Monday, May 18, 2015

ஐயா! மோடி!

எங்க கல்லூரியில் ஒரு சீன மாணவன் படிக்கிறான். ரொம்ப பேர் படிக்கிறாங்க. ஆனா, இவன் கொஞ்சம் விநோதமானவன். யாரிடமும் பேச மாட்டான். யாரைப் பார்த்தாலும் சிரிக்க மாட்டான். முனைவர் பட்டம் பெறுவதற்குள் சிரிப்பதையும், பேசுவதையும் மறந்துவிடுவான் போல. இவன் தினமும் பைக்கில் வருவான். பைக் ஓட்டும்போது முகத்தில் ஒரு டஸ்ட் மாஸ்க் அணிந்து கொள்வான். எனக்குத் தெரிந்து இத்தாலியில் இவனது பைக்தான் அதிகம் புகை கக்கும். இவனைப் பார்க்கும்போதெல்லாம், 'ஏன்டா, ஊரெல்லாம் புகையாக்கிவிட்டு நீ மட்டும் முகமூடி அணிந்துகொள்கிறாயே!' என்று கேட்கத் தோன்றும்.

இவன் மட்டுமல்ல. இங்கு வரும் சீன சுற்றுலா பயணிகளுக்கும் இந்தப் பழக்கம் உண்டு. ஏதோ தங்கள் ஊரில் தூசியே இல்லாததுபோலவும், மற்ற ஊர்களில் எல்லாம் தொற்று நோயும், வைரசும் காற்றில் இருப்பது போலவும் நினைத்து சதா, ஆபரேஷன் தியேட்டரில் மாதிரி வெள்ளை முகமூடி அணிந்து கொண்டு திரிவார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பேருந்திலும் இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

'ஏழாம் அறிவு' படம் பார்த்ததிலிருந்து சீனக்காரர்கள் என்றாலே பிடிப்பதில்லை. இதைச் சரி செய்ய நானும் ஏதாவது தெரபிக்கு போக வேண்டும்.

எதுக்கு தம்பி இந்த சீனாக்காரங்கள இழுக்குறீங்க?

நம்ம சுற்றுலா முதல்வர் சீனாவுக்கு சுற்றுப்பயணம் போயிருக்கிறார்.

நம்ம ஊருல பெட்ரோல், டீசல் விலை ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை உயர்த்தப்பட்டிருக்க, நம்ம அண்ணாச்சி, ப்ளைட்டல பெட்ரோல் நிரப்பிக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பி விட்டார்.

மோடி சுற்றுலா ஃபோட்டோக்களைப் பார்க்கும்போதெல்லாம், 'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்!' என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது. சின்ன வயசுல அவங்க அப்பா அம்மா பக்கத்து ஊருக்குக் கூட கூட்டிட்டுப் போயிருக்க மாட்டாங்க போல. அந்த ஏக்கம் அப்படியே அவருடைய மனசுல பதிஞ்சு, 'நானும் பெரிய ஆளாகி எல்லா ஊர்க்கும் போவேன்!' என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஊர் ஊரா போறார்.

போனா பரவாயில்லை. போற பக்கமெல்லாம் வாக்குறுதிகளை வீசிவிட்டு வருகிறார்.
சீனாக்காரனுக்கு இந்தியா வருவதற்கு இ-வீசா இருந்தால் போதுமாம். அதாவது இதுவும் ஒருவகையான அரைவல் விசா. தானாகவே ஒரு நாட்டிற்குள் வந்து செல்லலாம். இதனால் அவர்கள் நம் நாட்டை உளவு பார்க்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்தும் நம்ம டீக்கடை பிரதர் பல்லைக் காட்டிக்கொண்டு சொல்லிவிட்டு வந்துவிட்டார். அது என்னவோ தெரியல.

அடுத்தவன் கொஞ்சம் மரியாதை கொடுத்தவுடன், வாக்குறுதி கொடுத்து விடுகிறார் நம்ம காவி பிரதர்.

இன்று எலக்ட்ரானிக்ஸ், பட்டாசு, ஆடைகள், அன்றாட உபயோகப் பொருட்கள் என அனைத்திலும் போலியை தயாரித்து சீனா நம் நாட்டு பொருளாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. சீனா பட்டாசு வந்ததால் சிவகாசியில் மூடப்பட்ட பட்டாசு ஆலைகள் நூற்றுக்கணக்கானவை.

'பீயிங் பிஸி, பட் டூயிங் நத்திங்!' என மோடிக்கு பட்டம் கொடுத்திருக்கிறது காங்கிரஸ்.

ஐயா! மோடி! கொஞ்சம் எங்களையும் நினைச்சுப் பாருங்க!


1 comment:

  1. சீனர்களை வைத்து நம் பிரதரைக் கிண்டலடித்திருக்கிறீர்களா இல்லை பிரதமரை வைத்துச் சீனர்களைக் கிண்டலடித்திருக்கிறீர்களா....ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் இரசிக்கும்படியான கேலி.யார் என்ன சொல்லி என்ன? என்று திருந்தப்போகிறார்கள் நம் அரசியல் தலைவர்கள்? இறைவனுக்கே வெளிச்சம்....

    ReplyDelete