Tuesday, April 5, 2016

சிம்சோனின் அம்மா

மனோவாகு தம் மனைவியிடம், 'நாம் செத்தோம். ஏனெனில் நாம் கடவுளைப் பார்த்துவிட்டோம்' என்றார். அவர் மனைவி அவரிடம், 'ஆண்டவர் நம்மைக் கொல்வதாயிருந்தால் நம் கையிலிருந்து எரிபலியையும் உணவுப் படையலையும் ஏற்றிருக்கமாட்டார். இவற்றை எல்லாம் காட்டியிருக்க மாட்டார். இதை நமக்கு இப்போது அறிவித்திருக்கவும் மாட்டார்' என்றார். (நீத 13:22-23)

'ஐயோ! எல்லாம் போச்சு!' என்று பதறிய தன் கணவனுக்கு நம்பிக்கை ஊட்டும் இந்த புத்திசாலி மனைவி யார்?

இவர்தான் சிம்சோனின் (சாம்சன்) அம்மா.

சிம்சோனின் அம்மாவை கற்பனை செய்து பார்த்தால் நம் கிராமங்களில் காடு மேடுகளென்று பாராமல் ஆடுகளை மேய்த்துக் கொண்டு திரியும், 20 முதல் 25 வயதுவரை உள்ள, சாதாரண குடும்ப பின்புலத்தைக் கொண்ட, ஏற்றிக் கட்டிய சேலை, கையில் நீண்ட கம்பு, மற்றொரு கையில் தூக்குச்சட்டி, கழுத்தில் ஒரு துண்டு, கழுத்தில் மஞ்சளா, வெள்ளையா என்று தெரியாமல் வெளிறிப்போன தாலிக்கயிறு, அந்தக் கயிற்றில் சில ஊக்குகள், ஒரு முருகன் டாலர், காதுகளின் கம்மலை அடகு வைத்துவிட்டு, ஓட்டைகள் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக சொருகப்பட்ட வேப்ப இலைக் குச்சிகள், வறண்ட சருமம், கலைந்த முடியைக் கொண்ட, ஒரு அலமேலு, அல்லது முருகேசுவரி, அல்லது ருக்குமணிதான் நினைவிற்கு வருகிறார்.

சிம்சோனின் அம்மா ரொம்ப சாதாரணமான பொண்ணு.

கடவுள் என்னவோ சாதாரணமானவர்களைத் தேடியே போகிறார். இந்தச் சின்னப் பொண்ணுக்கு இருக்கும் ஒரே கவலை 'குழந்தையின்மை.' தன் கண்முன்னே தான் வளர்த்த ஆடுகள் எல்லாம் குட்டிகள் போட்டு பலுகிப் பெருக, தான் மட்டும் முதிர்கன்னியாகவே இருப்பது அவளுக்கு நெருடலாக இருந்திருக்க வேண்டும். இருந்தாலும், அதைப்பற்றி அவள் வருந்தவில்லை. 'சாப்பிடவே வழியில்லையாம்! இதுல குழந்தை குட்டிகள் வேறா!' என்று கூட தனக்குத் தானே தைரியம் சொல்லியிருப்பாள். அல்லது 'எல்லாம் நல்லதுக்குத்தான்! நடக்கும்போது நடக்கட்டும்!' என்று காத்திருப்பாள்.

இவள் தன் கணவனின் பெயரை வைத்தே அறியப்படுகிறாள். 'அங்க போறது யாரு? மனோவாகு பொண்டாட்டியா!' என்றுதான் பக்கத்து வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் பேசியிருப்பார்கள்.

இவளைத் தேடி வருகிறார் ஆண்டவரின் தூதர். 'இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்!' என்று தொடங்கி ஏதேதோ சொல்கின்றார். மரியாள், 'ஆமென்!' என்று சொல்லியது போல, இந்தப் பெண் ஒன்றும் பதில் சொல்லவில்லை. நேரே தன் கணவனிடம் ஓடுகிறாள். 'என்னங்க! உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இன்னைக்குக் காலையில ஆடு மேய்ச்சுகிட்டு இருந்தப்போ...' என்று தொடங்கி ஒரே மூச்சில் சொல்லி முடிக்கின்றாள்.

இவளின் கணவன் ஓர் ஆர்வக்கோளாறு. அதே நேரத்தில் கடவுள் பக்தியும் உள்ளவர். 'ஐயா! கடவுளே! இன்னைக்கு வந்த தூதர் மறுபடியும் ஒரு நாள் வரட்டும்!' என்று கடவுளிடம் கேட்கி;ன்றார். தன் மனைவி சொல்வதை நம்பவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

கடவுளின் தூதர் மறுபடியும் வருகின்றார். ஆனா, இப்போவும் இந்தப் பொண்ணு தனியா வயலில் நின்றுகொண்டு இருக்கிறாள். இரண்டு முறையும் இவள் தனியாக நிற்கக் காரணம் என்ன? 'குழந்தையில்லை' என்பதால் ஒருவேளை மனோவாகு இவளுடன் ஒட்டவில்லையோ? காரணம் தெரியவில்லை.

'ஐயா! ஒரு நிமிட் இருங்க! என் ஹஸ்பெண்டைக் கூட்டி வருகிறேன்!' என்று அரைகுறை ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, தன் கணவனைத் தேடி ஓடுகிறாள். கணவனும் தூதரைப் பார்க்க விரைந்து வருகின்றார்.

தான் முன்பு சொன்னதை கடவுளின் தூதர் திரும்பவும் சொல்கிறார்.

'ஆமா! உங்க பேரு என்ன? நாங்க உங்களுக்கு ஏதாவது செய்யணுமா?' என்று வெகுளித்தனமாகக் கேட்கிறார் மனோவாகு.

'என் பேரை நீ ஏன்ப்பா கேட்குற?' என முறைத்துக்கொள்ளும் தூதர், 'நீ கடவுளுக்கு வேண்டுமாhனல் பலி செலுத்து என்கிறார்!' பலி செலுத்துகிறார் மனோவாகு. அந்தப் பலியின் நெருப்பில் கரைந்து மறைந்து போகிறார் தூதர்.

மனோவாகுவிற்கு பயம். 'கடவுளையே பார்த்துட்டோம்! கடவுளையே சோதிச்சுட்டோம்! சாகப்போறோம்!' என்கிறார்.

'தோடா...ஏன் இப்படி பயந்து சாகுற? இப்போ என்ன ஆய்டுச்சு? அவர் நம்மள தண்டிக்கிறதுனா நம்மகிட்ட வந்திருப்பாரா...சும்மா கம்முனு கிட!' என ஆறுதல் சொல்கிறார் அம்மணி.

மனோவாகின் மனைவி மூன்று விடயங்களைக் கற்பிக்கிறாள் நமக்கு:
1. தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள சீக்ரெட். கடவுளின் தூதரின் வார்த்தைகளைத் தன் கணவரிடம் சொல்லும் இவள் ஒரு முக்கியமான விஷயத்தை மறைத்துவிடுகிறாள். 'பிள்ளை கடவுளுக்கான நாசீராக இருப்பான்' என்று சொன்னவள், 'அவன் தலையில் சவரக்கத்தி படக்கூடாது,' என்பதையும், 'அவன் இஸ்ரயேல் மக்களை பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிப்பான்' (13:5) என்பதையும் மறைத்துவிடுகிறாள். இந்த விஷயம் மூவருக்கு மட்டுமே தெரிகிறது: கடவுள், அம்மா, மகன். யாருக்குமே தெரியாத இந்த சீக்ரெட்டை தெலீலாவிடம் சொன்னதால்தான் சிம்சோன் சிறைப்பிடிக்கப்படுகிறார். ஒவ்வொரு குழந்தையை தன் கருவில் தாங்கும்போதும் ஒரு தாய் கடவுளிடமிருந்து ஒரு செய்தியைப் பெறுகிறாள். அந்தச் செய்தியை அவள் தன் குழந்தைக்கு மட்டும் சொல்கிறாள். தன் கணவனுக்கும் அவள் சொல்வதில்லை. இதுதான் தொப்புள்கொடி உறவு. இந்த தொப்புள்கொடி வழியாக தாய் தன் குழந்தைக்கு உணவை மட்டும் பகிர்வதில்லை. தன் எண்ணம், ஏக்கம், கலக்கம், கனவு அனைத்தையும் பகிர்கிறாள்.

2. தாயின் தியாகம். கடவுளுக்கான நாசீராக இருப்பவர்தான் மதுவோ, திராட்சை ரசமோ அருந்தக் கூடாது (காண். எண் 6:1-5). ஆனால், இங்கே தன் மகன் நாசீராக ('அர்ப்பணிக்கப்பட்டவனாக') இருப்பதற்காக, தான் பட்டினி கிடக்கின்றாள் இந்த ஏழைத்தாய்.

3. அறிவாளி. ஆண்களுக்குப் புரியாத பல விஷயங்களை பெண்கள் மிக எளிதாக புரிந்து கொள்கிறார்கள். இங்கே கடவுளின் மனதையே புரிந்து கொள்கிறாள் இந்தச் சின்னப் பொண்ணு. தன் ஆழ்மனதோடு தொடர்பில் இருக்கும் ஒருவர் எல்லா மறைபொருள்களையும் அறிந்து கொள்வார். வாழ்வின் எல்லா சூழல்களிலும் பதற்றமின்றி செயலாற்றுவார். சிம்சோனின் அம்மாவும் தன் ஆழ்மனதோடு தொடர்பில் இருந்தாள்.

சிம்சோனின் அம்மா - நம் அம்மாக்களின் உருவகம்!


1 comment:

  1. இன்றையப் பதிவின் விஷயங்களைவிட இந்தப் பதிவைத்தந்த தந்தையைப் பாராட்டத்தோன்றுகிறது, அவருடைய இந்த அசாதாரணத் திறமைக்காக! ஆம்..ஒன்றைப் பார்ப்பது மட்டுமல்ல...அதன்/ அவர் சம்பந்தப்பட்ட அத்தனையையும் காமெராவில் படம் எடுப்பது போல் எடுத்து,அதைப் பிறருக்குக் கொடுக்க வேண்டிய நேரத்தில் அப்படியே சிந்தாமல்,சிதறாமல் அள்ளித்தரும் பாங்கு.இறைவன் இவருக்குத் தந்திருக்கும் 'photographic memory'...அரிய கொடை.சிம்சோனின் அம்மாவை எத்தனை இயற்கையாக, ஒரு இறைபக்தி நிறைந்த..ஒருகிராமத்துப் பெண்மணியிடம் காணக்கூடிய அத்தனை அம்சங்களுடன் நேரில் பார்ப்பது போல் ஒன்று விடாமல் வர்ணித்திருப்பது ஒரு அழகு. சரி..விஷயத்திற்கு வருவோம்.கருவுற்றிருக்கும் ஒரு தாயின் மன,உடல் நிலையைத் தந்தை வர்ணித்துள்ள விதம் ஒரு தாயைப் " படைப்புக்களின் சிகரம்" என்று வியக்குமளவிற்கு புருவத்தைத் தூக்க வைக்கிறது." ஒரு தொப்புள் கொடி வழியாக ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவை மட்டுமல்ல; தன் எண்ணம்,ஏக்கம்,கனவு,கலக்கம் அனைத்தையும் பகிர்கிறாள" உண்மை.நம்மவர்களிடமும் கூடத்தான் பார்க்கிறோம்....தான் பெற்றெடுக்கப்போகும் குழந்தையின் நல்ல எதிர்காலத்திற்காக அவன்/ அவள் கருவிலிருக்கையிலேயே பட்டினி உட்பட சகல வகையிலும் தங்களை ஒடுக்கும் தாய்மார்களை! அந்த இறுதி வரிகள்...நமக்குத் தரும் செய்தி.." தன் ஆழ்மனத்தோடு தொடர்பில் இருக்கும் ஒருவர் எல்லா மறைபொருள்களையும் அறிந்து கொள்வார்.வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் பதற்றமின்றி செயலாற்றுவார்.சிம்சோனின் அம்மாவும் கூட அப்படி ஒரு அம்மா தான்" .கருவைச் சுமக்கும் தாய்மார் மட்டுமின்றி அனைவருமே பழக்கத்தில் கொண்டு வரவேண்டியதொரு பாடம்.ஆமாம்..."சிம்சோனின் அம்மா- நம் அம்மாக்களின் உருவகம்!" அன்னையருக்குப் பெருமை சேர்க்கும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!


    ReplyDelete