Friday, April 8, 2016

மீக்காவின் அம்மா

மீக்கா தன் அம்மாவிடம், 'உம்மிடமிருந்து ஆயிரத்து நூறு வெள்ளிக் காசுகள் திருடப்பட்டதைப் பற்றி என் காதுபடச் சபித்துக் கூறினீரா? இதோ! அந்த வெள்ளிக்காசுகள் என்னிடமே உள்ளன. அவற்றை எடுத்தவன் நான்தான்' என்றார். அப்பொழுது அவர் தாய், 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!' என்றார். (நீத 17:2)

'அந்நாள்களில் இஸ்ரயேலில் அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப் பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்'

- இந்த வசனம் நீதித்தலைவர்கள் நூலில் நான்கு முறை வருகின்றது. நீதித்தலைவர்கள் நூல் காலத்தில் இஸ்ரயேல் சமூகம் எப்படி இருந்தது என்பதை இது படம்பிடித்துக் காட்டுகிறது. ஒவ்வொருவரும் நேர்மையாகச் செயல்பட்டனர் என்பது இதன் பொருள் அல்ல. மாறாக, ஒவ்வொருவரும் தனக்கு எது சரி என்று பட்டதோ அதைச் செய்து கொண்டிருந்தனர்.

இன்றைய நம் சிந்தனையின் நாயகி 'மீக்காவின் அம்மா'

'மீக்கா' என்றால் 'யார் நிகர்?' என்பது பொருள். இந்த மீக்கா எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்தவர். இங்கேதான் யாவே வழிபாடு சிறப்பாக இருந்தது.

இவரின் அம்மா வைத்திருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகள் திருடு போய்விடுகின்றன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இவருடைய மகனே இதைத் திருடியிருக்கின்றார். சொந்த வீட்டிலேயே திருட்டா? 'நான் தான் திருடினேன்' என மீக்கா சொல்ல, அவரைக் கடிந்து கொள்வதற்குப் பதிலாக, அவரை வாழ்த்துகின்றார் அவரின் அம்மா. ஒருவேளை காசு கிடைத்த மகிழ்ச்சியில் வாழ்த்தினாரோ? அல்லது 'நீ ஒரு நல்ல திருடன்' என்று வாழ்த்தினாரோ?

'இதை நீயே வைத்துக்கொள்!' என்று தன் மகனிடம் வெள்ளிக் காசுகளைத் திருப்பிக் கொடுக்கும் தாய், அந்தக் காசுகளை வைத்து, செதுக்கிய உருவமும், வார்ப்புச் சிலையும் செய்யும்படி கேட்கிறாள். மகனும் அப்படியே செய்கிறார்.

செதுக்கிய உருவம் என்பது மரத்தில் செதுக்கப்படும் சிலை.

வார்ப்புச் சிலை என்பது உலோகங்களை உருக்கி, வார்ப்பில் இட்டு செய்யப்படும் சிலை.

ஆக, சிலைவழிபாடு கண்டிக்கப்பட்டு, ஆண்டவரை மட்டுமே வழிபட வேண்டிய இடத்தில், ஆண்டவர் ஓரங்கட்டப்பட்டு, சிலைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தச் சிலைகள் யாருடையவை என்றும் நமக்குத் தெரியவில்லை. தொடர்ந்து மீக்கா, தன் சிற்றாலயத்திற்கென்று ஒரு குருவையும் வேலைக்கு அமர்த்துகின்றார்.

இன்னும் கொஞ்ச நாட்களில் இந்தச் சிலைகள் திருடப்பட்டுவிடுகின்றன.

மீக்காவின் அம்மா - ஒரு புதிர்.


1 comment:

  1. தந்தையின் தயவில் புதிதாகத் தெரியவரும் பெயர்கள்; விஷயங்கள். " மீக்காவின் அம்மா". இந்தத் தாய்க்கு தன்னுடைய காசுகள் தன் மகனால்தான் திருடப்பட்டுள்ளன என்ற சந்தேகமிருப்பினும்,மகன் அதை ஒத்துக்கொண்டவுடன் அவனை ஆசீர்வதிக்கும் பெருந்தன்மைக்காக அவரைப் பாராட்டியே தீரவேண்டும்.நீதித் தலைவர்கள் நூலில் பெயர் வரும் அளவுக்கு மீக்காவின் அம்மா பெருமை பெற்றவராயினும், அவர் ஆண்டவரைச் சார்ந்தவரா இல்லை அவருக்கு எதிரானவரா எனும் கேள்வி அவரை ஒரு 'புதிராக'க் காட்டுவதும் உண்மைதான்." ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!"... மீக்காவின் அம்மா இந்தச் சொற்களை நம்மைப் பார்த்தும் கூறுவதாக எடுத்துக்கொள்ளலாமே! ஆமாம்...தந்தைக்கு ஒரு கேள்வி! இந்த மீக்காவின் அம்மாவும் கூட ஒரு "அனாமிகா" தானா?

    ReplyDelete