Monday, April 4, 2016

இப்தாவின் மகள்

அவள் அவரிடம், 'அப்பா, நீங்கள் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டீர்களென்றால் உங்கள் வாக்கின்படியே எனக்குச் செய்யுங்கள். ஏனெனில், ஆண்டவர் உங்கள் எதிரிகளான அம்மோனியரை உங்களுக்காகப் பழிவாங்கிவிட்டார்' என்றாள்... ... ... இரண்டு மாதங்கள் முடிந்து அவள் தன் தந்தையிடம் வந்தாள். அவர் தாம் செய்திருந்த நேர்ச்சையின்படியே அவளுக்குச் செய்தார். அவள் ஆணுறவு கொள்ளவே இல்லை. (நீத 11:36, 39).

நாம கோயிலுக்குப் போய் வைக்கும் நேர்ச்சைகள் நமக்கும், நம் குடும்பத்தாருக்கும் அழிவைத் தருவதாக இருந்தால் எப்படி இருக்கும்?

ஒரு அப்பாவின் முட்டாள்தனமான நேர்ச்சையால் ஒரு அப்பாவி மகள் உயிரிழக்கிறாள் நீதித்தலைவர்கள் நூலில்.

அந்த அப்பாவின் பெயர் இப்தா. 'இப்தா' என்றால் 'திறப்பவன்,' அல்லது 'ஆண்டவர் திறப்பார்' என்பது பொருள்.

இப்தா ஒரு அன்ஃபுல்ஃபில்ட் சைல்ட் (unfulfilled child). அதாவது அவரது குழந்தைப் பருவம் இனிமையாக இல்லை. 'விலைமாதின் மகனான' இவர், இவரின் உடன் பிறந்தவர்கள் மற்றும் ஊராரால் ஒதுக்கி வைக்கப்படுகின்றார். குழந்தைப் பருவத்தில் அன்பு செய்யப்படாத, அல்லது கண்டு கொள்ளப்படாத, அல்லது ஒதுக்கப்பட்ட பிஞ்சுகள், வளர்ந்து வரும்போது உள்ளத்தில் கோபம் மற்றும் வன்மம் கொண்டவர்களாக உருவாகிறார்கள். இவர்கள் கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மை (low self-esteem or inferiority complex) இவர்களை 'உயர்வு மனப்பான்மை'  (superiority complex) கொண்டவர்களாக உருவாக்கி, இவர்களின் பிரசன்னமே அடுத்தவர்களின் அழிவுக்குக் காரணமாகிவிடுகிறது.

ஆக, இப்தாவின் குழந்தைப்பருவம் பரிதாபத்துக்குரிய நிலையில் இருந்தது. மேலும், இவரது சேர்க்கையும் சரியில்லை. 'வீணர்கள் இப்தாவுடன் சேர்ந்து கொண்டு அவருடன் திரிந்தனர்' (11:4). பிறப்பும் சரியில்லை. வளர்ப்பும் சரியில்லை. சேர்க்கையும் சரியில்லை.

இதற்கிடையில் அம்மோனியர்கள் இஸ்ரயேலரோடு சண்டைக்கு வருகின்றனர். இந்த சண்டையில் தங்களை வழிநடத்திச் செல்ல இப்தாவே சரியான ஆள் என முடிவெடுக்கின்றனர் கிலயாது என்னும் ஊரின் மக்கள்.

'நீ வந்து எங்களுக்குத் தலைவராக இரு!'

'நீங்கதானே என்னை அடிச்சு விரட்டினீங்க! இப்ப எந்த மூஞ்சியை வச்சிகிட்டு என் முன்னால வந்து நிக்குறீங்க?'

'தப்புதான். நாங்க செஞ்சது தப்புதான். அந்த தப்புக்கு இப்போ பரிகாரம் செய்றோம். நீயே வந்து எங்களுக்குத் தலைவனாக இரு!'

'நீங்க என்னை ஏமாத்த மாட்டீங்கனு எனக்கு எப்படித் தெரியும்?'

'ஆண்டவர் சாட்சியா சொல்றோம், 'நீதான் எங்கள் தலைவன்.''

ரொம்ப பெருந்தன்மையோடு இறங்கி வரும் இப்தா முதலில் அம்மோனியரைப் பேச்சிலேயே மடக்கி விடலாம் என நினைக்கிறார். அவர்களை நோக்கி தூது அனுப்புகிறார். ஆனால் அவர்கள் பணிவதாக இல்லை.

'சரி! சண்டைதான் சரியா வழி!' என நினைக்கும் இப்தா போருக்குத் தயாராகின்றார்.

போருக்குப் போகுமுன் ஆண்டவருக்கு எசகுபிசகான ஒரு நேர்ச்சை செய்கின்றார்:

'நீர் அம்மோனிய மக்களை என் கையில் ஒப்புவித்தால், அவர்களிடமிருந்து நான் வெற்றியோடு திரும்பும்போது யார் என்னைச் சந்திக்க என் வீட்டு வாயிலிருந்து புறப்பட்டு வருகிறாரோ, அவர் ஆண்டவருக்கு உரியவர். அவரைக் கொண்டு வந்து எரிபலியாக்குவேன்!'

ஆண்டவர் அவருக்கு வெற்றியும் அருள்கின்றார்.

ஏதோ ஒரு ஆடோ, மாடோ வரும் என நினைத்து நேர்ச்சை செய்தவர் முன் அவளின் ஒரே மகள் மேள தாளத்துடன் ஆடி வருகிறாள்.

'ஐயோ! என் மகளே! நீ எனக்கு மோசம் செய்துவிட்டாயே! நீ என்னைத் துன்பத்திற்கு ஆளாக்கிவிட்டாயே! நான் ஆண்டவருக்கு வாக்கு கொடுத்துவிட்டேனே! அதை நான் மாற்ற முடியாதே!' என்று கூப்பாடு போடுகின்றார் இப்தா.

ஆனால் மகள் ரொம்ப கூலாக பதில் சொல்கிறாள்.

'அம்மோனியரிடமிருந்து வெற்றி கிடைத்துவிட்டது. நீங்கள் சொன்னதுபோலவே செய்துவிடுங்கள். நான் ரெண்டு மாசம் என் தோழிகளோடு போய் என் கன்னித்தன்மை குறித்து அழுது புலம்பவிட்டு வர விடை கொடுங்கள்' என மலையை நோக்கிப் புறப்படுகின்றாள் அந்த மடந்தை.

துக்கம் கொண்டாடிவிட்டு வந்தவள் எரிபலியாகிறாள்.

ஒரு தந்தையின் வீணான நேர்ச்சைக்குப் பலியாகிறாள் இந்த 'அநாமிகா' (பெயரில்லாதவள்).

தன் தந்தையின் வாக்கு தவறக்கூடாது என்பதற்காவும், தன் இனம் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டது என்று மகிழ்வதற்காகவும் தன்னையே பலியாக்கிய இந்த மெழுகுதிரியின் பெயர் என்ன என்பது இருட்டடிக்கப்பட்டிருக்கிறது. முதல் ஏற்பாட்டு ஆணாதிக்கத்தின் எச்சம் இது.

இந்த நிகழ்வு நமக்கு மூன்று பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது:

அ. குழந்தைப்பருவத்தில் அன்பு செய்யப்படாத குழந்தைகளாக நாம் இருந்தால், அதற்கேற்ற மாற்றைக் கண்டுபிடித்து அன்பை நாம் முழுமையாக அனுபவித்தல் வேண்டும். ஏதோ ஒரு காரணத்தால், அல்லது நம் பெற்றோரின் உடல்நலமின்மையால், அறியாமையால் நாம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், நம்முள் எழும் கோபம், பயம், பொறாமை போன்றவற்றை இனம் கண்டு அவற்றை நாம் குணமாக்க வேண்டும். இல்லையென்றால் அது நம் அன்பிற்குரியவர்களின் அழிவாக உருமாறிவிடும்.

ஆ. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்போது ப்ராமிஸ் பண்ணவும், ரொம்ப கோபமாக இருக்கும்போது முடிவெடுக்கவும் கூடாது. மேலும் ஆண்டவர் முன் வாக்குறுதி அல்லது நேர்ச்சை கொடுக்கும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். 'கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே. எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே. மிகச்சில சொற்களே சொல்' (சஉ 5:2).

இ. இந்த உலகில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை இருக்கின்றது. அதிக மதிப்புள்ள ஒன்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும். குறைவான விலை கொடுத்து அதிக மதிப்புள்ளதைப் பெற முடியாது. ஆண்டவர் தரும் வெற்றிக்கு விலை இப்தாவின் மகளின் உயிர்.

பாவம்! இப்தாவின் மகள்! தான் அன்பு செய்யப்படாததால் என்னவோ, இப்தாவுக்கு தன் மகளையும் அன்பு செய்யத் தெரியவில்லை. தன் வீட்டு ஆடு, மாடு போல தன் விருப்பப்படி நடத்துகின்றார் அவளை.

ஊர் மக்கள் இப்தாவைப் 'பயன்படுத்தி' தங்கள் பாதுகாப்பு என்னும் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்கள். இப்தா தன் மகளைப் 'பயன்படுத்தி' தன் நேர்ச்சை என்னும் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்.

மனிதர்கள் அன்பு செய்யப்படவும், பொருள்கள் பயன்படுத்தப்படவும் வேண்டும் என்ற நிலை மாறி, மனிதர்கள் பயன்படுத்தப்படவும், பொருள்கள் அன்பு செய்யப்படவும் என்று ஆகிவிட்டது.

இப்தாவின் மகள் - எடுப்பார் கைப்பிள்ளை!

2 comments:

  1. அழகான ஆனால் சோகம் பீறிடும் ஒரு பதிவு.தன் கடந்த காலம் தான் திரும்பிப் பார்த்து மகிழ்வுடன் அசைபோடக்கூடிய ஒன்றல்ல என்பது இன்றையப் பதிவில் வரும் இப்தாவின் மாற்றமுடியா மனக்குறை. அதைமறக்கச் செய்வது போல் தனக்கொரு பொறுப்பு கொடுக்கப்படும்போது தான் அதில் வெற்றிபெற்றே தீர வேண்டுமெனும் நோக்குடன் தன்னிலை மறந்து, செய்யும் செயலின் வீரியம் தெரியாது ஒரு நேர்ச்சை செய்கிறார் ஆண்டவருக்கு.பின் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டி,அதில் அன்பு மகளின் பூரண சம்மதமும் இருந்ததனால் அவளைப் பலி கொடுக்கிறார் இறைவனுக்கு.என்னதொரு கோரமான சோகம்! இதிலிருந்து கற்றுக்கொள்ளப்பட வேண்டிய பாடம் தனயருக்கு மட்டுமல்ல ...தாய் தந்தையருக்கும் கூடத்தான்." அடிக்க ஒரு காலமெனில் அரவணைக்க ஒரு காலம்" என்பதுவே அது." கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதுவும் பேசாதே.எண்ணிப்பாராமல் வாக்குக்கொடுக்காதே.மிகச்சில சொற்களே சொல்". நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.இறுதியாக வரும் தந்தையின் வார்த்தைகள்..." மனிதர்கள் அன்பு செய்யப்படவும்,பொருள்கள் பயன்படுத்தப்படவும் வேண்டும் என்ற நிலை மாறி,மனிதர்கள் பயன்படுத்தப்படவும்,பொருள்கள் அன்புசெய்யப்படவும்" என்று ஆகி விட்டது.நாம் செய்யும் செயல் எதுவாயிருப்பினும் சிறிது நேரம் அதை நிறுத்திவிட்டு நம்மை நாமே " ஆத்தும சோசனைக்கு" உட்படுத்த வேண்டிய நேரமிது.வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கக்கூடிய பல நெறிமுறைகளைக் கொண்ட பதிவைத் தந்த தந்தைக்கு நன்றிகள்! ஆண்டவர் தங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!




    என

    ReplyDelete
  2. Insightful explanation on 'anameka' story...

    ReplyDelete