Tuesday, May 19, 2020

ஏதென்சில் பவுல்

இன்றைய (20 மே 2020) முதல் வாசகம் (திப 17:15,22 - 18:1)

ஏதென்சில் பவுல்

என்னுடைய இரண்டாம் ஆண்டு அருள்பணி நிலைப் பணிக்காக, மதுரை, ஞானஒளிவுபுரத்திற்கு உதவிப் பங்குந்தந்தையாகச் சென்றபோது, என்னை வழியனுப்பிய அருள்பணியாளர், 'மதுரை மறைமாவட்டத்தின் ஏதென்சுக்குச் செல்கிறாய். வாழ்த்துக்கள்' என்று சொல்லி வழியனுப்பினார்.

ஏன் அந்தப் பணித்தளத்தை அப்படி அழைக்கிறார்கள்?

ஏதென்ஸ் நகர மக்கள் எப்படிப்பட்டவர்கள்?

திப 17:19-20 அவர்களைப் பற்றிச் சொல்கிறது: பின்பு, அவர்கள் பவுலை அரயோப்பாகு என்னும் மன்றத்துக்கு அழைத்துக்கொண்டு போய், 'நீர் அளிக்கும் இந்தப் புதிய போதனையைப் பற்றி நாங்கள் அறியலாமா? நீர் எங்களுக்குச் சொல்வது கேட்கப் புதுமையாய் உள்ளதே! அவற்றின் பொருள் என்னவென்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்' என்றனர்.

மேலும், சிலர், 'இதைப் பற்றி நீர் மீண்டும் வந்து பேசும். கேட்போம்' என்றனர் (காண். திப 17:32).

கிரேக்க மெய்யியலின் தொட்டில் ஏதென்ஸ். சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்னும் மேற்கத்திய மெய்யியலின் பிதாமகன்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, உரையாற்றிய ஊர் ஏதென்ஸ்.

ஆக, ஏதென்ஸ் மக்கள் (1) நிறையக் கற்றவர்கள், (2) புதிய கருத்துக்களை வரவேற்பவர்கள், (3) ஆழ்ந்து கேட்பவர்கள், (4) நன்றாகப் பேசுபவர்களை உற்சாகப்படுத்தக்கூடியவர்கள், (5) மீண்டும் வரவேற்றுக் கேட்கும் எண்ணம் உடையவர்கள், மற்றும் (6) மாற்றத்தை அறிவுசார்நிலையில் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள்.

இந்த ஆறு பண்புகளும் நான் பணியாற்றிய ஞானஒளிவுபுரம் பங்குத்தளத்திற்கு பொருந்துவதால், இன்றும் அதை 'ஏதென்ஸ்' என அழைக்கலாம். இன்னும் ஒரு படிபோய், 'மதுரையின் ஏதென்ஸ் ஞானஒளிவுபுரம்' எனச் சொல்வதைவிட, 'கிரேக்கத்தின் ஞானஒளிவுபுரம் ஏதென்ஸ்' எனச் சொல்லலாம்! இல்லையா?

இங்கே, நாம் முதலில் ஏதென்ஸ் நகர மக்களிடமிருந்து மேற்காணும் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

தொடர்ந்து, பவுல் இன்று நமக்கு நிறைய பாடங்களைச் சொல்லித் தருகின்றார்:

(1) பவுலின் அறிவுத்திறன்

பவுலுக்கு எபிரேயம், அரமேயம், கிரேக்கம், சிரியம், மற்றும் இலத்தீன் தெரிந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், பவுலுக்குத் திருச்சட்டமும் யூத இறையியலும் அவரின் சம காலத்து மெய்யியல் சிந்தனைகளைகளும் நன்றாகத் தெரியும். இந்த அறிவுத்திறன் அவருக்கு நிறைய தன்மதிப்பையும் தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்கும். நாம் வாழ்வில் அறிந்துகொள்ளும் ஒவ்வொன்றும் இன்னொரு நாள் எங்கேயோ பயன்படும். ஆக, நமக்கு நடக்கும் அனைத்தும் ஏதோ ஒரு நோக்கத்திற்காகவே நடக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

(2) பவுலின் துணிச்சல்

பவுல் இங்கே தனிநபராக மக்கள் கூட்டத்தை, புதிய மக்கள் கூட்டத்தை எதிர்கொள்கின்றார். கடவுளின் துணை உள்ள ஒருவருக்கே இத்துணிச்சல் வரும். ஒவ்வொரு முறையும் நமக்கு இந்த அனுபவம் உண்டு. பேருந்தில் செல்லும்போது, திருமண விழாவிற்குச் செல்லும்போது, பணி மாற்றம் அடைந்து செல்லும்போது என நாம் ஒவ்வொரு முறையும் புதிய புதிய நபர்களைப் பார்க்கிறோம். பழகுகிறோம். உறவுகளை உருவாக்குகிறோம். பணிகளைச் சிறந்த முறையில் செய்கிறோம். காரணம், கடவுளின் உடனிருப்பு. இதை நாம் உணர்தல் அவசியம்.

(3) சமயோசிதப் புத்தி

எந்த நேரத்தில் எதை எப்படிச் சொல்ல வேண்டுமோ, செய்ய வேண்டுமோ, அந்த நேரத்தில் அதை அப்படிச் சொல்லும் பக்குவம். கூட்டத்தைப் பற்றிய அச்சமோ, புதிய இடத்தைப் பற்றிய கலக்கமோ இல்லாத பவுல், தன் கண்முன் நடக்கின்ற ஒன்றை அப்படியே எடுத்துப் பேசுகிறார். 'நீங்கள் அறியாத தெய்வத்துக்கு' என்று அங்கே இருந்த ஒரு பீடத்தை மையமாக வைத்து தொடங்குகிறார். என்ன ஆச்சர்யம்!

விளைவு,

மக்களின் மனத்தைக் கவர்கின்றார் பவுல்.

நற்செயல்: புதிய இடம், புதிய நபர், புதிய வேலை போன்ற எதார்த்தங்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்?

3 comments:

  1. “மதுரை மாவட்டத்தின் ஏதென்ஸ் ஞான ஒளிவுபுரம்”.....தந்தைக்கு நன்றிகள். கிரேக்கத்தின் நேர்மறைகுணங்கள் அனைத்தும் ஞான ஒளிவு பரத்தில் இருந்ததே “மதுரை மாவட்டத்தின் ஏதென்ஸ் ஞான ஒளிவுபுரம்” என அழைக்கப்படவும் காரணம் என்கிறார் தந்தை.இத்தனை பெருமைகளைக்கொண்ட ஞான ஒளிவுபுரத்தில் தன் இளமையின் ஆரம்பத்தைக்கழித்ததாலோ என்னவோ அத்தனை அறிவையும் ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துள்ளார் தந்தை.வாழ்த்துக்கள்! நாம் பார்க்கும்,கேட்கும் பல விடயங்கள் அறிவுத் திறன்....துணிச்சல்...சமயோசிதபுத்தி ....இவை சம்பந்தப்பட்டவை.உடனே நாம் கற்றுத்தேர உதவவில்லை எனினும் நாம் நம் பைகளில் சுமந்துசெல்லும் தண்ணீர் பாட்டில் போல எங்கோ...என்றோ உதவும் என்கிறார் தந்தை. இப்படிப்பட்டவர்கள் யாரையும் எளிதில் கவரும் சுபாவமுள்ளவர்கள் என்பது அவர்களின் கூடுதல் பெருமை.மதுரை ஞான ஒளிவுபரத்தின் புகழ்பாடும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!

    எதையுமே புதியது/ புதியவர் என்று ஒதுக்கி வைப்பின் பல நல்லவைகளை இழந்தவர்களாவோம்..நாமும் என்றோ..எங்கோ ஒருவருக்குப் புதியவராக
    இருந்தோம் என்பதை நினைவில் கொள்ளுதல் அவசியம்....

    ReplyDelete
  2. தந்தையே என்ன!!! ஞான ஒனிவுபுரம் பற்றி புகழ் பாடியிருக்கிறீர்கள். அனுபவித்ததை அப்படியே பதிவு செய்திருப்பது பாராட்டிற்குரியது.

    ReplyDelete
  3. "இனி கற்றல் சுகமே" என்ற வலைப்பூவின் வழி மிக அருமையான கருத்துக்களை ஆசிரியர்களாகிய எங்களுக்காக அளிக்கும் உங்களது புது முயற்சிக்கு பாராட்டு.பாராட்டுதல் சிறப்பு என்ற இன்றைய பதிவு அருமை. தந்தையே தாங்கள் சிறுவயதில் கற்றதை வாழ்வுக்குகிறீர்கள். பாராட்டு.வாழ்க

    ReplyDelete