Monday, May 4, 2015

ஆடி வந்த அழகர்

இன்று காலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்.

இது என்ன அதிசயமா? அவர்தான் ஒவ்வொரு வருஷமும் இறங்குகிறாரே? - அப்படின்னு சொல்றீங்களா?

இந்த ஆண்டும் பச்சைப்பட்டுதான்.

மதுரை செழிக்க அழகர் அருள்கூறட்டும்.

மதுரை செழிப்பதற்காக பச்சையா அல்லது ஜெயாவுக்கு சாதகமான தீர்ப்பு வருவதற்காக பச்சையா என்று தெரியவில்லை. அரசன் சொல்வதைத்தான் கடவுள் கேட்கவேண்டும் என்பது கடவுள் தொடங்கிய காலத்திலிருந்து நடப்பதுதானே.

கள்ளழகரைப் பற்றிய செய்தியை வாசித்தபோது, 'அழகருக்கு வியர்க்கும் என்று பக்தர்கள் விசிறி கொண்டு விசிறினார்கள்!' என்ற வாக்கியம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இன்று நம்ம ஊருல அக்னி நட்சத்திரம் வேறு. இன்றிலிருந்து 21 நாட்களுக்கு கதிரவன் உச்சநிலையில் ஜொலிப்பான். ஆக, கடவுளுக்கே வியர்த்து ஊற்றும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்? நிறைய விசிறிகள் வாங்கி வைத்துக்கொள்வது நலம். 'சொல்லாமல் போவதும், சொல்லாமல் வருவதும் தான் நம்ம ஊரில் மின்சாரம்!' ஆக, விசிறி வாங்கினாலும், நம்ம தெனாலிராமன் கதையில் வருவது போல, விசிறியை பிடித்துக்கொண்டு, நம் தலையை அதன் முன் ஆட்டினால், விசிறியும் கெடாது. காற்றும் வரும்(!). காற்றுவருமோ இல்லையோ கழுத்து வலி வரும்.

இந்த ஒருநாள் மதுரையில் நிறைய அழகர்கள் இருப்பார்கள். அழகரைப் போல உடை உடுத்திக்கொண்டு, வேடமிட்டு நீரைப் பீய்ச்சி அடித்த வண்ணம் வருவார்கள். (ஆனா இந்த அழகர்கள் பெண்கள் மேல்தான் நீர் பீய்ச்சி அடிப்பார்கள்! இது மதுரையில் நான் பார்த்த ஒன்று!)

ஆக, கடவுளைப்போல ஆக வேண்டும் என்பது நம் உள்மன ஆசை. இதைத்தான் அகுஸ்தினார், 'நாம் கடவுளைப்போல ஆக வேண்டும் என்பதற்காக கடவுள் நம்மைப்போல ஆனார்!' என இயேசுவின் பிறப்பு பற்றி சொல்கின்றார்.

மனிதர்கள் தங்களிடம் உள்ள மொத்த நல்ல குணங்களையும் ஒன்றாகத் திரட்டி அவர்கள் உருவாக்கியதுதான் கடவுள் என்கிறது சமூகவியல்.

ஆடி வந்த அழகர் அருள் பொழியட்டும். அந்த அழகரைப் போல நம் உள்ளம் பசுமையால் ஜொலிக்கட்டும்.

1 comment:

  1. ஆலயத்தில் கண்மூடி, கைகூப்பி, இறைவேண்டுவது மட்டுமல்ல, தெருக்களில் இறைவன் வேஷமிட்டு ஒருவரை ஒருவர் சீண்டிக்கொள்வதும் கூட ஒருவித 'பக்தி'தான் என்று சொல்ல வருகிறது இன்றையப் பதிவு.தெனாலிராமன் ஸ்டைலில் விசிறியிலிருதந்து காற்று வருவிக்கும் உபாயத்தைச் சொல்லியிருக்கும் முறையில் குறும்பு கொப்பளிக்கிறது.மனிதன் தான் கடவுளாக வேண்டும் என்ற உள் மன ஆசையைப் பிரதிபலிக்கும் புனித.அகுஸ்தினாரின் வார்த்தைகள்.." நாம் கடவுளைப்போல ஆக வேண்டுமென்பதற்காக்க் கடவுள் நம்மைப்போல் ஆனார்".. ஒரே வரியில் சொல்லப்பட்ட மாபெரும் மறையுண்மை.இப்பொழுது எங்கள் மதுரையில் 'கள்ளழகர்களோடு' சில நல்லழகர்களும் தோன்றியிருக்கிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.......

    ReplyDelete