Friday, May 1, 2020

நீங்களும் போய் விட?

இன்றைய (2 மே 2020) நற்செய்தி (யோவா 6:60-69)

நீங்களும் போய் விட?

திபேரியக் கடலுக்கு அருகே இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்து கொடுத்தபின், அவர் ஆற்றிய நீண்ட உரை இன்று முற்றுப் பெறுகிறது. 'இவரைப் பிடித்துச் சென்று அரசராக்கி விடலாம்!' என வந்தவர்கள், 'இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்று சொல்லி அவரிடமிருந்து விலகிச் செல்கின்றனர்.

இந்த நற்செய்திப் பகுதியைப் பற்றி மறையுரை ஆற்றுகின்ற புனித அகுஸ்தினார் இப்படி முடிக்கிறார்:

'என்னே மானுடத்தின் இரங்கத்தக்க நிலை! தங்களுடைய வயிற்றுக்குச் சோறு கிடைக்க வேண்டும் என நினைத்து, அவரை அரசராக்க நினைத்த மக்கள், அவர் அவர்களுடைய ஆன்மாவுக்கு உணவு தருகின்ற பேரரசர் என்று கண்டவுடன், அவரை விட்டு விலகிச் செல்கின்றனர்!'

இந்நற்செய்திப் பகுதியில் மூன்று விடயங்கள் என் கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றை இங்கே பகிர்கிறேன்.

அ. 'இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம். இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?'

இயேசுவின் பேச்சு அவர்களுக்குப் புரியவில்லை. நம் வீட்டில் உள்ள சிறிய குழந்தைகள், 'அப்பா! கப்பல் எப்படி இருக்கும்?' என்று கேட்டால், நாம் உடனே, ஒரு தாளை எடுத்து, அதில் கோடுகள் வரைந்து, 'இதுதான் கப்பல்' எனச் சொல்வோம். அல்லது, ஒரு சதுர தாளை எடுத்து, நான்காக படித்து, குறுக்கே ஒரு தாள், மறுபக்கம் மூன்றுதாள், அப்புறம் விரல் விட்டு, கீழே ஒரு இழு, மேலே ஒரு இழு என எடுத்து, இதுதான் 'கத்திக் கப்பல்' என்று செய்து காட்டலாம். இப்படிக் காட்டினால், அக்குழந்தைக்குப் புரியும். அந்தக் குழந்தை வளர்கிறது. திருமணம் ஆகிறது. ஒரு நாள் அந்த மகனை நாம் கப்பலில் அழைத்துச் செல்ல விரும்புகிறோம். பயணத்திற்கு முந்தின நாள், அதே மகன், நம்மிடம், 'அப்பா, கப்பல் எப்படி இருக்கும்?' எனக் கேட்கின்றார். நாம் உடனே அவரை கணிணி முன் அழைத்துச் சென்று, யூட்யூப் திறந்து, 'தி இன்ஸைட் ஆஃப் எ பாஸன்ஜர் ஷிப்' என்று டைப் செய்து, அதை அவருக்குக் காட்டுவோம். இந்த மகனிடம், காகிதக் கப்பல் செய்து காட்டினால் நம்மைப் பார்த்துச் சிரிப்பார். சிறுவயது மகனிடம், யூட்யூப் காட்டினால் சிரிப்பான். ஆக, இங்கே பிரச்சினை மக்களிடம் இல்லை. இயேசுவிடம்தான். காகிதக் கப்பல்தான் புரியும் என்று இருந்த மக்களுக்கு, அவர் காணொளிக் கப்பல் காட்டுகின்றார். அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆக, இன்று வளர்வது அவசியம். நேற்றைவிட நான் அறிவில், உடல்நலத்தில், பொருளாதாரத்தில், ஆன்மீகத்தில் வளர்கிறேனா? என்ற கேள்வி நமக்கு அவசியம். அப்படி வளரவில்லை என்றால், நாம் இன்னும் காகிதக்கப்பலைப் பார்த்தே பாடம் கற்க வேண்டியிருக்கும். மற்ற எல்லாமே நமக்குக் கடினமாக இருக்கும்.

ஆ. 'வாழ்வு தருவது தூய ஆவியே. ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது'

யோவான் நற்செய்தியின் சுருக்கக் குறியீட்டுச் செய்திகளில் இதுவும் ஒன்று. இங்கே, ஆவி-உடல், வாழ்வு-சாவு என்ற முரண் காட்டப்படுகிறது. ஒன்றை எடுக்கிறவர் இன்னொன்றை எடுக்க முடியாது. ஆக, இங்கே நம் தெரிவு அவசியம். 'ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது' என்ற செய்தி நமக்கு பெரிய நினைவூட்டலாக இருக்கிறது. ஏனெனில், ஊனியல்பு வரையறைக்கு உட்பட்டது. வரையறையைத் தாண்டி நம்மால் செல்ல முடியாது. ஆனால், ஊன் இல்லாமல் ஆவியை அனுபவிக்க முடியாது. ஆக, இங்கேயும் வளர்ச்சிதான் முதன்மைப்படுத்தப்படுகிறது.

இ. 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?'

தன்னுடைய பன்னிரு சீடர்களிடம் இயேசு இக்கேள்வியைக் கேட்கின்றார். தன்னுடைய ப்ராடக்டை இவர்களும் வாங்காமல் போய்விடுவார்களோ? என்ற ஐயம் இயேசுவுக்கு எழுகின்றது. ஆனால், பேதுரு, பன்னிருவர் சார்பாக, 'ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன' என்று சரணடைகின்றார். பேதுருவால் எப்படி இப்படிச் சொல்ல முடிந்தது? நம்பிக்கை என்பது கண்களால் பார்ப்பது அல்ல. கண்களை மூடியவுடன் பார்ப்பது. கண்களை மூடி அல்லது, கண்களைக் கடந்து பார்ப்பது. நம்பிக்கைப் பார்வை இருந்தால்தான் எந்த செயலும் சாத்தியம். இதையே பவுல், 'நாங்கள் காண்பவற்றை அல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை' (காண். 2 கொரி 4:18) என்கிறார்.

நற்செயல்: 'ஆசை, பாசம், காமம் அடங்க, மனம் அடங்கும், மனம் அடங்க புலன்கள் அடங்கும். புலன்கள் அடங்க நம் அகக் கண்கள் திறக்கும்' என்கிறார் வள்ளலார். அகக் கண்கள் திறந்தால் அவர் பேசுவது புரியும், அவருடன் இருப்பது இனிமையாகவும். இன்று நான் எந்நிலையில் இருக்கிறேன்?

1 comment:

  1. இயேசு ஐயாயிரம் பேருக்கு அப்பம் தந்த நிகழ்வுக்குப்பின்,”காரியம் முடிந்தது; இனி அவர் எதற்கு?”என்ற தோரணையில் அவரிடமிருந்து விலகிச்சென்ற மக்கள் குறித்த புனித அகுஸ்தினாரின் “உடலுக்கு உணவுதந்த அரசராக அவரை ஏற்றவர்கள் ஆன்மாவுக்கு உணவு தரும் பேரரசரை விட்டுச் செல்கின்றனரே” எனும் இயலாமையும்,விரக்தியும் ஒன்று சேரக்கூறும் வரிகள் நம் கண்களையும் கூட பனிக்க வைக்கின்றன.அதைவிட மோசமானது...தன்னவர்களே தன்னைவிட்டுப் போய்விடுவார்களோ எனும் பயத்தில் இயேசு “ நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” எனக்கேட்டு பேதுருவிடம் தனக்கு சாதகமான...அவர் மனத்துக்கு ஆறுதலான பதிலை வாங்குவது.”நம்பிக்கை என்பது கண்களால் பார்ப்பதல்ல; கண்களை மூடியவுடன் பார்ப்பது.” வாழ்ந்து பார்த்து அனுபவிக்க வேண்டிய உண்மை.நிலையற்ற காண்பவையை விட்டு,நிலைத்திருக்கும் காணாதவையையே நாடுவோம். தந்தையின் வரிகளுக்கு நன்றி.

    ஆசைகள்,மனம்,புலன்கள் அடங்கி அவர் பேசுவது புரியும் அளவுக்கு என் நற்செயல்களால் என் அகக்கண்களைத்திறந்து வைக்க முயற்சி செய்வேன்.நம்மில் “ஆண்டவரே! நாங்கள் யாரிடம் போவோம்?” என்று அடிக்கடி சொல்வதே இதற்கு வழி.தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றியும்!!!

    ReplyDelete