Friday, May 8, 2015

புத்தக மாதம்

மே மாதம் புத்தக மாதம் எனக் கொண்டாடப்படுகிறது இத்தாலியில்.

இணையதளங்கள் வந்தபின் வாசிப்பவர்கள் குறைந்து எழுதுபவர்கள் அதிகமாகிவிட்டார்கள் என்கிறது ஒரு சர்வே. நாம் ஒருநாளில் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டுவிட்டர், ப்ளாக்கர் என்னும் செயலிகளில் வாசிக்கும் வார்த்தைகளை கணக்கெடுத்துப் பார்த்தால் முந்தையை தலைமுறையை விட நாம் அதிகமாகவே வாசிக்கிறோம். ஆனால், என்ன ஒரு வித்தியாசம் என்றால், முந்தைய தலைமுறையினர் தாங்கள் விரும்பியதை எடுத்து வாசித்தர்கள். ஆனால், நம் தலைமுறை நம் செல்ஃபோன் திரையில் வந்து 'விழுவதை' மட்டுமே வாசித்து திருப்தியடைகிறது. நாம் இந்த தொடுதிரையில் வாசிப்பவற்றில் ஏறக்குறைய 80 சதவிகித வார்த்தைகள் நமக்குத் தேவையற்றவை. சிலவற்றை வேறு யாராவது நமக்கு முன்பே அனுப்பி அதை நாம் ஏற்கனவே வாசித்து முடித்திருப்போம்.

மற்றொரு பக்கம். வார்த்தைகளை மட்டும் வாசிக்கத் தேவையில்லை. ஓவியம், புகைப்படம், கட்டடம் என எல்லாவற்றையும் நாம் எழுத்துகள் போல வாசிக்க முடியும். எழுத்து என்பதே ஒருவகை ஓவியம்தானே.

கொஞ்ச நாட்களாக தாமஸ் அக்வினாஸ் அவர்கள் எழுதிய 'சும்மா தியோலோஜிகா!' வாசிக்க ஆசை. ஏறக்குறைய 5000ஆம் பக்கங்களுக்கு மேல் எழுதிமுடித்த அக்வினாஸின் ஒரிஜினல் எழுத்துக்களை அடுக்கி வைத்தால் ஒரு அறை போதாது என்பார்கள். இவ்வளவும் எழுதி முடித்த பின்பு 'நான் எழுதியவை கடவுளைப் பற்றிய ஒரு முன்னுரையின் முதல் எழுத்து கூட அல்ல!' என்று நிறைவு செய்கிறார். என்னே இவரது தேடல்!

"எழுதிவிட்டு பின் வாசிப்பவர்கள் படைப்பாளர்கள். வாசித்துவிட்டு எழுதுபவர்கள் ஜெராக்ஸ் மிஷின்கள்."

புத்தகங்கள் நமக்கு புதிய உலகத்தைத் திறக்கின்றன. உதாரணத்திற்கு, டோஸ்டாவ்ஸ்கியின் 'தி இடியட்' அல்லது டால்ஸ்டாயின் 'ரெசுரக்ஷன்' வாசிக்கும்போது ரஷிய நாட்டின் வீதிகளில் நாமும் நடப்பதுபோலவே இருக்கின்றது.

அடுத்தவரின் தலைக்குள் நாம் நுழைந்து பார்ப்பதை அவரது மண்டைஓடு தடுக்கிறது. ஆனால், அவரே தன் தலைக்குள் ஓடுவதை எழுத்துகளில் பதிவு செய்யும்போது அது அவரை உலகிற்குத் திறந்து காட்டுகிறது.

சிலர் நிறைய வாசிப்பார்கள். ஆனால், ஒரு வார்த்தையும் எழுதியிருக்க மாட்டார்கள்.

சிலர் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுவார்கள். ஆனால் தங்கள் எழுத்துக்களைத் தவிர வேறொன்றையும் வாசித்திருக்கவே மாட்டார்கள்.

'வாசிப்பதும், எழுதுவதும்' இணைந்தே செல்ல வேண்டும் என்பது என் கருத்து.

'புத்தகங்கள் வாங்கும் பணம் செலவு அல்ல. அது முதலீடு!' என்று விளம்பரங்கள் செய்து புத்தகங்களை வாங்க ஊக்குவிக்கிறார்கள். 'பேனாமுள் வாளைவிட கூர்மையானது' என்பது ஆங்கிலப் பழமொழி.

எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால் எழுத்துகளை வாசிக்கும்போது நாம் அந்த இறைவனின் தோலைத் தொட்டுப் பார்க்கிறோம்.

'வாழ்க்கை கரையில. கற்பவர் நாள் சில!'

அதிலும் வாசிப்பவர் நாள் மிகச் சிலவே!

2 comments:

  1. சிறிது நாட்களுக்கு முன்பு வரை யாரேனும் புத்தகமும் கையுமாக இருப்பின் அதிலும் அவர் எழுத்தாளராகவும் இருக்கும் பட்சத்தில் புருவங்களை உயர்த்துவோம் ஆச்சரியத்தில். ஆனால் இன்று ஊடகங்கள் தொட்டுவிடும் தூரத்தில் வந்தபிறகு யார் வேண்டுமானாலும் எழுதலாம்; எது வேண்டுமானாலும் எழுதலாம்; தன்னுடைய எழுத்து வாசிப்பவரை எப்படியெல்லாம் பாதிக்கும் என்ற கவலையின்றி எழுதலாம் என்றாகிவிட்டது. ஆனால் 'புத்தகம்', 'புத்தகமாதம்' என்று புத்தக சம்பந்தப்பட்ட எதுவாயினும் என் நினைவுக்கு வருவது தாங்களே! நல்ல புத்தகங்களைத் தேடிப்போய் வாங்கிப் படித்து,அவற்றைத் தன்னுள் கரைத்துத்,தேவைப்பட்ட சமயத்தில் தேவைப்பட்டவருடன் பகிர்ந்து கொள்ளும் தங்களை ஒரு 'நடமாடும் நூலகம்' என்றழைத்தால் மிகையாகுமா என்ன?

    ReplyDelete
  2. Anonymous5/09/2015

    Dear Yesu, How are you? I am keeping good health. Good write up Yesu. Yesterday Fr. Arulroyan had inaugural ceremony of the New Grotto of Our Lady of Lourdes. I celebrated Mass in Sivakasi and conducted Full Night Vigil Prayer Service in Srivilliputhur. Tomorrow diocesan ordination takes place in Gnana.

    ReplyDelete