Friday, May 15, 2020

இணைப்பு

இன்றைய (16 மே 2020) முதல் வாசகம் (திப 16:1-10)

இணைப்பு

ஒரு தாய் தன் குழந்தையோடு இணைந்திருத்தலுக்கு ஓஷோ ஒரு விளக்கம் தருகிறார். ஒரு தாயும் அவருடைய கைக்குழந்தையும் அருகருகே அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக தாயை எழுப்ப வேண்டும். அவருடைய பெயரைச் சொல்லி அழைக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் சத்தமாக அழைக்கிறீர்கள். அவர் எழுவதாக இல்லை. அவர் மேல் சிறிய காகிதத்தை அல்லது பென்சிலை தூக்கிப் போட்டு எழுப்புகிறீர்கள். ஆனால் ஒரு பயனும் இல்லை. இப்போது அதே காகிதத்தை அருகிருக்கும் குழந்தையின்மேலோ அல்லது மெதுவாக அந்தக் குழந்தையின் கையை அல்லது காலைத் தொட்டாலோ உடனடியாக தாய் விழித்துக்கொள்வார். கருவறைக்குள் தொப்புள்கொடி வழியாக இணைந்திருந்த குழந்தை கருவறையைவிட்டு வெளியே வந்தாலும் தாயோடு ஒருவகையான பிணைப்பில் இணைந்திருக்கிறது. ஆகையால்தான், குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் அந்த 'கம்பியில்லாத் தொடர்பு' இருக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் தூய ஆவியாருக்கும் திருத்தூதர்களுக்கும் அத்தகைய இணைப்பு இருப்பதைப் பார்க்கின்றோம். திருத்தூதர்கள் பவுலும், பர்னபாவும், இப்போது திமொத்தேயுவும் இணைந்து தூய ஆவியாரோடு இணைந்திருக்கின்றனர். ஆகையால்தான், ஆசியாவில் நற்செய்தி அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுத்தார் என்றும், தூய ஆவியார் தங்களைப் பித்தினியாவுக்குப் போகவிடவில்லை என்றும், காட்சியில் ஒருவர் வந்து தங்களை அழைத்தார் என்றும் அறிந்துகொள்கின்றனர்.

'கடவுள் நினைப்பது இதுதான்' என்று மிகச் சிலருக்கு மட்டுமே இன்ட்யூஷன் இருக்கும். சிலர் இந்த இணைப்பு நிலையில் நன்றாக இருப்பர். எடுத்துக்காட்டாக, 'இன்று இதைச் செய்யலாம்' என்று அவர்கள் மனத்தில் பட்டால் பட்டுமே அதைச் செய்வார்கள்.

கடவுளைக் கொஞ்சம் அகற்றிவிட்டு, இதையே பவுலோ கொயலோ பிரபஞ்சத்தின் மனம் என்கிறார். நம் மனம் பிரபஞ்சத்தின் மனத்தோடு இணைந்திருக்கிறபோது நாம் எல்லாவற்றையும் தெரிந்துகொள்கிறோம். இந்த இணைப்பை வளர்த்துக்கொள்ளலாம். எப்படி? முதலில் நம்மை முழுமையாக அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். நேர்முக எண்ணங்களை நிறையக் கொண்டிருக்க வேண்டும். ஆழ்ந்த தியானம் செய்ய வேண்டும். உடல் மற்றும் மூளையின் செயல்களைக் குறைக்க வேண்டும்.

'இன்ட்யூஷன்' பற்றி என்னுடைய கருத்துக்கு என் நண்பர்கள் நிறையப் பேர் எதிர்ப்பு தெரிவிப்பதுண்டு. அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. அது ஒரு 'ஃப்ளுக்'. அல்லது அது எதேச்சையாக நடப்பது. அல்லது அது ஒரு தற்செயல் நிகழ்வு. இப்படி எல்லாம் சொல்வார்கள். ஆனால், தன்னோடு இணைப்பில் ஒருவர் செய்யும் அனைத்தும் இதன் வழியாக ஒருவருக்குத் தெரியும்.

ஏனெனில் விவிலியமே இதைச்சொல்கிறது.

யாரிடமெல்லாம் ஆலோசனை கேட்கலாம் என்ற அறிவுறைப் பகுதியில், சீராக்கின் ஞானநூல் ஆசிரியரும் இதையொட்டியே,

'உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில். அதைவிட நம்பத்தக்கது வேறெதுவுமில்லை.
காவல் மாடத்தின்மேலே அமர்ந்திருக்கும் ஏழு காவலர்களைவிட மனித உள்ளம் சில வேளைகளில் நன்கு அறிவுறுத்துகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்.' (சீஞா 37:13-15)

என எழுதுகிறார்.

பவுல், பர்னபா, மற்றும் திமொத்தேயுவுக்கு இது நிறைய இருக்கிறது.

நற்செயல்: நமக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள இணைப்பை உணர்தல்.


2 comments:

  1. Great dear father!
    Let me try to listen to the voice that doesn't need words.🤝

    ReplyDelete
  2. கண்டிப்பாக ‘ இன்ட்யூஷன்’ என்ற ஒன்று என்பதில் நான் தந்தை பக்கமே.நான் என்னை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறேனா...நேர்மறை எண்ணங்களைக் கொண்டுள்ளேனா...ஆழ்ந்த தியானம் செய்கிறேனா.....உடல் மற்றும் மூளையின் செயலைக் குறைக்கிறேனா...தெரியவில்லை.ஆனால் தாய்க்கும் சேய்க்குமுள்ள இந்த ‘கம்பியில்லா தொடர்பு’ போன்ற ஒன்று நம்மை இந்த பிரபஞ்சத்தோடு( இறைவன் என்றும் அழைக்கலாம்) நமக்கே கூட தெரியாமல் இணைக்கிறது என்பதே உண்மை.அதற்கு அவரவர் தங்களுக்கேற்ற பெயரையும் வைத்துக்கொள்ளலாம். இதில் இன்னமும் சிறப்பு எனக்கு இன்று ஏற்பட்டதொரு அனுபவம்.இந்தப் பதிவைப் பார்த்தபிறகு இன்னும் அந்த இன்ட்யூஷனில் நம்பிக்கை கூடுகிறது.
    “உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய்நில்......... அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்” உண்மைதான்....பவுல்,பர்னபா,திமோத்தேயுவுக்கு இருந்த அதே உணர்தல் ஏன் எனக்கும் இருக்கக்கூடாது? என் உள்ளத்தின் எண்ணம் உண்மையானதாக இருக்கும் பட்சத்தில்?
    அருமையானதொரு வலைப்பூ! தந்தைக்கு நன்றியும்! பாராட்டும்!!!

    கண்டிப்பாக எனக்கும் நான் சார்ந்துள்ள பிரபஞ்சத்திற்குமுள்ள இணைப்பை உணர முயற்சி எடுப்பேன்....

    ReplyDelete