Tuesday, May 12, 2015

ஓர்ஃபா என்னும் ஃபீனிக்ஸ்

கடந்த ஆண்டு 'ரூத்து' நூலை எபிரேய மொழியில் படித்தோம். இந்த ஆண்டு அதன் கிரேக்க மொழிபெயர்ப்பை படித்துக் கொண்டிருக்கிறோம். கிரேக்கத்தில் வாசிக்கத் தொடங்கியபோது என்னில் தோன்றிய ஒரு பெண்ணின் உணர்வை இங்கே பதிவு செய்கிறேன்.

வழக்கமாக கதாநாயகர்களைக் கொண்டிருக்கும் விவிலிய நூல்களிலிருந்து (எ.கா. தொநூ - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு. விப - மோசே. யோசுவா நூல் - யோசுவா) ரூத்து வித்தியாசமாக இருக்கிறது. காரணம், இங்கே கதாநாயகர்கள் கிடையாது. வெறும் கதாநாயகிகள் மட்டும்தான்.

கதாநாயகிகள் மூன்று பேர் - நவோமி, ஓர்ஃபா மற்றும் ரூத்து. நவோமி மாமியார். ஓர்ஃபா மற்றும் ரூத்து மருமகள்கள். மூன்று பேருமே கைம்பெண்கள். அவர்களை விதவைகள் என்று சொல்ல வேண்டாம். அது ரொம்ப கொடூரமான வார்த்தையாக இருக்கிறது.

இந்த மூன்று பேருமே இழப்பை அதிகமாக உணர்ந்தவர்கள்.

வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் இவர்கள்.

வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் இவர்கள்.

தங்கள் ஊரில் பசி என்று இங்கு வந்து இங்கேயும் ஒன்றுமில்லாமல் இருப்பவர்கள்.

'சட்டியின் சூட்டிற்குத் தப்பி அடுப்பில் விழுந்தவர்கள்!'

கணவனை மட்டும் இல்லாமல் மகன்களையும் இழந்தவர் நவோமி.

கணவர்களை மட்டும் இல்லாமல், பிள்ளைப்பேறு நிலையையும் இழந்தவர்கள் ஓர்ஃபா மற்றும் ரூத்து.

'எல்லாம் முடிந்தது! இனி சொந்த ஊருக்குப் போவோம்!' என்று நினைக்கின்ற நவோமி தன்
மருமகள்களை அவர்களது வீட்டிற்கு அனுப்ப முயற்சி செய்கின்றார்.

'உங்கள் அம்மாவின் வீட்டிற்கும், உங்கள் கடவுளிடமும் திரும்பி போங்கள்!' என்கிறார் நவோமி. இங்கேயும் கவனிக்க வேண்டும். 'அம்மாவின் வீடு' என்றுதான் அடையாளம் கொடுக்கப்படுகிறது. ஆக, பெண்கள் ஆண்களை விட மேலான நிலையில் இருந்தார்கள் என்று சொல்ல முடியவில்லையென்றாலும், அவர்கள் ஆண்களுக்குச் சமமான நிலையில்தான் இருந்திருக்கிறார்கள்.

ஓர்ஃபாவும், ரூத்தும் அக்கா-தங்கையர் அல்லர். மாறாக, ஒரே இனத்தை அதாவது 'மோவாபு' இனத்தைச் சேர்ந்தவர்கள்.

'போங்க! போங்க! போங்க!' என்று மூன்று முறை நவோமி சொல்ல 'போய் வருகிறேன்!', இல்லை, 'போகிறேன்!' என விடை பெறுகிறார் ஓர்ஃபா. ஆனால் ரூத்து மட்டும் 'நீர் எங்கு செல்வீரோ அங்கு நானும் செல்வேன். நீர் எங்கு தங்குவீரோ அங்கு தங்குவேன். உம் மக்கள் என் மக்கள். உம் கடவுள் என் கடவுள். இறப்பிலும் நான் உம்மைப் பிரியேன்!' என்று நவோமியைப் பற்றிக்கொள்கிறார்.

இந்த வசனத்திற்குப் பின், ரூத்து மட்டுமே முழுநூலின் கதாநாயகியாக இருக்கிறார்.

ஆனால், இன்று என் கதாநாயகி திரும்பிப் போன ஓர்ஃபா தான்.

வரலாற்றில் சாதாரண பெண்களுக்கு இடமில்லை தானே. அன்றிலிருந்து இன்று வரை எழுத்து ஊடகங்களும், ஒலி-ஒளி ஊடகங்களும் வலிமையானவர்களுக்கும், வித்தியாசமானவர்களுக்கும் தான் முக்கியத்துவம் கொடுத்துவருகிறது.

ஆனால் சாதாரணமாக இருப்பதும் பெரிய விடயம்தான் என்பதைக் காட்டிவிட்டார் இந்த ஓர்ஃபா.

'ஓர்ஃபா' என்றால் எபிரேயத்தில் 'கழுத்தின் பின்புறம்' என்பது பொருள்.

உங்க கழுத்தின் பின்புறம் தடவிப்பாருங்களேன். மிகவும் கடினமான எலும்பு இருக்கும். இந்த எலும்பில்தான் மாடுகளுக்கு நுகம் பொருத்தப்படுகிறது. இந்த எலும்புதான் சுமைதூக்குபவர்களுக்கும், மூடை தூக்குபவர்களுக்கும் சுமையைத் தாங்கிக்கொள்ள உதவுகிறது. நம் குழந்தைகளை நம் தோளின் மேல் அமர வைத்துத் தூக்கி மகிழ்கிறோமே, அதை சாத்தியப்படுத்துவதும் இந்த எலும்புதான்.

ஆக, தன் பெயருக்கேற்றாற்போலவே தன் சுமையை தானே சுமக்க சென்றுவிட்டார் ஓர்ஃபா.

எதுவுமே இல்லாத தன் மோவாபு நாட்டில் எதை நம்பிப் போயிருப்பார் இந்தத் தையல்?

இவங்க அம்மா வீட்டுல என்ன சொல்லியிருப்பாங்க?

'இப்படி வாழா வெட்டியா வந்துட்டியேடி!' என்று திட்டியிருப்பார்களா?

அல்லது 'வாடா தங்கம் நான் இருக்கிறேன்!' என்று அவரது அம்மா சொல்லியிருப்பாளா?

'கணவன் இல்லாமல் இருக்கிறாள். நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!' என்று இவளது பாதுகாப்பின்மையை 'பயன்படுத்திக்கொள்ள' நினைக்கும் ஆண் கழுகுகளின் முன் எப்படி வாழ்ந்திருப்பார்?

மறுமணம் செய்திருப்பாரா?

ஏதாவது வேலைக்குப் போயிருப்பாரா?

எத்தனை குழந்தைகள் பெற்றிருப்பார்?

தான் இழந்ததையெல்லாம் பெற்றுக்கொண்டாரா?

தன் மாமியாரை வேறு எங்காவது பார்த்தாரா?

தன் சக்களத்தி ரூத்தைப் பார்க்கக் சென்றாரா?

இதில் எந்தக் கேள்விகளுக்கும் நம்மிடம் விடையில்லை.

ஆனால், இந்த ஓர்ஃபா ஒரு பெரிய வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தருகிறார்.

நம்ம ஊருல சாப்பாடு இல்லனு, துபாய், சிங்கப்பூர்னு வேலைக்குப் போய், பாஸ்போர்ட் இழந்து, கடன்மேல் கடன்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, மீண்டும் கிராமம் திரும்பும் ஒரு சாதாரண கூலிக்காரரை பிரதிபலிக்கிறார் இந்த ஓர்ஃபா.

எல்லாவற்றையும் இழந்தாலும், இறந்த காலத்திற்கு மீண்டும் வாழ்க்கை நம்மைத் தள்ளிக்கொண்டு போனாலும், சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவையாய் நிற்கிறார் ஓர்ஃபா.

இன்று ஓர்ஃபா போன்று சாதாரண பெண்கள் பலர் அன்றாடம் விழுந்தாலும் எழுந்து கொண்டேதான் இருக்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

2 comments:

  1. என் மனத்துக்கு மிகவும் நெருக்கமான பகுதி இன்றைய 'ரூத் ஆகம்ம்'. அந்த நெருக்கத்திற்குக் காரணமே தந்தைதான்.ஆனால் இன்றைய விளக்கத்தில் சிறு வித்தியாசத்தைக் உணர்கிறேன்.ஒருவேளை வெவ்வேறு மொழிகளில் படிப்பதனால் அதனதன் பின்புலத்திற்கேற்ப மாறுபடும் சிந்தனை ஓட்டம் காரணமாயிருக்கலாம்.மாமியார் பேச்சைக் கேட்டுத் தாய் வீடு செல்லும் 'ஓர்ஃபா'வை விடத் தான் கஷ்டப்பட்டாலும் தன் மருமகள்களின் நன்மை கருதி அவர்களைத்தாய் வீடு போகச்சொல்லும் மாமியார் ந்வோமியும், வாழ்வோ தாழ்வோ அதை மாமியாருடன் சேர்ந்தேதான் அனுபவிக்கணும் என்றெண்ணும் மருமகள் ரூத்தும் கூட என் பார்வையில் 'ஃபீனிக்ஸ்' பறவைகளாகத்தான் தெரிகிறார்கள் .ஓர்ஃபாவைக் குறைத்து மதிப்பிட வில்லை...ஆனால் அவளும் கூட " கலப்பையில் கை வைத்தவன் திரும்பிப்பார்க்கலாகாது" எனும் கூற்றுக்கிணங்க மாமியார் கூடவே இருந்து 'வந்த' வாழ்க்கைக்கு வலு சேர்த்திருக்கலாம். நம் குலத் தாய்மார்களின் எண்ணமும் கூட அதுவாகத்தான்இருக்குமென்று நினைக்கிறேன். தந்தை ஒப்புக்கொள்வாரா தெரியவில்லை.....தங்களின் எழுத்துக்கு மெருகூட்டும் இம்மாதிரிப் படங்களை எங்கிருந்து இறக்குமதி செய்கிறீர்கள்? பாராட்டுக்கள்!!!!!!

    ReplyDelete
  2. அட ... அருமை .. ஓர்பாவைப் பத்தி ஒருக்காலும் யோசிச்சதே இல்லை .. எப்பிடி சாமி உங்களுக்கு மட்டும் இப்டிலாம் யோசிக்க வருது ?

    ReplyDelete