Tuesday, May 5, 2015

அவன் மிடில் கிளாஸ்!

இந்த வார ஆனந்த விகடன் 'வலைபாயுதே' பகுதியில் இரண்டு வாக்கியங்கள் எனக்கு மிகவும் பிடித்தன:

அ. 'மொபைலில் நெட் கார்டு போட முடியாத நிலைதான் இன்றைய வறுமை!'

ஆ. 'டிவி பார்க்கும்போது ஒரு சேனலிலிருந்து அடுத்த சேனலுக்கு மாற்ற ரிமோட்டைத் தட்டித் தட்டி மாற்றுகிறான் என்றால் அவன் மிடில் கிளாஸ்!'

'இருப்பதும்', 'இல்லாமல் இருப்பதும்' தனிநபர் சார்ந்தது. இவர் இருப்பவர் என்றும் இவர் இல்லாதவர் என்றும் நாம் எளிதாகச் சொல்லிவிட முடிவதில்லை. ரோட்டில் போகிறோம். நிறையக் கடைகள் இருக்கின்றன. நிறையக் கடைகளில் நிறைய பொருட்கள் இருக்கின்றன. எல்லாப் பொருட்களும் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன. எல்லாப் பொருட்களும் நமக்குத் தேவை என்பது போலவும் இருக்கின்றன. 'என்னிடம் மட்டும் நிறையப் பணம் இருந்தால்...!' என உள்மனம் கணக்குப் போடத் தொடங்குகிறது. பர்ஸ் நிறைய பணம் இருந்தாலும் நாம் சில நேரங்களில் கடைகளில் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வீடு திரும்பிவிடுகிறோம். வாழ்க்கை நார்மலாக போகிறது. அந்தப் பொருட்களின் இல்லாமை நம் வாழ்க்கைப் பாதையை எந்த அளவிலும் மாற்றவில்லை.

ஆக, 'இருப்பதும்', 'இல்லாமல் இருப்பதும்' தனிப்பட்ட நபரின் மனம் சார்ந்தது. 'உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா!' என்று இதைச் சொன்னார் கண்ணதாசன்.

'நாம் சிறுவயதாக இருந்தபோது அதிக தீப்பெட்டி லேபிள்களும், அதிக சிகரெட் அட்டைகளும் சேர்ப்பவர்களே நம் குழுவில் பெரியவராக, பயத்திற்குரியவராக கருதப்பட்டார். கொஞ்சம் வயது வந்த பிறகு, நாம் மதிப்பு என கருதி வந்த தீப்பெட்டி லேபிள்கள் வெறும் விளையாட்டு;ப்பொருள் என ஆனதால், இன்று ரிசர்வ் வங்கி தாள்களை சேகரித்து நம் மதிப்பைத் தேடுகிறோம்!' என்பார் பழ. கருப்பையா.

மற்றொரு பக்கம், நம் காசை செலவழித்து, நம் காசில் காணிக்கை போட்டு, நம் காசில் அபிஷேகம் செய்து, பூசாரி தட்டில் நம் காசை போட்டு, கடவுளிடம் 'எனக்கு காசு கொடு!' என்று சொல்லிவிட்டு வருகிறோம். 'மரம் வைத்தவனுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்!' என்று தெரியாதா? அவனிடம் போய் தினமும் 'தண்ணீர் ஊற்று!' என்று சொல்ல வேண்டுமா என்ன?

'இருப்பதையும்', 'இல்லாமல் இருப்பதையும்' ஒன்றாக எண்ணுதல் சால்பு.


1 comment:

  1. கூழுக்கு உப்பும்,பாலுக்கு சீனியும் இல்லாத்து 'இல்லாமையின்' அடையாளம் என்பதுபோய் இன்று மொபைலில் நெட்கார்டு போடமுடியவில்லை என்பதும்,அவரவர் விருப்பத்திற்கிணங்க சேனல்கள் மாற்ற ஆளுக்கொரு டி.வி இல்லை என்பதும் தான் இல்லாமையின் அடையாளம் என்றாகிவிட்டது.கண்டிப்பாக ஒரு விஷயம் நமக்குத் தேவையா,தேவையில்லையா என்பதை அளக்கும் அளவுகோல் நம் 'உள்ளம்'தான்.அந்த அளவுகோல் சமநிலை காட்டும் பட்சத்தில் இருப்பும்,இல்லாமையும் ஒன்றுதான். தந்தையே! மரம் வைத்தவனுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று தெரியும்தான். ஆனால் காய்ந்துபோன மரத்திற்குத் தானே ப்ரிஃபரென்ஸ்? அதை நாமே அவரிடம் முறையிடவேண்டுமென அவர் நினைப்பதில் தவறில்லையே!?

    ReplyDelete