Tuesday, May 19, 2015

சோதனைகளின்போது

இன்றைய முதல் வாசகம் (திருத்தூதர் பணிகள் 20:17-38) வாசிக்கும்போது எனக்கு கண்ணீரே வந்துவிட்டது.

கடந்த சில நாட்களாக ஆன்மீக காரியங்கள் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தது. அதாவது தனிப்பட்ட முயற்சிகள். சில நாட்களாக கட்டளை செபம் சொல்லவில்லை. படிப்பிற்கு தவிர மற்ற நேரங்களில் விவிலியம் வாசிக்கவில்லை. செபமாலை எடுத்தவுடன் தூக்கம் வந்துவிட்டது.

ஆன்மீகத்தின்மேல் வெறுப்பு என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த நாட்களில் திருப்பலி நன்றாக வைக்கத்தான் செய்தேன். மறையுரைகள் எழுதினேன். ஒப்புரவு அருட்சாதனம் நிறைவேற்றினேன். நற்கருணை கொண்டு சென்றேன்.

ஆனால் என் உடலின் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதுதான் பெரும் போராட்டமாக இருக்கிறது. எந்நேரமும் சிந்தனை எல்லாம் அதன்மேலே இருக்கின்றது.

சரி! ரொம்ப அழாதீங்க தம்பி!

இன்னைக்கு ஏன் கண்ணீர் வடிச்சீங்கன்னு சொல்லுங்க!

இன்றைய முதல் வாசகம் எனக்கு மிகவும் பிடித்த இறைவாக்குப்பகுதி. தூய பவுலடியார் எபேசு நகரத்தில் தன் பணியை முடித்துவிட்டு விடை பெறுகிறார். அவரது பிரியாவிடை செய்திதான் இன்றைய முதல் வாசகம். அதில் என்னைத் தொட்ட சில வரிகளை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

'சோதனைகளின்போது மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தேன்!'
ஆக, சோதனைகள் வரும்போது என் பலத்தால் எதிர்கொள்ள முடியும் என நினைக்கும்போது அங்கே தோல்விதான் மிஞ்சும்.

'நன்மை பயக்குமொன்றையும் உங்களுக்கு நான் அறிவிக்காமல் விட்டுவிடவில்லை!'
ஆக, நல்லது என்று எது மனதுக்குப்படுகின்றதோ, அது அடுத்தவர்களுக்கு நன்மை பயக்குமென்றால் உடனே சொல்லிவிட வேண்டும். இன்னைக்கு என் நண்பர் புதிய சட்டை அணிந்து, அது அவருக்கு எடுப்பாக இருக்கிறது என்றால், 'இந்த சட்டையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்!' என்று சொல்வது அவருடைய தான்மையையும், சுய மதிப்பையும் அதிகரிக்கவே செய்யும்.

'என்னைப் பொறுத்தவரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை!'
நான் இழந்தால் பெற முடியாதது உயிர் ஒன்றுதான். அப்படிப்பட்ட உயிரையும் இழக்கும் மனத்துணிவு பவுலுக்கு எங்கிருந்து வந்தது?

'ஆனால் இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை!'
இந்த வார்த்தைகளில் அவர் உறவுகளைப் பிரியும் சோகம் ஒருபக்கம் இருந்தாலும், தன் வாழ்க்கை எப்படி இருக்கப்போகும் என்பதையும் உணர்ந்தவராக இருக்கிறார்.

'எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடிருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன!'
இதில் பவுலடியாரின் சுயமதிப்பும், உழைப்பும் வெளிப்படுகிறது. தன் தேவைக்கு மட்டுமல்ல, தன் உடனிருப்பவர்களின் தேவைக்கும் உழைக்கிறார். எனக்கு ஒரு ஆசை இதுதான். இந்தியா திரும்பியபின் பங்குத்தளத்தில் பணி செய்யும்போது என் தேவைக்கு நானே உழைக்க வேண்டும் என்பது.

'இவற்றைச் சொன்னபின்பு அவர் முழந்தாள்படியிட்டு அவர்களெல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார்!'
நின்று கொண்டு செய்ய முடியாத வேலைகள் நாம் முழந்தாள்படியிட்டால் எளிதாக நடக்கும் என்பார் நியூட்டன். இந்த இறைவேண்டல்தான் எனது உடனடி தேவையாக இருக்கிறது.


1 comment:

  1. தந்தை என்ன சொல்ல வருகிறீர்கள் என விளங்கவில்லை.நம் நிறைகுறைகளை அலச ஆரமபிககும்போதே சரியான பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்று தான் அர்த்தம்." Spirit is willing but the flesh is weak"இது நம்மைப்படைத்தவனுக்கே பொருந்துமென்றால் நாம் எம்மாத்திரம?தங்களுக்காக நானும் முழங்காலிட்டு ஜெபிககிறேன்.இறைவனை நம்புங்கள்.அவர் ஒருவரே நம் உள்ளஙகளை அறிந்தவர்........

    ReplyDelete