Sunday, May 17, 2020

லீதியா

இன்றைய (18 மே 2020) முதல் வாசகம் (திப 16:11-15)

லீதியா

திருத்தூதர்களின் பணி ஒரு பக்கம் தொழுகைக்கூடங்களிலும், பிறசமய ஆலய வளாகங்களிலும் நடந்தாலும், மற்றொரு பக்கம் ஆற்றங்கரைகளிலும், காற்றின் தூசியிலும் நடந்தேறுகிறது.

பிலிப்பி நகருக்கு வெளியே இருந்த ஆற்றங்கரை ஒன்றில் பவுல் போதிக்கும் நிகழ்வை நாம் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். ஆற்றங்கரையில் இருந்த பெண்கள் கூட்டம் அவரின் போதனைக்குச் செவிகொடுக்கிறது. துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள், குளித்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர்கள், ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் வீட்டின் பெரிய பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தவர்கள், குளிக்கவா-வேண்டமா என ஆற்றையும், கரையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் என எல்லாரும் பவுலின் குரலுக்குச் செவிகொடுத்திருப்பார்கள்.

இவர்களில் 'லீதியா' என்ற பெண்ணைப் பற்றி எழுதுகின்றார் லூக்கா.

இவர் ஒரு வியாபாரி. 'செந்நிற ஆடைகளை விற்றுக்கொண்டிருந்தவர்' என லூக்கா எழுதுகிறார். நம்ம ஊர் நல்லி சில்க்ஸ் உரிமையாளர் என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், செந்நிற அல்லது பிங்க் நிற ஆடைகள் செல்வந்தர்களாலும், அரசவை உறுப்பினர்களாலும், மேட்டுக்குடி மக்களாலும் அணியப்பட்டன. இவர் செய்கிற இந்த வேலையிலிருந்து, பெண்கள் அக்கால சமுதாயத்தில் பெற்றிருந்த அங்கீகாரம், மதிப்பு மற்றும் தன்மதிப்பையும் அறிந்துகொள்ள முடிகிறது. அண்மையில், திரு. ஆனந்த் ஸ்ரீனிவாஸன் என்னும் நிதி நிபுணரும் தன் மனைவி செய்கின்ற வேலைகளைப் பற்றி காணொளி ஒன்றில் பதிவு செய்திருந்தார். வேலை ஒரு மனிதருக்கு தன் மதிப்பு கொடுக்கின்றது. ஆணும் பெண்ணும் இணைந்தே இறைவனின் படைப்புப் பணியில் பங்கேற்கின்றனர். ஆக, பெண்களுக்கு வேலை என்பது அவர்களுடைய உரிமை. ஆண்களைப் போல அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பது வேறு விடயம் (just kidding)!

லீதியா வைத்த கண் வாங்காமல் பவுலையே பார்த்துக்கொண்டிருக்கிறார். திறந்த உள்ளம் கொண்ட இவரை கடவுள் மனம் மாற்றுகிறார். வீட்டோடு திருமுழுக்கு பெறுகின்றார். திருமுழுக்கு அவர் இருந்த ஆற்றங்கரையில்தான் நடந்திருக்க வேண்டும். மெழுகுதிரி, ஞானப்பெற்றோர், கிறிஸ்மா, ஆயத்த எண்ணெய், வெள்ளை ஆடை, ஃபோட்டோகிராஃபர் என எந்த ஆடம்பரமும் இல்லாமல் நடந்தேறுகிறது லீதியாவின் திருமுழுக்கு.

ஆக, ஆற்றங்கரையும் கூட இறைவனை அறிந்து கொள்ளும், அறிவிக்கும் தளமாக இருக்கிறது.

இறைவனின் வார்த்தையைத் தன் உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட லீதியா, திருத்தூதர்களைத் தன் இல்லத்தில் ஏற்றுக்கொள்கின்றார். லூக்கா அழகாக எழுதுகின்றார்: 'அதன் பின் லீதியா எங்களிடம், 'நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்' என்று கெஞ்சிக் கேட்டு எங்களை இணங்க வைத்தார்.'

இங்கே இவரின் இன்னொரு பண்பையும் பார்க்க முடிகிறது.

தாராள உள்ளம். லீதியாவுக்கு வயது ஏறக்குயை 20 முதல் 25க்குள் தான் இருந்திருக்க வேண்டும். தனியாக வாழ்பவராக இருக்கலாம். அல்லது திருமணம் முடித்தவராக இருக்கலாம். அல்லது திருமணம் முடிக்கத் தயார்நிலையில் இருக்கலாம். ஆனால், பவுலைத் தன் இல்லத்தில் ஏற்கின்றார். தான் பெற்ற நம்பிக்கைக்கு உடனடியாகக் கைம்மாறு செய்கின்றார் லீதியா. இதுதான் இவரின் பண்பு. நமக்கு நல்லது ஒன்று நடந்தால் உடனே ஏதாவது ஒன்றை மற்றவருக்குச் செய்ய வேண்டும் என்பார் இத்தாலியின் ரோஸா பாட்டி. ஏனெனில், நாம் செய்வது நமக்கே திரும்பி வரும் என்பது பிரபஞ்சத்தின் விதி. ஆக, மீட்பையும் நம்பிக்கைiயும் இலவசமாக வாங்காமல் அதற்கு ஒரு விலை கொடுக்கத் தயாராகின்றார் லீதியா.

இந்த இளவல் நமக்குத் தரும் பாடங்கள் மூன்று:

அ. தன்மதிப்பு மற்றும் தன்னம்பிக்கை - இது அவருடைய தொழிலில் வெளிப்பட்டது.

ஆ. புதியவற்றை ஏற்றுக்கொள்ளும் திறந்த உள்ளம் - இது அவருடைய மனமாற்றத்தில் வெளிப்பட்டது.

இ. அந்நியரை வரவேற்கும் பரந்த மனம் - இது திருத்தூதர்களை ஏற்றுக்கொண்டதில் வெளிப்பட்டது.

நற்செயல்: இம்மூன்றில் நான் எதை வாழ்கிறேன் என ஆய்வது.


2 comments:

  1. மீட்பையும், நம்பிக்கையையும் இலவசமாக வாங்காமல் அதற்கு ஒரு விலை கொடுக்கும் லீதியா யாரையும் எளிதில் கவர்ந்துவிடுபவராகத் தெரிகிறார்.இறைவன் மனது வைத்தால் ஆற்றங்கரை என்ன....அடுப்பங்கரை கூட இறைவனை அறிந்து கொள்ளும்...அறிவிக்கும. தளமாக மாறிவிடும் என்பதற்கு லீதியாவின் திருமுழுக்கே சான்று. அழகான ஒரு கவிதையாகத் தெரிகிறாள் லீதியா...தந்தை தரும் பின்னனியில்.தந்தைக்கு ஒரு சல்யூட்! என்னதான் kidding என்றாலும் ஆண்களைப்போல் பெண்கள் வேலை செய்ய மாட்டார்களென்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    கண்டிப்பாக தன்னம்பிக்கை,திறந்த உள்ளம், பரந்தமனம்...மூன்றுமே பின்னிப்பிணைந்தவைகள். அனைத்துடனும் வாழப்பெற்றவர் பாக்கியசாலி.

    ReplyDelete
  2. நிகழ்ந்ததை நேரில் பார்த்ததுபோல் எழுதும் தங்களது கற்பனை திறன் மிகவும் பாராட்டிற்குரியது.ஆறுகளெல்லாம் வற்றிப்போன இக்காலத்தில் சில்லென்ற ஆற்றின் கரையில் பவுலின் முன்னால் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு ஏற்ப்படச்செய்த தந்தைக்கு நன்றி

    ReplyDelete