Tuesday, May 12, 2020

இணைந்திருத்தல்

இன்றைய (13 மே 2020) நற்செய்தி (யோவா 15:1-8)

இணைந்திருத்தல்

'இணைந்திருத்தல்' மற்றும் 'கனிதருதல்' என்பவை யோவான் நற்செய்தியில் நாம் அதிகமாக வாசிக்கும் கருத்துருக்கள்.

இவ்விரண்டு கருத்துருக்களையும் இன்றைய நற்செய்தியில் 'திராட்சைக் கொடியும் கிளைகளும்' உருவகம் வழியாக நமக்கு விளக்குகிறார் இயேசு.
இயேசுவின் உருவகங்கள் எல்லாமே தன்னுடைய சமகாலத்து மக்களின் வாழ்வியல் சார்ந்ததாக இருக்கிறது. ஆக, மக்கள் பயன்படுத்தும் அல்லது மக்கள் நடுவில் வழக்கத்தில் இருக்கும் ஒன்றை எடுத்து, அவர்கள் கண்களுக்கு எட்டாத ஒரு பொருளை அவற்றின் வழியாக விளக்குகிறார். ஒத்தமைவு நற்செய்திகள் என்று சொல்லப்படுகின்ற மத்தேயு, மாற்கு, மற்றும் லூக்கா நற்செய்தி நூல்களில் உருவகங்கள் பெரும்பாலும் இறையரசு அல்லது விண்ணரசை நோக்கியதாக இருக்கின்றது. ஆனால், யோவான் நற்செய்தியில் உருவகங்கள் தந்தை-இயேசு உறவைக் குறிப்பதாக அமைந்துள்ளன.

திராட்சைக் கொடி நடப்படுவதன் நோக்கம் கனிதருவதே. கனி தருவதற்கு கிளைகள் கொடியோடு இணைந்திருக்க வேண்டும். சீடர்களின் நோக்கம் கனி தருவதே. அப்படி அவர்கள் கனி தர அவர்கள் இயேசுவோடு இணைந்திருக்க வேண்டும்.

இணைந்திருத்தலும் கனிதருதலும் இணைந்தே செல்ல வேண்டும்.

இணைந்திருத்தல் மட்டும் இருந்து கனிகள் இல்லை என்றால், அது கொடிக்குச் சுமையாக மாறிவிடும். காலப் போக்கில் தறித்துவிடப்படும். ஏனெனில், அது சுமையாக இருப்பதோடு மற்ற கொடிகளுக்குச் செல்லும் சத்தையும் தான் உண்டுகொண்டு இருக்கும்.

'என்னை விட்டுப் பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என்று இயேசு சொல்வது பெரிய எச்சரிக்கையாக இருக்கிறது. கிளை ஒன்று கொடியுடன் இணையாமல் திராட்சை படர விடப்படும் கம்பியுடனும் அல்லது கம்பியைத் தாங்கும் கல்லுடனும் இணைந்தால் என்ன ஆகும்? ஒன்று, இணைதல் சாத்தியமன்று. இரண்டு, அப்படி இணைந்தால் அவற்றின் சூடு கொடியைப் பொசுக்கிவிடும்.

இயேசுவோடு இணைந்திருப்பது எப்படி?

அவருடைய வார்த்தைகள் நம்மில் நிலைத்திருக்க வேண்டும். அல்லது அவற்றை நாம் ஏற்று அதன்படி வாழ வேண்டும்.

ஒன்றை இறைவனின் வார்த்தை என்று நாம் எப்படி எடுத்துக்கொள்வது?

நாம் கனிதருவதை வைத்து எடுத்துக்கொள்ளலாம்.

கொரோனோ தொற்று ஒரு பக்கம் இருந்தாலும், ஊரடங்கு தளர்த்தப்பட்டு, தனிமனித விலகல் சற்றே குறையத் தொடங்குகிறது. இந்நேரத்தில், ஒருவர் மற்றவரோடு இணைந்திராமல் இருப்பதே நல்லது. ஆனால், நாம் மீண்டும் கனிதரத் தயாராக இருக்க வேண்டும்.

மீண்டும் நம் வாழ்வோடு நம்மை இணைத்தாலே கனிதருதல் சாத்தியமாகும்.

நற்செயல்: நாம் இயேசுவோடு இணைந்து கனிதந்த பொழுதுகளை எண்ணிப் பார்த்தல்.

1 comment:

  1. இணைந்திருத்தலும்,கனிதருதலும் இணைந்தே செல்ல வேண்டும். இணைதல் இல்லையெனில் கனிதருதலும் சாத்தியமில்லை என்கிறது இன்றையப் பதிவு.நாம் இங்கு பிறவி எடுத்திருப்பதே இறைவனோடும்,நம் உறவுகளோடும் இணைந்து கனி தர எனும் உண்மையை உணராத வாழ்வு,நாம் சார்ந்திருப்பவருக்கே சுமையாகி தறித்து விடப்படுமெனில் நாம் பிறவி எடுத்ததே பிறருக்கு பலன் கொடுக்க என்பதை அழகாக விளக்குகிறது இன்றைய விவிலியம்.
    அதே சமயம் சிலபல காரணங்களுக்காக ஊரடங்கு போன்ற விஷயங்கள் புழக்கத்தில் இருப்பினும் “நாம் விலகி இருக்கலாமே தவிர விளைச்சல் தருவதை நிறுத்தக்கூடாது” என்பதை அழகாக எடுத்து வைக்கும் தந்தைக்கு நன்றிகள்!

    இயேசுவோடு இணைந்து கனிதந்த பொழுதுகளை விட, கனிதராத பொழுதுகளை எண்ணிப்பார்த்தல் இன்னும் நலமெனத் தோன்றுகிறது.இணைந்திருப்போம்.....கனிதரும் இன்செயலால் மகிழ்ந்திருப்போம்.

    ReplyDelete