Friday, May 8, 2020

கால்களில் தூசி

இன்றைய (9 மே 2020) முதல் வாசகம் (காண். திப 13:44-52)

கால்களில் தூசி

தொழுகைக்கூடத்தில் பவுல் நீண்ட உரையாற்றுகின்றார். இதைக் கேள்விப்பட்ட மக்கள் அடுத்த ஓய்வுநாளிலும் கூட ஆரம்பிக்கின்றனர்.

இது யூதத் தலைவர்களுக்குப் பொறாமையை வர வைக்கிறது.

பொறாமை - இது மிகவும் அழிக்க முடியாத தீ. அடுத்தவரை ஒரே நொடியில் அழித்துவிடுகின்ற தீ. ஆனால், கடவுளுக்கு அஞ்சுபவர் இதிலிருந்து தப்புவார் என்பதுதான் இன்றைய முதல் வாசகத்தின் பாடமாக இருக்கிறது.

யூதத் தலைவர்கள் தங்களைப் பழித்துரைப்பதைக் காண்கின்ற பவுலும் பர்னபாவும், 'நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம்' எனப் புறப்படுகின்றனர்.

இது ஒரு நல்ல வாழ்வியல் மேலாண்மை பாடம்.

பள்ளிக்கூடத்தில் நன்றாகப் பாடம் நடத்துகிறார் ஓர் ஆசிரியை. அவளுடைய இருப்பு கண்டு பொறாமை கொள்கின்ற மற்ற ஆசிரியர்கள் அவள்மேல் இல்லாதது பொல்லாதது சுமத்துகின்றனர். அந்த ஆசிரியை கீழ்வகுப்புக்கு மாற்றப்படுகிறாள். ஆனால், அவள் அழவில்லை. 'நான் அங்கே போகிறேன். இன்னும் சிறிய குழந்தைகளுக்கு என்னால் இன்னும் நன்றாகப் பாடம் சொல்லிக் கொடுக்க முடியும்' எனப் புறப்படுகிறாள்.

இதே செயலைத்தான் பவுலும் பர்னபாவும் செய்கின்றனர்.

பணியை நிறுத்திவிடவோ, தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிவிடவோ இல்லை.

வாழ்க்கை மிகப் பெரியது, உலகம் மிகப் பெரியது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

தங்களுடைய பழைய வாழ்வை அப்படியே முதுகுக்குப் பின் தூக்கி எறிந்துவிட்டு, புதிய வாழ்க்கையை, புதிய மக்களைத் தேடிப் புறப்படுகின்றனர்.

அதன் அடையாளமாக, 'தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியைத் தட்டிவிடுகின்றனர்.'

எனக்கு இங்கே ஒன்று ஆச்சர்யமாக இருக்கிறது?

நற்செய்தியை அறிவிப்பதால் பவுலுக்கும் பர்னபாவுக்கும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அவர்களுக்குக் கிடைத்ததெல்லாம் அவமானமும், பழிப்புரையும், அடிகளும்தான்.

அப்புறம் எப்படி அவர்களால் தொடர்ந்து பணி செய்ய முடிந்தது?

இறையனுபவம் பெற்றவர்கள் தாங்கள் ஓய்ந்திருக்க முடியாது என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா

அல்லது

கமாலியேல் தலைமைச் சங்கத்தில் சொன்னது போல,

'இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது' (காண். திப 5:39)

ஊதி அணைத்துவிட இறைப்பணி ஒன்றும் மெழுகுதிரி அல்ல, அது காட்டுத்தீ!

- என்று உணர்த்துகிறது இந்நிகழ்வு.

கடவுள் தன் பணியை மனிதர்கள் வழியாகத் தனக்கே செய்துகொள்கின்றார். மனிதர்கள் வெறும் கருவிகளே.

பவுலுக்கும் பர்னபாவுக்கும் தெரியும்: 'இவ்வுலகில் நடப்பவை எதுவும் தற்காலிகமாக, எதேச்சையாக நடப்பதில்லை. எல்லாம் திட்டமிட்டே நடக்கின்றன. நடக்கின்ற அனைத்திற்கும் காரணம் இருக்கிறது.'

ஆகையால், அவர்களின் வருகை இன்னொரு நகரத்தாருக்கு மகிழ்ச்சி தருகின்றது. அந்த மகிழ்ச்சியில் அவர்கள் தங்கள் துன்பங்களை மறந்துவிடுவார்களா?

இல்லை! இரண்டையுமே அவர்கள் மறப்பதில்லை! ஏனெனில், இது அவர்களின் பணி அல்ல!

2 comments:

  1. நற்செய்தியை அறிவித்ததால் பவுலுக்கும்,பர்னபாவுக்கும் கிடைத்ததெல்லாம் அவமானமும்,பழிப்புரையும்,அடிகளுமே எனினும் அவர்களைத்தொடர்ந்து அதைச்செய்ய ஊக்கியது “ இறையனுபவம்” என்கிறது இன்றையப்பதிவு.”அதை ஊதி அணைத்துவிட இறைப்பணி ஒன்றும் மெழுகுதிரி அல்ல....அது காட்டுத்தீ.”...அருமை!நபடப்பது எல்லாமே இறைவனின் திட்டப்படியே நடக்கிறது என்பது புரிந்துவிட்டால்...துன்பமோ..மகிழ்ச்சியோ எல்லாமே அவர்களுக்கு ஒன்றுதான்.
    “எதுவுமே எதேச்சையாக நடப்பதில்லை எனும் உணர்வு மட்டும் நமக்கு வந்துவிட்டால் நாம் செய்யும் அனைத்திலும் இறைவனின் திருவுளத்தையும்,அவரின் திருக்கரங்களையும் காண்போம்” என்று சொல்லும் ஒரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. இவ்வுலகில் நடப்பதை அனைத்தும் இறைவனின் அனுமதியோடு திட்டமிட்டே நடக்கின்றன என்ற ஆழ்ந்த கருத்தைத் தந்த தந்தைக்கு நன்றி.

    ReplyDelete