Saturday, April 9, 2016

லேவியரின் மறுமனைவி

அவர் அவளிடம், 'எழுந்திரு! புறப்படுவோம்' என்றார். பதில் இல்லை. எனவே அவர் அவளைக் கழுதை மீத தூக்கி வைத்துத் தன் வீட்டை நோக்கிச் சென்றார். (நீத 19:28)

கோபம் - வேசித்தனம் - கண்டுகொள்ளாத்தன்மை - குடிவெறி - சொல்பேச்சு கேளாமை - ஓரினச் சேர்க்கை - வன்முறை - கற்பழிப்பு - படுகொலை

இந்த எல்லா வார்த்தைகளின் உருவகமாக இருக்கின்றது நீத 19.

இதை வாசிப்பவர்களுக்கு, விவிலியத்தில் - இறைவார்த்தையில் - இப்படியொரு கொடூரமான நிகழ்வு நடப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு இருக்கிறது இந்தப் பகுதி.

கதைக்கு வருவோம்.

லேவியர் ஒருவர் இருக்கின்றார். அவருக்கு ஒரு மறுமனைவி (வைப்பாட்டி). லேவியர்கள் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டவர்கள். இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே அருட்பணியாளர்களாக இருப்பவர்கள். மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒருவர் துர்மாதிரியாக இருக்கிறார். இதுவே முதல் பிறழ்வு.

இவரின் மறுமனைவி இவரிடம் கோபித்துக் கொண்டு தன் தந்தையின் வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். காலங்காலமாக பெண்கள் செய்யும் விடயம்தான் என்றாலும்(!), இங்கே 'வேசித்தனம்' செய்தாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கணவனைப் பிரிந்து தனியே இருக்கும் பெண்ணுக்குப் பாலியல் பிறழ்வுபடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்ததால் இங்கே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அவள் போன நான்காம் மாதம், லேவியர் அவளை அழைத்துவர தன் வேலையாள் மற்றும் இரு கழுதைகளோடு புறப்பட்டுச் செல்கிறார். அவள் போன நாலைந்து நாட்களில் அவளைத் தேடினால் பரவாயில்லை. இவர் நான்கு மாதம் காத்திருக்கின்றார்.

'நம்ம மாப்ள வந்திருக்கார்' என்று மனம் மகிழ்ந்த பெண்ணின் அப்பா, 'மூன்று நாட்கள் இருந்து நல்லா ஜாலியா இருந்துட்டு போங்க!' என்று விருந்து வைக்கின்றார். மூன்று நாட்கள் குடித்து முடித்த லேவியர் பயணத்துக்குப் புறப்படும்போது, 'இன்னும் ஒரு நாள் இருங்க!' என்கிறார் மாமா. நான்காம் நாளும் குடிக்கிறார் லேவியர். 'சரி மாமா நாங்க கிளம்புறோம்!' என ஐந்தாம் நாள் சொல்ல, 'இருங்க மாப்ள, மெதுவா போகலாம்' என இன்னும் ஊற்றிக்கொடுக்கின்றார் மாமா. ஐந்தாம் நாள் மாலையாயிற்று. 'மாமா, நாங்க கண்டிப்பா போயே ஆகணும்!' என தன் மறுமனைவியுடன் புறப்படுகின்றார் லேவியர்.

போகும் வழியிலேயே சூரியன் மறையத் தொடங்குகிறது. 'சூரியன் மறையத் தொடங்கினான்' என்ற சொல்லாடலே, 'ஏதோ நடக்குப் போகிறது!' என்று வாசகரை அலர்ட் செய்கிறது.

'நாம் எபூசு (வேற்று மனிதர்களின் நாடு) சென்று அங்கே இரவைக் கழிப்போம்!' என்று ஐடியாக் கொடுக்கின்றான் வேலைக்காரன்.

'இல்லை! நம் சொந்த மனிதர்கள் இருக்கும் பிபயாவில் போய் இரவைக் கழிப்போம்' என்று மறுமொழி சொல்கின்றார் லேவியர்.

கிபயாவுக்குப் போகிறார்கள். ஆனால் அவர்கள் ஊருக்குள் நுழைந்தவுடன் யாரும் அவர்களை தங்கள் வீட்டிற்கு அழைக்கவில்லை. பாலைவன சமூகத்தில் 'விருந்தோம்பல்,' அல்லது 'அந்நியரை வரவேற்றல்' என்பது மிக முக்கியமான பண்பு. இதுதான் எல்லாப் பண்புகளிலும் மேலானதாகக் கருதப்பட்டது. ஏனெனில் பாலைநிலத்தில் வெட்ட வெளியில் தங்குவது உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தானது. ஆனால் இங்கே விருந்தோம்பல் செய்ய யாருமில்லை.

அந்நேரம் வயலிலிருந்து வீடு திரும்பும் ஒரு முதியவர், 'வாங்க! என் வீட்டில் வந்து தங்குங்க!' என அழைக்கிறார்.

இவர்களும் செல்கின்றனர். சாப்பிட்டுவிட்டு குடித்துக் கொண்டிருக்கும்போது, அந்நகரின் இழிமனிதர்கள் அவ்வீட்டின் கதவைத் தட்டுகின்றனர். 'டேய் கிழவா! உன் வீட்டுக்கு வந்திருக்கும் அந்த மனிதனை வெளியே அனுப்பு. நாங்கள் அவனோடு உறவு கொள்ள வேண்டும்' என சத்தம் போடுகின்றனர்.

தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினருக்கு ஏதாவது ஆகிவிட்டது என்றால் அது விருந்தோம்பல் விதிக்கு முரணானது. ஆகையால், அந்த முதியவர், 'வேண்டாம்! இந்தக் கொடிய செயலைச் செய்யாதீர்கள் அந்த மனிதனுக்கு. வேண்டுமானால், கன்னியான என் மகளையும், அவரின் மறுமனைவியையும் வெளியே கொண்டு வருகிறேன். அவர்களோடு உறவு கொண்டு உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்' என்கிறார்.

விருந்திற்கு வந்திருக்கும் மறுமனைவிக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. ஆனால் வந்திருக்கும் ஆணுக்கு எதுவும் நடக்கக் கூடாது என்பதிலேயே தெரிகிறது பெண்களுக்கு இச்சமூகம் கொடுத்திருந்த அங்கீகாரம்.

அவர்கள் கேட்பதாக இல்லை.

இதற்கிடையில் லேவியர் தன் மனைவியை வெளியே தள்ளிவிடுகின்றார். தள்ளி விட்டு கதவை அடைத்து மீண்டும் முதியவரோடு சேர்ந்து குடிக்க ஆரம்பிக்கின்றார். வெளியே தள்ளப்பட்ட மறுமனைவியோடு இரவு முழுவதும் வைகறை வரை நகரத்தார் உறவுகொண்டு இழிவு படுத்துகின்றனர். இதைக் கண்டுகொள்ளாமல் குடித்துக் கொண்டிருக்கவும், தூங்கவும் அந்த லேவியருக்கு எப்படி மனம் வந்திருக்கும்?

விடிந்துவிட்டது. பயணத்துக்குத் தயாராகிவிட்டார் லேவியர். கதவைத் திறக்கிறார். வெளியே கதவின் நிலையில் சாய்ந்து கிடக்கிறாள் மறுமனைவி. அவள் உயிரோடு இருக்கிறாளா, அல்லது இறந்துவிட்டாளா என்று கூட கண்டுகொள்ளாத லேவியர் அவளை அப்படியே கழுதை மேல் ஏற்றி வழிநடக்கின்றார்.

தன் வீட்டிற்கு வருகின்றார். அவளின் உடலை ஒரு கத்தியால் பன்னிரண்டு துண்டுகளாக வெட்டுகின்றார். அவள் எப்போது இறந்தாள்? கழுதையில் ஏற்றும்போதா? அல்லது வழியிலா? அல்லது இவன் கத்தியால் குத்தும்போதா?

துண்டுகளாய்க் கூறுபோட்ட லேவியர், இஸ்ரயேலின் பன்னிரு குலத்துக்கும் பன்னிரு துண்டுகளை அனுப்புகின்றார்.

நீதித்தலைவர்கள் காலத்தில் இஸ்ரயேல் சமூகம் எப்படி தரம் தாழ்ந்து போயிருந்தது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.

கதை முழுவதும் மறுமனைவி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளின் மௌனம் நமக்கு பெரிய அலறலாகக் கேட்கின்றது.

கழுதைக்கும், வேலையாளுக்கும் இருந்து மரியாதை கூட அந்தப் பெண்ணுக்கு இல்லை.

கணவனும் மதிக்கவில்லை. தந்தை வீட்டிலும் ஏற்கப்படவில்லை. அந்நிய நாட்டில் அவமானம் மற்றும் கற்பழிப்பு. சொந்தக் கணவனின் கையால் படுகொலை.

லேவியரின் தன்னலம் மற்றும் தன்மையப்போக்கு, கண்டுகொள்ளாத்தன்மை மற்றும் குடிவெறி கண்டிக்கத்தக்கதே.

அவரின் இந்த எல்லா தீய குணங்களுக்கும் பலிகடாவாகிறாள் ஒரு பச்சிளம் பெண்!

1 comment:

  1. ஒரு தமிழ் அகராதியில் நாம் புறந்தள்ள நினைக்கும் அத்தனை வார்த்தைகளின் களஞ்சியமாக நீதித்தலைவர்கள்19 இருப்பதாக்க் குறிப்பிடுகிறார் தந்தை.ஆம்! ஊர் திரும்ப நினைத்த லேவியரையும்,அவரின் மறுமனைவியையும் தன் வீட்டில் இரவைக் கழிக்க அனுமதித்த முதியவரின் 'விருந்தோம்பலை'த்தவிர நாம் பார்த்து வியக்க எந்த விஷயமும் இல்லை.அந்த முதியவரும் கூட தன்னிடம் அடைக்கலம் தேடி வந்த லேவியருக்குப் பதில் அவர் மனைவியையும்,கன்னிகழியா தன் மகளையும் தன்னிடம் வந்த கயவர்களுக்குத் தாரை வார்க்க ஆயத்தமாகும் இடத்தில் நம் மனத்திலிருந்து இறக்கப்படுகிறார்.பெண்ணினத்திற்குப் பெருமை சேர்ப்பது போல் ஆரம்பிக்கப்பட்ட 'நீதித் தலைவர்கள் நூல்' ஆண்களே பரிதாபப்படும் அளவுக்கு பெண்ணினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை,அநீதியை அரங்கேற்றியது பரிதாபமே! எதற்காக இப்படிப்பட்ட கொடிய நிகழ்வுகள் எல்லாம் சரித்திரமாக எழுதப்பட்டன? எழுதியவரின் நோக்கம் தான் என்ன? எது எப்படியோ...இப்படிப்பட்ட கொடிய நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் மனிதன் அதைத் தன் வாழ்க்கையை விட்டுக்களைந்தால் ஏதோ எழுதியவர்களுக்குப் புண்ணியம் கிடைக்கலாம்.இத்தனையையும் இன்றைய நிகழ்வுபோல் நம் கண் முன்னால் கொண்டுவரும் தந்தையின் முயற்சிக்குப் பாராட்டுக்கள். அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete