Monday, May 25, 2015

அருளுக்கு மேல் அருளை

'இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும்
அருளுக்கு மேல் அருளைப் பெற்றுள்ளோம்.'
(யோவான் 1:16)

பிப்ரவரி 18 சாம்பல் புதனோடு தவக்காலம் தொடங்கி, தவக்காலம், புனித வாரம், ஆண்டவரின் உயிர்ப்பு, உயிர்ப்பு காலம், விண்ணேற்றம், பெந்தகோஸ்தே என ஏறக்குறைய 100 நாட்கள் கடந்து விட்டன. ஆலயங்களில் இன்று பார்த்திருப்பீர்கள். பச்சை திருவுடை, பச்சை திரைச்சீலை, பச்சை பீடத்துணி என இன்று எல்லாம் மாறியிருக்கும். மீண்டும் பொதுக்காலத்திற்குள் இன்று நுழைந்திருக்கிறோம்.

இந்த 100 நாட்கள் நாம் பெற்ற அருளை ஜீரணிக்கவும், அதை நம் வாழ்வின் இரத்த ஓட்டத்தில் கலக்கவும்தான் இந்தப் பொதுக்காலம்.

தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த 100 நாட்களும் அருளின் நாட்களாக இருந்தது என்றே சொல்வேன்.

நார்வே, நாப்போலி என புதிய பயணங்கள்.
புதிய செப அனுபவங்கள்.
புதிய கலாச்சாரம். புதிய மனிதர்கள்.
முதுகலைப் படிப்பின் முக்கிய ஆய்வுத்தாள்களை நான் எழுதியதும் இந்நாட்களில்தான்.
முனைவர் படிப்பிற்கான படிக்கட்டுகள் இடப்பட்டதும் இந்நாட்களில்தான்.
கல்லூரியில் மாணவர் தலைவர் பணி இனிதே நிறைவுற்றதும் இந்நாட்களில்தான்.
ஞாயிறு மறையுரை எழுதத் தொடங்கி வாரம்தோறும் ஏறக்குறைய 500 பேர் படித்து, ஐம்பதாயிரம் (!) பேருக்கு சொல்லும் அளவுக்கு வளர்ந்ததும் இந்நாட்களில்தான்.
என் குருகுல நண்பர்கள் பலரோடு உறவுகளைப் புதுப்பித்துக்கொண்டதும் இந்நாட்களில்தான்.
கட்டளை செபத்தை மிக ஆர்வமாக செபிக்கத் தொடங்கியதும் இந்நாட்களில்தான்.
தனிமை, விரக்தி, மனச்சோர்வு எதுவும் இல்லாமல் இருந்ததும் இந்நாட்களில்தான்.

உங்கள் வாழ்விலும் இந்த நாட்கள் கண்டிப்பாக அருளின் நாட்களாக இருந்திருக்கும். இறைவன் இந்த அருளை நம் அன்றாட வாழ்வில் புதுப்பித்து, இன்னும் முன்னோக்கி நம்மை அழைத்துச் செல்ல ஒருவருக்கொருவர் இன்று செபிப்போம்.

பசுமையாகத் தொடங்கும் இந்த பொதுக்காலம் பசுமையான நினைவுகளைத் தரட்டும். நம்பிக்கை என்னும் பசுமையை விதைக்கட்டும்.


2 comments:

  1. படிப்பவரின் மனத்தில் நம்பிக்கையைத் தூண்டும் அழகானதொரு பதிவு.கடந்து வந்த 100 நாட்களைத் திரும்பிப்பார்த்து இறைவன் தனக்குச் செய்த நன்மைகளைப் பட்டியலிட்டுக் காட்டும் தந்தையை நினைத்துப் பெருமைப்படவும்,இறைவனுக்கு நன்றி கூறவும் தோன்றுகிறது. இறைவனின் மகிமைக்காகத் தாங்கள் செய்யும் இப்பணி, மற்றவரின் மனத்தில் தாங்கள் தூவும் இந்த விதைகள் விருட்சமாக வளர்ந்து, பத்தாகவும்,நூறாகவும் பயன்தர, அவர்கள் உள்ளத்தையும் இல்லத்தையும் பசுமையாக்க வேண்டுமென வேண்டுகிறேன்; தங்களை வாழ்த்துகிறேன்.....

    ReplyDelete
  2. Anonymous5/26/2015

    hi yesu good morning. Good God bless you.

    ReplyDelete