Friday, May 29, 2020

இவருக்கு என்ன ஆகும்?

இன்றைய (30 மே 2020) நற்செய்தி (யோவா 21:20-25)

இவருக்கு என்ன ஆகும்?

யோவான் நற்செய்தியின் இறுதிப் பகுதிக்கும், பாஸ்கா காலத்தின் இறுதி நாளுக்கும் வந்துவிட்டோம். யோவான் தன் நற்செய்தியை மிக அழகாக நிறைவு செய்கிறார்: 'இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.'

இது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியமா? அல்லது கூற்றா?

இல்லை.

இறையனுபவம் அல்லது இயேசு அனுபவம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவம். ஆக, உண்மையாகவே அனைத்து அனுபவங்களும் எழுதப்பட்டால் இந்த உலகமே கொள்ளாது.

யோவான் ஒரு அழகான நிகழ்வோடு நிறைவு செய்கிறார். அது அவரைப் பற்றியதே. அதாவது, இயேசு அன்பு செய்த சீடர் பற்றியது.

பேதுரு இயேசுவிடம் அவரைச் சுட்டிக்காட்டி, 'இவருக்கு என்ன ஆகும்?' அல்லது 'இவருக்கு என்ன நிகழும்?' எனக் கேட்கின்றார்.

இயேசுவோ, 'உனக்கு என்ன?' என்று கேட்டுவிட்டு, 'என்னைப் பின்தொடர்' என்கிறார்.

இந்த நிகழ்வின் பொருள் என்ன?

இது பேதுருவின் ஆளுமை பற்றியது அல்ல. மாறாக, நம் ஒவ்வொருவரையும் பற்றியது.

அதாவது, இறையனுபவம் பெறும்போது நம்மில் எழுகின்ற ஒரு கேள்வி என்னவென்றால், 'எனக்கு அனுபவம் கிடைத்துவிட்டது. நான் இறைவனைப் பின்பற்றுகிறேன். ஆனால், இவருக்கு என்ன ஆகும்?' என்று அடுத்திருப்பவரோடு ஒப்பிடும் மனநிலை.

என் நம்பிக்கைப் போராட்டத்தில் நான் கடவுளிடம் அடிக்கடி கேட்டதும் இதுதான். 'இந்து சகோதரருக்கு என்ன ஆகும்?' 'இசுலாம் சகோதரிக்கு என்ன ஆகும்?' 'கடவுளை நம்பாத ஒருவருக்கு என்ன ஆகும்?' 'திருப்பலிக்கு வராதவருக்கு என்ன ஆகும்?' 'செபமாலை செபிக்காதவருக்கு என்ன ஆகும்?'

இந்தக் கேள்விகள் இரண்டு காரணங்களால் எழுகின்றன:

ஒன்று, இயேசுவைப் பின்பற்றுவதில் எனக்குள்ள தயக்கத்தால்.

இரண்டு, என்னை அவர்களோடு ஒப்பிட்டு நான் அவர்களைவிட பெரியவன் என்று இறுமாப்பு கொள்வதால்.

இறைவனைப் பின்பற்றுவதில், இவை இரண்டுமே தவறு. தயக்கமும், இறுமாப்பும் சீடத்துவத்தின் பெரிய எதிரிகள்.

பேதுருவுக்கும் இதே தயக்கமும் இறுமாப்பும் இருந்திருக்கலாம். பேதுருவை நெறிப்படுத்துகின்ற இயேசு, 'உனக்கு என்ன? என்னைப் பின்தொடர்!' என்கிறார்.

இன்று நாம் இறையனுபவம் பெற்றுவிட்டால், நம் கண்கள் இயேசுவின்மீது மட்டும் இருக்கட்டும். அப்போது தயக்கமும் இறுமாப்பும் மறைந்துவிடும்.

நற்செயல்: இயேசுவின் மேல் நம் கண்கள் பதிப்பதற்கு தடையாக இருக்கின்ற கவனச் சிதறல்கள் எவை?

2 comments:

  1. தயக்கமும்,இறுமாப்பும் சீடத்துவத்தின் இரு எதிரிகள். பேதுருவுக்கு வந்த இந்த தயக்கமும் இறுமாப்பும் எனக்கு வந்தால் என்ன ஆவேன்? இயேசு என்னையும் நெறிப்படுத்துவாரா? உன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு “ என்னைப்பின் தொடர்” என்று சொல்வாரா? இறையனுபவத்திற்காகக் காத்திருக்கையில் அவர் கண்கள், நம்மேல் பதியும்......நம் தயக்கமும்,இறுமாப்பும் நம்மிலிருந்து மறைய வழி சொல்லும் தந்தைக்கு நன்றிகள்!

    இனிமேல் தான் யோசிக்க வேண்டும்.எதை என்று சொல்வது? தடைகளை உடைத்து அவர்மேல் என் கண்களைப்பதிக்க இறைவன் துணை செய்வாராக!!!

    ReplyDelete
  2. மேலேயுள்ள ‘எபிக்டெடஸ்’ அவர்களின் பொன்மொழிகளைத் தழுவி வாழ்ந்தால் நாம் போகும் வழியும்,சேருமிடமும் பாதுகாப்பானதாயிருக்கும்!!!

    ReplyDelete