Sunday, April 10, 2016

சீலோவின் மகளிர்

கூட்டமைப்பின் முதியோர்கள் 'பென்யமின் மக்களில் பெண்கள் அழிக்கப்பட்டு விட்டதால், எஞ்சியோருக்கு மனைவியாகக் கிடைக்கும்படி என்ன செய்யலாம்?' என்று கேட்டனர்.
... ... ...
எனவே அவர்கள் பென்யமின் புதல்வர்களை நோக்கி, 'செல்லுங்கள். திராட்சைத் தோட்டங்களில் ஒளிந்து கொண்டு கவனமாக உற்று நோக்குங்கள். சீலோ மகளிர் நடனமாட வெளியே வரும்போது, நீங்கள் திராட்சைத் தோட்டங்களிலிருந்து வெளியே வாருங்கள். ஒவ்வொருவனும் சீலோவின் மகளிருள் ஒருத்தியை உங்களுக்கு மனைவியாகத் தூக்கிக் கொண்டு பென்யமின் நாட்டுக்கு ஓடிவிடுங்கள்' என்றனர்.

(நீத 21:16, 20-21)

ஒவ்வொரு குலம் வாரியாக நடந்த நிகழ்வுகளைப் பற்றிச் சொல்லிக் கொண்ட வந்த நீதித்தலைவர்கள் நூல் பென்யமின் குலத்தில் நடந்த நிகழ்வு பற்றி இறுதியாகக் கூறுகிறது.

குலங்களுக்குள் நடந்த போரில் பென்யமின் குலத்தில் உள்ள பெண்களும் கொல்லப்படுகின்றனர். குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் கொல்லக் கூடாது என்பது போர் விதி. ஆனால் அந்த விதியும் இங்கே மீறப்படுகிறது.

இப்படியாக பெண்கள் அழிக்கப்பட்டுவிட்டதால், ஆண்கள் துணையின்றித் தவிக்கின்றனர். இந்தப் பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று ஊரார் கூட்டம் போடுகின்றனர். அப்போது சொல்லப்படும் பதில்தான் மேற்காணும் இறைவசனம்.

'நாம எல்லாரும் பக்கத்து ஊர் திருவிழாவுக்குப் போவோம். நீங்க தோட்டத்துக்குள்ள ஒளிஞ்சுக்கோங்க. அந்த ஊர் பொண்ணுங்க நடனமாட வரும்போது, நீங்க அவங்களைத் தூக்கிக்கொண்டு ஓடி மனைவியாக்கிக் கொள்ளுங்கள்.'

பெண் திருடக்கூடிய அல்லது கொள்ளையிடக்கூடிய ஒரு பொருளாக மாறிவிட்டாள். இஸ்ரயேல் சமூகத்தில் பெண் என்பவள் தந்தை அல்லது சகோதரன் அல்லது கணவன் ஆகியோரின் உடைமையாகவே கருதப்பட்டாள். ஒரு ஆண் வைத்திருந்த கம்பு, கம்பளி போலவேதான் பெண்ணும். தாய், மனைவி, கன்னி, விதவை என ஆணுக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பை வைத்தே அவள் அறியப்பெற்றாள். இது பெண் இனத்திற்கு நம் வரலாறு செய்துவிட்ட பெரிய துரோகம்.

இஸ்ரயேலின் பன்னிரு புதல்வர்களில் பென்யமின்தான் கடைக்குட்டி. யாக்கோபால் அதிகம் அன்பு செய்யப்பட்டவர் இவர். இவரின் குலத்தில் பெண் இல்லாமல் போய்விட்டது என்றால் இஸ்ரயேல் சமூகம் எவ்வளவு மோசமான நிலையை அடைந்துவிட்டது எனப் பார்க்கலாம். தாங்களே பெண் தேடிப் போய், பெண்பார்த்து, திருமணம் முடித்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் நிலை மாறி, 'ஒரு பெண் கிடைத்தால் போதும்' என்று இரவில் தூக்கிக்கொண்டு ஓடும் அளவிற்கு பென்யமின் குலம் தாழ்ந்து விட்டது. அதாவது, பிரியாணி, ஃப்ரைட் ரைஸ் என விரும்பி, தேர்ந்தெடுத்து சாப்பிட்ட இனம், 'உப்புமா கிடைத்தால் போதும்' என்று சொல்லுமளவிற்கு இறங்கிவிட்டது.

அக்சா தான் விரும்பியதைக் கேட்டு வாங்கும் அளவுக்கு உரிமை பெற்றிருந்தாள். தெபோரா ஆண் படைவீரர்களுக்குக் கட்டளையிடும் துணிவு பெற்றிருந்தார். தொடர்ந்து வந்த பெண்களின் நிலை அப்படியே சுருங்கி லேவியரின் மனைவி, சீலோவின் மகளிர் என அனைவரும் மௌனிகளாகப்படுகின்றனர்.

ஒரு சமூகத்தில் பெண்கள் எப்படி மதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்தச் சமூகத்தின் வளர்ச்சியை நாம் கணக்கிட முடியும்.

மீண்டும் அதே பல்லவியுடன் முடிகிறது நீதித்தலைவர்கள் நூல்:

'அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப்பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்' (21:21)

நீதித்தலைவர்கள் நூலின் பெண்கள் பற்றிய நம் ஆய்வு நிறைவு பெற்றது.

1 comment:

  1. ஆம்! கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகி விட்டது 'நீதித் தலைவர்கள் ' நூலில் வரும் பெண்களின் நிலைமை.தந்தையின் வார்த்தைகளில் ஃப்ரைட் ரைஸ்,பிரியாணி என சாப்பிட்ட இனம் உப்புமா கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு இறங்கி விட்டது வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.இன்றையப்பதிவில் சில வரிகள் என்னைக் கலங்கடிக்கும் அளவுக்குப் பாதித்து விட்டது உண்மை." இஸ்ரேல் சமூகத்தில் பெண் என்பவள் தந்தை அல்லது சகோதரன் அல்லது கணவன் இவர்களது உடைமையாகவே கருதப்பட்டாள்.ஒரு ஆண் வைத்திருந்த கம்பு, கம்பளி போலவேதான் பெண்ணும் தாய்,மனைவி,கன்னி,விதவை என ஆணுக்கும் அவளுக்கும் இடையில் உள்ள உறவை வைத்தே அவள் அறியப்பெற்றாள்.இது பெண் இனத்திற்கு நம் வரலாறு செய்து விட்ட துரோகம்". இவை தான் அந்த வரிகள்.இந்த வரலாற்று துரோகத்திற்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வில்லை.படித்தவர்,படிக்காதவர்,ஏழை,பணக்காரன் எனும் பாகு பாடின்றி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது இந்த துரோகம்.ஒரு சமூகத்தில் பெண்கள் மதிக்கப்படும் நிலை குறித்தே அந்த சமூகமும் மதிக்கப்படும்." இந்த உண்மையை ஒரு சங்கு ஊதி அனைவர்காதிலும் படும்படி எடுத்துச்சொல்ல எந்த மகராசன் பிறக்கவிருக்கிறான்? இறைவனுக்கே வெளிச்சம்.நீதித் தலைவர்கள் நூலில் பெண்கள் பற்றிய ஆய்வை அழகுற முடித்த தந்தைக்கு என் பாராட்டும்! நன்றிகளும்!!!

    ReplyDelete