Monday, April 11, 2016

ஏலியின் மருமகள்

நீதித்தலைவர்கள் நூலைத் தொடர்ந்து சாமுவேல் நூல்களில் உள்ள பெண்களைப் பார்ப்போம்.

எல்கானாவின் மனைவியரான அன்னா மற்றும் பெனின்னா பற்றி நாம் ஏற்கனவே எழுதிவிட்டோம். இதற்கடுத்து வரும் ஏலியின் மருமகளோடு நம் பயணத்தைத் தொடங்குவோம்.

சீலோவில் குருவாய் இருந்த ஏலிக்கு ('ஏலி' என்றால் 'என் கடவுள்' என்பது பொருள்') இரண்டு மகன்கள்: ஒப்னி, பினகாசு. 'ஒப்னி' என்றால் 'குத்துச்சண்டைக்காரன்' என்றும், 'பினகாசு' என்றால் 'வெண்கல வாய் உடையவன்' என்பதும் பொருள். ஏலி எந்த அளவுக்கு நல்லவராக இருந்தாரோ, அந்த அளவுக்கு அவரின் மகன்கள் கெட்டவர்களாக இருந்தனர்.

ஆலயத்திற்கு வருபவரை அரட்டி, மிரட்டி பணம் பறித்தனர். கூடார வாயிலில் பணியாற்றிய பெண்களோடு தகாத உறவு வைத்திருக்கின்றனர். இப்படி அவர்களைப் பற்றி மக்கள் பலவாறு பேசுமளவிற்க நடந்து கொள்கின்றனர். இந்த இருவரையும் அழிக்கப்போவதாக கடவுள் சாமுவேல் வழியாக எச்சரிக்கை விடுக்கின்றார்.

பெலிஸ்தியர் இஸ்ரயேலருக்கு எதிராக போர் தொடுக்கின்றனர்.

இந்தப் போரில் இறந்தவர்களில் ஏலியின் மக்களும் அடங்குவர். அந்தப் போரில் வெற்றி பெற்ற பெலிஸ்தியர் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைக் கடத்திக் கொண்டு செல்கின்றனர்.

தன் மகன்கள் இறந்த செய்தி கேட்டு துவண்டுவிடாத ஏலி, 'ஆண்டவரின் பேழை கைப்பற்றப்பட்டு விட்டது' என்றதும் நாற்காலியிலிருந்து மல்லாக்க விழுந்து இறந்து போகின்றார்.

இந்த நேரத்தில் பினகாசின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.

'ஆண்டவரின் பேழை கைப்பற்றப்பட்டுவிட்டது. மாமனார் இறந்துவிட்டார். கணவரும் இறந்துவிட்டார்' என்று ஒரே நேரத்தில் மூன்று துக்கம் தாளாமல், வேதனைக்குள்ளாகி குழந்தை பெற்றெடுக்கின்றாள்.

அந்தக் குழந்தைக்கு அவள் 'இக்கபோது' ('மாட்சியின்மை' அல்லது 'கடவுளின் மாட்சி அகன்றுவிட்டது' என்பது பொருள்).

இவ்வாறாக, கடவுளின் பேழையைத் தங்கள் மாட்சியாகக் கருதினர் இஸ்ரயேல் மக்கள்.


1 comment:

  1. 'ஏலி' என்றால் 'என் கடவுள்'....தன் பெயரின் அர்த்தத்திற்கு நியாயம் செய்யும் முறையில் நடக்கிறார் ஏலி. இருப்பினும் என்ன பயன்? தந்தையைப்போல தனயன்கள் இல்லையே.இறைவனுக்கு ஒவ்வாத பல காரியங்களைச் செய்கின்றனர்.இவர்கள் இருவரையும் அழிக்கப் போவதாக எச்சரித்த கடவுள் இஸ்ரேலருருக்கு எதிரான போரில் இவர்களின் இறப்பையும் உறுதிப்படுத்துகிறார்.மகன்களின் இறப்பு தராத சோகம் ஆண்டவரின் பேழை பறிபோன விஷயம் தந்ததால் துக்கம் தாளாமல் மாண்டு போகிறார் ஏலி. மாமனாருக்கு ஏற்ற மருமகளாக அடுத்தடுத்து சோகங்களைத் தாங்கும் அவரது மருமகள் ஒரு குழந்தையையும் பெற்றெடுக்குறாள்.தங்களது மாட்சியும்,பெருமையும் தங்கள் வாழ்க்கையில் அல்ல..இறைவனின் பேழையில்தான் இருக்கிறது என்பதை வாழ்ந்து காட்டிய மக்களையும் அக்குலப் பெண்களையும் நமக்கு அறிமுகப்படுத்த தந்தை எடுத்திருக்கும் அடுத்த முயற்சிக்குப் பாராட்டுக்கள்!!!!

    ReplyDelete