம்.

இயேசு பலரை குணமாக்கியதால் அவரைத் தொட்டு அவரின் உணர்வைத் தங்கள் உணர்வாக்கக் துடிக்கின்றனர் மக்கள். நம் அனைவரிடமும் இந்த தொடுவுணர்வு, குணமாக்கும் உணர்வு இருக்கின்றது. நம் நெருங்கிய வட்டத்திற்குள் நம்மால் ஒருவர் மற்றவரின் வாழ்வைத் தொட்டு மாற்ற முடிகிறதென்றால் அது எல்லாரையும் நோக்கியிருப்பதும் சாத்தியம்தானே!

இயேசுவைத் தொட வேண்டுமென்று அவர்மேல் விழுந்துகொண்டிருந்த கூட்டத்தினர் ஒருவரைப் போல இயேசுவுக்கான என் தேடல் இருக்கிறதா?
நான் இன்று நலம் பெற வேண்டுமா?
இந்த நலம் பெறுதலுக்காக நான் அவரை நெரித்துக்கொண்டு தேடத் தயாரா?
அல்லது விலகி நின்று வேடிக்கை பார்ப்பதே போதும்! என நினைக்கிறேனா?


பிடிவாத உள்ளம்

நாளைய (17 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 3:1-6)

பிடிவாத உள்ளம்

ஓய்வுநாள் பற்றிய மற்றொரு சர்ச்சைய நாளைய நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம்.

தொழுகைக்கூடத்தில் நுழைகிறார் இயேசு. சூம்பிய கை உடைய ஒருவரை அங்கே காண்கின்றார். அது ஓய்வுநாள். இவர் குணப்படுத்துவாரா? மாட்டாரா? எப்படி குற்றம் கண்டுபிடிக்கலாம்? என்று அவரை நோட்டம் விடுகின்றனர் 'சிலர்.'

ஓரமாக நின்றிருந்த கைசூம்பியவரை, 'எழுந்து நில்லும்!'  என்று விளிம்பை மையப்படுத்துகிறார் இயேசு.

இதுவரை மையத்தில் இருப்பவர்கள் எல்லாம் விளிம்பிற்குச் செல்லவே, அல்லது எல்லா விளிம்புகளும் மையத்தில் இடம் பிடிக்கவே இப்படிச் செய்தார் இயேசு.

அவர்கள் குணப்படுத்துவாரா? மாட்டாரா? என்று கேள்விகளை தங்கள் உள்ளங்களில் கேட்டுக்கொண்டிருக்க, இயேசுவோ கேள்விகளை வெளிப்படையாகக் கேட்கிறார்: 'குணப்படுத்துதல் சரியா? இல்லையா? ஓய்வுநாளில் உயிரை அழிப்பதா? எடுப்பதா?'

இந்தக் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை.

அவர்களின் பிடிவாத உள்ளத்தை நினைத்து வருந்துகின்ற இயேசு நலமற்ற அவருக்கு நலம் தருகிறார்.

'பிடிவாத உள்ளம்' என்பது 'உறைந்த உள்ளம்.'

உறைநிலையில் உள்ள ஒரு பொருள் எந்த நிலையில் இருந்ததோ அப்படியே தங்கிவிடுகிறது. நேப்பிள்ஸ் நகரில் 2000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை ஒன்று வெடித்துச் சிதற, போம்ப்பே என்ற நகரை லாவா குழம்பு நிரப்புகிறது. அந்த நேரத்தில் யார் யார் எப்படி இருந்தார்களோ அப்படியே உறைந்து போகின்றனர். தொட்டிலில் தூங்கும் குழந்தை, பாத்திரம் தூக்கும் பெண், வாள் ஏந்திய வீரன் என எண்ணற்ற லாவா சிற்பங்கள் இன்னும் அங்கே காணக்கிடக்கின்றன. ஆக, அவரவர் இருக்கின்ற நிலையிலேயே உறைந்துவிடும்போது அவர்களின் வளர்ச்சிக்கு அங்கே இடம் இல்லை.

இயேசுவின் வருத்தம் அவர்கள் தன் கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை என்பதில் அல்ல. மாறாக, இப்படி வளர்ச்சி தடைப்பட்டு, உறைந்துபோயிருக்கின்றார்களே என்பதில்தான் உள்ளது.

இன்று என் உள்ளம் உறைந்து போயிருக்கின்றதா?

உறைந்து போன நான் எவற்றில் எல்லாம் பிடிவாதமாக இருக்கிறேன்?

Monday, January 15, 2018

ஓய்வுநாளில் செய்யக்கூடாதது

நாளைய (16 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 2:23-28)

ஓய்வுநாளில் செய்யக்கூடாதது

சீடர் கதிர்களைக் கொய்துகொண்டு வருவதைப் பார்த்த பரிசேயர் இயேசுவிடம், 'பாரும், ஓய்வுநாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?' என்று புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த இடத்தில் தாவீது இறை அப்பத்தை எடுத்து உண்ணும் நிகழ்வை மேற்கோள் காட்டுகின்றார் இயேசு.

இயேசு தாவீதின் நிகழ்வைக் குறிப்பிடுவது இரண்டு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:

ஒன்று, ஒருவருக்காக சட்டத்தை வளைக்க முடியுமென்றால் எல்லாருக்காகவும் சட்டத்தை வளைக்க முடியும்.

இரண்டு, தாவீதுக்கு இது அனுமதிக்கப்பட்டதென்றால், தாவீதின் மகனாம் தனக்கும் அனுமதிக்கப்பட்டதே.

'பசி வந்தால் பத்தும் பறந்துவிடும்' என்பது பழமொழி. இங்கே பசி வந்தாலும் தங்கள் சட்டங்களைப் பிடித்துக்கொள்கின்றனர் பரிசேயர்கள். ஒருவேளை இயேசுவின் சீடர்கள் யூதர்கள் இல்லை என வைத்துக்கொள்வோம். அவர்களை இந்த ஓய்வுநாள் சட்டங்கள் கட்டுப்படுத்தும் வாய்ப்பு இல்லை. ஒருவர் பின்பற்றும் மதம், அதாவது பிறப்புக்குப் பின் ஒருவர் மேல் சுமத்துப்படும் ஒரு மத அடையாளமே, அவரை கட்டுப்படுத்துகிறது. அப்படியென்றால், நாமே விரும்பாமல் நம்மேல் சில கட்டுப்பாடுகள் புகுத்தப்படுகின்றன.

இந்த நிகழ்வின் வழியாக இயேசு இவ்வாறாக நாம் நம்மேல் சுமத்திக்கொள்ளும் கட்டுப்பாடுகள் பற்றிய சிந்தனையைத் தூண்டுகிறார்.

'கட்டின்மையோடு பிறக்கும் மனிதர் வாழ்க்கை முழுவதும் கட்டுக்களோடு வாழ்கின்றனர்' என்கிறார் வால்டேர்.

மதத்தின் நோக்கமே நம் கட்டுக்களை கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்துக்கொள்வதே.

இன்று என்னைக் கட்டிக்கொண்டிருக்கும் கட்டுக்கள் எவை?


Sunday, January 14, 2018

இணக்கத்தன்மை

நாளைய (15 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 2:18-22)

இணக்கத்தன்மை

'இணக்கத்தன்மை' ('compatibility') என்பது உறவுகள் மேலாண்மையியல் அதிகமாக பேசப்படும் ஒரு சொல்லாடல்.

இந்த இணக்கத்தன்மை இருக்கும்போது மனித உறவு நிலைகள், குடும்பம், வேலை, படிப்பு - என அனைத்து தளங்களிலும் இலகுவாக அமைகின்றன.

இயேசுவின் சமகாலத்து யூத சமயச் சடங்கான நோன்பிருத்தலில் இருந்த இணக்கத்தன்மை இயேசுவின் வருகையால் - புதிய மணமகனின் வரவால் - கெடுவதாக யோவானின் சீடர்களும் மற்றவர்களும் நினைக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் தான் ஒரு புதிய துணி என்றும், தன்னால் பழைய துணியோடு தன்னை ஒட்டிக்கொள்ள முடியாது என்றும், தான் ஒரு புதிய இரசம் என்றும், இந்தப் புதிய இரசத்தை பழைய தோற்பைகள் கொள்ளாது எனவும் உருவகமாகப் பேசுகின்றார் இயேசு.

ஆக, பழையது பழையதோடும், புதியது புதியதோடும் இணக்கத்தன்மை கொண்டிருக்கும் என்பது இயேசுவின் கருத்து.

இந்த இணக்கத்தன்மையை எப்படி வளர்த்துக்கொள்வது?

'பழைய துணியோடு புதிய துணியை எப்படி இணைப்பது?'

'பழைய தோற்பையில் புதிய மதுவை எப்படி ஊற்றி வைப்பது?'

பழையவற்றை அழிப்பதன் வழியாகவே இது சாத்தியமாகும். பழைய துணி கிழிக்கப்பபட வேண்டும். பழைய தோற்பையின் மது கொட்டப்பட வேண்டும்.

பழையது கழிந்தவுடன் புதியது வரும். புதியது அடுத்தவற்றுடன் இணக்கத்தன்மை கொண்டிருக்கும்.

பழையதை தூக்கி எறிய மிகப் பெரிய துணிச்சல் வேண்டும். சின்ன உதாரணம், நம்ம வேலை பார்க்கும் டேபிளை, அல்லது நாம் முக அலங்காரம் செய்யும் கண்ணாடிக்கு அருகில் உள்ள மேசையை பார்ப்போம். 'இதை மாற்ற வேண்டும்!' 'இதைத் தூக்கி எறிய வேண்டும்' என நாம் நினைத்து அவற்றை தூக்கி எறியாமல் வைக்கக் காரணம் என்ன?

புதியவற்றோடு இணக்கத்தன்மை கொண்டிருக்க தடையாக இருப்பது எது?


Saturday, January 13, 2018

தங்குதல் - அவருக்காக, அவரில், அவரோடு

14 ஜனவரி 2018 ஆண்டின் பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு

I. 1 சாமுவேல் 3:3-10,19
II. 1 கொரிந்தியர் 6:13-15,17-20
III. யோவான் 1:35-42

தங்குதல் - அவருக்காக, அவரில், அவரோடு

நாம் இன்று கொண்டாடும் பொங்கல் மற்றும் இன்றைய இறைவாக்கு வழிபாட்டையும் நாம் இணைத்துப் பார்க்கும்போது 'தங்குதல்' என்ற வார்த்தை இரண்டிற்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது. பானையில் தங்குகின்ற அரிசி தன் உடன் இருக்கும் சர்க்கரை, முந்திரி, தேங்காய், மற்றும் சுக்கோடு இணைந்து பொங்கலாகின்றது. ஆண்டவரின் அடியார்கள் அவருக்காக, அவரில், அவரோடு தங்கும்போது புதிய மனிதர்களாக உருப்பெறுகின்றனர்.

'தங்குதல்' - நம் வாழ்வின் இன்பம், துன்பம் அனைத்திற்கும் காரணம் இந்த ஒற்றைச்சொல்லே.

மனிதர்கள் நாடோடிகளாக நடமாடிக்கொண்டிருந்தபோது நாகரீகமும், கலாச்சாரமும் வளரவில்லை. என்று ஒரே இடத்தில் அவர்கள் தங்கத் தொடங்கினார்களோ அன்றுதான் எல்லாம் பிறந்தது. தங்குவதற்கு நமக்கு இடம் தேவை. இடம் வந்தவுடன் வீடு தேவை. வீடு வந்தவுடன் பொருள்கள் தேவை. பொருள்கள் வந்தவுடன் பாதுகாப்பு தேவை. பாதுகாப்பு வந்தவுடன் காவலர் தேவை. காவலர் வந்;தவுடன் கண்காணிப்பு கேமரா தேவை. கேமராவைப் பொருத்த கணிணி தேவை. கணிணியின் தகவலை கைகளில் பார்க்க ஸ்மார்ட்ஃபோன் தேவை. தகவல் தடையின்றி கிடைக்க 4ஜி தேவை. 4ஜிக்கு நெட்வொர்க் நிறுவனம் தேவை. நிறுவனத்திற்கு அரசு தேவை. இப்படி மனிதன் என்று பாயை விரித்து ஒரே இடத்தில் படுக்கத் தொடங்கினானோ அன்று எல்லாம் தொடங்கிவிட்டது. அன்று அந்த ஒற்றை மனிதன் கண்ட கனவுதான் இன்று நாம் பெற்றுள்ள எல்லா வளர்ச்சிக்கும்கூட காரணமாக இருக்கிறது.

மனிதர்கள் சக மனிதர்களோடு தங்குதலே இவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது என்றால் அவர்கள் கடவுளோடு அல்லது இறைவனோடு அல்லது ஆண்டவரோடு தங்கும்போது இன்னும் எவ்வளவு பெரிய மாற்றங்கள் அங்கே பிறக்கும். அப்படிப்பட்ட நிகழ்வுதான் இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் நடக்கின்றது.

முதல் வாசகம்: 'அவருக்காக தங்குதல்'

இன்றைய முதல் வாசகம் (காண். 1 சாமு 3:3-10,19) நமக்கு மிகவும் பரிச்சயமான வாசகப் பகுதி: 'ஆண்டவராகிய இறைவன் சாமுவேலை அழைக்கும் நிகழ்வு.' எல்கானா - அன்னா தம்பதியினருக்கு பிறக்கின்ற சாமுவேல் தம் தாய் அன்னாவால் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறார். (வாழ்க்கையில் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய முடிவுகளை விவிலியத்தில் பெண்கள்தாம் எடுக்கின்றனர்!) 'நான் ஆண்டவரிடமிருந்து கேட்டேன்' (எபிரேயத்தில் 'ஷெமு'-'ஏல்') என்று அவரிடமே தான் கேட்டதைக் கொடுத்துவிடுகின்றார் இந்த துறவித்தாய். சாமுவேல் இறைவாக்கினர் காலத்தில் பிள்ளைகளை ஆலயத்திற்கு நேர்ந்துவிடுவது புழக்கத்தில் இருந்தது. இப்படி விடப்படும் பிள்ளைகள் ஆண்டவரின் இல்லத்தில் பணியாற்றும் குருவோடு 'தங்க'வேண்டும். குருக்கள் தங்கள் பணிக்கான உதவியாள்களாக வைத்திருந்து காலப்போக்கில் அவர்களையும் குருக்களாக்கி ஆலயப்பணியில் இணைத்துவிடுவர்.

இப்படி பிள்ளைகளோடு பிள்ளைகளாக சாமுவேல் படுத்திருக்க, 'சாமுவேல்' என்று கடவுள் அவரை அழைக்கின்றார். 'அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை' என்கிறார் ஆசிரியர். ஆக, ஆண்டவரின் குரலை அறியாத சாமுவேல் உடனடியாக தன் குருவான ஏலியிடம் ஓடுகின்றார். 'இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?' என்று கேட்கின்றார். இப்படி மூன்று முறை நடக்க, மூன்றாம் முறைதான் ஏலியே இது கடவுளின் செயல் என்று உணர்ந்துகொள்கின்றார். 'உன்னை அவர் மீண்டும் அழைத்தால், 'ஆண்டவரே பேசும். உம் அடியான் கேட்கிறேன்' என்று பதில் சொல்ல' என்று சொல்லி அனுப்ப, சாமுவேல், 'பேசும், உம் அடியான் கேட்கிறேன்!' - இங்கே நன்றாகக் கவனிக்க வேண்டும். சாமுவேல் கடவுளை ஒருபோதும் 'ஆண்டவர்' என்று அழைக்கவில்லை. எந்தவொரு விளிச்சொல்லும் இன்றி மொட்டையாக, 'பேசும்' என்கிறார் சாமுவேல். ஆனால் அன்று முதல் 'ஆண்டவர் அவனோடு இருந்தார். சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை' என பதிவு செய்கின்றார் ஆசிரியர்.

இங்கே, சாமுவேல் ஆண்டவருக்காக, அவருக்காக, அவருடைய பணிக்காக ஆண்டவரின் ஆலயத்தில் தங்கியிருக்கின்றார். இந்த தங்கியிருத்தலின் விளைவாக ஆண்டவர் சாமுவேலோடு 'உடனிருக்க' ஆரம்பிக்கின்றார். 'அவருடைய வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை' என்றால், அன்று முதல் அவர் சொன்ன அனைத்தும் இறைவனின் வாக்காக மாறின என்பதே பொருள்.

ஆக, ஓர் இரவில் ஆண்டவருக்காக தூக்கம் கலைத்தது சாமுவேல் என்ற சிறுவனை ஓர் இறைவாக்கினராக  - இஸ்ரNயுலின் முதல் இறைவாக்கினராக - மாற்றுகிறது.

இரண்டாம் வாசகம்: 'அவரில் தங்குதல்'

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 6:13-15, 17-20) கொரிந்து நகர திருச்சபையில் மலிந்திருந்த பரத்தமைக்கு எதிராக இறைமக்களை அறிவுறுத்தும் பவுலடியார் 'உடல்' என்பதை உருவகமாகக் கையாளுகின்றார். பரத்தைமையில் ஒருவரின் உடல் மற்றவரின் உடலோடு இணைகிறது. திருமுழுக்கு பெறுகின்ற நம்பிக்கையாளர் ஒருவர் அந்த நாள் முதல் ஆண்டவருக்கு உரியவராகிறார். ஆக, அவருடைய உடல் ஆண்டவரில் தங்குவதால் அவருடைய உடலும் ஆண்டவருக்கு உரியவராகின்றது. ஆக, ஒருவரில் இருக்கும் உடல் இன்னொருவரோடு இணைவது சால்பன்று. ஏனெனில், ஆண்டவரோடு இணைந்திருப்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல. அது உள்ளம் சார்ந்தது. ஆக, உள்ளத்தால் இணைந்திருக்கும் அவர் மற்ற ஒருவரோடு உடலால் இணையும்போது தன் உடலுக்கு எதிராக, தன் ஆண்டவருக்கு எதிராகவே பாவம் செய்கின்றார். மேலும், தன் உரிமையாளரை அவர் மறுதலிக்கின்றார். ஏனெனில் கடவுள் அவரை விலைகொடுத்து வாங்கியுள்ளார்.

'விலைகொடுத்து வாங்குதல்' என்பது பவுலின் காலத்தில் நிலவிய அடிமையை விலைக்கு வாங்கும் பொருளாதார பின்புலத்தில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். 'விலைகொடுத்து வாங்கப்படும் ஒருவர்' தன்னை வாங்கியவருக்கு மட்மே பிரமாணிக்கமாக இருக்க வேண்டும். எப்போது அவர் மற்ற ஒருவருக்குத் தலைவணங்கத் தொடங்குகிறாரோ, அப்போதே அவரின் பிரமாணிக்கம் பிளவுபடத் தொடங்குகிறது.

ஆக, ஆண்டவரில் தங்கும் ஒருவர் அவருக்காக, அவருடையவர் ஆகிவிடுகிறார்.

'ஆண்டவரில் தங்குதலுக்கு' கிடைக்கும் நன்மை இதுதான். நாம் ஆண்டவருக்கு உரியவர் ஆகிவிடுகின்றோம். மேலும், இந்த உடல் உயிர்த்தெழ வைக்கப்படும்.

நற்செய்தி வாசகம்: 'அவரோடு தங்குதல்'

தம் இரு சீடர்களுடன் ஒரு மாலை நேரம் நின்றுகொண்டிருக்கின்ற திருமுழுக்கு யோவான் அவ்வழியே கடந்து சென்ற இயேசுவைப் பார்த்து, தம் சீடர்களிடம் காட்டி, 'இதோ, கடவுளின் செம்மறி!' என்கிறார். 'அப்படி என்றால் என்ன?' என்றோ, 'அதுக்கு என்ன இப்போ?' என்றோ, 'நாங்க இப்ப என்ன செய்யணும்?' என்றோ கேட்காமல், அந்தச் செம்மறியாம் இயேசுவைப் பின்தொடர்கின்றனர் இரு சீடர்கள். அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு, 'என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்கின்றார் இயேசு. கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழி உலகில் யாரெல்லாம் சும்மா அல்லது மெதுவா நடந்துகொண்டிருக்கிறார்களோ, அவர்களைப் பார்த்து மற்றவர்கள் கேட்கும் கேள்வி, 'எதைத் தொலைத்துவிட்டாய்? என்ன தேடுகிறாய்?' என்பதுதான். யோவான் நற்செய்தியில் இயேசு பேசும் முதல் வார்த்தையே இதுதான்: 'என்ன தேடுகிறாய்?' இது முதல் ஏற்பாட்டில் கடவுள் ஆதாமைப் பார்த்துக் கேட்ட முதல் கேள்வியோடு ஒத்திருக்கிறது. மரங்களுக்கிடையே ஒளிந்திருக்கும் மனிதனைத் தேடி வருகின்ற கடவுள், ஆதாமைப் பார்த்து, 'நீ எங்கே இருக்கிறாய்?' என்கிறார். இங்கே சீடர்களின் பதிலும் கேள்வியாகவே இருக்கின்றது: 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' இயேசுவை அவர்கள் செம்மறி என அறிந்திருந்தாலும், 'ரபி' (போதகர்) என்றே அழைக்கின்றனர். இது அவர்களுடைய தங்குதலின் முதற்படி. இரண்டாவதாக, 'நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' என்ற அவர்களின் கேள்வியிலேயே, 'நாங்களும் உம்மோடு தங்க வேண்டும்' என்ற ஆசை ஒளிந்திருக்கிறது. 'அதோ, அங்கே' என்று பதில் சொல்லாமல், 'வந்து பாருங்கள்' என்று சொல்லி தம்மோடு அவர்களையும் சேர்த்துக்கொள்கின்றார். அவர் அழைத்த அந்த நொடியே இவர்கள் இயேசுவோடு தங்கத் தொடங்கிவிடுகின்றனர்.

அவர்கள் பெற்ற அனுபவம் என்ன என்பதை நற்செய்தியாளர் பதிவு செய்யவில்லை. ஆனால், 'மெசியாவைக் கண்டோம்' என்ற அந்த இரட்டைச் சொற்கள் அவர்களின் அனுபவம் முழுவதையும் பதிவு செய்கின்றது. 'அவரோடு' தங்குவதால், தங்கியதால் அவர்கள் பெற்ற அனுபவம் 'மெசியாவைக் காணுதல்.'

இவர்களின் 'மெசியாவைக் காணுதல்' அனுபவம் உடனடியாக அவர்களை அடுத்தவர்களை நோக்கி அனுப்புகிறது. அந்திரேயா தன் சகோதரர் பேதுருவைத் தேடிச் செல்கின்றார். தேடிச் சென்று தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அந்த அனுபவத்தின் ஆற்றல் என்னவென்றால் உடனடியாக அவரும் இயேசுவைத் தேடி வருகின்றார். உடனடியாக இயேசுவை நோக்கி அவர் வருவதற்கு அந்திரேயா எப்படிப்பட்ட அனுபவப் பகிர்வை செய்திருக்க வேண்டும்?

இவ்வாறாக,

முதல் வாசகத்தில், 'அவருக்காக தங்குதல்'. இதன் பலன், 'ஆண்டவரின் உடனிருப்பை பெறுதல்'
இரண்டாம் வாசகத்தில், 'அவரில் தங்குதல்'. இதன் பலன், 'ஆண்டவருக்கு உரியவராதல்'
மூன்றாம் வாசகத்தில், 'அவரோடு தங்குதல்.' இதன் பலன், 'ஆண்டவரின் மெசியாவைக் காணுதல்'

இந்த மூன்று 'தங்குதல்' நிகழ்வுகளும் இயல்பாக அல்லது தாமாக நடந்தேறவில்லை.

எப்படி ஒவ்வொரு பொங்குதலுக்கும் ஒரு விலை இருக்கிறதோ,
அப்படியே ஒவ்வொரு தங்குதலுக்கும் ஒரு விலை இருக்கிறது. எப்படி?

பானைக்குள் விழுகின்ற அரிசி தன்னோடு சேர்க்கப்படும் தண்ணீரின் கொதிநிலைக்குத் தன்னையே கையளிக்க வேண்டும். தன் இயல்பை சர்க்கரை, தேங்காய், மற்றும் சுக்கு ஆகியவற்றின் அனைத்து இயல்போடும் தன்னையே கரைத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் அது பொங்கலாக உருவாக முடியும்.

மேற்காணும் மூன்று தங்குதலுக்கும் கொடுக்கப்படும் விலை என்ன?

முதல் வாசகத்தில், 'அவருக்காக தங்குவதற்கு' சாமுவேல் 'தூக்கம் கலைதல் வேண்டும்.'
இரண்டாம் வாசகத்தில், 'அவரில் தங்குவதற்கு' நம்பிக்கையாளர் 'பரத்தைமை (பிரமாணிக்கமின்மை) கலைதல் வேண்டும்'
மூன்றாம் வாசகத்தில், 'அவரோடு தங்குவதற்கு' முதற்சீடர்கள் தங்களின் 'சொகுசான கூடுகளை விட்டு வெளியேற வேண்டும்'

இந்த மூன்று விலைகளை அவர்கள் கொடுத்தபின்தான் 'தங்குதல்' அனுபவம் பெறுகின்றனர்.

பானையில் அரிசி பொங்குதலோடு இணைந்து நம் மனங்களும், நம் தொழுவத்தின் மாடுகளும், காணும் பொங்கலில் நம் உறவுகளும் துள்ளும் இந்நன்னாளில்,

அவருக்காக,
அவரில்,
அவரோடு தங்குதலும் நடக்கட்டும்!

Thursday, January 11, 2018

நாலு பேரும், நாற்பது பேரும்

நாளைய (12 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 2:1-12)

நாலு பேரும், நாற்பது பேரும்

'நாலு பேரு நம்மள என்ன நினைப்பாங்க?'

'நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க! கவனமாக இரு!'

என்னும் சொல்லாடல்கள் நம் வழக்கில் உண்டு. இந்த நான்கு பேர் யார் என்பதற்கு விளக்கம் சொல்லும் கவியரசு கண்ணதாசன், நாம் இறந்தபின் நம்மைச் சுமந்து செல்லும் நாலு பேரே அவர்கள் என்கிறார். அதாவது, நம் இறுதியை நினைத்து ஒவ்வொரு நாளும் வாழ்ந்தால் நாம் நன்றாக வாழ்வோம் என்பது கண்ணதாசன் தரும் பொருள்.

நாளைய நற்செய்தியிலும் (காண். மாற்கு 2:1-12) ஒரு நாலு பேரை நாம் பார்க்கிறோம்.

முடக்குவாதமுற்ற ஒருவரை இந்த நான்கு பேர் இயேசுவிடம் தூக்கிக்கொண்டு வருகின்றனர். இவர்கள் என்னை ஆச்சர்யப்பட வைக்கிறார்கள். எப்படி?

முடக்குவாதமுற்ற நபர் விண்ணப்பம் செய்யாமலேயே இவர்கள் அவர்மேல் அக்கறை கொண்டு அவரைத் தூக்கி வருகின்றனர். கட்டிலில் நான்கு பேர் சுமந்து வருவதைப் பார்த்தவர்கள் கண்டிப்பாக இவர்களைக் கேலி செய்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

மேலும், இயேசுவைச் சுற்றி கூட்டம் அமர்ந்திருந்தாலும் ஒரு மாற்று வழியை யோசிக்கின்றனர். யார் வீட்டுக் கூரையோ, இவர்கள் வேகமாக பிரித்து விடுகின்றனர். இயேசு போதனையை முடிக்கும் வரை காத்திருக்கும் பொறுமையும் இவர்களிடம் இல்லை. தாங்கள் நினைத்ததை தெளிவாகவும், வேகமாகவும் செய்து முடிக்கின்றனர்.

இந்த நான்கு பேருக்கு எதர்பதமாக அந்த வீட்டில் நாற்பது பேர் இருக்கின்றனர்.

முணுமுணுக்கின்றனர். கேள்வி கேட்கின்றனர். கடின உள்ளம் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் இயேசுவையோ, முடக்குவாதமுற்றவரையோ, தூக்கி வந்தவர்களையோ பாராட்டவில்லை. இவர்கள் பார்வை எல்லாம் எதிர்மறையாகவே இருக்கின்றது.

ஆக, ஒரே ஊரில், ஒரே குழுமத்தில், ஒரே சமூகத்தில் இரண்டு வகையான மக்களும் நம்மைச் சுற்றி இருக்கின்றார்கள்.

நாம் கூப்பிடாமலேயே நமக்கு உதவி செய்பவர்களும் இருக்கிறார்கள்.

நாம் கூப்பிடாமலேயே நமக்கு எதிரிகளாக வருபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், தனி மனிதர் என்ன செய்ய வேண்டும்?

'தன் கட்டிலைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு நடக்க வேண்டும்'

ஆக, குழுமம் என்பது நாம் உயரம் தாண்டுதல் விளையாட்டில் பிடித்திருக்கும் குச்சி போன்றது. குச்சியைப் பிடித்துக்கொண்டே இருந்தால் நாம் அந்தப் பக்கம் தாண்ட முடியாது. குச்சியை விட வேண்டிய இடத்தில் விட்டு அடுத்த கட்டத்திற்கு நகல வேண்டும்.

இன்று நான் என் குச்சியை விட்டுவிட தயரா?

குழுமத்தில் நான் யார்? நான்கில் ஒருவரா? நாற்பதில் ஒருவரா?

நீர் விரும்பினால்

நாளைய (11 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 1:40-45)

நீர் விரும்பினால்

'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்!'

'நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக!'

'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்!'

'ஆனால் அவர் இந்தச் செய்தியை எல்லாரிடமும் சொன்னார்!'

(காண்க மாற்கு 1:40-45)

ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் என்று அழைக்கப்படும் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா என்னும் மூன்று நற்செய்தியாளர்களும் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவை நாடி நலம் நாடும் நிகழ்வை எழுதுகின்றனர்.

'மிரகிள் ஸ்டோரிஸ்' என்று சொல்லப்படும் 'அற்புதங்கள் அல்லது அறிகுறிகள்' இயேசுவின் வாழ்விலும் அவரது பணியிலும் மிக முக்கியமானதொன்றாக இருக்கிறது. ஒருவர் மற்றவருக்கு நலம் கொடுக்க முடியுமா? நலம் கொடுப்பவர் யார்? மருத்துவரா? போதகரா? கடவுளா? என நாம் எதிர் கேள்விகளையும் எழுப்பலாம். 'நலம் கொடுப்பது' என்பது இயேசு மட்டும் செய்த நிகழ்வு அல்ல. இயேசுவின் சமகாலத்தில் வாழ்ந்த பலரும் நலம் கொடுக்கும் கொடை பெற்றிருந்ததாக வரலாற்று நூல்கள் சொல்கின்றன.

கடைசியில் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை தான்!

ஒரு சில செபக்கூட்டங்களின் இறுதியில் போதகர்கள் இத்தனை பேர் இந்த வியாதியிலிருந்து இன்று விடுதலை பெற்றிருக்கிறார்கள். இத்தனை பேரின் உடல் வாதை, உள்ள வாதை ஆறுகின்றது என்றெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன். என் நண்பர் ஒருவருக்கே அப்படி குணமானதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதை நிரூபிக்க முடியுமா என்றும் தெரியவில்லை! இது எப்படி நடக்கிறது என்றும் புரியவில்லை.

ஆக, இந்த மூளை சார்ந்த ஆராய்ச்சியை விட்டுவிட்டு நாளைய நற்செய்தியை பார்க்க விழைவோம்.

தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். லேவியர் நூலின் பரிந்துரைப்படி தொழுநோயாளர்கள் இருக்க வேண்டிய இடம் ஊருக்கு வெளியே. இயேசுவைச் சந்திக்கிறார் என்றால் ஒன்று இயேசு ஊருக்கு வெளியே இருந்திருக்க வேண்டும். அல்லது இயேசுவைச் சுற்றி யாரும் இல்லாத நேரத்தில் இயேசுவை அணுகி வந்திருக்க வேண்டும். இயேசுவின் பணிவாழ்வில் அவர் தனியாக இருந்தது என்னவோ செபிக்கும் வேளையில் மட்டும் தான். எது எப்படியோ, நம்ம நண்பர் இயேசுவைத் தனியாகப் பார்த்துவிட்டார். சந்தித்தும் விட்டார்.

'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்!'

நம் நண்பரின் அப்பீல் கொஞ்சம் யோசிச்க வைக்கிறது. 'என் நோயைக் குணமாக்குங்க!' என்று கேட்டிருக்கலாம். அல்லது, 'என் மேல் இரக்கம் வையும்!' என்று கேட்டிருக்கலாம்.

இரண்டு மோடல் வெர்ப்களை பயன்படுத்துகின்றார் நண்பர்: 'டு யு வில்? இஃப் யு வில், யு கேன்.'

இறையியலில் தியோடிசி என்று ஒரு ஏரியா உண்டு. அதாவது கடவுளுக்காக வாதிடுவது. அங்கே கடவுளைப் பற்றி வைக்கப்படும் கேள்வி இதுதான்: கடவுள் எல்லாம் வல்லவராயிருந்தால் எதற்காக அவரால் தீமையை அழிக்க முடியவில்லை? கடவுள் நிறைவான அன்பானவராயிருந்தால் எதற்காக தீமையை நமக்குத் தர விரும்புகிறார்? முதல் கேள்வியில் 'கேன்', இரண்டாவது கேள்வியில் 'வில்' அடங்கியுள்ளது.

'விருப்பம்' என்பதற்காக மாற்கு பயன்படுத்தும் 'தெலோ' என்ற சொல் அவருடைய நற்செய்தியில் மூன்று இடங்களில் உள்ளது: ஒன்று, தொழுநோயாளர் இயேசுவிடம் கேட்பது, இரண்டு, ஏரோது நடனமாடிய சலோமியிடம் கேட்பது, மூன்று, இயேசு கெத்சமேனித் தோட்டத்தில் தன் தந்தையிடம் கேட்பது.

இயேசுவின் வார்த்தை தொழுநோயாளர் சொன்ன வார்த்தைகளின் மறு வாக்கிய அமைப்பாக இல்லை. 'நான் விரும்புகிறேன். என்னால் உன்னைக் குணமாக்க முடியும்!' என்று சொல்லாமல், 'விரும்புகிறேன்! குணமாகு!' என்கிறார்.

இயேசுவின் செயலும் இங்கே கவனிக்கத்தக்கது:

பரிவு கொண்டு, கையை நீட்டி, தொட்டு என்று மூன்று வார்த்தைகளில் வர்ணிக்கின்றார் மாற்கு.

உள்ளத்தில் தொடரும் இரக்கம், கை வழியே நீண்டு நம் நண்பரைத் தொடுகிறது.

'கையை நீட்டுதல்' என்பதற்கு விவிலியத்தில் 'தன் வலிமையைக் காட்டுதல்' என்பது பொருள். 'உம்மால் முடியும்' என்ற நம் நண்பரின் வார்த்தையை வெறும் கையை நீட்டி உறுதி செய்கின்றார் இயேசு. மோசே கையை நீட்ட செங்கடல் பிரிகின்றது. யோசுவா கையை நீட்ட போரில் வெற்றி கிடைக்கிறது. இயேசு கையை நீட்ட தொழுநோய் நீங்குகிறது.

'நீ இதைப்பற்றி யாரிடமும் சொல்லாதே!' என்று நண்பரிடம் சொல்கின்றார் இயேசு. கிரேக்கத்தில் இந்த இடத்தில் கட்டளையைக் காட்டும் 'இம்பரடிவ்' பயன்படுத்தப்படவில்லை. மாறாக, சப்ஜங்டிவ் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக, இந்த சப்ஜங்டிவை வைத்தே வாசகர் சொல்லி விடலாம். நம் நண்பர் இயேசுவின் கட்டளையை மீறப்போகின்றார் என்று.

கடவுள் கூட தன்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறார் போல. ஆனா, இன்னைக்கு நாம தான் கடவுளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

கடவுள் என்ற கோட்பாடு 'கான்செப்ட்', 'இன்ஸ்டிடியூசன்' என்ற இரண்டில் அடங்கியுள்ளது.  தனிப்பட்ட நம்பிக்கை என்பது கான்செப்ட். ஆனால், நான் சார்ந்திருக்கும் கத்தோலிக்கத் திருச்சபை என்பது நிறுவனம். சில நேரங்களில் நிறுவனம் தன் ஆதிக்கத்தைத் தக்கவைப்பதற்காக, 'கான்செப்டில்' கூட மாற்றம் செய்ய ஆரம்பித்து விடுகிறது. இன்று ஒரு மதத்திற்கும், மற்ற மதத்திற்கும் சண்டை என்றாலோ, அல்லது ஒரே மதத்திற்குள் இருக்கும் குழுக்களுக்குள் சண்டை என்றாலோ அங்கே 'கான்செப்ட்கள்' மோதிக்கொள்வதில்லை. நிறுவனங்களே மோதிக் கொள்கின்றன.

'வேண்டாம்!' என்று சொன்னாதான் நம்ம ஆட்கள் செய்வாங்க என்பதுமாதிரி, நம்ம நண்பரும் போய் எல்லாரிடமும் சொல்லி விடுகின்றார்.

கடைசியில் வருவதுதான் டுவிஸ்ட்.

அதாவது தொழுநோயாளராய் இருந்த நண்பர் கடைசியில் இயேசுவைத் தொழுநோயாளராக்கிவிட்டார். அதாவது, ஊருக்குள் நுழைய முடியாதபடி செய்துவிட்டார்.

எல்லாருக்கும் தன்னைப் பற்றி தெரிந்தால் நல்லதுதானே. எதற்காக இயேசு இந்த எளிதான பப்ளிசிட்டியைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை? எல்லாரும் நலம் பெற்றால் நல்லது தானே! எல்லாருக்கும் அவர் நலம் கொடுத்திருக்கலாமே?

கடவுளைப் போல இந்தக் கேள்விகளுக்கும் பதிலில்லை!

Tuesday, January 9, 2018

அவர்கள் அவரைப் பற்றி

நாளைய (10 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 1:29-39)

அவர்கள் அவரைப் பற்றி

'அக்காலத்தில் இயேசுவும், சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.'
(காண்க மாற்கு 1:29-39)

'உடனே அவர்கள் அதைப்பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்'

ஒரு சின்ன திருத்தம். சரியான மொழிபெயர்ப்பு:

'உடனே அவர்கள் இயேசுவிடம் அவரைப் பற்றிச் சொன்னார்கள்'

தகவல் தொடர்பு என்று நாம் சொல்லும் போது அதில் மூவர் இடம் பெறுகின்றனர்: பேசுபவர், கேட்பவர் மற்றும் பேசப்படுபவர். அல்லது நான், நீ மற்றும் அவர் என்றும் சொல்லலாம்.

இந்த வரியை வைத்துப் பார்த்தால், பேசுபவர் 'அவர்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அவர்கள் சீமோன் மற்றும் அந்திரேயாவாக இருக்கலாம். அல்லது அவர்கள் சொல்லத் தயங்கினார்கள் என வைத்துக் கொள்வோம். ஏன்னா! நம்ம வீட்டுக்கு யாராவது புதுசா வந்தா அவரிடம் நம்ம வீட்டுல உள்ள நல்லதத்தான் காட்டுவோமே தவிர, அவருக்கு உடம்பு சரியில்லை. இவரு ஆஸ்பத்திரியல இருக்கார் என்று நாம் சொல்வதில்லை. அப்படி ஒருவேளை சொல்வதற்கு வீட்டார் தயங்க, யாக்கோபும், யோவானும் இயேசுவிடம் சொல்லியிருக்கலாம். அல்லது சீமோனின் வீட்டின் பணியாளர்கள் சொல்லியிருக்கலாம். கப்பர்நாகுமிற்குச் சென்றால் இன்றும் சீமோனின் வீட்டைப் பார்க்கலாம். அந்தக் காலத்திலேயே மூன்று அடுக்குகளாகக் கட்டப்பட்ட வீடு. கண்டிப்பாக பணியாளாகள் இல்லாமல் அந்த வீட்டைப் பராமரித்திருக்க முடியாது. அல்லது சீமோன் மற்றும் அந்திரேயாவின் மனைவிமார்கள் சொல்லியிருக்கலாம். கூட்டுக்குடும்பம் இருந்திருக்கும் வாய்ப்பும் அதிகம். நற்செய்தியாளர் ஏன் அந்த 'அவர்கள்' யாரென்பதை மொட்டையாக எழுதி வைக்கின்றார்? இயேசுவிடம் பேசுவதற்கு அவர், இவர் தான் என்றிருக்க வேண்டுமல்ல. யார் வேண்டுமானாலும் பேசுவதற்கு முடியும், அந்த அளவிற்கு எளிதாகப் பழகக் கூடியவர் என்பதைக் காட்டுவதற்காக ஒரு வேளை மாற்கு 'அவர்கள்' என்னும் அவர்களைப் பற்றி எழுதாமல் விட்டிருக்கலாம்.

'சீமோனின் மாமியார்' தான் பேசப்படும் அவர். அவர்தான் பேசுபொருள்.

இந்த வரி நமக்குச் சொல்வது மூன்று:

அ. கடவுளிடம் நாம் மற்றவர்களைப் பற்றிப் பேச வேண்டும். நாம் கடவுளோடு பேசும் உரையாடலை அல்லது செபிக்கும் செபங்களை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் 'நான், எனது, எனக்கு' என்று தான் இருக்கும். கொஞ்சம் விரிந்தால் 'என் குடும்பம், எனது குடும்பத்திற்கு' என்று இருக்கும். இதை விடுத்து நாம் அவ்வளவாக யாரைப் பற்றியும் கடவுளிடம் பேசி விடுவதில்லை. இதை நாம் வேண்டுமென்று செய்கிறோம் என்று சொல்ல முடியாது. நம் சிந்தனை சில நேரங்களில் குறுகியே கிடக்கிறது. இன்றைக்கு ஒரு சின்ன முயற்சியாக நாம் செபம் செய்யும் போது நமக்கு சம்பந்தமில்லாத யாரைப் பற்றியாவது பேசிப் பார்க்கலாமே! நாம் பஸ்சில் பயணம் செய்த போது நமக்கு சில்லறை மறுத்த கண்டக்டர், ஆனந்த விகடன் வாங்கும் போது யார் மேலோ உள்ள எரிச்சலை நம்மேல் காட்டிய புத்தகக் கடைக்காரர், நாம் முக்கியமான வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த போது நம்மை அலைபேசியில் அழைத்து எங்க பேங்க்ல ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கிறீங்களா என்று கேட்ட ஒரு மாலா அல்லது திவ்யா அல்லது ப்ரியா. 'ஒரு இளனி வெட்டுங்கண்ணே!' என்று நாம் சாலையில் கண்ட இளநீர் விற்பவர். நம்மைப் பற்றி முன்பின் தெரியாது என்றாலும் நம் வீட்டின் முகவரியை கையில் வைத்துக் கொண்டு தேடும் கூரியர் பாய். இப்படி யாராவது முகம் தெரியாத ஒருவரைப் பற்றி கடவுளிடம் இன்று நாம் பேசலாமே!

ஆ. இயேசு கேட்காமல் அவர்கள் சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறீர்களா? இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், இயேசு வாழ்ந்த காலத்தின் யூத சமூகம் பக்கா ஆணாதிக்க சமூகம். ஆண்கள் மட்டும் தான் மனிதர்கள் என்று கருதப்பட்டனர். பெண்கள் வெறும் குழந்தை பெற்றுத் தரும் இயந்திரங்களாக மட்டுமே பயன்படுத்தினார்கள். இயேசுவின் சமகாலத்துக் கிரேக்கர்கள் உடலுறவு இன்பத்திற்காக பெண்களைப் பயன்படுத்துவதை இழுக்கு எனக் கருதி, ஆண்களைப் பயன்படுத்தியதை பிளேட்டோ, அரிஸ்டாட்டில், பிளைனி, யோசேப்புஸ் போன்றவர்கள் புத்தகங்களில் வாசிக்கலாம். ஆக, பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர்கள். யார் இருக்கிறார்கள் என்பதை விடுத்து, யார் இல்லை என்பதைத் தான் கடவுளைப் பார்க்கின்றார். இதுதான் இருக்கின்ற 99 ஆடுகளை விடுத்து, காணாமற்போன ஆட்டைத் தேடுவது. இயேசு தான் போதித்ததையே வாழ்ந்து காட்டுகிறார். 'எங்க அவங்களக் காணோம்?' என்று தேடுகிறார் இயேசு. இன்றைக்கு நாம் இருக்கின்றவர்களைத் தான் தேடுகிறோம். இல்லாதவர்கள் இல்லாதவர்களாக மறைந்து கொண்டே போகின்றனர். இன்றைக்கு நம் தேடல் எப்படி இருக்கிறது? என்று பார்க்கலாம். நீங்க ஒரு வீட்டுக்குப் போறீங்க. நீங்க தேடிப்போன ஆளையும் பார்க்குறீங்க. அந்த நேரத்தில் அந்த வீட்டில் இல்லாமல் இருக்கும் அவருடைய பையனைப் பற்றி விசாரியுங்களேன். அந்தப் பையன் வீட்டிற்கு வந்தவுடன் அவனுடைய பெற்றோர், 'டேய்! உன்னைய ஃபாதர் எங்கனு கேட்டார்டா!' அப்படின்னு சொன்னா, அவன் அப்படியே உள்ளுக்குள் துள்ளிக் குதிப்பான். 'நம்மை யாரோ தேடுகிறார்!' என்ற உணர்வே நம்மில் முழு உற்சாகம் கொண்டு வரும்.

இ. யார்கிட்ட எதைச் சொல்லணுமோ, அவர்கிட்ட அதைச் சொல்ல வேண்டும். கேட்பவரும் தனக்குத் தேவையில்லாத இன்ஃபர்மேஷன் தன்னிடம் வரும்போது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்து விட வேண்டும். இயேசுவுக்கு மாற்கு நற்செய்தியின் படி இதுதான் முதல் அற்புதம். இதற்கு முன் தொழுகைக்கூடத்தில் அவர் பேயை ஓட்டுகிறார் (காண். மாற்கு 1:21-28). ஆனால், அது அவருடைய போதனையின் அறிகுறியாக மட்டுமே இருக்கிறது. நம்மிடம் மற்றவரைப் பற்றி ஒரு செய்தி சொல்லப்படுகிறது என்றால் அவருக்குத் தேவையானதைச் செய்ய நாம் தயாராக இருந்தால் மட்டுமே அதைப் பற்றிக் கேட்க வேண்டும். வெறும் பொழுதுபோக்கிற்காகவும், கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது என்பதற்காகவும் மற்றவர்களைப் பற்றிய பேச்சில் நாம் ஆர்வம் காட்டக் கூடாது. அதை நாம் இயேசுவின் உடனடிச் செயலில் பார்க்கிறோம். மாமியாரைப் பற்றிச் சொல்லப்பட்டவுடன் உடனே செயலில் இறங்குகிறார். 'அப்படியா! காய்ச்சலா? எத்தனை நாளா? கவனமா இருக்க வேண்டாமா? அங்க இங்கனு ஏன் அலையுறீங்க! மருந்து ஏதாவது எடுத்தீங்களா?' என்று எதிர்மறையாகக் கேட்கவோ, 'ஐயயோ! காய்ச்சலா! நல்லாப் பாருங்க! எங்க பெரியப்பா ஒருவர் இப்படித்தான் வெறும் காய்ச்சல்னு நினைச்சாரு. ஆனா, அதுவே அவருடைய உயிரை வாங்கிடுச்சு!' என்று பயமுறுத்தவோ இல்லை. உடனடி நிவாரணம் தருகிறார் இயேசு.

'உடனே அவர்கள் அவரிடம் அவரைப் பற்றி; சொன்னார்கள்!'

உமக்கு இங்கு என்ன வேலை?

நாளைய (9 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 1:21-28)

உமக்கு இங்கு என்ன வேலை?

திருவருகைக்காலம் மற்றும் கிறிஸ்து பிறப்பு காலம் முடிந்து திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலத்திற்குள் அடியெடுத்து வைக்கின்றோம்.

மேற்காணும் இரண்டு காலங்களில் பெற்ற அருள்வரங்களை அசைபோடும் காலம் இது.

நாளைய நற்செய்தியில் மாற்கு நற்செய்தியாளரின் பதிவின்படி இயேசு தன் முதல் அறிகுறியை நிகழ்த்துகின்றார். இந்த அறிகுறியின் வழியாக (அ) இயேசு தீய ஆவியின் மேல் அதிகாரம் கொண்டுள்ளவர் என்றும், (ஆ) அவரின் போதனை மற்றவர்களின் போதனையைவிட மாறுபட்டது எனவும் கண்டுகொள்கின்றனர் மக்கள்.

நாளைய நற்செய்தியில் இயேசு சந்திக்கும் தீய ஆவியின் கேள்வியை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

'நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை?'

'இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை?' என்று கேட்பது போல இருக்கிறது பேய்க்குட்டியின் இந்தக் கேள்வி.

இந்தக் கேள்வி இருபுறங்களைக் கொண்டது: ஒரு புறத்தில், நாம் மற்றவரை நோக்கி இந்தக் கேள்வியைக் கேட்கும்போது, ஒருவர் தான் இருக்கக் கூடாத இடத்தில் இருப்பதை சுட்டிக்காட்ட இது பயன்படுகிறது. மற்றொரு புறத்தில், நாம் நம்மை நோக்கியே கேட்கும்போது, நான் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறேனா என்று தன்ஆய்வு செய்து பார்க்க நம்மை அழைக்கிறது.

ஆவியின் கேள்வி முதல் பொருளைக் கொண்டதாக இருக்கிறது. இயேசுவின் பிரசன்னம் ஆவியின் பிரசன்னத்துக்கு முரணாக இருக்கிறது. 'நாங்க எல்லாம் இங்க டிரஸ் இல்லாம இருக்கோம். நீங்க மட்டும் ஏன் டிரஸ் போட்றுக்கீங்க?' எனக் கேட்கிறது தீய ஆவி.

'வாயை மூடு. இவரை விட்டு வெளியே போ' என அதட்டுகின்றார் இயேசு.

'நான் இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறேன். நீதான் இருக்கக் கூடாத இடத்தில் இருக்கிறாய்!' என்று சொல்லி ஆவியை விரட்டுகின்றார் இயேசு.

இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியது இல்லாமல் இருப்பதும்,
இருக்கக் கூடாத இடத்தில் இருக்கக் கூடாதது இருப்பதும் சால்பன்று.
நம் வாழ்வில்.

Sunday, January 7, 2018

ஆண்டவரின் திருமுழுக்கு

ஆண்டவரின் திருமுழுக்கு

நாளை ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

பாஸ்டர் எக்ஸ் மற்றும் பாஸ்டர் ஒய், நம்மைக் குழப்பும் பல கேள்விகளில் ஒன்று: 'நீங்க முழுக்கு ஞானஸ்நானம் பெற்றவரா?' அல்லது 'நீங்க ஆவி அபிஷேகம் செய்யப்பெற்றவரா?' 'இல்லை. நாங்க குழந்தைகளா இருக்கும்போதே எங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துட்டாங்க!' என்று நாம் குழந்தைத்தனமா பதில் சொன்னாலும், அவர்கள் நம்மை விட மாட்டார்கள். இயேசுவே 30 வயதில்தான் திருமுழுக்கு பெறுகிறார் என்றால், நாம் ஏன் குழந்தைகளாக இருக்கும்போதே திருமுழுக்கு பெறுகின்றோம்? மேலும், நீரில் அமிழ்த்துவதற்குப் பதிலாக, ஏன் நீர் நம் தலைமேல் ஊற்றப்படுகிறது? எந்த திருமுழுக்கு சரியானது?

மூன்று காரணங்கள்:

அ. இயேசுவின் காலத்தில் திருமுழுக்கு யோவான் கொடுத்த திருமுழுக்கு மனமாற்றத்திற்கான திருமுழுக்கு. அத்திருமுழுக்கு இயேசுவிற்கு தேவையில்லை. பாவம் இல்லாத ஒருவருக்கு பாவமன்னிப்பிற்கான திருமுழுக்கு எதற்கு? இயேசுவைப் பொறுத்த அளவில் திருமுழுக்கு என்பது தொடக்கம். எதற்கான தொடக்கம்? பணிவாழ்வுக்கான தொடக்கம். ஒன்று, யோர்தான் நதியை கடந்ததால் தான் பழைய இஸ்ரயேல், வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைந்தது. அதேபோல, புதிய இஸ்ரயேலின் தலைமகனாம் இயேசுவும் யோர்தானுக்குள் இறங்கித்தான் வாக்களிக்கப்பட்ட நாடாம் விண்ணரசின் செய்தியை அறிவிக்க முடியும். பழைய இஸ்ரயேலின் தலைவர் யோசுவா. புதிய இஸ்ரயேலின் தலைவரின் பெயரும் அதுவே. இரண்டு, திருமுழுக்கின்போது தந்தையின் குரல் கேட்கிறது. லூக்கா நற்செய்தியில் இது இயேசுவுக்கு மட்டுமே கேட்கும். இயேசுவின் பணிவாழ்வை தந்தையாகிய கடவுளே தொடங்கி வைக்கிறார்.

ஆ. விருத்தசேதனமா? திருமுழுக்கா? இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் திருத்தூதர்களின் போதனையால் வேகமாக வளர்ந்த திருஅவையில் ஒரு பெரிய அடையாள சிக்கல் வருகிறது. புதிய நம்பிக்கையை ஏற்றுக்கொள்பவர்களை அடையாளப்படுத்துவது விருத்தசேதனமா? அல்லது திருமுழுக்கா? யூத மதத்திலிருந்து தங்களை முற்றிலும் வேறுபடுத்திக் காட்ட விழைந்த தொடக்க கிறித்தவர்கள் திருமுழுக்கை அடையாளமாக ஏற்றுக்கொள்கின்றனர்.
இ. சமய சடங்கு. ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தையை, ஒரு சமூகத்தில் அங்கமாக மாற்றும் தொடக்கச் சடங்கே திருமுழுக்கு. பிராமண மரபில் பூணூல் அணிதல், நாட்டார் வழக்கியல் மரபில் மொட்டை எடுத்தல் போன்ற சடங்குகள் வழியே, குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டு, அந்த குழந்தை ஒரு சமயத்தின், சமூகத்தின் அங்கமாக மாறுகிறார். திருமுழுக்கின் வழியாக நாம் திருச்சபையின் உறுப்பினராகின்றோம். குழந்தை திருமுழுக்கின் அவசியம் பற்றி எழுதுகின்ற அகுஸ்தினாரும், ஒரு குழந்தை திருமுழுக்கின் வழியாக கடவுளின் குடும்பத்தில் மறுபிறப்பு எடுக்கிறது என எழுதுகின்றார். மேலும், திருமுழுக்கு சடங்கின்போது நம்மேல் பூசப்படும் கிறிஸ்மா தைலத்தால் நாமும் தூய ஆவியானவரைப் பெற்றுக்கொள்கிறோம்.

நிற்க.

திருமுழுக்கு அனுபவம் ஆண்டவர் நம்மை ஒரு நிமிடம் நிறுத்தி நம் வாழ்வின் போக்கை மாற்றும் அனுபவம்.

எப்படி?

தான் புதிதாக வாங்கிய ஆடி காரின் மேல் அந்த இளைஞனுக்கு மிகவும் விருப்பம். அதைத் தன் குழந்தைபோலப் பாதுகாத்து வந்தான். ஒரு சிறு கோடு கூட அதில் விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தான். ஒரு விடுமுறை நாள் அன்று காட்டுப்பகுதிக்குச் சென்று வரலாம் என்று காரில் புறப்படுகிறான். நகரத்தை விட்டு வெளியே வந்தவுடன் பாதை அகலமாகவும், போக்குவரத்து இன்றியும் இருக்கின்றது. தன் காரின் முழு வேகத்தையும் இன்று அனுபவிக்கலாம் என்று எண்ணி மிக வேகமாகப் பயணமாகிறான். திடீரென்று 'டமார்' என்று சத்தம். யாரோ காரில் எதையோ எறிந்தது போலத் தெரிய காரை நிறுத்திவிட்டு இறங்கிப் பார்க்கிறான். அங்கே ஒரு சிறுவன் நின்று கொண்டிருக்கிறான். 'அந்தச் சிறுவன் தான் செங்கலால் எறிந்திருக்க வேண்டும்' என்று எண்ணிக் கோபத்துடன் அவனை அடிக்க ஓடுகிறான். சிறுவன் இளைஞனின் காலைப் பிடித்துக் கொண்டு 'அண்ணா! மன்னித்து விடுங்கள். உங்கள் காரைச் சேதப்படுத்த வேண்டும் என எண்ணி நான் செங்கல் எறியவில்லை. கால் நடக்க முடியாத என் தம்பியை வீல் சேரில் வைத்துத் தள்ளிக்கொண்டு பள்ளிக்குச் செல்கின்றேன். இந்தப் பள்ளம் தட்டி வீல்சேர் கவிழ்ந்து விட்டது. என்னால் தூக்க முடியவில்லை. வலி தாங்காமல் என் தம்பியும் அழுதுகொண்டிருக்கிறான். எத்தனையோ கார்களை நிறுத்திப் பார்த்தேன். யாருமே நிற்கவில்;லை. ஆகையால் தான் செங்கலால் எறிந்தேன்.' அந்த இளைஞன் விழுந்து கிடந்த வீல் சேரைத் தூக்கிநிறுத்தி தம்பியைiயும் அமரச் செய்கின்றான். அவர்களைத் தன் காரிலேயே அமரச் செய்து அவர்களின் பள்ளிக்கூடத்தில் அவர்களை விட்டுவிட்டுத் தன் வீடு திரும்புகிறான். செங்கல் பட்டு கோடு விழுந்த காரின் முன்பகுதியை அப்படியே விட்டுவிடுகிறான். ஒவ்வொரு முறை அதைப் பார்க்கும்போதும் தான் தன் வேகத்தைக் குறைத்து மற்றவர்களைப் பார்க்க வேண்டும் என நினைத்துக் கொள்கிறான். வாழ்க்கை ஓட்டத்தில் நாம் வேகமாகச் செல்லும்போது நாம் நின்று நம்மைச் சுற்றிப் பார்க்காவிட்டால் கடவுள்தான் செங்கல் எறிந்து நம்மை நிறுத்த வேண்டும்!


Friday, January 5, 2018

யோர்தான் ஆற்றில்

நாளைய (6 ஜனவரி 2018) நற்செய்தி (மாற் 1:7-11)

யோர்தான் ஆற்றில்

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை வாசிக்கின்றோம். 'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று இயேசுவைப் பார்த்து சொல்லப்பட்ட வானக வார்த்தைகள் 'அடாப்ஷனிஸம்' என்ற தப்பறைக் கொள்கைக்கு வழிவகுத்தன. இந்தக் கொள்கை இயேசு கடவுளின் மகனாகப் பிறக்கவில்லை என்றும், திருமுழுக்கின்போது அவர் கடவுளால் அல்லது தந்தையால் தத்து எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றும் வரையறுக்கிறது.

திருமுழுக்கில் இயேசு கேட்ட இந்த வார்த்தைகள் அவருக்கு அடித்தள அனுபவத்தை கொடுக்கின்றன. அடித்தள அனுபவம் என்பது நம் வாழ்வின் போக்கையே மாற்றிவிடும் ஓர் அனுபவம்.

தான் கடவுளின் மகன் என்ற அனுபவமே ஒருவர் மற்றவரை சகோதரர் என்றழைக்க இயேசுவைத் தூண்டியிருக்கலாம்.

நம் திருமுழுக்கு நிகழ்வுகள் நமக்கு நினைவிருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.

ஆனால், ஏதாவது ஓர் அனுபவம் நம் வாழ்வின் அடித்தள அனுபவமாக இருக்கலாம் நமக்கு. அதை நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா?


Wednesday, January 3, 2018

என்னை உமக்கு எப்படித் தெரியும்?

நாளைய (5 சனவரி 2018) நற்செய்தி (யோவா 1:43-51)

என்னை உமக்கு எப்படித் தெரியும்?

நாளைய நற்செய்தி வாசகத்தில் உரையாடல் இயேசு - பிலிப்பு - நத்தனியேல் என்ற மூன்று கதைமாந்தர்களுக்கு இடையே இரண்டு நிகழ்வுகளாக அல்லது இரண்டு தளங்களில் நடக்கிறது.

'என்னை உமக்கு எப்படித் தெரியும்?' என மெய்சிலிர்க்கின்றார் நத்தனியேல்.

'நீ அமர்வது, நடப்பது, சிந்திப்பது, பேசுவது, உணர்வது, கேட்பது என அனைத்தும் நான் அறிவேன்' என எல்லாம் அறிந்தவராய், 'இதைவிட பெரியவற்றைக் காண்பீர்' என்கிறார் இயேசு.

என்னை உமக்கு எப்படித் தெரியும்?

ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே உள்ள உறவை வர்ணிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தை 'தெரிதல்.' 'தெரிதல்' என்றால் 'நெருக்கம்.'

நத்தனியேல் மற்றவர்களிடம் காட்டும் நெருக்கம் முற்சார்பு எண்ணம் கொண்டதாக இருக்கின்றது. ஆகையால்தான், 'நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?' என்று கேட்கின்றார்.

ஆனால், இயேசுவின் தெரிதல் அல்லது நெருக்கம் காணுதல், கேட்டல் ஆகியவற்றைக் கடந்ததாக இருக்கிறது. இந்த நெருக்கமே நத்தனியேலை சரணடையச் செய்கிறது.

இன்று இறைவன் மற்றும் மற்றவர்மேல் காட்டும் என் தெரிதல், நெருக்கம் எப்படி இருக்கிறது? எந்தத் தளத்தில் அது கட்டப்பட்டிருக்கிறது?

Tuesday, January 2, 2018

இவர் யாரென்று தெரியாமலிருந்தது

நாளைய (3 ஜனவரி 2018) நற்செய்தி (யோவா 1:29-34)

இவர் யாரென்று தெரியாமலிருந்தது

நாளைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பற்றிச் சான்று பகர்கின்றார்.

'இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது' என தன் அறியாமையை இரண்டு முறை ஏற்றுக்கொள்கின்றார் திருமுழுக்கு யோவான்.

'யாரென்று தெரியாமல் இருந்த இவருக்கு இயேசு யார் என்று எப்படி தெரிந்தது?' - என்ற கேள்வி நம்முள் எழலாம். இந்தக் கேள்விக்கான விடை நற்செய்தி வாசகத்திலேயே இருக்கிறது. முதலில், திருமுழுக்கு யோவானை அனுப்பியவரின் வார்த்தைகள் இவரை யாரென்று இவருக்குச் சொல்கின்றன. இரண்டு, அவர் காண்கின்ற தூய ஆவி இறங்குகின்ற அடையாளம்.

தனக்குள் உள்ள வெளிப்படுத்துதல் பற்றியும், தனக்கு வெளியே நடக்கும் அடையாளம் பற்றியும் தெளிவாக இருக்கின்றார் யோவான். ஆகையால் அவர் மெசியாவை கடவுளின் ஆட்டுக்குட்டியாக அடையாளம் கண்டுகொள்கின்றார்.

எனக்கு ரோமில் இலத்தீன் கற்றுக்கொடுத்த பேராசிரியர் முதல் நாள் புதிய புத்தகத்தை எல்லார் கையிலும் கொடுத்துவிட்டு, 'இன்று எதிரிகள் போல தெரியும் இந்த புத்தகத்தின் பக்கங்கள் கோர்ஸ் முடியும்போது உங்களுக்கு நண்பர்களாக வேண்டும்' என்றார்.

நண்பர்களாக ஆக்கிக்கொண்டுவிட்டால் அவற்றை அடையாளம் கண்டுகொள்வது எளிது.
ஒருவரைத் தெரிந்துகொள்வதற்கு முதலில் அவரைப் பற்றிய அக்கறை தேவை. அது வந்துவிட்டால் தெரிந்துகொள்வதற்கான நேரமும், இடமும், சூழலும் தானே வந்துவிடும்.

இன்று இறைவனை நான் தெரிந்துகொள்ள அவருக்கான அக்கறை என்னிடம் இருக்கிறதா?

Monday, January 1, 2018

யோர்தான் ஆற்றுக்கு அக்கரை

நாளைய (2 ஜனவரி 2018) நற்செய்தி (யோவான் 1:19-28)

யோர்தான் ஆற்றுக்கு அக்கரை

மீட்பு வரலாற்றில் யோர்தான் ஆற்றுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று செங்கடலைக் கடந்து வந்த இஸ்ரயேல் மக்கள் மோசேயின் தலைமையிலிருந்து யோசுவாவின் வழிநடத்துதலுக்குட்பட்டு யோர்தான் ஆற்றைக் கடக்கின்றனர். யோர்தான் ஆறுதான் வாக்களிக்கப்பட்ட நாட்டின் எல்கை.

யோர்தான் நதி என்பது இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கை நிலையின் ஓர் உருவகமும் கூட.

இஸ்ரயேல் மக்களின் பழைய வாழ்க்கை நிலையை 'நதிக்கு' ஒப்பிடுகின்ற யோசுவா, 'இப்பொழுது ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் அவருக்கு ஊழியம் புரியுங்கள். நதிக்கு அப்பாலும், எகிப்திலும், உங்கள் மூதாதையர் பணிந்து வந்த தெய்வங்களை விட்டு விலகுங்கள் ... ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்' (யோசு 24:14-15) என்கிறார்.

ஆக, யோர்தான் நதி என்பது ஒருவர் தீர்க்கமான முடிவை எடுக்கின்ற இடம்: 'நீ யார் பக்கம்? ஆண்டவர் பக்கமா? அல்லது மாற்றுத் தெய்வத்தின் பக்கமா?'

இவற்றில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய முடியும். தேர்வு செய்ய வேண்டும்.

இரண்டும் வேண்டும் என்று சொல்வதும், இரண்டிற்கும் ஊழியம் செய்கிறேன் என்று சொல்வதும் ஏற்புடைமை அன்று.

மேலும், எவ்வாறு முதல் ஏற்பாட்டு யோசுவா இஸ்ரயேல் மக்களை வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்துச் சென்றாரோ, அப்படியே இரண்டாம் ஏற்பாட்டு யோசுவா ('இயேசு') மக்களை புதிய வாழ்விற்கு அழைத்துச் செல்கிறார். யோவான் அந்த மெசியா அல்லது யோசுவா அல்ல என்பதால் திருமுழுக்கு யோவானை ஆற்றின் அக்கரையிலே நிறுத்திவிடுகின்றார் நற்செய்தியாளர்.

நாம் இரண்டு கேள்விகள் கேட்போம் நம்மை:

அ. என் வாழ்வின் யோர்தானில் நான் எடுக்கும் முடிவு எது? நான் யாருக்கு ஊழியம் புரிகிறேன்? என் முடிவில் உறுதியாக இருக்கிறேனா?
ஆ. புதிய ஏற்பாட்டு யோசுவாவுடன் நான் ஆற்றுக்குள் இறங்க தயாரா?