Friday, April 29, 2016

தடைக்கற்கள்

உரோமை அமைதி, கிரேக்க கலாச்சாரம், யூத நம்பிக்கை புதிய சமூகத்தின் வளர்ச்சிக்கான காரணிகளாக இருந்தாலும், வளர்ச்சிக்குச் சில தடைகளும் இருந்தன.

யூதர்களுக்கான தடைகள்

1. 'இவர்கள் ரபிகள் அல்லர்!'
யூதர்கள் தங்கள் மறைநூல்களையும், மதத்தையும் மிகப் பழமையானதாகக் கருதினர். மோசேயால் எழுதப்பட்ட சட்ட நூல்களையும், பின்னர் வந்த இறைவாக்கு நூல்களையும் விளக்கிச் சொல்வதற்கு என தகுதிபெற்ற மறைநூல் அறிஞர்களையும், போதகர்களையும் (ரபி) அவர்கள் கொண்டிருந்தனர். ஆனால் இயேசுவின் திருத்தூதர்கள் ரபிகள் அல்ல. பவுல் மட்டும்தான் யூதர்களின் விவிலியம் அறிந்தவர். மற்றவர்கள் தங்கள் காதுகளால் மட்டுமே கேட்டறிந்தவர்கள். தங்கள் தெருக்களில் மீனவராகவும், வரி வசூலிப்பவராகவும் பார்த்த ஒருவர் தங்களுக்கு மறைநூலை விளக்கிச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

2. 'தோல்வியடைந்த மெசியா!'
திருத்தூதர்கள் இயேசுவை மெசியா என அறிவித்தனர். இதையும் யூதர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மரவேலை அல்லது கைவேலை செய்யும் ஒருவர், மூன்று ஆண்டுகளாக தெருப்போதகராக இருந்த ஒருவர், மிகவும் மோசமான சிலுவைச் சாவைத் தழுவிய ஒருவர் எப்படி தங்களுக்கு மெசியாவாக இருக்க முடியும் என்பது இவர்களின் வாதம். தங்களை எதிரிகளிடமிருந்து விடுவிக்கும் அரசராக அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இயேசு எள்ளளவும் இந்த எதிர்பார்பை நிவர்த்தி செய்யவில்லை.

3. 'கிறிஸ்தவ கட்டமைப்பு.'
ஆண்டாண்டு காலமாக ஆலயம், ஓய்வுநாள், விருத்தசேதனம் என்று கடைப்பிடித்து வந்தவர்களால் புதிய கட்டமைப்பை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'ஆலயம் தேவையில்லை. இயேசு போதும்,' 'ஓய்வுநாள் என்பது சனிக்கிழமை அல்ல, ஞாயிற்றுக்கிழமை,' 'விருத்தசேதனம் தேவையில்லை, திருமுழுக்கு போதும்' என்ற திருத்தூதர்களின் புதிய கட்டமைப்பு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. காலங்காலமாக தூய இனம் என்று தங்களைக் கருதிக் கொண்டவர்கள், தங்கள் இனத்தோடு மற்ற இனம் கலப்பதை விரும்பவில்லை.

யூதரல்லாதவருக்கான தடைகள்

1. 'புதிய கடவுளா?'
இயேசுவின் காலத்தில் உரோமையர்கள் ஏறக்குறைய கடவுளர்களை வரையறுத்து முடித்துவிட்டனர். இந்தக் கடவுளர்களின் தலைவராக நுமா மற்றும் யூபிடர் தான் கருதப்பட்டனர். அப்படியிருக்க, புதியதாக ஒரு கடவுளா? அதுவும், இந்தக் கடவுள் யூபிடருக்கும் மேலானவரா? என்பது புறவினத்தாரால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது.

2. 'சமூக வாழ்க்கை'
நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் அனைத்தையும் பொதுவாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற புதிய பொருளாதார நிலை உருவாகிறது. இவ்வளவு நாள்கள், 'என் குடும்பம்,' 'என் சொத்து' என இருந்தவர்கள், 'நம் குடும்பம்,' 'நம் சொத்து' என்று சொல்ல இடறல்பட்டனர். மேலும் புதிய நம்பிக்கை (கிறிஸ்தவம்) தழுவியவர்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தனர். 'ஒருவருக்கு ஒரு மனைவி,' 'பரத்தைமை கூடாது,' 'உடல் என்றால் பாவம்,' 'உடல் உயிர்க்கும்,' 'ஓவியம், கலை அறவே கூடாது. அவை சாத்தானின் செயல்கள்' என்று கிறிஸ்தவம் கொண்டிருந்த கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை.

3. 'குடும்ப வாழ்வு'
புதியதாக கிறிஸ்தவத்திற்கு மாறிய பெண்களை யாரும் திருமணம் முடிக்கத் தயாராக இல்லை. ஏனெனில் அவர்கள் நிறைய 'வாயாடிகளாக' இருந்தனர் என்று தெர்த்துவாலியன் எழுதிய கடிதம் ஒன்று குறிப்பிடுகிறது.

4. 'கிழக்கில் உதயம்'
'கிழக்கில்' இருந்து வரும் எதுவும், அன்று முதல் இன்று வரை 'மேற்கு' நாட்டிற்கு ஏற்புடையதாக இருப்பதில்லை. கிழக்கே உள்ள மதங்களையும், மனிதர்களையும் மூன்றாந்தர மக்களாகவே பார்த்தனர் மேற்கு மக்கள். 'சிலுவையில் அறைஞ்சார்களாம்! எழுந்தாராம்! அவர் கடவுளாம்!' என்ற கேலிப்பேச்சை எங்கும் கேட்க முடிந்தது. உரோமையின் அரச மாளிகையில் உள்ள ஒரு சுவரில், சிலுவையில் கழுதை முகத்தோடு ஒரு மனிதர் தொங்கிக் கொண்டிருப்பது போல ஒரு ஓவியம் உள்ளது. அந்த ஓவியத்தின் கீழ், 'இவர் ஒரு கடவுள்' என்று எழுதப்பட்டுள்ளது.

படிக்கற்களைவிட தடைக்கற்கள் அதிகமாக இருந்திருக்கின்றன.


2 comments:

  1. கிறித்துவத்தையும்,சிலுவையில் மரித்து உயிர்த்த இயேசுவையும் தங்கள் வாழ்வின் ஆதாரமாகத் தழுவிக்கொள்ள யூதர்களுக்கும்,யூதரல்லாதவ்களுக்கும் தடையாக இருந்தவற்றை இன்றையப் பதிவில் பட்டியலிடுகிறார் தந்தை." படிக்கற்களை விட தடைக்கற்கள் தான் அதிகமாக இருந்திருக்கின்றன". அத்தனை தடைக்கற்களையும் தாண்டி கிறித்துவம் இன்று நம் வாழ்வில் நுழைந்திருப்பினும்"அது நமக்கு எல்லாமாய் இருக்கிறதா? கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்க்கும் அத்தனையும் நம் வாழ்வில் இடம் பெற்றுள்ளதா?" நின்று,நிதானமாக யோசிக்க வேண்டிய கேள்வி.நாம் துவண்டு போன, சோர்ந்து நின்ற நேரங்களில் நம்மைப் பாதுகாக்கும் தற்காப்புக் கலையாகத் தான் நம்மில் பலர் இறைவனையும்,மதத்தையும் கையாளுகிறோம். அதைவிட்டு இறைவனை,மதத்தை நம் உடலின் அனைத்து செல்களுக்கும் உயிர் கொடுக்கும் இதயமாக,இரத்த ஓட்டமாக, தனது இயக்கத்தால் நமது நாடி நரம்பையெல்லாம்
    புடைக்கச்செய்யும், கிளர்ந்தெழச்செய்யும் மூளையாகப் பார்த்தால் நாம் வணங்கும் இறைவனும்,தழுவிக்கொள்ளும் மதமும் எங்கோ இல்லை; அது நாமேதான்; நமக்குள் இருப்பது தான் என உணருவோம்.வாழ்வின் படிக்கற்களுக்கு அஸ்திவாரமிட்ட தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. Gitanjali A Bernard,
    New York.

    Dear Fr Y. K.:

    Your blog on the Book of Acts is illuminating. Your study on obstacles both for the Jews and the non-Jews is enriching.

    However, permit me to inquire: Is the following an accurate characterization of early Christianity? "மேலும் புதிய நம்பிக்கை (கிறிஸ்தவம்) தழுவியவர்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தனர். 'ஒருவருக்கு ஒரு மனைவி,' 'பரத்தைமை கூடாது,' 'உடல் என்றால் பாவம்,' 'உடல் உயிர்க்கும்,' 'ஓவியம், கலை அறவே கூடாது. அவை சாத்தானின் செயல்கள்' என்று கிறிஸ்தவம் கொண்டிருந்த கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை". Did early teachers of Christian Faith inculcate that "body" is sin, that art was of Satan etc.?

    ReplyDelete